29.11.11

புதுவை நட்பு வட்டம் இலக்கிய அமைப்பின் நிறுவனர் நடத்தும் திங்களிதழ்

என் பழைமை கெழுமிய நண்பர்களுள் ஒருவர் திரு. கி.பெ.சீனுவாசன். நல்ல உழைப்பாளி. தானி(Auto)ஓட்டுநரும் என் நண்பருமான தோழர் இரகு உட்பட, உழைத்து வாழும் பலருக்கும் நன்கு தெரிந்தவர். புதுச்சேரியில் வாழும் அனைத்து வரப்புகளையும் சார்ந்த நண்பர்களை இணைத்து 'நட்புவட்டம்' என்ற அமைப்பை நெடுங்காலமாக நடத்தி வருகிறார். அதன் அமைப்பிதழாக அவர் நடத்தி வரும் 'புதுவைப் பாமரன்' இத்திங்கள்(எண்:47 நவம்பர், 2011) இதழைத்தான் இங்கே காண்கிறீர்கள். தேசியக் கொளகையினரான புதுவைப் பாமரனாக - புதுச்சேரிப் பாமரர்கள் பலருள் ஒருவராக நின்று பார்த்து(Bystander)சமூக விழிப்புணர்வு ஊட்டுவதில் திரு.கி.பெ.சீனுவாசன் வல்லவர். நல்லவர். மற்றவர்கள் மனம் நோகாமல் 'இடித்துரைப்பதில்' தேர்ந்தவர். அவரும் அவர்தம் சமூகப் பணியும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

இதழ் முகவரி:
நட்பு வட்டம்,
10, பிள்ளையார் கோயில் தெரு,
அங்காளம்மன் நகர்,
முத்தியாலுப்பேட்டை,
புதுச்சேரி - 605 003.

27.11.11

தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி

தமிழறிஞர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் ஆராய்ச்சி

1984ஆம் ஆண்டே நண்பர் முனைவர் நாகப்பா நாச்சியப்பன் படைத்த இடுநூல்(thesis), அவர்தம் அருமைத் துணைவியார் பெயரிலான பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றது. (தமயந்தி பதிப்பகம், 10, காமராசு காலனி, சிட்லபாக்கம், சென்னை-600064.) திருஅருட்பிரகாச வள்ளலார்பால் பெரும் ஈர்ப்புப் பெற்றவர் நாச்சியப்பன். 'அலங்கல் அணிந்தருளே' என்று தன் "திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம்" ஆய்வேட்டுப் பெருநூலை வடலூர் இராமலிங்க அடிகள் திருவடிகளில் படைத்தவர். நம் தமிழண்ணல் அய்யா அவர்களின் மேற்பார்வையில் ஆய்வை நிகழ்த்தியவர். களஆய்வு அது. களஆய்வில் இணைந்து உதவி, வரைபடங்கள் எடுத்து உதவியவர் அவர்தம் அன்பருமைத் துணைவியார் திருவாட்டி நா.தமயந்தி அவர்கள். அவர்களின் மகளார் சாலா என்கிற விசாலாட்சி; மூத்த புதல்வர் அண்ணாமலை - என் இளம் நண்பர். இளைய புதல்வர் சுப்பிரமணியன். பொறிஞர். அண்ணாமலை, ஊடகத்துறையினர். என் வலைப்பதிவுப் பணிக்குப் பேராதரவு தருபவர்.

'மனித விலங்குகளின் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'வீரப்பதக்கம்' என்னும் சிறார் நாடகமும் 'வடலூர் வள்ளலார்' என்ற வரலாறும் 'திருக்கோயில் ஆய்வு'(Temple Research Methodology) என்னும் ஆய்வு முறையியலும் பிற பலநூல்களும் கட்டுரைகளும் நண்பர் நா.நா. அவர்களின் வழங்குகைகள்.

இனிய நண்பர்; உயர்ந்த மாந்தர். எவரும் செய்ய மாட்டாத உதவியை எனக்கவர் செய்தார். (புதுவை மாநிலம் காரைக்காலில், திருநள்ளாற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள இயற்கை நலம் செறிந்த பச்சூர் இடுகாட்டில் 1988 சனவரி 17ஆம் நாள் ஒடுக்கம் கொண்ட எம் தந்தையார் அரசவோகி பெரியதம்பி கருப்பண்ணன்(இராஜயோகி பி.கே. அண்ணன், எஃப்.சி.ஐ.[இலண்டன்]) அவர்களது உடல் செறிந்த மண்மேல் இன்று தன் மலர்களைப் பொழிந்திருக்கும் இருபத்து மூன்று அகவை நிரம்பிய மரமல்லி மரம், எங்கள் இனிய நன்றிக்கு வித்தானது. தந்தையார் ஒடுங்கிய ஞான்று, மறைந்த என்னரும் நண்பர் டாக்டர் நாகப்பா நாச்சியப்பன் அவர்கள் ஏற்பாட்டின்படி, சுயமரியாதை சுப்புராயன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, திரு பொன்னம்பலம் என்பவர், அதை அங்கே நட்டார். அடடா! மாந்தர் வாழ்க்கையில், மரங்களும் அவை பொழியும் மலர்களும் கொண்டுள்ள ஆழமான உறவை எத்தனை அழுத்தமாக நினைவுபடுத்திவிட்டன அந்த மரமல்லியின் மலர்கள்!)

அன்னார், நண்பர் நாகப்பா நாச்சியப்பன் இன்றெம்முள்ளங்களில் வாழ்கிறார்.

நண்பரின் ஒளிப்படம் உடையவர்கள் அருள்கனிந்து karuppannan.pasupathy@gmail.com என்னும் முகவரிக்கு விடுத்து வையுங்கள். இங்கே, நன்றிசுட்டிப் பதிவேன்.

17.11.11

என் முகநூல் இல்லத்துக்கு வந்த மறைமலை இலக்குவனார் கருத்தாடல்

ஊர்கூடித் தேரிழுப்போம்!
சொல்லைச் சிந்தனையின் தந்தை என்றார் ஒரு மொழியியல் அறிஞர்.பஞ்சு நூலாகி, நூல் துணியாகுவதைப் போலவே, சொல் தொடராகவும் வாக்கியங்களாகவும் பின்னப்பட்டு, தொடர்களும் வாக்கியங்களும் கருத்துருக்களாகிச் சிந்தனையை நெய்ய
உதவுகின்றன.எனவே சொல் இல்லாமல் சிந்தனை இல்லை.
இதனால்தான் சிந்தனை தடுமாறும்போது சொல் தடைப்படுவதும் சிந்தனையில் பெருங்குழப்பம் ஏற்படும்போது சொல் குழறுவதும் நிகழ்கின்றன.
திறமான கருத்துத்தொடர்புக்குத் தெளிவான சிந்தனையும் வளமான
சொல்லாட்சியும் தேவை.தாய்மொழியில் போதிய பயிற்சியின்றிப் பிறமொழிகளில் எத்துணைப்புலமை பெற்றிருந்தாலும் தங்குதடையின்றிச் சிந்திக்க இயலாது.பன்மொழிப்புலமை பெற்றிருந்த பெரும்பாவலர் பாரதியார் “தமிழிலேயே பேசுவேன்;தமிழிலேயே எழுதுவேன்;தமிழிலேயே சிந்திப்பேன்”எனச் சூளுரைத்தது இவ்வுண்மையை நமக்கு எடுத்துரைப்பதற்காகத்தான் எனலாம்.
பிறமொழிச் சொல்லைக் கலக்காமல் பேசவோ எழுதவோ சிந்திக்கவோ முடியாது என்னும் நிலைக்குத் தமிழர்கள் தடம் மாறிவிட்ட இன்றைய சூழலில் பாரதியாரின் உறுதிமொழி நமக்கு ஒரு புதிய படிப்பினையை நல்குகிறது.
புதுமைவேட்கையும் சோம்பலும் அடிமைமனப்பான்மையுமே பிறமொழிச்சொற்கலப்புக்குக் காரணங்கள் எனலாம்.
புத்தம்புதிய கண்டுபிடிப்புகள்,கோட்பாடுகள்,கருவிகள் முதலியவற்றை நமது தாய்மொழியில் பெயரிட்டு வழங்கவேண்டும் என்னும் ஆவல் நம் ஒவ்வொருவருவர் உள்ளத்திலும் ஏற்படுதல் வேண்டும்.அதுவே புதிய சொல்லாக்கங்கள் தோன்றுதற்குத் தக்க அடிப்படையாக விளங்கும்.அங்ஙனம் உருவாக்கப்படும் சொற்களை அன்றாடம் நமது உரையாடலிலும் கடிதம் கட்டுரை முதலான எழுத்து வடிவங்களிலும் வழங்கவேண்டும்.
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்று பாரதியாரும் “தனிமைச்சுவையுள்ள சொல்லை எங்கள் தமிழினிற் போல் எங்கும் யாம் கண்டதில்லை” என்று பாரதிதாசனும் :சொல்லெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?” என்று கண்ணதாசனும் தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துதற்கு நம்மைத் தூண்டிவிட்டது எதற்காக?
கலையியலிலும் அறிவியலிலும் புத்தம்புதிய சொல்லாக்கங்களைக் கண்டு அவற்றை நாளும் பயன்படுத்த நாம் தவறிவிட்டால்”சொல்லவும் கூடுவதில்லை-அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை”என்னும் வீண்பழி நமது தாய்மொழிக்கு ஏற்படும் அல்லவா?
இரண்டாம் உலகப்போருக்குமுன்னர் ஆங்கிலமொழியில் இருநூறாயிரம் சொற்களுக்குக் குறைவாகவே அதன் சொற்கோவை அமைந்திருந்தது என்றும் போர்முடிந்து சில ஆண்டுகளில் அதன் சொற்கோவை பத்துநூறாயிரம் சொற்களைக்கொண்டதாக விரிவடைந்தது என்றும் இன்றையநிலையில் இன்னும் இரண்டுமடங்கு
சொற்கள் அதனை அணிசெய்வதாகவும் மொழியியல் வல்லுநர்கள் கூறும் செய்தி நமது சொல்லாக்கமுயற்சிகளுக்கு மேலும் வலிவும் விரைவும் சேர்க்கவேண்டும். ”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”என்றும் “கடி சொல்லில்லை காலத்துப் படினே”என்றும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புதிய சொல்லாக்கங்களுக்கு அடித்தளம் நிறுவிய தொல்காப்பியர் வழிநின்று புதிய சொற்களை உருவாக்குவோம்;அன்றாட வழக்கில் அறிமுகம்செய்வோம்; மொழிவளர்ச்சிக்கு ஊர்கூடித் தேரிழுப்போம்!
நன்றி: 1983இலிருந்து என்னைத் தன் ஆய்வுநூல்களில் மறவாமல் குறிப்பிடும் என் அன்பு நண்பர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு எஞ்ஞான்றும் என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் அயல்நாட்டுப் பயணம் மேலும் தமிழ்நலம் சேர்க்குமாக! - என வாழ்த்தும் நண்பன், அ.பசுபதி

THE DREAM COMES TRUE by கொடைக்கானல்

It all
started from
The Change of the Sickle
It all started
When our soul
Stood aghast
At the possessif (possessive)
It all started
When we allowed them
To thrash our chins
Already wet with tears
We need no more shackles
Rather be of gold
The dream of a Pigeon
Afloat on the sky
will never fail.
(1993)
(This is My First Entry into the world of Poetry in English)

அமெரிக்க நாட்டைக் குறித்த ஓர் இளைஞரின் பா(கவிதை)

America

Although she feeds me bread of bitterness,
And sinks into my throat her tiger’s tooth,
Stealing my breath of life, I will confess
I love this cultured hell that tests my youth!
Her vigor flows like tides into my blood,
Giving me strength erect against her hate.
Her bigness sweeps my being like a flood.
Yet as a rebel fronts a king in state,
I stand within her walls with not a shred
Of terror, malice, not a word of jeer.
Darkly I gaze into the days ahead,
And see her might and granite wonders there,
Beneath the touch of Time’s unerring hand,
Like priceless treasures sinking in the sand.

Poet: Claude McKay


Acknowledgement with thanks:

Claude McKay
Submitted this poem to poemhunter.com on Friday, January 03, 2003.

15.11.11

பின்னூட்டங்கள் - பழமொழிகள்


“எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?” என்பது பழமொழி. “பின்னூட்டம் போடுங்கள், பின்னூட்டம் போடுங்கள்” என்று என்னைப் போன்ற வலைப்பதிவர்களும் கேட்க வேண்டிய நிலைக்கு ‘பிச்சை’ என்ற பெயர் இல்லாமல் வேறு என்னவாம்? இணையவுலகில் இவ்வாறு.......

பழமொழியின் முதற் பகுதியைப் பார்த்தோம். அடுத்த பகுதி - “எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன்.” இது ஒருமை. ஓர்மையுடன் பார்த்தால் இணையவுலகில் இது ஒருமையில் வராது. பன்மையில் மட்டுமே வரும்.

அப்படியானால் பின்னூட்டங்களே பிச்சையெடுத்தால்தான் வருவனவா? - என்று கேட்கின்றீர்களா? அல்ல அல்ல. போட்டி போட்டுக்கொண்டு பின்னூட்டங்கள் போடுவார்கள் வலைகள் சிலவற்றுக்கு. “அப்பேர்ப்பட்ட” வலைகள் எவையெவை என்பது இணையவுலகில் “பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும்” பல ஆண்டுகள் இணையவுலகில் “பெருக்கிப் பெருக்கி, குப்பை போட்டவர்களுக்கும்” நன்றாகவும் “அச்சு அசலாக”வும் தெரியும்.

ஊழ்விலக்குகள் எவற்றிலும் உள்ளன என்பதற்கேற்ப, சொல்லச்சீடு(Word Press) தளம் கொண்ட வலைகள் சிலவற்றுக்கு வரும் பின்னூட்டங்களின் பெருக்கமே சான்று. புகழ்மிக்க வலையேட்டில் தொடர்ந்து(அதில் நான் எழுதிய கட்டுரைகள் பலவற்றை, என் வலைப்பதிவுகளில் பதிந்திருக்கிறேன்) எழுதிவந்த பெரியவர் ஒருவர், கனடாவிலிருந்து சொந்தமாக நடத்திவரும் சொல்லச்சீட்டின் தளத்துக்கு வரும் பின்னூட்டங்களின் பெருக்கத்தைக் குறித்து, “எப்படித் தங்களின் இத்தளத்துக்கு இவ்வளவு பின்னூட்டங்களின் போக்குவரவுள்ளது?”(How come so much traffic to your weblog?) என்று அவருக்கே மீண்டும் வந்ததொரு பின்னூட்டத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். “மச்சம்டா சாமி!” என்று விட்டுவிட்டுப் போயிருக்கலாம்தான். “இட்டளி தின்னும் தமிழ்மூளைக்கு இருக்கும் கொழுப்பு” என்று புதுதில்லியில் வண்ணிக்கப்படும் மூளை இருப்பதால், இந்தச் சொல்லாடல் பிறந்தது. “எடுத்தாளாத பொருள் உதவாது” என்ற பழமொழியும் “எழுதப்பா இதை!” என்று ஊக்குவித்தது.

“உழுகிற மாடு பரதேசம் போனால், அங்கே ஒருவன் கட்டி உழுவான்; இங்கே ஒருவன் கட்டி உழுவான்” என்றொரு புதிர்ப் பழமொழி உண்டு. அதேபோன்ற நிலையை வலைப்பதிவுகளிலும் கண்டு வருகிறேன். அம்மணமாக எல்லோர் முன்னிலும் ஓடத் தயங்காத எழுத்தாளர் நடத்தும் வலைப்பதிவைக் காசுகொடுத்துப் படித்துவிட்டு, முகநூலிலும்(Facebook) பதிவிடும் நல்லவர்கள் உள்ளனர். அவர்களுக்காகத்தான் சென்னையை வெள்ளக்காடாக்கிய மழை ‘பேய்’ந்தது.

இவையெல்லாம் புரியாமல் ‘வெள்ளந்தி’யாக, “ உங்கள் பிளாக்கை ஆயிரம் பேருக்குக் கொண்டு சேர்க்கிறேன். பிளாக்கை வைத்து வியாபாரம் பண்ணுங்கள்!” என்று வரும் மின்னஞ்சல்களைப் பிரித்துப் பார்த்த பாவம்... “உடையவன் செய்த பாவம் கண்ணே உனக்கும் ஒட்டிக் கொண்டதா?” என்பதற்கேற்ப ஒழுங்காயிருந்த கணினியும் நோய்த்தொற்றால் ஒக்கார்ந்து கொண்டதுவே சிலருக்கு எஞ்சும்.

கொள்கை கோட்பாடுள்ளவர்கள் நடத்தும் வலைப்பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள், பொதுவாக, அதிகம் வாரா. காரணம் என்னவென்றால் அதேபோன்ற கொள்கை கோட்பாடுள்ளவர்கள் பிறர் இருப்பு நிலைகள்தாம்:

1. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.
2. கணினி பற்றியே தெரியாதவர்கள்.
3. இணையம் குறித்துத் தெரிந்துகொள்ள அக்கறைப் படாதவர்கள்.
4. கையில் கைப்பேசி வைத்துக் கொள்வதைக் கூட ‘தமிழ்ப் பண்பாட்டுக்கு’ மாறு என்று கருதுபவர்கள்.
5. ‘முழித்து முழித்து’ப் படித்து விட்டு, “இவனுக்குப் பின்னூட்டமொரு கேடா?” என்றூ கைகளைக் கழுவிக் கொள்பவர்கள். (கவனியுங்கள்: “இவளுக்கு” அல்ல.)
6. “எனக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை என்று (வேறெதற்கு இருக்கிறது?)சொல்லிக்கொள்வதிலாவது - ‘குமைந்து குமைந்து குதூகலப் படுபவர்கள்’ அல்லது ‘’அன்றாடம் எதையாவது செய்துமுடிக்க முடியாதவர்கள்.”

ஆறாமவர்களைக் குறித்து, “ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை இடு, காடுகெட ஆடு விடு” என்ற பழமொழியை, “மூன்றுங்கெட இவரை விடு!” என்று சொல்லி நிறைவு செய்ய முடியும்.

அண்மையில் மும்பைத் தமிழ் நண்பர் ஒருவர், “ பின்னூட்டமிட விரும்புகிறவர்களை ஏன் இப்படிக் கொடுமைப் படுத்துகிறீர்கள்?” என்று கேட்டிருந்தார். ‘பின்னூட்டங்கள் மட்டுறுத்தம்’(Comments moderation) என்றோர் ஏந்தை(வசதியை) கூகுள்(Google) கொடுத்திருக்கிறது. அதேபோல், பின்னூட்டம் செய்பவர்களின் படங்களைப் பதியாமல் இருப்பதற்கும் கூகுள் குறிப்புக் கொடுக்கிறது. இவற்றை எல்லாம் பாடமாகவே தருகிறது கூகுள்.(Learn more about spam control - lessons by GOOGLE) இவையெல்லாம் எரிதங்களைக் கொணர்ந்து உங்கள் கணினியைப் பாழாக்கி விடும். தவிர, பின்னூட்டங்கள் பல அருவருப்பான சொற்களைக் கொண்டு வருவன. அவற்றை மட்டுறுத்தினால்தான் நாகரிகம் நிலைபெறும்.

சிலர், ஒவ்வொருவரைக்கொண்டு ஒவ்வொரு பதிவு தொடங்கி, அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்காமல் விட்டு விடுவார்கள். கண்டுகொள்ளப்படாத இடங்களை ‘சமூக விரோதிகள்’ கையாள்வதுபோல், இந்த வலைப்பதிவுகளைப் பரத்தைமை அழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளவென்றே இருக்கிறார்கள் சிலர்.

‘Intellectual snobbery’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதையும் விஞ்சும் வண்ணம், நம்மவர்களின் ‘இணையம் குறித்தறிவதில் காழ்ப்புணர்வு’ம் ‘நரித்தன’மும் உள்ளன. இவற்றின் மேலதிக விளைவுகள் என்ன தெரியுமா?

இவர்கள் எழுதும் ஆராய்ச்சிக் கட்டுரைகள், படி+ஒட்டு(copy+paste) முறையில் உலகின் வேறிடங்களில், வேறு பெயர்களின்கீழ் வெளியிடப்பட்டு வருகின்றன. இவர்கள் எழுதும் நூல்களின் பகுதிகள் வெட்டப்பட்டு அவையெல்லாம் சேர்ந்து புதிய புதிய இணையக் கட்டுரைகளாகவும் மின்னூல்(PDF)களாகவும் வெவ்வேறு தலைப்புகள் -ஆசிரியர் பெயர்களின்கீழ் வெளியாகி வருகின்றன. ஒரே ஆய்வேட்டை ‘உல்ட்டா பண்ணி’ இருவர் முனைவர்ப் பட்டம் வாங்குவதைவிட ஏதமானது இது. இப்பொழுது தெரியா, இதனால் வரவுள்ள ஏதங்கள்.

“ஐயா.. ஐயா.. உங்கள் நூல்கள் செல்லரித்துப் போன பின்னாலும், ‘சைபர்வெளி’ எனப்படும் மின்வெளியில் உள்ள நூல்கள் செல்லரித்துப்போகமாட்டா. நீங்கள் ஒன்றும் தொல்லைப்பட்டு உங்கள் நூல்களை மின்வெளியில் பதிந்து கொண்டிருக்க வேண்டா. கொஞ்சம் சுறுசுறுப்பாக, நீங்கள் எழுதியுள்ள நூல்களின் கருத்தடக்கங்களை (contents) கூகுள் தேடலின் நிரப்பித் தேடிப் பாருங்கள். அதே கருத்தடக்கங்களில் வரும் நூல்களில் உங்கள் கருத்துகள் இடம்பெறுகின்றனவா என்றாவது கண்காணியுங்கள்!” என்று நான் வெளியூரில் வேண்டிக்கொண்டதற்கு, என் ஆசான் நிலையில் இன்றும் உள்ளவர், என்னை ‘ஒருமாதிரி’ நோக்கி ஏளனமாகச் சிரித்தார்.

சில கிழமைகளுக்குப் பிறகு, அவரிடமிருந்து ஒரு விடியலில் எனக்குப் பேசிஅழைப்பு வந்தது. பதறிப் பதறிப் பேசினார். எதைப் பற்றி? மேலே உள்ள பத்தியில் வரும் செய்தி தனக்கானதன்று என்று எண்ணியவர், இப்பொழுது பதறுகிறார். “பசுவதி...வள்ளலார் குறித்து நான் பசித்திருந்து, விழித்திருந்து, தனித்திருந்து எழுதியவற்றையெல்லாம் ஒருவன் தன் கருத்துகள் என்று பேசி வருகிறான். இணையத்தில் அவனுரைகள் ஒலிவடிவிலும் வருகின்றன. நானே கேட்டுப் பார்த்தேன்” என்றார். “ஐயா! தலைப்புகளைத் திருடினால் வழக்குப் போட முடியாது. கருத்துகளைத் திருடினால் வழக்காடலாம். அது மின்வெளி (Cyber Space) என்று தயங்காதீர்கள். மின்வெளிக்கான சட்டங்களும் ஆகத் தெளிவாக வரையறுக்கப்பெற்றுள்ளன. அடிப்படை/ஆதாரங்களோடு வழக்கிட்டால் வெற்றி உறுதி!” என்றேன். அவருக்கு உறவினரான உயர் அறமன்ற வழக்குரைஞரை இப்பொழுது அவர் அணுகியிருக்கிறார்.

“பிச்சைக்காரன் பின்னால, இருமுறவன் முன்னால, பணக்காரன் பாக்கெட்டுல” என்ற சென்ற நூற்றாண்டுப் பழமொழியொன்றைப் பழமொழிகள்புகழ் நூலாசிரியர் திரு ச. இலக்குமி நாராயணன் அவர்கள், தாம் எனக்கு அன்பளிப்பாகத் தந்த நூலொன்றில் குறித்திருந்தார். இது, புதிர் வகையைச் சார்ந்த பழமொழி. உலகியல் நடைமுறை ஒன்றைக் குறிப்பது.

நீங்களே கண்டுபிடியுங்கள் - இது எதைக் குறிக்கிறது என்று.

சரியான விடை உங்களுக்குத் தெரியுமானால், அந்த ஒற்றைப் பழமொழி போதும், நான் இத்தனைச் சொற்களால் எழுதியதை ஒரே நொடியில் விளக்க...

8.11.11

காணாமல் போன தமிழறிஞர் / வாழ்க்கைதான் கடவுள்!

வாழ்க்கைதான் முதன்மையானது. ஆம். அதை வாழும் மாந்தனை விடவும் வாழ்க்கைதான் முதன்மையானது. இது ஓர் உண்மை.

நம்பவில்லையா நீங்கள்?

அப்படித்தான் என்றால்,

தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையில் அண்மையிலொரு மாலைப்பொழுதில் வந்த செய்தியைப் பார்த்திருக்கவோ, அதுபற்றி இதுவரை கேட்டிருக்கவோ மாட்டீர்கள். கேட்டிருந்தால் நன்றி.

தமிழறிஞர் மா.சு.சம்பந்தன் அவர்கள், அச்சும் பதிப்பும் உட்பட்ட துறைகளில் பெரும் வல்லுநர். அதே தலைப்பு முதலான - தலைப்புகள் பலவற்றின்கீழ் அவர்தம் நூல்கள் பல வெளிவந்தன. நம் பல்கலைக் கழகங்களின் இளங்கலை, முதுகலைப் பாடத் திட்டங்களில் வைக்கப்பெற்றன. அருமையான, பயன் மிகுந்த நூல்கள்.

நானும் அவற்றைக் கருத்தூன்றி வாசித்திருக்கிறேன்.

புதுச்சேரியிலுள்ள தாகூர் அரசினர் கலைக் கல்லூரியின் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும்; காரைக்கால் பேரறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியின் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும்; புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி இளங்கலை மாணாக்கியருக்கும் கற்பித்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட நூல்களின் ஆசிரியர், தமிழ்நாட்டரசின் விருதுகள் பெற்றிருக்கிறார். தினத்தந்தி நாளேடு வழங்கிய சிறப்பு விருதையும் பணமுடிப்பையும் ஏற்றிருக்கிறார். இன்னும் பல பாராட்டுகள், மற்றும் பிற...

சென்ற செப்டம்பர் மாதக் கடைசிக் கிழமையொன்றில் மாலைப்பொழுதிலொரு நிகழ்ச்சிக்குச் சென்றவர், நான் செய்தி கண்டு கேட்ட இதுவரை இல்லம் திரும்பவே இல்லையாம்.

பழமையைப் பெயரில் கொண்ட - ஊடகங்களுக்கு 'வேண்டிய'வர் ஒருவரை நேர்கண்டு ஒளிபரப்பினார்கள். நெஞ்சு கனத்தது.

பின்வரும் வினாக்களை அந்த நேர்காணல் எழுப்பியது.

முகம் தெரியாமல் போனவரா அவர்?

முகவரி இல்லாமல் வாழ்ந்தவரா அவர்?

ஐயா! உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு ‘நினைக்கப் பட்டவர்’ அவர். ஏன்.. உங்களுக்குத்தான் பெரியவர்களின் ‘சகவாசமும்’ பேரளவு இலக்கிய இதழ்களின் உறவும் ஊடகங்களின் கூட்டுறவும் இருக்கிறதே...

அவர் முகத்தை நீங்களாவது விளம்பரப்படுத்தி இருக்கலாமே..நீங்கள் எதிர்பார்க்குமளவுக்கு...

ஊடகம் நேர்கண்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா?

“உங்களை விட அவரை எனக்கு அதிகம் பழக்கம்!” என்று உரிமை கொண்டாடுகிறீர்களா? ஒதுங்கிக் கொள்கிறேன். நல்ல வேளையாக இந்தப் ‘பாவ’த்தில் எனக்குப் பங்கில்லை என்றும் எண்ணிக் கொள்கிறேன்.

ஊடகங்கள்... உரியவர்களை நேர்காணத் தெரியாதவை.


அவர் மகன் சொன்னவற்றையும் கண்டேன்; கேட்டேன். கலங்கிப் போயிருந்தார்.

உண்மை...

அது

தமிழறிஞர் மா.சு.சம்பந்தனார்.. வாழ்க்கைக்குத்தான் தெரியும்.

*** *** ***

(இன்று காலை, நண்பர் தமிழ்த்திரு மறைமலை சி. இலக்குவனார் அவர்களுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் மா.சு.ச. குறித்து மொழிந்த செய்திகள் மேலும் மிகுந்த கழிவிரக்கத்தை ஏற்படுத்தின.)