16.10.11

சோளக் கொல்லைப் பொம்மை!

சோளக் கொல்லைப் பொம்மை!
- ம.இலெனின் தங்கப்பா


சோளக் கொல்லைப் பொம்மை!
முறைக்குது பார் நம்மை.

ஆளைப் போல மிடுக்கு.
அட்டைக்கத்தி முடுக்கு.
தாளில் தங்க மினுக்கு.
தலை தான் கொஞ்சம் ஒடுக்கு.
காளி கோயில் பூதம் போலக்
காவல் காத்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

சட்டித்தலை மேலே
சவரி முடி ஒட்டிப்
பட்டை நாமம் தீட்டிப்
பல் இளித்துக் காட்டி
நெட்டி மாலை போட்டுக் கந்தல்
சட்டை மாட்டி விட்ட பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

ஓலையாலே நாக்கு,
ஒட்டு வைத்த மூக்கு,
போலி மீசை முறுக்கு,
புள்ளி குத்தி இருக்கு.
காலை மாலை இரவு பகல்
கண் விழித்து நிற்கும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

வாயைப் பாரு சப்பை;
வைக்கோல் பொதி தொப்பை;
சாய மாலை காற்றில்
சலசலக்க ஆட்டிப்
பேயைப் போல இரவு நேரம்
பிள்ளைகளை மிரட்டும் பொம்மை. - சோளக் கொல்லைப் பொம்மை!

10 comments:

கதன் said...

வணக்கம்.நன்றி.முன்பே இத்தொகுப்பைப்படித்து விட்டேன்.
கதன்
vtthamizh vtthamizh@gmail.com

குருநாதன் said...

புதிய நற்றமிழ் இதழில் இதே பாட்டு வந்துள்ளது. படம் அழகாயுள்ளது!

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

இருவருக்கும் நன்றி. அவரே வரைந்த படம்.

Anonymous said...

noolin meeyuraiyai en minmukavarikku anuppivaikk amudiyumaa?
- paNi
neelapanikkundrannagari@yahoo.in

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

கணினி, இணையம் குறித்து - "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்/அதனின் அதனின் இலன்" என்று மொழிந்த ஐயாவிடம் மீயுரை கேட்பது பயன் தராது. புத்தகத்தை 'வானகம் பதிப்பகம், 7, 11ஆம் குறுக்குத் தெரு, அவ்வை நகர், புதுச்சேரி - 605008' என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு பதிவஞ்சல் வழி வாங்கிக் கொள்ளுங்கள்.

Anonymous said...

தங்கப்பா ஐயாவின் நூற்பட்டியல் தேவை. - ஆர்.கே.குமார், 12-பி, பூமார்க்கெட் தெரு, லங்கர்கானா,தேவாங்கப்பேட்டை, கோவை.641004.

Calavady said...

மேலே அவர்தம் பதிப்பக முகவரி உள்ளது. எழுதிக் கேளுங்கள்.

நீல. பணிக்குன்றன் said...

உங்கள் வலைப்பூக்களில் பின்னூட்டமிடுவது தொல்லை. சுலபம் ஆக்கவும்.

நீல. பணிக்குன்றன் said...

உங்கள் வலைப்பூக்களில் பின்னூட்டமிடுவது தொல்லை. சுலபம் ஆக்கவும்.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

அப்பெயரால்தாம் எரிதங்கள்(spam) வருகின்றன. எனவேதான் இவ்விறுக்கம். சிலர் தீமைகளை நுழைக்கிறார்கள்.