16.2.06

ஆதிக்கச் சக்திகளின் நுண்ணரசியல் தொடங்கும் இடம்`

குழந்தை வளர்ந்துவிட்டதால் அடாத அடம்பிடிக்கக் கற்றுக்கொண்டுவிட்டது. சந்தைக்குப்போனபொழுது கண்டதெல்லாம் கேட்டது. நல்லவேளையாக, பஞ்சுமிட்டாய்க்காரர் மணியடித்துக்கொண்டே போக, குழந்தையின் கவனம் அங்கே தாவியது. இரண்டே பஞ்சுமிட்டாய்கள். சமாதானம் ஆனது. இனி, அடுத்து சந்தைக்கு அழைத்து வரும்வரை எனக்கு அதுகுறித்த கவலை இல்லை. இது குடும்பம்.. அரசாங்கம் தன் ஊழியர்களுக்கு அவ்வப்பொழுது சலுகைகள் அறிவிப்பதும் இதே பஞ்சு மிட்டாய்க் கதைதான். சில சமயங்களில் மர்மமான மிரட்டல்கள்.. குழந்தையிடம் அப்பா சொல்வார்: "அதோ! அங்கே பார்! மூக்கொழுகிட்டு ஒரு குழந்தெ போகுதில்ல.. அது'க்கு டிரஸ் கூட அவங்க அம்மா அப்பா வாங்கித் தறலெ.. பாத்தியா..ஒனக்கு நாங்க எத்தனெ எத்தனெ கலர்லெ எவ்வளவு விதவிதமா வாங்கித் தந்துருக்கோம். நீ இப்பிடியே அடம் புடிச்சா பேசாமே அந்தக் குழந்தெயெ எடுத்துக்கிட்டு ஒன்னெ அவங்க அம்மா அப்பா'ட்டே வுட்டுட்டுப் போயிடுவோம்!.'' அது போதும் இந்தக் குழந்தையை அரண்டு போக வைப்பதற்கு. அரசும் இதே போலத்தான். இன்னும் வேலையில்லாத எண்ணற்ற இளைஞரின் - இளைஞியரின் கோபத்தையும் ஆத்திரத்தையும் வேலைநிறுத்தம் செய்துகொண்டிருக்கும் அரசூழியர்மேல் திருப்பிவிடும். அவர்களைக் காட்டிக் காட்டியே இவர்களைத் தன் வழிக்குத் திருப்பிவிடும். இல்லத்தில், துணைவியார்க்குக் கணவர்மேல் நம்பிக்கை குறையும்பொழுது, கணவர் புத்திசாலியானால், தன் முழுச்சம்பளத்தையும் தன் துணைவியாரிடமே கொடுத்து, சமாதானம் மேற்கொண்டுவிடுவார். அப்புறம், அவ்வப்பொழுது, இல்லத்தரசியின் கையிலிருந்து- தன் செலவுக்கு முன்னிலும் அதிகத் தொகை பெயருமாறு செய்துகொள்வார். அவரின் துணைவியாரோ....ம்..ம்.. அவஸ்தைப் பட்டாலும் ஆதிக்கசுகம் போல் ஆகுமா என்று தேற்றிக்கொள்ளவேண்டியதுதான். அதேதான் அரசியலிலும். கஜானாவைக் காலி செய்து வைத்துவிடும் இந்தக் கட்சித்தலைவர் தேர்தலை 'ரிலாக்ஸ்'டாக எதிர்கொள்ள, பதவிக்கு வரத்துடிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் 'டென்ஷ'ன்மிக எதிர்கொள்வார். இங்கே மாதம்தோறும்,அங்கே ஐந்தாண்டுதோறும். வித்தியாசம் அதுமட்டும்தானே!

No comments: