10.8.05

புலப்பாடுகள்

புலப்பாடு: ஒன்று:- தொடரும் கணங்கள் காற்றைப் பிடிக்க எழும்பி வீழும் கடலலைக் கணங்களாய் - கவிதை ஊற்றைப் பிடிக்க உள்வெளி ஆழ்ந்தேன். கணங்கள் சிலவற்றில் கரைந்து போனதாய்க் கருதிக் கொண்டு காணாது போனேன். ஆமாம்! நம்ப முடியாதுதான். தேடிவருகிறேன் இன்றும் இன்னொரு என்னை. கைவாளுமில்லை உரைவீச்சுமில்லை சிறகுகள் முளைத்த சிந்தனை நெருப்புமில்லை ஜோடனைகள் மறந்த என் கவிதைகள் வெறும் புலப்பாடுகளே. உணர்த்துதல்கள் பூட்டன் பூட்டிகள் தாத்தா பாட்டிகளாகியும் தாத்தா பாட்டிகள் அம்மா அப்பாக்களாகியும் தங்களைத்தான் உணர்த்தினார்கள். அம்மா அப்பா வழியாகவே நாம்தான் அவர்களென உணர்ந்து கொண்டோம். பேத்தி பேரன்களும் அப்படித்தான் நாம்தாம் தாமென்றுணரப் போகிறார்கள். இன்னுமொரு முப்பது வருடங்களுக்குப் பின்னால் 'புரொகிராம்'கள் பரம்பரை மரம் வரைந்து காட்ட -நாம் இப்பொழுதுள்ள நம்மை அப்பொழுதும் புரிந்துகொள்வோம்.

No comments: