19.2.06

யோசிக்கக் கூட நேரமில்லை!

நெஞ்சறிந்து நாம் சொல்லும் பொய்களில் ஒன்றுதான், "எனக்கு யோசிக்கக்கூட நேரமில்லை!" என்பது. இதை அண்ணல் காந்தியடிகள் சொல்லவில்லை. மண்டைக்குள் அணுகுண்டுக்கான சிந்தனை குடைந்துகொண்டிருந்த ட்ரூமன் மொழியவில்லை. நாம் கூசாமல் சொல்லுகிறோம். விவேகானந்தர் சொன்னார்; "எனக்கு நேரமே இல்லை என்று சொல்பவர்களுக்கு, ஏதாவது ஒரு காரணம் வைத்து, வழக்கறிஞர் ஒருவர் மூலம் 'சம்மன்' அனுப்பிப் பாருங்கள்! அவர்களுக்கு நேரம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவரும்." ஆனால், இந்தக் காலத்தில் சம்மனுக்கும் 'டேக்கா' கொடுக்கத் தெரிந்து கொண்டார்கள்...... தன் 'சமாதியோகம்' பற்றிய சொற்பொழிவில்[பின்னர் இது நூல்வடிவிலும் வெளிவந்துவிட்டது] சுவாமி சிவானந்தர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார். காலம் என்பது என்ன என்றும், நமக்கு நேரம் எவ்வளவு - எப்படியெல்லாம் - போகிறது என்பதைப்பற்றித் துல்லியமாக அறிந்துணர வேண்டுமென்றால், ஒரு 40 நாள்கள் கால அளவு [விடுமுறையில்தான்] செய்தித்தாள் பார்க்காமல்[டி.வி. குறித்து அவர் அந்தக் காலத்தில் அவசியமில்லாததால் சொல்லவில்லை] யாருடைய கடிதமும் வாசிக்காமல், எதையும் எழுதாமல் படிக்காமல், யாருடனும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து பார்க்கவேண்டும் என்றார். அந்த அனுபவம்தான் சமாதியோகம் என்பது என்ன என்பதை இலேசாகப் புரிந்துகொள்வதற்கான அடையாள முயற்சி என்றும் தெரிவித்தார். அன்றாடம் அதிகாலையிலேயே செய்திக்குப்பை அபிஷேகமும் இரவு படுக்கையில் உருளும்வரை பிம்பங்களின் குளியலும் நமக்கு நாமே நடத்திக்கொண்டும் 'ஃபாஸ்ட் ஃபுட்' கடைகளுக்குச் சென்று நம் இரைப்பைக்கும் குடலுக்கும் மாசும் நஞ்சும் ஊட்டிக்கொண்டும் 'வாழ்கிற' நமக்கு இதெல்லாம் காதில் ஏறுமா என்ன? வள்ளுவர் குறள்மொழிந்தார்: "ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல"

No comments: