30.9.05

ஒரு தீர்மானத்துக்கு வருவோம்!

ஒவ்வொன்றையும் எழுதித் தீர்த்துவிட முடியாத அளவு அலப்பல்கள், இன்றைய மின்னிதழ்களிலும் குழுக்களிலும்...... பாராட்டுவோம் என்று எவர்க்கும் பின்னூட்டம் இடுகின்ற என்னை வெறுப்பேற்றினார் ஒருவர். எப்படி? மின்னிதழ் ஒன்றில் கவிதை எழுதியிருந்தார் அவர். அதில் என் விமர்சனம்( இன்னொருவர் பற்றி) வந்தபொழுது 'மெசஞ்சர்' வழி தொடர்பு கொண்டு, அவ்விதழில் வந்த தன் கவிதையை நான் கண்டேனா என்று கோடிட்டார். தேடி வாசித்துப் பின்னூட்டமிட்டு, படி ஒன்றையும் அனுப்பிவைத்தேன். வழக்கப்படி யூனிகோடு தமிழில்தான். மீண்டும் மெசஞ்சர். அதில் அவர் மீண்டும். ''தமிழ் ஃபாண்ட்களில் அனுப்பிவைக்க முடியுமா?'' என்று கேட்டார். யூனிகோடு, தமிழ் எழுத்துரு அல்லவா? சிலர், நான் யூனிகோடு குறித்துக் காசி அவர்கள் எழுதிய பாடங்கள் பற்றிச் சொன்ன பின்பும், தியாகு அறிவுறுத்திய 'Read Tamil: cascaded Tamil Style Sheet' குறித்து விவரம் தந்துவிட்ட பின்பும் ''தமிழ் ஃபாண்ட்ஸின் அழகு இதற்கு வருமா?'' என்று ''அடியைப் புடிடா பாரதபட்டா!'' என்று பல்லவியிலிருந்து மீண்டும் தொடங்குகிறார்கள். இதுதான் போகட்டும் என்றால், நல்ல உணர்வுள்ள தமிழ் ஆர்வலர்களின் மின்குழுவில் உள்ள 'சீனியர்' ஒருவர் - ''நான் ஏன் விலகுகிறேன் என்றால்.........." என்று பாரதம் படித்து, ''சேர வாரும் ஜெகத்தீரே!'' என்று 'இன்னொன்றில்' சேர அழைப்பு விடுக்கிறார். இதற்கு விதிவிலக்காக,"விடைபெறுகிறேன் நண்பர்களே!'' என்று பண்பாக விடைபெற்று, நம் கண்களில் நீர் வரும்படிஒருவரியில் விடைபெறுபவரும் இருக்கிறார். பண்பு என்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. சங்க இலக்கியக் கலித்தொகை வரியொன்று, ''பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்'' என்கிறது. அடுத்தவர்களின் பாடுகள் அறிந்து பண்பும் நாகரிகமும் பொருந்த நடந்து கொள்ளுதலே வலையெழுத வருபவர்களும், வந்து 'ரொம்ப காலம்' ஆகிவிட்டவர்களும் பின்பற்ற வேண்டிய அடிப்படை வலைநேயம் ஆகும்.

1 comment:

ஜென்ராம் said...

இடையில் அவ்வப்போது ஓரிரு நாட்கள் வலைப் பக்கம் வர இயலாமல் போவதால் இரண்டாவது குறிப்பிட்ட விடைபெறுதல் (கண்ணீர் வரவழைக்கும் ஒரு வரி) புரியவில்லை.