8.9.05

எப்படியும் காதல் வருமாம்!

மேட்டுத்தெரு முனையில் 'டூவீலர்க'ளில் திரும்பும்பொழுது மோதிக்கொள்ள இருந்தார்களாம்.. 'சாரி' 'சாரி' என்று ஒருவருக்கொருவர் வேண்டிக்கொண்டவாறு பார்த்துக்கொண்டபொழுது "அண்ணலும் நோக்கினான் : அவளும் நோக்கினாள்!" 'ஃபார்முலா' அவ்விடமே 'க்ளிக்' ஆகிவிட்டதாம்! 'ட்ரில்லியன்' மின்னல்கள் வெட்ட அகமதில் அதிர்ச்சிகள் ஆயிரம் இடிக்க ஒன்று பிறந்ததாம் : அதுதான் காதலாம். புத்தகத்தை/குறுந்தட்டை/குறிப்பேட்டை அவள் அவனுக்குத் திருப்பித் தந்தபொழுது மெல்விரல்களின் நகநுனிகள் அவன் புறவிரல்கள்மேல் பட்டுவிட்டதாம் : அடடே! அடடாவோ! மற்றொரு காதல் மலர்ந்துவிட்டதாம்.. அரசின் நகரப் பேருந்தில் கூட்டநெரிசலில் ஓட்டுநர் கருணையால் அவள் சாயநேர்ந்தபொழுது பலகோடி யுகங்களாய்த் தவறவிட்ட அவன் தாங்குதல் இன்னொரு காதலைத் தொடங்கிவிட்டதாம்... பக்கத்துவீட்டுச் சாளரம் திறந்தபொழுது ஒருநாள் திக்கென்று மனம்அடிக்கவைக்கும் கிழவிமுகம் தெரியாமல் அழகுமுகம் தெரிந்ததாம்; அடுத்த ஊரின் வருகையாம். பழகும் வாய்ப்புக் கிடைக்கவே 'பக்'கென்று பற்றிக் கொண்டதாம் - ''காதல்தீ"யாம். நமக்கெலாம் தெரியாதாம். ம்..ம்..இன்னும் வார இதழ்கள் புரட்டப் புரட்ட எத்தனைவகைக் காதலடா! தெருவில் பெட்டிக்கடைமுன் சுவர்தோறும் - ஏன் எங்கெங்கு நோக்கினும் இலவசமாய்க் காதலடா! எழுதியவனாவது ஏட்டைக் கெடுத்ததோடு விட்டான்; பாடியவனாவது பாட்டைக் கெடுத்ததோடு விட்டான்; எம்தமிழ்த் திரைப்படம் எடுக்கின்ற பேர்வழியோ எதையும் விடாமல் கெடுக்கின்றான் என்தாயே! (தேவமைந்தன், உங்கள் தெருவில் ஒரு பாடகன், 1976: 'சில காதல் சூழல்கள்'-- சில மாற்றங்களுடன்.)

No comments: