30.3.06

நேரம் கேட்டால் கூடச் சொல்லாதே!

நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே! -தேவமைந்தன் பேருந்துக்கு நின்றிருந்தேன். காத்திருந்த கூட்டத்தில் ஒருவர் தன் கடிகாரம் சரிசெய்யும் நோக்கம் தெரியக் காட்டி, நேரம் கேட்டார். ஆகப் பொறுப்பாயும் துல்லியமாயும் சமயம் சொன்னேன். அடுத்து, புன்னகைத்துக் கொண்டே அருகில் வந்தவர் பேச்சுக் கொடுத்தார். பேருந்து வரும்வரை பேசுவோம்என்று பேசி நின்றேன். பையப்பைய நான் இருக்கும் தெரு, இல்லத்தின் எண் பேச்சின் ஊடே அவரிடம் சென்றன. நாள்கள் சில காணாமல் போயின. ஒரு நாள் மாலை ஆறு மணி இருக்கும். வந்தார். அகம்முகம் மலர்ந்து அவர் வரவை ஏற்றேன். என்னைப் பேச விடாமல் கோடை மழையாய்ப் பொழியத் தொடங்கினார்: “சார்! நான் அன்னைக்கே சொல்லணும்’னு நெனச்சேன். நீங்கள்’லாம் இப்படி டைம்வேஸ்ட் பண்ணி இண்டர்நெட்டு, ஈஸைன்’ட்டு எழுதறதும் ப்ரெளஸ் பண்ண்றதுமா’ நாள’யும் பொழுத’யும் கொல்’றது தேவ’யா? நா’ பாருங்க! சாதனையாளன்! நா’ இல்லாம எங்க இண்டஸ்ட்ற்றி நடக்காது.. நாங்கள்’லாம் டெக்னிகல்! நீங்க’ள்லாம் ஜென்ரல்! ஒங்க ஜென்ரல் விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது.. தெரிஞ்சுக்க எனக்கு டைமும் இல்லே. என் டெக்னிகல் ஸ்கில் பக்கம் நீங்கள்ளாம் மழைக்குக்கூட ஒதுங்க முடியாது...” மேலும் பொறுக்க முடியாமல் மறித்தேன். “இப்ப நீங்க என்ன விஷயமா வந்தீங்க?”- முகங் கறுத்தவர் சொன்னார்: “ஒண்ணுமில்ல சார்! எங்க’ ப்ரெஷ்ஷர் குக்கர் ப்ராடக்ட் பற்றி டிஸ்கஸ் பண்ண டெல்லிவரை போகணும்; கொஞ்சம் பைனான்ஸ் பண்ணுங்க; இம்போர்ட் ஆர்டர் கெடச்சதும் ரீபே பண்ணிடுவேன்..” மறுமொழி உரைத்தேன்: “நீங்கள்’லாம் டெக்னிகல்; நாங்கள்’லாம் ஜென்ரல்; ஒங்க லெவ’லுக்கு என்னா’ல ஒசர முடியற காலம் வந்தால், ஒதவி செய்யப் பாக்கிறேன் சார்! இப்ப நீங்க போங்க!...” ‘போயிட்டு வாங்க!’ என்று சொல்லப்படவும் கொடுப்பினை இல்லாதவர், முறைத்துக் கொண்டே போனார். இப்பொழுதெல்லாம் யாராவது எங்கேயாவது நேரம் கேட்கப் போவதாகத் தெரிந்தாலே போதும், நான் மாயமனிதன்தான். ********************************************************************************

No comments: