20.12.15

நோக்கு - படைப்பிலக்கிய வகை JK கோடிகாட்டியது


http://www.fondation-janmichalski.com/en/prix-jan-michalski/ பரிசாகட்டும்; இருண்மை இல்லாமல் அப்படியே 'பட்டவர்த்தனமாக'வும் 'அ(ம்)மணமாகவும்' --'இடக்கரடக்கல்' 'அவாய்நிலை' ஆகிய இலக்கணங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காத transgressive என்னும் ஐரோப்பிய இலக்கிய வகையாகட்டும்; அதில் கரைகண்ட கேத்தி ஆக்கர் முதல் தமிழில் சாரு வரை - ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொன்ன, அவர் பொழிவுகளில் முதற்பகுதியாய் இலங்குகிற ' சுற்றுமுற்றும் நிகழ்கணங்களில் அவதானிக்கிற ஒவ்வொன்றையும் எழுத்துசொல் அமைப்பில் பதிகிற' நோக்கிலக்கிய(observant) வகை எழுத்தில் முழுமை பெறாதவர்களே. சுந்தர ராமசாமி படைத்த 'ஜேஜே சில குறிப்புகள்'- இவ்வகை. துணிவும் அர்ப்பணிப்புணர்வுமுள்ள பெண்கள் இந்தவகை இலக்கியத்தை முன்னெடுக்க வந்தால், இலக்கியவகையிலாவது ஆணாதிக்கத்தின் 'டங்குவார்' கிழியும்!
# observant not transgressive

17.11.15

அண்மைய முகநூல் பதிவுகள் சில - தேவமைந்தன்

Facebook Puducherry Devamaindhan Wednesday, November 18, 2015

வாழ்வாயினும் சரி, முகநூலாயினும் சரி, நாம்போடும் கணக்குகள் முற்றிலும் தோற்றுப்போகின்றன. கடனே என்று விருப்பம் பதிகிறவர்கள், முகத்துதியாகத் தொடர்ந்து கருத்தூட்டம் போட்டு ஏமாற்றுபவர்களை இனங்கண்டு கொள்ளவே முடியாது. நம்மை எரிச்சலூட்டுபவர்கள், நம்மேல் அக்கறைகொண்டவர்களாக இருக்கலாம். நமக்கு வழலை போடுகிறவர்கள், அடுத்துக் கெடுப்பவர்களாக இருக்கலாம். சான்றாக என் முகநூல் நண்பர் ஒருவர், புதுச்சேரியில் வாழ்பவர், எனக்கு விருப்பம் பதிந்ததே இல்லை.. ஆனால், சந்திக்கும்பொழுதும் அலைபேசியில் பேசும்பொழுதும் பாராட்டவேண்டும் என்று தனக்குத் தோன்றியவற்றைப் பாராட்டுவார். கடவுளைப் புரிந்துகொள்ள முடியும். சகமனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது.

நேற்று:
ஆர்வக்கோளாறுகளையும் மனவழுத்தத்தையும் எதிர்த்துப் போராடாமல் நட்புகளாக்கிக் கொண்டு வாழ்வது குறித்த சித்திரக்கதை!
http://idealist4ever.com/comic-explains-why-anxiety-depression-are/

நேற்று விடிவதற்கு முன் 03:32 am:

எம் மகளார் ஒரு கேள்வி கேட்டார்: " மலரும் நினைவுகளோ அப்பா?" என்று. என் மூளை, எனக்கு நெருங்கிய ஆதரவு தருவது. கசப்பான எதையும் மறந்து விடுவேன். பழக்கமானவர்கள், சிறு பிள்ளையானாலும், ஞாயமாகச் சுட்டிக்காட்டினார்கள் என்றால் என் தவறுகளைத் திருத்திக் கொள்வேன். எவ்வளவு நலமில்லாவிட்டாலும், வாசிப்புப் பழக்கத்தை விடமாட்டேன். முடியாவிட்டாலும், விடியலுக்கடுத்து ஒரு சிறு நடை போய்வந்துவிடுவேன். நினைவு தெரிந்தது முதல், என்னுடன் பழகிய எவரையும் மறந்ததில்லை. ஆனாலும் பெயர்களை மாற்றிச்சொல்லும் ('தெனாலி'படம்) சிக்கல் எப்படியோ வந்துவிட்டது. நண்பர்கள் நாயகரும் அருணனும் தாம் அதைச் சுட்டினார்கள். எத்தனையோ பின்னடைவுகள், சாண் ஏற முழம் சறுக்கல்கள், பழிபாவங்களுக்குமிடையில் ஜீவனுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் திருவருளாலும் குருவருளாலும் மகளார் சுட்டிய 'மலரும் உடன்பாட்டு எண்ண நினைவுகள்தாம்.'


பால்பேதமே இயற்கைதான்.. ஆனால் இயற்கைகூட அதைப் பெரிதாக்குவதேன்?

தேவமைந்தன்: Climate change is not gender-neutral: Climate change is not gender-neutral

23.10.15

<"ஒரு மொழியில் வெளிவரும் எல்லா படைப்புகளுக்கும் அடுத்தமொழியில் அதே வரவேற்புக் கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த படைப்பு ஏற்புடையதாக இருக்குமோ அதனை மொழிபெயர்க்க வேண்டும். நம் இலக்கிய படைப்புகளை அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு பிரான்ஸில் வாழும் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் இணைந்து 'chassecroise franceinde' என்னும் வலைப்பூ ஒன்றை பிரஞ்சு மொழியில் நடத்திவருகிறோம். இதில், கதை கவிதை தவிர, தமிழ்ப் படைப்புகள் குறித்த பிரஞ்சுக் கட்டுரைகளும், தமிழர்கள் எழுதும் பிரஞ்சுப் படைப்புகளும் இடம்பெறுகின்றன." - குமுதம் தீராநதி அக்.2014 நேர்காணலில் நண்பர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், புதுச்சேரி dir="ltr" style="text-align: left;" trbidi="on">

6.9.15

எம் கெழுதகை நண்பர் பேராசிரியர் பொன். பத்மநாபன், காரைக்காலிலும் புதுச்சேரியிலும் என்னுடன் நெடுங்காலம் பணியாற்றியவர். கேடு வருங்கால் கைகழுவி உடல்நழுவும் நட்புகள் நிலவும் இந்த உலகத்தில், 1.பல்கலைக் கழகம், 2.துறை, 3.பணிவாழ்க்கை என்ற மூன்று நிலைகளிலும் ஆபத்து வந்தபோது கைகோத்து உடன்நின்று உதவிய செம்மல் இவர். பணிநிறைவுக்குப் பின் ‘அகத்தியமான தனிமை’ எனக்கு வேண்டும் என்று கருதி, ஒதுங்கி வாழ்ந்தவர். எங்கள் நண்பர் முனைவர் & முதல்வர் திரு ப. சுதந்திரம் Sudhanthiram Pachiappan அவர்கள், பொன். பத்மநாபனின் கைப்பேசி எண்ணைக் கேட்டபோது என்னிடம் அவர் எண் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான், காரைக்காலில் ஓரிரு பேராசிரியர்களை இது தொடர்பாகக் கேட்கிறேன் என்று தெரிய வந்தபோது, நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரிடம் வயணம் சொல்லி விடுத்தார். இப்பொழுது எங்கள் பேரன்பர் முனைவர் செல்வப்பெருமாள் கையில், இதனுடனுள்ள படங்கள் சுட்டும் ஐந்து நூல்களையும் தந்தனுப்பினார். நேற்றிரவு நூல்கள் என் கைக்குக் கிடைத்தன. இனிமேல்தான் வாசிக்கத் தொடங்கவே வேண்டும்.

8.8.15

இனிமையான எளிமையான தனித்தமிழ் எண்சீர் மண்டிலங்களால் தமிழ நம்பி ஐயா படைத்துள்ள 'விடுகதைப் பா நூறு', இவ்வகையில் தமிழில் முதனூல்!

2.8.15

விளம்பி நாகனார் என்ற தெளிவான புலவர்

விளம்பி நாகனார் குறித்து மிகுதியும் கூற வேண்டுவதில்லை. கீழ்க்கணக்கு நூல்களில் அடி அளவால் நாலடியார் பெயர் பெற்றதுபோல், நவில்பொருள் அளவால் - 'நான்மணிக் கடிகை' எனப் பெயர் பெற்ற நூலின் பாக்களை இயற்றியவர். [இத்தொகுப்பில் ஒவ்வொரு பாட்டும் - 'நான்கு இரத்தினத் துண்டங்கள்' [ - கொண்டது] என்பது நூற்பெயரின் பொருள். நூல் முழுவதையும் வாசிக்கச் செய்வதே நம் நோக்கம் ஆதலால், மூன்றே பாக்களின் பொருளை மட்டும் இங்கே தருகிறேன். 54ஆம் பாடற்பொருள்: "எவருக்கும் - கண்ணை விடவும் சிறந்த உறுப்பு வேறேதும் இல்லை; வாழ்க்கைத்துணையை விடவும் சிறந்த உறவினர் வேறு எவரும் இலர். பெற்ற பிள்ளைகளை விடவும் பெருஞ்செல்வம், வேறு எதுவும் இல்லை. தன்னைப் பெற்ற தாயை விடவும் உண்மையாக வேறொரு கடவுள் இல்லை." இன்னொரு பாட்டு சொல்கிறது: "இனிது உண்பான் என்பான் [ஒன்றின்] உயிர் கொல்லாது உண்பவன்; முனிவன் என்பான், தன் அடையாளம் மறைத்து வாழ்பவன்; [உண்மையிலேயே] தனிமையானவன் எவன் - என்றால், எவருக்கும் எந்த நன்மையும் செய்யாது தனக்காக மட்டுமே வாழ்பவன்; [எல்லோருக்கும்] இனியவன் என்பவன்,யார் யாரே ஆனாலும் அவர்களிடம் சாதி முதலான பேதம் பார்க்காமல் ஒருவரேபோல் கருதி நடந்துகொள்ளும் ஒழுக்கம் கொண்டவன்." 101 ஆம் பாடல்: "மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள் - தனக்குத் தகை சால் புதல்வர்; மன[து]க்கு இனிய காதல், புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும், ஓதின் - புகழ் சால் உணர்வு." #டான் பிரவுன் படைத்த 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்' புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். தாய்மொழிவழி சொந்தக்காரரான விளம்பி நாகனார் மனதுக்குள் வந்து அழைத்தார். "கொஞ்சம் இங்கே வந்து இளைப்பாறிச் செல்!" என்று நான்மணிக் கடிகையைச் சுட்டினார். அதனால் விளைந்தது இக்குறிப்பு :-)
[Facebook note of Puducherry Devamaindhan (பசுபதி) on 03/08/2015]

12.7.15

புதுச்சேரியில் வாழ்வதால் படிக்கத்தான் முடிகிறது குடிக்க முடியவில்லை ;)

புதுச்சேரி, ஒரு புத்தக நகரம். குறுகிய பரப்பளவில், ‘நிறைய்ய’ புத்தக விற்பனை நிலையங்கள். ஒரு ‘டூவீலரை’க் கிளப்பிக்கொண்டு, மேற்கே வழுதாவூர் சாலை வழி உள்ளே நுழைந்தீர்களென்றால், சாரம் பாலம் வலது பக்கம் திரும்பினால் கொஞ்ச தொலைவில் இடது பக்கம் மாடியொன்றில் நண்பர் சீனு. தமிழ்மணியின் ‘இலக்கியம்.’ நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய புத்தகங்கள் முதல் எல்லாம் கிடைக்கும். புதுச்சேரியின் வடக்குப் பகுதியிலிருந்து அஜந்தா சிக்னல் வழி நேரே மகாத்மாகாந்தி வீதிக்கு வந்தால், முதல் வலது ஒடிப்பில் சங்கரதாஸ் சுவாமிகள் தெருவில் நண்பர் பாஸ்கரின் ‘பாரதி புக்ஸ்.’ காலச்சுவடு புத்தகங்கள் முதல் சாரு நிவேதிதா’வின் தடிமனான புத்தகங்கள் வரை எல்லாம் கிட்டும். அடுத்த இரண்டாம் தெரு மேற்கு முடுக்கில் ‘கண்ணதாசன் புத்தக நிலையம்.’ இரண்டு தெரு தாண்டினால் அரவிந்து வீதி - ம.கா. வீதி சந்திப்பில் மாடியில் ‘புஸ்தக் மந்திர்.’ பிரபஞ்சன், பாலகுமாரன்... எல்லா நூல்களும். உள்ளே இடது புறம் திரும்பினால் வடக்குப் பார்த்தவாறு ‘அமுதம் புத்தகக் கடல்.’ தொல்காப்பியம்,சங்க இலக்கியம் முதல் உரைகளோடு; சித்தர் இலக்கியம், ஜோதிடத் திண்டுகள் இன்னும் பற்பல. சற்று முன்னாலேயே, ‘வினாயக் புக் பேலஸ்.’ ஒருவழிச் சாலைகள் வழி ‘டைவர்ட்’ ஆகி ஆகி, ரங்கப்பிள்ளை தெருவுக்கு வந்தால் ‘சிறுவர் பூங்கா’ புத்தக நிலையம். கிழக்கே சற்றுத் தொலைவுக்குள் ஆம்பூர் சாலையில், இடது பக்கம் ஒடித்தவுடன், ‘ஹாட்பிரெட்ஸ்’ தாண்டி, மேனாள் முதல்வர் ஜானகிராமன் வீட்டை ஒட்டி ஹிக்கின்பாதம்ஸ். ஆனந்த விகடன் வெளியீடுகளிலிருந்து அனைத்து வகை ஆன்மீக, இலக்கிய, இன்னும் பல. அகராதிகள் பலவகை கிட்டும். வெளியே வந்து பக்கிங்ஹாம் கனால் வலது புறம் திரும்பினால் ‘வாக்.’ ஆசிரமத் தொடர்பானபுத்தகங்கள். கொஞ்சம் வடக்கே, மரீன் வீதியில் ‘சப்தா.’ அரவிந்தாசிரம சம்மந்தமான புத்தகங்கள். கிழக்கே ஆசிரமத்தை ஒட்டி தெற்கே வளைவெடுத்து வந்தால் ம.கா. வீதி பெத்திசெமினேர் பள்ளி எதிர்ப்புறம் ‘ஜம்பு.’ ஜிப்மர் மருத்துவ திண்டுகள் முதல் பழைய தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள். என்னுடைய 1980 ஆண்டு வெளியீடான ’புல்வெளி’ புத்தகத்தை, கையில் படி(பிரதி) இல்லாததால் இங்கேதான் விலைகொடுத்து வாங்கினேன். பக்கத்திலேயே, ‘பெரிய பார்ப்பாரத் தெரு’ என்றழைக்கப்படும் நீடாராஜப்பயர் தெருவைப் பிடித்து, மாதாகோயில் தெருவில் வலது பக்கம் திரும்பினால், கிழக்குப் பார்த்தவாறு ‘ஃபோகஸ்.’ இங்கே கிடைக்காத ஆங்கில பிரெஞ்சு நூல்களில்லை. மாதா கோயில் எதிரிலேயே கொலாஸ் மன்றத்தில் நெடுங்காலமாய்ப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. 10% முதல் 55% வரை கழிவுள்ள புத்தக மலைச் சரிவுகள். எப்படித்தான் நடத்துகிறார்களோ. இன்னொரு நிரந்தரப் புத்தக் காட்சிக்கு, மாதாகோயிலுக்கு எதிர்ச் சாலையிலேயே போனால் ‘ஒப்பித்தா’லையும் தாண்டி, அந்தண்டை பழைய ஆர்.டி.ஓ./ வணிக அவைக் கட்டடத்தில் ‘இந்தியன் புக்ஸ்.’ ஒவ்வொரு நாளும் எப்பொழுது மூடுகிறார்கள் என்றே தெரியாது. புலவர் இராசியண்ணன் நூல்களை வாங்கிய வாய்ப்பு அங்கேதான் கிடைத்தது. ஞாயிறு வந்து விட்டால் போதும். புதுச்சேரி நகரின் முதுகெலும்பு போன்ற காந்தி வீதி நெடுக, நாள்முச்சூடும் கூடும் தெருப்புத்தகக் கடைகளில் தமிழ்நாட்டுக் கிளை நூலகப் புத்தகங்கள் முதல் எல்லா மொழிப் புத்தகங்களும் கிடைக்கும். நண்பருக்கோ ஆசிரியருக்கோ அன்பளிப்பாகத் தருகிறோம் என்றிருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் பெயர் போடாமல் ‘அன்புடன்,’ என்று கையெழுத்துப் போட்டு அந்தந்த நூலாசிரியர்கள் தரும் புத்தகங்கள் பலவற்றை இங்கே அழகாகப் பார்க்கலாம். நுனி மடியாத புத்தகங்களாய் அவை காட்சி தருவது கொள்ளை அழகு. நம்மேல் ‘அசூயை’ கொண்டு நண்பர்கள் தர தவிர்த்த அழகான வண்ண அட்டைகளுடன் கூடிய புத்தகங்களை அவற்றின் 10% விலைக்கே (கழிவு /discount அல்ல; விலை!) தள்ளும் கடைகள் பல. நான் மட்டும் புதுச்சேரியில் இல்லாமலிருந்தால் கொடுங் குடிகாரனாயிருந்திருப்பேன். இங்கே புத்தகங்கள் என்னைப் படிக்கமட்டுமே விடுகின்றன. செலவும் மட்டு. இதில் முகநூலிலும் நேராகவும் நண்பர்களாயுள்ள நாங்கள் சிலர், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்கிறது வேறு.
கொஞ்சம் தள்ளி வங்கக் கடல். பழைய மேரி - நகராட்சிக் கட்டடமிருந்த இடம். அருங்காட்சியகம். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு இயக்க அலுவலகம். புதுச்சேரி அரசின் நூலகப் புத்தகத் தெரிவுக் குழுவிலும் விருது மதிப்பீட்டுக் குறுங்குழுவிலும், பல ஆண்டுகள், தங்கப்பா போன்ற ஐயாமார்களோடு பணியாற்றினேன். விருது மதிப்பீட்டுக் குழுவில் என்னையும் என் நெடுங்கால நண்பரையும் என்னையும் மோத விட்டுப்பார்த்தார்கள். நடக்கவில்லை. அதனால், கசப்புடன் விலக நேர்ந்தது. அது, ஒரு தனிக்கதை. இப்படி, “சட்டி சுட்டதும் கைவிட்டு விடும்’ பழக்கத்தால், நண்பர்கள் நண்பர்களாகவே தொடர்கிறார்கள்.
என் முதல் புத்தகம் 1976இல் - 100 படிகள் மட்டும் .. இரண்டாவது புத்தகம் 1980இல் 100 படிகள் மட்டும்.. மூன்றாவது புத்தகம் 1993இல் 72 படிகள் மட்டும் இயக்ககம் வாங்கியதாக ஞாபகம். புதுச்சேரி நூலகங்களுக்காக ‘புத்தககங்கள் வாங்குகிற சமாச்சாரத்’தில் “பழம் தின்று கொட்டை” போட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் சிலர், முகநூலில் மெளனம் காக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவதே என் நட்பின் பொறுப்பும் கூட. இந்த ‘லச்சண’த்தில், எனக்கு மிகவும் பழக்கமான பழம்பெரும் கோவை எழுத்தாளர் ஐயாவுக்கு மறுமொழி விடுக்க முடியாமல் ‘இக்கட்டு’ வேறு. இன்னோர் இக்கட்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்பானது. மறைந்த பெரும்பாவலர் செவ்வேள் ஐயா அவர்களின் நூலை ஆங்கிலத்தில் ‘பெயர்க்க’ முன்வந்தவர் “செய்தவற்றை” வெய்துயருடன் செவ்வேள் என்னிடம் சொல்லியிருக்கிறார். எப்படி இதை கோவைப் பெரியவருக்கு மொழிவேன்?
பின்குறிப்பு: இதில், இன்னும் பல புத்தக விற்பனையகங்கள் விடுபட்டிருக்கும். நண்பர்கள் அறிவித்தால் அறிந்து கொள்வேன். நன்றி :)


6.7.15

நாகரத்தினம் கிருஷ்ணா - காஃப்காவின் நாய்க்குட்டி; குறித்து தேவமைந்தன் எழுதிய முகநூல் குறிப்பு #3

மிகவும் படித்த பெண்கள் சிலர் - அரசியலை வெறுப்பதும், ஃபாஷன் பற்றியும் நகை துணிமணி பற்றி விவாதிக்க விரும்புவதும் ஆனதுதான் தாம் வாழும் வாழ்வின் நோக்கம் என்று நம்பிக்கொண்டிருக்கையில், இந்த நாவலில் வரும் ஹரிணியையும் பாரதியையும் நித்திலாவையும் கமிலையும் போற்றாமலிருக்க முடியவில்லை. இவர்களில் பாரதியும் நித்திலாவும் - வாழும் கதைமாந்தர் என்பதை ஆசிரியர் உரையின் கடைசியில் அறிகிறோம். ஹரிணியின் சிந்தனையெல்லாம், நானறிந்தவரை, நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சொல்லாடல்களுடன் ஒத்துப்போகக் காண்கிறேன். என் கருத்து தவறாகவுமிருக்கலாம். ஜெயகாந்தன் சொல்கிறாற்போல் வாழ்விலுங்கூட 'தவறுகள், குற்றங்கள் அல்ல' தானே? சரி. ஹரிணி பார்வையில் பிரெஞ்சு வங்கியொன்று அவதானிக்கப்பெறும் விதத்தில், சென்ற கிழமை, புதுவையில் நானே ஒரு வங்கியின் நிகழ்தருணத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் எப்படியெல்லாம் 'இது' ஆகுமோ என்று அஞ்சியிருந்தேன். அவர்கள் உண்டாக்கிய 'கணினிப் பெருந்திரை விம்பம்' (டோக்கன் தொடர்பானது) என் நெஞ்சின் துடிப்பை என்னையே கேட்க வைத்தது. அநேகமாக அதே வங்கியில், கணக்கு வைத்தோர் இருக்கை ஒன்றில், இந்த செயற்கை 'டென்ஷனேற்றம்' ஒன்றின் நிமித்த காரணமாக, சாய்ந்து நான் இறந்து விடுவேன் என்று நம்புகிறேன். 'லெட்ஜர்'களுடன் புன்னகை செய்த மனிதர்கள் வேலைசெய்த வங்கிகளின் காலத்தில், அப்பாவின் காசோலையைக் கொடுத்துப் பணம் பெறுகையில், உரிய 'கவுன்ட்டர்' மனிதர் என்னைப் பார்த்து, என் படிப்பு விடயமெல்லாம் விசாரித்தறிந்த காலத்திலேயே 'banking' செய்ய வாய்த்திருந்தேன். இந்த விறைப்பெல்லாம் 'செக்யூரிட்டி'களிடம்தான் அப்பொழுது இருந்தன. இப்பொழுது உள்ள மாதிரி இல்லாமல் 'ஜீவன்'கொண்டு அப்பொழுதைய வங்கிகள் இயங்கின. இருக்கட்டும். நம் "ஹரிணி வங்கிக்குள் நுழைந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகப்போகிறது. எல்லாமே கணினி மயமாக்கப்பட்டிருப்பது காரணம். இணைய இணைப்பு மூலமே காரியத்தை முடித்துக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இன்றைய மனிதனுக்கு இரத்தமும் சதையுமான மனித உறவுகள் தேவை குறைவு. உணர்வுகளின் எச்சிலோடு உரையாடல், மின் அஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், ஸ்கைப்புகள் என்கிற அரூபங்களுடன் உறவாடல். நதி கடலினைத் தேடவேண்டியதில்லை. கடல் நதியினைத் தேடிவரும் காலம். உயிர் வாழ்க்கை அல்ல. பிண வாழ்க்கை. அலுவலகம் போக வேண்டியதில்லை; கடைகளில் தொட்டுப் பார்த்து, நுகர்ந்து சுவைத்து பொருளை உடைமை கொள்ளத் தேவையில்லை. பிறந்த மேனிக்கு கதவை அடைத்துக்கொண்டு கேட்டதைப் பெற்று காலத்தைத் தேய்க்கலாம். ஒற்றை மனிதன், ஓர் இனம், குலக்குறி என்பதான அடையாள முத்திரைகளை அழித்து நிறுவிய ஊரும் சமூகமும் மீண்டும் பூர்வீகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன." இப்பொழுதைக்கு இதுபோதும். வயதான கைவிரல்களும் வயதாகாத மனமும் சண்டைபிடிக்கத் தொடங்கிவிட்டன. 'ஏசர்' - தனது வெப்பப் பெருமூச்சினை, என் இடது உள்ளங்கை மேல் ஊதுகிறது. பிறகு, தொடர்வேன்.

Vishwas Mudadagal எழுதிய Losing My Religion நாவல் தொடர்பான எதிர்வினையாக எனக்கு வந்த மின்னஞ்சலின் பகுதி

“அன்பு ....க்கு,

நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

.. .. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வாரமும் மாதமும் வருடமும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போவதும் இயற்கையின் ஒரு அங்கம் தான். [தகவல் தொழில் நுட்பத் துறை சர்ந்த] நாங்களும் இயற்கையின் பிள்ளைகள்தான். Vishwas Mudagal எழுதிய Losing My Religion நாவலில் என்ன குறை கண்டீர்கள்..?

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் திறமையும் புகழும் மிக்க ‘தொழில் முனைவோராக’ வளர்ந்தும், பாழாய்ப்போன mass support இல்லாமல் போவதால், ரிஷி என்னுமொருவன் உடைந்து சிதறிப் போனாலும்; தன் சொந்த நண்பர்களே தன்னை அதைரியப்படுத்தினாலும்; ஓரிரவு trance மாதிரி ஒரு மனநிலையில் 130 கிமீ தொலைவுக்குத் தன் SUV காரை, வழியில் யாரையும் கொல்லாமல் தானும் சாகாமல் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு விரட்டுவதும்; விடிகாலைக்குமுன் 03 மணிக்கு காவிரியின் கரைமணலில் வானத்தைப் பார்த்துப் படுத்துக் கொண்டு, சின்ன வயதிலிருந்தே தான் மானசீகத் தொடர்பு கொண்டு வரும் நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து, தனக்கொரு அடையாளம் காட்டுமாறு கதறுவதும், அந்தமாதிரி ‘அலெக்ஸ் ‘ அவனுக்கு அடையாளம் காட்டப்படுவதும்; தன்னிடம் சொத்து என்று உண்டேயான ஒரேயொரு SUV ஐயும் விற்றுவிட்டு காசாக்கி.. ஆயிரக்கணக்கிலான கி.மீ. பயணம் செய்து, ஹிமாலயத்தின் சாரல் பள்ளத்தாக்கில், கடல்மட்டத்துக்கு 3029 மீட்டர் உயரமுள்ள மலானா கிராமத்தில், இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்துகொள்கிறானே - அது, இயற்கைதரும் பாடமில்லையா..

இதற்குப் பின்னால், ரிஷியும் அலெக்ஸும் நிகழ்யுகப் பெண்ணான கைரா’வைச் சந்தித்த பிறகு உணர்வது மேன்மைமிக்க வாழ்வில்லையா? ‘பொருளாயத உலகில் அந்த வானத்தின் நட்சத்திரங்களுக்கு ஈடாக உயர்ந்து காட்டுகிறேன் பார்!’ ‘இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன் பார்!’ என்று சவால் விட்டு வாழும் ரிஷி; வற்றிவரண்ட மேலைக்கலாச்சாரத்தையும் -போர்போர்போர் என்று வெறிபிடித்தலையும் சட்டாம்பிள்ளைத்தனமான உள்நோக்கு அரசியலையும் முற்றிலும் வெறுத்து... ‘தன்னிருந்தே தான் விடுபட’ தவம் கொள்வதற்காக, எங்கோ உள்ள இந்தியாவை நேசித்து ஓடிவரும் அறிவியலின் மாற்றுப் பிரதியும் மனிதப் பரிணாம வர்ணமாலையின் முரண்பாட்டுக்குரிய செறிவான தேடலின் பிதாமகனுமான அலெக்ஸ்; இந்த ஆண்கள் இருவரிடமிருந்தும் முழுசாக வித்தியாசமாகி, அன்பு - அழகு - இரக்கம் - கருணை - பாசம் - உள்ளுணர்வு - அறிவான வாழ்க்கை ஆகியவற்றை இயல்பாக வரித்துக்கொண்டுள்ள நவீனப் பெண்மையின் பிரதிநிதியாகும் கைரா. இவர்கள் மூவருக்குள்ளும் மிகவும் எதேட்சையாக, ஏதோ ஒரு - பச்சைக்கண்களுள்ளவர்கள்[Greek Origin] தங்கள் சுயமிழக்காது வாழும் மலானா கிராமத்தில் உருவாகும் அர்த்தமுள்ளதும் ஆழ்ந்ததுமான அன்புகூடிய நட்புக்கும் புரிந்துணர்வுக்கும் இடந்தந்து வாழ்வது வாழ்க்கை..”

[Edited the mail]

5.7.15

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ (“சே பியா[ன்] அமியபிள் ஆ வூ மிசியே Krishna Nagarathinam B-) ’’)

முந்தி முந்தி மிகவும் விலாவாரியாக எழுதுவேன். நண்பர்களின் புத்தகங்களென்றால் சொல்லவே வேண்டாம். நாகரத்தினம் கிருஷ்ணா படைத்த ‘நீலக்கடல்’ நாவலுக்கும் மதுமிதா தமிழாக்கம் செய்த ராஜா பர்த்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ சாத்திரத்துக்கும் மிக விரிவான மதிப்பீடுகளைத் ‘திண்ணை’யில் எழுதினேன். ‘கீற்று’-வில் அயோத்திதாசர் குறித்து எழுதினேன். ‘புதுச்சேரி’ வலையேடு தொடங்கி ‘மரத்தடி’ ‘வார்ப்பு’ ‘திண்ணை’ ‘கீற்று’ முதலான வலையேடுகளில் நீண்ட பயணம். பெண் பெயரில் ‘நிலாச் சாரல்` முதலானவற்றில்.
வாழ்க்கையில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். வளவள என்றெழுதுவது கூடாது. திரைப்படம், புதினம் போலவே நம் எழுத்தாடல்களுக்கும் - தொகுத்தல் / Editing மிகமிக அவசியம் என்றெல்லாம் நேரில் பயிற்றுவித்த புதுச்சேரி வானொலியின் மேனாள் ஒருங்கிணைப்பாளரும், என் மேனாள் மாணவருமான திரு சிவப்பிரகாசமும்; தேவமைந்தனின் வலையேட்டு வாழ்க்கைக்குப் ‘பிள்ளையார் சுழி’போட்ட மேனாள் மாணவர் முனைவர் நா. இளங்கோ Ilango Nagamuthu அவர்களும்; வீட்டுக்கு வந்து வலையுலகம் தொடர்பாக எதையெல்லாம் செய்யலாம்,, முக்கியமாக செய்யக்கூடாதவை எவையெவை என்று பிள்ளைக்குக் கற்றுத் தருவதுபோல் கற்பித்த நண்பர் பாவலர் இராஜ. தியாகராஜன் அவர்களும்; துரோணர், ஏகலைவனுக்குப் பயிற்றுவித்தது போல் என் பெயரன் வழி புத்தக வடிவில் அருவமாக இல்லம் வந்து கற்றுத்தந்த Vishwas Mudagal [‘Today what you hold in your hands is the 14th version of the book.’ Author’s note. P. 9. ‘Losing My Religion’ (novel) FINGERPRINT! 2014] அவர்களும் - இந்த ‘சைபர் உலகில்’ எனக்குத் தொடக்கப்பள்ளி முதல் பல்கலை வரையிலான ஆசிரியர்கள்.
அதிலும், முகநூல் போன்ற சமூக வலைதளத்தில் - விடைத்தாள்களை ‘பக்குவமான’ ஆசிரியர்கள் திருத்துவது போலவும்; தமிழ்த் தந்தி [usage of Krishna Nagarathinam] படிக்கும் / பார்க்கும் நண்பர்கள் போலவும்தான் நம் பதிவுகளைப் பாஆஆஆர்த்து Like பதிகிறார்கள் என்பதை நன்கு அறிவேன். இந்த Like போடுவதற்குக்கூட, “பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்ற தமிழ் மூதுரையைப் பின்பற்றும் பலரை நான் நன்கறிவேன்.
இதனால்தான், நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலின் 13 - 308 பக்கங்களான நாவலையும் 309-310 பக்கங்களில் வரும் ‘பிரெஞ்சு சொற்கள்’ பட்டியலையும் விடாமல் வாசித்துவிட்டு, சமைந்துபோய் உடகார்ந்திருக்கிறேன்.[‘சமைந்துபோய்’ - யை, சினிமாப் பாடலாசிரியர்கள் கோணத்தில் கண்டுகொள்ளாதீர்கள்!]
இந்த நேரத்தில் நண்பர் பஞ்சு Panjangam Kaniyappan அவர்களின் திறத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியாது. நெடுநாள் நண்பராயினும் சற்று விலகி நின்று அவருடைய ‘ விமர்சனப் பார்வை’யையும்; கடகடவென்று எழுதிவரைந்து செல்லும் அரியவகை எழுத்தாற்றலையும் ஆச்சரியத்துடன், லாலி பாப் குவியலை அண்ணாந்து பார்க்கும் குட்டிப் பையனாக வியந்து பார்க்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கோபால கிருஷ்ண கெளமுதி’ வரலாற்று நாவலையே காலச்சுவடு அச்சேட்டில், த.ஜெ. பாணியில் சொன்னால் ‘விமரிசையான விமர்சனம்’ செய்தவரல்லவா Panjanganm Kaniappan என்ற ஐடியிலுள்ள பஞ்சாங்கம் என்கிற நண்பர் பஞ்சு!
இது இவ்வாறு இருக்க, எங்கள் புதுச்சேரி முதலியார்ப்பேட்டையைச் சேர்ந்த வாழ்முனி மகன் பாலனுடனும்; தமிழ்த் தந்தியில் ‘நியூஸ்’ வருமளவுக்கு பாலன் தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொண்ட செக் குடியரசின் குடிமகள் அத்ரியானாவுடனும்; முன்பே நா.கி. எழுத்துவழி பழகிவிட்ட பாரதியுடனும் ஹரிணியுடனும்; சர்சலில் தன் தமக்கையுடன் இரண்டாண்டுகள் வாழ்ந்து, அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளியேறி, பிரான்சில் வாழ்வதற்கு ஏற்ற அத்தாட்சிப் பத்திரங்கள் கையிலில்லாததால் வழக்குக்கிழுபடும் - 2009 போரில் பெற்றோர்களை இழந்ததுடன் இலங்கை ஆர்மியால் புலிகளியக்கம் சார்ந்தவள் என்று சந்தேகத்துக்காளாகி உயிரையும் உடலையும் அந்த ‘...வர்’களிடம் விட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கத்துடன், சகமனிதர்களை மதிக்கும் பிரான்சுக்கு வந்து வாழும் யாழ்ப்பாணவாசியான நித்திலாவுடனும் [குறிப்பாக நித்திலாவுக்கு மொழிபெயர்ப்பாளராக மட்டுமே உதவ வேண்டிய, ஆனால், இனந்தெரியாமல் அவளுக்காகப் பரிந்து பாடுபடும் ஹரிணியும் என்னுடன் வாழும் சகோதரிகளாகவே உணர்கிறேன்]; எனக்கு மிகவும் பிடித்த ‘மனத்தால் பழுத்த’ சாமி உடனும்; லக்னகுமாரனுடனும்; சகஜமான கமீலியுடனும்; ‘அசிஸ்டெண்ட் சோஷியால்’ எலிஸபெத்துடனும் [இதே வகைமாதிரிப் பெண்ணுடன் 1990+இல் நான் மட்டுமல்ல துணைவியாரும் நெருங்கிப் பழகியிருக்கிறார்; இப்பவும் பிரான்சிலுள்ள என் சகலைகொழுந்தியர் குடும்பத்தார்க்கு அவர் உதவி வருகிறார்]; .. இந்தியாவின் வடக்குக் கிராமத்து மங்லி வரை .. ஓ, முக்கியமாக காஃப்காவுடனும் அவருடைய ‘இருப்பை’ப் புத்துயிர்க்கும் நாய்க்குட்டி வரை .. பலருடன் தற்கணம் வாழ்ந்து வருகிறேன். ‘இடைவெளி’ இருந்தால்தானே விரிவாக எழுத முடியும்?
பின்னொரு முறை, இதைத் தொடர்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் நான்பழக நேர்ந்ததற்குப் புதுச்சேரி மட்டுமே காரணமல்ல. தகழி முதல் த.ஜெயகாந்தன் வரை; ஜெய்புன்னிசா அக்கா முதல் சகோதரி மதுமிதா வரை அன்புடன் பழகியவன் நான். இவர்களெல்லோரையும் விட நாகரத்தினம் கிருஷ்ணா என்னை இதுநாள் வரை, சகித்துக் கொண்டு, நட்புடன் உள்ளவர் என்பதற்காகவே நான் நிறைய எழுத வேண்டும். எங்கே..


3.7.15

புத்தர் அணுகுமுறை எவ்வளவு மெய்ப்பொருளானது - என்பதற்கு ஆய்வு அறிஞர் குணா மேற்கோள்களுள் ஒன்று!

மெய்ப்பொருள் குறித்து மதவாதிகள் பலவாறாகத் தருக்கம் செய்துவந்த காலமொன்று இருந்தது. அப்பொழுது புத்தர் கருத்துகள் ‘சிம்ம சொப்பன’ங்களாக மாற்று மதத்தவர்க்குத் தோன்றி வந்தன. ஆனால், புத்தரோ எளிய வலியவர். எதையும் அதிரடியாகச் சொல்லாதவர். தடாலடித் தத்துவஞானியல்லர் புத்தர். உண்மையான மெய்ப்பொருளாளர்.
[இனி வருபவை அறிஞர் குணா கருத்துகள்]
ஒரு காலகட்டத்தில் ‘கருத்துமுதல் கூறுகள் பொருள்முதலியலை மறுத்துச் சிறப்புப் பெற்ற’ன. இதற்குச் சான்றாக, ‘புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடையைக் குறிப்பிடலாம்.’
வச்சன் என்னும் துறவி கேட்ட கேள்வி:- “இறந்த பின்னர் முனிவர்கள் மீண்டும் பிறக்கின்றனரா?”
புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடை:- “ அவன் மறுபிறவி எடுக்கின்றான் எனக் கூறுவது பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பது எடுக்காதது என்னும் இருநிலைக்குமுரியவன் எனச் சொல்வதும் பொருந்தாது. மறுபிறவி எடுப்பதும் எடுக்காததும் என்னும் இருநிலைகளுக்கும் உரியவனல்லன் எனக் கூறுவதும் பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பதில்லை என்று கூறுவதும் பொருந்தாது.”
- என அவர் கூறுவதாக அமைகின்ற கருத்து நம்முடைய தலையைப் பம்பரம் போல் சுழலச் செய்கின்றது. தொடர்ந்து,
“ அனைத்தும் உணர்ச்சிகள்; அனைத்தும் காட்சிகள்; அனைத்தும் முன்னிலைகள்; அனைத்தும் தன்னுணர்வுகள்; அவை யாவும் பிடுங்கி எறியப்பட்ட பனைமரம் போல் துறக்கப்படும்; வேரறுக்கப் பெறும்; பிடுங்கி எறியவும் படும்.”
எனக் கூறுவது கருத்துமுதல் அடிப்படையிலான ‘சார்பியல்’ கோட்பாட்டிற்கே மெள்ள இழுத்துச் செல்கின்றது. அதன் முதிர்ச்சி நிலையே மதியமிகம் படைத்த ‘வெறுமை(சூனியக்)’ கோட்பாடு. “உலகம் நிலையானதென நான் கருதவில்லை; அவ்வுலகம் நிலையில்லாததெனக் கூறவுமில்லை” என புத்தர் வச்சனுக்கு உரைத்ததாக மச்ஃசிம நிகாயம் என்னும் ஈனயான நூல் செப்புகின்ற கூற்றுங்கூட அத்தகைய சார்பியல் கோட்பாட்டிற்கே கொண்டுச் செல்கிறது.” [குணா பயன்படுத்தும்] கலைச்சொற்கள்: சார்பியல் - Relativism. கருத்து முதலியல் - Idealism. பொருள் முதலியல் - Materialism. வெறுமை(சூனிய)க்கோட்பாடு - Nihilism. [முன்னுள்ள கலைச்சொல் Nihilism என்பதை குணா பயன்படுத்தவில்லை.]
அடிப்படை[ஆதாரம்]
ஆய்வு அறிஞர் குணா, ‘தமிழர் மெய்யியல்,’ பொதுமை வெளியீடு, #16, மங்கேஷ் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.

1.7.15

இது?

“மாப்பிள்ளை! மாப்பிள்ளை!” - நிமிடத்துக்கு மூன்று தடவையாவது ‘மாப்பிள்ளை’ என்று கூப்பிட்டுப் பேசியவர். சிரிப்பும் சுவாரசியமுமாகப் பேசியவர். “அப்புறம்..ஒங்க ஃப்ரெண்டு ஜெயராஜ் நத்தானியல் இப்ப எங்கே இருக்கார்?.." என்ற பாணியில், என் நண்பர்களைப் பற்றியும்; அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் பற்றியும் ஓயாமல் உற்சாகம் கொப்புளிக்கப் பேசியவர். சொந்த ஊர், திருச்சி. என்னுடன் பழகிய ஊர் கோவை. சொந்த வீடு, இயற்கைச் சூழலில், மருதமலை அருகில். உறவினருங்கூட. கோவை ஆர்.எஸ்.புரம் இரத்தின வினாயகர் கோயிலில் அவர் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்க, எப்பொழுதும் கூட்டம் கூடும். கோவை மத்திய சிறைச்சாலையில் திருக்குறள் வகுப்புகள் எடுத்தபோது, என்னையும் அப்பணியில் ஈடுபடுத்தியவர். நல்ல அறிவாளி. ஆசிரிய(ர்)ப் பணியைத் தெய்வமாகக் கருதி வாழ்ந்தவர்.
ஓய்வு பெற்ற பின்னர், ஓர் ஆன்மிக அமைப்பில் சேர்ந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அந்த ‘மிஷன்’ வெளியிட்ட புத்தகங்கள் பலவற்றை அள்ளிப் போட்டு, புதுச்சேரிக்கு ‘எடுத்துக் கொண்டுபோய்’ப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் புத்தகச் சுமையையும் தூக்கிக் கொண்டு புதுச்சேரிக்குத் திரும்பினேன். படித்தேன். படித்தேன். படித்தேன். ஒன்றுமே என் ‘மண்டை’யில் ஏறவில்லை. ஒருநாள் தொலைபேசியில் பேசும்போது, இங்கே கிழக்குக் கடற்கரைச் சாலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவரின் அலைபேசி எண்ணைத் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னார். அந்த அமைப்பு வெளியிட்ட புத்தகங்களே என்னை ‘ஒருவழியாக்கி’விட்ட விவரத்தையும்; அவர் அலைபேசி எண் தந்த ந(ண்)பரைச் சந்திக்கத் தயக்கமாகவுள்ள விவரத்தையும் உண்மையுடன் சொன்னேன். “உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், உங்களுக்குத் தெரிந்தவர்கள் / நண்பர்கள் எவருக்கேனும் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!” என்று சற்று கண்டிப்பாய்ச் சொன்னார். அவற்றைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுமளவு எனக்கு ‘ஆகாத’வர்கள் எவரும் புதுச்சேரியில் இல்லை என்பதால், ‘என்ன செலவானாலும் ஆகட்டும்’ என்று அவற்றையெல்லாம் தூதஞ்சலில் அவர் முகவரிக்கு அனுப்பினேன். அவருக்கு அவை கிடைத்து விட்டதை தூதஞ்சல் அலுவலகமும் உறுதி செய்தது. அவ்வளவுதான்...
சில ஆண்டுகளுக்கு முன்பே, ‘மாப்பிள்ளை’ என்று அழைத்து, சிரித்துச் சிரித்துப் பேசும் பழக்கத்தைக் கைவிட்டு விட்டவர், இப்பொழுது, நானே அலைபேசியில் பேசினாலும் எடுக்காமல், ஒரே முறை “எதையும் கடிதமாக எழுதுங்கள்; அஞ்சல் செய்யுங்கள். படித்துக் கொள்கிறேன்.. மின்னஞ்சல் பழக்கமெல்லாம் எனக்கில்லை..” என்று சொல்லி, பேசியை வைத்து விட்டார்.
ஒரு கிழமைக்கு முன் திருச்சிராப்பள்ளியிலிருந்து பேசிய நெருங்கிய உறவினர், "என்ன ..[உறவுப்பெயர்]..! “அவர்” உங்களை விட எவ்வளவு பெரியவர்.. எப்படிப் பயணம் செய்கிறார், எங்களைப் போல, எத்தனை சொந்த பந்தங்கள சந்திக்கிறார்.. அவரப்போய் வேதனைப்படித்திட்டீங்களே.. அவரும் இருக்கார். நீங்களும்தான் இருக்கீங்க.. என்ன பிரயோஜனம்,”.. என்று தொடர்ந்தார்.
தான், என் சிற்றப்பா மகளான அக்காவைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், பல ஆண்டுகள் என்னுடன் மிக நெருங்கிப் பழகி, தான் ஓய்வுபெற்ற பின்னர், மக்களுக்குப் பயன்படாத ஓர் ஆன்மீக இயக்கத்தில் தான் சேர்ந்து, அவரைப்போல் நானும் என் மனச்சான்றை விட்டு(ற்று)விடாததற்காக, என்னை முற்றிலும் ஒதுக்கி வைத்ததுடன், என் உறவினரிடமும் ‘நல்ல பெயர்’ வாங்கிக்கொள்ளும் அவர் ‘பணி’ வாழ்க!
பத்தாண்டுகளுக்கு முன்னர், சென்னையில், எம் குடும்பத்தை அன்புடன் அரவணைத்துக் காத்த அண்ணன்வழி உறவினரும் பெரியதோர் ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவர்களே. அது ஆன்மீகம்.
இது?


9.6.15

தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம்

1962 ஆம் ஆண்டில் ஏழாம் பதிப்பைக் கண்டது, தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம். காரைக்குடி, செல்வி பதிப்பகம் இதைப் பதிப்பித்தது. அந்தக் காலத்தில், 'பி.ஏ.' என்பதே பெரிய படிப்பு. அதனால்தான் தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் பெயருக்குப் பின் 'பி.ஏ.' என்ற பட்டத்தை 1950களிலேயே பதிப்பகங்கள் அச்சிடலாயின. தாகூரின் உணர்வு குன்றாமல், அவருடைய கீதாஞ்சலியின் நூற்று மூன்று கவிதைகளை எளிய தமிழில் செட்டியார் அவர்கள் தமிழாக்கினார். பானைச்சோற்றுக்குப் பதமொன்று இதோ: "எங்கு மனம் பயமற்று விளங்குகிறதோ, எங்கே தலை கம்பீரமாய் நிமிர்கிறதோ, எங்கு அறிவு சுதந்திரத்துடன் பொலிகிறதோ, எங்கு குறுகிய சாதிமதப் பிளவுகளால் உலகம் உடையாமல் உருப்பெற்றிருக்கிறதோ, எங்கு உண்மையின் ஆழத்தினின்று சொற்கள் உதயமாகின்றனவோ, எங்கே தளரா முயற்சி பரிபூரணத்தை நோக்கி கைகளைப் பரப்புகிறதோ, எங்கு பகுத்தறிவெனும் தெளிந்த ஆறு மாண்டொழிந்த பழக்கங்களான பயங்கரப் பாலைமணலில் பாயாது மீள்கிறதோ, எங்கே விரிந்தசிந்தனையிலும் செயலிலும் எனது உள்ளத்தை நினது அருள் இழுத்துச் செல்லுகின்றதோ, அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில், என் அப்பனே, எனது நாடு விழித்தெழுவதாக!" - கீதாஞ்சலி 35.

31.5.15

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ மழையும் கடற்கரை மனிதர்களும் - தேவமைந்தன் முகநூல் குறிப்பு

“கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை. ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாய்ச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை. போதும் போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடைவிடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கர்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவாலறிமுகப்படுத்தப்பட்ட மழைதான் எத்தனைவிதம். தனது இறப்புக்கூட ஒரு மழைநாளில் நடைபெற வேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தியிருந்த அப்பாவை எரிக்க ஈரவிறகிற்கு டின் டின்னாக மண்ணெண்ணெய் தேவைப்பட்டதை அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவர் உடலை எரிக்க வேண்டியிருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட...”
“ஹரிணி!”
“மழையிற் கரைத்திருக்கலாம்” -- கையிலிருந்த நாவலை மூடி விட்டு, தன் பெயரைச் சொல்லி அழைத்த மனிதரை நிமிர்ந்து பார்த்தாள்.”
- நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பக்.70-71

26.5.15

"என்ன பண்ணிக் கிழிச்சீங்க?" - பட்டுக்கோட்டை பாணியில் கேட்கும் 'அதிகம் படிக்காதவர்''...

நடைப்பயிற்சிப்பூங்காவிலோ கடற்கரையிலோ அல்லாமல், காலையிலேயே தனியார் பேருந்துகள் தங்கள் ஆற்றலையெல்லாம் காட்டி விரையும் விமானதளச் சாலையிலும் தொல்காப்பியர் சாலையிலும் [புதுச்சேரி நண்பர்களே! எனக்கு ஒரு சந்தேகம்: நாவலர் நெடுஞ்செழியன் மேனிலைப் பள்ளியும்; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் உள்ள சாலை, தொல்காப்பியர் சாலைதானே?] காலை நடைப்பயிற்சிக்குப் போய் வந்து, ஏறுவெயில் வந்துவிடுமுன் 'பண்ணுருட்டிக்காரர் கடை'யில் காய்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது, நெடுநாள் பழக்கமான நண்பர் என்னை நிறுத்தி - "ஒங்க தினத்தந்தியிலேயே ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் 'கல்வி செய்திகள்' என்று தலைப்பு போட்டு "ஆங்கிலம் மிகவும் அவசியம்"ன்னு பக்கத்தையே அடைச்சுட்டு ஒரு தொடரை, 37 வாரமா போட்டுட்டுருக்காங்க. பள்ளி விளம்பரங்கள்'லயோ - " அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஆங்கிலவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic English Medium School" - அப்படி'ன்னு பெற்றோரையெல்லாம் இழுத்துட்'ட்ருக்காங்க! இதையெல்லாம் எதிர்த்து ஆக்கபூர்வமா எதையும் சாதிக்காம, ஒண்ணு, நம்ம தமிழரையெல்லாம் பேடி கீடி'ன்னு திட்றாங்க.. இல்லேன்னா, அரசு அங்கீகாரமில்லாத பள்ளிகள தாங்களே திறந்து காசுபாக்க முயற்சிக்கிறாங்க! பாருங்க.. இப்'டியே போனா, "அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஹிந்திவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic Hindi Medium School" அப்படீன்னு விளம்பரங்க வரப்போவுது! நம்ம ஜனங்க அந்த பள்ளிகள்'ல பிள்ளங்'கல சேத்த 'லோலோ'ன்னு அலையப் போவுதுங்க!" என்றார். அவர் அதிகம் படிக்காதவர். ஆனால், சொல்லொன்று செயலொன்று என்றில்லாதவர். தன் பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறவர். ஒரு கட்சியைச் சார்ந்தவர். எதையும் நேரடியாகப் பேசுபவர். அவருக்கு என்னால் உரிய மறுமொழி சொல்ல ஏலவில்லை. என் பிள்ளைகளை, அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைத்தவன் நான். ஆனால், என் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளிலும் நடுவண் அரசுப் பள்ளிகளிலும் சேர்த்துப் படிக்க வைப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன். பேரப்பிள்ளைகளை, என் நண்பர்கள்முன், அவர்களின் பெற்றோர் வைத்த பெயர்களை வைத்தே அழைக்கிறேன். நண்பர் சொன்னதை 'உள்ளதை உள்ளவாறு' உங்கள்முன் வைக்கிறேன். அதற்குத்தானே முகநூல்!

22.5.15

அற்புதங்கள் கற்பிதங்கள் அல்ல! - தேவமைந்தனின் முகநூல் குறிப்பு

அன்றாட வாழ்வில் நமக்குள் - நம்முடன் - நம்தொடர்பாக நடக்கும் சிறுசிறு அற்புதங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பெரிய பெரிய பெரிய அற்புதங்களை ஏற்படுத்துவார்கள் என்று நம்பி, அற்பச் சிறுமதி கொண்டவர்களை நாடி நாம் ஓடுகிறோம் - என்று எமர்சன் சொன்னார். சற்றுமுன் என்னைத் தொடர்புகொண்டு அலைபேசிவழி பேசியவரின் பேச்சு யாதுகாரணத்தாலோ தடைபெற்று "அப்புறம் தொடர்பு கொள்கிறேன் ஐயா!" என்று நின்றதும் அற்புதம்தான். இல்லாவிட்டால், இந்தக் குறிப்பெழுத எனக்கு வேறு செவ்வி கிடைக்காது. தமக்குள் முரண்பட்ட நண்பர்களின் பொதுவான ந(ண்)பராக விளங்குவதில் சுகத்தைவிட சோகம் பெரிது. இந்த நண்பர் சொல்வதை அவருக்காகாத அந்த நண்பரிடமும் அவர் சொல்லும் கமுக்கங்களை இவரிடமும் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. அப்படி, வளரவுமில்லை. முகநூல், இதை உடைக்கிறது. அனாயாசமாகப் பிய்த்துப் போடுகிறது. அதிமுகவைச் சார்ந்த நண்பர் கருத்துக்கு லைக் போட்டதைத் திமுக நண்பருக்கு மட்டுமல்லாமல் பொதுவிலும் பறைசாற்றுகிறது. திமுக நண்பர், "என்ன சார், எவ்வளவு நடுநிலையானவரென்று உங்களை நினைத்தேன்.. தலைவரை அடுத்தடுத்துக் கேலி பண்ணுகிறார் அந்த ஆள்.. அவருக்கு நீங்கள் லைக் போடுகிறீர்களே???" - நியாயந்தான். தன் மேனிலைப் பள்ளியிறுதிக்காலத்தில் நிகழ்ந்த என் தொடர்பான நிகழ்ச்சி முதலாக என்னுடன் நாற்பதாண்டுகளாகப் பழகுவதுடன் வழியில் போக்குவரத்தில் பார்த்தால்கூட வண்டியை ஓரங்கட்டிவிட்டு ஓடிவந்தணைத்துக் கொள்ளும் தோழரின் முகநூல் பதிவைப் பகிர்ந்ததற்காக, எல்லா விடயங்களிலும் என்னைவிடப் பெரியவர், "தேவமைந்தன்! இது உங்கள் முகநூல் கணக்குத்தானே?" என்று ஐயப்படுகிறார். ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். 'கண்மறைப்பு'க் கட்டி வைக்கப்பட்ட குதிரை அல்லன் நான். என்னுடன் எனக்குத் தெரிந்து அறுபதாண்டுகளாக நட்புடனிருக்கும் அத்தனை நண்பர்களும் எனக்கு அகத்தியர்கள்தாம். "அரசியல்ல இதுவெல்லாம் சகஜமப்பா!" என 'சூரியன்' படத்தில் கவுண்டமணியின் 'பஞ்ச் டயலாக்' வருமே, அதுபோலத்தான் அரசியல் குறித்த நண்பர்தம் இடுகைகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு, என்னை முட்டுச் சந்தில் மாட்டவைத்தடித்தால் நான் எங்கே போவது? நான் Political Science என்ற அரசியலை கோவை அரசினர் கலைக் கல்லூரியில் முதன்மைப் பாடமாகப் படித்தபோதே புனிதமான அரசியல் கோட்பாடுகள் வேறு -நாட்டில் நடக்கும் அரசியல் வேறு என்பதைப் புரிந்து கொண்டவன். என் சீனியரான திரு ஆ. துரைக்கண்ணு, கல்லூரி ஹாஸ்டலில் ஆங்கில 'ஸ்வராஜ்யா' ஏட்டைக் கொடுத்து, " ஆச்சாரியார் ஆங்கிலத்தில் நடத்துகிறார் இதை.. இதையெல்லாம் வாசிக்க வேண்டும் பசுபதி! அப்போதுதான் அரசியல் விளங்கும்!" என்று அறிவுறுத்தியிருக்கிறார். 1965இல் கலைக்கல்லூரி மாணவர்களாக இருந்த எங்களை இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபடவைத்தவர் ஆ. துரைக்கண்ணுதான். அறிஞர் அண்ணாவால்தான் அரசியல் வகுப்பில் சேர்ந்தேன். சென்ற அறுபதுகளில்(1960s) பெரும் அரசியர் தலைவர்களாக விளங்கிய காமராசர், ராஜாஜி, ஜீவா முதலானவர்கள், எங்களைப்போன்ற மாணவர்களிடம் வெகு உற்சாகமாகப் பேசுவார்கள். அறிவுரைப்பார்கள். இந்தக் குறிப்பை நானெழுதக் காரணம், நமக்கு கவிஞர் இன்குலாப் அவர்களின் 'வரமா சாபமா" கவிதைபோல் கிடைத்த முகநூலின் விளைவுகள். நாம் யாருக்கெல்லாம் எதற்கெல்லாம் லைக் போடுகிறோம் என்பதை விலாவாரியாக வெளிப்படுத்துவது - முகநூலுக்கு நாரதம். நமக்கு? பாவேந்தர் பாரதிதாசன் சொல்வதுபோல், " சிரமறுத்தல் வேந்தனுக்குச் சிறியகதை.. நமக்கெல்லாம் உயிரின் வாதை!"

5.3.15

என் முகநூல் பக்கத்திலிருந்து மூன்றே துளிகள்

"ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்." - உலகநாதனார். இதற்கு, புலவர் குழந்தை அவர்கள் உரை:- "ஒருவர் மேலும் குற்றம் சொல்ல வேண்டாம்... யார் மீதும் குற்றங் கூறக் கூடாது."
# Never blame anybody. - Ulaga Needhi (a didactic literature in Tamil)

எந்தப் பிரச்சினை ஆனாலும் ஒத்திப்போடாதே. சாட்சிக்காரனை நயந்து கொள்ளாமல், சண்டைக்காரனைச் சந்தி. வாய்விட்டுப் பேசு. அவன் பிரச்சினை என்ன என்று கேள். முடிந்தால் தீர்த்து வை. இல்லாவிட்டால் 'bye' சொல்லிவிட்டு வந்துவிடு. - என்று அறிவுறுத்திய தந்தை சொல்லைக் கடைப்பிடித்தே சோதனை பல வென்றேன்..
'Go to the centre. Never compromise. Talk. Win. If you couldn't have chance to talk, BID GOOD BYE to the gentleman. Never turn back. Go on.' - Dad Mr. P.K. Annan

"தெரியாததைத் தெரிந்தது போலப் பேசுவது உமாருக்கு வெறுப்பையே விளைத்தது. அறியாமையினூடே படாடோபமான வார்த்தைகளைப் பேசி நாம் நடிக்கிறோம்." எஸ். வையாபுரிப் பிள்ளை(1951) பாரசிகப் பாவலன் உமர்கயாம் குறித்து.

" எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே!" - ஔவையார்

மற்றவர்கள் நம் மேல் விடும் சாபம் பலிக்கிறது என்றால், நமது மனம் நம்மைவிட அவர்களைத்தான் மதித்து ஏற்றுக் கொள்கிறது என்று அர்த்தம். திடமான மனம் உள்ளவர்கள், மற்றவர்கள் தரும் டென்ஷனை மதிக்க மாட்டார்கள்; டார்ச்சர் கொடுப்பவர்களுக்கு -'சட்டபூர்வமாக' கவுன்ட்டர்-டார்ச்சர் கொடுப்பார்கள். சம்பளம், நம் உழைப்புக்குக் கிடைப்பது. மனநோய் பிடித்தவர்களை நாமே நம் தலைமேல் உட்கார விடுவதற்குப் பிரதியாகப் பெறுவது அல்ல. பொதுத்துறை, தனியார் நிறுவனங்களின் மேலாண் இயக்குநர், தன்னிடம் -'குரூப்' சேர்க்காமல் பணிபுரியும் 'விசுவாசிகளை' 'unskilled'கள் டாரச்சர் பண்ணுவதற்கு மறைமுகமாக உதவினார் என்றால்,தகுதி மேம்பட்ட இன்னொரு நிறுவனம், அந்தப் பணியாளரை 'நேரம் பார்த்து' ஏற்றுக் கொள்ளும். " எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே!" - ஔவையார்.

அப்பா, அன்புள்ள அப்பா! (Thanks for the title: Sujatha) முகநூல் பதிவிலும் திண்ணை வலையேட்டில் தேவமைந்தன் வாழ்வியலுரை

அப்பா, அன்புள்ள அப்பா! (Thanks for the title: Sujatha)
11 February 2015 at 12:25

Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60609223&format=html&edition_id=20060922
ஒரு மனிதரின் வாழ்க்கை - பி.கே.அண்ணார்
தேவமைந்தன்

குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.
- டேவிட் லிண்ட்சே(David Lindsey)

இலண்டன் மிஷன் ஸ்கூலின் மெட்ரிகுலேஷன் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்ததால் தோல்வியுற்ற ஆத்திரம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரத்தில் பிறந்து வளர்ந்து கோவையில் படித்த கறுப்பண்ணனை, யாரிடமும் சொல்லாமல் சென்னைக்கு இரயிலேறி ஓடி, அங்கே ஹார்பரில் நங்கூரம் விலக்கிக் கொண்டிருந்த கப்பலொன்றில், அது எங்கு சற்று நேரத்தில் பயணம் ஆகப்போகிறது என்றே தெரியாமல், ஒளிந்துகொள்ளச் செய்தது.

இன்று அந்நிகழ்ச்சி நடந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் அது நடந்தது, சற்றேறக் குறைய, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்துப் பத்துகளில் என்பதால், மனிதாபிமானத்தோடு வாழ்ந்த ஆங்கிலேயக் கேப்டன் ஒருவரால் கறுப்பண்ணனின் வாழ்க்கை ஆரோக்கியமாகத் திசை திரும்பியது. அவன் ஒளிந்திருந்த இடம் அந்தக் கேப்டனின் அறைக்குப் பக்கத்தில்தான் இருந்தது. வளர்த்துவானேன்?

'அந்தக் காலத்து மெட்ரிக் ஆங்கிலத்தில்' கறுப்பண்ணன் சொன்ன விவரமெல்லாம் கேட்டறிந்த கேப்டன், கறுப்பண்ணனைத் தன்னுடன் இருக்கச் செய்து ஆங்கிலத்திலும் அந்தக் கப்பல் ஏற்றிருந்த "மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி' வியாபாரத்திலும் பயிற்சி கொடுக்கத் தீர்மானித்த சில மணி நேரங்களில் 'பம்பஃஹ்' என்று சிலமுறை ஆரவாரித்தவாறு அந்தக் கப்பல் புறப்பட்டுவிட்டது.

சில காலம் அந்தக் கேப்டனின் அன்பிலும் கண்டிப்பான பயிற்சியிலும் நனைந்து காய்ந்த கறுப்பண்ணனுக்கு, அந்த ஆங்கிலேயன் தொடர்பால் மூன்று கருத்துகள் உள்ளத்தின் ஆழத்தில் சென்று தைத்துக் கொண்டு விட்டன; கடைசிவரை அங்கேயே தங்கவும் தங்கி விட்டன.

முதலாவது, சாதிப்பெயரைத் தன் பெயருடனோ அல்லது தன் பெயராகவோ வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டாவது, குருதியைத் தெளிப்பதுபோல் எக்காலத்திலும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு எச்சிலைத் தரையில் உமிழக் கூடாது. மூன்றாவது, தன்பெயரில் அறிந்தோ அறியாமலோ நிறவெறி சார்ந்த அம்சம் நிலைபெறக் கூடாது.

'கறுப்பு' என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராம தேவதை என்று அறிந்து கொள்ளாததாலோ, நிறவெறி நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்த அந்தக் காலத்திலும், தான் ஓர் ஆங்கிலேயன் - வெள்ளையன் என்ற வெறியில்லாமல் 'கறுப்பு' என்றால் கறுப்பினத்தவரையோ ஒடுக்கப்பட்டவர்களையோ குறிக்கும் என்று நினைத்துக் கொண்டதாலோ, அல்லது அதற்கு எதிர்மாறாகக் கறுப்பு நிறத்தைக் கறுப்பர்களின் அடையாளமாகக் கருதி உள்ளுக்குள் வெறுத்திருந்ததாலோ - அந்த ஆங்கிலேயர் மேற்படி மூன்றாவது உணர்வை உள்ளத்துள் விதைத்த விளைவாக, கறுப்பண்ணன் என்ற தன் பெயரை K.அண்ணன் என்று சுருக்கிக் கொண்டும் பெரியதம்பி என்ற தன் தந்தையின் பெயரைப் P என்ற தலைப்பெழுத்தாக முன்னிட்டுக் கொண்டும் P.K.அண்ணன் என்று மட்டும் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டார். [வளர்ந்துவிட்டார் அல்லவா? அதனால்..'ஆர்' விகுதி.] கப்பல் இங்கிலாந்தில் நங்கூரமிட்டபொழுது கேப்டன் உதவியுடன் பெயர்ப் பதிவு நிகழ்ந்தது.

முதல் உலகப் போரின் பாதிப்புகள் ஐரோப்பாவை விட்டு நீங்காத காலம்...

ஆண்டுகள் சில உருண்டோடின. பர்மாவில் கப்பல் நங்கூரமிட்டபின் பி.கே.அண்ணன் வாழ்வு மீண்டும் திசை மாறியது. முன்பு, சென்னையிலிருந்து வங்கக் கடலில் செல்லும் பொழுது. இப்பொழுது, வங்கக் கடல் வழியே பர்மாவுக்குச் சென்ற பொழுது. கேப்டன் விடை பெற்றுக் கொண்டு கடல்மேல் செல்ல, பர்மாவில் தங்கி, அங்கிருந்த 'மெர்குயி டின் ட்ரேடிங் கம்பெனி'யைக் கவனித்துக் கொண்டார். சில ஆண்டுகளில், தான் நண்பர்கள் சிலர் மூலம் கற்ற பின்னலாடை எந்திரங்களைப் பற்றிய அறிவைக் கொண்டு பர்மாவின் தலைநகரான ரங்கூனில் ஸ்பார்க்ஸ் சாலை 51ஆம் இலக்கமிட்ட - மரக்கட்டுமானமே பெரும்பாலுமான கட்டடத்தில் 'ஓரியண்டல் நிட்டிங் ஃபாக்டரி'’ என்ற பின்னலாடைத் தொழிலகத்தைத் தொடங்கினார். கோவையிலிருந்த தன் பெற்றோரையும் சகோதரர்களையும் ரங்கூனுக்கே அழைத்துக் கொண்டார். சகோதரர்களுக்குத் தன் ஃபாக்டரியில் பயிற்சி தந்து பின்னர் உரிய பொறுப்புக்களையும் தந்தார். அப்பொழுது, பிரிட்டன் பர்மாவை இந்தியாவின் ஒரு பகுதியாகக் கொண்டு ஆண்டுவந்தது. இவ்வாறு நிகழ்ந்த 1937ஆம் ஆண்டுவரை [அதே 1937இல் சுயாட்சியும், 1948இல் முழுச் சுதந்திரமும் பர்மா பெற்றது], கோவையிலிருந்து என்பதைவிடப் பெரும்பான்மையாகச் செட்டிநாட்டுப் பகுதிகளிலிருந்தும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் பர்மாவுக்குத் தமிழர்கள் பலர் சென்று அங்கேயே தொழில்கள், வணிகமுறைகள் பலவற்றைச் செய்து வளமாக வாழ்ந்தனர்.

தான் நிறுவிய பின்னலாடைத் தொழிலகத்தில், தன் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல உள்ளூர்க்காரர்களான பர்மாக்காரர்களுக்கு முதன்மையான வேலைகள் தந்ததாலும், பர்மியர்களுடனும் அங்கு வாழ்ந்த சீனர்களுடனும் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்ந்ததாலும் பி.கே. அண்ணன் அவர்களை அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அதற்கு ஓர் அடையாளம், இத்தனை ஆண்டுகள் கழித்த பின்பும், உள்ளது. புதுச்சேரியில்... பி.கே.அண்ணன் அவர்களின் கடைசி மகனின் வழிப் பேரனார் இல்லத்தில். தேக்கில் செய்யப்பெற்ற திருக்கோயில். மேலே உள்ள மூன்று கும்பங்களையும், நடுவில் உள்ள நான்கு தூண்களையும், தளத்தையும், அடித்தளத்தையும் எளிதாகக் கழற்றி விடலாம்; மீண்டும் பூட்டிக் கொள்ளலாம். நல்ல கனம். ஐராவதி என்ற கப்பலில், இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ரங்கூன் பி.கே.அண்ணார் [அச்சமயத்தில் அப்படி அழைக்கப்பெற்றார்] அவர்களுடைய குடும்பத்தாருக்குத் துணையாக அந்தக் கோயிலும் சென்னைக்கும், பின் கோவைக்கும் வந்தது. பின்னர், இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் புதுவைக்கும், அடுத்து ஐந்தாண்டுகளுக்குப் பின் காரைக்காலுக்கும், அடுத்தடுத்து ராஜயோகி ரங்கூன் பி.கே. அண்ணாரும் அவர் துணைவியார் தெய்வானை அம்மாள் அவர்களும் 1988ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சமாதி எய்திய பின்னர் புதுச்சேரிக்கும் துணையாகச் சென்றது. அது தேக்கினால் ஆனது மட்டுமன்று. நல்லதொரு சீன மனிதரின் கலைத் திறனால் ஆனது. புதுச்சேரியில் ஆனந்தாசிரமத்தின் நிறுவனரும் தலைமை யோகியுமான கீதானந்தா அவர்களால் 1970ஆம் ஆண்டில் ‘ராஜயோகி’ என்ற சிறப்புத் தலைப்பு வழங்கிக் கெளரவிக்கப் பெற்றார். இதற்கும் இவர் துணைவியார் சிவதீட்சை பெற்று நாற்பத்தாறு ஆண்டுகள் நியமமான வாழ்க்கை வாழ்ந்தமைக்கும் அருணாசல சுவாமிகள் என்ற துறவியாரே காரணம். வேடிக்கை என்னவென்றால், இவர் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்புமுனையிலும் உன்னதமும் சத்தியமும் வாய்ந்த துறவியர் சிலர், இவரைத் தளராமல் பார்த்துக் கொண்டு வழிநடத்தியதும்தான். இதற்குச் சரியானதொரு சான்று:

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில், ஜப்பான் நாடு தன் இராணுவ பலத்தால் அமெரிக்காவையும் அஞ்ச வைத்துக் கொண்டிருந்த காலகட்டம். பர்மாவில் நுழைந்து அட்டகாசம் செய்த ஜப்பான் படைகள், ரங்கூனுக்குள்ளும் புகுந்து சூறையாடின. அங்கே வளமாக வாழ்ந்த தமிழர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். பானைச்சோற்றுக்கொரு பதமாக, ரங்கூன் பி.கே.அண்ணார் தொடர்பாக நிகழ்ந்த சூறையாடலைப் பார்ப்போம்.

மற்ற தமிழர்களைப் போல, தன் குடும்பத்தார் அனைவரையும் சீனக் கலைஞர் செய்து தந்த தேக்குக் கோயிலையும் கப்பலேற்றித் தாயகத்துக்கு அனுப்பியபின் ஒருநாள் காலை... ஜப்பான் இராணுவம், ரங்கூனுக்குள் புகுந்து சூறையாடத் தொடங்கிய நேரம். ஜப்பான் இராணுவத்தினர் சிலர், இவர் வீட்டுக் காம்பவுண்டுக் கதவுகளை அதிரடியாகப் பெயர்த்துக் கொண்டு வந்தனர். இவரை அழைத்து, இவர் பார்க்கப் பார்க்க, ஷெட்டில் நின்று கொண்டிருந்த - இவருடைய - தட்டெழுதும் வசதி சேர்ந்த [இன்று கார் ஸ்டீரியோ வசதி போல] ஆர்ம்ஸ்ட்ராங் சிட்னி என்ற அந்தக் காலச் சொகுசுக்காரையும் போர்ட் காரையும் வெடிகுண்டு வீசித் தகர்த்து விட்டு - "இனியும் நீங்கள் தாமதித்து இங்கிருந்தால், உங்களுக்கும் இதே கதி நிச்சயம். நாளைக்கு வருவோம்!" என்று எச்சரித்துப் போய்விட்டார்கள்.

நல்ல வேளை. குடும்பத்தார் நிம்மதியாகக் கப்பலில் போய்க் கொண்டிருக்கிறார்கள்... இவருக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்களைத் தொடர்பு கொள்ள இவர் போன வழியில் அவர்களே நடைப் பயணமாக, எதுவும் கைகளில் எடுத்துக் கொள்ளாமல், சிரபுஞ்சி வழியாகவும் இந்தியாவின் வடகிழக்கு வாயில் வழியாகவும் தாயகத்துக்கே திரும்பும் நோக்கத்துடன் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடன் ரங்கூன் பி.கே.அண்ணாரும் நடைப்பயணம் தொடங்கினார். வழியில் 'ஸ்டேட் எக்ஸ்பிரஸ்' சிகரெட் டின்கள் இரண்டில் ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் உப்பும் தாங்கி நடந்து தின்று உயிர்சுமந்து வந்த போராட்டத்தில், பிழைத்தவர்கள் சிலரே.

இந்தியாவுக்குள் நுழைந்து விட்டபின், மற்றவர்களைப் போல உடனே தென்னகம் திரும்பாமல் ரிஷிகேசத்தில் உள்ள சுவாமி சிவானந்தர் குடீரம் என்னும் குடிலில் ஒரு மாதத்துக்குமேல் தங்கி உள்ளத்தைத் தெளிவாக்கிக் கொண்டார். மாலையிட்டு வழிபடப்பெற்றுக் கொண்டிருந்த தன் படம் இருந்ததும்; கோவை செல்வபுரத்தில் தன் குடும்பத்தார் வாழ்ந்திருந்ததும் ஆன வீட்டுக்கு அவர் போய்ச் சேர்ந்தபொழுது, அக்குடும்பத்தார் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்கக் கூட முடியாது.

அப்புறமும் தன் குடும்பத்தார் நலத்துக்காக, எழுபத்திரண்டு வயது வரை உழைத்தார். பழைய செல்வ வாழ்க்கை தன்னை விட்டுப் போனபின்பும் மனம் தளராமல் 27 இஞ்ச் பிலிப்ஸ் சைக்கிளில் வேலைக்குச் சென்றதோடு, தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கும் தொடர்ந்து சென்றுவந்தவரை மதித்துப் பாராட்டியவர்கள் - தமிழ்வாணன் முதல் ஆன்மீகப் பேச்சாளர் நா.கிரிதாரி பிரசாத் வரை பலர். இதைவிடவும் வியப்பானது, எந்த பர்மாவிலிருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வந்தாரோ, அதே நாட்டுக்குத் தன் இரண்டாம் மகனார் திரு ஏ.கே. மூர்த்தியும் அடுத்தவர் திரு சிவப்பிரகாசமும் (மீண்டும்) பர்மாவுக்குச் சென்றபொழுது ஊக்குவித்தார். அவர் எண்ணம் போலவே, அவ்விருவரும் மிகவும் சிறப்பாக பர்மாவில் வாழ்ந்தனர். தமிழ்வாணன் தன் 'கல்கண்டு' இதழில் பர்மா ஏ.கே. மூர்த்தி அவர்களின் முயற்சிமிக்க அரிய வாழ்வைப் பற்றி விரிவாக (Profile) எழுதிப் பாராட்டினார்.

இன்னும் சொல்ல எத்தனையோ உண்டு, இராஜயோகியாகத் தன் தொண்ணூற்றாறு வயதில் காரைக்காலில் பச்சூரில் ஒடுக்கமான பி.கே.அண்ணார் வாழ்க்கையில்.

குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல்.

அறிவோம். வாழ்வோம்.

****
karuppannan.pasupathy@gmail.com

Copyright: thinnai.com