1.5.08

கொழுக்கட்டைச் சாமியார் கதை -தேவமைந்தன் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இன்று சிற்றூர்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்தான் கொழுக்கட்டைச் சாமியார் மடம் இருக்கிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? பொதுவாக, மக்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள். நதியின் வரலாற்றையும் சாமியாரின் வரலாற்றையும் விசாரிக்கக் கூடாது என்று. அப்படியே விசாரித்தாலும் கிடைப்பது உண்மையா என்று யாருக்குத் தெரியும்! ஆனால் கொழுக்கட்டைச் சாமியாருக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது என்று ஓர் உள்ளூர் அம்மாள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ஆஜானுபாகுவான அவர் வடநாட்டிலிருந்து வந்தவராம். வந்தபொழுது, அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை. வந்தபிறகும் தமிழை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை. இந்தச் சனங்களுக்கு 'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் தெரிந்தால் போதும் என்று கொழுக்கட்டைச் சாமியார் கணக்குப் போட்டார். நம்ம சனங்களைப் பற்றி அவர் கணக்கு இதில் மட்டுமல்ல, பலவற்றிலும் தவறானது பற்றி இந்தக் கதை, தான் முடிவதற்கு முன் வாக்குமூலம்போல் சொல்லிவிடப் போகிறது... அப்பொழுதுதான் தெரியும், நம்ம தமிழ்ச் சனத்தை ஏமாத்த நினைக்கிறவங்க கதி என்ன ஆகும் என்பது. சும்மாவா பாடினாரு நம்ம எம்ஜியாரு? "தவறு என்பது தவறிச் செய்வது / தப்பு என்பது தெரிந்து செய்வது / தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் / தப்பு செய்தவன் வருந்தி யாகணும்"ன்னு.. கொ.சா. திருந்தலை..வருந்தவுமில்லை.. கடைசி'ல என்ன ஆச்சு? *** அந்த ஊருக்குக் கையில் காலணாகூட இல்லாமல் அவர் வந்தார். அந்தக் காலத்திய மரக்காணம் சாலையான இந்தக் காலத்திய கிழக்குக் கடற்கரைச் சாலையில், இப்பொழுது புகழ்பெற்றிருக்கும் 'புரோட்டா'க் கடைபற்றி ஒருவரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். தற்காலம் பிரான்சிலிருந்து வருபவர்கள் ''மெனக்கெட்டுக் கார் போட்டுக் கொண்டு போய்," குறைந்த அளவு பத்துப் புரோட்டாவாவது குருமா மற்றும் பட்டாணிக் கலவையோடு காலிபண்ணி வருகிறார்கள். அதே இடத்தில் - அன்று, கொழுக்கட்டைகளைக் கூடையிலேந்திக்கொண்டுபோய் மரத்தடியில் வைத்து விற்றுப் பிழைத்திருந்தாள் ஒரு பாட்டி. வியாபாரத்துக்குப் போவதற்காக கொழுக்கட்டை சுட்டுவிட்டு குடிசைக்கு வெளியில் வந்தாள் அவள். அங்கே பசியோடு நின்றிருந்தவர், மொழி தெரியாததால், அவர் அந்தப் பாட்டிமுன் கையை ஏந்தினார். பாட்டி உடனே வீட்டினுள் ஓடி("ஓடி" என்பது, எம்.கே.டி. பாகவதர் காலப் படங்களை நினைவூட்டவேண்டும்; இல்லையென்றால், அவ்வாறு நினைவூட்டப் பெறாதவர்கள், சென்ற நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!) சூடான கொழுக்கட்டைகளை ஒரு வாழைநறுக்கில் இட்டுக் கொண்டுவந்து அந்த வடநாட்டுக்காரரின் சிவப்புக் கைகளில் தர, அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.(ரொம்பவும் சூடோ?) நன்றியுணர்வு என்று அந்தப் பாட்டி எடுத்துக் கொண்டாள். சாப்பிட்டதும், அவருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்துப்போனது. பாட்டியிடம் அந்தப் பலகாரம் என்ன என்று இந்தியில் கேட்டார். கொடுத்த பலகாரம் பற்றிக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள மொழி தேவையா என்ன?(பிரகாஷ்ராஜ் கவனிக்க) 'கொழுக்கட்டை' என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள் பாட்டி. அவரே அப்படித்தான் இருந்தார் என்பது, வேறு செய்தி. 'கொல்லுக்கட்டாய்' என்று உரக்கச் சொல்லிப் பார்த்தவர், பாட்டியால் திருத்தப்பட்டு 'கொல்லுக்கட்டை' 'கொள்ளுக்கட்டை' என்றெல்லாம் சொல்லி, மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு கொழுக்கட்டை என்று சரியாகச் சொல்ல அரைமணி நேரமாவது ஆகியிருக்கும். இதன் விளைவாக, அந்த ஊரிலேயே தங்கிக் கொண்டு, அவர் திறமையாக 'மேஜிக்' செய்ய ஆரம்பித்து, சனங்களை அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பட்டணத்திலிருந்தும் ஈர்க்கத் தொடங்கிய காலகட்டத்தில், முதல் 'சிஷ்யை'(தலைமைச் சிஷ்யை)யாக அந்தப் பாட்டிதான் ஆனார்.('ஆனாள்' என்பது, 'ஆனார்' ஆவது.. இப்படித்தான்) தலைமைச் சிஷ்யையே அனுபவசாலி ஆனதால், ஒரு கொழுக்கட்டை விற்று வந்த காசுபோல் பலமடங்கு ஒரு சீடரைச் சேர்த்துக் கொள்வதில் தேறியது. அப்புறமென்ன? மடம் வந்தது. மண்டபம் வந்தது. சீடகோடிகள் தங்குவதற்குப் பெரிய தங்குமிடம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இன்னும் என்னென்னவோ வந்தன. முன்பே சொன்னதுபோல், 'மொழி'யைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அருள்வாக்கும் சொல்லத் தொடங்கினார் அவர். அவர் சொல்லும் அருள்வாக்குகளில் கட்டாயம் கொழுக்கட்டை இடம்பெறும். அதை வைத்தே மக்களை - அவரவர்கள் மனதில் இருக்கும் சேதிகளைத் தான் சொன்னதாக அர்த்தப் படுத்திக் கொள்ளச் செய்வார் சாமியார். அப்படியே அவர்கள் குழம்பினாலும், பக்கத்தில் இருக்கும் 'சிஷ்ய'கோடிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு 'வியாக்கியானம்' எடுத்துவிட்டு அசத்துவார்கள். வந்த ஒருவர்கூட அதிருப்தியாகத் திரும்பிச் சென்றதில்லை என்றால் பாருங்களேன்! கொழுக்கட்டைச் சாமியார் என்று அவர் அன்புடன் அழைக்கப்படுவதற்குக் காரணங்களான 'அருள் வாக்கு'கள் சில......... "சாமீய்......எம் புள்ளை கெட்ட சகவாசத்தால சீர்கெட்டு திரியிறான் சாமீய்.. எப்பத்தான் அவன் திருந்துவான்?........" "திருந்துவாம்'மா.. திருந்துவான்..கொழுக்கட்டை நல்லா வேந்ததும் திருந்திடுவான்...போ..போ.. காசுபோட்டுடு.." "சாமி என்ன சொல்றாருங்க?......என்னமோ கொழுக்கட்ட... அத்த இத்த'ன்னுட்டு.." "அதுவா..ஒனக்குப் பக்குவம் இல்ல.. அதான் சாமி வெளக்கமாச் சொல்றது புரியல்ல..கொழுக்கட்டை நல்லா வேந்தாக்காத்தான் நீ அத்தத் தின்னுவே! அத்தப்போலவே ஒம் பையனுக்கு கிரகங்கள்'ல்லாம் கூடி நன்மை செய்யற காலம் வரப்போகுது.. அப்ப அவன் திருந்தீடுவான்'கிறாரு சாமி.. சரி..சரி அந்த உண்டி'ல தாரளமாப் போட்டுட்டுப் போ.. எல்லாம் நல்லா நடக்கும் போ.." (இது பக்கத்தில் உள்ள சீடர் கூற்று) விளக்கவே முடியாத மாதிரி 'சாமி' சொல்லிடுச்சுனா?... கொழுக்கட்டைப் பாட்டிக்கு ஆள் போகும். கொழுக்கட்டை சம்பந்தமான அத்தனை தொழில் நுணுக்கங்களையும் அறிந்தவரல்லவா தலைமைச் சிஷ்யையான அவர்? அப்படித்தான் ஒருநாள் ஆனது... தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை என்று முறையிட்ட, பட்டணத்திலிருந்து வந்த பணக்காரப்பெண் ஒருவரிடம் - ''ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா இப்'டியா இருப்ப....?" என்று கொழுக்கட்டை சாமியார் சொல்ல, பட்டணத்துப் பணக்காரப்பெண் அவர் 'வாக்கை' 'அசிங்கமாக'ப் புரிந்துகொண்டு அழ ஆரம்பிக்க, ஆள் போனது. ஓடி வந்தார் மேனாள் கொ. பாட்டி மற்றும் த.சிஷ்யை. ''அட, என்னாத்துக்கும்மா அழற..சாமியார் அப்படியென்ன வாக்குச் சொல்லிப் போட்டாரு?" என்று கேட்க, ப.ப.பெண் அந்த வாக்கைத் தயங்கித் தயங்கிச் சொல்ல, விபரீதம் புரிந்துகொண்டு, சூழ்நிலையை உடனடியாக மாற்றும் விதத்தில் "ஓ!'வென்று உரக்கச் சிரித்து, அதே சமயம், சாமியாருக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யர்களை "சமாளிக்கத் தெரியாத மடையன்'களா" என்று லேசர் பார்வையில் முறைத்துப் பாட்டி சொன்னதாவது: "அட என்னம்மா..சாதாரணமான விசயம் புரிஞ்சிக்காம..பட்டணத்துல பெறந்து நாலு எழுத்துப் படிச்சுட்டா சாமி வாக்கு விளங்கிடுமா...(ப.ப.பெண் முகத்தில் நம்பிக்கை - இலேசான புன்முறுவல்...இந்த 'சிக்னல்' போதாதா பாட்டிக்கு?).. நம்பணும்'மா, நம்பணும்..நம்பனவங்களுக்குத்தான்நடராசன்...நம்பாதவங்களுக்கு?..(மறந்தே போனது!) சரி..சரி அத்த விடு.. சாமி சொல்லுது.. "ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா" - அப்படின்னா இன்னா தெரியுமா..(பாட்டி மூளையில் பளீர் வெளிச்சம், டிடர்ஜெண்ட் விளம்பரத்தில் வரும் அடுத்த வீட்டு ஆண் சட்டையைப் போல)ஆங்.. ஒவ்வொரு செவ்வா வெள்ளியும் எண்ணத் தேச்சு முழுவோணும்.. கோயிலுக்குப்போய் அரச மரத்த அம்பத்தியோரு தடவை 'கொழந்த பொறக்கணும்'னு தெடமா வேண்டிக்கிட்டு சுத்திச்சுத்தி வரணும்.. குலதெய்வத்துக்கு நேந்துக்கோணும்.. ஏழ'பாழகளுக்கு அன்னதானம் பண்ணோணும்.. இத்தத்தான் சாமியார் 'சூசகமா'ச் சொன்னா புரிஞ்சுக்காம..அவர் பேரே கொழுக்கட்டைச் சாமி..பின்ன எப்படிச் சொல்வாருனு நெனைக்கிறே, நீ போயி........" நன்றியுடன் சிரித்த அந்தப் பட்டணத்துப் பணக்காரப் பெண், ஒரு நோட்டுக்கற்றையை உண்டியில் திணித்துப்போட்டுவிட்டு, கொ.சாமியார் முன் விழுந்து வணங்கி, தன்மேல் அன்புபூண்டு "உரிய" விளக்கம் தந்த தலமைச் சிஷ்யையின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு காருக்குச் செல்ல, அங்குள்ளோர் அனைவரும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். அப்புறம் கொழுக்கட்டைப் பாட்டி கைகளால் அவர்கள் மொத்துப் பட்டது கிளைக்கதை. இப்படியாக நாள்கள் இனிதே போக, சாமியாருக்கு திடீரென்று கிறுக்குப் பிடித்தது. மண்டபத்தின் சுவர்மேல் ஒருவர் கைவைத்தால் போதும். ஓடிவந்து, 'என்னோட கொழுக்கட்டை!" என்று கூவி அந்த ஆள் சுவர்மேலிருக்கும் தன் கையை எடுக்கும் வரை கலாட்டா பண்ணிவிடுவார். இன்னும் இதுபோல எத்தனையோ தலைவலிகளைக் கொடுக்கத் தொடங்கிய அவர், படிப்படியாக வளர்ந்து மண்டையிடி கொடுக்கவும் தொடங்கினார். தன் சிஷ்யகோடிகளையும் ஏன் தலைமைச் சிஷ்யையும்கூட, "இதெலாம் என் கொழுக்கட்டை.. எல்லாம் வெளிய போங்க!" என்று மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கவே, அவர்களெல்லாம் கூடி ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். அடுத்த நாள் விடியலுக்கு முன்னால்.. மத்திய அரசுப் பணியிலுள்ள கொ.சா. சீடர் ஒருவர் வந்து என்னை அவசர அவசரமாக அழைத்துச் சென்றார். விவரம் கேட்ட என்னிடம் மூச்சிறைக்க "கொழுக்கட்டை சாமி வேந்துடுச்சு!"(அதாவது முக்தி...கட்டாய ஓய்வோ?!) என்றார். போனேன். மடத்துக்குள்ளோ, மண்டபத்திலோ வைக்காமல். வெளியில் இருந்த வயலருகே அவரைக் கட்டிலின் மேல் வெள்ளைத் துணியொன்றில் போர்த்து(கட்டி!) வைத்திருந்தார்கள். 'அதன்' முன் நின்று கைக்குப்பி வணங்கினேன். கூப்பிடுவதுபோல் இருந்தது. பக்கத்தில் சென்றேன். அந்த மூட்டைக்குள்ளிருந்து "நா'ந்தான்..கொழுக்கட்டை......" என்று ஒரு தீனக்குரல். "பாவிகளா! என்ன செய்தீர்கள்?" என்பதற்குள் அங்கு திரண்டிருந்த சிஷ்யகோ(கே)டிகள் என்னை முரட்டுத் தனமாகத் தள்ளிவிட்டு, கொழுக்கட்டைப் பாட்டி/தலைமை சிஷ்யையின் ஆணையேற்று, அந்தக் கட்டிலோடு அவரைக் கட்டாய சமாதியாக்க(உயிரோடு புதைக்க) எடுத்துச் சென்றார்கள். நொந்துபோய் அங்கிருந்து நான் அகல, அம்மாள் ஒருவர் ஓடிவந்து தடுத்து, சாமியார் சமாதியானதை முன்னிட்டு, கொழுக்கட்டை வினியோகம் நடக்கிறது என்று சொல்லி வாங்கிச் சொல்லுமாறு பணித்தார். போய் வரிசையில் நின்று வாங்கினேன், வாழைநறுக்கில் ஒரு பெரிய கொழுக்கட்டையை வைத்துக் கொடுத்தார்கள். வரிசையை விட்டு வெளியே வந்தேன். அங்கு ஓர் உருவம் விரைவாக என்னை நோக்கி வரவே அருகில் பார்க்க, அதிர்ந்தேன். தலைமைச் சிஷ்யை, தன் 'கோலத்தை' மாற்றிக் கொண்டு, பழைய கொழுக்கட்டைப் பாட்டி ஆகியிருந்தார்கள். என்னருகில் வந்து, காதோடு சொன்னார்கள். "அப்பேன்! ('அப்பன்' என்னும் சொல்லின் திரிபு).. அத்தத் துன்னுடாதே..அது வேகாத கொழுக்கட்டையாக்கும்.." என்று சொல்லிச் சிரித்தார்கள்..சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.. ** காலை வெயில் உக்கிரமாக முகத்தில் அடிக்க, திடுக்கிட்டு எழுந்தேன். சந்தேகம். "நேற்று ராத்திரி ரொம்ப 'லேட்'டா பொங்கல்தானே சாப்பிட்டேன்.. ஏன் இந்தக் கனவு வந்தது?" "கனவுகள், இரவு உண்ணும் உணவுகளைப் பொருத்துத்தான்('ரு' சரிதானா, சர்சேலில் வாழும் 'புதுவை எழில்'?..) வேறுபடுகின்றன" என்று தீர்க்கமாகத் தீர்மானித்திருக்கும் துணைவியாரிடம் இனிமேல்தான் இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும்............... * பின்குறிப்பு: இந்தக் கதையில் அடைப்புக் குறிகளுக்குள் பல சேதிகளைப் போட முதலில் நான் விரும்பவில்லை. நீரோட்டமான வாசிப்புக்கு அது தடை ஆகும் என்றுதான் நம்பினேன். ஆனால், "இவன் வழக்கமாக நிறைய அடிக்குறிப்புகள் போட்டு இலக்கிய, சமூகக் கட்டுரைகள் எழுதுகிறவன்..அந்தப் புத்தியை இதிலும் காட்டிவிட்டான் பார்!" என்று எரிச்சல் அடையக் கூடாது என்றே இந்தக் 'குறைந்தபட்ச இம்சை'யைக் கொடுத்துள்ளேன். வாசித்தவர்கள் பொறுத்தருள்க. **** நன்றி: திண்ணை.காம்

1 comment:

Kannan said...

வணக்கம். சமயம் கிடைக்கும் பொழுது http://tamil.wiki.ind.in என்ற தமிழ் விக்கி தளத்திற்கு வருகை தந்து, தங்களது சிந்தனைகளை, கதைகளை, கவிதைகளை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

நம் தமிழ் விக்கி தளத்தை மேம்படுத்த ஆலோசனைகள் உண்டெனில் அதையும் பதிவு செய்ய வேண்டுகிறோம்.