24.5.06

ஆன்மீகம்: ஞானசபையின் அமைப்பு

ஆன்மீகம்: ஞானசபையின் அமைப்பு சன்மார்க்கச் சாதனையாளர் கோவை அ. குருநாதன் எண்கோண வடிவில், ஐந்து திருச்சுற்றுகளைக்கொண்டு தாமரைமலர்போன்று தோற்றம் தரும் சபையை, புலை, கொலை தவிர்த்த அகவின அன்பர்களைக்கொண்டு, அவர் அதே ஆண்டு ஆனித்திங்களில் கட்டத்தொடங்கி, ஏழு திங்களில் முடித்தார். பின்னாளில், அதற்கு ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை’ எனப் பெயரிட்டார். சபை தெற்குநோக்கி அமைந்தது. அதன் மேற்கூரை செப்புத்தகடுகளால் வேயப்பட்டிருந்தது. சபைக்கு வேலியென அமைந்த வெளிச்சுற்று சிறுசிறு தூண்களைக் கொண்டது. இத்தூண்களை நீளமான இரட்டை மடிப்பு இரும்புச் சங்கிலி இணைத்துள்ளது. சபையின் சங்கிலிவெளிச்சுற்றுக்குள், தெற்குமுக ஆசார வாயிலும், தென்கிழக்கில் கொடிமரமும், எழுவார் மேடையும் உள்ளன. சபை முதலில் இரும்புவேல்கம்பி மதிலுடன் தொடங்குகிறது. இதற்கு அடுத்து எண்கோணத் திருச்சுற்று. இதற்கு அப்பால், எண்கோணச் சுவர். இச்சுவரில் எட்டு வாயில்களும், பதினாறு சாளரங்களும் உள்ளன. சபையின் தெற்கு நுழைவு வாயிலை அடுத்துள்ள முன்மண்டபத்தில் கிழக்குப்பக்கம் பொற்சபையும், மேற்குப்பக்கம் சிற்சபையும் உள்ளன. முன்மண்டபம், பன்னிருகால் மண்டபம் ஆகும். அதன்நடுவே, நாற்கால்மண்டபம் எனும் சிறிய மண்டபம் உள்ளது. அதன்கீழே, ஒருவர் அமர்ந்து தியானம் செய்யக்கூடியவகையில் நிலவறை ஒன்று உள்ளது. நாற்கால்மண்டபத்தின் நடுவே, ஒரு சதுரப் பீடத்தின்மேல் வள்ளலார் ஏற்றிவைத்த அருட்பெருஞ்ஜோதி தீபம் அணையாதீபமாக எரிந்துகொண்டிருக்கிறது. அந்த தீபத்தின்முன்னர், ஆறடி ஒன்பதங்குல உயரமும், நாலடி இரண்டங்குல அகலமும் உள்ள ஒரு நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. தீபம், கண்ணாடி ஆகியவற்றுக்குமுன் ஏழு வெவ்வேறு நிறத்திரைகள் தொங்கவிடப்பெற்றுள்ளன. முதல் ஆறு திரைகள் கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை ஆகிய நிறங்களை முறையே பெற்றுள்ளன. ஏழாவது திரை மட்டும் கலப்பு நிறத்திரையாய் பாதி அளவில் இருக்கிறது. ஒவ்வொரு திரைக்கும் தனித்தனி விளக்கம் உண்டு.

No comments: