15.10.10

சாமிகிரி சித்தர் மறைவும் தொடர்புடையதொரு சிந்தனையும்

பலருக்குச் செவிப்புலனைச் சீர்செய்து வந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்ற பிசிராந்தையார் - சோழன் நட்பினருக்கும் தொடர்ந்து தன் எல்லாப் பெருநூல்களையும் சிறுநூல்களையும் காப்பான பதிவுடன் காசுபணம் கருதாமல் அனுப்பி வைத்து வந்தார். நட்பை வணிக நோக்குடன் பார்க்காதவர். என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்களின் மாமனார் அவர்களுக்குச் செவிப்புலன் சீர்ப்படுத்துதல் தொடர்பாக என் அண்ணார் மகனார்வழி தொடர்புகொண்டபோது, 'செவிப்புலன் கருவியைப் பயன்படுத்திவிட்டவர்களுக்கு மீண்டும் இயல்பாக அப்புலனை இயக்க இயலாது' என்ற உண்மையை அன்புடன் தெரிவித்தவர். அவரத்தனை ஆற்றல் இருந்தால் ஒவ்வொருவர் எப்படி ஆட்டமாய் ஆடிவிடுவர்! அன்பும் உண்மையும் துணைவியார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு வாழ்ந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்றவர்களின் நெஞ்சங்களில் அவர் எப்பொழுதும் வாழ்வார். (படத்துக்கு நன்றி: thats tamil: by oneindia.in)

11.10.10

எத்தகைய உரையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்? - முனைவர் க. தமிழமல்லன்

புன்செய்யில் தோன்றியது சிறிய இலை நெருஞ்சிச்செடி. அதன் பூக்கள் கண்களுக்கு இனிமையானவை. அது முள்ளுடையதைப் போன்று, காதலர் இன்பத்தை மட்டும் செய்தாரல்லர்; துன்பத்தையும் செய்தார். அதனால் என் நெஞ்சம் துன்புற்றது.......... துன்புற்றது. நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்குஇன் புதுமலர் முட்பயந் தாஅங்கு இனிய செய்தநம் காதலர் இன்னா செய்தல் நோமென் நெஞ்சே. (௨0௩) (அமன்ற - நெருங்கி முளைத்த : கட்கு - கண்ணுக்கு : இன் - இனிய) இப்பாடலை இயற்றியவர் அள்ளூர் நன்முல்லை. தலைவன் தலைவிக்குத் துன்பமும் செய்தான். அது குடும்பத்தில் நிகழ்வது இயல்பு. அதனால் தன் துன்பத்தைத் தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள். இதுவும் இயல்பே. கட்குஇன் புதுமலர் முட்பயந்தாங்கு என்று சொல்லும் உவமை அதை வெளிப்படையாக்கி விட்டது. ஆனால் இப்பாடலுக்கு உரை வரைந்தவர்கள் தலைவன் பரத்தை ஒழுக்கமே தலைவிக்குச் செய்த துன்பம் என்று குறிப்பிட்டுள்ளனர். பரத்தையிடமிருந்து திரும்பிய தலைவனின் தூதாகத் தோழி வந்தாள் என்றும் உரையாசிரியர் கூறுகிறார். இப்படிச் சொல்லுதல் வழிவழியாக வந்து விட்டது. இத்தகைய உரைகளை மறு ஆய்வு செய்தல் வேண்டும். வெல்லும் தூயதமிழ் ௨0௪௧, கன்னி, அகுத்தோபர், ௨0௧0. பக். ௧௧-௧௨.