19.11.05

மலைநாட்டுத் தமிழ்முரசு 1958ஆம் ஆண்டு மலர்

பிரெஞ்சுப் பேராசிரியர் - நண்பர் திரு. நாயகர், இம்முறை 'தமிழ் முரசு' வெளியிட்ட பழைய ஆண்டு மலரை வாசிக்கத் தந்தார். பழைமையிலும் புதுமை காணும் நண்பர்கள் நாங்கள். அம்மலர், 1958ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. தமிழ் முரசின் ஐந்தாவது ஆண்டு மலர் அது.

இப்பொழுதெல்லாம், 'தீவளிக்குத் தீவளி' வெளியிடப்பெறும் - அதாவது, ஒரு மலரை மூன்றாகப் 'புய்த்'து வெளியிடும் வியாபாரம் தெரியாமல் - அல்லது, அப்படியெல்லாம் செய்வது மலை நாட்டுத் தமிழ்ப் பெருமக்களுக்குப் பழக்கமாய் இராது என்பதால் - தெம்மி 1/4 அளவில் முந்நூற்று முப்பது பக்க அளவில் வெளியிடப் பெற்றது. கண்ணையும் மனத்தையும் உறுத்தாத ஏராளமான சித்திரங்களும் ஒளிப்படங்களும் பின்னணி ஓவியங்களும் கூடியது. "தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் படிக்கும் பொருட் செறிவும், கண்டு மகிழும் கலையழகும் கொண்டதாக" மலர் உருவாகியிருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. டாக்டர் மு.வ., பாஸ்கரத் தொண்டமான், குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் தனிநாயக அடிகளார், கவியோகி சுத்தானந்தர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், வெள்ளை வாரணனார், ம.பொ.சிவஞானம், டாக்டர் தா.ஏ.ஞானமூர்த்தி, பூ. ஆலாலசுந்தரனார், அ.கி.பரந்தாமனார், இராஜாமணி அம்மையார், வல்லிக்கண்ணன், அப்துல் வஹ்ஹாப், வி. மரிய அந்தோனி போன்ற மேலும் பல அறிஞர்களின் கட்டுரைகளும், டி.கே.ஷண்முகம், கே.ஏ.தங்கவேலு, சிவாஜி கணேசன், பிரேம் நசீர், ஜெமினி கணேசன், எம்.என். ராஜம், சாவித்திரி , ராகினி, பத்மினி போன்ற கலைஞர் சிலரின் கட்டுரைகளும் மலரில் வெளிவந்துள்ளன. அறிஞர்களுக்குத் தமிழ் முரசு தந்துள்ள அகத்தியம் பாராட்டத்தக்கது.

கச்சேரிகளில் தமிழ் உருப்படிகள் ஆகச் சில, கடைசியில் அப்பொழுதும் இப்பொழுதும் பாடப்படுவதுபோல சினிமாக் கலைஞர்களின் கருத்துரைகள் மலரில் கடைசியில் இடம்பெற்றுள்ளமை, மிகவும் பொருத்தமாகவும் நம் பழைய தமிழர்களின் நடுவுநிலைமையை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளது.

இம்மலர் ஒரு கடல் என்றால், அதில் ஓர் அலை இதோ: பக்கம் 76இல் இடம்பெற்றுள்ள பாவேந்தர் பாட்டு -

பட்டுக் குஞ்சுகள் எட்டைக் கோழி

இட்டுக் கொண்டே போகும்

எட்டுக் குஞ்சும் தாய்சொல் லுக்குக்

கட்டுப் பட்டே மேயும்

தட்டுக் கெட்டுப் போனால் ஒன்று

தட்டிப் போகும் பருந்தே

விட்டுத் தப்பி னாலும் பூனை

விட்டுவி டாது விருந்தே.

( பாரதிதாசன், 'குயில்.' )

No comments: