7.9.05

வாழவேண்டிய வாழ்க்கை

எத்தனையோ பூமரங்கள்! பூக்களவை வார்ப்புக்கள்! பார்க்கின்ற இடம்தோறும் பறவைவண்ண சாலங்கள்! பித்தர்போல் நமையாக்கப் பேசிவைத்த செயல்முறைகள்! இளம்பருவத் தூய்மைநிறை இன்பமிகு வடிவங்கள்! இத்தனை இருந்திருந்தும் இவைநம்மை ஈர்க்காமல் செய்திடவே நமைச்சுற்றிச் சுற்றத்தின் தொல்லைகள்! வைத்தபல சிக்கல்கள்! சிந்தனையின் சூழ்ச்சிகள்...... வித்தினையும் கடக்கின்ற விளைசெடியின் மாற்றங்கள்! பார்க்கின்ற குழந்தைதன் பழமுகத்தை நாடாமல் தேர் ஆடித் தெருவில்வரும் தோற்றம்போல் இளமகளிர் சேர்க்கின்ற அழகுதனைப் பருகாமல் நாள்தோறும் குந்தி,நின்று குமைந்திருந்து கவலைகள் பட்டிருந்து வேர்க்கின்ற விளையாட்டில் வேதனையை நீக்காமல் வேளைவரும் காலம்வரை வெந்துயரைப் போக்காமல் தூர்க்காத கிணறாகத் துயர்ச்சேற்றில் ஊறிநின்று துன்பத்தை வரவழைத்துத் துயருடன்தான் வாழ்கின்றோம்! இயற்கைத்தாய் உணர்த்துகிறாள் இன்பமிகு பாடங்கள்! இத்தனையும் பார்த்திருந்தும் இயல்பாக உணர்ந்திருந்தும் செயற்கைக்காய் வாழ்கின்றோம்! சேராமல் வாழ்கின்றோம்! ஆமை,தான் முயல் ஆக முயலாமை கேட்டுள்ளோம்! மயக்குகின்ற மல்லிகையும் மல்லிகையாய் உள்ளதன்றி சண்பகமாய்த் தான்மாறி மணக்காமை உணர்ந்துள்ளோம்! செயற்கரிய செயல்களைநாம் செய்வதுவாய் எண்ணிநின்று செயவேண்டும் செயல்களையும் செய்திடவே மறக்கின்றோம்! (தேவமைந்தன், விருந்து, மார்ச் 1975: உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976)

No comments: