24.5.06

ஆன்மீகம்: சபை தொடர்பான சில குறிப்புகள்

ஆன்மீகம்: சபை தொடர்பான சில குறிப்புகள் சபை தருமச்சாலைக்கு அருகில் உள்ளது. இது இறைவனை ஒளிவடிவில் வழிபடுவதற்கென்றே அமைந்தது. இது சுத்தசன்மார்க்கக் கொள்கைப்படி அமைந்த சங்கஞ் சார்ந்த திருக்கோயில். இது வள்ளலார் கூற்றுப்படி, இயற்கை விளக்கம். சபையும், சபைசார்ந்த மற்றவையும் தத்துவ நுணுக்கங்கள் கொண்டவை. சபை சாதி, சமயம், மதம், இனம், நாடு என்ற வேறுபாடுகள் இல்லாமல் மக்கள் யாவருக்கும் பொதுவானது. ‘புலை, கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்’ என்னும் வள்ளலாரின் கட்டளை சபையின் எல்லா நுழைவாயில்களிலும் தீட்டப்பெற்றுள்ளது. சபையில் கூட்டாக முழு அகவலையும் ஓதுதல், ஜோதிவழிபாடு, தியானம் இயற்றுதல் ஆகியவை செய்தல் மிக நன்று. சபையில் அர்ச்சனை, தீப ஆராதனை, அபிஷேகம், சோறுபோன்ற பிரசாதங்கள் கிடையாது. தேங்காய் உடைத்தலும், மத்தளம் போன்ற இசைக்கருவிகளை இசைத்தலும் கூடாது. ஆரவாரம் இல்லாமல், மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும். சபையின் திருப்பணிகளை 1950-ஆம் ஆண்டில் கிருபானந்த வாரியார் அவர்களும், 25 ஆண்டுகள் கழித்து அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்களும் தலைமையேற்று நடத்தியுள்ளனர். 18.7.1872 அன்று வள்ளலார் இட்ட கட்டளைப்படி, சபைக்குள்ளே தகர கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு கூடாது. சபையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவரோ அல்லது 72 வயதிற்கு மேற்பட்ட பெரியவரோ நீராடிய சுத்த தேகத்தோடு விளக்கு ஏற்றிவைக்கவேண்டும். சபைக்குள்ளே, அவர்களைக்கொண்டே கால்களில் துணிசுற்றியும், முட்டிக்காலிட்டும் தூசு துடைக்கச் செய்விக்கவேண்டும். -சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன்

No comments: