27.8.05

எங்கள் இருப்பும் இங்கேதான்!

வெண்புறா சிறகடித்து விண்ணீலப் பெருவெளியில் செவ்வலகு விரித்திசைத்துக் காற்றாட்டும் ஊஞ்சலிலே வெண்பஞ்சு முகிலூடு வேண்டுமட்டும் பறப்பதுபோல்...... செவ்வானம் செழுநிலத்தைத் தழுவிக்கொள்ளும் விளிம்பருகே சாய்கின்ற சூரியன்முன் கருநிறத்து வரைகோடாய் கடல்நாரைப் புள்ளினங்கள் உடல்நீட்டிப் பறப்பதுபோல்...... பரந்தபெரு நீர்க்கடலில் பல்வகையாம் உயிர்மீன்கள் நேர்சென்றும் திரும்பியும் வளைந்தும்பின் வாலடித்தும் எதுவருமோ ஏதுறுமோ என்றெண்ணா தலைவதுபோல்...... இருக்க முடிவதில்லை. வாழும் நொடியொன்றில் தாழும்பல நினைவுகளால் அலைப்புண்டு தடுமாறி கவலைகளால் மொத்துண்டு சாலையில் அடிபட்டுச் செத்தொதுங்கிக் கிடக்கின்ற நாய்போல் உருமாறி நாங்களும்தாம் 'இருக்கின்றோம்'! -தேவமைந்தன் (புதுச்சேரி, 'கவிதாமண்டலம்,'[ஆசிரியர்: மறைந்த 'எஸ்.ஆர்.எஸ்.'],வைகாசி 1980 - இதழிலும், பின்னர் புல்வெளி[1980] கவிதைத் தொகுப்பிலும் வெளிவந்தது.)

1 comment:

நளாயினி said...

நொந்து போனது மனசல்ல தமிழ் சொற்களும் தான். பாராட்டுக்கள்.