Showing posts with label ஆய்வு அறிஞர் குணா. Show all posts
Showing posts with label ஆய்வு அறிஞர் குணா. Show all posts

3.7.15

புத்தர் அணுகுமுறை எவ்வளவு மெய்ப்பொருளானது - என்பதற்கு ஆய்வு அறிஞர் குணா மேற்கோள்களுள் ஒன்று!

மெய்ப்பொருள் குறித்து மதவாதிகள் பலவாறாகத் தருக்கம் செய்துவந்த காலமொன்று இருந்தது. அப்பொழுது புத்தர் கருத்துகள் ‘சிம்ம சொப்பன’ங்களாக மாற்று மதத்தவர்க்குத் தோன்றி வந்தன. ஆனால், புத்தரோ எளிய வலியவர். எதையும் அதிரடியாகச் சொல்லாதவர். தடாலடித் தத்துவஞானியல்லர் புத்தர். உண்மையான மெய்ப்பொருளாளர்.
[இனி வருபவை அறிஞர் குணா கருத்துகள்]
ஒரு காலகட்டத்தில் ‘கருத்துமுதல் கூறுகள் பொருள்முதலியலை மறுத்துச் சிறப்புப் பெற்ற’ன. இதற்குச் சான்றாக, ‘புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடையைக் குறிப்பிடலாம்.’
வச்சன் என்னும் துறவி கேட்ட கேள்வி:- “இறந்த பின்னர் முனிவர்கள் மீண்டும் பிறக்கின்றனரா?”
புத்தர் பகன்றதாகக் கூறப்பெறுகின்ற விடை:- “ அவன் மறுபிறவி எடுக்கின்றான் எனக் கூறுவது பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பது எடுக்காதது என்னும் இருநிலைக்குமுரியவன் எனச் சொல்வதும் பொருந்தாது. மறுபிறவி எடுப்பதும் எடுக்காததும் என்னும் இருநிலைகளுக்கும் உரியவனல்லன் எனக் கூறுவதும் பொருந்தாது. அவன் மறுபிறவி எடுப்பதில்லை என்று கூறுவதும் பொருந்தாது.”
- என அவர் கூறுவதாக அமைகின்ற கருத்து நம்முடைய தலையைப் பம்பரம் போல் சுழலச் செய்கின்றது. தொடர்ந்து,
“ அனைத்தும் உணர்ச்சிகள்; அனைத்தும் காட்சிகள்; அனைத்தும் முன்னிலைகள்; அனைத்தும் தன்னுணர்வுகள்; அவை யாவும் பிடுங்கி எறியப்பட்ட பனைமரம் போல் துறக்கப்படும்; வேரறுக்கப் பெறும்; பிடுங்கி எறியவும் படும்.”
எனக் கூறுவது கருத்துமுதல் அடிப்படையிலான ‘சார்பியல்’ கோட்பாட்டிற்கே மெள்ள இழுத்துச் செல்கின்றது. அதன் முதிர்ச்சி நிலையே மதியமிகம் படைத்த ‘வெறுமை(சூனியக்)’ கோட்பாடு. “உலகம் நிலையானதென நான் கருதவில்லை; அவ்வுலகம் நிலையில்லாததெனக் கூறவுமில்லை” என புத்தர் வச்சனுக்கு உரைத்ததாக மச்ஃசிம நிகாயம் என்னும் ஈனயான நூல் செப்புகின்ற கூற்றுங்கூட அத்தகைய சார்பியல் கோட்பாட்டிற்கே கொண்டுச் செல்கிறது.” [குணா பயன்படுத்தும்] கலைச்சொற்கள்: சார்பியல் - Relativism. கருத்து முதலியல் - Idealism. பொருள் முதலியல் - Materialism. வெறுமை(சூனிய)க்கோட்பாடு - Nihilism. [முன்னுள்ள கலைச்சொல் Nihilism என்பதை குணா பயன்படுத்தவில்லை.]
அடிப்படை[ஆதாரம்]
ஆய்வு அறிஞர் குணா, ‘தமிழர் மெய்யியல்,’ பொதுமை வெளியீடு, #16, மங்கேஷ் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.