18.7.08

ஆங்கில வழிக் கல்வியால் விளையும் தீங்குகள் - ம.இலெ. தங்கப்பா

தாய்மொழியே கல்விமொழியாக இருப்பதுதான் இயல்பானது. ஆங்கில வழிக் கல்வி இந்த இயல்புநிலையைச் சீர்குலைக்கின்றது. கல்வியைச் செயற்கையாக்குகின்றது. தங்கள் சொந்தமொழியின் வாயிலாகக் கல்வி கற்பது மக்கள் உரிமை. மக்களாட்சி உரிமை. மண்ணின் மக்கள் கல்வி கற்கத் தாய்மொழியை விட்டுவிட்டு வேறொரு மொழியைத் தேடிப்போக வேண்டுமென்பது அடிமைத்தனத்தை மக்கள் மேல் புகுத்துவதாகும். மழலை வகுப்புகளிலேயே புகுத்தப்படும் ஆங்கில வழிக் கல்வி குழந்தைகள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகின்றது. கல்வியைக் கடுமைப்படுத்திக் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கெடுக்கின்றது. நேரத்தை விழுங்குகின்றது. நாள்தோறும் பேசிப் பழகும் வீட்டுமொழியாகிய தமிழில் கற்பது எளிது; இன்பம் தருவது. ஆங்கில வழிக் கல்வியோ தமிழ்க் குழந்தைகட்கு மிகமிகக் கடினமானதும், சோர்வூட்டுவதுமாக இருக்கின்றது. தமிழில் பத்தே மணித்துளியில் படிக்கக்கூடிய வரலாற்றுப் பாடத்தைக் கூடக் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிக்க ஒரு மணி நேரம் ஆகின்றது. ஆங்கில வழிக் கல்வி சொந்தப் புரிந்து கொள்ளுதலுக்கு இடமில்லாத குருட்டுப் படிப்பாக இருக்கின்றது. எண்ணத்தைத் தூண்டாமல் மூளையை மழுங்கடிக்கின்றது. வட்டரங்கு(circus) விளையாட்டுகட்காகக் குரங்கையும் நாய்களையும் பழக்குவதுபோலவே ஆங்கில வழிக் கல்வி குழந்தைகளைப் பழக்குகின்றது. குருட்டுத்தனமாய்ப் பாடங்களைத் திணிக்கின்றது. எண்ணும் திறனை அழிக்கின்றது. குழந்தைகளின் ஆங்கிலத் திறமை வெறும் வட்டரங்குத் திறமையே. ஆங்கில வழிக் கல்வி சொந்தப் பண்பாட்டிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்கின்றது. தன் மொழி, இனம், பண்பாடு எதிலும் பற்றில்லாதவர்களாக அவர்களை வளர்த்து வெறும் பொருளீட்டிகளாக ஆக்குகின்றது. ஆங்கில வழிக் கல்விக்கு ஏற்பட்டுள்ள போலி மதிப்பினாலும் பள்ளியில் தாய்மொழியாகிய தமிழ் ஒரே ஒரு பாடமாக மட்டும் கற்பிக்கப் படுவதாலும், தமிழை அவர்கள் தாழ்வாக நினைக்கின்றனர். தமிழ்வழிக் கல்வி மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. தமிழ் சொந்த மக்களாலேயே இழிவு படுத்தப் படுகின்றது. வேலை வாய்ப்பை முன்னிறுத்தியே ஆங்கில வழிக் கல்வி அமைந்திருப்பதால் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் வேலை பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்த கூலிகளாகவே உருவாகின்றனர். ஆங்கில வழிக் கல்வியாளர் எல்லாருமே அடிமை உள்ளத்தினராக இருப்பதால் கல்வியின் விரிந்த நோக்கங்களும் உயர்ந்த குறிக்கோள்களும் கைவிடப்பட்டு வேலை பார்க்கவே கல்வி என்று குறுகிப் போனமையால் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் நல்லியல்புகளும், மாந்தப் பண்பும், மக்கள் நேயமும் இல்லாத, அருவருக்கத்தக்க வறட்டு மாந்தராக நிற்பதையே இன்றைய படித்தவர் நடுவில் கண்கூடாகக் காண்கிறோம். தன்னலம் பிடித்த உலகியலாளராய் வாழும் இவர்கள் நாட்டுக்கோ மக்களுக்கோ சிறிது கூடப் பயன்படுவதில்லை. பயன்படும் எந்த ஆக்கப் பணியையும் இவர்கள் செய்வதில்லை. ஆங்கில வழிக் கல்வி, பள்ளிகளையும், பள்ளிக் கல்வியையும் மட்டுமல்ல நாட்டின் கல்விச் சூழல் முழுமையையுமே ஆங்கில வண்ணமாய் ஆக்கி வைத்துள்ளது. எல்லா அறிவியல் நூல்களும் ஆங்கிலத்திலேயே அமைகின்றன. தாய்மொழி மட்டுமே படித்தவர்கட்கு அறிவுலகிற் புகும் வாய்ப்பு முற்றுமாய் அடைக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கிய நூல்களைத் தவிரப் பிற துறை நூல்கள் அனைத்துமே ஆங்கிலமாயிருப்பதால் தமிழ் படித்தவர்கள் வேறு எந்தத் துறையிலும் அறிவு பெறாதவர்களாய் நின்று போகின்றனர். எந்த அறிவையும் சொந்த மொழியில் பெறும் வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுவதைப்போல் உலகப் பெருந் தீமை வேறில்லை; இல்லை; இல்லை. தாய்மொழியே கல்வி மொழியானால், பாடநூல்கள் மட்டுமல்ல, எல்லாப் பொதுவான அறிவுநூல்களும் அறிவியல் நூல்களும் ஆய்வு நூல்களும் தமிழிலேயே கிடைக்கும். நூலகங்கள் யாவிலும் தமிழில் அறிவியல் பல்துறை நூல்கள் நிரம்பும். ஏழாம் எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட ஒரு சிறுவன்கூட நூலகங்களில் சென்று எத்துறை நூலையும் தன் தாய்மொழியாகிய தமிழில் பயின்று மேற்சென்று உலக அறிஞனாக விளங்க முடியும். ஆங்கில வழிக் கல்வி இவ் வாய்ப்பை முற்றும் மறுக்கின்றது. கல்வி நிலையங்களில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பதால் தமிழர் அல்லாத வேறு மொழியினரும், அயல் மாநிலத்தினரும் தமிழ் நிலங்களில் புகுந்து கல்வி வாய்ப்பும் அதன் வழி வேலை வாய்ப்பும் பெறுகின்றனர். தமிழ் இளைஞர்களின் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் இவர்களால் பறித்துக் கொள்ளப்படுகின்றன. ஆங்கில வழிக் கல்வியின் மிகக் கொடிய தீய விளைவுதான் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருப்பதுமாகும். ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருப்பதால் தமிழறியாதவரும் தமிழரல்லாதவருமான எவரும் அலுவலகங்களில் நுழைந்து தமிழ் இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக் கொள்ள முடிகின்றது. இப்படி உள்ளே நுழைந்த தமிழரல்லாதவர்களே மேல் அதிகாரிகளாகித் தமிழ் வழிக் கல்வியை முற்றும் மறுக்கின்றனர்! மக்களுடன் ஒட்டுறவு அற்ற வேற்றவர்களான இவர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமலேயே காலத்தை ஓட்டி விடுகின்றனர். தமிழ் வழிக் கல்விக்கு முட்டுக்கட்டையிடுபவர்களும் இவர்களே. ஆங்கில வழிக் கல்வி எண்ணும் ஆற்றலை அழித்து ஒழித்துப் படித்தவர்களின் மூளையை மழுங்கச் செய்து அவர்களின் அறிவைக் கெடுத்துவிட்டது என்பதற்கு நடைமுறைச் சான்றாக விளங்குபவர்கள் இன்றைய ஆட்சியாளரும், கல்வியாளரும், கல்வித் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களுமே. தாய்மொழி வழிக் கல்வி என்பது உலகமுழுவதும் ஒப்புக் கொண்டுள்ள ஒரு சீரிய கொள்கை. காந்தியடிகள், தாகூர் போன்ற பேரறிஞர்கள் தாய்மொழிக் கல்வியையே வற்புறுத்தினர். இன்று தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழ் நாட்டிலும் புதுவை மாநிலத்திலும் தவிரப் பிற மாநிலங்களிலெல்லாம் அவரவர் தாய்மொழிக் கல்வியே நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இங்குப் பணிபுரிய வந்துள்ள வடநாட்டு அதிகாரிகள் சிலர் கூடத் தமிழ் வழிக் கல்வியை வற்புறுத்துகின்றனர்! ஆனால் மேற்கூறிய தமிழ்நாட்டு முட்டுக்கட்டைகள்தாம் தாய்மொழிவழிக் கல்விக்கு எதிர்ப்பாக இருந்து வருகின்றனர். ஆங்கில வழிக் கல்வியே நம்மை முன்னேற்றும் என்கின்றனர். சொந்த மக்களின் உரிமைகளையும் வாய்ப்புகளையும் மறுத்துப் புறந்தள்ளும் அயல் மொழி வழிக் கல்வி எப்படி அவர்களின் உண்மை முன்னேற்றத்துக்குத் துணைபுரிய முடியும்? மக்களின் உரிமைகளையும், விடுதலை உணர்வையும், சொந்தப் பண்பாட்டையும், அடையாளங்களையும், அறிவையும், எண்ணும் ஆற்றலையும் அழிப்பதைப் போன்ற மிகப்பெருந்தீமை வேறு இருக்க முடியுமா? ஆங்கில வழிக் கல்விதான் இதனைச் செய்கின்றது. இதைத் தீமை என்று உணராமல் - இது நம்மைப் பின்னோக்கி இட்டுச் செல்கிறது என்று தெரியாமல், ஆங்கிலவழிக் கல்வி நம்மை முன்னேற்றும் என்று மிக அறியாமையோடு மேற்கூறியவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனரே, இத்தகைய பேரவல நிலையை விளைவித்திருப்பது எது? ஆங்கில வழிக் கல்வியே என்பதை எவரேனும் மறுக்க முடியுமா? ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட்

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழி மீள்வது எவ்வாறு? --தேவமைந்தன்

புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆய்வியல் நிறுவன நூலகத்தில் ‘அம்ருதா’ என்ற திங்களிதழைப் பார்க்க வாய்த்தது. அதில், தோப்பில் முகம்மது மீரான் எழுதியிருந்த “21ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மொழிகளில் குறிப்பாகத் தமிழ் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற கட்டுரை[சூன் 2008; பக்.17-20] என் கருத்தைக் கவர்ந்தது. உலகமயமாதலால் தமிழ்மொழி அடைந்துவரும் எதிர்நிலை விளைவும் நாடு, நகரங்களை மட்டுமல்லாமல் தீவுகளைக் கூட அது விட்டு வைக்காமையும் விரிவாக அதில் விளக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இலட்சத் தீவில் உள்ள மொழிநிலை அதில் மிகுந்த இடம் பெற்றிருந்தது. இலட்சத் தீவில் ‘ஜெசரி மொழி’ பேசப்படுகிறது. இது முற்றிலும் பேச்சுமொழி. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகியவற்றின் கலப்புமொழி இது. பேசும்பொழுது மட்டுமே இதை இலட்சத் தீவு மக்கள் பயன்படுத்துகின்றனர். எழுதவேண்டும் என்று வரும்பொழுது, மலையாள மொழியைத்தான் அந்த மக்கள் பயன்படுத்துகின்றார்கள். உலகமயமாதலின் விளைவாக இலட்சத் தீவுக்குள் ஆங்கிலம் முதன்மையிடம் பெற்று, ஆங்கிலமொழிவழிக் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தம் மக்களைப் பெற்றோர் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழைப் பழைய மொழி என்று அங்கு மதித்த நிலை மாறியுள்ளதுடன் மலையாளத்தையும் ஆகக் கலப்பாக எழுதத் தொடங்கி விட்டார்கள் இலட்சத் தீவு மக்கள். “ஏன் தூய மலையாளத்தில் நீங்களெழுதக் கூடாது?” என்று தோப்பில் முகம்மது மீரான் கேட்டிருக்கிறார். “இலக்கியம் வாயிலாக அல்லாமல் எங்கள் மொழியைக் காப்பாற்றுவது எப்படி?” என்று அவர்கள் எதிர்வினா எழுப்பியிருக்கிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டிய முகமையான செய்தி என்னவென்றால், ஏற்கெனவே தீவுகளின் கலப்புப் பேச்சு மொழியில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் உலகமயமாதலின் முடுக்கத்தால் இன்னல் நேர்ந்திருக்கிறது என்பதே. மொரீசியசு, ரெவ்யூனியன் முதலான தீவுகளின் பேச்சுமொழியிலும் கூட பிரெஞ்சு மொழிதான் தலைமை செலுத்தி வருவதை நாம் அறிவோம். ஆங்கில மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலைப்படும் நம்மவர்கள் பலர், பிரெஞ்சு மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலையே படுவதில்லை. தமிழ் மேல் எந்த மொழி ஏறி அமர முயன்றாலும் விழிப்புடன் எதிர்ப்பதும் அந்தத் தாக்குதலை முறியடிப்பதும்தானே தமிழரின் கடமைகளாக இருக்க வேண்டும்? திராவிட இயக்கங்கள் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை வளர்க்கின்றன என்று குணா சொன்னபொழுதும் எழுதிய பொழுதும் திராவிட இயக்கங்களின் மேல் கொண்ட பற்றால் அவரை எதிர்த்தோம். ஆனால் அவர் சொன்னது இன்று பேருரு எடுத்திருப்பதைத்தானே பார்க்கிறோம். ஆங்கிலத்தை முனைந்து பரப்புபவர்களும் திராவிட இயக்கங்களின் நெருங்கிய நட்பில் திளைப்பவர்களுமான ஊடக முதன்மையர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ‘அறிவுக்கனியைத் தொடுவானேன்?’ என்ற ஆய்வுநூலை குணா அண்மையில் படைத்திருக்கிறார். தமிழர்களிடையே இப்பொழுது உலகமயமாதலின் முதன்மைக்கூறுகளுள் முதன்மையான ‘வணிக மனப்போக்கு’ ஓங்கியுள்ளது. ஒருவர் தமிழரா, தமிழறிஞரா என்பதைவிட - “அவரால் எனக்கு என்ன ஆதாயம்?” என்ற மனக் கணக்கே விஞ்சியுள்ளது. யாருடன் பழகினால் என்பது அன்று... யாருடன் பேசினால் தனக்கு ஆக்கம் அதிகம் வரும் என்ற அளவுக்கு இன்று போயிருக்கிறார்கள் தமிழர்கள். தங்களுக்குப் பொருள் அடிப்படையில் பயன்படாதவர்களை ‘வீண்’ என்று தமிழில் சொல்லவும் விரும்பாமல் ‘வேஸ்ட்’ என்கிறார்கள் ஆங்கிலத்தில். உலகமயமாதல், சிறுவணிகர்களை அழிப்பதுடன் மட்டும் நின்று விடாது. ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிடும் - என்று சுருக்கமாக இதைச் சொல்லலாம். இன்றைய நிலையில் தமிழ் பேசும் தமிழர் என்பவர்களே உலக மக்கள்தொகை அளவில் அருகி வருகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. “உங்கள் தமிழில் அயன்மொழிச்சொற்கள் பல கலந்திருக்கின்றன. என்னுடன் பேசுவதானால் நீங்கள் தனித்தமிழில்தான் உரையாட வேண்டும்!” என்று சொன்னால், பேரினக் கோட்பாட்டினருக்குத்தான் அது ஆக்கமாய் முடியும். இன்றைய உலகில் பல நாடுகளில் தமிழ் குறித்துப் பிறமொழியினர் சிந்திக்குமாறு செய்துள்ள ஈழத்தமிழரின் மொழிநடையைக் கவனித்தோமானால் இது புரியும். எழுத்தாலும் பேச்சாலும் எவ்வகையாலும் தமிழர் தம்முள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வைத் தோற்றுவிக்க எண்ணவும் கூடாது. பழைய போக்கைத் தொடர்வோமானால், ‘புதிய பூத’மான உலகமயமாதல், அதையும் தனக்கு ஆக்கமாக வளைத்துக் கொள்ளும். இன்னொன்றைக் கூட நீங்கள் கவனிக்கலாம். இப்பொழுதெல்லாம் மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் பற்றி நிறைய எழுதவும் பேசவும் படுகின்றன. நான் எழுதிய ‘மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா’ போன்றன்று; வேறுவகைகளில். “தமிழ்ப் புலவர், தமிழ்ப் பேராசிரியர் என்றால் மற்றவர் படைப்புகளில் உள்ள பிழைகளைச் சுட்டுபவர்கள்; தாமே சொந்தமாகப் படைப்புகளை உருவாக்கத் தெரியாதவர்கள்” என்ற கருத்து பிரான்சு முதலான தமிழர் மிகுந்து வாழும் நாடுகளில் உலவுகிறது. புலவர்கள், பேராசிரியர்கள் அல்லாதவர்களும் அந்த முன்னொட்டுகளைப் பொருத்திக் கொள்வதும் அந்நாடுகளில் இயல்பாகியுள்ளது. “பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் இலக்கியங்களைப் பெயர்ப்பவர்கள்தாம் தகுதியுள்ளவர்கள்; தமிழுக்கு ஆக்கம் தருபவர்கள்” என்ற கருத்து அங்கும் இங்கும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சுக்காரர், பிரெஞ்சில் தன் ஆக்கங்களைப் படைக்கின்றனர்; ஆங்கிலேயர் முதலானவர்களும் அவ்வாறே. தமிழில் தம் ஆக்கங்களைப் படைப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள்தாமே? பிரெஞ்சுக்காரர் எவராவது, “தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பவர்கள்தாம், பிரெஞ்சில் புலமையுள்ளவர்களை விட உயர்ந்தவர்கள்” என்று பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் ஆண்டவர்கள். இவர்கள் ஆளப்பட்டவர்கள். இப்பொழுதும் அந்த நாடுகளில் ஈழத்தமிழர் போலல்லாமல், அடிமையுணர்ச்சியுடன் ‘விளங்கு’பவர்கள். உலகமயமாதல், குடியேற்ற உணர்ச்சியை(காலனியாதிக்கத்திலிருந்தவர்களின் உணர்ச்சியை) ஊக்குவிக்கிறது. இதுபோலும் அயன்மைகள்தாம் அது தரும் அடிமை ஊழியத்தைத் திறம்படச் செய்ய முடியும். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகத் தமிழ்வழிக் கல்வி, தமிழில் நன்றாகப் பேசும் திறம் - இவைதாமே இருக்க வேண்டும்? கணிப்பொறி நிறுவனங்களிலும், கணினிமுறைசார் வணிக நிறுவனங்களிலும் கேட்டுப் பாருங்கள். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகப் பிரெஞ்சில்/செர்மனியில்/சுபேனியத்தில் நன்றாகப் பேசும் திறத்தை அவர்கள் முன்வைப்பார்கள். இந்த மொழிகள்தாம் இப்பொழுது உலகமயமாதல் என்ற ஆசிரியர்முன் தம்முள் யார் சிறந்த மாணவர் என்று போட்டி போடுகின்றன. ‘சட்டாம்பிள்ளை’யாகவும் முந்திச் செல்லும் குதிரையாகவும் ஆங்கிலமே இன்றுமிருப்பதைப் பார்க்க முடிகிறது. உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழியை மீட்பது, ஒவ்வொரு தமிழருக்கும் கடமை மட்டுமன்று; உரிமையுமாகும். அதற்கு ஒரே வழி, தம்முள் பலவகைகளில் மேற்கொண்டு வரும் குழு - உட்குழுப் பூசல் மனப்பான்மையைப் போக்கிக் கொண்டு, அல்லது தற்காலத்துக்கேனும் சற்று விட்டுக் கொடுத்து, உலகமயமாதலின் போக்குக்கேற்பத் தமிழ்வழிக் கல்வியை உடனடியாக எல்லாத் துறைகளுக்கும் கொண்டுவர வேண்டும். அதற்கு ஒத்துவராத கட்சிகளைத் தேர்தலின் பொழுது பின்னிறுத்த வேண்டும். ஏதேதோ விளக்கங்களை முன்வைக்கும் அரசியல்வாணருடன் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல், “முதலில் தமிழை முழுமையான கல்விமொழியாக்குங்கள்! பிறகு மற்றவற்றைப் பேசுங்கள்!” என்று வலியுறுத்தும் மனநிலையைத் தமிழர் வளர்த்துக்கொள்ள வேண்டும். “கோடி கோடியாக எதெதெற்கோ செலவிடுகிறீர்களே! ஆட்களைக் கூட்டுகிறீர்களே! தமிழ்வழிக் கல்விக்கென்று மாநாடு நடத்துங்கள்! தனிமாந்த விளம்பரம் விடுத்து, தமிழ்வழிக் கல்விக்கு உங்கள் தொலைக்காட்சி வரிசைகளின் பரப்புரைகளைத் திருப்புங்கள்!” என்று தமிழர் ஒவ்வொருவரும் அவர்களிடம் வலியுறுத்த வேண்டும். அப்பொழுதுதான் உலகமயமாதலின் தாக்கத்தினூடும் தமிழ் தழைக்கும். ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட்