25.6.07

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: 'நீலக்கடல்' குறிப்பாக...

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: 'நீலக்கடல்' குறிப்பாக... - தேவமைந்தன் 1673ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன்முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச்சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன. 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன. 1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப்பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே 'இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் 'நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்' (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்கள் அவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர் முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் 'புதுவை வரலாறும் பண்பாடும்' 'தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும்' போன்ற நூல்களில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகிதம் என்னும் தினப்படி சேதிகுறிப்பு(தன் முதல் தொகுதியின் மேலட்டையில் 'சொஸ்த லிகிதம்' என்றுதான் அவர் குறிப்பிட்டிருந்தார்*) முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பலவற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை அந்த நூல்கள். இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில், கடந்த 1910களில் 'புதுவைக் கலைமகள்' என்ற 'மாத சஞ்சிகை' நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி, வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன. 1916ஆம் ஆண்டில், 'புதுவைக் கலைமக'ளில், அதன் ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், 'ரமணி' என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு 'குணாகுணவாராய்ச்சி''(புதுவைக் கலைமகள்--[1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும். சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் 'ரமணி' போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டுவிட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார். "உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசாசாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின் நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்" என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார். இந்த அடிப்படையிலேயே - தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா! நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கடல்' நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலானவற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு 'Les Tamouls A L'lleMaurice - Ramoo SooriaMoorthy,' 'Les Indienes A L'lle de France,' 'A Lougnon - (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)' முதலான பற்பல நேரடி ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன. புதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார வழக்குச் சொற்கள் நிரம்பிய 'ஆண்களும் பெண்களும்'(1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார். பிரான்சுக்குப் போய்வரும் தமிழர்களைக் குறித்தும் பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப்பட்டிருக்கிறார் பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு 'பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்' என்று புதுச்சேரியைப் பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்திருக்கிறார். "என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன என்பது மெய்தான்!" என்று பிரபஞ்சன் மொழிவது 'எழுத்தாளர் தர்ம'த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து 'வைகறை' என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய 'எழுத்தாளர் தர்மம்' என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது) "எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டுவந்து சேர்த்தார்கள்? தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்துவிடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை" என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது. இருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் 'நீலக்கட'ல்(திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம் தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு [தெமி 1x8] பக்கங்கள் நிரம்பிய நாவல் - முன்னுரைகள் நீங்கலாக...) அந்தப் போலி வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்திலெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது, திண்ணை.காம்-இல் தொடராக வெளிவரும் 'மாத்தா ஹரி'' இன்றும் புதுச்சேரியில் நீடிக்கும் அந்த 'சொல்தா வாழ்க்கை'யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச் சித்திரிக்கின்றன. சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர் மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச் சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316) பிரபஞ்சனின் 'மகாநதி'' (1990) இரண்டு தலைமுறைகளைப் பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச் சார்ந்தது ஒன்று. புதுச்சேரி - விடுதலைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது. கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன், தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின் கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல். பிரபஞ்சனின் 'மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல். இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743 வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம். குவர்னதோர் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை, அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன. தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப் போராடும் கோகிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை - என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று உருவானது. அவளையும் அவள் இசையாற்றலையும் நன்கு புரிந்து கொண்டு உயர்த்தும் வேதபுரீசுவரர் கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், ஆறு ரூபாய் கடனுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு காதுகள் அறுக்கப்பட்ட சின்னக் கறுப்பு அவனால் எட்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அவன் மகள் மானங்காத்தாள், தன் மகளை நினைத்துக் கொண்டே மனநலமிழந்த பேச்சி முதலான அவலக் கதைமாந்தர் அன்றைய புதுச்சேரியை நினைவுபடுத்துகின்றனர். மதரீதியாகப் புரட்சி செய்யும் சீமான் ஐயரும்(மேனாள் சிறுவன் குருசு), தகுதி இல்லாதவர்களிடம் தகுதியில்லாத பொருள்களைக் கேட்கச் சொல்லித் தன் நடுப் பிராயக் கணவனான தளபதி ராகுஜியை நிர்ப்பந்தித்து அவை கிடைத்தபின் அலட்சியம் செய்யும் இளம் பெண் மோஹனா, பிரஞ்சுக்காரனாகப் பிறவாமல் தமிழனாகப் பிறந்ததற்கு மனம் புழுங்கி வாடும் வாகட வரதன் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்களே. தண்டுக்கீரை என்ற ஆண்பெயர், அவன் மனைவியான வெள்ளப்பூண்டு என்ற பெண்பெயர், அவர்களின் மகனான கொடுக்காப்புளி என்ற பிள்ளைப் பெயர் ஆகியவை அந்தக் காலப் பெயர்களை, குறிப்பாகப் பொருளியலாலும் சனாதன தர்மத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை நினைவு படுத்துகின்றன. பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' என்ற நாவல் 'மானுடம் வெல்லும்' என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை, மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி, குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ், பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில் வருகின்றனர். அளவிலும் பெரியது இது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன்.(மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி) 'வானம் வசப்படும்,' ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது. இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு - சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே(மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, "மசூதியை இடிக்க வேண்டாம்!" என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.(வானம் வசப்படும், பக்.659-668) தவிர, அப்துல் ரகுமான் சாதித்ததை, "துலுக்கர்தமை, தமிழருக்கு வேறாகப் பிரித்துப் பேசியும் எழுதியும் இருக்கிற"(மேற்படி, ப.681-அடிக்குறிப்பு) ஆனந்தரங்கப்பிள்ளை சாதிக்க முடியாமல் மதாம் ழானுக்கும் குவர்னர் துய்ப்ளெக்ஸுக்கும் ஒத்துப்போன வயணமெல்லாம் அடுத்து வரும் பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(ப.669+) தினமணி கதிரில் தொடர்ந்து வெளியான 'நேசம் மறக்கவில்லை நெஞ்சம்' நாவல், புதுச்சேரியில் விடுதலைக்குப் பின் நிலவி வருகின்ற சொல்தா வாழ்க்கையில், ஓர் எளிய பெண்ணைப் பிரஞ்சுக்குடியுரிமை பெற்ற இளைஞன் ஒருவன் மெய்யாகவே காதலித்த பின்பும் அவளுக்கு நிகழும் அவலத்தைக் காட்டுவது. இதைத் தொடராக வரும்பொழுது வாசித்தேன். தொடராக வரும்பொழுது நாவலொன்றை வாசிப்பதில் நினைவுத் தொடர்ச்சி சற்றேனும் அற்றுப் போகாமலிராது அல்லவா? புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார். 1987இல் 'வாழ்க்கை ஒரு விசாரணை' நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். வடிவேலுத் தாத்தா, மங்காத்தா,ரங்கன், அருக்காணி, கண்ணம்மா போன்ற கதைமாந்தரும் இந்த நாவலின் எதார்த்தப் பாத்திரங்களே. வடிவேலுத் தாத்தா தன் சூழலின் நிகழ்வுகளையே கதைகளாக்கிச் சொல்லும் திறமையை இயல்பாகப் பெற்றவர். எவருக்கும் அஞ்சாதவருங்கூட. "நீ சொத்து சேரு. ஊடு கட்டு. ஆயிரம் பணக்காரனாக இரு. வேணாம்ல. அதிகார மசுரு இன்னா வாழுதுங்கறேன்?" என்ற அவரது கேள்வியில் விரிவாகச் சொல்ல முடியாத சமூக ஆதிக்க மனிதர்களின் வரலாறும் அவர்களின்முன் மானமுள்ளவன் வாழவேண்டிய திடமும் ஆகச் சுருக்கமாக மொழியப்பட்டு விடுகின்றன. பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் 'சிதறல்கள்(1990)' நாவலில் காணமுடியும். சென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிதறல்களைக் காணநேர்ந்த எங்களுக்கு, அந்த நாவல் மேலுமதிகமான சோகத்தை விளைவித்தது மறக்க முடியாத வேதனை. புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆலை தொடங்கிய வரலாறு இதில் வயணமாகச் சொல்லப்பெறுவதும் குறிப்பிடத் தக்கது. பாவண்ணனின் 'ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),' மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும். பாவண்ணன் படைத்த 'இது வாழ்க்கை அல்ல(1988)' என்ற நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும் திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப்பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன். கேசவன் என்ற கதைப்பாத்திரம் தனது துணைவியிடமும் தாயாரிடமும் மாட்டிக் கொண்டு படும் உளைச்சல்கள் புதுச்சேரியில் மட்டுமே நிகழ்வதல்ல.. அல்லவா? ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண்ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள். புதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் 'நீலக்கடல்'(அச்சு வடிவம்: திசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14) "ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால் வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள்(இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்" என்று சொல்லும் பிரபஞ்சன்('உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்': நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி 'நீலக்கட'லில் ஐக்கியமாகின்றன. பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது 'நீலக்கடல்.' பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து 'டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் 'அன்னத் தீவு' என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் 'மொரீஸ்' என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் 'பிரஞ்சுத் தீவு' என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். ("பெயரில் என்ன இருக்கிறது!" என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.) ஆம். "பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது."(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம். தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே. ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான் 'கருமாறி 'ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள். தாந்திரிக நிலையில் "வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி"(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் - கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் - தன் மனத்துக்குகந்த பெர்னார் ஃபோந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் 'கருமாறிப் பாய்வ'தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல - தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) 'நீலக்கடல்' நாவலில்தான் பார்க்க முடிகிறது. சரி. 'நீலக்கட'லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். "சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் - நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் - நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis - லூயி துறைமுகம்). கடல் - தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் ஃபோந்தேனின் எள்ளுப் பாட்டன்.) பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் - தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவிகளிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது. யாருக்காகக் காத்திருக்கிறாள்? பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். "தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்."(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா? காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் - மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள்தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான். "கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?"(ப.13) என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம் தருகிறார் நாவலாசிரியர். ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய "புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது" என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது.(மத்திய ஆட்சிப்பகுதிகள் - 6: புதுச்சேரி. qu.in 'மனோரமா இயர்புக்') 'நீலக்கடல்' குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது. இதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). 'உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.' அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார். புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை 'The Serpent Of Paradise' என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார். நீட்ஷே, "சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்?" என்று வாதிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். 'தாந்திரிக மைதுனம்' என்ற சடங்கைப் பற்றி(Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92) அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது - 'நீலக்கட'லில் அலை - 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான். " The Tantric is forbidden to practice love passionately or compulsively. This is a rule permitted only to the woman, since she is the active participant and because she represents the feminine aspect of the universe and the creative side of Siva himself. She is Shakti or Kundalini"(op.cit.p.91) என்பது செர்ரனோவின் பதிவு. வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது. 'நீலக்கட'லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் 'சொர்க்கத்தின் சர்ப்ப'த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. 'நீலக்கட'லில் அமானுஷ்யமானதாக வருவது, 'சொர்க்கத்தின் சர்ப்பத்'தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த ஃப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 'நீலக்கடல்' நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையின் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் "பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு... மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்" என்பதான ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார் குளோதன் - தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது. ஆனாலும், பெர்னார் ஃபோந்த்தென் தன் நிகழ்பிறவியில் - தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை - வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவுஇல்லம் ஆகிய 'காஞ்சி மனை'யில், அதன் நிர்வாகி'யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது. பின்தொடரும் 'அடங்கல்' - மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான 'தினா' புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. 'உயிர்ச்சேதம்' பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது மறைமெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520) "பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது"(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும். இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி - கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் 'பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி''யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் - சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108) நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. "நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக"(ப.519) என்பது ஒரு சான்று. உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!" என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா?" அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) 'உளவியலுக்கான சார்பியல்' (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். 'The World According To Garp' என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது. மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. "தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே." இதில் 'தன்' என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது? இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது... 'நீலக்கடல்' நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், 'தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன? "எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்"(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு? இல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா? எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக(அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் 'சாமர்த்தியம்.' எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார். 'நீலக்கட'லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் 'சொஸ்த லிகித'மான 'தினசரிப்படி சேதிக் குறிப்'பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் 'Narrative' என்பதை மனத்துள் கொண்டு 'நவிலல்' என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். 'நீலக்கட'லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் "இந்தப்படிக்குப் படித்துப்போட" முடியாது. இலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus...pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற 'Ars Poetica' என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் 'Purple Patch' என்பது. "It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose -- especially a descriptive passage -- stand out from its context"(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று 'நீலக்கட'லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள். 'நீலக்கட'லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் "நண்பனே!" என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் - கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்தியுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் - கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய தலைமுறை புரிந்து கொள்ளாது. புதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள்! கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.("ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க?").. "மிசியே! போன்சூருங்க!" என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; "முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு'ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு'ருக்காதே.. இன்னா! கண்டுபுடிச்சிக்கினியா?" (காரைக்காலில் "என்ன புள்ளா!"வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், மக்கள் தொலைக்காட்சியை "தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி - மக்கள் தொலைக்காட்சி!" என்றும் தமிழோசையை "நாங்க படிச்சாச்சு..நீங்க..?" என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள். பிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று. உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி): *ஆலாலசுந்தரம், இர. ஆனந்தரங்கப் பிள்ளை காலத் தமிழகம் (1736 - 61). GRS பதிப்பகம், 11, இரண்டாவது தெரு, கைலாஸ் நகர், லாஸ்பேட்டை, புதுச்சேரி - 605 008. முதற் பதிப்பு. ஆகஸ்ட் 1999. கிருஷ்ணா, நாகரத்தினம், நீலக்கடல், சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 - 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை - 600 083. முதற் பதிப்பு. 2005. சண்முகசுந்தரம், முனைவர் சு., தமிழில் வட்டார நாவல்கள். காவ்யா, 16, 17ஆவது 'E' குறுக்கு, இந்திரா நகர், பெங்களூர் - 560 038. முதற் பதிப்பு. 1991. சாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் பழைய உரையும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை - 600 041. ஏழாம் பதிப்பு. 1971. சுந்தரராஜன்(சிட்டி), பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ் நூறாண்டு வரலாறும்,வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம். முதற் பதிப்பு. 1977. தில்லைவனம், முனைவர் சு., தமிழகம்-புதுவை வரலாறும் பண்பாடும், சிவசக்திப் பதிப்பகம், 4, பாண்டியன் வீதி, சாந்தி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008. முதற் பதிப்பு 15-06-2004. விற்பனை உரிமை: நன்மொழிப் பதிப்பகம், 41, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 605 008. பிரபஞ்சன், மானுடம் வெல்லும், கவிதா பப்ளிகேஷன், த.பெ. எண்:6123, 8, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார் சென்னை - 600 017. இரண்டாம் பதிப்பு. 1995. (முதற் பதிப்பு 1990) பிரபஞ்சன், வானம் வசப்படும், கவிதா பப்ளிகேஷன், சென்னை - 600 017. மூன்றாம் பதிப்பு. 1999. (முதற் பதிப்பு 1993) பிரபஞ்சன், நேசம் மறக்கவில்லை நெஞ்சம். தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. Abrams, M.H., A Glossary of Literary Terms, Seventh Edition 2001. Harcourt India Pvt. Ltd. New Delhi. First Published by Harcourt, Inc. 1999. Serrano, Miguel., The Serpent Of Paradise(The Story of an Indian Pilgrimage), Translated by Prank MacShane. Bell Books - Vikas Publishing house Pvt Ltd., Delhi 110006. 5 Daryaganj, Ansari Road,1975. First published in 1974 by Routledge and Kegan Paul Ltd.,London. நன்றி: 'நீலக்கடல்' நாவலை என் மறுவாசிப்புக்கும் உரத்த வாசிப்புக்கும் உட்படுத்திய புதுச்சேரி எழுத்தாளர் ப.ரா.கலாவதிக்கு. **** நன்றி: திண்ணை.காம்

2.6.07

மொழிபெயர்ப்பும் நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும்

மொழிபெயர்ப்பும் நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்களும் - தேவமைந்தன் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பஞ்சமில்லை என்கிறார்கள். "ஒரு கணிப்பொறி, அதற்கு மின்னஞ்சல் இணைப்பு, இவை இருந்தால் போதும், வீட்டிலேயே உங்களுக்குத் தொழில்!" என்ற விளம்பரத்தைப் 'பதிப்புத் தொழில் உலகம்' என்ற திங்களிதழில் மூன்று மாதங்களுக்கு முன் பார்த்ததிலிருந்து மொழிபெயர்ப்புத் தொடர்பான கேள்விகள் பற்பல, உள்ளத்தில் எழலாயின. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு தோராயமாக 750 பேர், வீட்டிலிருந்தவாறே மொழிபெயர்த்து அனுப்புகிறார்களாம். ஆங்கிலப் புலமை, தமிழில் புலமை, தமிழில் எழுதும் ஆற்றல் ஆகியவை இந்த வேலைக்கு அடிப்படைகள் என்றும் இதனால் மாதந்தோறும் எட்டாயிரம் ரூபாய் வரையில் வருவாய் பெற முடியும் என்றும் மேலதிகமான செய்தி சொல்லுகிறது. தொடர்ந்து, " தமிழரின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்புப் பணி உடனடித் தேவை. ஆங்கிலத்திலிருந்து மட்டுமல்ல, உலக மொழிகள் பலவற்றிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் பெற்றவர்கள் தமிழருள் பெருகினால், தமிழரின் வாழ்வு சிறக்கும். தாய்மொழியிலேயே யாவையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புப் பெருகும். தமிழ்ப் பதிப்பாளர் பலர் மொழிபெயர்ப்பாளரைத் தேடுகின்றனர்" என்றும் அச்செய்தி சொன்னது. "மராத்தி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர் தேவைப்படுகிறார். தெரிந்தால் சொல்லுங்கள். வருமானம் உண்டு" என்று மேற்செய்தியை நான் வாசித்த சில நாள்களில் என்னிடம் இளம்பாரதி தெரிவித்தார். எழுபத்திரண்டு வயதுக்கு மேலாகும் நண்பர் இளம்பாரதி இப்பொழுது புதுச்சேரியில் இருக்கிறார். சாகித்திய அகாதெமிக்காக ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பு மடலங்களை இந்தியில் மொழிபெயர்த்து வருகிறார். அந்த நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ள பல பிரஞ்சுச் சொற்களையும் அவற்றுக்குரிய பொருளையும் நண்பர்களிடம் கவனமாகக் கேட்டுக் கொள்கிறார். பிரஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியையும் புதுவை மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணையையும் இது தொடர்பாகப் பெற்றுக் கொள்கிறார். ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால் வேற்று மொழியிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து வேற்று மொழிக்கும் மொழிபெயர்க்கும் போது 'நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல்' மட்டுமே போதாது; அணிசேர்ந்து பணியாற்றவும் (team work) வேண்டியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தத்தான். எந்திரத்தனமாக மொழிபெயர்ப்பவர்களையே பெரிய நிறுவனங்களும் (foundations)விரும்புகின்றன. சொன்ன நாள்களுக்குள் மொழிபெயர்த்துத் தந்துவிட வேண்டும். அவர்கள் 'அங்கீகரிக்கப் படுவார்கள்.' உயிரோட்டம் உள்ள ஒரு மொழிபெயர்ப்பை ஒருமுறை பார்த்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'Freedom from the Known' என்ற அருமையான சிந்தனை நூலை ராஜம் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். 'ஓரியண்ட் லாங்மேன்ஸ்' வெளியிட்ட ஒரே தமிழ் வெளியீடு என்றும் சொன்னார்கள். ஆங்கிலப் புத்தகத்தை அருகில் வைத்துக் கொண்டு தமிழாக்கத்தை வாசித்தேன். திகைத்துப் போனேன். மொழிபெயர்ப்பாளரான ராஜம் அவர்களை எனக்குத் தெரியாது. அப்பொழுது கேள்விப்பட்டதே இல்லை. எனக்குத் தெரிந்த ராஜம் அவர்கள், மிகவும் மலிவாக ஒரு ரூபாய், ஒன்றேகால் ரூபாய் விலைக்கு மிகவும் நேர்த்தியான அச்சில் நல்ல தாளில் சங்க இலக்கியம் முதற்கொண்டுள்ள தமிழிலக்கியங்களைத் 'தமிழ்கூறு நல்லுல'குக்கு வழங்கியவர். மொழிபெயர்ப்பாளர் ராஜம் அவர்தானா? அதைப் போன்ற உயிரோட்டமுள்ள மொழியாக்கங்களைத் தங்கப்பா (திண்ணையில் இவர் மொழியாக்கங்கள் குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்) இளம்பாரதி, மதனகல்யாணி, பாவண்ணன், ஸ்ரீராம் முதலான மிகச் சிலரிடமே பார்க்க முடிகிறது. காரணம், இவர்கள் மொழிபெயர்ப்பைப் பணியாகவும் தவமாகவும் செய்கிறார்கள். 'மய்யழிக் கரையோரம்', 'இந்துலேகா,' 'உம்மாச்சு,' கயிறு' முதலான எட்டு மலையாள மொழியாக்கங்களும் 'கௌசல்யா,' படிப்பு,' அனல் காற்று,' முதலான ஆறு தெலுங்கு மொழியாக்கங்களும்' 'சிமெண்ட் மனிதர்கள்' முதலான கன்னட மொழியாக்கங்களும் 'உலகை மாற்றிய புதுப்புனைவுகள்' முதலான நான்கு ஆங்கில மொழியாக்கங்களும் இளம்பாரதியின் பணிகள். 'வலசை போகிறேன்' என்ற அண்மை மொழியாக்கத் தொகுப்பில் முதல் பகுதியில் சல்லாராதாகிருஷ்ண சர்மாவின் முப்பது தெலுங்குக் கவிதைகளும் அடுத்த பகுதியில் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள ஆருத்ர, புலிகண்ட்டி கிருஷ்ணா ரெட்டி, அனிசெட்டி சுப்பாராவ், வரவர ராவ்(தெலுங்கு), அம்ருதா ப்ரீதம், அமரேந்த்ர நாராயண், ராமாவதார் தியாகி(இந்தி), பிரகாச ஹலகேரி, சி.பி.கே.(கன்னடம்), சுகதகுமாரி(மலையாளம்), சர் டி. வியாட்(ஆங்கிலம்) ஆகியோர் கவிதைகளும் நேரடியாக அந்த அந்த மொழிகளிலிருந்து இளம்பாரதியால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கிரீஷ் கார்னாடின் 'நாகமண்டலம்' நாட்டார் கதையின் நாடக வடிவம். இதை நேரடியாகக் கன்னடத்திலிருந்து பாவண்ணன் தமிழாக்கம் செய்துள்ளார். அருமையான மொழியாக்கம். இதைப் புரிந்து கொள்ள கன்னட மொழிவாணரான நண்பர் உதவினார். இதே போன்ற நாடகங்களான 'பலிபீடம்' என்ற வரலாற்று நாடக மொழியாக்கத்தையும் 'அக்னியும் மழையும்' என்ற தொன்மக் கதை நாடக மொழியாக்கத்தையும் ஒப்பிட்டு வாசிக்க இன்னும் வாய்க்கவில்லை. இப்படி ஒப்பிட்டு மொழியாக்கங்களை வாசிப்பது பெரும் மனநிறைவு தரும். எனக்கு இளம் வயது முதலே இது தொடர்பாக உதவும் நண்பர்கள் உள்ளார்கள்; அதனால் நானே முயன்று பல மொழிகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது தடைப்பட்டது. தகழியின் 'கயறு' புதினத்தின் சுருக்க வடிவத்தையே இளம்பாரதி தமிழாக்கினார். இருந்தாலும் அதையும் முகுந்தனின் 'மய்யழிக் கரையோரம்' நாவலையும் (முழுமையான மொழியாக்கம்) ஒப்பிட்டு வாசித்த பொழுது சொல்ல முடியாத புரிதல் உணர்வு ஏற்பட்டது. 'வேண்டாத வேலை' என்று இதை எனக்கு வேண்டியவர்கள் சொன்ன பொழுது, "நீங்கள் தொ.கா. தொடர்களாகப் பார்த்துத் தீரவில்லையா?" என்று கேட்டிருக்கலாம்தான். வலை ஏடுகளில் அத்தகைய மொழிபெயர்ப்புத் தவத்திலும் பணியிலும் முழுமூச்சாக ஈடுபட்டிருப்பது திண்ணை.காம் இணைய இதழேயாகும். புதுப்புனைவுகள் மட்டுமல்லாமல் ஆழமான சொந்தச் சிந்தனைகளையும் சமூகத்துக்குக் கொடையளிக்கும் அறிவியல் மேதைகளையும் அவர்களின் ஆக்கங்களைக் குறித்த விருப்பு வெறுப்பற்ற திறனாய்வுகளையும் முதன்மையாக இடம்பெறச் செய்தவரும், தானும் அத்தகைய மொழியாக்க அடிப்படையிலான கட்டுரைகளைப் புனைவதில் வழிவகுத்தவரும் தளம் அமைத்துக் கொடுத்தவரும் கோபால் ராஜாராம் அவர்கள்தாம் என்பதில் இன்னொரு கருத்து இருக்க இயலாது. இல்லையெனில் கனடா சி.ஜெயபாரதன்,முனைவர் இரா. விஜயராகவன், அரவிந்தன் நீலகண்டன், தைவான் டாக்டர் இரா. சீனிவாசன், அசுரன், செழியன், செல்வன் முதலானோரின் மொழியாக்கவழி அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு என்னைப் போன்ற பலருக்கும் கிடைத்திருக்காது. அத்தகைய கட்டுரைகள் பலவற்றின் வெளிப்பட்டியலில் யாரெழுதினார் என்ற ஆசிரியர் பெயர் குறிக்கப் பெறாவிடில் அவை கோபால் ராஜாராம் எழுதியவையே என்று தீர்மானித்துக் கொள்ளலாம். திண்ணை.காம் வலையேட்டைத் தொடக்க முதல் வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியும். மொழிபெயர்ப்பின் பிரம்மாண்டமான அகலத்தையும் அது அந்த எல்லைகளையும் தாண்டி மொழியாக்கத்தின் அப்பால்வெளியாகப் பார்வைப் புலனுக்கும்(visual transcreation) விருந்தளிக்கும் படப்பதிவாக மாற்றும் வித்தையை கனடா சி.ஜெயபாரதன், தான் உருவாக்கும் 'எகிப்தின் எழிலரசி' கிளியோபாட்ரா எனும் பேரங்க நாடகத்தில் சாதித்துக் காட்டியுள்ளதும் இங்கே மறவாமல் குறிப்பிடத் தக்கது. மானுடவியல் அறிஞரும் குறிப்பாகக் 'கலாசாரப் பொருள்முதல்வாதம்' என்ற தனித்தன்மை வாய்ந்த தனது ஆய்வுமுறையை மானுடவியல் துறையில் நிறுவியவருமான மார்வின் ஹாரிஸ்(1927-2001) அவர்களின் - நுட்பம் நிரம்பிய பண்பாட்டுப் புதிர்களுக்கான விளக்கங்களை - 'பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள்' என்கிற பதினொரு கட்டுரைகளை, வாசிப்பவர்கள் மருளா வண்ணம் மொழியாக்கம் செய்தவர் துகாராம் கோபால்ராவ் ஆவார். எப்படி இவர்கள் இருவரும் பாரி பூபாலனும் ஆசிரியர்களாக இருக்கும் பொழுது பின்னணியில் இந்து, சாந்தாராம் ஆகியோர் பக்க பலமாக நின்று திண்ணை.காம் தொடர்ந்து வெளிவர உதவினார்களோ(பார்க்க: இந்நூல் பாகம்-1 பதிப்புரை: கோபால் ராஜாராம் 20 டிசம்பர் 2005) அது போல மார்வின் ஹாரிஸின் புத்தகத்தையும் தந்து, படித்துப் பார்க்கவும் செய்து, நியூ ஜெர்சி'யில் உள்ள எடிசனிலிருந்து துகாராம் கோபால்ராவ் அவர்கள் அக்கட்டுரைகளை விடாமல் அனுப்புமாறு செயலூக்கம் புரிந்தவரும் பின்னர் அவை பதினொன்றையும் இரு பாகங்கள் கொண்ட புத்தகமாகப் பதிப்பித்தவரும் கோபால் ராஜாராம் அவர்களே ஆவார். என்னைப் போன்ற இலக்கியக் கட்டுரையாளர்களும் படைப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் ( நாகரத்தினம் கிருஷ்ணா, புதுவை ஞானம், கிரிதரன் ராஜகோபாலன், கௌரிகிருபானந்தன் முதலானோர்) திண்ணை.காம் கருத்துக் களத்தில், விடுதலையான சிந்தனைக் குடும்பத்தில் இணையக் காரணமானவரும் அவரே. இது புகழ்ச்சியில்லை. உண்மை. மனநோய் மருத்துவத்துக்கு எதிர்ப்பான இயக்கத்தில்(anti psychiatry movement) முதன்மையானவரும் அந்தக் கலைச்சொல்லையே அறிமுகப்படுத்தியவருமான டேவிட் கூப்பரின் கருத்தாடலைத் தமிழுலகுக்குத் தன் மொழிபெயர்ப்பின் வழி கொண்டு வந்தவர் லதா ராமகிருஷ்ணன். சி. மோகனை ஆசிரியராகக் கொண்ட 'புனைகளம்' (எண்:2) என்ற காலாண்டிதழில் அம்மொழியாக்கத்தை வாசித்தபொழுது வியப்படைந்தேன். அவர், திண்ணை.காம் இணைய இதழுடன் தொடர்பு கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆர். சிவகுமார் மொழிபெயர்த்த 'நாகரிகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம்' என்ற உம்பர்த்தொ ஈகோவின் கட்டுரை (காலச்சுவடு 28: ஜனவரி - மார்ச் 2000) இன்னும் என் நினைவில் தடம் பதித்திருக்கிறது. அரவிந்தன் தன் 'மொழி - மொழிபெயர்ப்பு -இலக்கிய மொழிபெயர்ப்பு' என்ற கட்டுரையில் (காலச்சுவடு 86: பிப்ரவரி 2007) பகிர்ந்து கொண்ட செய்திகள், எனக்கும் பிரஞ்சு - தமிழ் மொழிபெயர்ப்பாளரான முனைவர் சு.ஆ.வே. நாயகருக்கும் (நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் பொழுதும்) உரத்துச் சிந்திக்க வேண்டிய கருத்துகள் ஆயின. ஆ.இரா.வேங்கடாசலபதி, பாரதிதாசன் படைப்பான 'அமைதி'(1946)யை 'Tranquillity: a mute play' என்ற தலைப்பில் 1987ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, த. கோவேந்தனால் வெளியிடப்பட்ட பொழுதே வாசிக்கும் வாய்ப்பு ம.இலெ. தங்கப்பாவால்(தமிழ் -ஆங்கிலம்: ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பாளர் - இவருடைய மொழியாக்கச் சிறப்பைக் குறித்துத் திண்ணை.காம் இதழில் விரிவாக எழுதியுள்ளேன்) கிடைத்தது. சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே: சில குறிப்புகள்' புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் சலபதியின் உழைப்புக்குத் தக்க பரிசே ஆகும். அப்படியிருக்க அரவிந்தனிடம் "சு.ரா.வின் 'ஒரு புளிய மரத்தின் கதை'யை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமென்று நேர்காணலில் மொழிந்திருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. மொழிபெயர்ப்புப் பணிக்கு என்றே கங்கணம் கட்டிக் கொண்டு உழைக்கும் 'மொழிபெயர்ப்புக் காலாண்டிதழ்'கள் 'திசை எட்டும்' 'புதிய எழுத்து' ஆகியவை. 'திசை எட்டும்' இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் மலையாளத்திலிருந்து படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் திறன் மிக்கவர். 'முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்' என்ற அவருடைய புத்தகத்தை வாசித்த பின்பே மலையாள எழுத்தாளர்களின் தேடலைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன். தான் வெளியிடும் மொழிபெயர்ப்பிதழின் ஆக்கங்களைச் சரிபார்க்க மொழிவழி ஆசிரியர் குழு ஒன்றை அமர்த்தியுள்ளதும் பாராட்டுக்குரியதே. புதுச்சேரியிலிருந்து மாலதி மைத்ரியை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'அணங்கு' என்ற சாரம் மிக்க பெண்ணியத்தைப் புலப்படுத்தும் இதழில்(செப்டம்பர்-நவம்பர் 2006) 'பெனுவாத் க்ரூல்த்'(Benoite GROULTE)தையும் அவர்தம் 'அவளது விதிப்படி ஆகட்டும்'(Ainsi soit-elle) என்ற கட்டுரைத் தொகுப்பையும் நாகரத்தினம் கிருஷ்ணா அறிமுகப்படுத்தியுள்ளமை வாசகர் பலர் சிந்தையைக் கவர்ந்துள்ளது. பின்னதில் உள்ள சிமோ(ன்) தெ பொ(வ்)வார் குறித்த நோக்கும் கருத்தீடும் குறிப்பிடத் தக்கது. 'அணங்கு' தொடக்க இதழில்(ஜூன்-ஆகஸ்ட் 2006) மர்கெரித் த்யூரா'(Marguerite Duras)வின் குறுங்கதையான 'உயிர்க்கொல்லி'(La Maladie de la Mort)யும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிறப்பான மொழிபெயர்ப்பே. தலித்தியத் தமிழ்ப் படைப்பை அதில் வரும் கதைமாந்தர் அனுபவிக்கும் மனவியல் வலியை அப்படியே வெளிப்படுத்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினமானது என்பதை டி. கிருஷ்ண ஐயர் மொழிபெயர்த்துள்ள இமையத்தின்(1999) 'ஆறுமுகம்'(ARUMUGAM) உணர்த்துகிறது. அதில் வரும் 'சாண்டு' (பெண்களின் சிறுநீர்) என்பதைத் தமிழ் லெக்சிகனில் கூறப்பட்டுள்ள பொருள்களைக் கூறி - மொழிபெயர்ப்பாளர் புதின ஆசிரியருடன் வாதிட்டு நடைமுறையில் உள்ளவாறு மொழியாக்கியதை இமையம் பதிவு செய்துள்ளார். (காலச்சுவடு 86: பிப்ரவரி 2007 ப.26) இந்திய மொழிகளுக்குள் உணர்வுபூர்வமான மொழிபெயர்ப்பு என்று ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால் அது - தெலுங்கு தலித் மறுமலர்ச்சிப் புதினமான 'தொடரும் நினைவுகள்... தீண்டாத வசந்தம்' என்ற தமிழாக்கமே. தெலுங்கு மூலமான 'அன்ட்டரானி வசந்தம்' என்பதன் ஆசிரியர் ஜி.கல்யாண ராவ். தமிழில் ஏ.ஜி.எத்திராஜூலு மொழிபெயர்த்துக் கூற அ.செகநாதன் எழுதியுள்ளார். இதன் மக்கள் பதிப்பை (டெமி 1/8 பக்கம்: 301 விலை: ரூ.50) சென்னை சவுத் விஷன் வெளியிட்டது. வெளியிட்டவுடன் 4000 படிகள் விற்றுத் தீர்ந்தன. மொழியாக்கப் புதினம் ஒன்று விற்பனையிலும் சாதனை புரிந்தது என்பது 2004-இல் தமிழகத்தில் பதிவாகியது. 1955-இல் கன்னடத்தில் 'சிரஸ்மரணெ' என்ற புதினத்தை சீமந்தினி நிரஞ்சனா படைத்தார். பெங்களூரிலிருந்து மங்கலாபுரத்துக்கும் அங்கிருந்து செறுவத்தூருக்கும் பயணம் செய்தால் அடுத்து நடந்து சென்று அடையும் கிராமமாக கையூர் இருந்தது. ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்துப் போராடிய கையூர் விவசாயிகளான தியாகிகளின் வீரக்காதையான 'சிரஸ்மரணெ,' 19 ஆண்டுகள் கழித்து மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் வரிசையாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. மலையாளத்திலிருந்து தமிழில் பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்த்தார். சரளமான நடை. மொழிபெயர்ப்பு நம்மிடம் பேசுவது போலவே இருக்கும். சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனம் 1977இல் முதற்பதிப்பை வெளியிட்ட பின் பல அச்சுக்களை(prints) வெளியிட்டு விட்டது. நான் வாங்கியது 1995இல் வெளியான ஐந்தாம் அச்சு. இதைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும் - 'சிறந்த படைப்பை மொழியாக்கம் செய்ய, இருமொழியறிவு மிகுந்த, சரளமாக மொழிபெயர்க்கத் தெரிந்த, படைப்பாளரின்-படைப்பின் அதே உணர்வு கொண்ட மொழிபெயர்ப்பாளர் தேவை' என்பது. 'தமிழில் எந்திர மொழிபெயர்ப்பு' (Machine Translation of Tamil) பற்றி அறிய பெர்க்கலேயிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் பிரடெரிக் சி.கெய்(FredricC.Gey) உருவாக்கியுள்ள(Prospects for Machine Translation of the Tamil Language) கட்டுரை மிகவும் உதவும். பொதுவான எந்திர மொழிபெயர்ப்பு முறைகளை அறிய அவர் 'மொழிபெயர்ப்பு எந்திரங்கள்' என்ற ஒரு மிகச் சிறந்த நூலைப் (Translation Engines, by Arthur Trujillo, published by Springer. 1999) பரிந்துரைத்துள்ளார். அதன் மூலம் ஒன்று நன்றாகத் தெரிய வருகிறது. தமிழ் மொழிக் கட்டுமானத்தினால், தமிழில் எந்திர மொழிபெயர்ப்பு மிகுந்த செலவு பிடிப்பதாக உள்ளது என்பதே அது. நிகழ்நிலையில் நாம் கடக்க வேண்டிய தடைச்சுவர்கள்: 1. பண்பாட்டு அடிப்படையிலான புரிந்துணர்வுத்தடைகள்(cultural barriers). நண்பர் முனைவர் சு.ஆ.வே. நாயகர், அண்மையில் மிசோரம் நாட்டுப்புறக் கதைகளைப் பேச்சுத் தமிழில் மொழிபெயர்த்தார். சுர்ரா என்று ஆங்கில மொழியில் வரும் பெயரை எப்படித் தமிழில் இடுவது? அசல் பெயர் சுர்ராவா, சுராவா? சுரா என்றே மொழிபெயர்த்தார். அடுத்து, அக்கதைகளில், இறந்தவர்களைக் குகையில்(cave)இல் இடுவதாக(புதைப்பது போன்றும் பொருள் வரும்) மிசோமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் எழுதியிருந்தார். இவர் கல்லறையில் புதைப்பதாக எழுதி அச்சிடக் கொடுத்து விட்டபின் சந்தேகம் எழுகிறது. "அடடா, கல்லறையில் என்றால் அந்தப் பண்பாடு கிறித்தவர்களது ஆகிவிடுமே - கதையில் வருபவன் மிக எளிய நாட்டுப்புறத்தான் மட்டுமல்ல, ஒன்றுமறியாத திருவாழத்தான் ஆயிற்றே!" என்று குழம்பினார். எனக்கு இப்பொழுது ஒன்று தோன்றுகிறது. பேசாமல் இரண்டுக்கும் நடுவுள்ளதாக 'கல்லடுக்கில்' என்று அவர் போட்டிருக்கலாம். மிசோ ஆதிவாசி மொழி அறிந்தவர்களொடு தொடர்பு கொண்டு இன்னும் அவற்றில் உள்ள சில பண்பாட்டு விளக்கங்களை அறிய நண்பர் விரும்பினார். ஆனால் அவருக்கு அவற்றை மொழிபெயர்த்துத் தர, மூன்று நாள்கள் மட்டுமே தரப்பட்டிருந்தன. என்ன செய்வது? மறுத்துவிட்டால் தமிழில் அவை வராமல் போய்விடவும் வாய்ப்புண்டு. 2. மொழிகளினிடையே உள்ள ஆள்-நாடு-ஊர்ப் பெயர் ஒலிமாற்றம்: புதுச்சேரியில் நிகழ்ந்த, இந்தியாவிலுள்ள பிரஞ்சு மொழியாசிரியர்கள் சங்கமும் கெபேக்('கியூபெக்' என்று எழுதுவது ஒலிப்படிப் பிழையாம்)பன்னாட்டு உறவுகள் அமைச்சகமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் வெளியிட்ட 'கெபேக் இலக்கியம் : ஓர் அறிமுகம்' ('La litterature quebecoise: une introduction en tamoul") என்ற தொகுப்பில்(பதிப்பாளர்: Samhita Publications,Chennai,2007) இலக்கிய மதிப்பீட்டுப் பகுதியில் முதலாவதாக இடம்பெற்ற 'Ringuet, Trente Arpents, 1938 (Thirty Acres) - "முப்பது ஏக்கர்கள் - ரேங்கே" என்ற கட்டுரையை உருவாக்கிக் கொண்டிருந்தேன். அதில் வரும் பெயர்களைப் பிரஞ்சுக் கனடிய ஒலிப்பின்படித்தான் எழுத வேண்டும் என்று பணித்திட்டக் குழுவின் தலைவர் முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி சொல்லி விட்டார். அதனால் 'கியூபெக்' 'ரிங்குவே' 'யுஷாரீஸ்த்' முதலாக நான் ஒலிபெயர்த்து வைத்திருந்த பல பெயர்களை, 'கெபேக்' 'ரேங்கே' 'யுகாரீஸ்த்'(இது இன்னும் சரியாக 'எகாரிஸ்') என்று மாற்ற வேண்டி வந்தது. இதில் இன்னொரு கூத்து. பேராசிரியர் ஒருவர் தன் நூலில் 'ஜீன் பால் சார்த்தர்' என்று எழுதியிருந்ததைப் புதுவையில் நிகழ்ந்த திறந்தவெளிப் பல்கலைக் கழக வகுப்பொன்றில் நான் பாடம் நடத்திய பொழுது இயல்பாக 'ழோ(ன்)போல் சா(ர்)த்ர்' என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன். யூனியன் பகுதியிலிருந்து வந்த மாணவர் ஒருவர் எழுந்து, "ஐயா! புத்தகத்தில் சரியாகப் போட்டிருப்பதை ஏன் மாற்றி மாற்றி உச்சரிக்கிறீர்கள்?" என்று கேட்டார். விளக்கினேன். ழான் ழாக் ரூசோ(Jean Jacques Rousseau) என்பதை 'ஜீன் ஜாக்குவிஸ் ரஸ்ஸோ' என்று செய்தியில் வாசித்ததையும் கேட்க முடிந்தது. தூயதமிழில் இதை ஒலிபெயர்த்தால் எழுதும்பொழுது ''இழான் இழாக் உருசோ' என்றுதான் எழுத வேண்டும். சேர்த்து ஒலிக்கும்பொழுது சரியான ஒலிப்பு வந்துவிடும். ஆனால் 'ஜீன் பால் சார்த்த'ரும் 'ஜீன் ஜாக்குவிஸ் ரஸ்ஸோ'வும் வழிக்கு வரமாட்டா. 3. அறிவு வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பணிப்பெயர் மாற்றங்கள்: ஆங்கில நாவலொன்று. பெண்ணியம் என்ற கருத்து அரும்பிக் கொண்டிருந்தபொழுது எழுதப்பட்டது. அதில் இடம் பெறும் 'husband,' 'wife' என்பவற்றை 'spouse' என்று அவர்கள் இன்று பயன்படுத்துவதுபோல் 'துணைவர்,' 'துணைவியார்'('துணைவர்' என்று போட்டுவிட்டு 'துணைவி' என்றால் மரியாதை இல்லை) என்று மொழிபெயர்ப்பதுதானே சரி? 'house wife' என்பதை இன்று 'home engineer' என்கிறார்கள். 'இல்லத்தரசி' என்ற பழைய சொல் ஆதிக்கத்தைக் குறிக்கும். 'இல்லப் பொறியாளர்' என்று சொல்ல வேண்டுமாம். பிரஞ்சில் 'பலேயர்' என்ற பழைய சொல் 'பெருக்குபவ'ரைக் குறிக்கும். அச்சொல் இழிவென்பதால் இப்பொழுது ஆங்கிலத்தில் அதை 'surface technician' என்று மொழிபெயர்க்கிறார்கள்.('பாலியல் தொழிலாளர்' போன்றும் பணிப்பெயர் மாற்றங்கள் பல இருக்கின்றன) 4. வட்டார மொழிகளில் அமைந்துள்ள படைப்புகளை மொழிபெயர்ப்பவருக்கு ஆகக் கூடுதலான சுமை உண்டு. வட்டார வழக்கு அகராதிகளுக்கு எட்டாத சொற்களும் அத்தகைய படைப்புகளில் வருவன. நாட்டுப்புறப் பாடல் ஒன்று. 'ஒத்த ரூபா தாரேன்' - மொழிபெயர்த்து விடலாம். 'ஒனப்பத் தட்டெ தாரே'னை என்னவென்று மொழிபெயர்ப்பது? 5. கி.ரா., கழனியூரனின் மேற்படிப் படைப்புகள் அல்லாமல் பாலியல் கதைகளை மொழிபெயர்ப்பவர் மேலதிகமான விழிப்புணர்வைக் கைக்கொள்ள வேண்டும். இவற்றை மலையாளம், தெலுங்கு முதலான மொழிகளில் மொழிபெயர்ப்பவரை விடவும் ஆங்கிலத்திலும் குறிப்பாகப் பிரஞ்சிலும் மொழிபெயர்ப்பவர் படாத பாடுகள் பட வேண்டும். பொறுப்பில்லாமல் மொழிபெயர்த்தால் நம்மைக் குறித்து வாசிப்பு அடிப்படையில் மட்டுமே புரிந்து கொள்ள முயலும் அம்மொழியினர் ஆகவும் கொச்சையாகப் புரிந்து கொள்ள நேரும். இன்னும் சிந்திக்கச் சிந்திக்க புதிய புதிய பூதங்கள் மொழிபெயர்ப்பாளர் முன் எழும். ஒரு மொழிபெயர்ப்பாளருக்குமுன் எழும் தடைச்சுவர்போல் இன்னொருவர் முன் எழவேண்டும் என்பதில்லை. வெவ்வேறு வகையாக எழலாம். தூங்கும் பொழுது கூட இந்தச் சொல்லுக்கு இந்த மொழியில் என்ன சொல்லைப் போடுவது என்பது குறித்துத தாறுமாறான கனவுகள் வரலாம்.[சந்தை மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது விதிவிலக்கு.] சில நேரங்களில் சில கனவுகளில் சில சொற்கள் விசுவரூபமெடுத்து மொழிபெயர்ப்பாளரை விரட்டிக்கொண்டும் வரக் கூடும். விழித்தபிறகுதான் அவருக்கு நிம்மதி! **** Thanks to Thinnai.com