17.9.05

படிப்பினைகள்

எளியவர்கள் தோற்றுவிட எத்தரவர் வென்றிடுவர். உழைப்பவர்கள் மோதிக்கொள்ள உலுத்தரவர் உள்நுழைவர். பெற்றவர்கள் பிள்ளைகளை மற்றவர்கள் கொண்டுசெல்வர். கற்றவர்கள் நிலையங்களில் கல்லாதோர் விருதுகொள்வர். காக்கைதன் கூட்டினிலே குயில்சென்று முட்டையிடும். கறையானின் புற்றினிலே கருநாகம் குடியேறும். கானமயில் ஆடுவதை வான்கோழி திறனாயும். காடதிரப் பிளிறிவரும் களிறெதிரே எலிமுறைக்கும். பணமிருந்தால் போதுமவர் எதையும்பெற முடியும். பிணங்கூட மதிப்படையும்; பல்லக்கில் செல்லும். அறிவிருந்தும் அறிவில்லார் கீழ்ப்பணிகள் புரியும் அறிவுடையர் சொல்லெங்கே அம்பலத்தில் ஏறும்? எறும்பெல்லாம் உழைத்துழைத்துச் சேர்த்துவைத்த உணவை சுறுசுறுப்பாய்ப் பெருச்சாளி தோண்டியபின் உண்ணும். வானமதில் விடுதலையாய் சிறகடிக்கும் புறாவை வாட்டமுற்ற வல்லூறு வாய்போடப் பார்க்கும். இது என்ன இது என்ன இதுஎன்ன நண்பா? படிப்பினையா? பாடமா! விழித்தெழுநீ நண்பா...... (1976: புல்வெளி,1980)

No comments: