9.6.15

தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம்

1962 ஆம் ஆண்டில் ஏழாம் பதிப்பைக் கண்டது, தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம். காரைக்குடி, செல்வி பதிப்பகம் இதைப் பதிப்பித்தது. அந்தக் காலத்தில், 'பி.ஏ.' என்பதே பெரிய படிப்பு. அதனால்தான் தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் பெயருக்குப் பின் 'பி.ஏ.' என்ற பட்டத்தை 1950களிலேயே பதிப்பகங்கள் அச்சிடலாயின. தாகூரின் உணர்வு குன்றாமல், அவருடைய கீதாஞ்சலியின் நூற்று மூன்று கவிதைகளை எளிய தமிழில் செட்டியார் அவர்கள் தமிழாக்கினார். பானைச்சோற்றுக்குப் பதமொன்று இதோ: "எங்கு மனம் பயமற்று விளங்குகிறதோ, எங்கே தலை கம்பீரமாய் நிமிர்கிறதோ, எங்கு அறிவு சுதந்திரத்துடன் பொலிகிறதோ, எங்கு குறுகிய சாதிமதப் பிளவுகளால் உலகம் உடையாமல் உருப்பெற்றிருக்கிறதோ, எங்கு உண்மையின் ஆழத்தினின்று சொற்கள் உதயமாகின்றனவோ, எங்கே தளரா முயற்சி பரிபூரணத்தை நோக்கி கைகளைப் பரப்புகிறதோ, எங்கு பகுத்தறிவெனும் தெளிந்த ஆறு மாண்டொழிந்த பழக்கங்களான பயங்கரப் பாலைமணலில் பாயாது மீள்கிறதோ, எங்கே விரிந்தசிந்தனையிலும் செயலிலும் எனது உள்ளத்தை நினது அருள் இழுத்துச் செல்லுகின்றதோ, அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில், என் அப்பனே, எனது நாடு விழித்தெழுவதாக!" - கீதாஞ்சலி 35.