30.8.08

எப்பொழுதுமே தமிழராக இருக்கக் கூடாதா? - தேவமைந்தன் உலகத் தமிழர் நல வாழ்வுக்காக ஆதரவு தேடி, பல இடங்களுக்கும் சென்று வந்தனர் சிலர். போகிற போக்கில் கல்லூரி ஒன்றைக் கண்டு, உள்ளே நுழைந்து முதல்வரின் இசைவு பெற்று முதலாவதாக அவர் அறைக்கு அருகில் இருந்த துறையொன்றுக்குள் நுழைந்தனர். அது அறிவியல் துறை. துறைத் தலைவராக வீற்றிருந்தவரிடத்தில் சென்று, தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தனர். விழிகளில் வியப்புப் பொங்க, புருவங்களை நெறித்தவாறு அவர் சொன்னார்: "நீங்க தப்பா இங்க நுழைஞ்சிட்டேங்க.. இது தமிழ் டிபார்ட்மெண்ட் இல்லே.. சயின்ஸ்..." போனவர்களுக்கோ அதிர்ச்சி. "ஐயா! நாங்கள் தமிழர்கள் நலவாழ்வு தொடர்பாக ஆதரவு தேடி வந்தோம்..இதில் துறை வேறுபாடு கிடையாது... இதோ பாருங்கள்..எங்களுக்குள் மருத்துவர் உள்ளார்..பொறியியல் வல்லுநர் உள்ளார்..தமிழர்தாமே நாமெல்லாரும்.." என்று அவர்களுள் மூத்தவர் சொன்னார். பிறகு அங்கு என்ன உரையாடல்கள் நடைபெற்றன என்பதை இங்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை. என் பெயர்ப்பலகையைக் கண்டு இளைஞர் இருவர் உரக்கச் சொன்னார்கள்: "சார் தமிழ் வாத்தியார். அதுதான் தமிழ் போர்டு மாட்டியிருக்கிறார்!" ஆக, தமிழில் பெயர்ப்பலகை இருந்தால் தமிழாசிரியர்; தமிழெண் உந்தில் இருந்தால், தமிழ் தொடர்பானவர்; தமிழைக் குறித்து அக்கறையாகப் பேசினால் தமிழால் பிழைப்பவர்; தூயதமிழ் குறித்து வலியுறுத்தினால் பா.ம.க. அல்லது 'மக்கள் தொலைக்காட்சி ' தொடர்பானவர்..... அறுபதாண்டுகளுக்கு முன் எவராவது 'வணக்கம்' என்று சொன்னால், "என்னடா! நீ தீனா மூனா கானா'வா?" என்று கேட்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? காலம் இங்குமட்டும் உறைந்து போனதா? தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பங்குச் சந்தை குறித்து இல்லத்தரசிகளும் அறிந்து கொள்ள 'ஹலோ சந்தை.' 'பரஸ்பர நிதியம்' குறித்து ஓர் ஐயத்தை வல்லுநர் விளக்குகிறார். பக்கத்தில் இருந்த விருந்தாளி கேட்கிறார்: "பரஸ்பர நிதியம் என்று தமிழில் சொல்லுகிறாரே.. அது 'ம்யூச்சுவல் ஃபண்ட்' தானே?" அது தமிழ் அன்று என்று சொல்லுவதைக் கவனிக்காமல், தொ.கா. பெட்டியையே பார்க்கிறார். "அப்ப வரட்டுமா?".. 'சட்'டென்று புறப்பட்டுப் போய்விடுகிறார். "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கும் ஒரு கொடுமை வந்து தலைவிரித்தாடுகிறதாம்!" என்று மக்கள் சொல்வார்கள். கோவிலொன்றில் சிறுவன், தன் தங்கையைக் குறித்து தாயிடம் முறையிடுகிறான். "மம்மீ! இங்க பாருங்க! இந்தக் 'கேட்'டை செளம்யா புடிச்சி புடிச்சி இழுக்கிறா!" நான் தலையிடுகிறேன். "தம்பீ! அது 'கேட்' இல்லே.. பூனை.." அவன் சொல்கிறான்: "அங்கிள்! எங்க மிஸ் அதைக் 'கேட்'டுன்னுதான் சொல்லச் சொல்லியிருக்காங்க.. அவங்க 'ஃபர்ஸ்ட் தெளசண்ட் வொர்ட்ஸ்'ன்னு 'புக்' வச்சுக் காட்டிருக்காங்களே.." அவனாவது பேசினான். அவன் தாயோ என்னைப் பார்த்து முறைத்தார். அவர்களிருவரையும் பிடித்து இழுத்தவாறு அவ்விடத்தை விட்டே அகன்றார். இப்பொழுது சீனத்தில் நிகழும் உலக விளையாட்டுப் போட்டி குறித்து அங்குள்ள மூத்த மொழியியல் அறிஞர்(#) மொழிகிறார்: "எங்கள் நாட்டில் இப்போட்டி நடைபெறுவது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சிதான்; எங்கள் வீரர்கள் வெற்றிமேல் வெற்றி பெறுவது பற்றிப் பெருமிதம்தான்; ஆனால் இதைச் சாக்கிட்டு விளையாட்டு வகைப் பெயர்கள், உணவு வகைப்பெயர்கள் முதலியவை பல்லாயிரக்கணக்காக எங்கள் மொழியில் புகுகின்றனவே! இதை நினைத்தால் எனக்குக் கவலையே மேலிடுகிறது!" "நாம் தமிழர்!" என்னும் உணர்வு, எப்பொழுது நம்மவர்களுக்கு வரும்? அவர்கள் தொடர்ந்து பெற்று வரும் ஊதியத்தில், அதன் உயர்வில், பணியிடம் தொடர்பான மாற்றங்களில், அடைந்துவரும் ஏந்துகளில், ஊதிய உயர்வுப் பரிந்துரைகளில் வேற்று மொழிக்காரர்கள் கைவைத்தால் மட்டுமே வரும். எல்லாம் சரியானதும், வந்த விரைவில் போய்விடும். தன் பிள்ளை வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்திப் பேச வேண்டிய நிலைக்கு வருந்தாமல், படிக்கும் பள்ளிகளில் தமிழ்ச் சொற்களைப் பேசினால் தண்டம் கட்ட வேண்டி வருவதற்கும் அருவருப்படையாமல், அந்தப் பள்ளிகளுக்கு அளவுக்கு மிகுதியாகக் கல்விக்கட்டணத்தையும் - கட்டடங் கட்ட நன்கொடையையும் கடன்வாங்கியாவது தரவும் கவலைப்படாத பெற்றோர்களும்; இவைகுறித்து இரட்டை நடிப்பை இயல்பாகப் போட்டு அன்றாடம் நடிக்கும் அரசியல்வாணர்களும் இருக்கும் நாட்டில், நச்சுமரம் பழுத்ததுபோல் உலகமயமாதலும் முதிர்ந்து வரும்பொழுது, "நாம் தமிழர்!" என்ற உணர்வு தமிழர்க்கு ஒவ்வொரு நிமையமும் நீடிக்கப் பாடாற்ற வேண்டிய பங்களிப்பைச் சிறு - பெரு வணிகர்களும் தொழில் முனைவோர்களும் ஊடகம் நடத்துவோரும் தர முன்வந்தால்தான் தமிழுக்கு உரிய இடம் தமிழகத்தில் கிடைக்கும். அடிக்குறிப்பு: இத்தனைக்கும் சீனத்தின் வடக்கு - நடுவண் -மேலைச் சீனப்பகுதிகளில் பேசப்படும் 'மண்டாரின்' என்ற கிளைமொழியே சீன அரசின் ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒலிப்புமுறை இடத்துக்கு இடம் மாறுபடாதிருக்க, பீஜிங் மக்களின் ஒலிப்புமுறையை அடிப்படையாகக் கொண்டு 1956ஆம் ஆண்டில் 'பின்-யின்' என்ற ஒலிப்புமுறை உருவாக்கப்பெற்றது. நடைமுறை ஆய்வுகளின் பின்னர், இரண்டாண்டுகளுக்குப்பின் அது செயல்முறைக்கு வந்தது. இந்தப் பின்-யின் ஒலிப்புமுறையைக் கொண்ட சீனமொழி, உரோமன் எழுத்துமுறையை ஏற்றுக் கொண்டது. இதுவே இன்றைய சீனத்தின் கல்விமொழி; பன்னாட்டுத் தொடர்பு மொழியும் இதுவே. இம்மொழியையே - மூத்த அறிஞர் சுட்டுகிறார். நன்றி: தமிழ்க்காவல்.நெட் 17-8-2008.

12.8.08

துய்ப்பேம் எனினே தப்புந பலவே - வாழ்க்கை இதுதான்! - தேவமைந்தன்

‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என்றாராம் பாரதி. கணக்குப் பாடத்தில் மக்கு என்ற ‘பாராட்’டை ஆசிரியரிடம் வாங்கிய மாணவர், வாழ்க்கைப் பாடத்தில் வென்று விடக்கூடும். ஆம். வாழ்க்கை, நாம் விதிக்கும் எந்த விதமான நிபந்தனையையும் ஏற்றுக் கொள்வதில்லை. மெய்யாகப் பார்த்தால், அது எந்த விதமான நிபந்தனையையும் நம்மேல் விதிப்பதும் இல்லை. அடிமைப் புத்தியே நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும். விடுதலையான உள்ளம் எந்த நிபந்தனையை யார் விதித்தாலும் ஏற்காது. அன்பாகச் சொன்னால் மட்டுமே ஏற்கும். அன்புக்கு மாறானது வன்பு என்னும் ‘வம்பு.’ உலக அரசியலில், நாட்டு அரசியலில், அவையே போன்ற உலக - நாட்டு வணிகவியல்/சமூக இயல்களில், ஏன்.. வாழ்வியல் அன்றாடத்திலுங்கூட இன்றைய நாளில் முதன்மை இடம் தாங்குவது வன்பேதான். ‘எனக்கு எல்லாம் தெரியும்!’ என்ற இறுமாப்போடு அது உலகை வலம் வருகிறது. “அவர் வெறும் அரசு! நான் பெரிய பேரரசு!” என்பவருக்கு, அன்றன்று ஆட்சிப் பீடம்கூட ‘காலை வணக்கம்’ செலுத்துகிறது. ஆற்றல் மிக்க எளிமை, “வென்றவன் சொல்வதெல்லாம் வேதம்;அல்லாமல் என்ன?” என்ற கவியரசு கண்ணதாசன் வரியை முணுமுணுத்துக் கொள்கிறது. சங்க இலக்கியத்தில் சோழன் நல்லுருத்திரன் குறிப்பிட்ட ‘மெலிவு இல்லாத உள்ளம் உடைய உரனுடையாளர்’ (புறநானூறு 190) கேண்மையை விட, “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’(திருவருட்பா) உறவே நிகழ்வில் எங்கு பார்த்தாலும், சென்றாலும், பழகினாலும் மலிவாகக் கிடைக்கிறது. இந்தப் பொருளுக்கு மட்டுமே விலைவாசிப் புள்ளி - “வரலாறு காணாத விதத்தில்” - மிகவும் குறைந்து காணப்படுகிறது. ‘கச்சா எண்ணெ’யால் இதன் விலைப்புள்ளியை மட்டும் என்றும் ஏற்றிவிட முடியாது. ஒளவையார் பாடினாரே - நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே! என்ற பாட்டு...(புறநானூறு 187) அந்த அளவுகோலை வைத்து இன்று அளந்தால், ஐந்து கண்டங்களிலும் ஓர் ஊர் கூட எஞ்சாது. கொள்கைகள் தடம் புரண்டுவிட்ட காலம் இது. ஏழைகளுக்கும் தொழிலாளருக்கும் உதவுபவர்கள் ‘ஏ.சி.’ இல்லாமல் இருக்க முடியாத காலம் அல்லவா.. பணம் படைத்தவர்களுக்கு அவர்களுள் சிலர் உதவும் அளவுக்கு, மற்ற ‘முதலாளித்துவச் சுரண்டல்வாதி’கள் துணைபோக முடியாது. நாடு, காடு, பள்ளம், மேடு என்ற நில வேறுபாடுகளை மட்டும் ஒளவையார் சுட்டினார். செவ்வாய்க் கோள் முதலான கோள்கள்கூட அந்தப் பட்டியலில் சேர்ந்துவிடப் போகும் காலம் வந்து கொண்டிருக்கிறது. என்ன.. “எவ்வழி நல்லவர் ஆடவர்” என்பது மட்டும் பேரளவு மாற்றம் பெற்று விடும்... ‘புரொகிராமிங்’ என்பது, கணினித் துறையில் மட்டுமே வெல்லக் கூடியது. சோதிடர்கள் இந்தச் சொல்லைக் கொச்சைப் படுத்தி விட்டார்கள். உள்ளபடி, அவர்களைப்போல் ஆற்றலுடன் ஒருவரைக் கடவுளுக்கு எதிராக எந்த நாத்திகவாதியாலும் திருப்பிவிட முடியாது. இதைப் பட்டறிந்தவர்கள் மட்டுமே உணர முடியும். ஆனால் இந்தத் திட்டமிடல்(programming) என்பதைச் ‘செயல் நம்பிக்கையாளர்கள்’ (pragmatists) அளவுக்கு மேல் நம்புகிறார்கள். இப்பொழுதெல்லாம் வெளியிடப்படும் நாட்குறிப்பேடுகள், அந்த அமெரிக்கப் பாணியில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். நம்மவர்கள் பலர் அந்த ‘பிளானிங்’(planning) பகுதியில் தான் உப்பு புளி மிளகாய்க் கணக்கை எழுதி வைப்பார்கள். “பத்துப் பொருள் வாங்க வேண்டுமென்று போனால், எட்டுப் பொருள் கூட வாங்கிவர அமையாது” என்று என் துணைவியார் அடிக்கடி கூறுவார்கள். திட்டமிடுவது எல்லாம் தோற்கும் என்பதல்ல; ஒவ்வொருவர் திட்டத்தையும் உடைத்தெறிய என்றே மற்றொருவர் இவ்வையகத்தில் தோன்றியிருப்பார் என்பதே உண்மை. திருமணங்களிலும் இப்படித்தான். காதல் படங்களாய் எடுத்துத் தள்ளும் நம் திரைப்பட வல்லுநர்கள், காதலுக்குப் பிந்திய திருமண வாழ்க்கையையே பொருளாக வைத்துப் படமெடுக்குமளவு முட்டாள்கள் அல்லர். அவர்களுக்குத் தெரியும், நம் மக்கள் பார்க்க மாட்டார்கள் என்று. வாழ்க்கையில் தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பதையே ‘சினிமா’விலும் பார்ப்பதற்கு நம் மக்கள் என்ன கலைப்படச் சுவைஞர்களா? இதைப் புரிந்து கொண்டுதான் ‘பொதிகை’ அலைவரிசை, குறும்படங்களுக்கு ‘உரிய’ நேரம் ‘ஒதுக்குகிறது.’ பற்றாக்குறைக்கு, முன்பெல்லாம் நூல் வெளியிட்டு விழாக்கள் அடிக்கடி நடத்தப் பட்டதுபோல, இப்பொழுது ‘குறும்பட விழாக்கள்’ மலிந்து விட்டன. ஒரே நன்மை..புத்தகங்கள் வீட்டை அடைப்பதுபோல குறும்படங்கள் அடைப்பதில்லை. வட்டமான ‘டப்பா’க்கள் சில போதும்.. மூலையில் வைத்துக் கொள்ளலாம். “திட்டமிட்டால் போதும்!” என்பவர்களுக்கு எதிராக ஓர் உண்மையை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிவைத்தார்: தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே (புறநானூறு 189) கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”(புறநானூறு 192) என்ற வாழ்க்கை மெய்ப்பொருள் பாடலின் பதின்மூன்று வரிகளுக்குப் பின்னால், வாழ்க்கை மெய்ம்மையை எதனுடனும் சமரசம் செய்து கொள்ளாமல் தெளிவாக வெளிப்படுத்தும் பாடல் இது. வல்லரசுகள் பேரரசுகளை ஆள்பவர்களாயினும் சரி; நண்பகலோடு நள்ளிரவும் கண்துயிலாமல் வேட்டையாடும் வேடுவர்களாயினும் சரி; எவருக்கும் அடிப்படைத் தேவைகள் ஒன்றுபோலவேதான். மற்றவையும்(‘பிறவும் எல்லாம்’ என்ற இரண்டே சொற்கள் உணர்த்துபவை அனைத்தும் - காலங்கடந்தும் ஒன்றேபோல் இருப்பவை; ஏனெனில், அவை மனிதனின் கருவி-கரணம் சார்ந்தவை) அவ்வாறே. ஆகவே செல்வத்தை ‘உபரி’யாகச் சேர்த்தவர்கள் அந்த ‘உபரி’யை எப்பாடுபட்டேனும்(இது இக்காலப் பொருள்) எவ்வாறேனும் துப்புரவாகப் பகிர்ந்தளித்துவிட வேண்டும்.(இதைப் ‘பாத்தீடு’ என்ற கட்டுச் செட்டான சொல்லில் பழந்தமிழர் குறிப்பிட்டார்கள்.. ஆங்கிலத்தில் distribution என்பார்கள்). அவ்வாறு செய்யாமல் நாமே அச்செல்வத்தை நுகர்வோம் என்று முடிவெடுப்பவர்கள் இயற்கையான காரணங்களாலும் மன்னன் - படையெடுப்பு போன்ற செயற்கையான காரணங்களாலும்(இது அக்காலப் பொருள்) பலவகைகளில் அதைக் கைவிட்டு வருந்த நேரிடும்... அந்தப் பாட்டின் பிற்பகுதிக்கு, இந்தக் காலத்துப் பொருள் என்ன தெரியுமா? “...அப்படி அல்லாமல் நாமே இந்த உபரிச் செல்வத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்ற ‘பொல்லாத’ முயற்சியில் ஈடுபடுபவர்கள், ‘தினத்தந்தி’ போன்ற நாளேடுகளின் முதற் பக்கத்தில் முதல் இரு நாள்களும் - பிறகு ஐந்தாம் பக்கத்திலும் இடமும் ‘புக’ழும் பெற்று, படிப்படியாக ‘எதையும் மறக்கும்’ நம் மக்களால் அறவே மறக்கப்பட்டு, ஆண்டுகள் சில கழிந்தபின்னர் பழையபடி வாழவேண்டி வரும்!” என்பது. ******** நன்றி: திண்ணை.காம்