10.2.06

மீன் -தேவமைந்தன்

அன்பரே, தற்பொழுது என் பரிணாமம் இந்த 'ஜங்க்' காலத்துக்கு ஏற்பவே. பொருளாதாரம் - அகம்புறம், வீட்டிலிருந்து நாடு, நாட்டிலிருந்து வீடு.. வீங்கி. சதா விளம்பரங்கள் துண்டித்தும் தொடர்ந்து தொடர்கள் பார்த்து-- அழுது, விசும்பி, சிரித்து, அதே வசனங்களை வாய்ப்பு நேர்கையில் விடாதென் குடும்பத்திலும் விளம்பி--- வேறுவீடு பார்த்து, தனிவிலகிப்போய், என்னிலிலிருந்தே என்னை விலகவைக்கும் - வினோத ஊடக வார்த்தைகளுக்கெல்லாம் விடாமல் செவிகொடுத்து, கடனோ உடனோ கால்பிடித்து கைபிடித்து வாங்கி; 'இங்க்லீஷ் பேப்பர்' வாங்கி, அப்படியே மடித்த மடிப்புக் குலையாமல் அடுக்கியே வைத்து 'வெய்ட்'டுக்குப் போட்டு; அற்பச் சிறுதொகை அதையும் கூட அடுத்தபெருஞ் செலவுக்கு அச்சாரமாக்கும் நடுத்தரக் குடிமகன், வேறுஎன் செய்வேன்? விலகியே வாழ்வேன். சம்பளம் வாங்கும் வேலைப் பொறுப்பும் ஒழுங்காய் வாழும் வாழ்க்கைப் பொறுப்பும் சுற்றிச் சூழும் நீர்போல் எனக்கு. எதிரிகள் பலப்பலர். விலகி விலகியே நீச்சல் அடிப்பேன். நண்பர்கள் மாறுவர் நாளும் எனக்கு. எவர் என்ன ஆனாலும் எப்படிப் போனாலும் எனக்கென்ன? "பயன்பெறு; தூக்கியெறி" - என்பதுஎன் புனித வாசகம். ''பயன்பெற வாயாத யாரும் எதிர்வந்தால் பாராமல் போயே பழகு'' - அடியேனின் புதிய குறள். தகவமைப்பு உயிர்களை உருவாக்கும் என்பது அறிவியல். என்றால் நிகழ்உலகில் மீனாகவே இருப்பேன் நான். ************************************************************ நன்றி: வார்ப்பு.காம்

No comments: