26.5.15

"என்ன பண்ணிக் கிழிச்சீங்க?" - பட்டுக்கோட்டை பாணியில் கேட்கும் 'அதிகம் படிக்காதவர்''...

நடைப்பயிற்சிப்பூங்காவிலோ கடற்கரையிலோ அல்லாமல், காலையிலேயே தனியார் பேருந்துகள் தங்கள் ஆற்றலையெல்லாம் காட்டி விரையும் விமானதளச் சாலையிலும் தொல்காப்பியர் சாலையிலும் [புதுச்சேரி நண்பர்களே! எனக்கு ஒரு சந்தேகம்: நாவலர் நெடுஞ்செழியன் மேனிலைப் பள்ளியும்; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் உள்ள சாலை, தொல்காப்பியர் சாலைதானே?] காலை நடைப்பயிற்சிக்குப் போய் வந்து, ஏறுவெயில் வந்துவிடுமுன் 'பண்ணுருட்டிக்காரர் கடை'யில் காய்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது, நெடுநாள் பழக்கமான நண்பர் என்னை நிறுத்தி - "ஒங்க தினத்தந்தியிலேயே ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் 'கல்வி செய்திகள்' என்று தலைப்பு போட்டு "ஆங்கிலம் மிகவும் அவசியம்"ன்னு பக்கத்தையே அடைச்சுட்டு ஒரு தொடரை, 37 வாரமா போட்டுட்டுருக்காங்க. பள்ளி விளம்பரங்கள்'லயோ - " அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஆங்கிலவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic English Medium School" - அப்படி'ன்னு பெற்றோரையெல்லாம் இழுத்துட்'ட்ருக்காங்க! இதையெல்லாம் எதிர்த்து ஆக்கபூர்வமா எதையும் சாதிக்காம, ஒண்ணு, நம்ம தமிழரையெல்லாம் பேடி கீடி'ன்னு திட்றாங்க.. இல்லேன்னா, அரசு அங்கீகாரமில்லாத பள்ளிகள தாங்களே திறந்து காசுபாக்க முயற்சிக்கிறாங்க! பாருங்க.. இப்'டியே போனா, "அனைத்துப் பாடங்களும் மிகச்சிறப்பாக ஹிந்திவழிக் கல்வியில் போதிக்கப்படுகின்றன / A Futuristic Hindi Medium School" அப்படீன்னு விளம்பரங்க வரப்போவுது! நம்ம ஜனங்க அந்த பள்ளிகள்'ல பிள்ளங்'கல சேத்த 'லோலோ'ன்னு அலையப் போவுதுங்க!" என்றார். அவர் அதிகம் படிக்காதவர். ஆனால், சொல்லொன்று செயலொன்று என்றில்லாதவர். தன் பிள்ளைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறவர். ஒரு கட்சியைச் சார்ந்தவர். எதையும் நேரடியாகப் பேசுபவர். அவருக்கு என்னால் உரிய மறுமொழி சொல்ல ஏலவில்லை. என் பிள்ளைகளை, அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைத்தவன் நான். ஆனால், என் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளிலும் நடுவண் அரசுப் பள்ளிகளிலும் சேர்த்துப் படிக்க வைப்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன். பேரப்பிள்ளைகளை, என் நண்பர்கள்முன், அவர்களின் பெற்றோர் வைத்த பெயர்களை வைத்தே அழைக்கிறேன். நண்பர் சொன்னதை 'உள்ளதை உள்ளவாறு' உங்கள்முன் வைக்கிறேன். அதற்குத்தானே முகநூல்!

No comments: