11.10.05

சொந்த வேர்கள்

அன்புமிக்க தோழி! வாழ்க்கைக்குப் பொருள்தான் என்ன அவரவர் விளக்கம் தவிர்ப்பாய்! பிறர்சார்ந்து வாழும்வரை வாழ்க்கைக்குப் பொருளில்லை! நமக்காகப் பிறர்முடிவை எடுக்கு மட்டும் நம்கையில் நம்வாழ்க்கை இருப்ப தில்லை கற்றகல்வி நலம்வீசும் விழிகளினால் உன்வாழ்வை எதிர்நோக்கு! இதுவரை இருந்தஉன் ஈரமான விழிமாற்று! நயமுள்ள கவிதைகள் நயங்காண எவரையும் எதிர்பார்க்க மாட்டா. எதிர்வந்து சுழலும் வெளிச்ச மெய்ம்மைகள் வழிகாட்டும் உனக்கு. பொருளியல் விடுதலைதான் காலூன்றச் செய்யும்! தன் சொந்த வேர்களால் இந்தமண் ஊடுருவி நிற்பதுவே பேரின்பம்! (28-1-1993: தேவமைந்தன், போன்சாய் மனிதர்கள், திசம்பர் 1993; 'புதுச்சேரி' இலக்கிய மின்னிதழ் - சூன் 2005.)

No comments: