18.7.08

ஆங்கில வழிக் கல்வியால் விளையும் தீங்குகள் - ம.இலெ. தங்கப்பா

தாய்மொழியே கல்விமொழியாக இருப்பதுதான் இயல்பானது. ஆங்கில வழிக் கல்வி இந்த இயல்புநிலையைச் சீர்குலைக்கின்றது. கல்வியைச் செயற்கையாக்குகின்றது. தங்கள் சொந்தமொழியின் வாயிலாகக் கல்வி கற்பது மக்கள் உரிமை. மக்களாட்சி உரிமை. மண்ணின் மக்கள் கல்வி கற்கத் தாய்மொழியை விட்டுவிட்டு வேறொரு மொழியைத் தேடிப்போக வேண்டுமென்பது அடிமைத்தனத்தை மக்கள் மேல் புகுத்துவதாகும். மழலை வகுப்புகளிலேயே புகுத்தப்படும் ஆங்கில வழிக் கல்வி குழந்தைகள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுகின்றது. கல்வியைக் கடுமைப்படுத்திக் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கெடுக்கின்றது. நேரத்தை விழுங்குகின்றது. நாள்தோறும் பேசிப் பழகும் வீட்டுமொழியாகிய தமிழில் கற்பது எளிது; இன்பம் தருவது. ஆங்கில வழிக் கல்வியோ தமிழ்க் குழந்தைகட்கு மிகமிகக் கடினமானதும், சோர்வூட்டுவதுமாக இருக்கின்றது. தமிழில் பத்தே மணித்துளியில் படிக்கக்கூடிய வரலாற்றுப் பாடத்தைக் கூடக் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிக்க ஒரு மணி நேரம் ஆகின்றது. ஆங்கில வழிக் கல்வி சொந்தப் புரிந்து கொள்ளுதலுக்கு இடமில்லாத குருட்டுப் படிப்பாக இருக்கின்றது. எண்ணத்தைத் தூண்டாமல் மூளையை மழுங்கடிக்கின்றது. வட்டரங்கு(circus) விளையாட்டுகட்காகக் குரங்கையும் நாய்களையும் பழக்குவதுபோலவே ஆங்கில வழிக் கல்வி குழந்தைகளைப் பழக்குகின்றது. குருட்டுத்தனமாய்ப் பாடங்களைத் திணிக்கின்றது. எண்ணும் திறனை அழிக்கின்றது. குழந்தைகளின் ஆங்கிலத் திறமை வெறும் வட்டரங்குத் திறமையே. ஆங்கில வழிக் கல்வி சொந்தப் பண்பாட்டிலிருந்து குழந்தைகளை விலக்கி வைக்கின்றது. தன் மொழி, இனம், பண்பாடு எதிலும் பற்றில்லாதவர்களாக அவர்களை வளர்த்து வெறும் பொருளீட்டிகளாக ஆக்குகின்றது. ஆங்கில வழிக் கல்விக்கு ஏற்பட்டுள்ள போலி மதிப்பினாலும் பள்ளியில் தாய்மொழியாகிய தமிழ் ஒரே ஒரு பாடமாக மட்டும் கற்பிக்கப் படுவதாலும், தமிழை அவர்கள் தாழ்வாக நினைக்கின்றனர். தமிழ்வழிக் கல்வி மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. தமிழ் சொந்த மக்களாலேயே இழிவு படுத்தப் படுகின்றது. வேலை வாய்ப்பை முன்னிறுத்தியே ஆங்கில வழிக் கல்வி அமைந்திருப்பதால் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் வேலை பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்த கூலிகளாகவே உருவாகின்றனர். ஆங்கில வழிக் கல்வியாளர் எல்லாருமே அடிமை உள்ளத்தினராக இருப்பதால் கல்வியின் விரிந்த நோக்கங்களும் உயர்ந்த குறிக்கோள்களும் கைவிடப்பட்டு வேலை பார்க்கவே கல்வி என்று குறுகிப் போனமையால் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் நல்லியல்புகளும், மாந்தப் பண்பும், மக்கள் நேயமும் இல்லாத, அருவருக்கத்தக்க வறட்டு மாந்தராக நிற்பதையே இன்றைய படித்தவர் நடுவில் கண்கூடாகக் காண்கிறோம். தன்னலம் பிடித்த உலகியலாளராய் வாழும் இவர்கள் நாட்டுக்கோ மக்களுக்கோ சிறிது கூடப் பயன்படுவதில்லை. பயன்படும் எந்த ஆக்கப் பணியையும் இவர்கள் செய்வதில்லை. ஆங்கில வழிக் கல்வி, பள்ளிகளையும், பள்ளிக் கல்வியையும் மட்டுமல்ல நாட்டின் கல்விச் சூழல் முழுமையையுமே ஆங்கில வண்ணமாய் ஆக்கி வைத்துள்ளது. எல்லா அறிவியல் நூல்களும் ஆங்கிலத்திலேயே அமைகின்றன. தாய்மொழி மட்டுமே படித்தவர்கட்கு அறிவுலகிற் புகும் வாய்ப்பு முற்றுமாய் அடைக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கிய நூல்களைத் தவிரப் பிற துறை நூல்கள் அனைத்துமே ஆங்கிலமாயிருப்பதால் தமிழ் படித்தவர்கள் வேறு எந்தத் துறையிலும் அறிவு பெறாதவர்களாய் நின்று போகின்றனர். எந்த அறிவையும் சொந்த மொழியில் பெறும் வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுவதைப்போல் உலகப் பெருந் தீமை வேறில்லை; இல்லை; இல்லை. தாய்மொழியே கல்வி மொழியானால், பாடநூல்கள் மட்டுமல்ல, எல்லாப் பொதுவான அறிவுநூல்களும் அறிவியல் நூல்களும் ஆய்வு நூல்களும் தமிழிலேயே கிடைக்கும். நூலகங்கள் யாவிலும் தமிழில் அறிவியல் பல்துறை நூல்கள் நிரம்பும். ஏழாம் எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட ஒரு சிறுவன்கூட நூலகங்களில் சென்று எத்துறை நூலையும் தன் தாய்மொழியாகிய தமிழில் பயின்று மேற்சென்று உலக அறிஞனாக விளங்க முடியும். ஆங்கில வழிக் கல்வி இவ் வாய்ப்பை முற்றும் மறுக்கின்றது. கல்வி நிலையங்களில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பதால் தமிழர் அல்லாத வேறு மொழியினரும், அயல் மாநிலத்தினரும் தமிழ் நிலங்களில் புகுந்து கல்வி வாய்ப்பும் அதன் வழி வேலை வாய்ப்பும் பெறுகின்றனர். தமிழ் இளைஞர்களின் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் இவர்களால் பறித்துக் கொள்ளப்படுகின்றன. ஆங்கில வழிக் கல்வியின் மிகக் கொடிய தீய விளைவுதான் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருப்பதுமாகும். ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருப்பதால் தமிழறியாதவரும் தமிழரல்லாதவருமான எவரும் அலுவலகங்களில் நுழைந்து தமிழ் இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக் கொள்ள முடிகின்றது. இப்படி உள்ளே நுழைந்த தமிழரல்லாதவர்களே மேல் அதிகாரிகளாகித் தமிழ் வழிக் கல்வியை முற்றும் மறுக்கின்றனர்! மக்களுடன் ஒட்டுறவு அற்ற வேற்றவர்களான இவர்கள் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமலேயே காலத்தை ஓட்டி விடுகின்றனர். தமிழ் வழிக் கல்விக்கு முட்டுக்கட்டையிடுபவர்களும் இவர்களே. ஆங்கில வழிக் கல்வி எண்ணும் ஆற்றலை அழித்து ஒழித்துப் படித்தவர்களின் மூளையை மழுங்கச் செய்து அவர்களின் அறிவைக் கெடுத்துவிட்டது என்பதற்கு நடைமுறைச் சான்றாக விளங்குபவர்கள் இன்றைய ஆட்சியாளரும், கல்வியாளரும், கல்வித் துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களுமே. தாய்மொழி வழிக் கல்வி என்பது உலகமுழுவதும் ஒப்புக் கொண்டுள்ள ஒரு சீரிய கொள்கை. காந்தியடிகள், தாகூர் போன்ற பேரறிஞர்கள் தாய்மொழிக் கல்வியையே வற்புறுத்தினர். இன்று தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழ் நாட்டிலும் புதுவை மாநிலத்திலும் தவிரப் பிற மாநிலங்களிலெல்லாம் அவரவர் தாய்மொழிக் கல்வியே நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இங்குப் பணிபுரிய வந்துள்ள வடநாட்டு அதிகாரிகள் சிலர் கூடத் தமிழ் வழிக் கல்வியை வற்புறுத்துகின்றனர்! ஆனால் மேற்கூறிய தமிழ்நாட்டு முட்டுக்கட்டைகள்தாம் தாய்மொழிவழிக் கல்விக்கு எதிர்ப்பாக இருந்து வருகின்றனர். ஆங்கில வழிக் கல்வியே நம்மை முன்னேற்றும் என்கின்றனர். சொந்த மக்களின் உரிமைகளையும் வாய்ப்புகளையும் மறுத்துப் புறந்தள்ளும் அயல் மொழி வழிக் கல்வி எப்படி அவர்களின் உண்மை முன்னேற்றத்துக்குத் துணைபுரிய முடியும்? மக்களின் உரிமைகளையும், விடுதலை உணர்வையும், சொந்தப் பண்பாட்டையும், அடையாளங்களையும், அறிவையும், எண்ணும் ஆற்றலையும் அழிப்பதைப் போன்ற மிகப்பெருந்தீமை வேறு இருக்க முடியுமா? ஆங்கில வழிக் கல்விதான் இதனைச் செய்கின்றது. இதைத் தீமை என்று உணராமல் - இது நம்மைப் பின்னோக்கி இட்டுச் செல்கிறது என்று தெரியாமல், ஆங்கிலவழிக் கல்வி நம்மை முன்னேற்றும் என்று மிக அறியாமையோடு மேற்கூறியவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனரே, இத்தகைய பேரவல நிலையை விளைவித்திருப்பது எது? ஆங்கில வழிக் கல்வியே என்பதை எவரேனும் மறுக்க முடியுமா? ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட்

1 comment:

Kannan said...

அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள்.