2.4.06

அவனைத் தெரியும்தானே?...-தேவமைந்தன்

மூலைக்கடையில் ஒற்றைச் சிகரெட்டுக்காய் மெலிந்த சட்டைப் பையைத் துழாவுகிறானே, பார்! அவன் எல்லாருக்காகவும் எழுதி எழுதி, சொல்லிச் சொல்லிச் சலித்துப் போய்விட்டான். அவனுக்கு என்ன தெரியும் என்று இறுமாப்புடன் கேட்கிறாய். பலபல விளக்கங்களை அந்த அப்பாவியிடம் தொடர்ந்து கோருகிறாய். உன்னைப்போல் அவன் அறிவுஜீவியா, என்ன? அவனுக்கு மார்க்ஸையும் லெனினையும் வள்ளுவனையும் மட்டுமே தெரியும். அதுவும் தெளிவாக மட்டுமே. க்யூபாவின் கஷ்டங்களின்பொழுது அரிசியைத் திரட்டி அனுப்பச் சேர்ந்த சாதாரணமானவர்கள் கூட்டத்தில் ஒருவன் அவன். சகமானுட ஜென்மங்களின் பாடுகள் சகமனிதர்களின் ‘லோல்படுதல்’கள், ‘லொங்கழிதல்கள்’ மட்டுமே அறிந்துணர்ந்த அவனையும் அவன் உறுதி என்று நம்பும் இடதுசாரிக் கொள்கையையும் நீயும் உன் விமர்சனப் பிதாமகரும் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கென்றே இருக்கும் பெரு,சிறு பத்திரிக்கைகளின் பரவல் பலங்கொண்டு சாடுவதில்தான் மெய்யாக சிறுபிள்ளைத்தனம் தெரிகிறது. கொழுத்த புத்தகங்களை உருவாக்க உதவும் அரசாங்க சம்பளமும்; ‘ரிச்’சாக வெளியிட்டு உலகெங்கும் ஆள்பிடித்துப் பரப்பும் பிரத்தியேக சாமர்த்தியமும்; ஆதிக்க வெறிப்போடு பழைய தோழர்களை அவமதிக்கும் ஏக்கழுத்தமும் அவனுக்கு இல்லைதான். அவனுக்குத் தெரிந்ததாக எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆம். அழுத்திவைக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின், எந்த ஆட்சியிலும் சுரண்டப்படுபவர்களின் கண்ணீர் அவன் கன்னங்களில் மட்டுமல்ல, எழுத்துகளிலும் வழியும்.

No comments: