16.11.05

ஒரு கை ஓசைகள்

அண்மைய காலத்து வளர்ச்சிகளில் ஒன்று - இணையத் தமிழ் வளர்ந்துள்ள வேகம். வலையிதழ்கள், வலைப்பதிவுகள் என, ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வும் உள்ளவர்கள் நம் தமிழையும் அதன் கவிதை - உரைநடை ஆகியவற்றையும் தமிழர் வரலாற்றையும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவற்றை அறவே புறக்கணிக்கும் போக்கும் கூடவே வளர்ந்துவருகிறது. இதைச் செய்பவர்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ''இதனால் எனக்கு என்ன இலாபம்?'' என்று கேட்கும் - 'இதனால் பயன்களை மட்டும் அடைய விரும்புபவர்கள்' குறித்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. எதையும் உதாரணம் காட்டிச் சொல்வது உத்தமம் என்பார்கள். அதன்படி ஒன்றைச் சொல்லுகிறேன். நான், என் சிந்தனைகள், என் படைப்புகள் என்று மட்டும் வலைப்பதிவுகளைச் செய்துகொண்டிராமல் நமக்குத் தெரிந்து உள்ள நல்ல படைப்பாளர்களையும் அவர்கள் படைத்த நூல்களையும் இணைய உலகில் அறிமுகம் செய்து வைப்போம் என்று இறங்கினேன். மிகவும் வேடிக்கையான 'இம்சைகள்' தேடிவந்தன. ' பானைச் சோற்றுக்கு ஓர் அவிழ் ( வெந்த பருக்கை) பதம்' என்பார்கள். அதுபோல, இதனால் நிகழ்ந்த உரையாடல் ஒன்றை நண்பர்கள்முன் வைக்கிறேன். தொலைபேசி அழைக்கிறது. எதிர்முனையில், தெரிந்தவர் ஒருவர். பேசுகிறார்: ''ஐயா! நீங்கள் மேற்படியார் புத்தகம் பற்றி ஏதோ பதிவு கிதிவு'ங்கறாங்களே அப்படி ஏதாவது வெளியிட்டீங்களா?'' நான் சொல்கிறேன்: ''ஆமாங்க, அதன்பெயர் வலைப்பதிவு. வலைப்பூ'ன்னும் சொல்வாங்க. இன்னொன்று வலையிதழ். அவற்றில் நீங்கள் சொல்'றவருடைய புத்தகம், கிடைக்குமிடம் குறித்து பதிவு எழுதினேன்'ங்க!......ஏன், அதுக்கென்ன இப்போ?......'' ''எதினாச்சியும் குடுத்தாரா அவரு?..'' ''எதுக்குங்க குடுக்கணும்? '' ''பின்ன எதுக்கு செஞ்சீங்க?'' ''இது என்னங்க கேள்வி? நல்ல தமிழ் உணர்வுள்ளவர்.. அவருடைய ஆக்கபூர்வமான புத்தகத்தப் பற்றிப் பதிவு வெளியிடறதுல எந்த ஆதாயமும் எனக்குத் தேவையில்லங்க......'' '' என்ன, இப்படிப் பொறுப்பில்லாம பேசுறீங்க..நண்பரே..ஒங்க வீட்டுக் கரண்ட்டு.. உங்க வீட்'ல கட்டற டெலிபோன் பில்லு..இத்'த எல்லாம் யாருயாருக்கா'வோ தாரை வார்த்துட்டிருக்கீங்க..இருங்க, இருங்க அம்மா'ட்ட சொல்ற விதத்தில சொல்'றேன். சரியா'ப் பூடுவீங்க!......'' எரிச்சலுடன் நன்றி சொல்லிவிட்டுத் தொ.பே. இணைப்பை விலக்கிக் கொண்டேன். உள்ளம் சொல்லியது; ''இவராவது உன்னிடம் வெளிப்படையாகப் பேசினார். வெளிப்படையாகப் பேசாமல் ஒவ்வொரு காதாய்ப் போய் இதுபற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்பவர்களை என்ன செய்வாய்?'' இது கிடக்கட்டும். இது போன்ற பதிவுகளைத் தொடர்புடையவர்களே அக்கறை எடுத்துப் பார்ப்பதில்லை. ''இதனால் எனக்கு 'லைப்ரரி ஆர்டர்' வருமா?'' என்று கேட்டவரும் உண்டு. நாம் அடுத்த பதிவை, தாங்கள் பார்க்கும்வரை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். எப்போது பார்ப்பார்கள், ஏன் இன்னும் பார்க்காமலிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. 'பிரிண்ட்' எடுத்துத் தந்தால்தானே பார்க்க - என்றார் ஒருவர். வலையிதழ் மற்றும் வலைப்பதிவு என்றால் ஒன்று ஆகக்குறைவாக மதிப்பிடுகிறார்கள்; இல்லை மிக அதிகமான முக்கியத்துவம் தருகிறார்கள். இதில், சில வலைப்பதிவுகளில் - இன்னின்ன வலைப்பதிவுகளை 'நான்' பரிந்துரைக்கிறேன் என்றுவேறு ஒருபக்கம் வரிசைப் படுத்திக் காட்டுகிறார்கள். வலைஇதழ்கள் சில தங்கள் வட்டத்தை மட்டுமே சுட்டுகின்றன. விதிவிலக்காக, தனக்கு 'ஓரிழை மட்டுமே' தெரிந்த தமிழ் வலைஇதழாயினும் அதற்கு வழிகாட்டும் நண்பர்களும் இருக்கிறார்கள். வெறும் அரட்டைத்தளங்களாக, மற்றவர்களைக் கொச்சைப் படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிற குழுவாகட்டும், வலைப்பதிவாகட்டும், வலையிதழே ஆகட்டும் - ஒருநாள் அதனதன் விளிம்பில் வந்து நிற்க நேரும்பொழுது வெறுமையே வந்து வாட்டும். ஒரு கை ஓசை எதுவானாலும் ஆகட்டும்; அதற்குக் காலம் தரும் பரிசு வெறுமை மட்டும்தான்.

4 comments:

மாதங்கி said...

நல்ல ஒரு புத்தகம் பற்றி பிறருடன் பகிர்ந்துகொண்டால், அதற்க்கு இப்படி ஒரு பேச்சா,..கடவுளே

மாதங்கி said...

மன்னிக்கவும் அதற்கு என்று வரவேண்டும்

ஏஜண்ட் NJ said...

//ஒரு கை ஓசை எதுவானாலும் ஆகட்டும்; அதற்குக் காலம் தரும் பரிசு வெறுமை மட்டும்தான்.//

நன்றாக சொன்னீர்கள்.

- comment posted by: NJ

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

-மதி