25.9.05

ஒரு விடியலுக்கு முன் விளைந்த எண்ணப்பதிவுகள்

சற்றுப்பொறு. என்னால் கவர்ச்சியாகவோ - அதிர்ச்சியூட்டும் அழுத்தத்துடனோ எதையும் எழுத முடியாது; மற்றவர்களைப் புண்படுத்தியெழுத - வரவே வராது. மிகையுணர்ச்சி ஊட்டும் எழுத்துகள் வீச்சமெறியும் பலநாள் கருவாட்டு சுண்டக் குழம்பின் சொட்டுகள். சிலருக்கு மிகவும் பிடித்துப் போகலாம். ஆனாலும் எதனோடு, எதற்காக, எதைத் திருப்தி பண்ணிக்கொண்டு அன்றன்று வாழ்வைப் புதுப்பித்துக் கொள்கிறோமோ, அந்த - உடம்புக்கு ஆகாது என்பதையும் நாம் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. மூளை(எ) மனத்துக்கும் மிகையுணர்ச்சி உதவாது. புகைபிடித்த முதற்கணம், முழுமையாக மறுதலித்த உடலும் மனமும் திணிக்கத் திணிக்க ஏற்றுக்கொள்வது, வேறுவழியில்லாததால். சரியானது என்பதால் அல்ல. உடலுக்கும் உளத்துக்கும் மூளைக்கும் மொழிக்கும் வாழ்க்கைக்கும் அப்படியொன்றும் வேறுபாடுஇல்லை.. நிறப்பிரிகை ஒன்றின் வேறுவேறு வண்ண ஒளிப் பாய்ச்சல்களே அவை. கோமாளித்தனமும் பித்துக்கொள்ளித்தனமும் அரசியலில் மட்டுமல்ல; எல்லாத் தளங்களிலும் விலைபோகிறது. கலைநயம் காத்திருக்க வேண்டும்தான். கண்டுகொள்ளப் படுமுன்பே காலம்ஆகவும் வாய்ப்புண்டு. மறுபடியும் பிறப்போம். எழுதுவோம். மாலைவானின் முகில்தொகுப்பு வரைகலையும் வண்ணச் சேர்க்கையும் அடுத்த விடியல் வானத்தில் மீண்டும் பிறப்பதில்லையா? மெழுகுத்திரி எரியும்பொழுது எதுவும் வீணாவதில்லை. இயல்பாய் வாழ்வதால், எழுதுவதால் யாருக்கும் நட்டமில்லை. (தேவமைந்தன், 1977: புல்வெளி[கவிதைத் தொகுப்பு], திசம்பர் 1980)

1 comment:

Ramya Nageswaran said...

நன்றாக இருக்கிறது.