7.2.06
வளர்ந்திருக்கிறேன், ஐயா! -தேவமைந்தன்
அடையாளம் தெரியாதவராய்
வாழ்வதில் அர்த்தம் உண்டு.
அடையாளம் தெரிவதில்
முரண்பாடு முனைந்து நிற்கும்.
அடையாளங்களால் குலைப்பதும்
எதிர்வில் குலைந்துபோக நேர்வதும்
வினை - எதிர்வினை.
நெற்றியில் தீட்டப்படாவிட்டாலும்
மார்பில் அது பூட்டப்படாவிட்டாலும்
இனம் சாதி குலம் எல்லாம்
நாட்டுடன், அடையாள ஆதிக்கங்களே.
அடையாளம் முதலில் சுகமாகலாம்.
பின்னால் அது பிசாசாய்ப் பீடிக்கும்.
பதவி பலகை புத்தகம் சொற்கள்
உதவி வாக்குறுதி செய்தி தகவல் -
எல்லாம் மர்மக் கைகால் விலங்குகள்.
அடுத்த ஊரில் நகரில் மாநகரில்
அடையாளம் தெரியாதவனாய் உலவுவதில்
உள்ள அனுபவத்தை உணர்ந்த பின்பும்
சொந்த வாழ்க்கையில் சுமப்பதேன்
அடையாளங்கள்?
(போன்சாய் மனிதர்கள், 1993. சிறிய மாற்றங்களுடன்.)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment