20.6.06

பணத்தின் பின்னால் ஓடுபவர்கள்!

"பணத்தைப் பொருள் என்று கொள்ளாதே!" என்று அறிவுறுத்தினார் அரவிந்தாசிரம அன்னை. "இந்த எல்லைக்குள் பணம் தன் மதிப்பை இழக்கிறது!" என்று அவர் அறிவித்த உலக நகரம் ஆரோவில்லின் பார்வையில் வாழும் நான், அன்னை அவர்கள் ஏன் அவ்வாறு அறிவித்தார் என்று விளங்கிக்கொள்ளாதிருந்தேன். விளங்கிக் கொள்ளும் வாய்ப்பு சில நாள்களுக்கு முன்னால் வாய்த்தது. 'பணப்பெட்டிக'ளின் முன் தலைகுனிய வேண்டிவந்தாலும் என் கால்களைப் பரப்பி நின்றேன். அழுத்தமாக நிலத்தில் என் பாதங்களை ஊன்றினேன்...பெற்ற என் தெய்வங்களின் இணையடிகளை என் நெஞ்சத்தில் வைத்தேன். 17/1/1988 அன்று தன் 96ஆவது வயதில், ஆழ்ந்த உறக்கத்தில் இறந்த என் தந்தையார், அந்த நாளுக்கு மூன்றுநாள் முன்னர் ஒரு வியாழக்கிழமையன்று பிற்பகல் சொன்ன சொற்கள் - “பிரச்சினையின் மையத்துக்கே செல். அஞ்சாதே. தன்னந்தனியனாய் நில். அந்தப் பிரச்சினையையே கேள்,உரத்த குரலில். "என்ன காரணம் இதற்கு?"... கட்டாயம் பதில்வரும். அந்தக் காரணத்தை அகற்று; காரியம் சரிப்படும்.” என் தாயார் எனக்கு அடிக்கடி அறிவுறுத்தியது - "பொன்னைவைத்தும் பெண்ணைவைத்தும் மண்ணைவைத்தும் எவரையும் எடைபோடாதே; மதிக்காதே; பகைக்காதே!" பதினாறே வயதுக்குள் பகவத் கீதைக்கு மராத்திமொழியில் இணையற்ற உவமைகளை ஏராளமாய்க்கோத்து 'பாவதீபார்த்த உரை' வகுத்தார் ஞானதேவர். (அதன் ஆங்கில மொழியாக்கம் கிடைக்கிறது.) “யானையை வைத்து யானையைப் பிடிப்பதுபோல, நிலவு முழுவதையும் ஓடைநீரில் கைப்பற்றுதல்போல, கூசுமொளிச் சூரியனை ஈரத் துண்டின்வழிப் பார்த்தல்போல ஓர்மையில் நிற்பாய்; உண்மையைக் காண்பாய்” என்பது அந்த உரைவிளக்கத்தில் ஒரு துணுக்கு. கடல்அலைபோல் பகைவந்தபோதும் ஒடிவந்து உதவக் கூடியவை பெரியோர் சொற்கள். அதனால்தானே நம் சொற்சிக்கனக்காரர் திருவள்ளுவரும் நமக்காக எழுபது சொற்களைச் செலவு செய்து, பெரியவர்களைத் துணைக் கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்!

1 comment:

Vi said...

நல்ல கருத்துக்கள்.