26.2.07

‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: வேறுபாடான உளவியல் புத்தகம்!

‘உள்ளம் ஓர் ஆழ்கடல்’: டாக்டர் க.நாராயணனின் முத்துக்குளித்தல் - தேவமைந்தன் உலகச் சிந்தனையாளர்களின் அறிவுக் கோட்பாட்டை(epistemology)த் தமிழில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியதனால் தமிழக அரசின் முதற்பரிசை 1987ஆம் ஆண்டில் பெற்றவர் டாக்டர் க.நாராயணன். அதற்குப் பின் ஆய்வியல், சித்தர் மெய்ப்பொருள், மேலைநாட்டு மெய்ப்பொருள், அரசியல் சிற்பிகள், சிவவாக்கியர், பட்டினத்தார் ஆகியவற்றைக் குறித்து நூல்களைப் படைத்தபின் சிக்மண்ட் பிராய்டு குறித்த தன் பத்தாண்டுத் தேடலை முன்வைத்து, ஓராண்டு எடுத்துக்கொண்டு நாராயணன் எழுதி வெளியிட்டுள்ள புத்தகமே ‘உள்ளம் ஓர் ஆழ்கடல்.’ பதிப்புரிமைப் பக்கத்துக்கு அடுத்தே ‘தற்சோதனை’ என்றதோர் உரைவீச்சைத் தோரண வாயிலாக நாட்டியிருக்கிறார் நாராயணன். நாள்தோறும் ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்கள் சரிவர அமைந்திருக்கின்றனவா, அவற்றால் சமூகம் பயன்பெறுமா என்று தன்மதிப்பீடு செய்துகொண்டு முன்னேற இவ்விதமான தற்சோதனை உதவும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ப. அருளி தொகுத்துள்ள அருங்கலைச்சொல் அகரமுதலியில்(பக்கம் 822) psychology என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழாகத் தரப்பெற்றுள்ள உளத்தியல் என்ற சொல்லையே சற்று அழுத்தமாக உள்ளத்தியல் என்றவாறு இப்புத்தகத்தின் 224 பக்கங்களிலும் பயன்படுத்தியுள்ளார் டாக்டர் நாராயணன். உளவியல் என்று இதுவரை புழங்கிவந்துள்ள கலைச்சொல் உளவு+இயல் (spying technology) என்ற முறையில் பொருட்குழப்பத்துக்கு இடம் தந்து வந்ததால் உளத்தியல் என்ற சொல்லைக் கலைச்சொல்லாக்கம் செய்திருந்தார் ப. அருளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சிக்மண்ட் பிராய்ட்(6-5-1856) பெற்ற மருத்துவக் கல்வியும் ஆய்வுகளும் ஐரோப்பாவை அறிவியல் சிந்தனை ஆட்சி செய்த காலத்தில் அமைந்தன என்பதை நாராயணன் சுட்டத் தவறவில்லை. தவிரவும் ‘இறைவனின் படைப்பே மனிதன்’ என்று மதவாதிகள் உண்டாக்கியிருந்த ‘தெய்விகக் கொள்கை’யை டார்வின் வழங்கிய ‘பரிணாமக் கொள்கை’ தகர்த்திருந்த காலச் சூழல் பிராய்டின் புரட்சிச் சிந்தனைகளுக்கு இடம் தந்தது. பிராய்டின் பெற்றோர்கள் அருமையானவர்கள். குறிப்பாக அவர்தம் தாயார் அமலியாவிடமிருந்து அபரிமிதமான பாசத்தைப் பெற்றார். தந்தையாரிடமிருந்து நகைச்சுவை உணர்வு, பரந்த மனப்பான்மை, சுதந்திரமான சிந்தனை ஆகியவற்றைப் பிராய்ட் பெற்றார். ஒருவரின் வளர்ச்சியும் வெற்றியும் அவர் தம் தாயிடமிருந்து பெறும் அன்பின் அளவால் உறுதி செய்யப் பெறுகின்றன என்பதை அவர், “தாயால் விரும்பப்படும், நேசிக்கப்படும் குழந்தைகள் தம் வாழ்நாள் முழுக்க எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி காண்பார்கள்; எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்”(ப.60) என்று மொழிந்தார். பிராய்டின் ஆய்வுகள் ஆழமான அடிப்படைச் சிக்கல்களை அடித்தளமாகக் கொண்டவை. மேலோட்டமான சிந்தனையோ ஆய்வோ அவருக்குப் பிடிக்காது. உயிரியல்(biology) தொடர்பான அடிப்படை வினாக்கள் பலவற்றிற்கு இயற்பியல் மற்றும் வேதியல் துறைகளில் விளக்கம் கிடைக்கிறதென எடுத்துக் காட்டியவர் அவர்.(ப.61) மருத்துவத் தொழிலில் பொருளீட்டுவதை விடவும் மன்பதைக்கு என்றும் பயன்படும் ஆய்வுகள் செய்யவே பிராய்ட் விரும்பியதால் 1881 ஆம் ஆண்டில் மனநோய் மருத்துவத் தொழிலை வியன்னா நகரில் தொடங்கினார். நரம்பியல் துறையில் உலகப்புகழ் பெற்று விளங்கிய ழோ(ன்) மர்த்தீன் ஷர்கோ அவர்களை 1885இல் பாரீசில் சந்தித்துப் பயிற்சி பெற்றார். இந்த இடத்தில் ஷர்கோ’வைப் பற்றி நாம் சிறிது அறிவது நலம். வலிப்பு நோய் அக்காலத்தில் பெரும் பிரச்சினையாக இருந்தது. அது சம்பந்தமான மூடநம்பிக்கைகளும் அப்பொழுது அதிகம். கருப்பை என்று பொருள்படும் ‘யுஸ்டீரான்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து ‘ஹிஸ்டீரியா’ என்ற சொல் வந்ததை வைத்து, பெண்ணின் கருப்பை ஒரு படகைப் போல் உடலில் சுற்றி வருவதாகவும், அதன் விளைவாக ஒவ்வாத செயல்கள் நடப்பதாகவும், உறுப்புகள் செயலிழப்பதாகவும் அக்கால மக்கள் கருதினர். வலிப்பு நோய் பேய் பிசாசுகளின் தூண்டலால் விளைவது என்றும் பில்லி சூனியம் ஏவல் முதலான செயல்களின் விளைவு என்றும் நிலவி வந்த மூடநம்பிக்கையைக் களைந்து அது ஓர் உயிரியல் சார்ந்த நோய் என்றும், மூளை மண்டலத்தில் ஏற்படும் சிதைவின் வெளிப்பாடு என்றும் ஷர்கோ விளக்கினார். இக்கருத்து பிராய்டின் மனத்தில், “உயிரியல் சார்ந்த நோய் உள்ளத்தியல் கூறுகளின் ஆதிக்கத்தால் உருவாகின்றன” என்ற கருதுகோளை வகுத்தளித்தது. இதன் விளைவாக ஆழ்துயில் மருத்துவ முறையைப் பின்பற்றி வியன்னாவில் வெற்றியுடன் விளங்கிய வலிப்புநோய் மருத்துவர் ஜோசெஃப் புரூயெருடன் இணந்து பணிபுரிந்தார். நோயாளிகள் வெளிப்படுத்திய உணர்வுகளின் விளைவாக, பாலியல் சிக்கலும் வலிப்பு நோய்க்கு ஒரு காரணியாக இருக்கக் கூடும் என்று கண்டு கூறினார். பிரான்சில் நோயாளிகளை அறிதுயிலில் ஆழ்த்த வல்லவராக பெர்னே ஹெம்(Berne Heme) விளங்கினார். அவரிடம் பயிற்சி பெறச் சென்ற பிராய்ட் அவர் கடைப்பிடித்த முறைகளைக் கண்டு, “அறிதுயில் முறை நோயாளியின் ஆழ்மனத்தில் மறைந்துள்ள உணர்வுகளை எட்டுவதில்லை” என்று கண்டறிந்து முன்பு தான் ஏற்றிருந்த கருதுகோளை மாற்றிக் கொண்டார். அறிதுயில் முறையால், மருத்துவர் ஏற்றும் கருத்துக்களோடு தொடர்புடைய எண்ணங்கள் மட்டுமே நோயாளியின் நினைவுக்கு வருகின்றன. மருத்துவர் நோயாளியைத் தங்குதடையில்லாமல் பேச விடவேண்டும். கட்டுப்பாடு ஏதும் இன்றி எதை எதோடு வேண்டுமானாலும் இணைத்துப் பேசும் இப்பேச்சுமுறை நோய்க்கான காரணத்தைப் புலப்படுத்தும் என்று பிராய்ட் கருதினார். இப்பொழுது ‘TV5 MONDE ASIE’ தொலைக்காட்சியில் தொடராக வந்து கொண்டிருக்கும் ‘பிரின்சே மரி’யில் (Princess Marie) இப்பேச்சுமுறையை பிராய்ட், இளவரசி மரி’யிடம் பின்பற்றுதலை விரிவாகக் காணலாம். பெனுவா ஜாக்வீ’யின் அருமையான இயக்கத்தில் உருவானது அது. கடந்தகால நினைவுகளால் மனநோயாளிகள் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதைப் பிராய்ட் உணர்ந்து பார்ப்பதை இயக்குநர் அதில் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார். 1895 முதல் நான்காண்டுகள் தன் ஆழ்மனத்தை அறிதலையே சோதனையாகப் பின்பற்றினார் பிராய்ட். ‘ஒருவரின் ஆழ்மனம் குப்பைத் தொட்டி அன்று; ஒருவரை உருவாக்குவதே அதுதான்” என்று கண்டு கூறி மனநோய் மருத்துவத்திலும் உளத்தியல் சிந்தனப் போக்கிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். பிராய்டுக்கும் பிராய்டியத்திற்கும் அப்பொழுதே எதிர்ப்பு வலுத்திருந்தது. அவரோடிருந்து ஆய்வுப்பணி ஆற்றிய கார்ல் யுங்கும் ஆல்பிரட் அட்லரும் ஒதுங்கிக் கொண்டார்கள். இன்னும் பலரும் ஒதுங்கவே, ஆண்டுக்கணக்கில் பிராய்ட் தனிமைப்பட்டு இருந்தார். குழந்தைப் பருவத்திற்குப் பிராய்ட் தந்த முதன்மையை ஏற்றுக் கொண்டவர்களும் அவர் வலியுறுத்திய எதிர்பால் ஈர்ப்பையும் பாலியல் விளக்கங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிராய்ட் எதிர்ப்புக்கெல்லாம் வருந்தாமல் தம் பணியைத் தொடர்ந்தார். நரம்புப் பிணி போன்ற கொடிய பிணிகள் ஒருவரை வருத்துவதற்கு முதன்மைக் காரணம், குழந்தைப் பருவத்தில் பாலியல் அறிவு கொடுக்கப் படாமையே என்று அவர் உறுதியாக நம்பினார். பிராய்டின் ஆய்வு முடிபுகள் பிற்காலத்தில் மாற்றங்களை ஏற்றாலும் அவர் உருவாக்கிய உளத்தியல் பகுப்பாய்வு முறையும் ஆழ்மனத் தாக்கம் என்ற கருத்தும் இன்றும் நிலைத்து, சிக்கல்கள் பலவற்றுக்குத் தீர்வு காண உதவுகின்றன. தன்னைத் தனிப்பட்ட முறையில் அல்லாமல் தன்னுடைய ஆய்வுகளின் மூலமே வருங்கால மக்கள் அறிய வேண்டும் என்ற அவருடைய எண்ணம் சிறப்பாக நிறைவேறியுள்ளது. உளத்தியல் சிந்தனை வரலாற்றில் புதிய விதைகளைத் தூவிப் புரட்சி செய்த பிராய்ட், தொடர்ந்த தாடை உறுப்புறுத்த(jaw prosthesis) அறுவைகளுக்குப் பின் 23-9-1939 அன்று மறைந்தார். இதுவரை நாம் பார்த்த நான்காம் இயலுக்குப் பின்னர் ஆக்கலும் அழித்தலும், மனவுருப்பதிவும் செயல்பாடுகளும், உள்ளம் ஓர் ஆழ்கடல், பருவங்களும் உணர்வுகளும், கனவும் உறக்கமும், நடத்தை : இயல்பும் பிறழ்வும், மனநலமும் மருத்துவமும், நூற்பயன் ஆகிய எட்டு இயல்களில் விரிவாக உளத்தியல் செய்திகள் அலசப்படுகின்றன. ஏழாவது இயலின் கடைசியிலும் பிராய்டின் கொடை, முத்திரை பதிக்கப் படுகிறது. காட்டு: “உள்ளம் என்பது உடலின் பிற உறுப்புக்களைப் போன்றதொன்று என எளிமையாக எண்ணிய காலத்தில், அது அளப்பரிய ஆழ்கடல் என்றும் அதன் அமைப்பும் அங்கு இருக்கும் எழும் போராடும் உணர்வுகளும் எண்ணற்றவை என்றும், உள்ளத்துள் ஆழ்ந்து கிடக்கும் அத்தனை உணர்வுகளையும் அறிந்திட இயலாது என்ற உண்மையையும், சமயவாணர்களின் சாடலுக்கும் மாற்றாரின் இழிவுரைகட்கும் அஞ்சாமல் எடுத்துரைத்து உள்ளத்தியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் சிக்மண்ட் பிராய்டு.” (ப.120) பதினொன்றாம் இயலான ‘மனநலமும் மருத்துவமும்,’ இன்றைய நிலையில் பலருக்கும் பயன்படத்தக்க மனநலம் தொடர்பான அறிவுரைகளைக் கொண்டிருக்கின்றன. தவிர, தன் வாணாள் முழுவதும் கடைகளுக்குச் செல்வதையே தீவிரமாக அஞ்சி வெறுத்துத் தவிர்த்த எம்மா என்ற அம்மையார் பற்றிய நோயாளி வயணம்(case description) மிகவும் குறிப்பிடத் தகுந்தது.(பக்கம் 201-203) இதன் ஊடாக டாக்டர் நாராயணன் உணர்த்தும் ஒரு செய்தி, இன்றைய மனநல மருத்துவர்களின் வறட்டுத்தனமான ‘வேதியல் மருந்தே மனநோய் எதையும் தீர்க்கும்’ என்ற கடைப்பிடி’(practice) தவறானது என்பதை எண்பிக்கும். அது: “ஒரு செயலுக்குச் சமமாகவும் எதிராகவும் எதிர்ச்செயலொன்று ஏற்படும் என்ற நியூட்டனின் விதி பருப்பொருள் நிலையில் மட்டுமன்றி மன உணர்வு நிலையிலும் உண்மையென உணர வேண்டும்…இவ்விதியை அட்ப்படையாகக் கொண்டே இளங்குழந்தைப் பருவத்தை பிராய்டு விளக்குகிறார். மூளை அல்லது நரம்பு மண்டலத்தின் முதற்பணியே, அதற்கு ஏற்படும் சுமையைத் தவிர்ப்பதும் குறைப்பதும் ஆகும். மூளை உள்ளிட்ட நரம்பு மண்டலம் இயன்ற அளவு குறைந்த சுமையைக் கொண்டு அதன் குறிக்கோளை அடைய முற்படுகிறது. இது, மூளையின் பொருளாதாரத் தத்துவம். பல நரம்பிழைகளால் விரிவாகவும் நுட்பமாகவும் நரம்பு மண்டலம் பின்னப்பட்டுள்ளது. குறைந்த அளவு தூண்டல், இயன்ற அளவில் சீராகவும் குறைந்த அழுத்தமுடனும் பாய்வதற்கேற்ற வகையில்தான் நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. துன்பச் சூழலைத் தவிர்ப்பதும் குறைப்பதும் மனித மனத்தின் இயல்பு. மனத்தின் இவ்வடிப்படை விதியை ‘இன்ப நுகர்வு விதி’ என்கிறார் பிராய்டு. பசி உண்பதாலும், சோர்வு தூக்கத்தாலும், பாலியல் ஆசை இன்ப நுகர்வாலும் சமநிலை அடைகின்றன. எம்மா அந்தக் குறிப்பிட்ட கடையைத் தவிர்ப்பதும் வெறுப்பதும் இவ்விதியின்படி சரியான செயலேயாகும். ஆனால், அவள், கடைகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கிறாள். இந்நிலையில்தான் அவள் வெறுப்பு மனநோய் என்றாகிறது. எட்டு வயதில் எம்மாவிற்கு ஏற்பட்ட அனுபவச் சுமையைக் குறைக்காமல் தற்போது அவளுக்கு மருத்துவம் செய்வதில் பயனில்லை.”(பக்கம் 202-203) இன்று மனநல மருத்துவர்கள் பிராய்டுக்கு மாறாக, வெறும் மருந்துகளாகத் தருபவை பலருக்குத் தீவிரமான ஒவ்வாமையைத் தருவதுடன் பலரை ‘மரப்பாவை இயக்க’மும் கொள்ளச் செய்திருக்கிறது. வேதியலின் ஆதிக்கம், இயல்பான மனநல மருத்துவத்தை முடக்கிப் போட்டிருக்கிறது. பிரெஞ்சுப் படமொன்றில் வயதான பெண் ஒருத்தி, காதலைப் போற்றித் தன் காமத்தை முற்றாகத் தவிர்க்கும் இளம் வழக்கறிஞர் ஒருவரிடம் எரிச்சலுடன் சொல்வாள்: “பார்க்கப் போனால் காதல் ஒரு வேதியல்தான்!” என்று. புகழ்பெற்ற ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ இதழ், சில மாதங்களுக்கு முன் ‘காதலின் வேதியல்’(chemistry of love) என்ற சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது. உயர்ந்த பதவிகளில் இருக்கும் பலர் தங்கள் மனைவியருக்கு ‘செடேடிவ்ஸ்’ எனப்படும் தணிப்பிகளைத் தந்து தாங்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று மருத்துவ நண்பர் ஒருவர் சொன்னார். நல்ல வேளையாக மனநோய்களுக்கு இன்று தரப்படும் வேதியல் மருந்துகளை மருந்துக் கடைக்காரர்கள் மருத்துவர் குறிப்பு இல்லாமல் தருவதில்லை. வேதியல் மருந்துகளைப் புகழ்பவர்கள், இன்று கல்லூரி பள்ளி மாணவர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும் போதைப் பொருள்களின் தோற்றுவாய் குறித்துச் சற்றே சிந்தித்துப் பார்க்கட்டும். சரி. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அனுபவ முதிர்ச்சி உள்ளவர். அவர் நமக்குக் கூறும் அறிவுரைகளில் சிலவற்றைப் பார்ப்போம்: “வாழ்க்கையில் முன்னேற்றம் காண போட்டி மனப்பான்மை நல்ல ஊக்கியாகச் செயல்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே போட்டி மனப்பான்மை ஒருவரது திறமை மற்றும் வாய்ப்புகளுக்கு மீறியதாக அமைந்து விடாமல் இருந்திட வேண்டும் என்பதும் அவசியமாகிறது.” (ப.203) “ஒருவரின் தகுதிகட்கும் அவர் அடைய வேண்டிய குறிக்கோளுக்கும் உள்ள இடைவெளி முயன்றும் கடக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிதாக இருப்பின் அது மனமுறிவு என்னும் மனக்கோளாறு உருவாக வாய்ப்பளிக்கும். ஆசையோடு அறிவும் சேர்ந்து குறிக்கோளைத் தீர்மானித்தால் வாழ்க்கைப் பயணத்தில் சிக்கல் தோன்ற வாய்ப்பு குறைவு.” (ப.204) “சமுதாயக் கட்டமைப்புக்கு உட்பட்டு ஆசைப்படுகிறவன் அதனை நிறைவு செய்து அமைதி கொள்வான். மனமுறிவு என்னும் கோளாறு அவனுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.” (ப.204) “நாகரிகச் சமுதாயத்தின் நடுவே உள்ள மனிதன்... ஆத்திரப்படும்போதும் எரிச்சலடையும்போதும் தன் உணர்வுகளை உடனே வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொள்கிறான். அதன் விளைவாக அவனுடைய உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அது பெரும்பாலும் இரத்த அழுத்தத்தையும் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. உணர்வொடுக்கமும் அதனால் ஏற்படும் உடல்கேடுகளும் அடிக்கடி நிகழுமானால் அவை நிரந்தர நோய்கட்கு வழிவகுப்பனவாகின்றன... சிறுசிறு நிகழ்வுகட்கெல்லாம் ஆத்திரப்படாமல் இருக்கப் பழக்கிக் கொள்ள வேண்டும். இது எதார்த்த விதியின் ஓர் அங்கமாகும்.”(ப.209) “உன்னையே நீ அறிவாய்’ என்பது கிரேக்க ஞானி சாக்ரடீசின் மந்திரத் தொடர். ... உன் பார்வையை உள்முகமாகத் திருப்பி உன் உள்ளத்தில் படிந்திருக்கும் எண்ணங்களின் இயல்பை அறிந்து கொள் என்பதே இதன் பொருளாகும்.” (ப.211) “உங்கள் உள்ளத்தை நீங்களே ஊடுருவிப் பாருங்கள்; வேண்டாத எண்ணங்களை வெளியேற்றுங்கள்; மனம் மென்மையாகிவிடும்; வாழ்க்கை அமைதிப் பூங்காவாக விளங்கும்.” (ப.212) *************** ஆசிரியர்: டாக்டர் க. நாராயணன், எம்.ஏ.,எம்.ஏ.,எம்.எட்.,பிஹெச்.டி. தலைப்பு: உள்ளம் ஓர் ஆழ்கடல் (Freudian Psychology - An Introduction) பதிப்பு: முதற் பதிப்பு, திசம்பர் 2006. பக்கம்: 224 புத்தக அளவு: தெம்மி 1/8 விலை: உரூ. 100-00 வெளியீடு: மாரி பதிப்பகம், ‘சிவகலை’ இல்லம், 29, நாகாத்தம்மன் கோயில் தெரு, கொட்டுப்பாளையம், புதுச்சேரி - 605 008. தொ.பே.: 0413 2251764 / 9442152764 ****** நன்றி: கீற்று.காம்

16.2.07

ஆசிரம வாழ்க்கை - -தேவமைந்தன்

ஆசிரம வாழ்க்கை -தேவமைந்தன் பல நாள்களாக எனக்குள் ஓர் ஆசை. ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று. ஒரு நாளாவது சுதந்திரமாக அதை வாழ்ந்து பார்க்கவும் விருப்பம். நாங்கள் வாழும் ஊரில் உள்ள பெரிய ஆசிரமத்தில் மனிதர்கள் எந்திரங்கள் போலவும் திருவள்ளுவர் மொழிந்த ‘மரப்பாவை’கள் போலவும் வாழ்ந்து இயங்குவது பார்க்க, அன்றாடமும் பார்க்கப் பார்க்க வேறொரு கிளை ஆசையும் என்னுள் துளிர் விடலாயிற்று. அது என்ன என்றால், நான் வாழ்ந்து பார்க்கப்போகும் ஆசிரமம்:- 1. நகர்ப் பக்கமே இருக்கக் கூடாது. 2. தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். 3. அதிகம் பேர் வந்து போவதாக இருக்கக் கூடாது. 4. என்னை ஆசிரமத்தில் உள்ளவர்கள் தங்களைப் போல எண்ண வேண்டும். நான் வாழ்க்கையில் ஆற்றிய அரசுக் கல்வி நிறுவனப் பணி அவர்களுக்குத் தெரியக் கூடாது. வயதும் கூடத்தான். 5. முக்கியமாக மலைப்பக்கம்தான் அந்த ஆசிரமம் இருக்க வேண்டும். சொல்வார்கள்... ஆசைகளை[ambitions] விடவும் உயர்ந்த/உன்னத விருப்பங்களுக்கு [aspirations] நிறைவேறும் திறம் அதிகம் என்று.. நிறைவேற்றி வைத்தார்கள், குடும்பத்தார். விந்தையாக அந்த ஒரு நாள் வாழ்க்கை அரங்கேறியது. அதுவும் சிகுன்குனியா வந்து வாட்டி என்னை வளைவெடுத்துவிட்டதை உடனடுத்தே நிகழ்ந்தது. ‘வாய்ப்புத் தராத விழிப்பு நிலை’[choiceless awareness] என்று ஜே.கே. சொன்னாரே அப்படி. ** 23-12-2006: ‘ஹிந்து’வில் திசம்பர் 11, 2004 அன்று “ROAD LESS TRAVELLED: Hill of hills” பகுதியில் பிரின்ஸ் ஃப்ரெடெரிக் எழுதிய பருவதமலை அடிவாரத்தில் உள்ள மெளனயோகி விட்டோபானந்தாவின் ஆசிரமத்தில் இந்த நாள் மாலைமுதல் அடுத்த நாள் மாலை வரை தங்குகிறேன். பொய்யில்லாமல், சுருக்கமாக, நடந்தவைகளை இங்கே ‘திண்ணை’ குழாம் முன் வைக்கிறேன். ‘மயிலம் தாத்தா’ என்றழைக்கப்படும் தாத்தா, அங்கேயே நெடுங்காலமாக, ஆறாயிரம் அடி உயரமுள்ள பருவதமலையின் சிகரத்தில் மெளனயோகி விட்டோபானந்தா இரண்டடுக்கு ஆசிரமத்தைக் கட்டும்போதெல்லாம் உடனிருந்த காஞ்சி ஊரார்களிடையில் இருந்து உதவியவர். இன்று வளைந்து விட்டார். ‘கேம்ப்’ கட்டிலில் வளைந்து உட்கார்ந்தவாறே, விட்டோபானந்தா ஆசியுடன் வழங்கும் விபூதிப் பிரசாதத்தின் கொள்கலமான தாளுறையை மடித்தவாறே இருந்தார். பேசினால் 5 உறையை மடிக்கும் நேரத்தில் 2 தான் மடிக்க முடியுமாம். இருந்தாலும் பல செய்திகள். மெளனயோகியின் விளம்பரப் படுத்திக் கொள்ளாத 14 ஆண்டு கர்மயோக வாழ்க்கையைக் குறித்து. இரவு 12:30 மணிவரை தொடர்ந்து, வளைந்த முதுகுடன், பணியாற்றி, பிறகு படுத்து உறங்கத் தொடங்கினார். இரண்டரை மணி நேரம்கூடத் தாண்டியிருக்காது.. ‘சில்’லென்று குளிர்காற்று கூடத்துள்ளே புகுந்தது. கதவு திறந்து, புதுச்சேரியிலிருந்து பருவதமலையறிந்த குழுவொன்று ‘தடபுட’வென்று உள்ளே நுழைந்தது. மயிலம் தாத்தா சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தது. கவலைப் படவில்லை. கதவைச் சாத்தவுமில்லை. பெண்கள் ‘சளசள’ என்று பேசத் தொடங்கி விட்டனர். வைகறையில் பருவத மலையேற வேண்டுமென்று ஒருவர் ஒருவராகப் போய் குளிக்க ஆரம்பித்து விட்டார்கள். குளித்து வந்தவர்கள் கூந்தலை ‘அட்டை’ தட்டுவது போலத் தட்ட ஆரம்பித்தார்கள். நெளிந்தார் அவர். அந்த ஓரத்தில் படுத்திருந்த காஞ்சிபுரத்து சாமியான சி.பி.ஆர். சத்தம் கேட்டு ஓடிவந்து, ‘என்னம்மா.. நீங்கள்’லாம்.. இந்த மலைப் பக்கம் உங்களுக்கெல்லாம் தங்க இடம் கொடுத்திருக்கிறாரே மெளனசாமி.. எவ்வளவு பாதுகாப்பு கொடுத்திருக்கார்.. நீங்க இப்படிப் பண்ணுறீங்களே.. இது புனிதமான இடம் மட்டுமல்ல..இங்கதான் நாள்தோறும் மலைப்பக்கத்து ஊராருக்கு அன்னதானம் பண்ண மாவரைக்கிற மிஷின்கள்’லாம் இருக்கு ..அதோ பாருங்க.. இப்படி நீங்க தாட்டுற முடியெல்லாம் போய் கிரைண்டர்’ல விழாது? அதெல்லாம் போகட்டும்.. இங்க படுத்திருக்கிறாரே இந்தப் பெரியவர்.. என்ன வயசு தெரியுமா? கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் படுத்தார். ஏன் நீங்கள்’லாம் இப்படி ‘இர்ரெஸ்பான்ஸிபிளா’ இருக்கீங்க!” என்று திட்டியதுடன், அங்கேயே தன் தூக்கத்தை தியாகம் செய்து அவர்கள் ‘எல்லாம்’ முடித்துக் கிளம்பும் வரை உட்கார்ந்தும் கொண்டார். அவ்வப்பொழுது அவர்கள் திறந்துபோடும் கதவையும் மூடி மூடி வருவார். சங்கடத்தோடு அவரைக் கேட்டேன்: “ஏங்க இப்படி..இவங்களையெல்லாம் அனுமதிக்கணுமா?” சொன்னார்: “இவங்களெ சாமியார் அநுமதிக்கிலே’ன்னா வெளில கிடந்தும் ‘வேன்’ல கிடந்தும் வெறைச்சுப் போய்டுவாங்க.. மலைப்பக்கம் போய்க் குளிக்கவும் மறைப்புறம் போய் வரவும் இவங்களுக்கெல்லாம் முடியவும் முடியாது. ஏன், நமக்கே இந்த ஜாமத்துல அது முடியுமா? அதுக்குத்தான் சாமியார் இரண்டு வசதியான ‘டாய்லெட்’கள் கட்டி வச்சிருக்கிறார். கூடவே ‘பாத் ரூம்களையும்தான். எல்லாம் இலவசம். சுத்தமாவும் இருக்குதல்ல. இதோ மயிலம் தாத்தா தூங்குறாரே.. விடியக் காத்தால எழுந்து வளஞ்சுட்டே இவங்க போட்டதெல்லாம் பெருக்குவார். ‘உலகம் பாட்டி’ யும் சில சமயம் பெருக்கும்..” என்றார். நாங்கள் தங்கியிருந்த இடம் முன்பு மாட்டுக் கொட்டகையாக இருந்ததாம். ஒரச் சுவர் பக்கம் தண்ணீர்த் தொட்டி, பரவலாகக் கசிந்தது. கூடத்துக்குள்ளாகவே தவளைகள் சுதந்திரமாகச் சஞ்சரித்தன. குறும்புக்காரப் பூனைக் குட்டிகள் இரண்டு. அவை வெளியே போனால் அங்கிருந்த வாட்டசாட்டமான கறுப்புநாயிடம் மாட்டிக் கொண்டுவிடுமே என்று கவலைப்பட்டு அவ்வப்பொழுது அக்கறையுடன் ‘மியாவ்’ இட்டு எச்சரிக்கும் அவற்றின் தாய். இவற்றுக்கு ‘டாவு’காட்டும் சுறுசுறுப்பான எலிகள்.[என் பையில் தமக்கு வேண்டுமளவு மட்டும் துளையிட்டு தின்பண்டங்கள் களவாடியிருந்ததைப் புறப்படும்பொழுதுதான் கவனித்தேன்.] “ஜெகதோ தாரண..” கீதம் மென்மையாக ஆசிரமத் தியானக்கூடத்திலிருந்து இசைக்கத் தொடங்கியபொழுது மணி 3:15[24-12-2006]. காஞ்சிபுர சாமி என்னும் சி.பி.ஆர்.தான் அந்தத் தியானக் கூடத்துக்கான சிமெண்டை வழங்கியவர். இப்பொழுதும் அன்னதானமாகிற அரிசியை காஞ்சியிலுள்ள தன் மகனிடமிருந்து பெற்றுவந்து தருகிறார். நேற்று மாலை வேலூர் யுனைடட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தன் நண்பரான விரிவுரையாளரோடும் இன்னொருவருடனும் வந்து கணபதியை வழிபட்டுவிட்டு பின்மாலைப்பொழுதில் ‘டார்ச்’ விளக்குகளின் உதவியுடன் மலையேறிப் போனார். இன்று காலை திரும்பியவுடன் என்னிடம் சொன்னார்; “ உங்கள் குடும்பத்தார், என்னுடன் மலையேறியவர்கள், நள்ளிரவு பன்னிரண்டே முக்காலுக்குத்தான் மேல் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். என்ன இருந்தாலும்.. 6000 அடியல்லவா?” மயிலம் தாத்தா சொன்னார். “வழியெல்லாம் பாறைகள்தாம். மண்படிவங்கள் வேறு சறுக்கும். கடப்பாறை மலை, இடையில். தாண்டி மறுபடியும் பாறைகள்தாம்..” எந்த வேளையும் சாப்பாடு இல்லையென்று எவருக்கும் சொல்வதில்லை. நேற்றிரவு காய்ச்சல் ஓய்ந்த உடம்புடன், ஒரு பெரிய கையளவு இட்டலிகள், சூடாக, சாம்பாருடன் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிடக் கட்டாயப்படுத்தினார் காஞ்சிபுரம் சாமி.. மூர்த்தி என்ற இளைஞர், முற்றிலும் துறவுக்கோலத்துடன் அரைத் துண்டுடன் கடினமான சமையல் வேலைகளை அங்கே செய்வார்; அடுத்த பொழுது பார்த்தால் இங்கே தியானக் கூடத்துக்கு முன்னே இருக்கும் மூர்த்தங்களுக்கு வழிபாடு நிகழ்த்துவதில் உதவிக் கொண்டிருப்பார். ஊர் மக்கள் எந்தவித வித்தியாசமுமில்லாமல் வந்து உதவிக் கொண்டே இருப்பார்கள். துறவிகள் பலர் ஒவ்வொரு நடையிலும் நிறுத்தாத பந்திகளில் வந்து கவுரவமாய் ஊராருடனும் எங்களைப்போன்ற புதியவர்களுடனும் அமர்ந்து தங்கள் திருவோடுகளில் உணவுண்டு, நாங்கள் எவர்சில்வர் தட்டுகளைக் கழுவிக் குவிக்கும் இடத்தில் அவற்றைக் கழுவி வைத்துச் செல்வார்கள். அவர்களுள் ‘இரண்யன்’ என்றொருவர். பூர்வாசிரமப் பெயர் வேறாம். அவர் ‘விடுவிடு’வென்று வருவார். திருவோடு எடுத்துக் கழுவுவார். ஒருவரிடமும் பேசமாட்டார். தேவையான அளவு சாப்பிடுவார். பார்ப்பார். எந்திரம் போல எழுவார். யார்மேலும் பட மாட்டார். வாழைத் தோட்டம் போவார். திருவோடு கழுவி வந்து வைத்துவிட்டு வெளியேறுவார். வெளியே மலையேறும் பாதையில் உள்ள கல்லறையொன்றின் மேல் அமர்ந்து தியானம் செய்வார்; அங்கேயே ஓய்வெடுப்பார். ஆசிரமத்துள் தங்க மாட்டார். இப்படிப் பலர். சித்தார்த் என்ற சாமியார் இளைஞர். மெளனசாமிக்கு அவ்வப்பொழுது வந்து உதவுகிறார். மலையாளம் கலந்த தூயதமிழ் பேசுகிறார். பல செய்திகள். “மெகஸ்தனிஸ் வந்து பயணக் குறிப்பு எழுதினார் என்றல் ஏற்றுக் கொள்கிறார்கள். அகஸ்தியர் வந்து ஆசிரமம் நிறுவினார் என்றால் சிரிக்கிறார்களே!” என்று வருந்தினார். மிகவும் பரந்த மனப்பான்மை உள்ளவர். அரவிந்தாசிரமம் முதலான பலவேறு ஆசிரமங்களைப் பார்த்துச் சலித்துப்போய், கடைசியாக எங்கோ மூலையில் ‘வனாந்திரமாய்’ உள்ள மெளனயோகி விட்டோபானந்தா ஆசிரமத்தில் நிலைத்துவிட்டதாக ‘நிம்மதி’ப்பட்டார். திடமான சிவப்பான உடலை நன்றாக வைத்துக் கொண்டு எப்பொழுது பார்த்தாலும் ஆசிரமத்தில் எந்தப் பகுதிக்கும் போய் எல்லோருடனும் அன்பாகப் பேசி உதவுகிறார். மையிலம் தாத்தாவின் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கண்களில் அன்பொழுக அவர் பேசியதைப் பார்த்தபொழுது நினைத்தேன்: “இதோ இந்த வயசாளி..கர்மயோகி..இப்பொழுது தன் வீட்டில் இருந்தால் இவருக்கு இந்த மரியாதை, விசாரிப்புகள், கூடத்துக்கு ஒவ்வொரு வேளையும் சென்று திருவோட்டில் காஞ்சித் தாத்தா உணவு வாங்கி வந்து தரும் அக்கறை, ஒவ்வொரும் கையில் ஏந்தித் தாங்கும் அன்பு, சமையல் பணி செய்யும் அம்மாவின் கவனிப்பு, வெளியே ஊருக்குள் இருந்து நாள்தோறும் வந்து பணிசெய்யும் அந்தம்மாவின் மகள்[திருமணமானவர்] காட்டும் கரிசனம் எல்லாம் கிடைக்குமா?..இல்லை, இவர் ஒரு நகரத்தில் முதியோர் இல்லத்தில் இருந்திருந்தால் இந்த நிம்மதி இவருக்கு வந்திருக்குமா?..” ஆம். நினைத்தபடி எல்லோருக்கும் வாழ்க்கை அமைவதில்லை. அமைவதைப் போற்றிக் கொள்ளவும் பலருக்கு ஆவதில்லை. ஒருநாள் ஆசிரம வாழ்க்கையை நிறைவேற்றிக் கொண்டு கிளம்பினேன். அனைவரிடமும் விடைபெற்றேன். கேட்டார்கள். சொன்னேன், எங்கு, என்ன பணி புரிந்தேன் என்று.. முன்போலவே இருந்தார்கள்.. காஞ்சிபுரம் சாமி சொன்னார்: “உங்கள் மாநில முதல்வர் இங்கு வரும் மூன்றாம் தேதி வருவதாக உள்ளார்.” ஆம். எங்கள் முதல்வர் ரங்கசாமியும் எளிமையானவர்; எளிமை விரும்புபவர்தாம். தெரிந்ததுதானே! ****** நன்றி: திண்ணை.காம்

15.2.07

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் உருவாக்கும் இலக்கியக் கொள்கை-தேவமைந்தன்

இன்றைய இலக்கியம் என்ற தொடரில் ‘இன்றைய’ என்ற பகுதியின் கால வரையறைப் பொருள் பலராலும் தவறாகக் கணிக்கப்படுகிறது. உள்ளபடியே இன்றைய தமிழ் இலக்கியம் என்பது ஆற்றலுடன் வெளிப்பட்டு வரும் தலித் இலக்கியத்தையும் பெண்ணிய இலக்கியத்தையும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தையுமே குறிக்கும். ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்று உள்ளபடியே ஆகிவிட்ட உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் ‘இன்றைய தமிழ் இலக்கியம்’ என்ற புலத்தை அதற்குரிய எல்லா வாழ்க்கைத் தகுதிகளுடன் நியாயப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் புலம்பெயர்ந்தோரே. ‘புலம் பெயர்ந்தோர்’ என்போரும் இரண்டு வகைமாதிரிகளாகப் பகுக்கப்பெறுகிறார்கள். முதல் வகையினர், ஈழதேசியப் போர்களில் பல்வேறு இழப்புகளுக்கு உள்ளாகி உலகத்தின் வேறு புலங்களில், அதிலும் குறிப்பாக அதிகமாக ஐரோப்பாவில் இப்பொழுது உழைத்து வாழ்ந்து கொண்டே தமிழிலக்கியம் படைப்பவர்கள். இரண்டாம் வகையினர், இந்தியத் தமிழ்நாட்டிலிருந்து வேறு புலங்களில் போய் உழைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டே தமிழிலக்கியம் படைப்பவர்கள். இந்த இரண்டுவகைமாதிரிகளில் முதல் வகையினருக்குச் சான்றுகளாக ‘எஸ்.பொ.’ என்றழைக்கப்பெறும் எஸ். பொன்னுத்துரை, சி. புஸ்பராஜா, ‘சோலைக்கிளி’ என்ற புனைபெயருடைய யு.எல்.எம். அத்தீக் முதலானவர்களையும்; இரண்டாம் வகையினருக்குச் சான்றுகளாக நாகரத்தினம் கிருஷ்ணா[கடல்கடந்து வாழும் தமிழர்களின் ஆகச் சிறந்த படைப்பாகத் தன் ‘நீலக் கடல்’ புதினத்துக்குத் தற்பொழுது விருது பெற்றுள்ளவர்] அபுல் கலாம் ஆசாத்[தமிழில் கானாப் பாடல்கள் பதிவு; கஜல் பாடல்கள் மொழியாக்கம் செய்துள்ளவர்] முதலானவர்களையும் குறிப்பிடலாம். இவர்களுள் பிரான்சில் பல ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் சென்னைக்கு மருத்துவ உதவி பெற வந்து பிரான்சுக்கு மீண்டபின் மறைந்த சி. புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’[வெளியீடு:அடையாளம், 1204-05[இரண்டாம் தளம்], கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310] என்பது உன்னதமானதொரு தன்வரலாற்று இலக்கியம் என்பதை விடவும் மிகவும் சிறப்பான ஆவணம் என்பதே பொருந்தும். இருப்பினும் அதன் 632 பக்கங்களையும் வாசிக்கும் பொழுது புலனாகும் - எதார்த்தமானதும், ஒருவரைத் தமது சொந்த வாழ்க்கைக்கே அன்னியப்பட்டுப் போகவைக்கின்றதும் ஆன பெருந்தேசியவாதிகளின் பேரினவாத ஒடுக்குமுறை குறித்த நுணுக்கமான சித்திரிப்பு அப்படைப்பை இலக்கியமாக்கி விடுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வசதியான பதவியையும் வாகான சமூக உறவுகளையும் வைத்திருப்பவர் இத்தகையதொரு படைப்பை உலகுக்கு வழங்க முடியாது. இத்தகைய படைப்பிலக்கியம் பெருந்தேசியவாதம் என்பது பேரினவாத ஒடுக்குமுறைக்குத்தான் வழிவகுக்கும் என்ற நுண்ணரசியல்(micro politics) உண்மையை முன்வைக்கிறது. எஸ்.பொ.’வின் விரிவானதும் நுட்பம் மிக்கதுமான தன்வரலாறான ‘வரலாற்றில் வாழ்தல்’ என்பது படைப்பாளியை உள்ளடக்கிக் கொண்டுவிடுகிறது. அகன்றதொரு புலமாகவும் ‘அகண்ட பிரபஞ்சம்’ போலவும் சமூக மனிதனாக வாழும் ஒருவனுக்கு நேரக்கூடிய எல்லா வகைமாதிரியான பிரச்சினைகளையும் அது முன் வைக்கிறது. வெளியே சொல்லக் கூசுகின்ற வயணங்களைக்கூட அது விட்டு வைக்கவில்லை. தன் தேசமே பேரினவாதத்தால் செயற்கையாக எல்லைகள் அழித்து மறைக்கப்படும் பொழுது எப்படிப்பட்ட இழப்புகளை, பிரிவுகளை, சொந்த அடையாளமிழத்தல்களை, புலப்பெயர்வுகளை ஒரு சமூக மனிதன் எதிர்கொள்கிறான் என்ற மனித அனுபவத்தை வாசிப்பில் உருவாக்குகிறது. ‘காகம் கலைத்த கனவு’ எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் கவிதையான ‘காகம் கலைத்த கனவு’ என்பது புலம்பெயர்ந்தோர் இலக்கியமே இன்றைய இலக்கியமாகும் தன்மைக்கு ஒரு சான்று. காகம் கலைத்த கனவு கைவேறுகால்வேறாய்அங்கங்கள் பொருத்திப் பொருத்திமனிதர்கள் தயாரிக்கப்படுவதைநேற்று என் கனவில் கண்டேன். கண்கள் இருந்தன ஒரு பைக்குள்மூக்கும் இருந்தது இன்னொன்றில்முழங்கால் பின் மூட்டுவிலா குதி எல்லாமேஏற்கனவே செய்து கடைகளிலே தொங்க-தம்பதியார் வந்தார்கள்புரட்டிப் புரட்டிச் சிலதைப்பார்த்தார்கள் பின்னர்விரும்பியதை எடுத்தார்கள்கொண்டுபோய் கோர்வைசெய்யக் கொடுத்தார்கள். வானம் புடவையாய் வெட்டுண்டுகிடந்தது வீதியாய்நான் நின்ற பாதை. ஒருவன் வந்தான்துவக்கோடு பூனை எலிதேடி அலைவதனைப்பார்த்துப் புன்னகைத்தான்அப்புறமாய் வீட்டுக்குள் நுழைந்துகாலில் இருந்த இருதயத்தைக் கழற்றிமனைவியிடம் கொடுத்துவிட்டுப் படுத்தான். வெயிலோ கொடுமைஎரிச்சல் தாங்கவில்லைஅவன் பெண்டாட்டி எழுந்தாள் போனாள் அங்கிருந்தபொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்தாள்.இரவு!உடனே சூரியன் மறைந்ததுநிலவு!நான் இன்னும் கொஞ்சம் கண்ணயர்ந்து போயிருந்தால் ஆண்டவனைக் குடும்பியிலே இழுத்துதன்னுடைய புறங்காலை வணங்கச் செய்திருப்பாள்மனிசி!காலம் எனக்கு அவ்வளவு மோசமில்லைஎங்கிருந்தோ இந்த நூற்றாண்டுக் காகம்கத்தியதுஇடையில் நின்று முக்கியதுகா.....கா.... இதைவிடவும் கூடுதலாகவும் ஆகக் கூர்மையாகவும் போரின் உக்கிரத்தை, இனப் படுகொலைகளைத் தொலைநோக்குடன் கண்டிக்கும் மனச்சாட்சியுள்ள கவிதை இன்னொன்றும் இத்தொகுதியில் உள்ளது. அது - தொப்பி சப்பாத்துச் சிசு தொப்பிகாற்சட்டை சப்பாத்துஇடுப்பில் ஒரு கத்தி மீசைஅனைத்தோடும் பிள்ளைகள் கருப்பைக்குள் இருந்து குதிக்கின்ற ஒருகாலம் வரும்.அந்ததொப்பி சப்பாத்துச் சிசுக்களின் காலத்தில்பயிர்பச்சை கூட இப்படியாய் இருக்காது.எல்லாம் தருணத்தில் ஒத்தோடும்.சோளம் மீசையுடன் நிற்காது.மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்கின்றதுவக்கை ஓலைக்குள் மறைத்துவைத்து ஈனும்.வெள்ளை சிவப்புஇளநீலம் மஞ்சள்என்று கண்ணுக்குக் குளிர்த்தியினைத் தருகின்றபூமரங்கள் கூடசமயத்திற்கொத்தாற்போலத் துப்பாக்கிச் சன்னத்தைஅரும்பி அரும்பிவாசலெல்லாம் சும்மா தேவையின்றிச் சொரியும். குண்டு குலைகுலையாய் தென்னைகளில் தொங்கும்இளநீர் எதற்கு?மனிதக் குருதியிலே தாகத்தைத் தணிக்கின்றதலைமுறைக்குள் சீவிக்கும்,கொய்யா முள்ளாத்தைஎலுமிச்சை அத்தனையும்நீருறுஞ்சி இப்போது காய்க்கின்ற பச்சைக்காய்இரத்தம் உறுஞ்சும் அந்நேரம் காய்க்காது. வற்றாளைக் கொடி நட்டால்அதில் விளையும் நிலக்கண்ணிவெண்டி வரைப்பீக்கைநிலக்கடலை தக்காளிஎல்லா உருப்படியும் சதை கொட்டை இல்லாமல்,முகர்ந்தால் இறக்கும்நச்சுப் பொருளாகஎடுத்தால் அதிரும்தெருக்குண்டு வடிவாகஉண்டாகிப் பிணமுண்ணும் பேய்யுகத்தை வழி நடத்த...உள்ளியும் உலுவாவும் சமைத்துண்டு ருசிபார்க்கும்மனிதர் எவரிருப்பார்?கடுகு பொரித்த வாசம்தான் கிளம்புதற்கும்ஆட்கள் அன்றிருக்கார்!இவர்கள்பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்புராதன மனிதர்களாய்ப் போவர். இவ்வாறாக புலம்பெயர்ந்தோர் படைப்பிலக்கியம், பேரினவாத எதிர்ப்புக் கொள்கையையும் பெருந்தேசியவாதம் என்பது பின்னொருநாள் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்குத்தான் வழிவகுக்கும் என்ற நுண்ணரசியல் உண்மையையும் இவற்றை ஆதரிக்கும் இலக்கியவாதிகள் உட்பட எவரும் போரழிவாம் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாமல் “பொக்கணிக் கொடியோடு பிறந்த ஒருவகைப்புராதன மனிதர்களாய்ப் போவர்” என்ற எச்சரிக்கையையும் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. நன்றி: cOlaikkiLi (U. L. M. Atheek), kAkam kalaitta kanavu (in Tamil Script, Unicode format). E-text Preparation: Dr. N. Kannan, Boeblingen, Germany & R. Padmanabha Iyer, London, UK. PDF and Web version: Dr. K. Kalyanasundaram, Lausanne, SwitzerlandSource acknowledgement: Suvadugal Pathippagam, Herslebs GT-43, 0578 Oslo 5, Norway) **** (புதுவைப் பல்கலைக் கழகம், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தின் பயிலரங்கத்தில் 29.01.2007 அன்று வாசித்தது)

உயர்வான நோக்கம் எது? - பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கோட்பாட்டுப் பாடல்

உயர்வான நோக்கம் எது? - பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கோட்பாட்டுப் பாடல் - தேவமைந்தன் “பணத்தால் ஒரு மனிதனை மதிப்பது என்றால் ‘ரிசர்வ் பேங்’கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் - பெரிய ‘லைப்ரெரி’யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளொபீடியா’..வை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகமானவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல..தன்னைப் பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகப் பணியாற்றவே மற்ற மனித சீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி - தன்னலத்தையும் தன் மானாபிமானத்தையும் விட்டு எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற சீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான்” என்று பெரியார் 1945ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவைக் ‘குடி அரசு’ 14/4/1945 இதழ் வெளியிட்டது. முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் பெருஞ்சித்திரனார் பாடினார்: “தனிமானம் கருதாமல் தனிநலத்தை விரும்பாமல் தமிழ்மானம் தமிழர்நலம் கருதுவோர்கள் இனியேனும் தமிழ்நிலத்தில் எழுந்திடுக! பொதுத்தொண்டில் இறங்கிடுக! எந்தமிழர்க் கேற்றம் காண்க!” (கனிச்சாறு 1:50 ‘தவிராமல் தமிழ்நலம் காக்க!’) சமூகத் தொண்டுக்குப் பெரியார் அறிவுறுத்திய கோட்பாடு, தலைமுறை ஒன்றின்பின் தமிழ்த் தொண்டுக்குப் பெருஞ்சித்திரனாரால் அறிவுறுத்தப்படுகிறது என்றால் அதன் பொருள் என்ன? சமூகம் திருந்திப் பகுத்தறிவு பெற்ற பின்னரே, மொழியினமும் மொழிநலமும் - பழைய தொண்டுக் கோட்பாட்டைப் பின்பற்றியே வென்றெடுக்கப்பெறக் கூடியவை என்பதுதான். பொதுநல உணர்வு ஒருவர்க்கு இல்லாது போனால் தொண்டு புரியும் எண்ணமே உள்ளத்தெழாது. ‘வாழ்வுக்கு நோக்கம் தேவை!’ என்ற தலைப்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‘தென்மொழி’ இதழில் எழுதிய பாடல், வாழ்வின் அடிப்படையைக் கல்லி எடுத்து ஆகவும் எளிமையாய் எடுத்துக் கூறி வலியுறுத்துகிறது. நோக்கம் என்ற ஒன்றே இல்லாதவர்கள் இருக்கின்றார்கள். “கற்கின்ற காளையர்க்கும் கன்னியர்க்கும் இக்கால் கல்வியிலே பிடிப்பில்லை; அறிவிலில்லை ஆர்வம்! சொற்குன்றும் மொழிகளிலே சோர்வுபடப் பேசிச் சோற்றுக்கு வாழ்வமைப்பார்; உள்ளநலங் காணார்!” (கனிச்சாறு 1:29 ‘தமிழ் நெஞ்சம்!’) நோக்கம் இல்லாமல் போனால் என்ன ஆகும்? வாழ்க்கைக்கு என்று நோக்கம் ஒன்று வேண்டும். இல்லாவிட்டால் நொந்துபோய்ச் சாகவே நேரும். ‘நொந்தது சாகும்’ என்ற பாரதியின் புதிய ஆத்திசூடியின் கூற்று(புதிய ஆத்திசூடி:63) செயல்புரியத் தொடங்கும். நொந்துபோய் வாழ்பவருக்கு ஊக்கமும் இருக்காது. அதைப் பிறப்பிக்கும் உள்ளமும் நொடிந்து மடியும். எதிலும் சலிப்பு வருவதால் உழைப்பிலும் போதுமான பயன் விளையாது. உலகியலில் ஆர்வம் வராது. இனிப்பு கார்ப்பு கைப்பு உவர்ப்பு துவர்ப்பு புளிப்பு என்ற அறுசுவை வாழ்வில் புளிப்பு ஒன்றே ஓங்கி மேலும் சலிப்பை ஊட்டி வருத்தும். செல்வம் உற்ற பொழுது ஓடிவந்து சுற்றமாய்ச் சுற்றும் உறவுகள் எல்லாமும் அலுத்துச் சலித்து ஓய்ந்து போனவரைப் பொருட்படுத்தாது போனாலும் தாழ்வில்லை; கெக்கலி கொட்டிச் சிரிக்கும். “நோக்கம்’ எனஒன்(று) இல்லாது போனால், வாழ்க்கை நொய்ந்தே போகும்! - நம் உள்ளம் நொடிந்தே சாகும்! ஊக்கம் குறையும்: உழைப்பும் சலிக்கும்; உலகில் எதுவும் புளிக்கும்! - நம் உறவுகள் பார்த்தே இளிக்கும்! உருப்படியாய் எதுவும் செய்யத் தோன்றாது. ஏற்கனவே உள்ள அறிவும் குறைந்து போகும். அல்லல் படையெடுத்து வந்து தண்டு ஊன்றும். தம் மேல் பெற்றோரும் உற்றோரும் தோழரும் இயல்பாகக் காட்டுகின்ற அன்பு கூட மிகவும் கசப்பாகத் தோன்றும். மன அழுத்தம் ஏற்பட்டு உடலும் நலியும். நெஞ்சத்தில் வீண் அச்சங்கள் தோன்றுவதால் பொல்லாத் தவிப்பும் ஏற்படும். விளைவாகத் தற்கொலைக்கும் உள்ளம் திட்டமிடும். “ஆக்கம் குறையும்; அறிவும் மயங்கும்! அல்லல் படையொடு ஊன்றும்! - பிறர் அன்பும் கசப்பாய்த் தோன்றும்! தாக்கம் வந்தே உடலை வருத்தும்! தவிப்பும் நெஞ்சினை இறுக்கும் - நமைத் தற்கொலை செய்திடச் சறுக்கும்! “என் நோக்கம் பணத்தை ஈட்டுவதே!” என்பவர்களும் நோக்கம் அற்றவர்கள்தாம். ஏனென்றால் பணத்தை ஈட்டத் தொடங்குவார்கள். நாளடைவில் அதைப் பெருக்குவதிலேயே நாட்டம் கொள்வார்கள். ‘மக்கள் பணம்’ ஆகிய அரசு வரியைக் கட்ட வேண்டுமே என்று புழுங்கி, பதுக்குவார்கள். பல பயன்களை விளைவிக்காத பணம், தன்னை வைத்திருப்பவனைக் கொன்றே விடும். “சரி, என் நோக்கம் குணத்தால் சிறப்பது!” என்பவர்கள் மொழிவதைப் பார்த்தால் அது ஏற்புடையது போலவே தோன்றும். ஆனால் அதுவும் உண்மையில் நோக்கம் ஆகாது. ஏனெனில் குணக்குன்றுகளால் அவர்களுக்குத்தான் ஆக்கமே தவிர, ஏனைய குடிபடை(citizens)களுக்கு இல்லை. மேலும் அவர்களுக்கே கொள்ளை கொலை வழிப்பறி முதலான கொடுமைகள் பல எதிர்வருவதும் இயல்பு. “பணத்தை ஈட்டுதல் நோக்கம் ஆகாது; பதுக்கவும் பெருக்கவும் தூண்டும்! - பல பயன்களுக் கதில்வழி வேண்டும்! குணத்தால் சிறப்பதும் வாழ்வில் போதாது; குடிநலம் பெறல்அதில் இல்லை; - பல கொடுமைகள் எதிர்வரின் தொல்லை!” ஆகவே உயர்வான நோக்கம் என்பது, சலித்துச் சலித்துப் பார்த்த பின்பு சல்லடையில் கிடைக்கும் பொன்போல, பொதுநல உணர்வுதான். அதுவே புதுப்புது விளைவுகளுக்கு ஊக்கமும் நினைக்கவே கொடுமையான போர்கள் இல்லாத புதிய உலகுக்கு ஆக்கமும் ஆகும். எது உயர்வு எது இழிவு என்று எண்ணித் திட்டமிட்டுச் செய்தால் வருங்காலத் தலைமுறைகள் புதுமை என்று ஏற்று அதைச் செயல்படுத்துவர். மெய்யாகவே புதுமை என்று ஒன்றிருக்குமானால் இன்றைய நிலையில் “மக்கள் எல்லார்க்கும் எல்லாமும் பொதுவானவை” என்ற அடிப்படையில் அமையும் பொதுமை அரசமைப்புச் சட்டமே! “பொதுநல உணர்வே உயர்வான நோக்கம்; புதுப்புது விளைவுக்கும் ஊக்கம்! - கொடும் போரிலா உலகுக்கும் ஆக்கம்! எதுஉயர்(வு) எதுஇழி(வு) என்றெண்ணிச் செய்க! இனிவரும் மக்கட்குப் புதுமை! மக்கள் எல்லார்க்கும் எல்லாமே பொதுமை!” உயர்வான நோக்கம் பற்றிய கோட்பாட்டுப் பாடலை, பாவலரேறு பெருஞ்சித்திரனார் அளவுக்கு அவரது சமகாலப் பாவலர்கள் இயற்றியிருப்பார்களா? இயற்றியிருந்தாலும் இந்த அளவுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் அது குறித்துப் பாடலிலேயே கோட்பாட்டை உருவாக்கியிருப்பார்களா? நன்றி: கீற்று.காம்