19.5.10
பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை
ஐயா. வணக்கம். பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப்பற்றினால் மாற்றிக்கொண்டு
மறைமலையடிகளுக்கு முன்னோடியாக இருந்தார் என்று புதியதலைமுறை கட்டுரையில் கண்டேன்.
புதிய தலைமுறைக்குப் பிழையான செய்தி போய் விடக்கூடாது. மறைமலையடிகளும் பாவாணரும் இது போலவே நம்பி எழுதியீருக்கின்றனர்.
வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் என்னும் பெயரை அவர் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை.
புனைபெயராகவே பயன்படுத்தினார். அதுவும் தனிப்பாசுரத்தொகை என்னும் ஒரு நுாலில் மட்டுமே அப்பெயரைப் பயன்படுத்தினார்.
அவர் தன் படைப்பின் தன்மையை முழுமையாகப் படிப்பவர் வாயிலாகத் தெரிந்துகொள்ளும் நோக்கத்திற்காகப்பரிதிமாற்கலைஞர் என்னும் பெயரைப் பயன்படுத்தியதாக அந்நுாலில் குறித்துள்ளார்.
எனவே தமிழ்ப்பற்றால் பெயரை மாற்றிக் கொண்டார் என்பது சரியன்று.
அவர் தமிழ்ப்பற்று இரு வகைகளில் சிறந்தது. அவர், பார்ப்பனர்களால் தான் தமிழ் கெட்டது என்பதைத்தமிழ்மொழி வரலாறு என்னும் நுாலில் மறைக்காமல் எழுதியுள்ளார்.
தமிழ் தனித்தியங்க வல்லது என்னும் கருத்தையும் அவர் வலியுறுத்தினார். ஆனால்
தனித்தமிழ்ப்பற்றினால் பெயரை மாற்றிக்கொண்டார் என்னும் செய்தி பரவி விட்டது.
அன்புடன்,
முனைவர் க.தமிழமல்லன்
5.5.10
சிங்காரவேலர்
- முனைவர் க.தமிழமல்லன்
தமிழர் இனத்தின் தலைவர்தாம் யாரோ?
இமிழ்கடல் சிங்காரர் ஏத்து.
உரத்தால் பயிர்தழைக்கும் முற்போக்கு வேலர்
தரக்கொள்கை நாடுயர்த்தும் தான்.
புதுவுலகம் காணப் பொதுவுடைமைக் கொள்கை
உதவுமெனல் வேலர் உரம்.
சிந்தனைச் சிற்பியாம் சிங்கார வேலரே
நம்தமிழ் நாட்டுக்குத் தூண்.
பெரியார்க்குச் சிங்கார வேலர் பெரியார்
உரியாரின் மாண்பை உயர்த்து.
கதிரிருக்க வெண்ணிலவைக் கைதொழுதல் ஆமோ,
எதிரிருக்கும் ஏந்தலைத்தான் ஏத்து.
மறைமலை யாரைப்போல் மானமீட்பர் வேலர்
குறைதீர்க்க வந்தார் குறி.
அறிஞர்க் கறிஞராய் ஆற்றல் வினையால்
நெறிஞராய் வாழ்ந்தார் நிறுத்து.
சிங்கார வேலர்தான் சீர்திருத்தக் காரர்நம்
பங்காளர் ஆவார் பகர்.
பொதுவுடைமைக் கொள்கையை நல்வேகத் தெம்பாய்
எதிர்ப்பிருக்கக் காத்தார் அவர்.
மீனவர்கள் எல்லாரும் மீட்சிபெற்று மேலெழுதல்
மானத்தின் வாழ்வாய் மதி.
புரட்சிப் பரிசென்றே பொங்கரிமா சிங்காரர்
புத்தூழி எண்ணத்தைப் போற்று.
Singaravelar photo transparency - Thanks to: http://www.pragoti.org
Subscribe to:
Posts (Atom)