13.11.05

ஆகாசம்பட்டு - கி.ராஜநாராயணன் நோக்கு

கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் கி.ராஜநாராயணன் நல்ல முதிர்ந்த சிந்தனையாளர். நாட்டுப்புறத்தைப் பெருமைப்படுத்தியவர்களில் கி.ரா.வும் கோவை க.அய்யாமுத்து[கவிஞர்/உழவர்]வும் குறிப்பிடத்தக்கவர்கள். கி.ரா.வுக்குக் கதைசொல்வது என்பது கைவந்த கலை. அய்யாமுத்து போலவே ஆகாசம்பட்டு சேஷாசலமும் முழுநேர உழவுத் தொழிலாளர்தாம். ஒரே வேறுபாடு, பின்னவர் - கல்லூரிக்கல்வியாகிய இளம் விலங்கியல் படித்தவர். 1990 ஆம் ஆண்டு 'ஆகாசம்பட்டு'[மார்ச்சு,22]க்குக் கி.ரா. அணிந்துரை தந்திருக்கிறார். ஆறாண்டுக்குமேல் தான் எழுதிவந்த வெண்பாக்களை, பேராசிரியர் மீரா அவர்களின் 'அன்னம்' வெளியீடாகக் கொண்டுவந்த 'முழுநேர விவசாயி'யான சேஷாசலத்துக்கு, 'வாழ்க ஆகாசம்பட்டு' என்றே தலைப்பிட்டு வாழ்த்தி நான்கு பக்கங்கள், தன் வற்றாத மக்கள்மொழிநடையில் தந்துள்ள பெருந்தன்மையை, அவருடன் ஒப்பிடுகையில் 'பிரபலம்' குறைந்த எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்! கடிதம் எழுதும் பாணியில், ''அன்பார்ந்த ஆகாசம்பட்டு சேஷாசலம் அவர்களுக்கு'' என்று தொடங்கும் கி.ரா. அணிந்துரையின் பகுதிகள் சில: ''எந்த நேரமானாலும் வீடு போயி விழுந்தறணும் என்கிற சம்சாரிபாணி, என்னைப்போல -- எல்லா சம்சாரிகளை யும் போலவே -- உங்களையும் பிடித்து ஆட்டுவதைப் பார்க்கிறேன். வீட்டை விட்டு வெளியே போனால், இந்த மாதரியான வாகனப் பெருக்கமும் சிறுத்த சாலைகளும் வேக ஒழுங்கீனங்களும் நிறைந்த இந்தக் காலத்தில் வீடு வந்து சேருகிற வரை நிம்மதி இருக்காதுதான் பெண்டிருக்கு.'' ''கிராமத்தையும், கிராமத்தானையும் அவனது சிந்தனைகளையும் அப்படியே வெண்பாக்களில் வடித்துத் தள்ளியிருக்கிறீர்கள். வெண்பாவை வா என்றால் வருகிறது; போ என்றால் போகிறது; அப்படி வசக்கி வைத்திருக்கிறீர்கள் அந்தப் புலியை.'' ''நம் காலத்தில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் இதில்[ வெண்பா இயற்றுவதில்] வல்லாள கண்டனாகத் திகழ்ந்தார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் இதில் வித்தியாசமான சோதனைகளைச் செய்து பார்த்திருக்கிறார். பேச்சுத்தமிழை அப்படியே கவிதையில் மடக்கிக் கொண்டுவந்த மூலபுருசர் இவர்தான் தமிழில். ''பண்ணாத வம்பெல்லாம் பண்ணிவச்சி, இன்னைக்குக் கண்ணால மின்னா கசக்குதோ? - அண்ணாத்தே! ஆயாவந்தா லுன்னை அடுப்பில் முறிச்சி வப்பா(ள்) போயேன் தொலைந்து போ!'' என்று ஒரு தெக்கத்திப்பெண் தனது 'காதல'னைப் பார்த்துச் சொல்லுகிறமாதிரி எழுதிய இந்த வெண்பாவை நாங்கள் வாய்க்குவாய் சொல்லி மகிழ்வதுண்டு. ''என்னவெவ சாயம்! எழவுவெவ சாயம் பொன்னு வெளையற பூமியாம்ல! இண்ணைக்கும் போர்வையில பாதியே சோமனாச்சி! அண்ணாச்சி, வேர்வையில பாதி மழை!'' கரிசல் காட்டு சம்சாரியும் ஆகாசம்பட்டு விவசாயியும் மானாவாரி வர்க்கம் என்கிற முறையில் கூட்டாளிகள்தான். இவர்களை உவமித்துத்தான் சகோரப் பறவையை சொன்னார்களோ என்று நினைக்க வேண்டியதிருக்கிறது. மண்ணில் கால் பாவாமல் பேய்போல் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஏட்டுத் தமிழ்மொழியை மனித மொழியில் - பேச்சுத்தமிழில் - அதிலும் வெண்பாக்களில் பொதிந்து சாதனை புரிந்திருக்கிறீர்கள். மக்கள் நாவில்த்தான் சரஸ்வதிதேவி வாசம் பண்ணுகிறாள் என்பதை உங்கள் கவிதைகள் அழகாகச் சொல்லிக் காட்டுகின்றன. தமிழ்க்கவிதை வளர்ச்சியில் இது ஒரு திருப்புமுனை. வாழ்க ஆகாசம்பட்டு.''

3 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்லதொரு பதிவு.

நன்றி!

-மதி

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

மதி கந்தசாமி அவர்களே, தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

கொடைக்கானல் அவர்களே, தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.