23.5.08

சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள் - தேவமைந்தன் பெங்களூரு நகரிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தூயதமிழ் நாட்டமுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களால் அன்புடனும் தோழமையுடனும் அறிஞர் குணா என்று அழைக்கப்படும் திரு சாமுவேல் குணசீலன், கோலார் தங்கவயலில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தவர். தந்தையார் திரு அ.மா.து. சாமுவேல் அவர்கள். தாயார் திருமதி மனோன்மணி அவர்கள். ஏந்துகள் மிக்க வங்கிப் பணியைத் துறந்து மக்கள் இயக்கங்களில் இறங்கிப் பாடாற்றிய அறிஞர் குணா, கருநாடகச் சிறைகளில் பலமுறை இருந்தவர். அண்மைய நெடுஞ் சிறைக்காலத்துக்குப்பின் மக்கள் உரிமை இயக்கத்தின் தொடர்ந்த முயற்சிகளால் விடுதலை பெற்றவர். இவரைப் போற்றிய தூயதமிழ் இயக்கம் சார்ந்த அறிஞர்களில் திராவிட இயக்கத்தின்பால் பற்றுக் கொண்டவர்கள் வெறுத்தாலும் சரி என்று 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற ஆய்வைத் துணிந்து வெளிப்படுத்தியவர். அந்த ஆய்வின் முடிபுகள், நம் திண்ணை வலையேட்டின் மே 1, 2008 பதிவேற்றத்தில், தோழர் எஸ்ஸார்சி தந்துள்ள குறிப்புகளாக வெளிவந்துள்ளன. குணாவின் ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, அவர் அறிவாற்றலின் தோழர்கள் அமைத்துக் கொண்டதுதான் 'FORT' என்ற அமைப்பு. 'Forum For Research On Tamilnadu' என்பது இதன் விரிவாக்கம். பெங்களூரு நகரில் 'டிஸ்பென்ஸரி சாலை' 48ஆம் இலக்கத்தில் இது இயங்கத் தொடங்கியது. இதுவே 'தமிழக அரண்' என்று பின்னர் பெயர் தாங்கியதாக நினைக்கிறேன். குணாவின் சிறந்த ஆராய்ச்சிகளாக எனக்குத் தெரிந்தவை பின்வருமாறு: 1. சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) 2. தமிழர் மெய்யியல்(1980) 3. Marxist Dialectics(1983) 4. Asiatic Mode - A Socio-cultural Perspective(1984) 5. தமிழியப் பொதுவுடைமை(1985) 6. மார்க்சியமும் பெரியாரியமும் 7. மார்க்சிய இயங்கியல் 8. தமிழீழ அரசியலின் அகப்புற அழுத்தங்கள் (கட்டுரை)(1985) 9. இந்தியத் தேசியமும், திரவிடத் தேசியமும்(1986) 10.தமிழ்த் தேசிய இனச் சிக்கல் - உலக நம்பிகளின் இயங்காவியல்(The Metaphysics of the Abstract Internationalists)(1987) 11.வகுப்பும் சாதியும் வரணமும்(1988) 12.திராவிடத்தால் வீழ்ந்தோம் (1994) இவற்றுள் முதலாவதை இக்கட்டுரையில் பார்ப்போம். சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) இந்நூலை 1972ஆம் ஆண்டே குணா எழுதினார். மூன்றாண்டுகளுக்குப் பின், அச்சுக்குத் தந்துவிட்டு வீடு திரும்பிய போது, 'மிசா'வின்கீழ் சிறையிடப்பெற்றார். இதன் சுருக்கத்தை 1974ஆம் ஆண்டே, 'Origin Of Casteism - An Integral Theory' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதற்குப்பின் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தமிழில் முழுமையான வடிவம் பெற்று ஆறு ரூபாய் விலைக்கு 1979 சனவரியில் வெளிவந்தது. கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் தென்றல் நூலகத்தால் வெளியிடப்பட்டது. அதற்கு முன் அத்தகைய சிந்தனை தமிழில் - தூயதமிழில் வெளிவந்ததில்லை. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணருக்கு மிகவும் பிடித்த குணாவின் ஆய்வு இது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பாவாணருக்கு இடதுசாரிச் சிந்தனைகள்மேல் ஈடுபாடு இருந்ததில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவராக விளங்கியவர் பாவாணர். அப்படிப்பட்டவரையே ஈர்த்த நூல் 'சாதியத்தின் தோற்றம்.' "சாதியம் என்பது ஒருவகைப் பொருளியல் - சமுதாய வாழ்க்கை முறை. இன்றைய அரை நிலவுடைமைச் சமுதாயத்தின் அரசியல், பண்பாட்டுத் துறைகளின் உள்நோக்கமாகவும் அது அமைகின்றது. அச் சாதியத்திற்கு, அதற்கே உரிய கட்டுமானங்கள் உண்டு; தனி வடிவமைப்புகள் உண்டு. அவ் வடிவமைப்புகள் அதற்கேயுரிய உருவவியலைப் படைக்கின்றன. அச் சாதியத்திற்குத் தனித்த உள்ளியக்கமும் உண்டு. அவ்வுள்ளியக்கமே அதனை நீட்டிக்கும் உள்ளாற்றலாகும்" எனத் தொடங்கி, சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இயக்கம் பற்றிய சிக்கலைப் பொருள்முதல் இயங்கியல் என்னும் மார்க்சிய முறையில் அணுகி, அவற்றின் காரணங்களைப் பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம், பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம் ஆகிய அகநிலை(பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம்)க் காரணங்கள் மூன்றாகவும் புறநிலைக் காரணங்கள் மூன்றாகவும்(பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம்) பகுத்து, ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்திருக்கிறார். அறிவாராய்ச்சியியல்(epistemology), மார்க்சீயச் சிந்தனையியல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமல்லாமல் அம்பேத்கர் சிந்தனையியலில் ஈடுபாடு கொண்டவர்களும் வாசித்தறிய வேண்டிய ஆராய்ச்சி இது. இதில் உள்ள நான்காம் - அகநிலைக் காரணமான - பண்பாட்டுக் காரணம் குறித்த ஆய்வில் டாக்டர் பாபுராவ் சாகேப் அம்பேத்கர் அவர்களின் 'Castes in India - their Mechanism, Genesis and Development' என்ற நூலில் இடம்பெறும் அறிஞர் கப்ரியேல் தார்த் கண்டறிந்த 'போலி நடத்தை விதிகளை' சாதியத்தின் தோற்றத்துக்கு அறிவியல் விதிகளாக அம்பேத்கர் எடுத்தாள்வதைக் குணா திறனாய்ந்திருப்பதை மீள்வாசிப்பில் தலித்தியக் கொள்கை அறிஞர்கள் திறனாய்ந்திருக்கிறார்கலா என்று எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள் எவரேனும் தெரிவித்தால் பயன்பெறுவேன். ஐந்தாம் இயலான மத/சமயக் காரணம் பற்றிய பகுதி... பண்டைக் கிரேக்கத்தில் பெலொப்பனீசியப் போருக்குப் பின்னர் ஏதென்சு, கடலரசியாகத் தான் செம்மாந்திருந்த நிலையினின்றும் தாழ்ந்து இழிந்தபொழுது, அத்தீனிய உயர்குடியாட்சியினருக்கு (Athenian aristocrats) பிளேட்டோ அகத்தியமானதோர் அறிவுரை தந்தார். அறநிலையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அந்த அறிவுரை, "மேன்மையான பொய்களை(Noble Lies) வடித்துச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!" என்பதே. அப்பொழுதுதான் அவர்கள், பெலொப்பனீசியப் போரின் முடிவால் தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேட்டை மக்களிடையில் மறைத்து, தங்களுக்கே உரியதாகத் தாங்கள் நம்பிவந்த நாட்டாட்சியாகிய 'உயர்குடியாட்சி''(Aristocrocracy)யைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது அவர் தருக்கம். இதை, பண்டைய இந்திய ஆட்சியாளர்கள், புரோகித வர்க்கத்துடன் சேர்ந்துகொண்டு புனைந்த நான்முகன் - நால்வருணக் கோட்பாட்டுடன் குணா ஒப்பிடும் பகுதி(ப.122) ஆய்வாளர்களுக்கு விருந்தாகும். இதே இயலில் தொடர்ந்து பிளேட்டோ போன்றே மக்கள் சமமானவர்களாக வாழ்வதை விரும்பாத அவர்தம் மாணவர் அரிஸ்டாட்டிலின் கருத்தோட்டங்களை, இந்து வேதங்கள் - குறிப்பாக இருக்கு வேதம், அதன் பின்னுழைவு என்று கருதப்படும் 'புருஷசூக்தம்' ஆகியவற்றின் நால்வருணச் சாதிப்புடன் ஒப்பிட்டு ஆராயும் குணாவின் திறன் வாசித்தறிய வேண்டியதாகும். வேதங்கள் இந்திய மண்ணிலேயே பிறந்தவை, குறிப்பாக ஆரியர் அல்லாதவர்களாலேயே பெரிதும் இயற்றப்பட்டவை என்பதற்குப் பாவாணர் தம் 'தமிழர் வரலாறு' என்ற நூலில் காட்டும் எட்டுக் காரணங்களை குணா எடுத்துக்கூறியிருக்கிறார். பிந்திய சமணர்கள் வருணாச்சிரம தர்மத்தை சூழ்நிலைக்கேற்பத் தாமும் ஏற்றுக்கொள்ள முன்வந்ததை இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை தம் 'பண்டைய கேரளம்' என்ற நூலில் ஆய்ந்திருப்பதை எடுத்துக் கூறியுள்ளதோடு அதற்குத் தமிழகச் சான்றாகத் திருத்தக்க தேவர் தம் சீவக சிந்தாமணியின் இலக்கணையார் இலம்பகத்தில்(பாடல்கள் 2462 - 2469) சீவகனின் திருமணச் சடங்குகள் வைதிக முறையில் நடந்ததாகப் பாடியிருப்பதை ஒப்புநோக்கியுள்ளார். பிந்திய காலப் பௌத்தமும் அதே வருணாச்சிரம வழியில் சென்ற நிலையை எடுத்துரைக்கிறார். கிட்டத்தட்ட நூற்று அறுபது பக்கங்கள் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள 'சாதியத்தின் தோற்றம்' முதற்பதிப்பில் குணா மொழிந்த கருத்துகளையெல்லாம் குறிப்புகளாக்குவதோ கூறிமுடிப்பதோ என்னால் இயலாதவை. **** நன்றி: திண்ணை.காம்

No comments: