25.5.06

வகைப்படுத்தாதவை: மதுமிதா அவர்களுக்கு வணக்கம்.

மதுமிதா அவர்களின் ஆய்வுக்குப் பாராட்டுகளோடு... வணக்கம். தங்கள் ஆய்வுநூலில் என் வலைப்பதிவினைச் சேர்த்துக்கொள்ள இசைகிறேன். தேவமைந்தன்(அண்ணன்பசுபதி), புதுச்சேரி. விவரப் பட்டியல்: வலைப்பதிவர் பெயர்: அண்ணன் பசுபதி வலைப்பூ பெயர்: kalapathy சுட்டி(url): http://kalapathy.blogspot.com/ http://360.yahoo.com/pasu2tamil ஊர்: புதுச்சேரி நாடு: இந்தியா வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பேராசிரியர் பசுபதி, டொரொன்டோ. முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: 8/09/2005 இது எத்தனையாவது பதிவு: முதலாவது. இப்பதிவின் சுட்டி(url): http://kalapathy.blogspot.com வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: 1968-ஆம் ஆண்டு முதலான என் அச்சுநூல்/இதழ்ப்படைப்புகளை எளிதாக நண்பர்கள் எங்கிருந்தாலும் வாசிக்க. சந்தித்த அனுபவங்கள்: மகிழ்ச்சியானவை. கனடா, பிரான்சு முதலான நாடுகளிலிருந்து என்னை நேசித்து வரும் மின்னஞ்சல்கள் (ஏனெனில் என் வலைப்பூ மட்டுறுத்தப்பெற்றது) பெற்ற நண்பர்கள்: கனடா டொரொன்டோ வேதியல் பேராசிரியர் பசுபதி, சார்சேல்சு பேரா.பெஞ்சமின் இலெபோ(புதுவை எழில்), இந்தியா தியாகு(இராஜ. தியாகராஜன்,editor@pudhucherry.com)பி.ஆர்.திரிபுரசுந்தரி(கொடைக்கானல்) முதலிய பலர். இப்பொழுது மதுமிதா அவர்கள். கற்றவை: 1.முப்பதாண்டுகளுக்கும் மேலான கல்வியாளன் அனுபவத்தை சைபர்வெளி நண்பர்களோடு(மடற்குழுக்களிலும்)பகிர்ந்துகொள்ளும்பொழுது என் அனுபவம் ஆகவும் சிறியது என்பதைக் கற்றேன். 2.முப்பத்தெட்டாண்டுகள் அச்சிதழ்ப் படைப்புலகில் சாதித்ததும் மின்வெளியில் பதிவதும் ஒருங்கிணைந்து போகும் என்றும் கற்றேன். எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்னைப் பொறுத்த அளவில் எனக்கு அச்சிதழ்களைவிட மிகுந்த சுதந்திரம் வலைப்பதிவுகளில்தான் கிடைத்தது. இனி செய்ய நினைப்பவை: செய்பவை தொடரவேண்டும் என்று. ‘இன்று’ என்பதுதான் நம்பத்தகுந்தது என்பதை என் உடல் எனக்குப் போதித்துக் கொண்டே வருவது, என் மருத்துவருக்குத் தெரியும். உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: 1948-இல் கோவையில் பிறந்தேன். 1969 முதல் புதுச்சேரியில் பேராசிரியன். துணைவியார் புதுச்சேரி - பிரஞ்சுக் குடியுரிமை பெற்ற (பிரான்சு ஸ்திராஸ்பூரில் நெடுங்காலமாக வாழும்) குடும்பத்தினர். பார்க்கச் செழுமையாகவே இன்னும் இருந்துகொண்டிருக்கும் நான், 2000-ஆவது ஆண்டில் மருத்துவர் மற்றும் குடும்பத்தாரின் வலியுறுத்தலால் விருப்ப ஓய்வு பெற்றேன். உலகெங்கும், குறிப்பாக பிரான்சில் நெருக்கமுள்ள நட்பு வட்டத்தில் நானும் இருக்கிறேன். அவர்களின் நேசிப்பாலும், மேனாள் மாணவ மாணவியரின் தொடரும் அன்போடும், குடும்பத்தினர் பாசத்தாலும் உயிர்த்திருக்கிறேன். சொல்ல நினைக்கும் ஒன்று: தங்களின் இந்த முயற்சிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

24.5.06

ஆன்மீகம்: வள்ளலாரின் வருத்தம்

ஆன்மீகம்: வள்ளலாரின் வருத்தம் தாம் வகுத்த விதிமுறைகளுக்கு மாறாகச் சபையில் செயல்பாடுகள் நடைபெற்றுவருவதை அறிந்த வள்ளலார் சபையைப்பூட்டி திறவுகோலைத் தம்முடன் எடுத்துக்கொண்டு மேட்டுக்குப்பத்திற்குப் போய்விட்டார். வள்ளலார் சித்திபெற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான், அதாவது 1878-ஆம் ஆண்டில், சன்மார்க்க அன்பர்களின் சார்பாக ஆறுபேர் கொண்ட குழுவால் சபை வழிபாடு மீண்டும் தொடங்கப்பட்டது. வள்ளலாரின் திருவுளப்படியே, எந்தவொரு விதியையும் மீறாமல், சபையின் நடவடிக்கைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்வதே நம்முன் உள்ள கடமையும், பொறுப்பும் ஆகும். இதுவே, அவருக்கு நாம் அளிக்கும் சிறப்பும், நன்றிக்கடனும் ஆகும். -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: சபை தொடர்பான சில குறிப்புகள்

ஆன்மீகம்: சபை தொடர்பான சில குறிப்புகள் சபை தருமச்சாலைக்கு அருகில் உள்ளது. இது இறைவனை ஒளிவடிவில் வழிபடுவதற்கென்றே அமைந்தது. இது சுத்தசன்மார்க்கக் கொள்கைப்படி அமைந்த சங்கஞ் சார்ந்த திருக்கோயில். இது வள்ளலார் கூற்றுப்படி, இயற்கை விளக்கம். சபையும், சபைசார்ந்த மற்றவையும் தத்துவ நுணுக்கங்கள் கொண்டவை. சபை சாதி, சமயம், மதம், இனம், நாடு என்ற வேறுபாடுகள் இல்லாமல் மக்கள் யாவருக்கும் பொதுவானது. ‘புலை, கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்’ என்னும் வள்ளலாரின் கட்டளை சபையின் எல்லா நுழைவாயில்களிலும் தீட்டப்பெற்றுள்ளது. சபையில் கூட்டாக முழு அகவலையும் ஓதுதல், ஜோதிவழிபாடு, தியானம் இயற்றுதல் ஆகியவை செய்தல் மிக நன்று. சபையில் அர்ச்சனை, தீப ஆராதனை, அபிஷேகம், சோறுபோன்ற பிரசாதங்கள் கிடையாது. தேங்காய் உடைத்தலும், மத்தளம் போன்ற இசைக்கருவிகளை இசைத்தலும் கூடாது. ஆரவாரம் இல்லாமல், மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும். சபையின் திருப்பணிகளை 1950-ஆம் ஆண்டில் கிருபானந்த வாரியார் அவர்களும், 25 ஆண்டுகள் கழித்து அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களும் தலைமையேற்று நடத்தியுள்ளனர். 18.7.1872 அன்று வள்ளலார் இட்ட கட்டளைப்படி, சபைக்குள்ளே தகர கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு கூடாது. சபையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவரோ அல்லது 72 வயதிற்கு மேற்பட்ட பெரியவரோ நீராடிய சுத்த தேகத்தோடு விளக்கு ஏற்றிவைக்கவேண்டும். சபைக்குள்ளே, அவர்களைக்கொண்டே கால்களில் துணிசுற்றியும், முட்டிக்காலிட்டும் தூசு துடைக்கச் செய்விக்கவேண்டும். -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: அருட்பெருஞ்ஜோதி அகவல்

ஆன்மீகம்: அருட்பெருஞ்ஜோதி அகவல் 25.1.1872 அன்று சபையில் நடந்த முதல் தைப்பூச ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து வள்ளலார் 18.4.1872 அன்று ஒரே இரவில், மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 1596 வரிகளுடைய ‘அருட்பெருஞ்ஜோதி அகவலை’ இயற்றினார். கல்வெட்டுகள் சபையின் முன்மண்டபத்தில் நாற்புறமுள்ள 12 தூண்களிலும் ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ முழுமையும் பொறிக்கப்பெற்றுள்ளது. அதனால், முன்மண்டபம் ‘அகவல் மண்டபம்’ எனப் பெயர்பெற்றது. இதுபோல், உட்பிரகாரத்தில் ‘அட்டகம்’ பொறிக்கப்பெற்றுள்ளது. எண்கோண வெளித்திருச்சுற்றிலும், உட்திருச்சுற்றிலும், சிற்சபையிலும், பொற்சபையிலும், திருவாயில்களின்மேலும், சாளரங்களின்மேலும் திரு ஆ. பாலகிருஷ்ண பிள்ளை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற திருவருட்பாப் பாடல்களும், மகாமந்திரமும் பொறிக்கப்பெற்றுள்ளன. -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: தைப்பூசநாளின் சிறப்பு

ஆன்மீகம்: தைப்பூசநாளின் சிறப்பு சூரியன் வடதிசையில் சஞ்சரிக்கின்ற காலம் உத்தராயண காலம். உத்தராயணத்தில் முதல்மாதம் தைமாதம். தேவர்களுக்கு அது உதய காலம். அந்த மாதத்தில் சூரியன் மிகப்பிரகாசத்துடன் விளங்கும். சந்திரனும் கடகலக்கினத்தில் மிகப்பிரகாசிக்கும். தைமாதத்தில் வரும் பூசநாளன்று விடியற்காலையில் கிழக்கில் சூரியனும், மேற்கில் முழுநிலவும், ஞானசபை நடுவில் அருட்பெருஞ்ஜோதியும் ஒரே நேர்க்கோட்டில் தெரியும். இவ்வாறு காணும் இந்தக் காட்சிதான் மிகச் சிறப்புடைய காட்சியாகும். இதுவே, தைப்பூச முதற்கால ஜோதிதரிசனமாகும். -சன்மார்க்க சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: ஜோதி தரிசனம்

ஆன்மீகம்: ஜோதி தரிசனம் ஜோதியைத் தரிசிப்பதற்குத் தடையாக இருக்கும் அந்த ஏழுதிரைகளும் ஒவ்வொன்றாக நீக்கப்பெற்றால் கண்ணாடியில் முழுமையான ஜோதிதரிசனம் கிடைக்கும். இதுபோல், நாமும் நம்மிடமுள்ள ஆசை முதலிய அஞ்ஞானத் திரைகள் நீங்கப்பெற்றால், ஆன்மஒளியாக அருட்பெருஞ்ஜோதியை நம் சுத்தமனத்தில் தரிசிக்கலாம். கண்ணாடி சுத்தமனதைக் குறிக்கும். நாள்தோறும் சபையில் பகலில் 11.30 மணிமுதல் 12.00 மணிவரையும், இரவில் 7.30 மணிமுதல் 8.00 மணிவரையும் வழிபாடு உண்டு; ஆனால், ஜோதி தரிசனம் இல்லை. மாதப்பூச ஜோதி தரிசனம் இரவில் 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் மூன்றுமுறை நிகழும். மாதப்பூசத்தன்று 6 திரைகள்மட்டும் நீக்கப்பெறும். ஆகவே, ஜோதிதரிசனம் கண்ணாடியில் பாதி அளவுக்கே தெரியும். தைப்பூசநாளன்று காலை 6.30, பகல் 10.00, பிற்பகல் 1.00, இரவு 7.00, இரவு 10.00, மறுநாள்காலை 5.30 மணி என்று காலம் ஒன்றுக்கு மூன்றுமுறையாக ஆறுகாலத்திற்கும் ஜோதிதரிசனம் நிகழும். அக்காலங்களில் ஏழுதிரைகளும் நீக்கப்பெறுவதால் கண்ணாடியில் ஜோதி தரிசனம் முழுமையாகத் தெரியும். 25.1.1872 (தை 13 - வியாழக்கிழமை) அன்று, தைப்பூச நன்னாளில், சபையில் முதன்முதலாக வழிபாடு தொடங்கப்பெற்றது. மக்கள் அனைவரும் ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர். -சன்மார்க்க சாதனையாளர் கோவை அ. குருநாதன்

ஆன்மீகம்: ஞானசபையின் அமைப்பு

ஆன்மீகம்: ஞானசபையின் அமைப்பு சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் எண்கோண வடிவில், ஐந்து திருச்சுற்றுகளைக்கொண்டு தாமரைமலர்போன்று தோற்றம் தரும் சபையை, புலை, கொலை தவிர்த்த அகவின அன்பர்களைக்கொண்டு, அவர் அதே ஆண்டு ஆனித்திங்களில் கட்டத்தொடங்கி, ஏழு திங்களில் முடித்தார். பின்னாளில், அதற்கு ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை’ எனப் பெயரிட்டார். சபை தெற்குநோக்கி அமைந்தது. அதன் மேற்கூரை செப்புத்தகடுகளால் வேயப்பட்டிருந்தது. சபைக்கு வேலியென அமைந்த வெளிச்சுற்று சிறுசிறு தூண்களைக் கொண்டது. இத்தூண்களை நீளமான இரட்டை மடிப்பு இரும்புச் சங்கிலி இணைத்துள்ளது. சபையின் சங்கிலிவெளிச்சுற்றுக்குள், தெற்குமுக ஆசார வாயிலும், தென்கிழக்கில் கொடிமரமும், எழுவார் மேடையும் உள்ளன. சபை முதலில் இரும்புவேல்கம்பி மதிலுடன் தொடங்குகிறது. இதற்கு அடுத்து எண்கோணத் திருச்சுற்று. இதற்கு அப்பால், எண்கோணச் சுவர். இச்சுவரில் எட்டு வாயில்களும், பதினாறு சாளரங்களும் உள்ளன. சபையின் தெற்கு நுழைவு வாயிலை அடுத்துள்ள முன்மண்டபத்தில் கிழக்குப்பக்கம் பொற்சபையும், மேற்குப்பக்கம் சிற்சபையும் உள்ளன. முன்மண்டபம், பன்னிருகால் மண்டபம் ஆகும். அதன்நடுவே, நாற்கால்மண்டபம் எனும் சிறிய மண்டபம் உள்ளது. அதன்கீழே, ஒருவர் அமர்ந்து தியானம் செய்யக்கூடியவகையில் நிலவறை ஒன்று உள்ளது. நாற்கால்மண்டபத்தின் நடுவே, ஒரு சதுரப் பீடத்தின்மேல் வள்ளலார் ஏற்றிவைத்த அருட்பெருஞ்ஜோதி தீபம் அணையாதீபமாக எரிந்துகொண்டிருக்கிறது. அந்த தீபத்தின்முன்னர், ஆறடி ஒன்பதங்குல உயரமும், நாலடி இரண்டங்குல அகலமும் உள்ள ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. தீபம், கண்ணாடி ஆகியவற்றுக்குமுன் ஏழு வெவ்வேறு நிறத்திரைகள் தொங்கவிடப்பெற்றுள்ளன. முதல் ஆறு திரைகள் கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய நிறங்களை முறையே பெற்றுள்ளன. ஏழாவது திரை மட்டும் கலப்பு நிறத்திரையாய் பாதி அளவில் இருக்கிறது. ஒவ்வொரு திரைக்கும் தனித்தனி விளக்கம் உண்டு.

ஆன்மீகம்: ஞானசபை

ஆன்மீகம்: ஞானசபை சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் ஞானசபையின் தோற்றம் 1871-ஆம் ஆண்டில், வள்ளலார் மேட்டுக்குப்பம் சித்திவளாக மாளிகையில் இருந்தவந்தபொழுது, ஒருநாள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் “தான் அருள்நடம் புரிதற்கு அடையாளமாக ஓர் ஞானசபையை வடலூர் பார்வதிபுரத்திலுள்ள உத்தரஞான சிதம்பரத்தில் காணுதல் வேண்டும்” என்று தன் திருக்குறிப்பால் அவருக்கு அறிவித்தார். ‘தாம் அகத்தே கண்ட அருளனுபவத்தை, புறத்தே உலகமக்களுக்கும் பாவனையாகக் காட்டவேண்டும்’ என்ற குறிக்கோளில் இருந்துவந்த வள்ளலாரும் ஆண்டவர் கட்டளையை விருப்புடன் ஏற்றார். ஞானசபைக்கான வரைப்படத்தை தன் திருக்கரத்தாலேயே வரைந்து, அதன் அடிப்படையில் சபையைக் கட்டும் பணியை மேற்கொண்டார்.

15.5.06

ஆன்மீகம்: தருமச்சாலை

தருமச்சாலை -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் வள்ளற்பெருமான் சன்மார்க்க சபையை 1865-ஆம் ஆண்டில் நிறுவிய பின்னர், இறுக்கம் இரத்தினம் முதலியார் முதலிய மெய்யன்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க, சிதறிக்கிடந்த தம் பாடல்களைத் திரட்டித்தந்து, அவற்றை வெளியிட ஒப்புதல் தந்தார். அதைத் தொடர்ந்து 1867-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதத்தில் அப்பாடல்கள் “திருவருட்பா” எனும் பெயரில் நான்கு திருமுறைகளாக வகுக்கப்பெற்று வெளியிடப்பட்டன. அதே மாதத்தில்தான், அதாவது 2.2.1867 அன்று, வடலூர் - பார்வதிபுரத்தைச் சேர்ந்த 40 அன்பர்கள் தங்கள் 80 காணி நிலத்தை வள்ளலாருக்குத் தானமாக எழுதிக் கொடுத்தனர். அதனை ஏற்ற அவர் அந்த நிலப்பகுதிக்கு ‘உத்தர ஞான சிதம்பரம்’ எனப் பெயரிட்டார். அவர் வாழ்ந்த காலம் பஞ்சங்கள் நிலவியிருந்த காலம். எந்தவித ஆதாரமுமற்ற ஏழை எளியவர்களும், வழிப்போக்கர்களும் பசிக்கொடுமையால் படும் வேதனையைக்கண்டு மனம் பதைத்து, அவர்களின் பசிப்பிணியைப் போக்க திருவுளங் கொண்டார். தருமச்சாலை ஒன்றே இதற்கு வழி என்று எண்ணியிருந்த சமயத்தில், தானமாகக் கிடைத்த அந்த நிலம் அவருக்கு மிகவும் பயன்பட்டது. நிலம் கிடைத்த நாலாவது மாதத்திலேயே, அதாவது 23.5.1867 ( வைகாசி 11) அன்று, தருமச்சாலைக்கான கால்கோள் விழாவும், அன்னதானத் தொடக்க விழாவும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. அவ்விழாக்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். தருமச்சாலைக் கட்டடம் கட்டுவதன் காரணமாக கருங்குழியை விட்டு வந்த வள்லலார், 1867-இலிருந்து 1870-வரை மூன்றாண்டுகளுக்கு தருமச்சாலையைத் தன் இருப்பிடமாகக் கொண்டார். தருமச்சாலைக்கு முதன்முதலில் ‘சமரச வேத தருமச்சாலை’ என்று அவர் பெயரிட்டார். பிற்காலத்தில், 18.7.1872 அன்று ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை’ என்று அவரே பெயர்மாற்றம் செய்தார். தருமச்சாலைக் கட்டடத்தில் வள்ளலார் ஏற்றிய ‘திருவடிப் புகழ்ச்சி’யும், தருமச்சாலையைப் பற்றி அவர் அருளிய பாடல்களும் கல்வெட்டுகளில் பதிக்கப் பெற்றுள்ளன. வழிபாட்டு மேடையில் ஆண்டவருக்கான ஞானசிம்மாசனமும், வள்ளலாரின் உருவச்சிலையும், அணையாவிளக்கும், ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ மூல ஏடும் அன்பர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அன்பர்களும் கூட்டங் கூட்டமாக வந்து கண்டுகளித்து மனநிறைவுடன் திரும்பிச் செல்கின்றனர். கடும் பசியுள்ளவன் உண்ணும் உணவில்தான் இறைவனைக் காண்பான். அவன் பசியுடன் இருக்கும் பொழுது எந்த போதனையும் அவனுடைய செவியில் புகாது. அவன் கடைத்தேற, அவனுக்கு முதலில் வேண்டுவது உணவுதான். பசித்தோரின் பசிப்பிணியைப் போக்குவதன் மூலமாகவே ஒருவன் ஆண்டவரின் பேரருளைப் பெறக்கூடுமே அல்லாமல், பூஜை, ஜபம், யாகம் போன்றவற்றால் அன்று. இரக்கமே உயிர் எனக் கொண்ட வள்ளலார் பசிவேதனை கொண்ட ஏழை மக்களின் துயர்துடைக்க தருமச்சாலையைக் கண்டார். தனக்குப் பின்னரும், தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற அணையா அடுப்பை ஏற்றிவைத்தார். 138 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த அடுப்பு எரிந்துகொண்டு, ஏழை மக்களின் பசித்தீயை அணைத்துக் கொண்டிருக்கிறது. தான் போதித்ததை, தானே செயலாற்றிக் காட்டிய, உலகங் கண்ட, முதல் துறவி அவர்!

9.5.06

ஆன்மீகம்: 'சன்மார்க்க சங்கம்'

ஆன்மீகம்: சன்மார்க்க சங்கம் -சன்மார்க்க சாதனையாளர் கோவை.அ.குருநாதன் திருவருட்பிரகாச வள்ளலார் தனது 35-ஆவது வயதில் சென்னையைவிட்டு நீங்கிய பின்னர், அவர் நெடுங்காலம் வாழ்ந்தது வடலூருக்கு அடுத்த கருங்குழி என்னும் சிற்றூரில்தான். அங்கு வேங்கடரெட்டியார் என்னும் அன்பர் ஒருவர்வேண்டியதற்கிணங்க 1858-இலிருந்து 1867 வரை ஒன்பது ஆண்டுகாலம் அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்த காலத்தில் எண்ணற்ற அருட்பாக்களை எழுதிவந்தார். அவ்வாறு தங்கியிருந்த காலத்தில், 1865-ஆம் ஆண்டில், தன் கொள்கைகளைப் பரப்பவும், மக்கள் அவற்றைக் கடைப்பிடித்து உய்யவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சம்மதத்துடன் சன்மார்க்க சங்கம் ஒன்றை நிறுவ உளங்கொண்டார். தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்று நான்குவகை மார்க்கங்கள் உண்டு. அவற்றில் சன்மார்க்கம் ஒன்றே ஞானத்தைப் பெற வழிகாட்டும். ஆயினும், அது சமயத்தொடர்பாக இருந்தபடியால், சாதி, சமயம், மதம், சாத்திரங்கள் சார்பில்லாமல் எல்லாவகை மக்களும் ஏற்றுக்கொள்ளத் தக்கவகையில் அதைத் திருத்தி, மேம்படுத்தி ‘சுத்த சன்மார்க்க’த்தை வகுத்தார். சுத்த சன்மார்க்கம் என்பது உண்மைநெறியைக் குறிக்கும். இதன் அடிப்படையில் வள்ளலார் சங்கம் அமைத்தார். இச்சங்கத்திற்கு ‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்று முதலில் பெயரிட்டார். பின்னர், 1872-இல் சங்கத்தின் பெயரை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்’ என்று பெயர் மாற்றம் செய்தார். சன்மார்க்க சங்கத்திற்கு நிரந்தரத் தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்று அவர் அறிவித்தார். தயை உடையோர் எல்லோரும் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்தவர்களே. சன்மார்க்க சங்கத்தவர்கள் வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதுடன், அவரின் பாடல்களைத் திரட்டி நூல்களாக வெளியிட்டும், தருமச்சாலை, ஞானசபை ஆகியவற்றை நடத்தியும் தொண்டாற்றி வருகின்றனர். வள்ளலார் தான் அவதரித்த நோக்கத்தை நிறைவேற்றும் முகமாக சன்மார்க்க சங்கத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். தீயவனையும், தூயவனாக மாற்றி, இவ்வுலகத்திலேயே மேலுலகப் பேரின்பத்தை அவன் பெற்று மகிழச் செய்யும் ஆற்றல் உள்ளது சன்மார்க்க சங்கம் ஆகும். வள்ளலார் கூற்றுப்படி,பெற்றதாய்போல் உரைப்பவர் சன்மார்க்க சங்கத்தவர். மரணத்தையும் வெல்ல வல்லவர் சன்மார்க்க சங்கத்தவர்களே. சாகாதவனே சன்மார்க்கி! சன்மார்க்க சங்கத்தில் உருவ வழிபாடு இல்லை; சமயச் சடங்குகள் இல்லை; ஆரவாரம் இல்லை. ஆனால் ஜோதிவழிபாடு மட்டும் உண்டு. சன்மார்க்க சங்கத்தின் முக்கிய கொள்கைகள்:- 1. கடவுள் ஒருவரே; அவர் ஒளிவடிவினர். அவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்க. 2. சிறு தெய்வ வழிபாடு கூடாது; உயிர்ப்பலியிடுதலும் விலக்குக. 3. சாதி, சமய, மத, இன, மொழி, நாடு பாகுபாடுகள் அனுசரித்தல் வேண்டாம். 4. எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்க. 5. துன்புறும் உயிர்களுக்கு உதவுவதே இறைவழிபாடு. உயிர் இரக்கம் ஒன்றே இறைவனின் பேரருளைப் பெற வழிகோலும். 6. பசித்தோரின் பசியாற்றுதல் என்னும் ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல். 7. புலால் உண்ணுதல் வேண்டாம். ஏனெனில், எல்லா உயிர்களிலும் கடவுள் விளங்குகிறார். 8. வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவற்றில் இலட்சியம் வைக்க வேண்டாம். 9. கண்மூடிப் பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும். 10. காது, மூக்கு குத்துதல் வேண்டாம். 11. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்க வேண்டும். பேதமற்று, படிப்பு முதலியவையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். 12. கணவன் இறந்தால் மனைவியிடம் தாலி வாங்குதல் கூடாது. 13. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்யற்க. 14. இறந்தவர்களைப் புதைக்கவேண்டும்; எரிக்கக்கூடாது. 15. கருமாதி, திதி முதலிய சடங்குகள் செய்யாதீர்; மாறாக, உயிர்நீத்தவர் நினைவில் அன்னதானம் செய்தல் வேண்டும். 16. மக்கள் எல்லோர்க்கும் பொதுவான வழிபாடு ஜோதிவழிபாடே! 17. உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்து கடவுள் ஒளியை நமக்குள் காண்க. 18. பசித்திரு, தனித்திரு, விழித்திரு. 19. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க. 20. ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க ஏமசித்தி, சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல், கடவுள்நிலை அறிந்து அம்மயம் ஆதல் ஆகிய நான்கு பேறுகள் கிடைத்து, மரணமிலாப் பெருவாழ்வு பெறுதல் கூடும். 21. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுதல் வேண்டும். 22. எதிலும் பொதுநோக்கம் வேண்டும்.

இலக்கியம்: கவிதை:''காப்பியடித்தல் எது?''

இலக்கியம்: கவிதை காப்பியடித்தல் எது ? தமிழறிஞர் ஒருவர். நன்றாகப் பாடுவார். பாவேந்தர் பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!” என்ற பாடலை, நிகழ்ச்சி ஒன்றில், அவையினர் முன் அவர் பாட வேண்டிவந்தபொழுது, கண்களை மூடியவாறே ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பாடலைத் தொடங்கினார். வந்து விழுந்த பாடலோ, “பூமியில் மானிட ஜென்மம் எடுத்து” என்று தொடங்கிடும் தியாகராஜ பாகவதர் பாட்டு... அவையினர் வியக்க, அவர்மேல் அன்பு கொண்டோர் திகைக்க, அதைப்போய்ச் செய்தியாக்கி தன் திறமையைக் காட்ட அந்த நிகழ்ச்சி இடம்பெற்ற கல்லூரியின் மாணவி (பகுதிநேர நிருபர்) ஒருவர் - பெரிய நாளேட்டுக்குத் தர, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அது பிரசுரிக்க, அந்தத் தமிழறிஞருக்கு ஆகாதவர்கள் குதூகலம் அடைய, ஆனவர்கள் வருத்தம் உற்று நாளேட்டாசிரியரிடம் தொலைபேசிவழி உறும.. இப்படியே பலருக்கு நேரம் வீணாய்ப் போனது. அவர் அவ்வாறு பாடத் தொடங்கியதற்குக் காரணம் என்ன? தியாகராஜ பாகவதரின் திரைப்பாட்டின் சாயலில் பாவேந்தரின் பாட்டான “வாழ்வினில் செம்மையை” அழகாக அமைந்ததுதான் காரணம். அதில் என்ன தவறு? இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் முறையாகத் தொடக்கமாகப் பாடவேண்டிய பாடலாக அரசு ஆணை பிறப்பித்த தமிழ்வாழ்த்துப் பாடலான அதை, தங்கள் மனம் போன போக்கில் விருப்பப்பட்ட ராகங்களில் பாடித் தங்களின் ஆற்றலைக் காட்டுபவர்கள் வேண்டுமானால் தவறு செய்பவர்கள் ஆகலாம். “பூமியில் மானிட ஜென்மம் எடுத்துமோர் புண்ணியமின்றி விலங்குகள்போல்..” என்று கம்பீரமாகவும் அதே நேரம் இரக்கம் தோன்றுமாறும் கணீரென்று பாடிய பாகவதர் சாயலில், ‘‘வாழ்வினில் செம்மையை’’ப் பாடுவதுதான் பாவேந்தரே விரும்பிய முறை என்று புதுச்சேரியில் வாழ்பவரும் பாவேந்தரோடு நன்கு பழகியவருமான கம்பன் விழாப் பெரும்புரவலர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் அப்படியிருக்க, அரசுவிருது வழங்கும் நடுவர் குழு உறுப்பினர் என்ற முறையில், மதிப்பெண்ணும் தெரிவும் இட்டுத்தர, புத்தகம் ஒன்று என்னிடம் வந்தது. பெயர்: ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மரபுக்கவிதை யாப்பியல்; மரபும் நெகிழ்வும்.’ ஆசிரியர்: இரா.சம்பத், இலக்கியப்புலம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிலையம்(PILC), புதுச்சேரி - 605008. [ISBN: 81-85452-08-3] வாசித்துக்கொண்டே வந்தபொழுது 104ஆம் பக்கத்தில் பாரதியாரின் எண்சீர் விருத்தம் ஒன்று கண்டேன். “களக்கமுறு மார்லிநடம் கண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பியுதிர்ந் திடுமோ வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ? வளர்த்தபழங் கர்சனென்ற குரங்குகவர்ந்திடுமோ மற்றிங்ஙன் ஆட்சிசெயும் அணில்கடித்து விடுமோ? துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ வல்லால் தொண்டைவிக்கு மோஏதும் சொல்லலரி தாமே?” என்பது பாரதியாரின் அந்தப் பாடல். (டி.வி.எஸ். மணி & சீனி.விசுவநாதன் முதலான பதிப்பாளர்களின் பதிப்புகளில்: “காய்த்ததொரு கனிதான்,” “வெம்பிவிழுந் திடுமோ?,” “வளர்த்தபழம் கர்சானென்ற,” “சொல்லரிய தாமே?” என்ற பாடங்கள் உள்ளன.)அந்தப் பாடலுக்கு ஒரு பின்புலம் உண்டு. வி. சக்கரை செட்டியாரின் முன்னுரையிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். ‘‘ஹோம்ரூல் கிளர்ச்சியின் தலைவராயும், 1917ம் வருஷத்திய கல்கத்தா காங்கிரஸின் அக்கிராசனராகவும் ஸ்ரீமதி பெசண்ட் செலுத்தி வந்த செல்வாக்கு தேய்ந்துவரலாயிற்று. மிஸ்டர் மாண்டேகு விஜயஞ் செய்ததும், அவர் அடுத்தபடியாக மாண்ட்போர்டு ரிபோர்டில் கர்டிஸின் தந்திரத்தை நுழைத்ததும் காங்கிரஸ்காரர்களிடையே பிளவுண்டாக்க வுற்றனவாயின...[புதுச்சேரியிலிருந்து பாரதி சென்னைக்குச் சென்றபின்[1918] மூன்றாவது ஆண்டு சென்னையில் இயற்கை[11-9-1921] எய்தியதற்கு முன்னால்]..சென்னைக் கடற்கரையில் பல்லாயிரம் ஜனங்கள் சேர்ந்த பொதுக்கூட்டமொன்று நடந்தது. ஸ்ரீயுத ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் தலைமை வகித்தார். மிஸ்டர் நெவின்ஸன் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையாளரும் வந்திருந்தார். [அந்நாட்களில் சென்னைக் கடற்கரையில் அநேக சந்தர்ப்பங்களில் ஜனக்கூட்டத்தின்முன் நின்று பாடிய] ஸ்ரீயுத பாரதியாரும் அச்சமயம் பாடினார். அவரைப் பற்றி அவ்வாங்கிலேயன் ‘’இந்தியாவின் நூதன உணர்ச்சி’’ என்ற தன் நூலில்.. பாரதியாரை [அந்த நிகழ்ச்சியில் பாரதியாரின் பங்குபற்றுதலை] வர்ணிக்கிறான்... “அந்த சென்னையின் தமிழ்க்கவி லஜபதிராய் தேசபிரஷ்டஞ் செய்யப்பட்டபோது தாம் எழுதிய புலம்பலைப் பாடினார். .. .. பின்னர் திடீரென்று மாறி அக்கவி ஏளனஞ் செய்யப் புகுந்து சுயராஜ்யம் (அல்லது ஹோம்ரூலைப்) பற்றி மிஸ்டர் மார்லிக்கும் இந்தியாவுக்கு[இந்தியத்தாய்]மிடை ஓர் சம்பாஷணையை விவரிக்கத் தொடங்கினார்..”(வி. சக்கரை செட்டியார், ராஜீய வாழ்வு, 1.3.1922ஆம் நாள் எழுதிய முன்னுரையின் தமிழாக்கம்.) அந்த உரையாடலில் இந்தியத்தாய் கம்பீரமாகவும் அழுத்தமாகவும் மார்லிக்கு, அவரிடத்திருந்தும் அவர்தம் தாய்த்தேசமான இங்கிலாந்திடமிருந்துமே தான் கற்றுக்கொண்டுவிட்ட தனிப்பட்ட சுதந்திரத்தையும்(Freedom of Person) வாக்குச் சுதந்திரத்தையும் உபதேசம் செய்கிறாள். பாரதியார் பதிப்புகளில் ‘கோக்கலே சாமியார் பாடல்’ என்ற தலைப்பில் வரும் இப்பாடலின் தலைப்புக்குக்கீழ், “[இராமலிங்க சுவாமிகள் ‘களக்கமறப் பொதுநடனங் கண்டுகொண்ட தருணம்’ என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது]” என்ற குறிப்புள்ளது. இந்தக் குறிப்பை முதன்முதலில் அங்கு இட்டவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. கட்டாயம், பாரதியாராக இருக்க முடியாது. [‘திரித்து’ என்பதை இங்கே மேற்கோளில் தடித்த எழுத்துகளில், வாசிப்பவர்களுக்குக் கூர்ப்பாகத் தெரியும் பொருட்டாக இக்கட்டுரையாளனே இட்டுள்ளேன்.] ‘திரித்து’ என்ற சொல், மாறுபாடான பொருளைத் தந்துவிடக் கூடியது. ஆனால், இந்த ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மரபுக்கவிதை யாப்பியல்; மரபும் நெகிழ்வும்’ என்ற ஆய்வுப் புத்தகத்தில், இரா. சம்பத் கூறுவதாவது: “வடலூர் இராமலிங்க அடிகளின் திருவருட்பாவில் ‘களக்கமறப் பொதுநடம் நான் கண்டுகொண்ட தருணம்’ எனவரும் பாடலின் சாயலை இப்பாடலில் காணலாம்’ (பக்கம் 104) இந்த அளவுக்கு பாரதியாரின் சிந்தையைக் கவர்ந்து ஓர் அழுத்தமான சாயலை விதைத்த வடலூர் இராமலிங்க அடிகளின் பாடல் இதோ: “களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பியுதிர்ந் திடுமோ வெம்பாது பழுக்கினுமென் கரத்திலகப் படுமோ கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ குரங்குகவ ராதெனது குறிப்பிலகப் படினும் துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ ஜோதிதிரு உளமெதுவோ ஏதுமறிந் திலனே.