16.8.05

குமிழிகள்

காற்றில் நிரவி மிதக்கும் குமிழிகள் என் உச்சந் தலையிருந்து,மேலே. பார்க்க விருப்பம்தான். மற்றவர்களுக்கும் தெரியவில்லை. என் மிகநெருங்கிய தோழன் தோழிக்குங் கூடத்தான். புலப்பாடற்ற யதார்த்தம் இது. எல்லாரும் உணர்ந்திருப்பார்கள். பரபரத்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வருகையில் சிக்னலில் நின்றிருந்தபொழுது பளிச்சிட்ட எண்ணம் "பச்சை" விழுந்தததும் அடித்துப் பிடித்து வீடு வந்து சேர்ந்ததும் எழுத்தாகப் பதியுமுன் "ஞே"என்று கரைந்து காணாமல் போகிறது. மூழ்கிப்போன டீ.வி. சீரியலிலிருந்து தலையெடுத்து, "'தொடர்' நாயகியின் விசும்பல்கள், கேவல்கள், "ஓ"லங்கள்,குடும்பங்கள், வில்லிகளின் 'க்ளோசப்' முகங்கள், கொடூர வக்கணைகள்-- இவை எல்லாவற்றிலிருந்தும் தற்காலிகமாகவேனும் என்னை மீட்கவந்த நாயகரே!"-- என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, "இந்த முக்கியமான கட்டத்தில் வந்து 'இது'நிற்கிற அழகைப்பார்!" என்ற முகமொழியோடு-- "ஏன் இவ்வளவு நேரம்?" என்னும் எப்பொழுதும் கேட்கும் பதில்வேண்டாக் கேள்வியோடும் "ஃப்ரண்ட்ஸோ'ட 'டீ'க்குடிச்சிட்டுவந்திட்டீங்கதானே?" என்னும் பதில்சொல்லக்கூடாத கேள்வியதைக் கேட்டவுடன். --தேவமைந்தன்

No comments: