9.8.05

மூளைத் தூய்மை

நேரடியாகவே விஷயத்துக்கு வருவோம். வள்ளுவர் சொன்ன புறந்தூய்மை அகந்தூய்மைகளில் இன்று "புறந்தூய்மை ஸ்ப்ரேக்களால் அமையும்" நிலை. அகந்தூய்மைக்கு அகத்தியமான வாய்மை, அண்ணல் காந்தி அடிகளின் தமிழ்நாட்டுப் படங்கள் பலவற்றில் காணக் கிடக்கிறது. நிகழ் உலகில், நாம் சாதிக்கக் கூடியதும் சாதித்தே ஆகவேண்டியதுமான ஒன்றுள்ளது. அதுதான் மூளைத்தூய்மை. விடிகாலையில், நம்மில் சிலர் எழுகிறோம். ஆகச்சிலர் விடியலுக்கு முன்பே எழுந்து விடுகிறோம். இதற்காகக் கர்வம் கூடாது. முன்னிரவில் குடும்பத் தொடர்களும் பின்னிரவில் குற்றத் தொடர்களும் தொ.கா.'வில் பார்க்கவேண்டிய 'பழக்க அடிப்படை-மன உந்துத'லில் ஜீவிக்கும் சகஜீவிகள் பாவம். விடுமுறைகளில் காலை பத்து மணிக்குமேல் எழுவதே 'பிரம்மப் பிரயத்தனம்.' முழுமையாக விழிப்பு வந்து பொருந்தும்பொழுது நண்பகல் வந்துவிட்டதை அறிந்து கொள்கிறார்கள். அப்புறம், பேப்பர் படித்துக்கொண்டே காபி, இத்யாதிகள். இதில் ஒரு தொடர் நிகழ்வு நிகழ்ந்தேறிக்கொண்டே இருக்கிறது. கண்திறந்து கொண்டபின்பு, நம் மூளையில் தொடர்ந்து செய்திகள் கொட்டப்பட்டுக்கொண்டே உள்ளன. குறிப்பிட்ட ஒரு செய்தித்தாளையோ, தெரிவுசெய்த ஒரு தொ.கா. அலைவரிசையையோ வாசிக்கும்/பார்க்கும் நண்பரொருவரிடம் நீங்கள் ஏதேனும் பிரச்சினையொன்றை விவாதித்தீர்கள் என்றால், அதற்கு அவர் சொல்லும் பதில் -- அவர் தொடர்ந்து வாசிக்கும் பத்திரிக்கையின் கோட்பாடாக இருக்கும்; அவர் தொடர்ந்து பார்க்கும் தொ.கா.'வின் பின்னணியில் உள்ள கட்சி/குழுவுடைய மறைமுகப் பிரச்சாரமாக இருக்கும். சென்ற நூற்றாண்டின் நாற்பது-ஐம்பதுகளில் -- 'பெரிசு'களாக இன்றிருக்கும் அன்றைய இளைஞர்கள், தங்களின் மீசையைக்கூட கட்சி பாணியில் வைத்தார்கள். இன்று செல்பேசியாகட்டும், தெருவிளம்பரமாகட்டும், நாட்காட்டியாகட்டும்,எதுதானாகட்டும் - அதில் செய்திகள்,செய்திகள்! இந்தச் செய்திக் குப்பைக் கழி வுகள் நாம் அறியாமலேயே நம் மூளைக்குள் கொட்டப்படுவதிலிருந்து நம் மூளைகளைக் காப்பாற்றிக் கொள்ள "யாதானுஞ் சற்றே" வழியிருந்தால் "கூறீரோ!"..............

1 comment:

Prabakaran said...

Pls read last week kumutham weekly

how to manage our brain

type of sleevs type of datas

prabakaran

nglpraba.blogspot.com