19.8.05

ஓ! வண்டிக்காரா......

ஓ! வண்டிக்காரா, வண்டிக்காரா! சற்றே நில்லேன்! சொல்வதைக் கேளேன்! நீண்ட வழிதனில் விழிகளை நாட்டியே காலமும் நேரமும் கடிதே ஏகிடச் செல்லும் வண்டிக்காரனே சற்றுநில். செக்கர் வானில் செழுங்கதிர் சாயவும் பஞ்சுப் பொதிகளாய் முகில்கள் படரவும் இயற்கையின் கூந்தலாய் இருள்தான் நெளியவும் குழந்தை முகமெனத் திங்கள் நகரவும் பொழுதும் போனது: சற்றே நில்லேன். எங்கோ விரைவாய் என்றும் போவதேன்? வளையும் வழிகளில் விழைந்து விரைவதேன்? வலியவுன் மாடுகள் வழிசென்று இளைத்தன. தென்றல் வீச அல்லி சிலிர்க்கும் பொய்கை அதோ பார்! வண்டியை நிறுத்து. நம்மைச் சுமந்தே இழுத்த காளைகள் நீரை அருந்தி மென்புல் நுகர்ந்து நிலத்தில் சாய்ந்து நீள்வால் சுழற்றி மெதுவாய் அசையிட்டு அயரவே விட்டிடு. நாமும் கொஞ்சம் -- மீதிப் பயணம் தொடரும் முன் -- சென்றவை மறந்துதான் சாய்ந்த் திருப்போமே. ( தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976 )

No comments: