23.1.06

என்றென்றைக்கும் ஜீவனுள்ள திரைப்பாட்டு

பழைய சினிமாப் பாட்டுக்களைக் கேட்டு, அன்றாடத்தின் அத்தனை டென்ஷன்களையும் இம்சைகளையும் நச்சரிப்புகளையும் தற்காலிகமாக மறந்து போகிறோம். இந்த வழக்கம் சென்ற நூற்றாண்டின் நாற்பது-ஐம்பது-அறுபதுகளில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் உள்ளது என்று ஓர் இளைஞர் என்னிடம் வாதிட்டார். எப்படி அவரைச் சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, பொதிகைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி விளம்பரம் ஒன்று வந்தது. ஞாயிற்றுக் கிழமை இரவுதோறும் ஒன்பதரை மணிக்கு ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற நிகழ்ச்சியில் பழைய திரைப்படப்பாடல்களை இன்றைய இளைய தலைமுறையினர் உயிர்ப்போடு பாடுவதைக் காட்டினார்கள். ஓரிருவர் வயதானவர்களாக இருந்தனர். அவர்களுக்கு அந்தப் பாட்டுக்கள் நேரடி பரிச்சயம் கொண்டவையல்லவா? அதாவது, அவர்கள் தங்கள் இளம் வயதில், சினிமா வந்த உடனே திரையரங்கங்களுக்குச் சென்று பார்த்திருப்பார்கள். தாங்கள் இப்பொழுது அந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கு வாய்த்த அந்தப் பழைய பாட்டுக்களை ஒரு விதமான இலயிப்புடன் பாடுவதற்கு முடியும். இளைஞர்களும் இளைஞிகளும் அதே இலயிப்புடன் பாடுவதைக் கேட்டு-பார்த்து, நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரம் வரை, வேறு அலைவரிசைகளுக்கு வீட்டார் எவரும் மாறிவிடாமல் கொக்குப் போலக் காத்திருந்து இரசித்துப் பார்த்தேன். தொ.கா. நிகழ்ச்சிகளின்மேல் எனக்கிருந்த அவநம்பிக்கையே காணாமல் போனது. ******************** ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற படத்தில், கவிஞர் கண்ணதாசனின் பாட்டு ஒன்று. கேட்கும்பொழுதெல்லாம் கண்ணில் நீர் அரும்பும்; மனமோ நிரம்பித் ததும்பும். பாட்டின் சில பகுதிகள் இதோ: “ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே ஓடம்போல ஆடிடு வோமே வாழ் நாளிலே ......................... சூறைக் காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமே வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு! காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்?" மேலே உள்ள வரிகளில் "சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமே!" என்ற பகுதி மிகவும் ஆழமான கருத்தைக் கொண்டது; ஒருமுறை கவிஞர் கண்ணதாசன் (1974, புதுச்சேரி)என்னிடம், அந்த வரி "சூறைக் காற்று மோதினால், தோணி ஓடம் மேவுமே!" என்று இருந்தால் இன்னும் பொருத்தம் என்று கூறிச் சிரித்தார். "வண்டி ஓடம் ஏறும்; ஓடமும் வண்டி ஏறும்!" என்று ஒரு தமிழ்ப் பழமொழி இருக்கிறதுதானே?!

No comments: