9.3.16

kalapathy கலாபதி: குதிரை இல்லாத ராஜகுமாரன் ~ மதிப்புரை பகுதி 2

kalapathy கலாபதி: குதிரை இல்லாத ராஜகுமாரன் ~ மதிப்புரை பகுதி 2: ‘மேலும் சில கேள்விகள்’ ‘நிழலைத் தேடும் நிழல்கள்’ ‘ஆதலினால் காமம் செய்வீர்!’ ‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - இந்த நான்கு சிறுகதைக...

குதிரை இல்லாத ராஜகுமாரன் ~ மதிப்புரை பகுதி 2


‘மேலும் சில கேள்விகள்’ ‘நிழலைத் தேடும் நிழல்கள்’ ‘ஆதலினால் காமம் செய்வீர்!’ ‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - இந்த நான்கு சிறுகதைகளில் காதல் உணர்வுகளும்(emotions) உணர்ச்சிகளும் (feelings) கொப்பளித்துத் ததும்புகின்றன.
‘மேலும் சில கேள்விகள்’ - ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழுகிற உள்மன நெளிவுசுளிவுகளும்; அதை அந்தத் தாயைவிட மகள் எவ்வளவு தெளிவாகக் கையாளுகிறாள் என்ற துல்லியம் ~ மீநுட்பத்துடனும் நிகழ்சமூக மனவியல் அடிப்படையுடனும் நவிலப் பெறுகின்றது. “ஸ்ருதி, இனி நீ இவரை அப்பா என்று கூப்பிடலாம்” என்று முடியும் ‘லாவண்யம்’ - பெண்மனத்துக்கே புரியக் கூடியதுங்கூட. திரைப்பட உத்திகள் இக்கதையில் அமைந்து ஒரு ‘சினிமா’வைப் பார்ப்பதுபோல வாசகரை ஆக்கிவிடுகிறது.
‘நிழலைத் தேடும் நிழல்கள்’ - கதையில் வரும் நித்யா ~ தேவனுக்காகவே என்று இருப்பவள் ~ அவள் பெற்றோர் வலுக்கட்டாயமாக சுமத்தும் மாப்பிள்ளையை மணம்செய்துகொள்ள நேர்கிறது. இடையில், தேவன் கரு நித்யாவிடம் உருவாவது, அவனுக்கும் தெரியாது. கதையின் கடைசியில்தான் தெரியவரும்...அவனுக்கே. இருபது வருடம் வரை தேவன் தனியாளாகவே இருந்து எப்படியும் தன் காதலியைப் பார்ப்போம் என்று கொள்ளும் அதீதமான தன்னம்பிக்கை, தன் குழந்தைக்கே அவன் தந்தை என்றறிவதாக நிறைவடைகிறது. இப்படி ஒரு உணர்ச்சிமிக்க மர்மத்தைக் கட்டமைக்க ராஜாஜிக்கே முடியும்.
‘ஆதலினால் காமம் செய்வீர்!’ - கதை, “காதலின் இன்னொரு பரிமாணம்தான் காமம் ............ஆதலினால் காதலும் காமம் போன்றே உன்னதமானது”[116] என்ற மேலெழுத்துகளுடன்[epigraph] தொடங்குகிறது. ஆண்மையற்றவன் தன் காதலன் என்று அறிந்த பின்பும் வெறுக்காமல், அவன் தற்கொலைக்கு முயலும் பொழுதும் அவன் நண்பனுடன் சேர்ந்து காப்பாற்றுவாள் மெனூஷா. காதல் என்று வந்துவிட்டால் அதிலும் ஒரு தர்மம் உண்டு என்று காட்டும் ஆசிரியர், தொடக்கத்தில் வரும் பத்தியையும் கதைத் தலைப்பையும் ஏன் இவ்வாறு அமைத்தார் என்பது புதிராக உள்ளது. காமம் எது காதல் எது என்று, எரிமலைக் குளிரை எள்ளி நகையாடவா? நிருஷனை விட மெனூஷா ஒருபடி உயர்ந்தவள் என்று காட்டத்தான். காமத்தை எதிர்பார்ப்பாள் தன் காதலி என்ற தன்னம்பிக்கையின்மையை விடவும் தன் காதலனின் ‘ஜீவன்’தான் உயர்ந்தது என்று நம்பும் பெண்ணம்பிக்கையின் வடிவமாகத் திகழ்கிறாள் மெனூஷா.
‘சுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது?’ - என்ற கதை மூவரைப் பற்றியது. முகுந்தன், பராசக்தி, சுபத்திரா. இம்மூவரையும் சுற்றி வருகிறது கதை. பராசக்தி அழகிதான். ஆனால் அவள் தங்கை சுபத்திராவின் அழகுக்கு முன்னால் அவள் வரமுடியாது. ஆனாலும், ஆண்கள் தன் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்ற அளவுக்குப் போகும் சுபத்திராவின் நினைப்பே அவள் பிழைப்பைக் கெடுக்கிறது. எப்படி? தன் அக்காள் முகுந்தனைக் காதலித்துக் கைப்பிடிக்கும் மணமேடையில் கூட, சுபத்திராவின் கருவண்டுக் கண்கள் அத்தான் முகுந்தனின் முகமலரை வட்டமிடலாமா? தன் தங்கையைக் குறித்துப் பராசக்திக்குத் தீர்மானமும் தெளிவுமுள்ளதால், தன் தங்கையின் அகந்தைஆணவங்களுக்கு கணவனை விட்டுக் கொடுப்பதில்லை என்ற திடசித்தத்துடன் திகழ்கிறாள். முகுந்தனும் சபலமற்றவனாய் விளங்குவது அவளுக்கு மேலும் வலிமைதானே? முடிவில் தன் ஆடைகளாகத் தானே வரித்துக்கொண்ட அகந்தை ஆணவச் செருக்குகளற்று, இயற்கை மேனியுடன் குளியல் தொட்டியில் மயங்கிக் கிடப்பவள், தன் உள்மனப்போர் இலக்குகளான அக்கா அத்தானாலேயே காப்பாற்றப்பெற்று மருத்துவ மனையில் மனந்தெளிகிறாள். மருத்துவர் தெளிவுறுத்துகிறார். எப்படி? இப்படி - “உங்கள் நன்றியை முதலில் உங்கள் பிரதர்-இன் -லாவுக்குச் சொல்லுங்கள்; அவர்தான் உங்களை இங்கே நேரத்தோடு கொண்டுவந்து சேர்த்தவர்.” புரிந்து கொண்டு தன் மணிகுலுங்கும் குரலில், “தேங்க்யூ, பிரதர்!” என்று கூறுவதாகக் கதை முடிகிறது. இங்கே, இந்தக் கதைக் களத்தில், எதிரும் புதிருமான பெண்மனங்களிரண்டு இராம இராவண யுத்தம் நிகழ்த்துவது ‘அட்டகாசம்.’ எல்லாவற்றிலும் உடன்பாடு எதிர்மறை இருப்பதுபோலப் பெண்மனத்திலும் இருப்பதை ராஜாஜி இதிலே சித்திரித்துள்ளார். ஆனால் முகுந்தன் இன்னொரு கதைக்கு இவர் தலைப்பிட்டிருக்கும் ‘பெளருஷம்’ கொண்டு தான் கரையேறி, தன்னைக் காதலித்துக் கைத்தலம் பற்றியவளையும் கரையேற்றி, தங்கள் நிம்மதியையே குறிவைக்கும் பெண்ணையும் கரையேற்றுகிறான். ஆண்கள் பலருடைய உள்மனம், முகுந்தனுடைய கற்பு நிலையைக் கண்டு உள்ளுக்குள் நகைத்துக் கொள்ளும் என்றாலும் பெண்கள் பலருடைய உள்மனம் முகுந்தனின் கற்புநிலையைப் பாரதிவழி ஆதரிக்கத்தான் செய்யும். ஆக, ஒரு கற்புக்கரசனை இந்தக்கதையில் நமக்கு அறிமுகம் செய்துவத்துவிட்டார் ராஜாஜி.
‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ - இதைப்பற்றி என் துணைமனத்தில், அறிந்தும் அறியாமலும், முகநூல் நண்பர்கள் + சன்றோர்களின் கருத்துகளை முதலிலேயே படியேற விட்டுவிட்டதால், அவை ‘மசானத்துப் பேய்கள்’ போல, திரும்ப என் கருத்துகளாக வேடம்போட்டு வர வாய்ப்புண்டு. ஆகவே, விதிவிலக்கான, ராஜாஜிக்குப் பிடித்துப்போன என் நோக்கில் ஒன்றைச் சொல்லுகிறேன். இதில் - ஓர் இரவுநேர எக்ஸ்பிரஸ் இருவரின் இல்லற வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. அஃறிணை என்று எதையும் தள்ளிவிட முடியாதுதானே? தொடர்வண்டிப் பயணங்களை நேசிப்பவர்கள் இல்லையா? இன்றுமென் இரவில், கனவைக் கனவென்று மட்டுமே கருத முடியாத/விரும்பாத உயிர்ப்புடன் திகழும் கனவுகளில் நான் பன்முறை பயணம் செய்த நீலகிரி எக்ஸ்பிரஸ் “தடக் தடக்” என்று பாலங் கடக்கிறது. அந்த எக்ஸ்பிரஸ் போலவே, இக்கதையில் வருவதும் இரவுநேர எக்ஸ்பிரஸ்தான். “காலத்தைக் குறைசொல்வதால் அது கோபித்துக்கொண்டு நமக்கு எதிராக எதுவும் செய்து விடாது. இதனால்தான் காலத்தையும் சிலவேளை கடவுளையும் குறை சொல்கிறோம்.”(143) விஜயா, ஆண்களின் புத்தியின் போக்குகள்(140-141) குறித்து அவதானிப்பவை ஆண்களில் பெரும்பாலோருக்குப் பொருந்தும்.
‘அந்த ஒருவனைத் தேடி’ - இந்தக் கதை, வேலைக்குப் போகும் அழகான இளம்பெண்ணுக்கு அவளுடன் பணிபுரியும் ஆண்களால் உருவாகும் உடல்ரீதியானவும் மனோரீதியானவுமான அவஸ்தைகளும்; அந்த ‘ஆண்’களிடமிருந்து ஒரு ‘பெண்’ணாக, தப்பித்துக்கொண்டே போகவேண்டிய அவலங்களும் உணர்த்தப் படுகின்றன. “ஆண்கள் என்றால் வேலைக்குப் போக வேண்டும்[‘உத்யோகம் புருஷலட்சணம்’]” என்றும் பெண்கள் அடுக்களையே கதி என்று கிடக்க வேண்டும் என்ற காலத்தைச் சேர்ந்தவளா தாரிணி? ஆனால் அவளுடைய உடல், பெண்ணுடலாயிற்றே! பெண்களுக்கு, தாம் ஸ்கூட்டரை இயக்கிச் செல்லும்பொழுதுங்கூட, ‘தன் தேகம் பெண்தேகம்’ என்ற விழிப்புணர்வு ‘டிராஃபிக் சிக்ன’லிலும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயம் இன்னும் மாறவில்லையே! “ஒருவர் நகமும் தன் உடம்பில் படாமல்” தப்பித்தலை, தாரிணியாக (203) உங்களைத் தற்பாவனை செய்துகொண்டு படித்துப் பாருங்கள்.
‘செம்பருத்தி’ கதை முற்றிலும் வித்தியாசமானது. தாலிக்கு எவரும், எந்தப் பெண்ணும் கொடுக்க மாட்டாத தெய்விகத்தை மஞ்சு கொடுப்பதை வாசித்துணரும் வாசகர்கள், ‘தாலி என்பது கயறு மட்டுந்தான்’ என்ற வாதத்தையும்; ‘மங்கலவணி என்னும் மரபெல்லாம் சுத்தப் பேத்தல்’ என்று அடித்துச்சொல்லுதலையும் அறவே விட்டு விடுவார்கள். சுசியக்கா தாலியை வழமயான ஒரு ‘சாடிஸ்ட்’ பெரியம்மா “கழற்றி வையடி” என்று ‘கோரக் கோரிக்கை’ வைக்கும்பொழுது -- மஞ்சு புருஷனின் உருவத்தோடு நாம் ‘ஆஜர்’ஆகி, வெறுமனே வேடிக்கை பார்த்து, வேதனைப் படுகிறோம்.
‘பெளருஷம்’ கதையில், ‘இலக்கணம் மீறிய கவிதை’யான ஒருத்தி, தன் தாயுடைய சம்மதத்தின்/தூண்டுதலின் பேரில் ஆடவர்களுடைய சகவாசத்துக்குத் தன் ‘சுய’த்தை வர்த்தகப் பண்டமாக்கினாலும் ~ ஒரே ஒருவனின் ‘பெளருஷ’த்துக்குமுன், தன் அம்மாவின் எச்சரிக்கையையும் மீறி, ‘தான்’ தொலைந்து போவது சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
[தொடரும்]

8.3.16

kalapathy கலாபதி: குதிரை இல்லாத ராஜகுமாரன் - மதிப்பீட்டுத் தொடர் 1

kalapathy கலாபதி: குதிரை இல்லாத ராஜகுமாரன் - மதிப்பீட்டுத் தொடர் 1: https://www.facebook.com/notes/puducherry-a-pasupathy/rajaji-rajagopalans-collection-of-short-stories-kudirai-illada-rajakumaransep-20/16874...

குதிரை இல்லாத ராஜகுமாரன் - மதிப்பீட்டுத் தொடர் 1

https://www.facebook.com/notes/puducherry-a-pasupathy/rajaji-rajagopalans-collection-of-short-stories-kudirai-illada-rajakumaransep-20/1687488481492869 ராஜாஜி ராஜகோபாலன் படைத்த சிறுகதைத் தொகுப்பு ~ ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ [2015]
- மதிப்பீடு: புதுச்சேரி கலாவதி பசுபதி (தேவமைந்தன்)
கனடாவில் சட்டத்தரணியாகப் பணியாற்றும் ராஜாஜி ராஜகோபாலன், ஓர் ஈழத் தமிழர். முரட்டுத்தனமான ஆணாகத் தோற்றம் கொண்டுள்ள போதும், மிகுந்த மென்மையான பெண்மனத்தைச் சித்திரித்து எழுதுவதில் வல்லுநர் என்பதை இத்தொகுப்பிலுள்ள பதினைந்து சிறுகதைகளும் பறைசாற்றுகின்றன.
தமிழ்ச் சிறுகதைகளில் சமுதாயவியல் நோக்குக் கொண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் தா.வே. வீராசாமி ஐயா மேற்பார்வையில் 1980-1986 காலக்கட்டத்தில் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் ஆசியருளுடனும் டாக்டர் க.த. திருநாவுக்கரசு அவர்களின் அன்புடனும் ஆய்வு மேற்கொண்டு 24-4-1986 அன்று ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த எனக்கு; முனைவர் குழு எனச்சொல்லப்படும் doctoral committee -யில் வாய்த்தவர்கள் ஆணிமுத்துகள். ஒருவர், முனைவர் இரா. இளவரசு. இரண்டாமவர், முனைவர் அ.நா. பெருமாள். முதல் ஆய்வுக்குழுக் கூட்டத்திலேயே ~ தனித்தமிழ் இயக்கத்தில் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய பொழுதும், டாக்டர் ச.செந்தில்நாதன்+ கலாநிதி சிவத்தம்பி தொடங்கி, தமிழ் ஆங்கிலச் சிறுகதை இலக்கண நூல்கள் நாற்பத்தாறனைக் கரைத்துக் குடித்துவிடவேண்டும் என்று நீளமானதொரு பட்டியல் தந்து ‘அன்’பாகக் கட்டளையிட்டார் முனைவர் இரா. இளவரசு. அப்படிப் “பெற்ற” சிறுகதை இலக்கண அறிவை - என் சித்தத்துள் ‘அடக்க்க்க்க்க்க்க்க்கி’ வைத்துக் கொண்டு, இதை எழுதுகிறேன்.
இத்தொகுப்பில் யாழ்சூழ்தமிழான ஈழத்தமிழ் என் நொய்யல் போல் நண்பர் பேனா மனோகரனின் வையைபோல் வெகு இயல்பாகக் கரைபுரண்டோடுகிறது. உடனமர்ந்து திறனாய்வு செய்த ‘சித்தாந்த ரத்னா’ திகைத்துப் போனார். அத்தகைய சொற்களை, நானே புதுச்சேரித் தமிழில் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. என் பூர்விகமான கடாரத்துடன் தொடர்புகொண்டதுதானே ஈழமும்?
இந்த சட்டத்தரணி எதில் பெரிதாக வெற்றி பெறுகிறார் தெரியுமா? ‘வட்டாரத் தமிழ்’தானே என்று “சுருக்கமாக இருவரிகளில்” குழப்படி செய்யும் வறண்டமன வயிற்றெரிவுமிகு அறிவுசீவிகளை வெட்கமுறச் செய்யும் வண்ணம் தன் ஈழத்தமிழை உலகத் தமிழாக்குகிறாரே.. அதில்தான்.
உயிர்த்துடிப்புள்ள வாசகர் எவராயினும், இப்பூவுலகின் எந்த மூலையில் வாழும் ‘தமிழ் வாசிப்பு’க் கொண்டவர் எவராயினும், குறிப்பாகப் பெண்வாசகர்களும் பெண்மனம் புரிதலைக் கொண்ட ஆண் வாசகர்களும் ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் கதைகளை ஒருமுறைக்கிருமுறை வாசித்துப் பாராட்டவே செய்வார்கள். [தொடரும்]

20.12.15

நோக்கு - படைப்பிலக்கிய வகை JK கோடிகாட்டியது


http://www.fondation-janmichalski.com/en/prix-jan-michalski/ பரிசாகட்டும்; இருண்மை இல்லாமல் அப்படியே 'பட்டவர்த்தனமாக'வும் 'அ(ம்)மணமாகவும்' --'இடக்கரடக்கல்' 'அவாய்நிலை' ஆகிய இலக்கணங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காத transgressive என்னும் ஐரோப்பிய இலக்கிய வகையாகட்டும்; அதில் கரைகண்ட கேத்தி ஆக்கர் முதல் தமிழில் சாரு வரை - ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொன்ன, அவர் பொழிவுகளில் முதற்பகுதியாய் இலங்குகிற ' சுற்றுமுற்றும் நிகழ்கணங்களில் அவதானிக்கிற ஒவ்வொன்றையும் எழுத்துசொல் அமைப்பில் பதிகிற' நோக்கிலக்கிய(observant) வகை எழுத்தில் முழுமை பெறாதவர்களே. சுந்தர ராமசாமி படைத்த 'ஜேஜே சில குறிப்புகள்'- இவ்வகை. துணிவும் அர்ப்பணிப்புணர்வுமுள்ள பெண்கள் இந்தவகை இலக்கியத்தை முன்னெடுக்க வந்தால், இலக்கியவகையிலாவது ஆணாதிக்கத்தின் 'டங்குவார்' கிழியும்!
# observant not transgressive

17.11.15

அண்மைய முகநூல் பதிவுகள் சில - தேவமைந்தன்

Facebook Puducherry Devamaindhan Wednesday, November 18, 2015

வாழ்வாயினும் சரி, முகநூலாயினும் சரி, நாம்போடும் கணக்குகள் முற்றிலும் தோற்றுப்போகின்றன. கடனே என்று விருப்பம் பதிகிறவர்கள், முகத்துதியாகத் தொடர்ந்து கருத்தூட்டம் போட்டு ஏமாற்றுபவர்களை இனங்கண்டு கொள்ளவே முடியாது. நம்மை எரிச்சலூட்டுபவர்கள், நம்மேல் அக்கறைகொண்டவர்களாக இருக்கலாம். நமக்கு வழலை போடுகிறவர்கள், அடுத்துக் கெடுப்பவர்களாக இருக்கலாம். சான்றாக என் முகநூல் நண்பர் ஒருவர், புதுச்சேரியில் வாழ்பவர், எனக்கு விருப்பம் பதிந்ததே இல்லை.. ஆனால், சந்திக்கும்பொழுதும் அலைபேசியில் பேசும்பொழுதும் பாராட்டவேண்டும் என்று தனக்குத் தோன்றியவற்றைப் பாராட்டுவார். கடவுளைப் புரிந்துகொள்ள முடியும். சகமனிதர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது.

நேற்று:
ஆர்வக்கோளாறுகளையும் மனவழுத்தத்தையும் எதிர்த்துப் போராடாமல் நட்புகளாக்கிக் கொண்டு வாழ்வது குறித்த சித்திரக்கதை!
http://idealist4ever.com/comic-explains-why-anxiety-depression-are/

நேற்று விடிவதற்கு முன் 03:32 am:

எம் மகளார் ஒரு கேள்வி கேட்டார்: " மலரும் நினைவுகளோ அப்பா?" என்று. என் மூளை, எனக்கு நெருங்கிய ஆதரவு தருவது. கசப்பான எதையும் மறந்து விடுவேன். பழக்கமானவர்கள், சிறு பிள்ளையானாலும், ஞாயமாகச் சுட்டிக்காட்டினார்கள் என்றால் என் தவறுகளைத் திருத்திக் கொள்வேன். எவ்வளவு நலமில்லாவிட்டாலும், வாசிப்புப் பழக்கத்தை விடமாட்டேன். முடியாவிட்டாலும், விடியலுக்கடுத்து ஒரு சிறு நடை போய்வந்துவிடுவேன். நினைவு தெரிந்தது முதல், என்னுடன் பழகிய எவரையும் மறந்ததில்லை. ஆனாலும் பெயர்களை மாற்றிச்சொல்லும் ('தெனாலி'படம்) சிக்கல் எப்படியோ வந்துவிட்டது. நண்பர்கள் நாயகரும் அருணனும் தாம் அதைச் சுட்டினார்கள். எத்தனையோ பின்னடைவுகள், சாண் ஏற முழம் சறுக்கல்கள், பழிபாவங்களுக்குமிடையில் ஜீவனுடன் ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் திருவருளாலும் குருவருளாலும் மகளார் சுட்டிய 'மலரும் உடன்பாட்டு எண்ண நினைவுகள்தாம்.'


பால்பேதமே இயற்கைதான்.. ஆனால் இயற்கைகூட அதைப் பெரிதாக்குவதேன்?

தேவமைந்தன்: Climate change is not gender-neutral: Climate change is not gender-neutral

23.10.15

<"ஒரு மொழியில் வெளிவரும் எல்லா படைப்புகளுக்கும் அடுத்தமொழியில் அதே வரவேற்புக் கிட்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த படைப்பு ஏற்புடையதாக இருக்குமோ அதனை மொழிபெயர்க்க வேண்டும். நம் இலக்கிய படைப்புகளை அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு பிரான்ஸில் வாழும் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் இணைந்து 'chassecroise franceinde' என்னும் வலைப்பூ ஒன்றை பிரஞ்சு மொழியில் நடத்திவருகிறோம். இதில், கதை கவிதை தவிர, தமிழ்ப் படைப்புகள் குறித்த பிரஞ்சுக் கட்டுரைகளும், தமிழர்கள் எழுதும் பிரஞ்சுப் படைப்புகளும் இடம்பெறுகின்றன." - குமுதம் தீராநதி அக்.2014 நேர்காணலில் நண்பர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், புதுச்சேரி dir="ltr" style="text-align: left;" trbidi="on">

6.9.15

எம் கெழுதகை நண்பர் பேராசிரியர் பொன். பத்மநாபன், காரைக்காலிலும் புதுச்சேரியிலும் என்னுடன் நெடுங்காலம் பணியாற்றியவர். கேடு வருங்கால் கைகழுவி உடல்நழுவும் நட்புகள் நிலவும் இந்த உலகத்தில், 1.பல்கலைக் கழகம், 2.துறை, 3.பணிவாழ்க்கை என்ற மூன்று நிலைகளிலும் ஆபத்து வந்தபோது கைகோத்து உடன்நின்று உதவிய செம்மல் இவர். பணிநிறைவுக்குப் பின் ‘அகத்தியமான தனிமை’ எனக்கு வேண்டும் என்று கருதி, ஒதுங்கி வாழ்ந்தவர். எங்கள் நண்பர் முனைவர் & முதல்வர் திரு ப. சுதந்திரம் Sudhanthiram Pachiappan அவர்கள், பொன். பத்மநாபனின் கைப்பேசி எண்ணைக் கேட்டபோது என்னிடம் அவர் எண் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான், காரைக்காலில் ஓரிரு பேராசிரியர்களை இது தொடர்பாகக் கேட்கிறேன் என்று தெரிய வந்தபோது, நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் முனைவர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரிடம் வயணம் சொல்லி விடுத்தார். இப்பொழுது எங்கள் பேரன்பர் முனைவர் செல்வப்பெருமாள் கையில், இதனுடனுள்ள படங்கள் சுட்டும் ஐந்து நூல்களையும் தந்தனுப்பினார். நேற்றிரவு நூல்கள் என் கைக்குக் கிடைத்தன. இனிமேல்தான் வாசிக்கத் தொடங்கவே வேண்டும்.

8.8.15

இனிமையான எளிமையான தனித்தமிழ் எண்சீர் மண்டிலங்களால் தமிழ நம்பி ஐயா படைத்துள்ள 'விடுகதைப் பா நூறு', இவ்வகையில் தமிழில் முதனூல்!

2.8.15

விளம்பி நாகனார் என்ற தெளிவான புலவர்

விளம்பி நாகனார் குறித்து மிகுதியும் கூற வேண்டுவதில்லை. கீழ்க்கணக்கு நூல்களில் அடி அளவால் நாலடியார் பெயர் பெற்றதுபோல், நவில்பொருள் அளவால் - 'நான்மணிக் கடிகை' எனப் பெயர் பெற்ற நூலின் பாக்களை இயற்றியவர். [இத்தொகுப்பில் ஒவ்வொரு பாட்டும் - 'நான்கு இரத்தினத் துண்டங்கள்' [ - கொண்டது] என்பது நூற்பெயரின் பொருள். நூல் முழுவதையும் வாசிக்கச் செய்வதே நம் நோக்கம் ஆதலால், மூன்றே பாக்களின் பொருளை மட்டும் இங்கே தருகிறேன். 54ஆம் பாடற்பொருள்: "எவருக்கும் - கண்ணை விடவும் சிறந்த உறுப்பு வேறேதும் இல்லை; வாழ்க்கைத்துணையை விடவும் சிறந்த உறவினர் வேறு எவரும் இலர். பெற்ற பிள்ளைகளை விடவும் பெருஞ்செல்வம், வேறு எதுவும் இல்லை. தன்னைப் பெற்ற தாயை விடவும் உண்மையாக வேறொரு கடவுள் இல்லை." இன்னொரு பாட்டு சொல்கிறது: "இனிது உண்பான் என்பான் [ஒன்றின்] உயிர் கொல்லாது உண்பவன்; முனிவன் என்பான், தன் அடையாளம் மறைத்து வாழ்பவன்; [உண்மையிலேயே] தனிமையானவன் எவன் - என்றால், எவருக்கும் எந்த நன்மையும் செய்யாது தனக்காக மட்டுமே வாழ்பவன்; [எல்லோருக்கும்] இனியவன் என்பவன்,யார் யாரே ஆனாலும் அவர்களிடம் சாதி முதலான பேதம் பார்க்காமல் ஒருவரேபோல் கருதி நடந்துகொள்ளும் ஒழுக்கம் கொண்டவன்." 101 ஆம் பாடல்: "மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள் - தனக்குத் தகை சால் புதல்வர்; மன[து]க்கு இனிய காதல், புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும், ஓதின் - புகழ் சால் உணர்வு." #டான் பிரவுன் படைத்த 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்' புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். தாய்மொழிவழி சொந்தக்காரரான விளம்பி நாகனார் மனதுக்குள் வந்து அழைத்தார். "கொஞ்சம் இங்கே வந்து இளைப்பாறிச் செல்!" என்று நான்மணிக் கடிகையைச் சுட்டினார். அதனால் விளைந்தது இக்குறிப்பு :-)
[Facebook note of Puducherry Devamaindhan (பசுபதி) on 03/08/2015]

12.7.15

புதுச்சேரியில் வாழ்வதால் படிக்கத்தான் முடிகிறது குடிக்க முடியவில்லை ;)

புதுச்சேரி, ஒரு புத்தக நகரம். குறுகிய பரப்பளவில், ‘நிறைய்ய’ புத்தக விற்பனை நிலையங்கள். ஒரு ‘டூவீலரை’க் கிளப்பிக்கொண்டு, மேற்கே வழுதாவூர் சாலை வழி உள்ளே நுழைந்தீர்களென்றால், சாரம் பாலம் வலது பக்கம் திரும்பினால் கொஞ்ச தொலைவில் இடது பக்கம் மாடியொன்றில் நண்பர் சீனு. தமிழ்மணியின் ‘இலக்கியம்.’ நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய புத்தகங்கள் முதல் எல்லாம் கிடைக்கும். புதுச்சேரியின் வடக்குப் பகுதியிலிருந்து அஜந்தா சிக்னல் வழி நேரே மகாத்மாகாந்தி வீதிக்கு வந்தால், முதல் வலது ஒடிப்பில் சங்கரதாஸ் சுவாமிகள் தெருவில் நண்பர் பாஸ்கரின் ‘பாரதி புக்ஸ்.’ காலச்சுவடு புத்தகங்கள் முதல் சாரு நிவேதிதா’வின் தடிமனான புத்தகங்கள் வரை எல்லாம் கிட்டும். அடுத்த இரண்டாம் தெரு மேற்கு முடுக்கில் ‘கண்ணதாசன் புத்தக நிலையம்.’ இரண்டு தெரு தாண்டினால் அரவிந்து வீதி - ம.கா. வீதி சந்திப்பில் மாடியில் ‘புஸ்தக் மந்திர்.’ பிரபஞ்சன், பாலகுமாரன்... எல்லா நூல்களும். உள்ளே இடது புறம் திரும்பினால் வடக்குப் பார்த்தவாறு ‘அமுதம் புத்தகக் கடல்.’ தொல்காப்பியம்,சங்க இலக்கியம் முதல் உரைகளோடு; சித்தர் இலக்கியம், ஜோதிடத் திண்டுகள் இன்னும் பற்பல. சற்று முன்னாலேயே, ‘வினாயக் புக் பேலஸ்.’ ஒருவழிச் சாலைகள் வழி ‘டைவர்ட்’ ஆகி ஆகி, ரங்கப்பிள்ளை தெருவுக்கு வந்தால் ‘சிறுவர் பூங்கா’ புத்தக நிலையம். கிழக்கே சற்றுத் தொலைவுக்குள் ஆம்பூர் சாலையில், இடது பக்கம் ஒடித்தவுடன், ‘ஹாட்பிரெட்ஸ்’ தாண்டி, மேனாள் முதல்வர் ஜானகிராமன் வீட்டை ஒட்டி ஹிக்கின்பாதம்ஸ். ஆனந்த விகடன் வெளியீடுகளிலிருந்து அனைத்து வகை ஆன்மீக, இலக்கிய, இன்னும் பல. அகராதிகள் பலவகை கிட்டும். வெளியே வந்து பக்கிங்ஹாம் கனால் வலது புறம் திரும்பினால் ‘வாக்.’ ஆசிரமத் தொடர்பானபுத்தகங்கள். கொஞ்சம் வடக்கே, மரீன் வீதியில் ‘சப்தா.’ அரவிந்தாசிரம சம்மந்தமான புத்தகங்கள். கிழக்கே ஆசிரமத்தை ஒட்டி தெற்கே வளைவெடுத்து வந்தால் ம.கா. வீதி பெத்திசெமினேர் பள்ளி எதிர்ப்புறம் ‘ஜம்பு.’ ஜிப்மர் மருத்துவ திண்டுகள் முதல் பழைய தமிழ் ஆங்கிலப் புத்தகங்கள். என்னுடைய 1980 ஆண்டு வெளியீடான ’புல்வெளி’ புத்தகத்தை, கையில் படி(பிரதி) இல்லாததால் இங்கேதான் விலைகொடுத்து வாங்கினேன். பக்கத்திலேயே, ‘பெரிய பார்ப்பாரத் தெரு’ என்றழைக்கப்படும் நீடாராஜப்பயர் தெருவைப் பிடித்து, மாதாகோயில் தெருவில் வலது பக்கம் திரும்பினால், கிழக்குப் பார்த்தவாறு ‘ஃபோகஸ்.’ இங்கே கிடைக்காத ஆங்கில பிரெஞ்சு நூல்களில்லை. மாதா கோயில் எதிரிலேயே கொலாஸ் மன்றத்தில் நெடுங்காலமாய்ப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. 10% முதல் 55% வரை கழிவுள்ள புத்தக மலைச் சரிவுகள். எப்படித்தான் நடத்துகிறார்களோ. இன்னொரு நிரந்தரப் புத்தக் காட்சிக்கு, மாதாகோயிலுக்கு எதிர்ச் சாலையிலேயே போனால் ‘ஒப்பித்தா’லையும் தாண்டி, அந்தண்டை பழைய ஆர்.டி.ஓ./ வணிக அவைக் கட்டடத்தில் ‘இந்தியன் புக்ஸ்.’ ஒவ்வொரு நாளும் எப்பொழுது மூடுகிறார்கள் என்றே தெரியாது. புலவர் இராசியண்ணன் நூல்களை வாங்கிய வாய்ப்பு அங்கேதான் கிடைத்தது. ஞாயிறு வந்து விட்டால் போதும். புதுச்சேரி நகரின் முதுகெலும்பு போன்ற காந்தி வீதி நெடுக, நாள்முச்சூடும் கூடும் தெருப்புத்தகக் கடைகளில் தமிழ்நாட்டுக் கிளை நூலகப் புத்தகங்கள் முதல் எல்லா மொழிப் புத்தகங்களும் கிடைக்கும். நண்பருக்கோ ஆசிரியருக்கோ அன்பளிப்பாகத் தருகிறோம் என்றிருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் பெயர் போடாமல் ‘அன்புடன்,’ என்று கையெழுத்துப் போட்டு அந்தந்த நூலாசிரியர்கள் தரும் புத்தகங்கள் பலவற்றை இங்கே அழகாகப் பார்க்கலாம். நுனி மடியாத புத்தகங்களாய் அவை காட்சி தருவது கொள்ளை அழகு. நம்மேல் ‘அசூயை’ கொண்டு நண்பர்கள் தர தவிர்த்த அழகான வண்ண அட்டைகளுடன் கூடிய புத்தகங்களை அவற்றின் 10% விலைக்கே (கழிவு /discount அல்ல; விலை!) தள்ளும் கடைகள் பல. நான் மட்டும் புதுச்சேரியில் இல்லாமலிருந்தால் கொடுங் குடிகாரனாயிருந்திருப்பேன். இங்கே புத்தகங்கள் என்னைப் படிக்கமட்டுமே விடுகின்றன. செலவும் மட்டு. இதில் முகநூலிலும் நேராகவும் நண்பர்களாயுள்ள நாங்கள் சிலர், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்கிறது வேறு.
கொஞ்சம் தள்ளி வங்கக் கடல். பழைய மேரி - நகராட்சிக் கட்டடமிருந்த இடம். அருங்காட்சியகம். புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டு இயக்க அலுவலகம். புதுச்சேரி அரசின் நூலகப் புத்தகத் தெரிவுக் குழுவிலும் விருது மதிப்பீட்டுக் குறுங்குழுவிலும், பல ஆண்டுகள், தங்கப்பா போன்ற ஐயாமார்களோடு பணியாற்றினேன். விருது மதிப்பீட்டுக் குழுவில் என்னையும் என் நெடுங்கால நண்பரையும் என்னையும் மோத விட்டுப்பார்த்தார்கள். நடக்கவில்லை. அதனால், கசப்புடன் விலக நேர்ந்தது. அது, ஒரு தனிக்கதை. இப்படி, “சட்டி சுட்டதும் கைவிட்டு விடும்’ பழக்கத்தால், நண்பர்கள் நண்பர்களாகவே தொடர்கிறார்கள்.
என் முதல் புத்தகம் 1976இல் - 100 படிகள் மட்டும் .. இரண்டாவது புத்தகம் 1980இல் 100 படிகள் மட்டும்.. மூன்றாவது புத்தகம் 1993இல் 72 படிகள் மட்டும் இயக்ககம் வாங்கியதாக ஞாபகம். புதுச்சேரி நூலகங்களுக்காக ‘புத்தககங்கள் வாங்குகிற சமாச்சாரத்’தில் “பழம் தின்று கொட்டை” போட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் சிலர், முகநூலில் மெளனம் காக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவதே என் நட்பின் பொறுப்பும் கூட. இந்த ‘லச்சண’த்தில், எனக்கு மிகவும் பழக்கமான பழம்பெரும் கோவை எழுத்தாளர் ஐயாவுக்கு மறுமொழி விடுக்க முடியாமல் ‘இக்கட்டு’ வேறு. இன்னோர் இக்கட்டு, ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்பானது. மறைந்த பெரும்பாவலர் செவ்வேள் ஐயா அவர்களின் நூலை ஆங்கிலத்தில் ‘பெயர்க்க’ முன்வந்தவர் “செய்தவற்றை” வெய்துயருடன் செவ்வேள் என்னிடம் சொல்லியிருக்கிறார். எப்படி இதை கோவைப் பெரியவருக்கு மொழிவேன்?
பின்குறிப்பு: இதில், இன்னும் பல புத்தக விற்பனையகங்கள் விடுபட்டிருக்கும். நண்பர்கள் அறிவித்தால் அறிந்து கொள்வேன். நன்றி :)


6.7.15

நாகரத்தினம் கிருஷ்ணா - காஃப்காவின் நாய்க்குட்டி; குறித்து தேவமைந்தன் எழுதிய முகநூல் குறிப்பு #3

மிகவும் படித்த பெண்கள் சிலர் - அரசியலை வெறுப்பதும், ஃபாஷன் பற்றியும் நகை துணிமணி பற்றி விவாதிக்க விரும்புவதும் ஆனதுதான் தாம் வாழும் வாழ்வின் நோக்கம் என்று நம்பிக்கொண்டிருக்கையில், இந்த நாவலில் வரும் ஹரிணியையும் பாரதியையும் நித்திலாவையும் கமிலையும் போற்றாமலிருக்க முடியவில்லை. இவர்களில் பாரதியும் நித்திலாவும் - வாழும் கதைமாந்தர் என்பதை ஆசிரியர் உரையின் கடைசியில் அறிகிறோம். ஹரிணியின் சிந்தனையெல்லாம், நானறிந்தவரை, நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் சொல்லாடல்களுடன் ஒத்துப்போகக் காண்கிறேன். என் கருத்து தவறாகவுமிருக்கலாம். ஜெயகாந்தன் சொல்கிறாற்போல் வாழ்விலுங்கூட 'தவறுகள், குற்றங்கள் அல்ல' தானே? சரி. ஹரிணி பார்வையில் பிரெஞ்சு வங்கியொன்று அவதானிக்கப்பெறும் விதத்தில், சென்ற கிழமை, புதுவையில் நானே ஒரு வங்கியின் நிகழ்தருணத்தை உணர்ந்து, எதிர்காலத்தில் எப்படியெல்லாம் 'இது' ஆகுமோ என்று அஞ்சியிருந்தேன். அவர்கள் உண்டாக்கிய 'கணினிப் பெருந்திரை விம்பம்' (டோக்கன் தொடர்பானது) என் நெஞ்சின் துடிப்பை என்னையே கேட்க வைத்தது. அநேகமாக அதே வங்கியில், கணக்கு வைத்தோர் இருக்கை ஒன்றில், இந்த செயற்கை 'டென்ஷனேற்றம்' ஒன்றின் நிமித்த காரணமாக, சாய்ந்து நான் இறந்து விடுவேன் என்று நம்புகிறேன். 'லெட்ஜர்'களுடன் புன்னகை செய்த மனிதர்கள் வேலைசெய்த வங்கிகளின் காலத்தில், அப்பாவின் காசோலையைக் கொடுத்துப் பணம் பெறுகையில், உரிய 'கவுன்ட்டர்' மனிதர் என்னைப் பார்த்து, என் படிப்பு விடயமெல்லாம் விசாரித்தறிந்த காலத்திலேயே 'banking' செய்ய வாய்த்திருந்தேன். இந்த விறைப்பெல்லாம் 'செக்யூரிட்டி'களிடம்தான் அப்பொழுது இருந்தன. இப்பொழுது உள்ள மாதிரி இல்லாமல் 'ஜீவன்'கொண்டு அப்பொழுதைய வங்கிகள் இயங்கின. இருக்கட்டும். நம் "ஹரிணி வங்கிக்குள் நுழைந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகப்போகிறது. எல்லாமே கணினி மயமாக்கப்பட்டிருப்பது காரணம். இணைய இணைப்பு மூலமே காரியத்தை முடித்துக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இன்றைய மனிதனுக்கு இரத்தமும் சதையுமான மனித உறவுகள் தேவை குறைவு. உணர்வுகளின் எச்சிலோடு உரையாடல், மின் அஞ்சல்கள், சமூக வலைத்தளங்கள், ஸ்கைப்புகள் என்கிற அரூபங்களுடன் உறவாடல். நதி கடலினைத் தேடவேண்டியதில்லை. கடல் நதியினைத் தேடிவரும் காலம். உயிர் வாழ்க்கை அல்ல. பிண வாழ்க்கை. அலுவலகம் போக வேண்டியதில்லை; கடைகளில் தொட்டுப் பார்த்து, நுகர்ந்து சுவைத்து பொருளை உடைமை கொள்ளத் தேவையில்லை. பிறந்த மேனிக்கு கதவை அடைத்துக்கொண்டு கேட்டதைப் பெற்று காலத்தைத் தேய்க்கலாம். ஒற்றை மனிதன், ஓர் இனம், குலக்குறி என்பதான அடையாள முத்திரைகளை அழித்து நிறுவிய ஊரும் சமூகமும் மீண்டும் பூர்வீகத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன." இப்பொழுதைக்கு இதுபோதும். வயதான கைவிரல்களும் வயதாகாத மனமும் சண்டைபிடிக்கத் தொடங்கிவிட்டன. 'ஏசர்' - தனது வெப்பப் பெருமூச்சினை, என் இடது உள்ளங்கை மேல் ஊதுகிறது. பிறகு, தொடர்வேன்.

Vishwas Mudadagal எழுதிய Losing My Religion நாவல் தொடர்பான எதிர்வினையாக எனக்கு வந்த மின்னஞ்சலின் பகுதி

“அன்பு ....க்கு,

நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

.. .. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வாரமும் மாதமும் வருடமும் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போவதும் இயற்கையின் ஒரு அங்கம் தான். [தகவல் தொழில் நுட்பத் துறை சர்ந்த] நாங்களும் இயற்கையின் பிள்ளைகள்தான். Vishwas Mudagal எழுதிய Losing My Religion நாவலில் என்ன குறை கண்டீர்கள்..?

இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் திறமையும் புகழும் மிக்க ‘தொழில் முனைவோராக’ வளர்ந்தும், பாழாய்ப்போன mass support இல்லாமல் போவதால், ரிஷி என்னுமொருவன் உடைந்து சிதறிப் போனாலும்; தன் சொந்த நண்பர்களே தன்னை அதைரியப்படுத்தினாலும்; ஓரிரவு trance மாதிரி ஒரு மனநிலையில் 130 கிமீ தொலைவுக்குத் தன் SUV காரை, வழியில் யாரையும் கொல்லாமல் தானும் சாகாமல் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு விரட்டுவதும்; விடிகாலைக்குமுன் 03 மணிக்கு காவிரியின் கரைமணலில் வானத்தைப் பார்த்துப் படுத்துக் கொண்டு, சின்ன வயதிலிருந்தே தான் மானசீகத் தொடர்பு கொண்டு வரும் நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து, தனக்கொரு அடையாளம் காட்டுமாறு கதறுவதும், அந்தமாதிரி ‘அலெக்ஸ் ‘ அவனுக்கு அடையாளம் காட்டப்படுவதும்; தன்னிடம் சொத்து என்று உண்டேயான ஒரேயொரு SUV ஐயும் விற்றுவிட்டு காசாக்கி.. ஆயிரக்கணக்கிலான கி.மீ. பயணம் செய்து, ஹிமாலயத்தின் சாரல் பள்ளத்தாக்கில், கடல்மட்டத்துக்கு 3029 மீட்டர் உயரமுள்ள மலானா கிராமத்தில், இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்துகொள்கிறானே - அது, இயற்கைதரும் பாடமில்லையா..

இதற்குப் பின்னால், ரிஷியும் அலெக்ஸும் நிகழ்யுகப் பெண்ணான கைரா’வைச் சந்தித்த பிறகு உணர்வது மேன்மைமிக்க வாழ்வில்லையா? ‘பொருளாயத உலகில் அந்த வானத்தின் நட்சத்திரங்களுக்கு ஈடாக உயர்ந்து காட்டுகிறேன் பார்!’ ‘இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுகிறேன் பார்!’ என்று சவால் விட்டு வாழும் ரிஷி; வற்றிவரண்ட மேலைக்கலாச்சாரத்தையும் -போர்போர்போர் என்று வெறிபிடித்தலையும் சட்டாம்பிள்ளைத்தனமான உள்நோக்கு அரசியலையும் முற்றிலும் வெறுத்து... ‘தன்னிருந்தே தான் விடுபட’ தவம் கொள்வதற்காக, எங்கோ உள்ள இந்தியாவை நேசித்து ஓடிவரும் அறிவியலின் மாற்றுப் பிரதியும் மனிதப் பரிணாம வர்ணமாலையின் முரண்பாட்டுக்குரிய செறிவான தேடலின் பிதாமகனுமான அலெக்ஸ்; இந்த ஆண்கள் இருவரிடமிருந்தும் முழுசாக வித்தியாசமாகி, அன்பு - அழகு - இரக்கம் - கருணை - பாசம் - உள்ளுணர்வு - அறிவான வாழ்க்கை ஆகியவற்றை இயல்பாக வரித்துக்கொண்டுள்ள நவீனப் பெண்மையின் பிரதிநிதியாகும் கைரா. இவர்கள் மூவருக்குள்ளும் மிகவும் எதேட்சையாக, ஏதோ ஒரு - பச்சைக்கண்களுள்ளவர்கள்[Greek Origin] தங்கள் சுயமிழக்காது வாழும் மலானா கிராமத்தில் உருவாகும் அர்த்தமுள்ளதும் ஆழ்ந்ததுமான அன்புகூடிய நட்புக்கும் புரிந்துணர்வுக்கும் இடந்தந்து வாழ்வது வாழ்க்கை..”

[Edited the mail]

5.7.15

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ (“சே பியா[ன்] அமியபிள் ஆ வூ மிசியே Krishna Nagarathinam B-) ’’)

முந்தி முந்தி மிகவும் விலாவாரியாக எழுதுவேன். நண்பர்களின் புத்தகங்களென்றால் சொல்லவே வேண்டாம். நாகரத்தினம் கிருஷ்ணா படைத்த ‘நீலக்கடல்’ நாவலுக்கும் மதுமிதா தமிழாக்கம் செய்த ராஜா பர்த்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ சாத்திரத்துக்கும் மிக விரிவான மதிப்பீடுகளைத் ‘திண்ணை’யில் எழுதினேன். ‘கீற்று’-வில் அயோத்திதாசர் குறித்து எழுதினேன். ‘புதுச்சேரி’ வலையேடு தொடங்கி ‘மரத்தடி’ ‘வார்ப்பு’ ‘திண்ணை’ ‘கீற்று’ முதலான வலையேடுகளில் நீண்ட பயணம். பெண் பெயரில் ‘நிலாச் சாரல்` முதலானவற்றில்.
வாழ்க்கையில் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். வளவள என்றெழுதுவது கூடாது. திரைப்படம், புதினம் போலவே நம் எழுத்தாடல்களுக்கும் - தொகுத்தல் / Editing மிகமிக அவசியம் என்றெல்லாம் நேரில் பயிற்றுவித்த புதுச்சேரி வானொலியின் மேனாள் ஒருங்கிணைப்பாளரும், என் மேனாள் மாணவருமான திரு சிவப்பிரகாசமும்; தேவமைந்தனின் வலையேட்டு வாழ்க்கைக்குப் ‘பிள்ளையார் சுழி’போட்ட மேனாள் மாணவர் முனைவர் நா. இளங்கோ Ilango Nagamuthu அவர்களும்; வீட்டுக்கு வந்து வலையுலகம் தொடர்பாக எதையெல்லாம் செய்யலாம்,, முக்கியமாக செய்யக்கூடாதவை எவையெவை என்று பிள்ளைக்குக் கற்றுத் தருவதுபோல் கற்பித்த நண்பர் பாவலர் இராஜ. தியாகராஜன் அவர்களும்; துரோணர், ஏகலைவனுக்குப் பயிற்றுவித்தது போல் என் பெயரன் வழி புத்தக வடிவில் அருவமாக இல்லம் வந்து கற்றுத்தந்த Vishwas Mudagal [‘Today what you hold in your hands is the 14th version of the book.’ Author’s note. P. 9. ‘Losing My Religion’ (novel) FINGERPRINT! 2014] அவர்களும் - இந்த ‘சைபர் உலகில்’ எனக்குத் தொடக்கப்பள்ளி முதல் பல்கலை வரையிலான ஆசிரியர்கள்.
அதிலும், முகநூல் போன்ற சமூக வலைதளத்தில் - விடைத்தாள்களை ‘பக்குவமான’ ஆசிரியர்கள் திருத்துவது போலவும்; தமிழ்த் தந்தி [usage of Krishna Nagarathinam] படிக்கும் / பார்க்கும் நண்பர்கள் போலவும்தான் நம் பதிவுகளைப் பாஆஆஆர்த்து Like பதிகிறார்கள் என்பதை நன்கு அறிவேன். இந்த Like போடுவதற்குக்கூட, “பாத்திரம் அறிந்து பிச்சை இடு” என்ற தமிழ் மூதுரையைப் பின்பற்றும் பலரை நான் நன்கறிவேன்.
இதனால்தான், நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலின் 13 - 308 பக்கங்களான நாவலையும் 309-310 பக்கங்களில் வரும் ‘பிரெஞ்சு சொற்கள்’ பட்டியலையும் விடாமல் வாசித்துவிட்டு, சமைந்துபோய் உடகார்ந்திருக்கிறேன்.[‘சமைந்துபோய்’ - யை, சினிமாப் பாடலாசிரியர்கள் கோணத்தில் கண்டுகொள்ளாதீர்கள்!]
இந்த நேரத்தில் நண்பர் பஞ்சு Panjangam Kaniyappan அவர்களின் திறத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியாது. நெடுநாள் நண்பராயினும் சற்று விலகி நின்று அவருடைய ‘ விமர்சனப் பார்வை’யையும்; கடகடவென்று எழுதிவரைந்து செல்லும் அரியவகை எழுத்தாற்றலையும் ஆச்சரியத்துடன், லாலி பாப் குவியலை அண்ணாந்து பார்க்கும் குட்டிப் பையனாக வியந்து பார்க்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கோபால கிருஷ்ண கெளமுதி’ வரலாற்று நாவலையே காலச்சுவடு அச்சேட்டில், த.ஜெ. பாணியில் சொன்னால் ‘விமரிசையான விமர்சனம்’ செய்தவரல்லவா Panjanganm Kaniappan என்ற ஐடியிலுள்ள பஞ்சாங்கம் என்கிற நண்பர் பஞ்சு!
இது இவ்வாறு இருக்க, எங்கள் புதுச்சேரி முதலியார்ப்பேட்டையைச் சேர்ந்த வாழ்முனி மகன் பாலனுடனும்; தமிழ்த் தந்தியில் ‘நியூஸ்’ வருமளவுக்கு பாலன் தமிழ்முறைப்படி திருமணம் செய்துகொண்ட செக் குடியரசின் குடிமகள் அத்ரியானாவுடனும்; முன்பே நா.கி. எழுத்துவழி பழகிவிட்ட பாரதியுடனும் ஹரிணியுடனும்; சர்சலில் தன் தமக்கையுடன் இரண்டாண்டுகள் வாழ்ந்து, அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளியேறி, பிரான்சில் வாழ்வதற்கு ஏற்ற அத்தாட்சிப் பத்திரங்கள் கையிலில்லாததால் வழக்குக்கிழுபடும் - 2009 போரில் பெற்றோர்களை இழந்ததுடன் இலங்கை ஆர்மியால் புலிகளியக்கம் சார்ந்தவள் என்று சந்தேகத்துக்காளாகி உயிரையும் உடலையும் அந்த ‘...வர்’களிடம் விட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கத்துடன், சகமனிதர்களை மதிக்கும் பிரான்சுக்கு வந்து வாழும் யாழ்ப்பாணவாசியான நித்திலாவுடனும் [குறிப்பாக நித்திலாவுக்கு மொழிபெயர்ப்பாளராக மட்டுமே உதவ வேண்டிய, ஆனால், இனந்தெரியாமல் அவளுக்காகப் பரிந்து பாடுபடும் ஹரிணியும் என்னுடன் வாழும் சகோதரிகளாகவே உணர்கிறேன்]; எனக்கு மிகவும் பிடித்த ‘மனத்தால் பழுத்த’ சாமி உடனும்; லக்னகுமாரனுடனும்; சகஜமான கமீலியுடனும்; ‘அசிஸ்டெண்ட் சோஷியால்’ எலிஸபெத்துடனும் [இதே வகைமாதிரிப் பெண்ணுடன் 1990+இல் நான் மட்டுமல்ல துணைவியாரும் நெருங்கிப் பழகியிருக்கிறார்; இப்பவும் பிரான்சிலுள்ள என் சகலைகொழுந்தியர் குடும்பத்தார்க்கு அவர் உதவி வருகிறார்]; .. இந்தியாவின் வடக்குக் கிராமத்து மங்லி வரை .. ஓ, முக்கியமாக காஃப்காவுடனும் அவருடைய ‘இருப்பை’ப் புத்துயிர்க்கும் நாய்க்குட்டி வரை .. பலருடன் தற்கணம் வாழ்ந்து வருகிறேன். ‘இடைவெளி’ இருந்தால்தானே விரிவாக எழுத முடியும்?
பின்னொரு முறை, இதைத் தொடர்கிறேன். நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் நான்பழக நேர்ந்ததற்குப் புதுச்சேரி மட்டுமே காரணமல்ல. தகழி முதல் த.ஜெயகாந்தன் வரை; ஜெய்புன்னிசா அக்கா முதல் சகோதரி மதுமிதா வரை அன்புடன் பழகியவன் நான். இவர்களெல்லோரையும் விட நாகரத்தினம் கிருஷ்ணா என்னை இதுநாள் வரை, சகித்துக் கொண்டு, நட்புடன் உள்ளவர் என்பதற்காகவே நான் நிறைய எழுத வேண்டும். எங்கே..


3.7.15

புத்தர் அணுகுமுறை எவ்வளவு மெய்ப்பொருளானது - என்பதற்கு ஆய்வு அறிஞர் குணா மேற்கோள்களுள் ஒன்று!

மெய்ப்பொருள் குறித்து மதவாதிகள் பலவாறாகத் தருக்கம் செய்துவந்த காலமொன்று இருந்தது. அப்பொழுது புத்தர் கருத்துகள் ‘சிம்ம சொப்பன’ங்களாக மாற்று மதத்தவர்க்குத் தோன்றி வந்தன. ஆனால், புத்தரோ எளிய வலியவர். எதையும் அதிரடியாகச் சொல்லாதவர். தடாலடித் தத்துவஞானியல்லர் புத்தர். உண்மையான மெய்ப்பொருளாளர்.
[இனி வருபவை அறிஞர் குணா கருத்துகள்]
ஒரு காலகட்டத்தில் ‘கருத்துமுதல் கூறுகள் பொருள்முதலியலை மறுத்துச் சிறப்புப் பெற்ற’ன. இதற்குச் சான்றாக, ‘புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடையைக் குறிப்பிடலாம்.’
வச்சன் என்னும் துறவி கேட்ட கேள்வி:- “இறந்த பின்னர் முனிவர்கள் மீண்டும் பிறக்கின்றனரா?”
புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடை:- “ அவன் மறுபிறவி எடுக்கின்றான் எனக் கூறுவது பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பது எடுக்காதது என்னும் இருநிலைக்குமுரியவன் எனச் சொல்வதும் பொருந்தாது. மறுபிறவி எடுப்பதும் எடுக்காததும் என்னும் இருநிலைகளுக்கும் உரியவனல்லன் எனக் கூறுவதும் பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பதில்லை என்று கூறுவதும் பொருந்தாது.”
- என அவர் கூறுவதாக அமைகின்ற கருத்து நம்முடைய தலையைப் பம்பரம் போல் சுழலச் செய்கின்றது. தொடர்ந்து,
“ அனைத்தும் உணர்ச்சிகள்; அனைத்தும் காட்சிகள்; அனைத்தும் முன்னிலைகள்; அனைத்தும் தன்னுணர்வுகள்; அவை யாவும் பிடுங்கி எறியப்பட்ட பனைமரம் போல் துறக்கப்படும்; வேரறுக்கப் பெறும்; பிடுங்கி எறியவும் படும்.”
எனக் கூறுவது கருத்துமுதல் அடிப்படையிலான ‘சார்பியல்’ கோட்பாட்டிற்கே மெள்ள இழுத்துச் செல்கின்றது. அதன் முதிர்ச்சி நிலையே மதியமிகம் படைத்த ‘வெறுமை(சூனியக்)’ கோட்பாடு. “உலகம் நிலையானதென நான் கருதவில்லை; அவ்வுலகம் நிலையில்லாததெனக் கூறவுமில்லை” என புத்தர் வச்சனுக்கு உரைத்ததாக மச்ஃசிம நிகாயம் என்னும் ஈனயான நூல் செப்புகின்ற கூற்றுங்கூட அத்தகைய சார்பியல் கோட்பாட்டிற்கே கொண்டுச் செல்கிறது.” [குணா பயன்படுத்தும்] கலைச்சொற்கள்: சார்பியல் - Relativism. கருத்து முதலியல் - Idealism. பொருள் முதலியல் - Materialism. வெறுமை(சூனிய)க்கோட்பாடு - Nihilism. [முன்னுள்ள கலைச்சொல் Nihilism என்பதை குணா பயன்படுத்தவில்லை.]
அடிப்படை[ஆதாரம்]
ஆய்வு அறிஞர் குணா, ‘தமிழர் மெய்யியல்,’ பொதுமை வெளியீடு, #16, மங்கேஷ் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.

1.7.15

இது?

“மாப்பிள்ளை! மாப்பிள்ளை!” - நிமிடத்துக்கு மூன்று தடவையாவது ‘மாப்பிள்ளை’ என்று கூப்பிட்டுப் பேசியவர். சிரிப்பும் சுவாரசியமுமாகப் பேசியவர். “அப்புறம்..ஒங்க ஃப்ரெண்டு ஜெயராஜ் நத்தானியல் இப்ப எங்கே இருக்கார்?.." என்ற பாணியில், என் நண்பர்களைப் பற்றியும்; அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் பற்றியும் ஓயாமல் உற்சாகம் கொப்புளிக்கப் பேசியவர். சொந்த ஊர், திருச்சி. என்னுடன் பழகிய ஊர் கோவை. சொந்த வீடு, இயற்கைச் சூழலில், மருதமலை அருகில். உறவினருங்கூட. கோவை ஆர்.எஸ்.புரம் இரத்தின வினாயகர் கோயிலில் அவர் ஆற்றிய ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்க, எப்பொழுதும் கூட்டம் கூடும். கோவை மத்திய சிறைச்சாலையில் திருக்குறள் வகுப்புகள் எடுத்தபோது, என்னையும் அப்பணியில் ஈடுபடுத்தியவர். நல்ல அறிவாளி. ஆசிரிய(ர்)ப் பணியைத் தெய்வமாகக் கருதி வாழ்ந்தவர்.
ஓய்வு பெற்ற பின்னர், ஓர் ஆன்மிக அமைப்பில் சேர்ந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அந்த ‘மிஷன்’ வெளியிட்ட புத்தகங்கள் பலவற்றை அள்ளிப் போட்டு, புதுச்சேரிக்கு ‘எடுத்துக் கொண்டுபோய்’ப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் புத்தகச் சுமையையும் தூக்கிக் கொண்டு புதுச்சேரிக்குத் திரும்பினேன். படித்தேன். படித்தேன். படித்தேன். ஒன்றுமே என் ‘மண்டை’யில் ஏறவில்லை. ஒருநாள் தொலைபேசியில் பேசும்போது, இங்கே கிழக்குக் கடற்கரைச் சாலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர் ஒருவரின் அலைபேசி எண்ணைத் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னார். அந்த அமைப்பு வெளியிட்ட புத்தகங்களே என்னை ‘ஒருவழியாக்கி’விட்ட விவரத்தையும்; அவர் அலைபேசி எண் தந்த ந(ண்)பரைச் சந்திக்கத் தயக்கமாகவுள்ள விவரத்தையும் உண்மையுடன் சொன்னேன். “உங்களுக்குப் பிடிக்கவில்லையானால், உங்களுக்குத் தெரிந்தவர்கள் / நண்பர்கள் எவருக்கேனும் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்!” என்று சற்று கண்டிப்பாய்ச் சொன்னார். அவற்றைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுமளவு எனக்கு ‘ஆகாத’வர்கள் எவரும் புதுச்சேரியில் இல்லை என்பதால், ‘என்ன செலவானாலும் ஆகட்டும்’ என்று அவற்றையெல்லாம் தூதஞ்சலில் அவர் முகவரிக்கு அனுப்பினேன். அவருக்கு அவை கிடைத்து விட்டதை தூதஞ்சல் அலுவலகமும் உறுதி செய்தது. அவ்வளவுதான்...
சில ஆண்டுகளுக்கு முன்பே, ‘மாப்பிள்ளை’ என்று அழைத்து, சிரித்துச் சிரித்துப் பேசும் பழக்கத்தைக் கைவிட்டு விட்டவர், இப்பொழுது, நானே அலைபேசியில் பேசினாலும் எடுக்காமல், ஒரே முறை “எதையும் கடிதமாக எழுதுங்கள்; அஞ்சல் செய்யுங்கள். படித்துக் கொள்கிறேன்.. மின்னஞ்சல் பழக்கமெல்லாம் எனக்கில்லை..” என்று சொல்லி, பேசியை வைத்து விட்டார்.
ஒரு கிழமைக்கு முன் திருச்சிராப்பள்ளியிலிருந்து பேசிய நெருங்கிய உறவினர், "என்ன ..[உறவுப்பெயர்]..! “அவர்” உங்களை விட எவ்வளவு பெரியவர்.. எப்படிப் பயணம் செய்கிறார், எங்களைப் போல, எத்தனை சொந்த பந்தங்கள சந்திக்கிறார்.. அவரப்போய் வேதனைப்படித்திட்டீங்களே.. அவரும் இருக்கார். நீங்களும்தான் இருக்கீங்க.. என்ன பிரயோஜனம்,”.. என்று தொடர்ந்தார்.
தான், என் சிற்றப்பா மகளான அக்காவைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், பல ஆண்டுகள் என்னுடன் மிக நெருங்கிப் பழகி, தான் ஓய்வுபெற்ற பின்னர், மக்களுக்குப் பயன்படாத ஓர் ஆன்மீக இயக்கத்தில் தான் சேர்ந்து, அவரைப்போல் நானும் என் மனச்சான்றை விட்டு(ற்று)விடாததற்காக, என்னை முற்றிலும் ஒதுக்கி வைத்ததுடன், என் உறவினரிடமும் ‘நல்ல பெயர்’ வாங்கிக்கொள்ளும் அவர் ‘பணி’ வாழ்க!
பத்தாண்டுகளுக்கு முன்னர், சென்னையில், எம் குடும்பத்தை அன்புடன் அரவணைத்துக் காத்த அண்ணன்வழி உறவினரும் பெரியதோர் ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவர்களே. அது ஆன்மீகம்.
இது?


9.6.15

தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம்

1962 ஆம் ஆண்டில் ஏழாம் பதிப்பைக் கண்டது, தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் - கீதாஞ்சலி தமிழாக்கம். காரைக்குடி, செல்வி பதிப்பகம் இதைப் பதிப்பித்தது. அந்தக் காலத்தில், 'பி.ஏ.' என்பதே பெரிய படிப்பு. அதனால்தான் தமிழ்மணி வி.ஆர்.எம். செட்டியார் அவர்களின் பெயருக்குப் பின் 'பி.ஏ.' என்ற பட்டத்தை 1950களிலேயே பதிப்பகங்கள் அச்சிடலாயின. தாகூரின் உணர்வு குன்றாமல், அவருடைய கீதாஞ்சலியின் நூற்று மூன்று கவிதைகளை எளிய தமிழில் செட்டியார் அவர்கள் தமிழாக்கினார். பானைச்சோற்றுக்குப் பதமொன்று இதோ: "எங்கு மனம் பயமற்று விளங்குகிறதோ, எங்கே தலை கம்பீரமாய் நிமிர்கிறதோ, எங்கு அறிவு சுதந்திரத்துடன் பொலிகிறதோ, எங்கு குறுகிய சாதிமதப் பிளவுகளால் உலகம் உடையாமல் உருப்பெற்றிருக்கிறதோ, எங்கு உண்மையின் ஆழத்தினின்று சொற்கள் உதயமாகின்றனவோ, எங்கே தளரா முயற்சி பரிபூரணத்தை நோக்கி கைகளைப் பரப்புகிறதோ, எங்கு பகுத்தறிவெனும் தெளிந்த ஆறு மாண்டொழிந்த பழக்கங்களான பயங்கரப் பாலைமணலில் பாயாது மீள்கிறதோ, எங்கே விரிந்தசிந்தனையிலும் செயலிலும் எனது உள்ளத்தை நினது அருள் இழுத்துச் செல்லுகின்றதோ, அந்தச் சுதந்திர சுவர்க்கத்தில், என் அப்பனே, எனது நாடு விழித்தெழுவதாக!" - கீதாஞ்சலி 35.

31.5.15

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ மழையும் கடற்கரை மனிதர்களும் - தேவமைந்தன் முகநூல் குறிப்பு

“கோடையில் கடைசிவரை ஏமாற்றப் பழகி, விரக்தி எச்சிலாய் நாக்கில் துளிர்க்கும் மழை. ஆடிமாதத்தில் வீட்டிற்குள் நுழைவதற்குள் இடியும் மின்னலுமாய்ச் சடசடவென்று பெய்து நம்மைத் தொப்பலாக நனைத்துத் தெருவில் புழுதியாய் மணக்கும் மழை. போதும் போதும் என்று புலம்பினாலும் இரவு பகலாக இடைவிடாமல் ஹோவென்று மண்ணில் இறங்கி, ஐப்பசி கர்த்திகை மாதங்களில் பூமியை வெள்ளக்காடாக மாற்றி நொப்பும் நுரையுமாகப் பாய்ந்து கடலை ஆர்ப்பரிக்க வைக்கிற மழையென அப்பாவாலறிமுகப்படுத்தப்பட்ட மழைதான் எத்தனைவிதம். தனது இறப்புக்கூட ஒரு மழைநாளில் நடைபெற வேண்டுமெனத் தீர்மானித்தவர்போல, இவள் பார்த்துக்கொண்டிருக்க அவர் கடலில் இறங்கியதும், கரையில் நின்று கதறியதும், உப்பிய வயிறும் சிவந்த கண்களும் ஈக்கள் மொய்க்கும் மூக்குமாக வாசலில் கிடத்தியிருந்த அப்பாவை எரிக்க ஈரவிறகிற்கு டின் டின்னாக மண்ணெண்ணெய் தேவைப்பட்டதை அரிச்சந்திரன் கோவிலில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்ததும் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. மழைகாரணமாக இரண்டு நாட்கள் தொடர்ந்து அவர் உடலை எரிக்க வேண்டியிருந்ததென்று வெட்டியான் சொன்னான். அப்பாவைத் தீயில் எரித்ததைவிட...”
“ஹரிணி!”
“மழையிற் கரைத்திருக்கலாம்” -- கையிலிருந்த நாவலை மூடி விட்டு, தன் பெயரைச் சொல்லி அழைத்த மனிதரை நிமிர்ந்து பார்த்தாள்.”
- நாகரத்தினம் கிருஷ்ணா, ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பக்.70-71