25.8.06

புதுச்சேரி மாநிலப் பழமொழிகள்

புதுச்சேரி மாநிலப் பழமொழிகள் - பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்) இன்றைய புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாஹி யேனாம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. பிரஞ்சுக் குடியேற்றமாக விளங்கியதன் ஆரோக்கியமான அடையாளங்களையும் பெற்றுள்ளது. புதுச்சேரியும் காரைக்காலும் தமிழ் பேசும் மக்களைக் கொண்டது. நாம் பார்க்கும் பழமொழிகள் புதுச்சேரியிலும் காரையிலும் புழங்கும் - வழங்கும் தமிழ்ப்பழமொழிகள். அவற்றில் ஏற்பட்டுள்ள பிறமொழித் தாக்கம், குறிப்பாக பிரஞ்சு தெலுங்கு ஆகிய மொழிகளின் தாக்கம் மிகுதியாகவும் மலையாள(மாஹி)மொழியின் தாக்கம் இல்லாது போகவும் மேற்குறிப்பிட்ட யூனியன் எல்லைப் பகுதி - குடியேற்றம் ஆகிய காரணங்களைச் சுட்ட முடியாது என்பது முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியதாகும். தமிழகத்துக்கும், தமிழ்பேசும் பகுதிகள் பலவற்றுக்கும், புதுச்சேரி-காரைக்காலுக்கும் பொதுவான தமிழ்ப்பழமொழிகள்; புதுச்சேரிக்கே உரிய பழமொழிகள் என்று புதுச்சேரிப் பழமொழிகளை இரண்டு பகுதிகளாகப் பகுக்கலாம். தமிழகத்துக்கும், தமிழ்பேசும் பகுதிகள் பலவற்றுக்கும், புதுச்சேரி-காரைக்காலுக்கும் பொதுவான தமிழ்ப்பழமொழிகள்: இத்தகைய பழமொழிகள் சிலவற்றை இங்கே தருகிறேன். “பறி நெறைஞ்சா கரையேறுவேன்.” புதுச்சேரியிலுள்ள ஏரி, குளப்பகுதிகளில் புழங்கும் இந்தப் பழமொழியின் பூர்விகத்தை 1886-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சிவப்பிரகாசபண்டிதர் இயற்றி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் - யாழ்ப்பாணம் சைவப் பிரகாச சபையின் மூலம் 1893இல் பதிப்பித்த ‘பாலபாடம்’ நூலில் பார்க்கலாம். நடையழகு கருதி அதை அப்படியே தருகிறேன்: “எந்த உயிரையும் கொல்லாத ஒரு துறவி ஓர் ஏரிக்கரைமேற் சென்றார். அப்போது மீன் பிடிப்பவன் ஒருவன் அந்த ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தான். அத்துறவி அவனைப் பார்த்து இரக்கமுற்று, “ஐயோ! நீ எப்போது கரையேறுவாய்,” என்றார். அவன், “ ஐயா! என் பறி நிரம்பினாற் கரை ஏறுவேன்,” என்றான்.” ஆக, நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் நன்கு புழக்கமாக இருந்த சிறார்க்கான கதையிலிருந்து இப்பழமொழி உருவானது என்று எடுத்துக்கொள்வதை விடவும், நன்கு புழக்கத்திலிருந்த அப்பழமொழியிலிருந்தே அக்கதை உருவாக்கப்பெற்றது என்று கொள்வது மிகவும் பொருத்தம். ‘பானைச்சோற்றுக்கு பதமொன்று’ என்ற நியாயப்படி சான்று ஒன்றை விளக்கமாகப் பார்த்தோம். மற்றவை: சாதியுணர்ச்சியால் மொழியப்பெறுபவை: பள்ளிக்குப்பத்துக்கு அம்ம(ப)ட்ட(ன்) வாத்தி (பாகூர்) பள்ளிக்குப் பல்லு பா(ர்)ப்பானுக்கு முழுக்கு (தொண்டமா[ன்]நத்தம்) பள்ளி கையில பணமிருந்தா பாதி ரத்திரி’ல பாடுவான் (புதுச்சேரி) ஏறும்போது ஒரு புத்தி இறங்கும்போது ஒரு புத்தி (மங்கலம்) சோழியன் கும்முடி சும்மா ஆடுமா? (மங்கலம்) [கும்முடி < குடுமி] கெட்டுப்போன பாப்பானுக்கு செத்த மாட்ட சீதனமா கொடுத்த மாதிரி (ஐயன்குட்டிப்பாளையம்) முதலியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} தமிழ்நாடு செட்டியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} காரைக்கால் உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான் (காரைக்கால்) செத்தாத்தான் தெரியும் செட்டியார் வாழ்வு (காரைக்கால்) உடையார் ஊட்டு மோருக்கு ஆப்பைக் கணக்கு இன்ன? (பாக்கமுடையான்பட்டு) ஊருக்கு ஒழைக்கிறவங் கிராமணி (மங்கலம்) முத்துமுத்துக் கிராமணி பேச்சு வூட்டுக்குப்போனா வண்டை வண்டைதா[ன்] (பெரிய சந்தை) கிள்ளி எடுக்க சதை இல்ல பேரோ தொந்தியா பிள்ளை (கோவிந்தசாலை) கூப்புடலேன்னு கோவிச்சுக்காதீங்க, மிஸ்சியே! கூப்புட்டேன்னு வந்துடாதீங்க (புதுச்சேரியில், படித்தவர்களின் வட்டாரத்தில் புழங்குவது. 'மிஸ்சியே' என்பது 'ஐயா'/ 'சார்' என்பதற்கான பிரஞ்சுத்தமிழ்ச்சொல்.) திசைகளில் வாழ்பவர்களின் செயல்களால் வெறுப்புற்றுச் சொல்லப்படுபவை: வடக்கத்தியானையும் வயித்து வலியையும் நம்பக்கூடாது. (மங்கலம்) தெக்கத்தியானுக்கு பெண் கொடாதே தெக்கத்தியானொட பெண் எடாதே (புதுச்சேரி) தெக்கத்தியான் சம்பந்தம் தெருவோரம் சம்சாரம் (புதுச்சேரி) என்னடி அம்மா தெக்கத்தியா எப்ப பாத்தாலும் தொள்ளக் காது? (புதுச்சேரி) தொழில் அடிப்படையிலானவை: கம்பத்துல ஏறி ஆடினாலும் கீழ எறங்கி வந்துதான் காசு வாங்கணும் (காரைக்கால்) ஊருக்கு ஒரு தேவடியா ஆருக்குண்ணு ஆடுவா (காரைக்கால்) எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி கழனிப்பானயில வுழுமாம் துள்ளி (காரைக்கால்: சோதிடர் பற்றி) உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான் (காரைக்கால்) இடையனுக்குப் புத்தி பிடரியில (காரைக்கால்) கம்புக்கு கள எடுத்த மாதிரியும் ஆச்சு; தம்பிக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு (காரைக்கால்) கப்பக் காரன் வாழ்வு காத்தடிச்சா போச்சு (காரைக்கால்) புரோகிதம் பண்ணி [அய்யர்] கொண்டாற பொருளுக்கு அறுபத்தாறு பை (பஜனைமடம்) புதுச்சேரிப் பழமொழிகள் - பொதுவானவை குந்தன இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டான் குயிலாப்பாளையத்தான் அவனுக்கு ஏழுகாணி விஸ்தாரமாம் சந்தனப்பொட்டு (செல்லிப்பட்டு) சலிப்போட சம்மந்தி இழுத்தாளாம் இலைபறிக்க (மங்கலம்) ஆந்தநேயம் கைகாட்டி(மங்கலம்) [‘ஆந்தனையும் கைகாட்டி’ - வைணவப் பயன்பாடு] தான் போறது உத்தமம், தம்பி போறது மத்திமம், ஆளு போறது அத்துவானம் [மங்கலம்] ஆரால கெட்டே? நோராலே கெட்டே. [ஆராலே கெட்டேன்? நோராலே கெட்டேன் - என்று சொல்வதும் உண்டு. ‘நோராலே’ ( = வாயாலே) என்ற தெலுங்குச் சொல் இலாசுப்பேட்டையில் மூன்று தலைமுறைகளுக்குமேல் வாழும், தெலுங்கு தெரியாதவர் வாயில் புழங்குகிறது.] ஊருக்கு ராஜாவானாலும் தல்லிக்கு பிட்ட’தா [தெலுங்குத் தமிழர் சொல்வது] ஈயத்தப் பாத்து இளிச்சதாம் பித்தள [புதுச்சேரி] வைத்தியருக்கு ஊரெல்லாம் சிநேகிதம் [புதுச்சேரி] ஆடு அரைநாழி மாடு மத்தியா(ன்)னம் [இலாசுப்பேட்டை; பொருள்= வாங்கிக் கொடுத்த பொருளை சீக்கிரமா வீணாக்கி விட்டால் பெரியவர்கள் சொல்வது] ஆளானாலும் ஆள் அரியாங்குப்பத்து ஆள் [திம்மப்பநாயக்கன்பேட்டை] பாத்தா ஒரு வேல பாக்காட்டா ஒரு வேல [இலாசுப்பேட்டை: பொருள்= பணியாளர்கள் செயல்] முன்னால ஒன்னு பின்னால ஒன்னு [தட்டாஞ்சாவடி: பொருள்= நமக்கு வேண்டியவர், நமக்கு முன்னால் ஒரு மாதிரியாகவும்; நமக்குத் தெரியாமல் மாறான மாதிரியாகவும் நடந்து கொள்வது] ஆளிக்காரன் ஆளியேத்தறான் போலிக்காரன் போலியேத்தறான் [இலாசுப்பேட்டை: பொருள்= அவனவன் வேலையை அவனவன் பார்க்கிறான் - மற்றவர்களைப் பற்றி எங்கே கவலைப்படுகிறார்கள்?] கெரடி கத்தவன் இரடி வுழுந்தா அதுவும் ஒரு வித்தை’ம்பான். [இலாசுப்பேட்டை: கெரடி=கரடிவித்தை/சிலம்ப வித்தை; இரடி=இடறி] வெக்கங்கெட்ட பொண்டும் வெக்கப்பட்ட வேசியும் வேலக்கு உதவ மாட்டாங்க (புதுச்சேரி) வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தா வுழுந்து வுழுந்து கும்பிடணும் (புதுச்சேரி) உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல முழிக்கிறயே (புதுச்சேரி) ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு அய்யங்காருக்கு மூணுகொம்பு (புதுச்சேரி) என்னக் கெடுத்தது நரெ எம் மவளெக் கெடுத்தது மொலெ (செக்குமேடு) தேவடியா இருந்து ஆத்தா செத்தா கொட்டுமுழக்கு தேவடியா செத்தா ஒண்ணுமில்லே (செக்குமேடு) பழய மொறத்துக்கு சாணி கெழக்கொடலுக்கு சோறு (காரைக்கால்) ஊருக்குள்ளது உனக்கு (காரைக்கால்) சீலைப்பாய் ஈழம்போய் சீனி சர்க்கரை கட்டுமா? (காரைக்கால்) [உச்சரிப்பு: ஜீனி < சீனி] ஆண்டி குண்டியத் தட்டுனா பறக்குறது சாம்பல் மட்டுந்தான் (காரைக்கால்: கோவில்பத்து: சீமான் சுவாமிகள் ஒடுக்கம் அருகில் சாமியார் ஒருவர் சொன்னது) முதலியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} தமிழ்நாடு செட்டியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு} காரைக்கால் கைக்குக் கை நெய் ஊத்தனாலும் ஊங்கணக்கு வேறதாண்டி’ன்னானாம் (ஐயன்குட்டிப்பாளையம்) வண்ணான்கிட்ட துணியப் போட்டுட்டு கொக்கு பின்னால நின்னாளாம் (ஐயன்குட்டிப்பாளையம்: 'வண்ணான்கிட்ட துணியப் போட்டுட்டு கொக்குக்குப் பின்னால அலைஞ்சமாதிரி' என்றும் சொல்வதுண்டு) ஆத்துல வருது மணல்ல சொருவுது (ஐயன்குட்டிப்பாளையம்) [இதை, 'ஆத்திலே ஊருது மணல்'லே சுவறுது' என்றும் 'ஆத்துல வெளையுது மணல்ல சிதறுது' என்றும் சொல்வதுண்டு] *ஆத்தாளுக்கு ஒரு சீத்தாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்ட (சோலைதாண்டவன்குப்பம்) *ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளு அடைப்பக்காரனுக்கு ஒரு தொடப்பக்கட்ட(தமிழ்நாடு) *ஆட்டாளுக்கு ஒரு சீட்டாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்டை (மங்கலம்) உள்ள புள்ளயே ஒரல நக்கியிருக்க, மற்றொரு புள்ளைக்குத் திருப்பதி நடந்தானாம் (சோலைதாண்டவன்குப்பம்) *கூரையேறி கோழிபிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் பாக்க போறானாம்(சோலைதாண்டவன்குப்பம்) ஆளப்பாத்தா அழகு போல வேலையப் பாத்தா எழவு போல (மாத்தூர்) நெல்லு வேய்க்க நெனவில்ல அரிசி அளக்க அறிவு இருக்கு (ஐயன்குட்டிப்பாளையம்) *கெட்டுப்போன பாப்பானுக்கு செத்த மாட்ட சீதனமா கொடுத்த மாதிரி (ஐயன்குட்டிப்பாளையம்) வவ்வாமீனும் வஞ்சிரமும் வலையக் கொண்டு போகுதே’ன்னானாம் (சின்ன காலாப்பட்டு) எண்ணையாவறதுக்கு எள்ளுதான் காயுதுண்ணா எலிப்புழுக்கையுமா? (முருங்கப்பாக்கம்) நாத்தச் சாணிய மிதிப்பானே(ன்)? நல்ல தண்ணிய வீணத்துக் கழுவகொட்டுவானே(ன்)? (பாகூர்) செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்துப் பண்ணின சம்பந்தம் (காரைக்கால்) செத்தவன் சூத்து தெக்கே இருந்தா என்ன வடக்கே இருந்தால் என்ன (காரைக்கால்) செத்தவன் சூத்து கெழக்கே இருந்தா என்ன மேக்கே இருந்தால் என்ன (தமிழ்நாடு) பாலியல் தொடர்பானவை - கொச்சை வழக்கில் அமைந்தவை ஆடு காப்பணம் புடுக்கு முக்காப்பணம் (காரைக்கால்) ஆடி மாசத்துல குத்துன குத்து [அடுத்த] ஆவணி மாசத்துலயே உளப்பு [உளச்சல்] எடுத்துச்சாம் (இதனால்தான், 'ஆடிக்கு அழக்காத மாமியாரைத் தேடிப் பிடிச்சு செருப்பாலடி' என்ற பழமொழியும் வந்தது) கருவாட்டுக்காரி சந்துவிட்டா நா' வ[வி]ந்துவிட்டேன் (பெரிய சந்தை) கரிசனப்பட்ட மாமியா மருமானப் பாத்து ஏங்கினாளாம் (புதுச்சேரி) அண்டங்காக்கா கர்ரு'ன்னா ஆமடையானைப்போய் அப்பாடின்னு கட்டிக்குவாளாம் (புதுச்சேரி) காசுகுடுத்தா வேசி வருவா கலநெல்லக் குடுத்தா அவ அக்காளுமாத்தாளுங்கூட வருவாங்க (கோர்க்காடு) காசுக்கொரு சேலை வித்தாலும் நாய்சூத்து அம்மணம். (புதுச்சேரி) காசுக்குக்குப் பத்து பொண்டாட்டி கொசுறுக்கு ஒரு குத்து (செக்குமேடு) காசுக்குப் பாத்தவன் கழுதகிட்டப் போனானாம் (செக்குமேடு) கெழவங்குடுத்த பணத்துக்கு நரை உண்டா? (செக்குமேடு) வலியவந்தா, கிரந்திக்காரி. (செக்குமேடு) கூட்டம் பெருத்தா குசுவும் பெருக்கும் (புதுச்சேரி) பீக்கு முந்துன குசுவே பூண்டு தின்ன வாயே (புதுச்சேரி) பீத்தின்கறவன் வூட்டுக்குப் போனே'னா பொழுது விடியற வர பேலச்சொல்லி அடிப்பான் (முதலியார்பேட்டை) முகதரிசனம் முக்கால் மைதுனம் (உயர்சாதி வழக்கு) அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குவாள் (புதுச்சேரி: பாலியல் கதை) அஞ்சுறவனக் குஞ்சும் விரட்டும் (புதுச்சேரி) அந்திப்பீ சந்திப்பீ பேலாதானை ஜாமப்பீ தட்டி எழுப்பும் (புதுச்சேரி) புள்ளக்காரி குசுவுட்டா புள்ளமேல சாக்கு (புதுச்சேரி) ஆம்பளையான் வைததப் பத்தி அயல்வீட்டுத் தச்சனைக் கோணல் நிமித்தச் சொன்னாளாம். (கி.ராஜநாராணனும் கழனியூரனும் தொகுத்த 'மறைவாய் சொன்ன கதைகள்' நூலில் இதன் கதை உள்ளது.) வயசுக்கு நரச்சுதோ மசிருக்கு நரச்சுதோ (புதுச்சேரி) வெடம் [இடம்] கெடைக்காத தோடம் மெச்சவுந்தான் பதிவிரதை (பாக்கமுடையான்பட்டு) ஒரல்ல துணி கட்டி இருந்தாலும் உரியத்தான் பாப்பான் வாழைகிட்ட சேல காஞ்சாலும் உத்து உத்தே பாப்பான் (பண்டசோழநல்லூர்) எலி அம்மணமாவா போவுதுங்கிறான் (மதகடிப்பட்டு) உள்ள இருக்கு கச்சக் கருவாடு நாத்தம் வெளிய பாத்தா வெள்ளையுஞ் சள்ளையும் (புதுச்சேரி) நெனச்ச நெனப்பென்னடி? அண்ணா'ன்னு அழச்ச மொறை என்னடி? (புதுச்சேரி) புதுச்சேரி தமிழ்நாடு இரண்டுக்கும் பொதுவானவை: ஒண்ணுந் தெரியாத பாப்பா இழுத்துப் போட்டாளாம் தாப்பா மயிருள்ள சீமாட்டி வாரி முடிச்சுக்கிறா வந்தா வரவுல வை வராட்டினா செலவுல வை டம்பாச்சாரி பொடிமட்டை தட்டிப்பாத்தா வெறும்பட்டை (புதுச்சேரியில் ‘பொடிப்பட்டை’ என்று பெரும்பாலோர் சொல்வார்கள்] கும்பி கூழுக்கு அலையுதா(ம்) கொண்டை பூவுக்கு அலையுதா(ம்) அறுப்புக் காலத்துல எலிக்கு அஞ்சு பெஞ்சாதி சின்னிக்குத் தேள் கொட்டனா தென்னமரத்தில நெறி கட்டிக்கிச்சா (புதுச்சேரித் தெலுங்குத் தமிழர் சொல்வது. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இதைத் ‘தென்னமரத்திலே தேள்கொட்டப் பனமரத்துல நெறிகட்டிடுச்சாம்’ என்று சொல்வர்.) கூரையேறி கோழிபிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் பாக்க போறானாம் ஆத்தாளுக்கு ஒரு சீத்தாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்ட (புதுச்சேரி) ஆட்டாளுக்கு ஒரு மோட்டாளு அடைப்பக்காரனுக்கு ஒரு தொடப்பக்கட்ட(தமிழ்நாடு) ஆட்டாளுக்கு ஒரு சீட்டாளு அடுப்பாங்கரைக்கு ஒரு தொடப்பக்கட்டை (புதுச்சேரி - மங்கலம்) [ஆட்டாள்=இடையன்; மோட்டாள்=அவனுக்கும் குற்றேவல் செய்யக் கிடைக்கிற எளியவன்] வெங்காயம் அரியும்போது வேண துக்கம் வந்துச்சாம் (காரைக்கால் - தமிழ்நாடு) ஆனா அச்சில வாரு ஆகாவிட்டா மொடாவுல வாரு (காரைக்கால் - தமிழ்நாடு) அகத்துல போட்டாலும் அளந்து போடு (காரைக்கால் - தமிழ்நாடு) ஆத்துல போட்டாலும் அளந்து போடு (தமிழ்நாடு) கோழிய கேட்டுக்கினா மெளகா அரைப்பது (காரைக்கால்) மீனு கழுவி பூனைய காவல் வெச்ச மாதிரி (காரைக்கால்) முதல் நாள் வாழ எல, இரண்டாம் நாள் தைய எல, மூணா(ம்) நாள் கையில (காரைக்கால்) செத்தவன் காதுல சுக்கு கரைச்சு ஊத்தன மாதிரி (காரைக்கால்) செத்தவன் கையில வெத்தல பாக்கு கொடுத்துப் பண்ணின சம்பந்தம் (காரைக்கால்) செத்தவன் சூத்து தெக்கே இருந்தா என்ன வடக்கே இருந்தால் என்ன (காரைக்கால்) செத்தவன் சூத்து கெழக்கே இருந்தா என்ன மேக்கே இருந்தால் என்ன (தமிழ்நாடு) வீடு எரிஞ்சு சுவரு நிண்ணுச்சு பெருமாள் புண்ணியம் (காரைக்கால்) அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது: கதை:- இரண்டு நண்பர்களும் கரடியும்) அவன் மூத்திரம் வெளக்கா எரியிறது (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது) அள்ளிக் கொடுத்தா சும்மா அளந்து கொடுத்தா கடன் (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது) பொண்டாட்டி சூத்துக்குப் பிரமணையாயிருக்கான் (புதுச்சேரி தமிழ்நாடு - இரண்டுக்கும் பொது: தி. தெ. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பழமொழி அகரவரிசை. திசம்பர் 1952. எண்: 8344) ----------------------------- இன்னும் இவைபோல எத்தனையோ பழமொழிகள் புதுச்சேரிக்கும், புதுவை தமிழ்நாட்டுக்குப் பொதுவாகவும் இருக்கின்றன. இந்தத் துறையில் பலருக்கு ஆர்வம் ஏற்படவே, வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசியும் ஆய்வுக்கட்டுரை வழங்கியும் வருகிறேன். சமீபத்தில் ஆகஸ்ட் 23 முதல் 25 முடிய French Instititute Of Pondicherry - Department Of Indologyயும் Mysore - Centre Of Excellence For Classical Tamil, CIILஉம் இணைந்து நடத்திய 'International Conference - Streams of Language: Dialaects in Tamil From Early To Modern Times As Reflected in writing And Speech: Dialects in History And Literature'இலும் இது குறித்த "Identifying Puducheri Proverbs" என்ற ஆய்வுக்கட்டுரையை வாசித்துள்ளேன்.

13.8.06

தேரு பிறந்த கதை - வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்

சாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் - தேரு பிறந்த கதை - வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம் - தேவமைந்தன் "வாயிலிருந்து வரும் சொற்கள் மோசமாகத்தான் இருக்கும்" என்று மொழி அடையாளப் படுத்தப்பெறும் முனுசாமிக்கிழவன் தன் ஊருக்கே கதைசொல்லி ஆனவன். "தேரு புடிக்கும்டா, தேருல சாமி பாக்கப் புடிக்காது, அது பெரிய கதை" என்று தொடங்கிச் சொல்லப்படும் சிறுகதைதான், இத்தொகுதிக்கான தலைப்பைத் தந்தது. பதினாறு கதைகள் இதில் உள்ளன. 'தேரு பிறந்த கதை,' கோயில் கட்டிய சாதாரண மக்களைக் காண அவர்களின் வீடுதேடிவரும் கடவுளின் கதை. அவராக வரவில்லை. எட்டாத உயரத்திலேயே எளிய மக்களுக்கு அவர் என்றும் இருக்கும்படியாக, சமூகத்தின் ஆதிக்கவாதிகள் திட்டமிட்டுத் தேர்த்திருவிழாக்காட்டும் நுண்ணரசியல் அது. தன் பிள்ளைகளிடம் விழிப்புடன் இருக்க முடியாமல் ஏமாந்துவிட்டு, கடன்கொடுத்தவர்களை ஏமாற்றப் பார்க்கிறவர்களை மிரட்டுவதற்காக அவர்களிடம் காசுபெற்று அடுத்த நாளைய பொழுது ஓடுமாறு பார்த்துக் கொள்ளும் சுல்தான் பாய். "தமிழ்ப் படிக்கிறவன் யாரும் உருப்பட்டான்?" என்பவரின் மகனாகப் பிறந்து சவுளிக் கடையில் உட்கார்ந்திருக்க வேண்டி வந்தபொழுதும் - ஊரில் தமிழ் வளர்க்கவும் திருக்குறள் பரப்பவும் சக இளைஞர்களின் 'ஊர் சுற்றும் வழக்கம்' மாற்றவுமாக ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிப்பதில் வெற்றிபெற்றுவந்த கோவிந்தன் திடீரென "நெருநல் உளனொருவன் இன்றில்லை" என்ற திருக்குறளுக்குத் தானே இலக்காகி திடுமென மறைந்த அவலம். ஒரு சாதாரண மனிதக் கதைப்பாத்திரம் + நெஞ்சை நெருடும் சக மானுட இழப்பு. இரண்டும் குழைய உருவான கதையே 'கால மாற்றம்.' இந்த உலகில் சாதாரணமான மனிதனாக உலவுவது கூட "ஐயே! மெத்தக் கடினம்" என்பதை உணர்த்தும் தொன்மச் சார்புடைய கதை - 'சில சிதைவுகள்.' சாதி மாறித் திருமணம் பண்ணிக் கொண்ட ஒரே காரணத்துக்காக, "என் மவன் கூட எவன்டா போட்டிக்கு வர்றது. நீங்கள்லாம் கா காணி அண்டை வெட்டறத்துக்குள்ள எம்மவன் முக்காகாணி வெட்டுவான்டா!" என்று மார்தட்டிய தந்தையாலேயே விரட்டப்பட்டும்; தாய்மாமனால் உயிருக்குக் குறிவைக்கப்பட்டும் வாட்டமுற்று வேற்றூருக்குச் சென்று குடியேறுகிறான் முருகன். கரும்பு வெட்டுவதில் மிகுந்த தேர்ச்சிபெற்றவனாக இருந்தும் பயனில்லை. அவனைச் சாதிமாறிக் கல்யாணம் பண்ணிக்கொண்ட பவளக்கொடிக்கும் தன் சொந்த ஊரில் அவமானமே. கிராமங்களில் சாதிக்கட்டுமானத்தின் பிடி, ஆகவும் கோரமானது. வந்தேறிய ஊரிலும் குடிசை கட்டிக் கொண்ட இடம் - பாதிரியார் பள்ளிக்கூட இடமா? புவனகிரி கோயில் இடமா என்று பத்து வருஷங்களாக நீடித்த தாவாகூட - முருகனும் பவளமும் வந்து ஊரில் குடியேறிக்கொண்ட 'நேரம்' - உடனே தீர்ந்து போகிறது. பள்ளிக்கூடம் பக்கம் தீர்ப்பாகிறது. ஆட்சியர் ஆணை, முருகனை இடமற்றவன் ஆக்குகிறது. மைதானத்துக்கும் சாலைக்கும் இடையிலிருந்த எட்டடியில் ஒண்டுகிறான், தன் மூன்று மாதக் கருவைச் சுமக்கும் மனைவியுடன். வந்த ஊரில் ஒரு பத்தடி இடம் பெறுவதற்காக அந்த ஊரின் சிறிய-பெரிய நாட்டாண்மைகளைக் கெஞ்சுகிறான். இருவரும் சம வயது சம வலிமை சம தலைக்கட்டு உடையவர்கள் என்பது மட்டுமல்ல; சுயநலத்திலும் சமமாகச் சாமர்த்தியம் காட்டுபவர்கள்தாம். வெளியூர்க்காரனுக்கா இடம் கொடுப்பார்கள்? பத்தடி என்றாலும்கூடக் கொடுத்து விடுவார்களா? நிச்சயமற்ற நிலைமையை மட்டும் கொடுத்து அனுப்புகிறார்கள். 'இடம்' - இத்தொகுதியின் சிறந்த சிறுகதை. இது பொருளாதார உலகம். சந்தை உறவுகளே சமூகம் எங்கும், பணத்துக்குப் பின்னே நெஞ்சிளைக்க ஓடுகிற நிலை பலருக்கும் வாய்த்துவிட்டது. பணம் பண்ணாதவன் பாடு, பரிதாபம். திருமணம் என்ற சமூக நிறுவனத்தின் முறையியலில் பணமே பிரதானம். 'குறை' என்ற கதை இதைத்தான் படம் பிடிக்கிறது. 'கடன்' என்ற சிறுகதையும் - குடும்ப உறவுகளுக்குள்ளும் பணம் விளையாடும் குரூரத்தைத்தான் சித்திரிக்கிறது. 'சில சிதைவுகள்' போன்றே 'நயனபலி' என்ற சிறுகதையும் தொன்மச்சாயல் படிந்தது. வங்க தேசத்து 'நவீன பாரதம்' போன்று, இந்த நிகழ் உலகத்தின் நிலைப்பாட்டைப் பகைப்புலம் ஆக்கி, பழங்கால உலகின் கதை நிகழ்வை ஆய்வு முடிபுக்கு உட்படுத்தும் கதை. திருத்தொண்டர் மாக்கதையின் இலை மலிந்த சருக்கம் தரும் கண்ணப்பன் கதை இங்கு மறுவாசிப்புக்கு உள்ளாகிறது. முதியவர் வினாவுக்கு விடையாக, "இந்த உலகிற்கே வந்தாகி விட்டது; [இந்த] மலைக்கு வந்ததா தப்பு?" என்று அவன் "பேசிக் கொள்வது" குறிப்பிடத்தக்கவாறு ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்தது. மனிதரின் ஆழ்மனத்தில், காலங்காலமாய்த் தொன்மக் கதைகளின் கூறுபாடுகள் சில தேவையில்லாமல் தம் தடம் பதித்துள்ளன. அவற்றுள் கருடன் ஒரு குறியீடு. ஆந்தை[கோட்டான்] முதலானவை மற்ற நம்பிக்கைக் குறியீடுகள். 'கருடன்' கதையில், யதார்த்தப் பிரச்சினைக்கு வானத்தில் 'கருடப்பட்சி தேடிப்' பரிகாரம் அடைய முற்படும் முருகேசனுக்கு - அவருடைய எல்லா 'லாஜிக்'குகளயும் ஏமாற்றிவிட்டுக் கருடப்பறவை எதுவும் தென்படாமலேயே போய்விடுவதும் நிகழ்வில் இழப்பு நேர்ந்த செய்தி அவரை நாடி வருவதும் அதற்குப் பின்னே வானப் புலத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக்கொண்டே தொடர்வதும் ஆழ்மன அவசத்தோடு இயற்கையான செயல் இணவதை நேர்த்தியாகப் புனையும் கதாசிரியரின் உத்தியாகும். இவ்வாறான, வளவ. துரையனின் 'தேரு பிறந்த கதை' என்ற சிறுகதைத் தொகுதி கிடைக்கும் இடம் :- மருதா, 226 (188) பாரதி சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. பக்கம் : 112 விலை : ரூ.60/- **** நன்றி: திண்ணை.காம்

செருப்பாலடித்த சமூகம்

செருப்பாலடித்த சமூகம் - தேவமைந்தன் பசித் தளர்ச்சியில் பாதி மயக்கத்தில் இணையம் உலாவிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன், வீட்டுக்கு. விமானதளச் சாலை இறக்கத்தில் தெரு முடுக்கொன்றில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்புவரை குப்பைத்தொட்டி ஒன்றிருந்த இடத்தில், நடுத்தர வயதுக் குப்பை பொறுக்கும் பெண் சொந்தமாய் ரகசியங்கள் எதுவும் வைத்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் மல்லாந்து கிடந்தாள். மனிதம் உந்த அருகில் சென்றேன். “ஏன்’மா - சாராயமா? எ(ழு)ந்திரு எ(ழு)ந்திரு..” என்றேன். கொஞ்சம் தற்காலிகமாகவும் மிச்சம் போனால் போகிறதென்றும் பாதிக்கண்களின் மீதி திறந்தாள். உளறினாள். “மிஸ்’ஸே!* எம் புருஷனுந்தான் ஊத்திக்கிணு ஊத்திக்கிணு பூட்டான்.. அவனெ கேக்காம வுட்டுட்டு என்னெ வந்து கேக்(கி)றீயே! நீயும் ஆஞ்சாதி’ங்குற திமிருதானே?” பக்கத்தில் நடந்து வந்தவர் சொன்னார்: “நீங்க பாட்டுக்கு போக வேண்டியதுதானே? இதுங்களுக்கெல்லாம் நல்லது சொன்னால் மண்டை’ல ஏறுமா? சாதாரணமா’வே ஏறாது! இதுல சாராயம் வேற! போவீங்களா..ம்...ம்” கேட்டேன் அவரை, நறுக்கென்று: “நீங்கள்’லாம் பாத்துட்டுமட்டும் போறதுக்கா அவ’ அப்படி அங்க கிடக்கா? சொல்லட்டுமே.. தப்பாவா சொன்னா? ஞாயமான கேள்விதானே? புருஷன் குப்பை பொறுக்கினாரு. அவரு போனப்புறம் பொண்டாட்டியும்குப்பை பொறுக்கணுமா? விபத்துல போனா இத்தனை பணம்- மனுஷனுங்கனுங்க உண்டாக்குற அழிம்புல போனா இத்தன லட்சம்’னு அறிவிக்கிறாங்காளே! இந்த ஜீவன்களுக்கு எந்த ஞாயமும் இல்லியா?” கேட்டுவிட்டு விடுவிடுவென நடையைக் கட்டினேன். செருப்பால் அடித்த சமூகம். ****** *மிஸ்ஸே = ஐயா/'சார்' - புதுச்சேரி பிரஞ்சுத்தமிழ்ச் சொல். நன்றி: கீற்று.காம்