16.5.11

தி.பி. 2042, மேழத் திங்கள் 18-ஆம் நாள் (2011,மே 1, உழைப்பாளர் பெருநாள்)அன்று , புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில், நம் அன்புக்குரிய தமிழநம்பி ஐயா அவர்கள் பாவாணர் மடல்கள் குறித்து ஓர் அருமையான பொழிவை நிகழ்த்தினார். அதன் விரிவை நூலாக நண்பர் சீனு அரிமாப் பாண்டியன் ஐயா வெளியிடவுள்ளதாக அறிந்தேன். அப்பொழிவின் எழுத்துப்படியைத் தன் வலைப்பதிவில் பதிவிடுமாறு தமிழநம்பி ஐயாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதை வாசிக்க இணைப்பு இதோ: http://thamizhanambi.blogspot.com

14.4.11

ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி • தேவமைந்தன் 'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள முனைவர் சு. வேங்கடராமனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். எட்டாவது இயலான 'ஆவுடையக்காள் வேதாந்தப்பாடல் திரட்டு' எனக்குப் பல்வேறு வகைகளில் அதிர்ச்சியளித்தது. இதில் பாரதியாரின் படைப்பியல் நேர்மை குறித்து எழுப்பப் பட்டுள்ள ஐயத்துக்குப் பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் விளக்கம் கொடுத்துள்ளார்களா என்பது இதைத் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை எனக்குத் தெரியவில்லை. இந்த ஐயத்தை எழுப்பியிருப்பவர் மகாகவி பாரதியார் மேல் காழ்ப்புணர்வு கொண்டவரல்லர். பாரதியாரின் படைப்புகளையும் பாரதி ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் திறம்படக் கற்றவர். ஆய்வு மாணவர்களின் ஆய்வேடுகளைக் கண்டிப்பான மதிப்பீட்டுக்கு உள்ளாக்குபவர். நேர்மையான புறநிலைத் தேர்வாளர் என்றும் பெயரெடுத்தவர். மறைந்த ஞானபீட விருதாளரும் புகழ்மிக்க எழுத்தாளருமான அகிலனைக் குறித்து முதன்முதலாக ஆராய்ச்சி செய்தவர். தமிழ் வளர்த்த வைணவம் பற்றியும் அரையர் சேவை குறித்தும் முறையான ஆய்வு நிகழ்த்தி நூல்கள் வெளியிட்டவர். பழுத்த பணி - ஆய்வு அனுபவம் கொண்டவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியல் புலத்தில் இக்கால இலக்கியத்துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ளவர். பாரதியின் படைப்பியல் நேர்மை குறித்து அவர் எழுப்பியுள்ள வினாவை அப்படியே இங்கு திண்ணை குழாம் முன் வைக்கிறேன். "மகாகவி பாரதியார் கவிதைகளிலோ, உரைநடையிலோ ஆவுடையக்காளைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்பதே அந்த வினா. ஒளவையார், சகோதரி நிவேதிதை ஆகிய பெண்களைக் கொண்டாடும் பாரதி.. எங்கோ, ஜப்பானில் ஹைக்கூ கவிதை எழுதிய கவிஞர் பெயர்களை எல்லாம் விதந்து கூறும் மகாகவி தம் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்திற்கு அருகேயுள்ள செங்கோட்டையில் வாழ்ந்தவரும் தமக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான ஆவுடையக்காள் பற்றி எந்தக் குறிப்பையும் ஏன் பதிவு செய்யவில்லை? என்ற வினா விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதில் விதவையாகி, ஊரின் ஏச்சையும் பேச்சையும் சாதிப்புறக்கணிப்பையும்(அந்நாளில் ஆவுடையக்காள் அந்தணர்களால்சாதிப்பிரஷ்டம்சாதிநீக்கம்செய்யப்பட்டவர்)தாண்டி,ஆத்மானுபவத்தில் தான் வளர்ந்ததோடு மற்ற பெண்களுக்கும் உபதேசம் பயிற்சி தந்து, நிஜமான பெண் விடுதலையைச் செய்துகாட்டிய செயல் வீரர் அக்காள். பெண் விடுதலை பேசும் பாரதியார், ஆவுடையக்காள் பற்றி எதுவும் கூறாமல் போனது தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட இருட்டடிப்பா? அக்காள் பெண் கவிஞர் என்பதுதான் இதற்கான காரணமா? என்னதான் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் என்று பாடினாலும், பாரதி ஆண் என்பதால், ஆவுடையக்காளைப் பற்றிக் கூறவில்லை என்பது எஞ்சி நிற்கும் விடை. கோமதி ராஜாங்கம் அம்மையார் இத்தகவல்களைத் தராவிட்டால் தமிழ் உலகிற்கு இந்த அகச்சான்றுகள் தெரியாமலே போய் இருக்கும். (பக்.97-98)" கோமதி ராஜாங்கம் என்பவர் (சங்கரக்ருபா - 1964 நவம்பர் -டிசம்பர்)எழுதிய ஆவுடையக்காள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அக்காள் குறித்த விவரங்களைச் சு.வே. தந்துள்ளார். திருமதி கோமதி ராஜாங்கம், பல ஆண்டுகளாக நெல்லை, நாகர்கோவில் மாவட்டங்களில் பல ஊர்களில் (செங்கோட்டை, சுந்தர பாண்டியபுரம், சாம்பூர் வடகரை, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, முன்னீர்ப் பள்ளம், நாகர்கோயில் வடிவீச்சுரம்) களஆய்வு செய்து அக்காளின் பாடல்களையும் வாழ்க்கைக்குறிப்புகளையும் தேன் கூட்டும் தேனீபோலத் திரட்டியுள்ளார். ஆவுடையக்காளின் கவிப்புலமையை மிகவும் அனுபவித்து ஒளவையாருடன் அவரை ஒப்பிட்டுள்ளார். "நம் தமிழ் நாட்டுப் புலவர்களில் முன்னணியில் நிற்கும் ஸ்ரீஒளவைப் பாட்டிக்கு நிகரானவள் என்பதை மட்டும் துணிந்து கூறுவேன். இதுபோன்று எத்தனை மாணிக்கங்கள் நம்நாட்டுப் புனித மண்ணில் மறைந்து கிடக்கின்றனவோ? அவைகளை வெளிக்கொணர எத்தனை உ.வே.சாமிநாதஅய்யர்கள்அவதாரம்செய்யவேண்டுமோ?(ஆவுடையக்காள் பாடல் திரட்டு, நித்யானந்த கிரிசுவாமிகள் (ப.ஆ), ப.xx) கோமதிராஜாங்கம் அம்மையாரின் மேற்கண்ட வினா, தமிழ் ஆய்விற்கு விடப்படும் சவால். ஆனால், அவை பொன்னெழுத்துக்களால் வடித்தெடுக்கப்படத்தக்கவை என்றும் சு.வே. கருதுகிறார்.(ப.96) இனி அடுத்து வரும் பகுதியை சு.வே. அவர்கள் நடையில் தருவதுதான் அவர் கேட்டுள்ள கேள்விக்கு உதவும் என்பதால் அப்படியே தருகிறேன். "திருமதி கோமதி ராஜாங்கம் நெல்லை மாவட்டம் கடையத்தில் பிறந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்க்கைப்பட்டவர். கோமதியின் தாயார் சீதாலட்சுமி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதிக்கு உடன்பிறந்த மூத்த சகோதரி. பாரதியார் ஆவுடையக்காள் பாடல்களை நன்கு கேட்டுக் கேட்டு அவைகளில் நெஞ்சம் பறிகொடுத்த பாவியாவார். ஆவுடையக்காளிடமிருந்து அவர் (பாரதி) நிறையவே தாக்கம் பெற்றிருக்கிறார். வேதாந்தக் கருத்தாக்கம் மட்டுமல்லாமல், சொற்கள், பெண்ணுரிமைச் சிந்தனை என்று பல நிலகளில் மகாகவி பாரதியாருக்கு ஆவுடையக்காளே முன்னோடி. அக்காளின் பாடல்களை முதன் முதலாகப் படிப்பவருக்கு இது புலப்படும். இதனைக் கோமதி ராஜாங்கம் அம்மையார் கூறும் அகச்சான்று புலப்படுத்தும்; உறுதிசெய்யும். "ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாருக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீஅக்காள் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவளுடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் (பாரதியாரும்) அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவர் (பாரதியார்) எனது தாயார் அவர்களுக்குச் சகோதரியின் கணவராகையால், (என்) சிறுவயதில் அவர் (பாரதியார்) மூலமாகவும் சில தகவல்களை அறியும் (அக்காள் பற்றிய தகவல்கள்) பாக்கியம் கிடைத்தது (ஆவுடையக்காள் பாடல் திரட்டு, பக். xix,xx). [அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை சு.வே. அவர்களால் விளக்கத்திற்காகத் தரப்பட்டவை. தடித்த எழுத்துகள் இக்கட்டுரையாசிரியனால் இடப்பட்டவை.] ஆவுடையக்காள் குறித்துச் சுருக்கமாகக் காண்போம். நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சார்ந்தவர் அக்காள். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. அந்நாட்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்தது செங்கோட்டை. அக்காள், சிறுவயதிலேயே வயதுக்கு வருமுன்பே மணமாகிச் சில காலத்திலேயே கணவனை இழந்து விதவையானவர். அப்பொழுது தன் அம்மாவும் உறவினர்களும் ஓவென்று அழுதபொழுது, அவர்களைப் பார்த்து அக்காள் கேட்டாராம்:- "அவர்கள் வீட்டில் பையன் இறந்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" ஊரார் எதிர்ப்பையும் மீறி அக்காளின் தாயார் தன் வீட்டிலேயே ஆவுடைக்குக் கல்வி கற்பித்தாள். பருவமெய்தியதும் குலவழக்கப்படி கட்டாயமாக விதவைக் கோலத்துக்கு ஆவுடையக்காள் உட்படுத்தப்பட்டு வருந்திக் கொண்டிருக்கும் காலத்திலே அவ்வூருக்கு வர வாய்த்த, தஞ்சை மாவட்டத் திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள், அக்காளுக்கு ஆறுதல் கூறியதோடு மந்திரோபதேசமும் செய்து வைத்திருக்கிறார். ஊராரின் பேச்சும் கேலியும் குறித்துக் கவலைப்படாதே என்று அவர் உபதேசித்ததை அக்காள். தன் 'பண்டிதன் கவி' என்ற பாடலில் (ஆவுடை அக்காள் பாடல் திரட்டு, பா.23;ப.3) "துர்ஜனங்கள் வார்த்தையைச் செவியிலும் கேளாதே!" என்று குறிப்பிட்டுள்ளார். மிக விரைவிலேயே நிர்விகல்ப சமாதி கிட்டும் சுவானுபூதி நிலை கைவரப் பெற்றார். மிகக் குறைந்த கல்வியறிவு உடையவர்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு இசைப்பாடல்களாகவும்,நாட்டார்நாநவில்இலக்கியவகைப்பாடல்களாகவும் பாடியுள்ளார். ஓர் ஆடி அமாவாசையில் குற்றால மலை மீதேறிச் சிறிது நேரம் தியானம் செய்து வருவதாகச் சொல்லிப் போனவர் திரும்பவில்லை என்பதுடன் எவ்வளவு தேடியும் ஆவுடையக்காளின் சடலம் கூடக் கிடைக்கவில்லையாம். இனி, அக்காளின் வேதாந்தப் பாடல்களின் பகுதிகளைக் காண்போம். இவை பாடப்பெற்ற காலம் 17ஆம் நூற்றாண்டு என்பதை மனத்துள் கொண்டு பார்க்கும் பொழுதுதான் அவர் அருமை நமக்கு மிகவும் விளங்கும். இவை 'ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்'டிலிருந்து சு.வே. கொடுத்துள்ளவை:- அத்வைத விளக்கம் "எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!" சாதிபேதமற்ற நிலை "கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே! குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!" "மோகத்தைக் கொன்றுவிடு!" என்ற பாரதிக்கு மூலம் "மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று" பயனென்ன? "காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய் உன்னாசை போச்சோ மூடா.." வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு "தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு ஏலேலோ ஏகாந்த ரஸம்! ஏலேலோ வேதாந்த ரஸம்!" குயில் கண்ணி "மனமும் பொய்யடியோ குயிலே மனக்கூடும் பொய்யடியோ! இனமும் பொய்யடியோ, குயிலே தனமும் பொய்யடியோ!" தீட்டு எதிர்ப்பு "எச்சில் எச்சிலென்று புலம்புகிறார் மானிடர்கள் எச்சில் இலாத இடம் இல்லை பராபரமே!" "உலகத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ? உன்னுடைய வெட்கத்தை யாரொடும் சொல்வேன் பராபரமே!" "தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?" -இங்கே முனைவர் சு.வே., பாரதியை ஆவுடையக்காளுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. பாரதிக்கு நூற்றாண்டுகள் முந்திய அக்காள் முற்போக்காய் விளங்க, காலத்தால் பிற்பட்ட பாரதி பிற்போக்குடன் விளங்குவதை, "ஆவுடையக்காளின் பாடல்கள் மூலம் பெண்சம உரிமை, சரிநிகர் சமானம் என்ற கருத்தாக்கத்தைப் பெற்ற மகாகவிகூட, இந்தத் தீட்டு என்று பெண்ணை அடிமைப்படுத்தும் கருத்தை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. மாறாக, அதை ஆதரித்தே பாடுகிறார். பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி, ".......மாதவிலக்காதலால் ஓராடை தன்னில் இருக்கிறேன்...." ...என்று கூறுகிறாள். ஆவுடையக்காள் இதில் உச்சநிலையில், ஆணாதிக்கக் கருத்தியலை எதிர்த்துக் குரல் எழுப்பியது அறியத்தக்கது" என்று எடுத்துக் கூறியுள்ளார். தமிழின் முதல் பெண்ணியப் பாவலர் என்று ஏன் ஆவுடையக்காளை(கி.பி. 17ஆம் நூற்றாண்டு) நாம் குறிக்கக் கூடாது? ஏன் அத்தகைய தன் முன்னோடியை பாரதியார் தன் படைப்புகளில் எங்கும் குறிப்பிட்டுப் பதிவு செய்யத் தவறினார்? என்ற கேள்விகளை நம் உள்ளத்துள் விதைத்துள்ளார் முனைவர் சு. வேங்கடராமன். பாரதி அன்பர்களுள் யாரேனும் இதற்கு விடை தர முன்வருவார்களா? ****** இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் புத்தகம்: அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625 001. பக்கம்:148. விலை: ரூ.55.00 பேசி: அலுவலகம் - 0452 2345971. வீடு - 2560517. மின்னஞ்சல்: meenakshiputhakam@hotmail.com நன்றி: திண்ணை.காம்

24.3.11

பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள் - தேவமைந்தன்

"அதென்ன, நேரடியாகச் சிந்திப்பவர் என்றோ சுற்றி வளைத்துச் சிந்திக்காதவர் என்றோ கவிஞர்கள் சிலரைப் பற்றித் தலைப்பிடுகிறீர்கள்?" என்று நண்பர் கேட்டார். எனக்கு செர்வாண்டெசின் டான் குவிசோட்'டில் வருமொரு வாக்கியம் நினைவுக்கு வந்தது. "என் சிந்தனைகள் [கம்பளி சேகரிப்பதுபோல்] ஞாபகமறதியில் எங்கெங்கோ ஓடிவிடுகின்றன!"(My thoughts ran a wool-gathering. - CERVANTES --Don Quixote. 'கம்பளி சேகரிப்பதுபோல்' என்று ஒரு வசதிக்காக இடைப்பிறவரல் அடைப்பில் கொடுத்துள்ளேன். wool gathering என்பது மொழிமரபுப்படி absent-mindednessஐக் குறிக்கும்) செர்வாண்டெசின் புலப்பாடுபோல, படைப்பாளர்கள் பலர் தாங்கள் எதைச் சொல்ல வருகிறார்களோ அதில் நிலைக்காமல் எங்கெங்கோ சுற்றி விட்டு 'அடடா! எங்கோ போய் விட்டோமே.." என்று தன்னிரக்கம் கொண்டு, மீண்டும் தாங்கள் விட்ட புள்ளியிலிருந்து தொடர்வார்கள். பாரதியார் அப்படிப்பட்டவர் அல்லர். சொல்ல வந்த செய்தியைச் சுளைபோலக் கொடுப்பவர். 'வெட்டொன்று துண்டிரண்டாக'ச் சொல்பவர். பாரதியாரின் கட்டுரைகள் தொடக்கத்தில் நான்கு பகுதிகளாக வெளிவந்தன. பின்னர், 'பாரதி நூல்கள் என்று' தனித்தனியாக - பகுதிகள் பலவாகப் பதிப்பிக்கப் பெற்றன. பின்னர் சென்ற எழுபதுகளில்தாம் அவை முழுவதும் கொண்ட தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின. களத்திலிருந்து பொறுக்குமணிகளாகச் சிலவற்றை முதலிலும், கதிர்களாகச் சிலவற்றைப் பின்னாலும் - அவற்றிலிருந்து, இங்கே தருகிறேன். **** ஒருவர்க்கொருவர் மனத்தாலும் தீங்கு நினைப்பதில்லை. ஒருவர்க்கொருவர் பயப்படல் இல்லை. மானிடரே, இந்த விரதம் எடுத்துக் கொள்ளுங்கள். இது பிழைக்கும் வழி. ** கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இருதயமும், தேவர்களே - எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க! ** எதிலும், எப்போதும், யாருக்கும் பயந்தும், மனம் வேறு செய்கை வேறாக நடிக்கலாகாது. ** பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும், தெய்வத்தை நம்பவேண்டும். ** யோக்யதை இல்லாத பூசாரி தொட்ட மாத்திரத்தில் பகவான் கல்லை விட்டுப் போய் விடுவார். ** பரிபூரண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும் அதைரியமும் விளைவிக்கத்தக்க எண்ணங்களுக்கு இடம் கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல, உனக்குள்ளிருந்தே தெளிந்த அறிவும், தீரத்தன்மையும், சக்தியும் மேன்மேலும் பொங்கிவரும். உன் இஷ்டசித்திகள் எல்லாம் நிறைவேறும். இது சத்தியம். அநுபவத்திலே பார். ** எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும் போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். ** தைரியமாக, நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள். ** சிதம்பரமே ஸ்ரீரங்கம்; அதுவே பழனிமலை. எல்லாப் புண்ணியத் தலங்களுமே ஜீவன் முக்திச் சின்னங்கள். ** இகலோக இன்பங்கள், பரலோக இன்பங்கள் இரண்டுமே இறைவனிடம் வேண்டலாம். இகலோகத்தில் நமக்குத் தெய்வம் தர வேண்டிய மூன்று சக்திகள்: 1. அறிவு 2. செல்வம் 3. தைரியம் தெய்வம் எல்லாம் செய்யும். ** நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரமெலாம் கொடுக்கும். நம்பினார் கெடுவதில்லை - இது நான்குமறைத் தீர்ப்பு. ** மனிதனைக் கெடுக்கும் உட்பகை - நம்பிக்கைக் குறைவு. ** தற்கால அசௌகரியங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். ** நம்பு; கேள், ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும். ** தனக்குத் தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது. ** திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது. பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறுபணக்காரர் வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலே பாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வகோலமாக வந்து சுடுகின்றது. ** பசி வந்தால் கோபம் வருகிறது. பசி அடங்கினால் கோபம் அடங்குகிறது. அன்னதானமே உத்தம தர்மம். *** மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்து போனதாக வைத்துக் கொள்ளுவோம்.அவர் திரும்பவும் பிறப்பாரா? தெரு வழியாக ஒருவன் நடந்துபோகும்போது காலிலே ஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக் கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா? இதையெல்லாம் பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன. அவற்றிலே படித்துக் கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்ல வந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம் ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம். 'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இது நமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக்கூட்டத்திற்கும் பெயர். இந்த ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி'' என்று பெயர் சொல்வதுண்டு. ** கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி! தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள்புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன். குருவி, காக்கை, காக்கை, புழு, எறும்பு ஒரு ஜந்துவுக்கும் வஞ்சனை பண்ணக் கூடாது. வஞ்சனை இல்லாமல், "ஏதோ உலகத்திற் பிறந்தோம். தெய்வம் விட்டதே வழி" என்று ஆற்றின் மீது மிதந்து செல்லும் கட்டைபோல் உலக வெள்ளத்தில் மிதந்து செல்ல வேண்டும். அங்ஙனம் முற்றிலும் பராதீனனாய் எவன் ஈசுவரன்மீது சகல பாரத்தையும் போட்டுவிட்டு நடக்கிறானோ, அவனுக்குத் தெய்வத் தன்மை உண்டாகும். இதில் சந்தேகமே கிடையாது. ** நடந்தது எல்லாம் போக; இனிமேல் நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும். கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் சொல்ல வேண்டும். "கடவுள் எங்கும் இருக்கிறாரே? எல்லாம் கடவுள்தானே? ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?" என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக. கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லையென்று நம்பலாமா? கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது. இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. 'தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்' என்பது முன்னோர் கொள்கை. உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை --- எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள். ஊரொற்றுமை கோவிலால் நிறைவேறும். வீட்டுக்குள் தனியாகச் சிலை வைத்துக் கும்பிடுவது குடும்ப ஒருமை உண்டாகும் பொருட்டாக. கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு. ஆண் தெய்வமெல்லாம், நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண்மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ ; சக்தி உன் மனைவி . விஷ்ணு நீ ; லக்ஷ்மி உன் மனைவி. பிரம்மா நீ ; சரஸ்வதி உன் மனைவி . இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரைத் தேவ நிலையிற் கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோயில்களாம். இதைப் பூசாரிகள் மறைக்கிறார்கள். கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது. ** இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகிச் சிதறுகின்றன. பல அநீதிகள் உடைக்கப்படுகின்றன. பல அநியாயக்காரர்கள் பாதாளத்தில் விழுகிறார்கள். இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்றுகிற உண்மைகளை மறுக்கக் கூடாது. பத்திரிகைகள்தான், இப்போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இந்தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிறார்கள். ** இன்னும் எத்தனை எத்தனையோ சிந்தனை அலைகள் பாரதி எனும் கடலின் வாசிப்புக் கரையில் வந்து மோதுகின்றன. அவை, ஆழமிக்க நடுக்கடலுக்குச் சென்று பார்க்க உதவும் தூண்டுதல்கள் மட்டுமே. **** நன்றி: திண்ணை.காம்

18.2.11

தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்! - தமிழநம்பி உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) ஆகும். தமிழ்நாட்டரசு கடந்த ஆண்டு நடத்திய தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் ஒருங்குகுறியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பு (Unicode consortium) என்னும் அமைப்பே உலகிலுள்ள மொழிகளின் எழுத்துக்களுக்கு ஒருங்குகுறி உருவாக்கிப் பேணுகின்றது. வணிக நோக்குள்ள கணிப்பொறி நிறுவனங்கள் இணைந்து உலக எழுத்துமுறைகளைத் தகைமைப்படுத்த ஏற்படுத்தியதே இவ்வமைப்பாகும். இதில் பல்வேறுநாட்டு அரசுகளும், கணிப்பொறி, மொழி தகுதியுடைய தனியரும் அமைப்பாரும் உறுப்பினராக உள்ளனர். இவ் அமைப்பில் உறுப்பினராக இருந்த தமிழ்நாட்டரசு இடையில் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்துள்ளதாகவும், இப்போது கட்டணம் செலுத்தி உறுப்பினராக முயல்வதாகவும் கேள்விப்படுகிறோம். கிரந்தத்திற்கு ஒருங்குகுறி உருவாக்க வேண்டுமென ஒருங்குகுறிக் குழுமக்கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகளில், மூன்று முன்மொழிவுகள் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு விளைவிப்பனவாகும். தமிழைச் சிதைத்து அழிக்கக்கூடியனவாகும். அவற்றுள் முதலாவது, காஞ்சி சங்கரமட சிரீரமணசர்மா, 26 கிரந்தக் குறிகளை ஒருங்குகுறித் தகைமைபாட்டுக்குள் கொண்டுவந்து அதனைத் ‘தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ்’ என்று வழங்கவேண்டுமென 10.07.2010 நாளிட்டு அனுப்பிய முன்மொழிவாகும். இம் முன்மொழிவும் தமிழுக்குக் கெடுதி செய்யும் பிறவும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் சிலரின் முயற்சியால் பலருக்குத் தெரிய, 2010 அக்குதோபர் பிற்பகுதியில் உலகோர் அனைவர்க்கும் தெரிந்தது. ஒருங்குகுறி அறிஞர் திரு. முத்து. நெடுமாறன் அளித்த உடனடி விளக்க மறுப்பினை ஏற்று ஒருங்குறிக் குழுமக்கூட்டிணைப்பு சிரீரமண சர்மாவின் மேற்கூறிய முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது. தமிழுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டாவது முன்மொழிவு, நா.கணேசன் என்பார் (அமெரிக்காவில் ‘நாசா’ வில் வேலை செய்வதால் இவரை நாசா கணேசன் என்றுங் கூறுகின்றனர்), 68 கிரந்தக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக்கள் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்துடன் எகர உயிர்மெய்க் குறி, ஒகர உயிர்மெய்க் குறி ஆகிய இரண்டையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை கிரந்தத் தொகுப்பில் கலந்து 75 குறிகளைக் கொண்ட கிரந்தத்தமிழ்க் கலவைக் குறியிடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதாகும். நா.கணேசனுக்கும் சிரீரமணசர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட தருக்கத்தால் குழம்பிப்போன ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பு, இம் முன்மொழிவை எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், அக் குழுமக்கூட்டிணைப்பு இந்திய நடுவணரசின் உதவியை நாடியது. தமிழைத் தாரைவார்த்துக் கிரந்தத்தை நிலை நிறுத்தும் நா.கணேசன் முன்மொழிவில் சிறசிறு மாற்றங்கள் செய்து, ‘மணிப்பவள மொழிக்காகவும், சமற்கிருத மொழிக்காகவும்’ தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை ஏற்படுத்துமாறு ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பிற்கு இழதிய அரசு தனது முன்மொழிவைத் தந்தது. இம் முன்மொழிவு, மேற்கூறிய 75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் இணைத்து 89 குறிகள் கொண்டிருந்தது. இதுவே, தமிழுக்குக் கேடு விளைவிக்கும் மூன்றாவது முன்மொழிவானது. நடுவணரசில் இத்துறைக்குப் பொறுப்பாக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.இராசா இவ்வளவு நடந்தும், இவை தாய்த்தமிழின் அழிவிற்கு அடிகோலுபவை என்ற அக்கறை கொண்டிருந்ததாகவே தெரியவில்லை. நவம்பர் 2010 தொடக்கத்தில் ஒருங்ககுகுறி குழுமக்கூட்டிணைப்பு நடுவணரசின் முன்மொழிவு குறித்து முடிவெடுக்க இருந்த நிலையில், தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலுமிருந்த செய்தியறிந்த தமிழர் கிளர்ந்தெழுந்தனர். அறிஞர் இராம.கி., பேரா.இ.மறைமலை, இ.திருவள்ளுவன், விடுதலை கி.வீரமணி ஆகியோர் முயற்சியால் தமிழ்நாட்டரசு 3.11.2010-இல் அறிஞர் கருத்தறியும் கூட்டம் நடத்தியது. இக் கூட்டத்தில் ஒருமனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதன் விளைவாக இந்திய அரசு ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பிற்குக் கிரந்தத்தோடு தமிழ்க் குறியிடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்த கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு மடல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், தமிழ்க்காப்பு இயக்கங்கள் சார்பில் சென்னையில், “ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்க்காப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரிய மாநாடு, தமிழ்க்காப்புத் தீர்மானங்களை நிறைவேற்றி தொடர்புடைய அனைவர்க்கும் விடுத்தது. தமிழ்நாட்டரசு, ஓய்வு பெற்ற நயனகர் திரு. மோகன் தலைமையில் தமிழ் ஒருங்குகுறி அமைப்பு குறித்து அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக் கீழ்க்காணும் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளதாக 18.1.2011-இல் அறிவித்தது. பேரா.இராசேந்திரன், துணைவேந்தர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம். முனைவர் வா.செ.குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர் பேரா. மு.ஆனந்தகிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் பேரா. பொன். கோதண்டராமன் (பொற்கோ) முனைவர் ஐராவதம் மகாதேவன் இ.ஆ.ப., (ஓய்வு) பேரா. சோ.ந.கந்தசாமி, செம்மொழித்தமிழாய்வு நடுவண் நிறுவனம் பேரா.கே.நாச்சிமுத்து, உலகத்தமிழ்ச்செம்மொழி தொல்காப்பியர் பேரவை பேரா. அ. அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் முனைவர் ப. அர. நக்கீரன், இயக்குநர், தமிழ்இணையக் கல்விக்கழகம், சென்னை முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எசு.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக் கழகம், காட்டாங்குளத்தூர் திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர், பாவலர் திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர் திரு. மணி. மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி) முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை. தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில், 27.12.2010 அன்று காஞ்சிபுரத்தில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துக்களைக் கலக்கமுனையும் சங்கர மடத்தைக் கண்டித்துப் பெருமுழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் 9.1.2011-இல் தாளாண்மை உழவர் இயக்கம், தமிழ்மக்கள் புரட்சிக் கழகம் முதலியோரால் தமிழ் ஒருங்குறியில் கிரந்தத் தாக்குதலைக் கண்டித்து மாநாடு நடைபெற்றது. புதுவையில் 30.01.2011-இல், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு திரு.இரா.சுகுமாரன் முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் 4.2.2011-இல் பெருந்திரளானோர் கலந்து கொண்ட பெருமுழக்க ஆர்ப்பாட்டம் சென்னைப் பொது மருத்துவமனை எதிரில் நடந்தது. இவை தவிர, மறைமலைநகர், ஈரோடை, சேலம் போன்ற இடங்களிலும் தமிழ் ஒருங்ககுகுறியில் கிரந்தத்தால் விளையவிருக்கும் கேட்டை எதிர்த்துப் பொதுக்கூட்டங்களும் முழக்க ஆர்ப்பாட்டங்களும் பரவலாக நடந்துள்ளன. கிரந்தக்கலப்பை எதிர்க்கும் தமிழ்க்காப்புப் பரப்புரை ஊர்தி, ஓசூரிலிருந்து சென்னை நோக்கி விழிப்புணர்வூட்டிச் சென்றதைச் செய்தித்தாள்கள் விளக்கின. சென்னையிலும், தஞ்சையிலும், புதுவையிலும் நடந்த மாநாடுகளில் திருவாளர்கள் இராம.கி, பேரா.தெய்வசுந்தரம், இ.திருவள்ளுவன், ‘தென்மொழி’ பூங்குன்றன் ஆகியோர் செய்திகளைச் சிறப்பாக விளக்கி, வினாக்களுக்கும் விளக்கம் தந்தனர். பேரா. தெய்வசுந்தரம், நடுவணரசின் முன்மொழிவு தமிழ்மொழிக்கு எதிரானது மட்டுமன்று, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான வல்லாண்மை நடவடிக்கை என்றும் இந்துமதவெறியின் வெளிப்பாடு என்றும் மாநாடுகளில் விளக்கி கூறிவருகிறார். ஐயா இராம.கி., ஒளிப்பட உதவியுடன், எழுத்தில் தொடங்கி, ஒருங்குகுறி குறித்தும் இற்றைச் சிக்கல் குறித்தும் தெளிவாக மாநாடுகளில் விளக்கி வருகிறார். தஞ்சைத் தாளாண்மை உழவர் இயக்கம் அறிஞர் கருத்துக்களைத் தொகுத்து “ஒருங்குறித் தமிழ் மெய்யும் மீட்பும்” என்ற தலைப்பில் அரிய நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இணையத்தில், ‘நயனம்’, ‘வளவு’ வலைப்பதிவுகளில் நாக.இளங்கோவனும் இராம.கியும் விளக்கமாக எழுதியுள்ளனர். இன்னும் ‘தமிழ்நிலம்’, ‘தமிழநம்பி’, ‘புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்’ போன்ற வலைப்பதிவுகளிலும் விழிப்புணர்வுக் கட்டுரைகட்டுகள் எழுதப்பட்டுள்ளன. ‘வல்லமை’ வலைப்பதிவில் பெரியண்ணன் சந்திரசேகரன், செல்வக்குமார், தெய்வசுந்தரம் ஆகியோரின் அரிய விளக்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ‘தென்மொழி’, ‘முதன்மொழி’ போன்ற இதழ்களும் புதுவைத் ‘தெளிதமிழ்’, ‘நற்றமிழ்’ இதழ்களும் கிரந்த ஒருங்குகுறிக் குறியீட்டு முயற்சியின் வழியே தமிழை சிதைத்தழிக்கும் முயற்சியைக் கண்டித்துள்ளன. தொடர்ந்து தமிழ்நாடெங்கும் நடுவணரசின் முன்மொழிவுக்கு எதிரான இயக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தமிழநாட்டரசு அமைத்துள்ள குழு 12.2.2011 அன்று கூட இருப்பதாக அறிகிறோம். இக்குழு உறுப்பினர்களில் நா.கணேசனின் முன்மொழிவை ஏற்போர் பெரும்பான்மையராக உள்ளவாறு அமர்த்தப் பெற்றுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டரசு இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து உறுப்பினர்களைத் தேர்ந்துள்ளதா? - என்ற கவலை தமிழர் நெஞ்சை வருத்தி வருகிறது. நா.கணேசனுக்கு வேண்டியவரும் சமற்கிருதச் சார்புடையவரும் ஆகிய கொங்குப் பகுதித் தொழில்வல்லாரின் உறவினரும் அவருக்குக் கட்டுப்பட்டவர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளதாகக் கேள்விப்படுகிறோம். தமிழ்நாட்டரசு தமிழ்க் காப்பில் கவனம் செலுத்தவேண்டும். தமிழ் ஒருங்குகுறித் தொகுப்பில் கிரந்தம் கலக்கக்கூடாது. அவ்வாறே, கிரந்தக் கொத்தில் தமிழ் எழுத்துக் குறியீடுகள் இடம்பெறக் கூடாது. கிரந்த ஒருங்ககுகுறி தனியே இடம்பெற்றால், அதற்கு முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) இடமளிக்கவே கூடாது. இதற்கு மாறாகக் கருத்துரைப்போர் எவரையும் வரலாறு மன்னிக்காது; அவர்கள் தீராப்பழி சுமக்க வேண்டியவர்களாவர் என்பதை வலியுறுத்துகின்றோம். இனக் காப்பில் தமிழ்நாட்டரசு இழைத்த இரண்டகத்தால் தமிழர் நெஞ்சில் ஏற்பட்டுள்ள கொதிப்பை, மொழிக்காப்பால் ஓரளவேனும் தணிக்க முனையட்டும். --------------------------------------------------------------------------------------------------------------------- (consortium : an association of several companies – The Compact Oxford Reference Dictionary) ___________________________________________________________________________ நன்றி உரைப்பு: இக்கட்டுரை எழுத உதவியாகச் சில செய்திகளுக்கு விளக்கம் அளித்தது திரு நாக. இளங்கோவனாரின் வலைப்பதிவு. அவருக்கு நம் நன்றி. அவர் வலைப்பதிவு: http://nayanam.blogspot.com ------------------------------------------------------------------- Copyright thinnai.com நன்றி உரைப்பு:‘தமிழநம்பி’வலைப்பதிவு http://thamizhanambi.blogspot.com

20.12.10

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!
- தமிழநம்பி -
1970-ஆம் ஆண்டில் கணிப்பொறி பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. 1980 ஆம்ஆண்டுக்காலப் பகுதியிலிருந்தே கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், நம் தமிழறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்களில் மிகச் சிலரே கணிப்பொறியைப் பயன்படுத்துகின்றனர். தமிழாசிரியப் பெருமக்களோ, (மிகச் சிறுபான்மையர் தவிர, மற்றெல்லாரும்) பாடத்திட்டத்தில் வந்துள்ள பாடங்களைத்தவிர வேறெதையும் பார்க்கவும் விருப்ப மில்லாதவர்களே! இந்நிலையில், தமிழ்ப்பகைவர் மிக விழிப்பாகச் செயற்பட்டு, கணிப்பொறிப் பயன்பாட்டைக் கொண்டே தமிழை அழித்தொழிக்கும் முயற்சியில் திறக்கரவுடன் முனைந்துள்ளனர். பெரும்பான்மைத் தமிழர்கள் என்ன நடக்கிறதென்றே அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.
அச்சு நூல்கள் எதிர்காலத்தில் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று கூறஇயலாது. எல்லா ஆவணங்களும் கணிப்பொறி வழியே எழுதப்படுகின்ற காலம்வந்துவிட்டது. எல்லா நூல்களுமே கணிப்பொறி வழி எழுதிக் காக்கப்படுகின்றன.இந்நிலையில் கணிப்பொறியையே புறக்கணிக்க நினைப்பது பேதைமை. காலங்காலமாகத் தமிழ்அழிப்பு வினையில் ஈடுபட்டு வருகின்றவர்கள், இந்தச் சூழலைப்பயன்படுத்திக் கிரந்தக் கலப்பின்வழி, தமிழ்ச் சிதைப்புக்கும் அழிப்புக்கும் மிகச் சூழ்ச்சியாக முனைந்துள்ளனர்.

இக் கரவுவினை பற்றித் தமிழர்களிடத்தே எந்த விழிப்பும் இல்லாத நிலைஇரங்கத் தக்கதாகும்! தமிழர்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வைஏற்படுத்துவது இன்றைய இன்றியமையாக் கடமையாகும். இப்பொழுது எழுந்துள்ள இச்சிக்கலை நுட்பமாக அறிந்துகொள்ளாவிட்டாலும் தாய்த்தமிழைக் காக்கும் நோக்கில் எச்சரிக்கை உணர்வுடன் செய்திகளைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்றனர்.

இதைப்பற்றிப் புரிந்துகொள்ள கிரந்தம் பற்றியும், கணிப்பொறியில் இப்போ தைய தமிழ்ப் பயன்பாட்டு நிலை பற்றியும், ஒருங்குகுறி, ஒருங்குகுறி கூட்டிணையம், போன்றவை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரந்தம்: கிரந்தம் ஒரு எழுத்துமுறை; மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன.

அவற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில்கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடுண்டாக்கவும் காரணமாயின.

மேலும், தமிழும் வடமொழியும் கலந்த பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்க் கணிப்பொறி: கணிப்பொறியைத் தமிழ்ப் பயன்பாட்டுக்குக் கொணர்ந்த தொடக்கக் காலத்தில், அவரவரும் ஒரு குறியீட்டு முறையையும், எழுத்துரு(வார்ப்புரு)வையும் பயன்படுத்தினர். இப்படிச் செய்ததால், ஒருவர் எழுதியதை இன்னொருவர் பயன்படுத்த இயலாத நிலை இருந்துவந்தது. அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவே, இன்னொருவரின் கணிப்பொறியிலும் இருக்க வேண்டும் என்ற நிலையே கணிப்பொறிப் பயன்பாட்டில் இருந்துவந்தது. இணையம் வளர்ச்சிபெற்ற நிலையில் தமிழ்ப் பயன்பாட்டிற்கு இது பெரும் சிக்கலாகவும் தடையாகவும் இருந்துவந்தது.

ஒருங்குகுறி (Unicode): மேற்கூறிய சிக்கலும் தடையும் இன்றி அனைத்துக் கணிப்பொறியிலும் தமிழைப் பயன்படுத்தற்கேற்ற ஒரு வசதி தேவைப்பட்டது. இந்நிலையில், உலகின் பல்வேறு மொழிகளின் எழுத்துக்களுக்கும் எண்களைக் கொடுத்து அவ் வெழுத்துக்களை ஒருங்குசேர்த்து ஒரே ஆவணத்தில் பயன்படுத்தஇயலும் வகையில் அமைந்த ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) முறை இச்சிக்கலுக்குத் தீர்வாக அமைந்தது.

இக்கால், பல்வேறு கணிப்பொறி நிறுவனங்களும் எண்மமுறைக் கருவி நிறுவனங்களும் ஒருங்குகுறியை ஏற்றுக்கொண்டு தம் உருவாக்கங்களில் இக்குறியீட்டு முறையைச் சேர்த்துக்கொண்டுள்ளன. புதியதாகத் தோன்றும் பல உருவாக்க நெறிகளும் ஒருங்குகுறியை அடிப்படையாகக் கொள்கின்றன.

ஒருங்குகுறிக் கூட்டிணையம் (Unicode consortium): உலகிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்துக்களையும் எவ்வகைத் தடையுமின்றி எல்லாரும் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் அமைப்பாக ஒழுங்குகுறி கூட்டிணையம் உள்ளது. இவ்வமைப்பில் பல நாடுகளும் தனியாள்களும்கூட உறுப்பினராக உள்ளனர்.

தமிழ்க் கணிப்பொறிக்கான ஒருங்குகுறி குறித்து உரியவண்ணம் அக்கறை கொள்ள வேண்டிய தமிழ்நாட்டரசு தன் உறுப்பாண்மையை உறுதி செய்து கொள்ளாத நிலை வியப்பும் ஏமாற்றமும் அளிக்கக் கூடியதாகும்.

இன்றைய சிக்கல்: இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்தில் ஒப்போலை பெற்ற உறுப்பினராக உள்ளது. இத்துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற 22 மொழிகளையும் இக் கூட்டிணையத்தின் அடைவுப்பட்டியலில் இடம்பெறச் செய்தது; அத்துடன் வழக்கிழந்த வேதசமற்கிருத எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களும் அப்பட்டியலில் இடம்பெறவேண்டுமெனக் கருதியது.

இதன் தொடர்பாக, 6.9.2010-இல் 14 பேர் கொண்ட ஒரு குழுவைக் கூட்டியது.

இக்குழுவில் தமிழறிஞர்களோ, கணிப்பொறி வல்லுநரோ, ஒருங்குகுறித் தெளிவறிவினரோ, தொல்லியல் அறிஞர்களோ இல்லை. அந்தப் 14 பேரில்,தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் இரண்டு பேர். ஒருவர்ஆர்.கிருட்டினமூர்த்தி சாத்திரி; இன்னொருவர் காஞ்சி சங்கரமட ரமணசர்மாஆவர். அக்குழு எடுத்த முடிவினைப் பரிந்துரைத்து இந்திய அரசுத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்கு அனுப்பியது.

இறுதியாக, இந்திய அரசு, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தத்தோடு எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ்எழுத்துக்கள் உள்ளிட்ட தமிழின் 7 குறியீடுகளையும் இணைத்து இடம்பெறும் குறியேற்றத்தை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.

தமிழ் எழுத்துக் குறியீடுகளோடு கிரந்த எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும் கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ்எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும், விளைவு தமிழ்மொழிக்குப் பெருங்கேடாகவே இருக்கும். தமிழ் நூல்களும் இதழ்களும் சிறிதளவு தமிழ் கலந்த கிரந்த எழுத்துக்களாலேயே எழுதப்படும்.

அரிசியில் கல் கலந்ததைப் போலன்றிக் கல்லில் அரிசி கலந்த கதையாகும்.

சமற்கிருத மொழி ஒலிவடிவங்களுக்கு உருவாக்கப்பட்ட வரிவடிவங்களான கிரந்த எழுத்துக்களைக் கொண்டே, அக் கிரந்த எழுத்துக்களை உருவாக்கிய தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் வரிவடிவங்கள் புறக்கணிப்புறுமாறும் பயன்பாடின்றிச் செயலிழந்து வழக்கற்றுப் போகுமாறும் செய்யப்படும்.

இவற்றையெல்லாம் எண்ணிக் கவன்ற தமிழறிஞர்கள் - குறிப்பாக இலக்குவனார் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் போன்றோர் - எடுத்த முயற்சியின் பயனாகத் தமிழ்நாட்டரசு, அறிஞர் கருத்தறிய 3.11.2010 அன்று தமிழ்ப் பல்கலைக்கழத்தின் மூலம் 17 பேர் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தியது.

அவர்கள் ஒரு மனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி, தமிழக முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியதன் விளைவாக, ஒருங்குகுறி கூட்டிணையம், 6.11.2010-ஆம் நாள் கூட்டத்தில் கிரந்த எழுத்தோடு தமிழ்க் குறியீடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்ததை 26.2.2011-ஆம் நாள் கூட்டத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.

‘தினமணி’யின் குறை: இந்தச் சிக்கலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், "ஸ,ஷ, க்ஷ, ஜ, ஹ" என்னும் ஐந்து கிரந்த எழுத்துக்களைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழ்நாட்டரசு இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறைக்கு மடல் எழுதியுள்ளதாகக் குறைபட்டுக் கொண்டு எழுதிய ‘தினமணி’ நாளிதழ், அதன் 9.11.2010-ஆம் நாள் ஆசிரியருரையில் தன் வெளிறை வெளிப்படுத்திக் கொண்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முதலிய பலரும் உணர்த்திய பின்னரும்கூட ‘தினமணி’ தன் தவற்றுக்கு வருந்தவில்லை.

கலப்புக்கு முனையக் காரணம்: தமிழின் தூய்மையைக் கெடுத்து, வளங்குன்றச் செய்து, சிதைத்து, காலப்போக்கில் தமிழை அழித்துவிடவேண்டு மென்ற எண்ணமே, கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக் குறியீடுகளைக் கலக்கப் பரிந்துரைத்ததற்குக் காரணமாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறதன்றோ?

கிரந்தத்தை இந்திய மொழிகள் அனைத்துக்குமான எழுத்தாக ஆக்கி ஒரே வரிவடிவத்தைக் கொண்டு பல இந்திய மொழிகளிலும் மின்னஞ்சல், இணைய இதழ்கள் இடம்பெறச் செய்யலாமென்ற எண்ணமும் காரணமாகக் கூறப்படுகிறது. உலக மொழிகள் அனைத்திற்குமான ஒரே எழுத்துவடிவம் (International phonetic alphabet -IPA) உருவாகிப் பயன்பாட்டில் உள்ள நிலையில், இக் காரணம், பெரிய பூனையும் குட்டிப் பூனையும் போகவர கதவில் பெரிய துளையும் சிறிய துளையுமாக இரண்டு துளைகள் போட்ட கதையை நினைவு படுத்துவதாக உள்ளது.

கலப்பால் விளையும் கேடும் காப்புணர்வின் தேவையும்: ஏற்கெனவே, தமிழரின் விழிப்பின்மையால், சமற்கிருத ஒலிப்புண்டாக்கவெனக் காரணம் கூறி, கிரந்த எழுத்துக்கள் ஸ, ஷ, ஜ, ஹ - வுடன் கூட்டெழுத்துக்கள் க்ஷ, ஸ்ரீ - யும் தமிழிற் கலக்கப்பட்டதால் நேர்ந்திருக்கும் சிதைவினின்றும் தமிழை மீட்கவே, மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தோற்றித் தமிழ் மீட்சிக்குப் பாடுபட்டார். மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் இலக்குவனார், அறிஞர் வ.சுப.மா., பாவேந்தர், அறிஞர் அண்ணா போன்றோரின் இடைவிடாத முயற்சியால் தமிழ் மென்மேலும் சிதைவது தடுத்தாற்றப் பெற்று ஒரளவு மீட்சி கண்டுள்ளது.

இப்போது, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் கொத்தில் 7 தமிழ்க் குறியீடுகள் கலந்தால், தமிழ் ‘கிரந்தமொழி’யாக்கப்படும் உலகின் மூத்த மொழியின் வரிவடிவம் கிரந்தமாகிப் போகும். இதனால், பிற்காலத்தில் சமற்கிருதத்திலிருந்து அல்லது சங்கத மொழியிலிருதுதான் தமிழ் பிறந்தது என்றும் சிலர் நிறுவத் துணிந்தாலும் வியப்பதற்கில்லை.

இக் கிரந்த எழுத்துக்கள் தமிழிற் கலப்பதைத் தடுக்கவே, ஒல்காப்பெரும்புகழ் தொல்காப்பியம், "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடுபுணர்ந்த சொல்லா கும்மே" என்ற நூற்பாவின் வழி காப்புச் செய்ய முனைந்தது. ‘நன்னூல்’ பவணந்தியாரும் தற்பவம் தற்சமம் கூறி இரண்டின் வழியும் கிரந்த எழுத்து வராதிருக்கத் தடையிட்டார். தொல்காப்பியத்திலும், கழக இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையிலும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீறாப்புராணம், வீரமாமுனிவரின் எழுத்தோவியங்கள், நாலாயிரப் பனுவல்கள் முதலானவற்றிலும் கிரந்த எழுத்துக்கள் இடம்பெறவே யில்லை.

தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால் தமிழ், பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற வரலாறற்ற குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.

எம்மொழியிலும் எல்லாமொழிப் பெயர்களும், எல்லா ஒலிப்பும் இல்லை. சீனஎழுத்தின் ஒலிப்பு வேறு எந்த மொழியிலுள்ளது? ஒரு மொழி தன் இயல்பிற்கேற்காத ஒலியை ஏற்பின், நாளடைவில் சிதைவுற்று மாற்றமடைந்து வேறொரு மொழியாகிவிடும். இதற்கு, மலையாள மொழியே எடுத்துக் காட்டாகும். தமிழ் என்பதை ‘டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தாமில், தமிஷ், தமிஸ்’–என்றெல்லாம் தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்; பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ழ, ற, ண முதலிய தமிழ் எழுத்துக்களை ஏற்கக்கூடாது என்று கேட்பதா?

தமிழரின் இன்றைய கடமை: தமிழில் கிரந்தம் கலந்தாலும் கிரந்தத்தில் தமிழ் கலந்தாலும் சிதைவும் அழிவும் தமிழுக்கு நேர்வது உறுதி என்பதால் உலகெங்கணும் உள்ள தமிழர், ஒருங்குகுறியில் தமிழுக்கு உரிய இடத்தில் கிரந்த எழுத்துக்கு இடமளிப்பதற்கும், கிரந்தத்தோடு தமிழ் எழுத்துக்களைச் சேர்ப்பதற்கும் தம் எதிர்ப்பை மிக உறுதியாக வெளிப்படுத்தி அம முயற்சியைத் தடுக்கவேண்டும்.

கல்வெட்டு, செப்பேடு, ஈடு உரைகள் ஆராய்ச்சிக்குக் கிரந்த எழுத்தின் தேவை குறித்தெல்லாம் தொடர்புடைய பல்துறை அறிஞர் குழு அமைத்து அமைதியாக முடிவெடுக்கலாம்.

தமிழ்நாட்டரசு, இனக்காப்பில் இழைத்த இரண்டகம் தமிழர் நெஞ்சில் மாறாப் பெருவடுவாக நிலைத்திருக்கின்றது. இப்போது, மொழிக் காப்பிலும் கோட்டைவிட்டுப் பழிதேடிக் கொள்ளக் கூடாதென்று நல்லுணர்வோடு வலியுறுத்துகின்றோம்.

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும். – (குறள். 466)

--------------------------------------------------------------

--

தமிழநம்பி

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!

ஒருங்குறி(யூனிகோடு) என்றழைக்கப்படும் ஒருங்குகுறியில் இப்பொழுது நிகழ்த்தப்பட்டிருக்கும் கரவுவினை குறித்ததொரு தெளிவான கருத்தாடலை முன்வைத்திருப்பது - "கிரந்தக் கலப்பு : கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!" என்னும் புதிய கட்டுரை ஆகும்.
இதனைப் படைத்தவர் தமிழநம்பி ஐயா.
தமிழ் மொழி இலக்கியங்களில் ஆழங்காற்பட்டவர்; தூயதமிழியக்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்குத் தோள் கொடுத்தவர். சொல்லிக்கொண்டே போகலாம் இவர்தம் வினைப்பாட்டுப் பெருமைகளை. ஐயா விரும்பமாட்டார்.
தூய தமிழ்த்தொண்டுள்ளம் வாழ்க!
நற்றமிழ் 20சக, சிலை - 16.12.2010 இதழில்[பக்கங்கள் 7-10] இவ்வரிய கட்டுரை வெளிவந்துள்ளது.
தமிழநம்பி ஐயாவின் வலைப்பதிவான http://thamizhanambi.blogspot.com/ இலும், நமது இந்த வலைப்பதிவிலும் தேவமைந்தன் வலைப்பதிவான http://httpdevamaindhan.blogspot.comஇலும்/ இக்கட்டுரை இடுகை பெறுகிறது.
தொலைபேசி வேண்டுகொளுக்குச் செவிசாய்த்து, கட்டுரை அனுப்பிய தமிழநம்பி ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றி.
For further details view:

15.10.10

சாமிகிரி சித்தர் மறைவும் தொடர்புடையதொரு சிந்தனையும்

பலருக்குச் செவிப்புலனைச் சீர்செய்து வந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்ற பிசிராந்தையார் - சோழன் நட்பினருக்கும் தொடர்ந்து தன் எல்லாப் பெருநூல்களையும் சிறுநூல்களையும் காப்பான பதிவுடன் காசுபணம் கருதாமல் அனுப்பி வைத்து வந்தார். நட்பை வணிக நோக்குடன் பார்க்காதவர். என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்களின் மாமனார் அவர்களுக்குச் செவிப்புலன் சீர்ப்படுத்துதல் தொடர்பாக என் அண்ணார் மகனார்வழி தொடர்புகொண்டபோது, 'செவிப்புலன் கருவியைப் பயன்படுத்திவிட்டவர்களுக்கு மீண்டும் இயல்பாக அப்புலனை இயக்க இயலாது' என்ற உண்மையை அன்புடன் தெரிவித்தவர். அவரத்தனை ஆற்றல் இருந்தால் ஒவ்வொருவர் எப்படி ஆட்டமாய் ஆடிவிடுவர்! அன்பும் உண்மையும் துணைவியார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு வாழ்ந்தவர் சாமிகிரி சித்தர். என்னைப் போன்றவர்களின் நெஞ்சங்களில் அவர் எப்பொழுதும் வாழ்வார். (படத்துக்கு நன்றி: thats tamil: by oneindia.in)

11.10.10

எத்தகைய உரையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்? - முனைவர் க. தமிழமல்லன்

புன்செய்யில் தோன்றியது சிறிய இலை நெருஞ்சிச்செடி. அதன் பூக்கள் கண்களுக்கு இனிமையானவை. அது முள்ளுடையதைப் போன்று, காதலர் இன்பத்தை மட்டும் செய்தாரல்லர்; துன்பத்தையும் செய்தார். அதனால் என் நெஞ்சம் துன்புற்றது.......... துன்புற்றது. நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்குஇன் புதுமலர் முட்பயந் தாஅங்கு இனிய செய்தநம் காதலர் இன்னா செய்தல் நோமென் நெஞ்சே. (௨0௩) (அமன்ற - நெருங்கி முளைத்த : கட்கு - கண்ணுக்கு : இன் - இனிய) இப்பாடலை இயற்றியவர் அள்ளூர் நன்முல்லை. தலைவன் தலைவிக்குத் துன்பமும் செய்தான். அது குடும்பத்தில் நிகழ்வது இயல்பு. அதனால் தன் துன்பத்தைத் தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகிறாள். இதுவும் இயல்பே. கட்குஇன் புதுமலர் முட்பயந்தாங்கு என்று சொல்லும் உவமை அதை வெளிப்படையாக்கி விட்டது. ஆனால் இப்பாடலுக்கு உரை வரைந்தவர்கள் தலைவன் பரத்தை ஒழுக்கமே தலைவிக்குச் செய்த துன்பம் என்று குறிப்பிட்டுள்ளனர். பரத்தையிடமிருந்து திரும்பிய தலைவனின் தூதாகத் தோழி வந்தாள் என்றும் உரையாசிரியர் கூறுகிறார். இப்படிச் சொல்லுதல் வழிவழியாக வந்து விட்டது. இத்தகைய உரைகளை மறு ஆய்வு செய்தல் வேண்டும். வெல்லும் தூயதமிழ் ௨0௪௧, கன்னி, அகுத்தோபர், ௨0௧0. பக். ௧௧-௧௨.

1.8.10

ஆனந்த விகடனுக்கு நன்றி!

ஆனந்த விகடன் மாலை 85 மணி 31, 4.8.10 நாளிட்ட இதழின் பக்கம் 19-இல் ‘விகடன் வரவேற்பறை’யில் நம் இந்த வலைப்பதிவைப் படித்துப் பாராட்டியுள்ள விகடன் ஆசிரியர் குழுவார்க்கும், புகைப்படக்காரர் குழுவார்க்கும் வடிவமைப்புக் குழுவார்க்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை உழைப்பை நடுநிலையில் நின்று வாசகர்க்கு அறிவித்த ஆனந்த விகடனுக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணிநிறைவு பெற்றும் ஓயாமல், புதிதாகக் கணினி - இணையக் கல்வி பெற்று, பின்னர் இப்பதிவைத் தொடங்கி எளிமையான வடிவமைப்பில் பதிந்து வரும் நான் தெரிவித்துக் கொள்ளும் நன்றியும் உண்மையானதே. அன்புடன், அண்ணன் பசுபதி (தேவமைந்தன்)

19.5.10

பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை

ஐயா. வணக்கம். பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப்பற்றினால் மாற்றிக்கொண்டு மறைமலையடிகளுக்கு முன்னோடியாக இருந்தார் என்று புதியதலைமுறை கட்டுரையில் கண்டேன். புதிய தலைமுறைக்குப் பிழையான செய்தி போய் விடக்கூடாது. மறைமலையடிகளும் பாவாணரும் இது போலவே நம்பி எழுதியீருக்கின்றனர். வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் என்னும் பெயரை அவர் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை. புனைபெயராகவே பயன்படுத்தினார். அதுவும் தனிப்பாசுரத்தொகை என்னும் ஒரு நுாலில் மட்டுமே அப்பெயரைப் பயன்படுத்தினார். அவர் தன் படைப்பின் தன்மையை முழுமையாகப் படிப்பவர் வாயிலாகத் தெரிந்துகொள்ளும் நோக்கத்திற்காகப்பரிதிமாற்கலைஞர் என்னும் பெயரைப் பயன்படுத்தியதாக அந்நுாலில் குறித்துள்ளார். எனவே தமிழ்ப்பற்றால் பெயரை மாற்றிக் கொண்டார் என்பது சரியன்று. அவர் தமிழ்ப்பற்று இரு வகைகளில் சிறந்தது. அவர், பார்ப்பனர்களால் தான் தமிழ் கெட்டது என்பதைத்தமிழ்மொழி வரலாறு என்னும் நுாலில் மறைக்காமல் எழுதியுள்ளார். தமிழ் தனித்தியங்க வல்லது என்னும் கருத்தையும் அவர் வலியுறுத்தினார். ஆனால் தனித்தமிழ்ப்பற்றினால் பெயரை மாற்றிக்கொண்டார் என்னும் செய்தி பரவி விட்டது. அன்புடன், முனைவர் க.தமிழமல்லன்

5.5.10

சிங்காரவேலர் - முனைவர் க.தமிழமல்லன் தமிழர் இனத்தின் தலைவர்தாம் யாரோ? இமிழ்கடல் சிங்காரர் ஏத்து. உரத்தால் பயிர்தழைக்கும் முற்போக்கு வேலர் தரக்கொள்கை நாடுயர்த்தும் தான். புதுவுலகம் காணப் பொதுவுடைமைக் கொள்கை உதவுமெனல் வேலர் உரம். சிந்தனைச் சிற்பியாம் சிங்கார வேலரே நம்தமிழ் நாட்டுக்குத் தூண். பெரியார்க்குச் சிங்கார வேலர் பெரியார் உரியாரின் மாண்பை உயர்த்து. கதிரிருக்க வெண்ணிலவைக் கைதொழுதல் ஆமோ, எதிரிருக்கும் ஏந்தலைத்தான் ஏத்து. மறைமலை யாரைப்போல் மானமீட்பர் வேலர் குறைதீர்க்க வந்தார் குறி. அறிஞர்க் கறிஞராய் ஆற்றல் வினையால் நெறிஞராய் வாழ்ந்தார் நிறுத்து. சிங்கார வேலர்தான் சீர்திருத்தக் காரர்நம் பங்காளர் ஆவார் பகர். பொதுவுடைமைக் கொள்கையை நல்வேகத் தெம்பாய் எதிர்ப்பிருக்கக் காத்தார் அவர். மீனவர்கள் எல்லாரும் மீட்சிபெற்று மேலெழுதல் மானத்தின் வாழ்வாய் மதி. புரட்சிப் பரிசென்றே பொங்கரிமா சிங்காரர் புத்தூழி எண்ணத்தைப் போற்று. Singaravelar photo transparency - Thanks to: http://www.pragoti.org

5.2.10

தங்கப்பாவின் மொழியாக்க நூல் பெங்குவின் பதிப்பு 2010

'LOVE STANDS ALONE' தமிழ்ச் சங்க இலக்கியம்: தங்கப்பாவின் மொழியாக்க நூல் - தேவமைந்தன் திண்ணை.காம் வலையேட்டில் 'மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா' என்ற விரிவான கட்டுரையில் முன்பே குறிப்பிடப்பெற்ற 'Hues and Harmonies from an Ancient Literature' என்ற மொழியாக்கத்துக்கு மிகப்பல ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பாவின் ஆங்கிலவாக்கத்தில் குறுந்தொகையில் ஐம்பத்தொன்பது பாடல்கள்; ஐங்கூறுநூற்றில் பத்துப் பாடல்கள்; நற்றிணையில் பதினொரு பாடல்கள்; அகநானூற்றில் ஆறு பாடல்கள்; கலித்தொகையில் மூன்று பாடல்கள்; ஐந்திணை ஐம்பதில் ஐந்து பாடல்கள்; ஐந்திணை எழுபதில் இரண்டு பாடல்கள்; திணைமாலை நூற்றைம்பதில் ஒரு பாடல் - என்று அகப்பாடல்கள் தொண்ணூற்றேழும்: புறப்பாடல்கள்(புறநானூறு) எழுபத்தொன்றும் ஆக நூற்று அறுபத்தெட்டு பாடல்கள், தெளிவான ஆங்கில ஆக்கம் பெற்று பெங்குவின்(இந்தியா)நிறுவனத்தால் வெளியிடப் பெற்றுள்ளன. தலைப்பு, 'LOVE STANDS ALONE.' அருமையானதொரு பாடலின் ஆங்கிலவாக்கத் தலைப்பு. மற்றவர்களாயிருந்தால் 'Love Alone Stands' என்று பொருளே மாறிவிடும்படி பெயர்த்திருப்பார்கள். தங்கப்பாவின் மொழியாக்கத்தைக் கூர்மையாகக் கண்காணித்து, அவ்வப்பொழுது கலந்துரையாடி செம்மையாகப் பதிப்பித்திருப்பவர் அறிஞர் ஆ.இரா. வேங்கடாசலபதி. 'சலபதி' என்று நண்பர்களால் செல்லமாகக் குறிப்பிடப்பெறும் கடின உழைப்பாளி. இந்தப் பெங்குவின் வெளியீட்டில் ஆழமானதோர் அறிமுகமும் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம், சென்னையிலும் புதுச்சேரியிலும் சிறப்பான வெளியீட்டு விழா காணப்பெற உள்ளது. புதுச்சேரி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில், வரும் இருபத்தேழாம் நாள் மாலை வெளியீடு காணப்போவதாக திருவாட்டி தடங்கண்ணி தங்கப்பா கூறினார். ஏலவே, அறிஞர் ஏ.கே.இராமானுஜன் முதலானவர்களின் சங்க இலக்கிய ஆங்கில மொழியாக்கங்களை வாசித்தவர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஆக்கம் இது. சென்ற மாத(2010 சனவரி) இறுதியிலிருந்து புது தில்லியிலுள்ள பெங்குவின் பதிப்பகத்திலும் பிற இக்கின்பாதம்ஸ், ஆடிசி போன்ற நூல் விற்பனையகங்களிலும் கிடைக்கிறது. இந்தப் புத்தகத்தை மிகுந்த அக்கறையுடன் பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருப்பதைக் கையில் எடுத்துப் புரட்டிப் பார்க்கும்பொழுதே அறியலாம். அதற்கு முன் பிற மொழியாக்கப் புத்தகங்கள் சிலவற்றையேனும் அவ்வாறு பார்த்திருந்தால் இந்த உணர்வு கட்டாயம் வரும். புத்தகம் பற்றிய குறிப்புகள்: LOVE STANDS ALONE (Selections from Tamil Sangam Poetry) translated by M.L. Thangappa. edited by A.R. Venkatachalapathy. translation copyright M.L. Thangappa 2010. introduction copyright A.R. Venkatachalapathy 2010. Penguin/Viking, India. pages: 248. priced: Rs. 399. பதிப்பகத்தின் இணையதள முகவரி: www.penguinbooksindia.com ISBN 9780670084197 ******** karuppannan.pasupathy@gmail.com

26.10.09

‘திருக்குறளும் உலகமும்’ - தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள் -தேவமைந்தன் ‘சிவலிங்கனாரின் - உலகக் கவிதைகள் மொழியாக்கம்’ என்ற தலைப்பில் திண்ணை.காம் வலையேட்டில் வந்த கட்டுரைக்கும்(வியாழக்கிழமை நவம்பர் 30, 2006), பின்னர் ‘தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ.சிவலிங்கனார்’ என்ற தலைப்பில் ‘கலாபதி’ என்ற வலைப்பதிவில்(திங்கட்கிழமை திசம்பர் 8, 2008) இடுகை பெற்று மலேசிய நண்பர் சுப.நற்குணன் முதலானவர்களால் பாராட்டப்பெற்ற கட்டுரைக்கும் நாயகரே அ.சிவலிங்கம். தன் முதுமை - நோய் எதையும் பொருட்படுத்தாது இவர் எழுதியுள்ள நூல்களே ‘திருக்குறளும் உலகமும்’ இரண்டு பகுதிகள். முதலாவது 262 பக்கங்கள். இரண்டாவது 425 பக்கங்கள். உழைப்பிற்காகவும் புதிய அணுகுமுறைக்காகவும் மனமுவந்து பாராட்டத்தக்க புத்தகங்கள் இவை. திருக்குறளுக்கு உரையாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் நோக்குகளைத் தாண்டி உலகச் சிந்தனையாளர்கள் பலர் கருத்துகளையும் ஒப்புநோக்கித் தன் கருத்தாடலை அ.சிவலிங்கம் நிகழ்த்தியுள்ளார். ஆங்கிலத்தில் பெற்ற அறிவும், தன் எழுபத்திரண்டாம் வயதில் அம்மொழியிலக்கியத்தில் பெற்ற முதுநிலைப்பட்டமும், தொடர்ந்து உலகத்தின் பல பகுதிகளிலும் வெளியான நூல்களைத் தேடிப்பிடித்து அவாவிப் படித்த அனுபவமும் இந்தப் புத்தகங்களின் அடித்தளங்கள். ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்’(மாயூரம் வேதநாயகம் பிள்ளை), ‘அருட்குறள்’ (வீ.ப.கா. சுந்தரம்), ‘திருக்குறள் சர்வக்ஞ’(‘குறள் வழி’ திங்களேடு), ‘மாணிக்கக்குறள்’ (வ.சுப. மாணிக்கம்), Albert Schwitzer’s Biography, ‘An Anthology of Sanskrit Literature,’ ‘Dhammapada,’ ‘Tales from Italy,’ ‘Upanishad’(by Rajaji) ‘Sweet Vietnam’(American Publishing House), ‘Freedom from Necessity’(Bernal, London) போன்ற பன்முகங்கொண்ட இருநூற்று நாற்பத்து நான்கு நூல்கள் முதல் பகுதியிலும்; ரோசலிண்ட் மைல்ஸ் எழுதிய ‘உலக வரலாற்றில் பெண்கள்,’ ‘சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து’(திரு.வி.க.), ‘துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்’(லெவ். ஷெய் னின்), ‘இலக்கணமும் சமூக உறவுகளும்’(கார்த்திகேசு சிவத்தம்பி), ‘பிளேட்டோவின் அரசியல்’ (வெ.சாமி நாத சர்மா), ‘ஜோதிராவ் பூலே’(ஜி.பிதேஷ்பாண்டே), ‘Flowers - Fairy Tales’(Anna Sakse), ‘Not Safe To Be Free’(Newyork Press), ‘The Essential Nehru’(Narasimhaiah), ‘Jawaharlal Nehru(Maretyshin, Moscow), ‘Recovery of Faith’(S.Radhakrishnan), ‘Greek Historical Thought’ (Toynbee, New york), ‘The East and the West’(Swami Vivekananda) போன்று பன்முகங்கொண்ட ஐந்நூற்று இரண்டு நூல்கள் இரண்டாவது பகுதியிலும் எடுத்தாளப் பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களின் திருக்குறள் ஒப்பீட்டு அணுகுமுறைக்குச் சான்று ஒன்றை மட்டும் தெரிவிக்கிறேன்: “அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” என்ற 430-ஆம் திருக்குறளுக்குப் பின்வரும் ஒப்பீடுகள்: “ஆப்ரகாம் லிங்கன், தன்னுடைய நாற்பதாவது வயதில் Euclid வடிவியல் சார்ந்த கணிதம் படிக்க ஆரம்பித்தார். அதைப் படித்தது கணிதத்திற்காக அல்ல; பகுத்தறிவில் பயிற்சி பெறுவதற்காக அதைப் படித்தார்.” (‘Giants of Science’ by Philip Cane) “தன்னைத் தெரியும் தனக்குத் தெரியும் எனத் தெரியும் அவன் புத்திசாலி. அவனைப் பின்பற்று.”(‘பொன்மொழிகளும் பழமொழிகளும்’ - ரெங்கராஜன் பி.ஈ.) “மனத்தின் இருளே அறியாமை.” (ஆங்கிலப் பழமொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும் - ஜெயந்தி மதன், கவிதா பாலு) “அன்பு நெஞ்சில் ஆத்திரம் வந்தால் ஆண்டவன்கூட அஞ்சிடுவான் அறிவுக் கதவை சரியாய்த் திறந்தால் பிறவிக் குருடனும் கண்பெறுவான்.” (‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்,’ நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) [‘பாதை தெரியுது பார்’ என்ற படத்தில் ‘உண்மை ஒருநாள் வெளியாகும்’ என்று தொடங்கும் பாட்டில் வரும் வரிகள்] “ஒரு முக்கியமான ஆவணம். அவசரமாகக் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக ஒரு ஆளையும், குதிரையையும் அதிகாரி அமர்த்தினான். பிறகு அந்த மனிதன் குதிரையை தனக்கு முன்னே ஓடும்படி விரட்டினான். இதைப் பார்த்து ஒருவன் அடக்கமாகச் சொன்னான். அவசரமான காரியத்திற்கு நீ ஏன் குதிரையை சவாரி செய்யக் கூடாது என்று கேட்டான். அதிகாரி சொன்னான்: “நான்கு கால்களை விட ஆறு கால்கள் வேகமாகச் செல்லுமல்லவா?”(Wit and Humour from Old Cathay. Chinese Literature. N.C.B.H. Chennai) “லியனார்டோ-டா-வின்ஸி தாவரவியல் அறிஞருங்கூட. சில தாவரங்கள் கதிரவனை நோக்கியும் சில கதிரவனின்று விலகியும் வளர்கின்றன. சில தங்கள் வேர்களை நிலத்துக்குள் செலுத்தியும், மற்றவை வெளிப்புறத்தில் வளர்ந்தும் காணப்படுகின்றன. அவர் மரங்களில் கண்ட கணுக்கள் மரத்தினுடைய வயதோடு தொடர்புள்ளவை. மலர்களின் ஓவியங்கள் மூலம் தாவர வாழ்க்கையில் நிலவுகின்ற ஆண், பெண் இனங்களை அறிந்தார். சரியான காலத்தைக் காட்டும் கடிகாரத்தை அவர் உருவாக்கினார். இன்னும் தொழில் நுட்பக் கருவிகளைக் கண்டு பிடித்தார்.”( ‘Giants of Science’ by Philip Cane) [டான் பிரவுனின் ‘Angels and Demons’ நாவலின் பக்கம் 44-இல், டாவின்சி கத்தோலிக்கப் பாதிரியாராகவும் இயற்பியலறிஞராகவும் குறிப்பாக ‘Theo-physicist’ ஆகவும் விளங்கினார் என்ற குறிப்பை நண்பர்கள் படித்திருப்பீர்கள். - தேவமைந்தன்] “நம்முடைய அறியாமைதான் கடவுள். நாம் அறிந்து கொள்வது அறிவியலே. மனிதன் பெரிய மிருகங்களுக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்தான். மெல்ல மெல்ல பயத்தினின்றும் எழுந்தான். ஆற்றலில் எல்லா மிருகங்களைக் காட்டிலும் மேன்மை அடைந்தான். இந்த நிலைமையை மனிதன் உடல் வலிமையினால் அடையவில்லை. யானை அவனை விட பன்மடங்கு வலிமை உள்ளது. தன் அறிவினாலும், பகுத்தறிவினாலுமே மனிதன் இந்த உயர்ந்த நிலைமையைப் பெற்றான்.”(ஜவஹர்லால் நேரு) “புலன்களின் உணர்ச்சியே அறிவின் தோற்றுவாயாகும். இந்த உணர்ச்சி மூளை அல்லது அதைப்போன்ற உட்பொருளின் இயக்கத்தைத் தவிர வேறு எதுவும் அல்ல. மூளையில் அல்லது அதைப் போன்று தலைக்குள் இருக்கும் வேறு ஒரு பொருளின் இயக்கத்தையே நாம் மனம் என்கிறோம். எண்ணங்களும், பிரதிபிம்பங்களும், மூளை, இதயம் ஆகியவற்றின் இயக்கங்களேயாகும். அதாவது, பெளதீகப் பொருள்களின் இயக்கங்களே ஆகும். பெளதீகப் பொருள்களும், இயக்கமும் அடிப்படைச் சக்திகளாகும். அவை உலகத்தின் ஒவ்வொரு பொருளையும் - உயிரற்றவைகளையும், உயிர் உள்ளவைகளையும் - விளக்கிக் கூறப் போதுமானவையாகும்.” (ராகுல சாங்கிருத்தியாயன், [ஐரோப்பிய தத்துவயியல்]) “பலர் தாமே தம்மைச் சிறையிலிட்டுப் பூட்டி அந்தச் சிறையின் திறவுகோலை கையில் வைத்துக் கொண்டு தமக்கு அப்பாற்பட்ட கடவுளை கதவைத் திறந்து விடும்படி கேட்கின்றனர். அவர்கள் தங்கள் கையில் திறவுகோல் இருப்பதை உணராது மயங்கிப் பயனற்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.”(‘புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை.’ நா.திருவள்ளுவர். திருச்சி-5) “அறிவு வேண்டுகிறேன். எந்தப் பொருளை நோக்குமிடத்தும் அதன் உண்மையை உடனே தெரிந்து கொள்ளும் நல்லறிவு வேண்டுகிறேன்.” (‘பாரதியின் இலக்கியப் பார்வை.’ இளஞ்சேரன், கலைக்குடில், நாகை.) “கடுங்குற்றங்கள் புரிவோர் மந்தபுத்தி உள்ளவர்கள்.”(D.N.Pritt) “இப்போது இருப்பதைக் காட்டிலும் சிறிது அறிவாளியாக நான் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். அறிவு என்பது நழுவும் தன்மையது. அதைக் கொள்வது எளிதில் முடியாது. எனினும் சில சமயங்களில் திடீரென்று நமக்குத் தெரியாமலேயே வரும். நான் அதனுடைய உண்மையான பின்பற்றுபவன். அதனுடைய நல்லெண்ணத்தைப் பெற முயல்பவன் என்று நேரு கூறினார். (கிருஷ்ணா ஹதீசிங். ‘Indian Autobiographies’) “எங்கெல்ஸ் அவருடைய காலத்திலிருந்த புகழ்பெற்ற இயற்பியலாளரை விட மிகவும் சரியாக ஒரு பொருளினின்றும் ஆற்றலைப் பிரிக்க முடியாதெனக் கண்டார். இந்தக் கொள்கை நீண்ட காலத்திற்குப் பிறகு ஐன்ஸ்டீனுடைய சார்பு நிலைக் கொள்கைக்குக் கொண்டு சென்றது. எங்கெல்ஸின் இச்செயல் அறிவியலுலகத்திற்கு முன்னரே தெரிந்திருந்தால் பல சிக்கல்களைக் களைந்திருக்க லாம்.”(‘Freedom from Necessity’) “செய்யுள் இயலில் உள்ள ‘மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று’ [எண் 1337] என்ற சூத்திரத்திற்கு பேராசிரியர் அற்புதமாக உரை எழுதியிருக்கிறார். அவர் கூறுவதாவது: ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து வாராதாகலும் பொருள் வேறுபடுதலும் உடையதாகலின் அதோளி, இதோளி, உதோளி எனவும் குயின் எனவும் நின்ற இவை ஒரு காலத்து உளவாகி இக்காலத்து இலவாகின! செய்யுள் மரபென்பது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நான்கு வகையான சொற்களைக் கொண்டு செய்யுளை அமைப்பது.”(‘தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி’ A.V. சுப்பிரமணிய ஐயர், சென்னை - 14) “குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாய் உணர்வுகள் கீழ்நோக்கிச் செல்வதும் கீழே இறங்கிக் கீழேயே தங்கி விடுவதும்தான். தொப்புளுக்குக் கீழே உள்ள இடம் பிங்கலை நாடியால் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. இதனால் மன அமைதியும் மனத் தெளிவும் குறைகிறது. இதுவே குற்ற உணர்வுகளுக்கான தோற்றுவாயாக அமைகிறது.”(‘புதிய மனிதன், புதிய உலகம்.’ ஆசாரிய மகாபிரகய, சென்னை - 79) இதுவரையிலும் நாம் பார்த்தவை அனைத்தும் ஒரே ஒரு திருக்குறளுக்கு(குறள் எண்: 430) அ.சிவலிங்கம் தந்துள்ள ஒப்பீடுகளும் விளக்கங்களும் ஆகும்.(திருக்குறளும் உலகமும்-2. பக்கங்கள்: 151-153) எண்பத்தைந்து வயதில், உடல்நலங்குன்றிய நிலையில், உளநலங் குறையாமல் தொடர்ந்து பல துறைகளைச் சார்ந்த பன்முகங்கொண்ட புத்தக வாசிப்பை விடாமல் செய்பவர் அ.சிவலிங்கம். படித்தவற்றுள் முகமையானவற்றை ஏட்டில் குறித்து வைத்துக் கொள்பவர். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து, அவற்றை ஏற்ற வகையில், வாசிப்பவர் பயன் பெறுமாறு நூல்கள் ஆக்குபவர். எளிய பணியாளராக அஞ்சல் துறையில் பணியேற்று, தமிழில் தந்தி அனுப்பும் முறையை 1955இல் கண்டு பிடித்து இராஜாஜி முதலிய தலைவர் பலரின் பாராட்டைப் பெற்றவர். முதலில் புலவர் பட்டமும் எழுபத்திரண்டாம் வயதில் ஆங்கில முதுநிலைப் பட்டமும் பெற்றவர். ‘திருக்குறளும் உலகமும்’ என்ற இந்தப் புத்தகத்தின் இரண்டு பகுதிகளும் கிடைக்குமிடம்: திருமதி சு. மனோன்மணி, தமிழ்த்தந்தி இல்லம், 3, அன்னை தெரசா தெரு, சேஷசாயி நகர், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி - 21. விலை: முதற் பகுதி: ரூ.75. இரண்டாம் பகுதி: ரூ.175. ******** நன்றி:திண்ணை.காம்

21.10.09

'தான்' என்ற வடிவில் கொடுமையின் வித்து

தான் பெரியவனாகக் காட்சியளிக்க வேண்டும், தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும். தன் வாகுதோதுகள் முன்னிற்க வேண்டும். குமுகாய நிலயில் தாழ்ந்தவராகத தான் கருதுபவர்கள் தனக்கு அடங்கி நடத்தல் வேண்டும்; அவர்கட்கென்று தனிக் கருத்துத் தனிச் செயல்முறை இருத்தல் கூடாது. தான் சொன்னபடி அவர்கள் ஆடவேண்டும். இந்த உணர்வுதான் மறைமுகமாகப் பலரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வின் முற்றிய நிலைதானே வலியவன் மெலியவனை ஒடுக்கக் காரணமாக இருக்கின்றது? சிங்களனைப் போன்ற பேரின வெறியன் வலிமை பெற்ற காரணத்தால் வலிமையற்ற தமிழர்களை அழித்தொழிக்கக் காரணமாக நிற்கின்றது. குமுகாயம் இப்படியே போய்க் கொண்டிருக்குமானால் எத்தனைப் பெருங்கொடுமைகளை, எத்தனைப் பேரழிவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும்! இணக்கமின்மையின் வித்து, கொடுமையின் வித்து, இனப்படுகொலையின் வித்து, தனிமாந்தன் ஒவ்வொருவனுக்குள்ளும் 'தான்' என்ற வடிவில் புதைந்து கிடக்கின்றது. அது வலிதாக வளர்ந்து முள் மரமாகி விடாமற் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். - பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா ஆசிரியவுரை, 'தெளிதமிழ்,' 17.09.2009(தி.ஆ.2040, கன்னி, க)

23.9.09

சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’ - தேவமைந்தன் புனைகதைகளும் கவிதைகளுமே படைப்பிலக்கியம் என்ற தோற்றத்தை இலக்கிய உலகில் நெடுங்காலமாகத் தந்து வருகின்றன. கட்டுரைகளைப் பொதுவாக வாசகர்கள் படைப்பிலக்கியமாக அடையாளம் கண்டு கொள்வதில்லை. சிலர் எழுதும் கதைகள் கட்டுரைகளைப் போல ஒருபக்கமும் கதைகளைப் போல மறுபக்கமும் அமைந்து, உருப்படியான கதைகளாகவோ கட்டுரைகளாகவோ இல்லாமல் போவதைக் காண முடிகிறது. எரிஃச் ஃப்ராம்’மின் “To Have Or To Be?” என்ற புத்தகம், மனிதர்களுக்கே இந்த நிலை உண்டாவதைக் காட்டுகிறது. அதைப்போக்கவும் உதவுகிறது. கட்டுரை படைப்பிலக்கியமாவது பற்றி மட்டுமல்ல, எழுதுகிறவனை மெய்யாக அறிமுகப்படுத்துவதே அவனெழுதும் கட்டுரைகள்தாம். “எழுதுகிறவனைத் தெரிந்துகொள்ள அவனுடைய படைப்புகள் உதவுகின்றன; சரிதான். இன்னும் அதிகம் அவனைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது கட்டுரைகளே” என்கிறார் கி.ரா. ‘கரிசல் காட்டுக் கடுதாசி’க் கட்டுரைகளில் ஒன்றாக முதலில் வெளிவந்த ‘அண்ணாச்சி’க்குப் பின்னால் ஒரு தனிக்கதையே இருக்கிறது. மாத இதழொன்றின் ஆசிரியர் ஒருவரை குற்றாலத்தில் ‘தீட்சிதர் கடை’யில் கி.ரா. சந்திக்க நேர்ந்தது. தீட்சிதர்தான் கி.ரா.வை அவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். “ஆஹா அப்படியா; ஒங்களைப் பார்த்ததே பாக்யம்!” என்று சொல்லிவிட்டுத் தனது மாத இதழுக்கு அருமையானதொரு கட்டுரை ஒன்றை எழுதியனுப்புமாறு கேட்டிருக்கிறார். கி.ரா.வோ ‘வெள்ளந்தி’யாக, இந்த அருமையான ‘அண்ணாச்சி’ கட்டுரையை எழுதி கையில் நகல் கூட எடுத்து வைத்துக் கொள்ளாமல் அவருக்கு அனுப்பி இருக்கிறார். அவ்வளவுதான். அந்தக் கட்டுரையை மாத இதழாசிரியர் வெளியிடவுமில்லை; திருப்பி அனுப்பவுமில்லை. ‘எரித்திருப்பாரோ?’ என்று நொந்து போன கி.ரா. எழுதுகிறார்: “என்னை எரிக்க முடியலை; முடிந்தால் செய்திருப்பார்.” தொலைந்து போனதில் அதிர்ச்சி; திரும்பவும் எழுதினால் முன்போலவே அசலாக அமையுமோ என்கிற மன உளைச்சல்; ‘ரொம்பவும் தவிதாயப்பட்டு’ப் போயிருக்கிறார் கி.ரா.. ‘அண்ணாச்சி’ இறந்து முப்பத்தைந்தாண்டுகள் கழித்து அவரை நினைத்து மீண்டும் எழுத “பரவாயில்லை; வந்துவிட்டார்.” “இப்பவும் அண்ணாச்சி என்னோடே இருக்கிறார்....” தஞ்சை அகரம் வெளியீடான ‘கி.ராஜநாராயணன் கட்டுரைகள்’(2002) என்னும் பெரிய அளவுப் பதிப்பின் முன்னுரையில் இந்தச் சேதி இடம் பெற்றுள்ளது. ‘கந்தசாமி செட்டியார் அண்ணாச்சி’ ‘கவி. க. வ. கந்தசாமி செட்டியார்’ ‘கரடிகுளம் கந்தசாமி’ போன்ற பெயர்களால் அறியப்பெற்றவர் அண்ணாச்சி. கோவில்பட்டியில், முதலில் பருத்திக்கொட்டை புண்ணாக்குக் கடையும் பின்னர் பேருந்து நிலையத்துக்கு எதிரில் வெற்றிலை பாக்குக் கடையும்; பிறகு இட்லி தோசை விற்கும் காபி பலகாரக் கடையும் என்று அண்ணாச்சியின் கடை பரிணாமப்பட்டது போலவே அவரது வாழ்க்கையும் - ‘குடும்பத்துக்கு முன்’ ‘குடும்பத்துக்குப் பின்’ என்று இரு வேறானது. ‘ரசனை’ மிகுந்தவராகவும்; திருமணத்துக்கான பொருட்களை வாங்குவதற்காக கோவில்பட்டிக்கு வருபவர்கள், அவ்வாறு வாங்கச் செல்லுமுன் தன்னிடம் மணமக்களின் பெயர்களைத் தந்து சென்றால் அவர்கள் ஊர் திரும்புகையில் திருமண வாழ்த்துக் கவிதையை இலவசமாக எழுதிக் கொடுப்பவராகவும்; ‘ஜ’ ‘ஷ’ போன்ற எழுத்துக்களின் உச்சரிப்பு பிடிபடாத ‘நாக்குச் சொல்லமைப்பு’ உடையவராகவும் [காந்திசி, நேருசி, ராசாசி, ராசநாராயணன்]; எப்பொழுதுமே நாலுமுழக் கதர் வேட்டி - வெளியூர்ப் பயணத்தின் பொழுது அதனுடன் அரைக்கைச் சட்டை, துண்டு - கடுமையான குளிர் என்றால் நாலுமுழக் கதர் வேட்டியுடன் அரைக்கை பனியன் என்று எளிமையாக உடுத்துபவராகவும்; கதர் உடுத்திய காங்கிரஸ்காரர்களையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்ப மதித்ததனால் ‘காங்கிரஸ் சகா’க்களால் ‘படுகம்யூனிஸ்டுதான்’ என்று முத்திரை குத்தப்பட்டவராகவும்; எட்டடிக்குப் பத்தடி நீளம் கொண்ட அறையில் வாழ்பவராகவும் விளங்கிய அண்ணாச்சியின் வாழ்க்கை அவருக்கு கோட்டைக் கழுகுமலை கிராமத்தில் பெண் பார்த்து நிச்சயமானபின் முழுவதுமாகத் திசை திரும்பியது. முதலில் ‘வெத்திலை பாக்குக் கடை’ வைத்திருந்த அண்ணாச்சி, “நல்ல கருப்பு நிறம். சற்று முன் துருத்திய நெருக்கமில்லாத வெள்ளைப் பற்கள். கதிமையான முன் வளைந்த சிறிய மூக்கு. குறுகிய நெற்றியின்மேல் கமான்வளைவில் மழிக்கப்பட்ட விட்டல்க் கிராப். அதிக உயரமில்லாத, கர்லாக் கட்டைபோல நல்ல கட்டான உடம்பு. ஒவ்வொரு விரலும் ஒண்ணரை விரல்த்தண்டி இருக்கும்.” (கி.ராஜநாராயணன் கட்டுரைகள், அகரம் வெளியீடு, ப.131) ‘எதேச்சையாக ராஜா போல இருந்த அண்ணாச்சி’க்கு ‘குடும்பம் என்று ஆனதும் பொருளாதாரக் கஷ்டங்கள் தொடங்கிய பின்னர், நடத்திய ஓட்டல் கடையிலும் வேலையாள் வைத்துக் கொள்ளாமல் செய்த அதிக உழைப்பும் இரவெல்லாம் தலைக்குழந்தை பெண்பிள்ளை நச்சு நச்சு என்று அழுதுகொண்டே இருப்பதால் தூக்கமின்மையும் சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக மெலிந்துபோய் சளி இருமலில் விட்டு அவையும் அதிகமாகி மருத்துவரிடம் சென்று சோதித்துப் பார்த்ததில் ‘டி.பி.’ என்று முடிவானது. ‘டி.பி.’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அண்ணாச்சி நடுங்கிப் போனார். பிறகு இவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விடுவோமோ என்று தன் குழந்தையையும் குடும்பத்தையும் எண்ணிக் கண்ணீர் விட்டார். அண்ணாச்சிக்கு கி.ரா. ‘ரொம்ப ஆறுதல் சொல்லித் தேற்ற’ வேண்டியிருந்தது. அண்ணாச்சிக்கும் அவர் மனைவிக்கும் உருவத்தில் பொருத்தமில்லாது போனதைப் போலவே (‘அண்ணாச்சியின் தாட்டியமான அந்த உடம்புக்கும் இந்த சீத்தக்குஞ்சி போலுள்ள பெண் உடம்புக்கும்’ ப.138), உள்ளத்திலும் பொருத்தமில்லாமல் போனது. அண்ணாச்சிக்கும் அவரது மனைவிக்கும் சதா பூசல். வெளிக்குப் போகும் இடத்தில் வைத்துச் சொல்லுவார் வருத்தத்தோடு: “ராசநாராயணன் இண்ணைக்கு அவளை அடிச்சிட்டேன்”(ப.146) அண்ணாச்சிக்குப் புத்தகங்கள் என்றால் உயிர். பின்னர் படிப்போம் என்று அவர் வாங்கிச் சேர்த்த புத்தகங்கள் அவர் மின்விபத்துக்குள்ளான ஓராண்டுச் சிரமகாலத்தில் அவர் குடும்பத்துக்கு உதவின. தவிர, அது புத்தகங்களின் மதிப்பைத் தெரிந்தவர்களின் காலமுங்கூட. எதிலும் தரும நியாயங்களைப் பார்த்து மனச்சாட்சிப்படி நடக்கும் இயல்புள்ள அண்ணாச்சிக்குப் புத்தகங்களைப் பொருத்தவரை விதிவிலக்கு. “நல்ல காலத்திலேயே அவரிடம் போகும் புத்தகங்கள் திரும்பாது. அவரை ஒரு படைப்பிரிவுக்குத் தளபதியாக்கி ஒரு நாட்டின்மேல் படையெடுக்கச் சொன்னால் தலைநகரைப் பிடித்ததும் அவருடைய படைச் சிப்பாய்கள் பொக்கிஷத்துக்குள் நுழைந்து பொன்னும் மணியையும் அள்ளிக்கொண்டிருந்தால் இவர் நேராக நூலகத்துக்குள் நுழைந்து புத்தகங்களைத்தான் அள்ளுவார்! எவ்வளவோ அருமையான எங்களுக்குப் பிரியமான எங்களுடைய புத்தகங்களெல்லாம் அவரிடம்போய் சிக்கிக்கொண்டது. என்ன ஜெகஜாலம் போட்டாலும் அவரிடம் நடக்காது. அவ்வளவும் தூரிக்குள்ப்போன மீன்களின் கதிதான்.”(பக்.138-139) அண்ணாச்சிக்கு அவர் சேர்த்த புத்தகங்களை வாசிக்க எங்கே நேரம்? முதல் நாள் இரவு வெளியூர்களிலிருந்து கடைசிப் பேருந்து வந்தபின் கடையை அடைத்து, அடுத்தநாள் காலையிலேயே திறக்கும் அண்ணாச்சிக்கு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை கிடையாது. காரணம், பேருந்துகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இல்லை அல்லவா? “பத்திரிக்கைகளை மட்டும் பருவட்டாக ஒரு மேய்ச்சல் மேய முடியும், கேட்கிறவர்களுக்கு சரக்கு கொடுத்துக்கொண்டே. பின்னாளில் கிடைக்கப்போகும் ஓய்வு நாளை நினைத்தோ என்னமோ அண்ணாச்சி இப்படி ஈவு இரக்கமில்லாமல் புத்தகங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டே வந்தார். கடேசியில் சரகு அரிக்கத்தான் நேரம் இருந்தது, குளிர்காய நேரம் இல்லை என்கிற பழமொழி அண்ணாச்சி விஷயத்திலும் உண்மையாயிற்று..................... காந்தியின் பரமசீடரான, மருந்துக்கும் பொய் சொல்லாத அண்ணாச்சி இந்தப் பொஸ்தக விஷயத்தில் மாத்திரம் பொய் சொல்லுவார்.”(ப.139) இறந்த பின்பும்கூட அண்ணாச்சி பிறருக்கு உதவியாகத்தான் இருந்தார். கனத்த கோடைமழையில் மின்கம்பி அறுந்து தெருவில் வீழ்ந்தது தெரியாமல் ‘கண்டக்டர் அம்பி’ அதன்மேலேயே இடது மணிக்கை பட குப்புற வீழ்ந்து மெல்ல மெல்ல உயிரிழப்பதைக் கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்திருந்த மனிதர்கள் போலல்லாமல், எப்படியும் அம்பியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற திடமான முடிவுடன் ஓடிப்போய், மணி அண்ணாச்சியின் மருந்துக் கடைக்கு வந்த பார்சல் பெட்டியிலிருந்து நீளமானதொரு பலகைச் சில்லை எடுத்துக்கொண்டு ஓடிவந்து கண்டக்டர் அம்பியின் கையை மின்கம்பியிலிருந்து தள்ளிவிட முயன்று குனிந்தார். அவர் கால் பதிக்கப்போகும் அந்த ஈரத்தரையிலும் மின்சாரம் பாய்ந்திருக்கும் என்று அறிந்து எச்சரிக்கும் தகுதியுள்ளவர் எவரும் அந்த அறிவில்லாத கூட்டத்தில் இல்லை. அதனால் அண்ணாச்சி அந்த மின்கம்பிமேல் மல்லாந்து விழ நேர்ந்து விட்டது. கண்டக்டர் அம்பியுடன் அண்ணாச்சியும் உலகை நீத்து விடுகிறார். பிறகு நடந்தவை வழக்கம் போல. மின்சாரத்துறை, அம்பியின் குடும்பத்தார்க்கு மட்டும் ஈட்டுத்தொகை தந்தது. (அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட) கந்தசாமி செட்டியார், தெரிந்தே அதில் போய் விழுந்தார் என்று காரணம் காட்டி அவர் குடும்பத்துக்கு உதவ மறுத்து விட்டது. விடுவார்களா? உணர்ச்சி பூர்வமாக நினைவேந்தியவர்கள் சிலர், நிதி வசூலில் உடனே இறங்கினர். அண்ணாச்சியின் குடும்பத்துக்குப் பதில் தங்கள் குடும்பங்களுக்கு அந்த நிதியைச் செலவிட்டனர். அண்ணாச்சியின் தம்பி முருகய்யாவுடன் கி.ரா. பேசிக் கொண்டிருந்தபொழுது, அண்ணாச்சி இறந்தபின் ஊரார் ஐதீகப்படி ஓராண்டு அவர் குடும்பம் அங்கேயே இருந்து தொலைக்க வேண்டியிருந்தபொழுது செலவுக்கு எப்படி சமாளித்தது என்று கேட்டார். “ஏதோ நாங்க கொஞ்சம் கொடுத்து உதவினோம். அதோட அவரு சேத்து வச்சிருந்த புஸ்தகங்க பத்திரிகை அது இதுண்ணு வித்துத்தான் ஜீவனங் கழிஞ்சுது” என்று முருகய்யா சொன்னார். “ஒரு காலத்துக்கு உதவும் என்றுதான் அண்ணாச்சியும் புஸ்தகங்களைச் சேகரிச்சு வைத்துவிட்டுப் போயிருக்கார். அந்தக் குடும்பம் யார்கிட்டேயும் கைநீட்டி வாங்கவில்லை.”(ப.162) அண்ணாச்சியின் ஞாபகமாக இருப்பதெல்லாம் தங்களின் நெஞ்சுக்குள் அவரைப் பற்றிய அணையாத நினைப்புகளும் இந்தக் கட்டுரையுமே என்று தெரிவிப்பதுடன் கி.ரா. மேலும் எழுதுவதாவது: “அவர் எழுதி எழுதி வைத்துவிட்டுப்போன கவிதை நோட்டுகள் இசைப்பாடல்கள் எல்லாம் எங்கோ ஒரு மிட்டாய்க்கடையில் பலகாரம் சுற்றப்பட்டு எப்படி எப்படியோ போயிருக்கலாம். இப்போது இருப்பவை என்று சொல்லிக்கொள்ள யார் யாருக்கோ அவர் எழுதித்தந்த திருமண வாழ்த்துக் கவிதைகள்தான். ஏதோ ஒரு மண்சுவரில் கண்ணாடிச்சட்டம் போட்டு மாட்டி வைத்திருக்கும் திருமண வாழ்த்து மடலுக்குப் பின்புறம் ஒரு ராமபாணப் பூச்சியாக இன்றும் இருக்கிறார் அண்ணாச்சி என்று நம்புகிறேன்; அவருடைய கவிதைகள் பேரில் அவ்வளவுக்குப் பற்று உண்டு அவருக்கு” என்று முப்பத்திரண்டு பக்கமுள்ள இந்த அருமையான கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார் கி.ரா. ஒரு கட்டுரை மட்டுமே என்று இதைச் சொல்லிவிட முடியாத அளவு வயணங்கள், உண்மையாக உடன்வாழ்ந்தவர்கள் குறித்த படப்பிடிப்புகள், இரண்டாம் உலகப்போர்க்காலத் தமிழ்நாட்டு/சென்னைச் சூழ்நிலைகள் என்று இதன் உள்ளீடுகள் பற்பல. தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு அண்ணாச்சி ‘மெட்ராஸ்’ வரை நடைப்பயணம் மேற்கொண்டது; வழியில் மதுரை வைத்தியநாத ஐயர் வீட்டில் தங்கியது; நடைப்பயணம் மேற்கொண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐயர் ஒவ்வொரு செம்பு அன்பளிப்பாகத் தந்தது; ஏன் அவர் செம்பு தருகிறார் என்பது புரியாதிருந்து, பின்னர் அனுபவத்தில் வழிநடைப் பயணிகளுக்குச் செம்பு எத்தகைய உதவி செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டது முதலான வயணங்களுக்கு இக்கட்டுரையில் பஞ்சமில்லை. இரண்டாம் உலகப்போர்க் காலச் சென்னையில் நிலவிய உயிர்ப்பயம், பித்தலாட்டங்கள், கேடுகள், வழிமாற்றி அலைக்கழிக்கும் குணங்கள், ஏமாற்றி இருப்பதையெல்லாம் பிடுங்கிக் கொண்டுவிடும் செயல்கள் ஆகியவை சொல்லப்படுவதுடன் கதர் கட்டியவர்கள் மட்டும் நம்பத்தக்கவர்களாக அந்தக்காலச் சென்னையிலும் விளங்கினார்கள் என்பதும் சொல்லப்படுகிறது. பலகட்சி முன்னணியாக அப்பொழுதிருந்த காங்கிரஸ் கட்சி திகழ்ந்ததும்; ஆனாலும் காங்கிரஸ்காரர்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்ததும் தெளிவாகச் சொல்லப்படுகின்றன.(பக்.133-134) செல்லையாவை கு. அழகிரிசாமியாக உருவாக்கியவர்களில் அண்ணாச்சியின் பெரும்பங்கு [அழகிரிசாமி மகாகவி பாரதியைப்போல ஒரு பெரிய்ய கவிஞனாகத் திகழவேண்டும் என்பது அண்ணாச்சியின் கனவு. ப.134]; குருவிகுளம் குருபரக் கவிராயர் தான் எழுதிய அண்ணாச்சி திருமண வாழ்த்துப்பா, கு. அழகிரிசாமி பெயரில் அச்சாவதற்கு உடந்தையாக இருந்தது [‘எங்களில் கவிதை எழுதுகிறவன் அழகிரிசாமி ஒருத்தன்தான். ஆனால் அவனுக்கு கல்யாண வாழ்த்துப்பா எழுதுகிற சமாச்சாரமே பிடிக்காது; எரிந்து விழுவான்.’ ப.135] முதலான சேதிகள் அன்றைய கவிஞர்களின் உலகத்தைக் காட்டுகின்றன. உலகப்போர்க் காலத்தில் பேருந்து நடத்துநர்கள் எப்பேர்ப்பட்ட கௌரவம் பெற்றிருந்தார்கள் என்றால், ‘கண்டக்டர் பெருமான்க’ளாகவே பயணிகளுக்குக் காட்சி தந்திருக்கிறார்கள். கு.அழகிரிசாமியும் அண்ணாச்சியும் லாயல்மில் நடராஜனும் கி.ரா.வும் மதுரைக்குப் போனபொழுது ஓட்டலில் சாப்பிடவேண்டி வந்த ‘கனமான பெரிய்ய கோதுமைத் தோசை’யால் பெற்ற அதிர்ச்சியும்; லாயல்மில் நடராஜனின் ‘தாய்மாமனார்’ வீட்டில் அன்றிரவு அவர்களுக்கு அன்புடன் பரிமாறப்பெற்ற ‘நெய்மணத்த அரிசிச் சோறு’ [‘வயிறு கொண்டா கொண்டா என்று ஏற்றுக்கொண்டது.’ ப.141] தந்த சுகமும் கி.ரா.வால் சொல்லப்படும்பொழுது நாமே அவற்றைப் பட்டறிவதுபோல் உள்ளது. சோறு தந்த சுகம் மட்டுமா? நீர் பிரிவதிலுள்ள சுகமும்[ப.142]; புகைபிடித்துக்கொண்டு வெளிக்குப் போகப் பழகியவர்களுக்கு அது படும் அவசியமும் [ப.144] இன்னும் சில மறைவான சேதிகளும் கூட இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்றன. தன் குணத்துக்கு மாறாக அண்ணாச்சியின் மனைவியார் சமைத்துப்போடும் ‘திவ்யமான ருசியும் மணமும் கொண்ட’ கீரைக்குழம்பு பற்றியும் ‘சாதம் வடிப்பதில் அவர்கள் பின்பற்றிய சமையல்’ ரகசியம் [“கட்டியாக இலையில் வைக்கப்படும் சாதம் அதன்மேல் கைவைத்தவுடன் பொலுபொலுவென்று அதே சமயம் மெத்தென்று ஆகிறது எப்படி?] குறித்தும் சொல்லப்பெறுபவை கி.ரா.வின் உணர்த்தாற்றலைக் காட்டுகின்றன. ‘கப்பலை விற்று டொரியான் பழம் தின்றான்’ என்ற மலேசியப் பழமொழியின் காரணத்தை, ‘நாடு கண்ட செட்டியா’ரிடமிருந்து கு.அழகிரிசாமி அறிந்து கொண்டது; முட்டை வெறுப்பாளியாக விளங்கிய அண்ணாச்சியை (பாம்புபோல்) முட்டைமுழுங்கியாக மாற்றியது; ‘குத்துத்தரம்’ என்ற பாம்பு குத்தும் கருவி குறித்த சேதி; அண்ணாச்சி கடையிலிருந்ததும் அவர் அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்ததுமான குடையை இரவல் வாங்கிக்கொண்டுபோய்க் கி.ரா. படுத்திய பாடு; இடைசெவல் ரோட்டுக்கடை கருப்பையா செட்டியார் கடையின் முதல்தரமான காபி [‘அந்தக் காபியெல்லாம் இப்பொ எங்கெபோயி ஒளிந்து கொண்டதோ தெரியலை’] குறித்த நினைவு முதலிய பல இந்தக் கட்டுரையில் அம்பாரமாகக் குவிந்து கிடக்கின்றன. உடனிருந்தவர்களைக் குறித்து கி.ரா. இதில் தரும் விவரங்கள் பலவற்றில் ஓரிரண்டை மட்டும் தருகிறேன். கு.அழகிரிசாமியின் மாமனார் சந்திரகிரி ஆசாரியார் என்பவர். எப்பொழுதுமே எதற்கும் வேடிக்கைப்பேச்சுப் பேசுவது அவர் வழக்கம். “எந்தப் பேச்சானாலும் செக்ஸில்க் கொண்டுபோய் ஒட்டவைத்து ‘அளகு’ பார்க்கவில்லையென்றால்த் தூக்கம் வராது.” [பக்.150-151] அப்படிப்பட்ட அவர் பேச்சுகள் அவ்வப்பொழுது இக்கட்டுரையில் உரிய இடங்களில் வருகின்றன. லாயல்மில் நடராஜனுக்கு உரக்க வாய்விட்டுச் சிரிக்க வராது. “சில வீடுகளில் பெரியவர்கள் குழந்தைகளை அறட்டி சத்தம்போட்டு அவர்களை உரக்க சிரிக்க விடாமலே பழக்கி வளர்ப்பார்கள். இவர் அப்படி வளர்க்கபட்டவரோ என்னமோ; சத்தமில்லாமல் குலுங்கினார். கண்களிலிருந்து நீர் மளமளவென்று கொட்டியது, அவர் சிரித்த சிரிப்பில். கொஞ்ச நேரம் கழித்து “நல்ல தமாஷ்தான் போங்கள்” என்று சொல்லி கண்களைத் துடைத்துக்கொண்டார் கைக்குட்டையினால்.”(ப.145) அந்தச் சிரிப்பு வேதனைக்கான காரணமாக லாயல்மில் நடராஜனின் தாய்மாமனார் வீட்டு மொட்டை மாடியில் ‘ராத்திரி நடந்த கூத்து’(பக்.141-143) வாசித்துச் சிரிக்க வேண்டியது. இங்கே எடுத்துத்தர இயலாது. ஒரு - முப்பத்திரண்டு பக்கக் கட்டுரைதான் இது; தனிப் புத்தகம் அல்ல; ஆனால் நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ.. வகைமாதிரிகளாக மிகச் சிலவற்றையே என் இந்தக் கட்டுரையில் தந்திருக்கிறேன். இந்த ‘அண்ணாச்சி’ என்ற அருமையான கட்டுரையுடன் மேலும் அறுபத்து நான்கு கட்டுரைகளையும் கொண்ட பெரிய அளவு தொகுப்பு - கி.ராஜநாராயணன் கட்டுரைகள் அகரம் மனை எண்:1, நிர்மலா நகர் தஞ்சாவூர் - 613 007. பக்கங்கள்: 488 விலை: ரூ.275 (வாசிப்புக்கு உதவிய நண்பர் முனைவர் சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகருக்கு நன்றி.) ******** நன்றி: திண்ணை.காம்

10.9.09

‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி - தேவமைந்தன்

புதுச்சேரியில் உள்ள இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் என்னும் அமைப்பு, ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற தலைப்பிலான முனைவர் அ. கனகராசு அவர்களின் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. முனைவர் அ. கனகராசு, புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறையிலுள்ள தமிழ் வளர்ச்சிச் சிறகத்தின் ஆராய்ச்சி உதவியாளர். அம்பா பாடல் அமைப்பியல் ஆய்வு, பாரதிதாசன் குயில் அடைவு, புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல் முதலான இவர்தம் ஆய்வுநூல்கள் வெளியாகியுள்ளன. திண்ணை.காம் வலையேட்டில், இவருடைய ‘புதுச்சேரி மாநில நாட்டுப்புற விடுகதைகள் காட்டும் மக்கள் வாழ்வியல்’ தொடர்பாக நான் எழுதிய கருத்துரை, ‘தமிழர் கருத்துக் கருவூலம்’ என்ற தலைப்பில் வெளியானது. ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்ற இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க செய்திகள் பின்வருமாறு: ஆட்சித்தமிழ் தொடர்பாக நடுவணரசும் தமிழ்நாட்டு அரசும் புதுச்சேரி அரசும் 1965 முதல் அவ்வப்பொழுது வெளிப்படுத்திய முதன்மையான அரசாணைகளும் அறிவிக்கைகளும் சுற்றறிக்கைகளும் இந்தப் புத்தகத்தில் தரப்பெற்றுள்ளதால், ஆட்சிமொழியாகத் தமிழ் வீற்றிருக்க என்னதான் அரசியலார் முயன்றிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருக்கிறது. இத்தகைய நெறியில் தமிழக அரசு வெளியிட்ட ஆணைகள் எண்பத்தெட்டை நாம் இதில் வாசித்து அறியலாம். மாநிலத்தின் ஆட்சிமொழியாக எல்லாவகைகளிலும் தமிழே இருக்க வேண்டும் என்ற ‘1956ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் (த.நா. சட்ட எண்: XXXIX/1956),’ “தீர்ப்புகள் - தீர்ப்பாணைகள் - ஆணைகள் ஆகியவற்றை எழுதுவதற்காகத் தமிழை நீதிமன்றமொழி என்று சொல்லியிருக்கிறது. இது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சட்டமாகியும் செயற்பாட்டுக்கு வர இயலாமல் போடப்பட்ட முட்டுக்கட்டைகள் குறித்து ஆராய்ந்து இன்னொரு தனிப் புத்தகத்தையே முனைவர் அ. கனகராசு எழுதலாம். அரசு ஊழியர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் (ஆணை (நிலை) எண்:1134 / நாள்: 21.6.1978). தங்கள் பெயருக்கு முன்னுள்ள தலைப்பெழுத்துக்களை (initials) தமிழிலேயே எழுத வேண்டும் (ஆணை (நிலை) எண்: 431 / நாள் 16.9.1998 [திருவள்ளுவராண்டு 2029, வெகுதான்ய, ஆவணி 31) முதலான பலவற்றை இந்த நூலால் எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் வளர்ச்சித் துறை என்பது என்ன? அதன் முதன்மையான பணிகள் எவை என்பனவற்றை விளக்கிய பின், இருபத்தொன்பது செயல் திட்டங்கள் தரப்பெற்றுள்ளன. “திராவிடப் பல்கலைக் கழகத்திற்குப் புதுச்சேரி அரசின் பங்களிப்பைச் செலுத்தித் தமிழாய்விற்கு வழிவகுத்தல்” என்பதும் அவற்றுள் ஒன்று. தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமுறை அட்டவணை(Administration Chart) ஒன்றும் தெளிவாகத் தரப் பெற்றுள்ளது. புதுச்சேரி சட்டப் பேரவையில் இது தொடர்பாக 1965இல் நடந்த அனல் பறக்கும் உரையாடல்களை (பக்.25 முதல் 46 வரை) தவறாமல் கொடுத்துள்ளார் நூலாசிரியர். ஜே.எம்.பெனுவா என்ற சட்டப் பேரவைச் செயலருடைய ஒப்பத்துடன் உள்ள பதிவு அது. இரு பகுதிகள்: “SRI. S. THILLAI KANAKARASU: இதிலே சுதந்திரா பார்ட்டி, டி.எம்.கே பார்ட்டி என்று சொன்னதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. டி. எம்.கே. காரர்கள் தமிழ், தமிழ் என்று சொல்கிறார்கள், ஆனால் டி.எம்.கே. என்று சொல்லும்போது இங்கு வேறு மாதிரி ஓசை கேட்கிறது. இப்போது கேரளா ரெபெல் காங்கிரசைப்பற்றிச் சொன்னார்கள். ஆனால், அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. காரணம், பாண்டிச்சேரியில் சுதந்திரா பார்ட்டி இருப்பதாகத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டு வந்தது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். இதைக் காலம் கடத்தி அடுத்த செஷனுக்குக் கொண்டு வருவதால் நமக்கு நஷ்டம் ஏற்படுமே தவிர நலன் இருக்காது. எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கொண்டுவருகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதுதான் என்று சொல்லிக்கொண்டு, ஆட்சிமொழிச்சட்டமாகிய மசோதா எண் 10-ஐ ஆதரித்து என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.” “SRI V. KAILASA SUBBIAH: ..... ஆங்கில மொழி நீடித்திருக்க வேண்டும் என்று சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது. ஆனால் இங்கு ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு மொழி போய்விடும் என்று பிரெஞ்சு மொழிக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். அங்கே ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறர்கள். ஆனால் இங்கே ஆங்கிலம் வருவதால் பிரெஞ்சு அழிந்து விடும், அழிந்துவிடும் என்று பேசுகிறார்கள். ஆகவே அவர்கள் இரண்டு நாக்குகளுடன் பேசுகிறார்கள் என்று கருத வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நிலை வருவதற்குக் காரணம், நம் பிரதேச மொழியான தமிழை வளர்க்கும் வகையில் இந்த நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதற்கொண்டு, சரியான முறையில் ஆட்சியிலுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்காததுதான் என்று நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இன்றும் ஆங்கில மொழி மீதும், பிரெஞ்சு மொழியின் மீதும் சிலருக்கு ஒரு மோகம் இருக்கிறது.” “1965 - ஆட்சிமொழிச் சட்டம் 1977 - பெயர்ப்பலகை ஆணை 1997 - தமிழில் ஒப்பமிடும் ஆணை அரசிதழைத் தமிழில் வெளியிடும் ஆணை 2006 - நடுவணரசு பிறப்பித்த புதுச்சேரிப் பெயர்ச் சட்டம் ஆகிய அனைத்தையுமே ‘கண்டு கொள்ளாமல்’ அரசு பணியாற்றி வருவோர் இன்னும் உள்ளமைக்குக் காரணம், அவற்றை மீறுவோர்க்கு எந்தத் தண்டனையும் இல்லை என்பதே” என்று இரா. திருமுருகன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதுவும் முன்பகுதியில் உள்ளது. புலவர்கள் கீ. இராமலிங்கனார் முதலானோரும்; முனைவர்கள் திருமுருகன், அறிவுநம்பி, சுதர்சன், இராமமூர்த்தி, இறையரசன் முதலானோரும்; பாவலர்கள் காசி ஆனந்தன், தமிழமல்லன் முதலானோரும்; நீதித்துறைத் தலைவர்கள் தாவித் அன்னுசாமி முதலானோரும் இது தொடர்பாக எழுதியவற்றை உள்வாங்கிக் கொண்டு இந்த - பயனுள்ள ஆராய்ச்சியைச் செய்திருக்கிறார் நூலாசிரியர். ******** (ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும். பக்கங்கள் 228. விலை ரூ. 200.) தொடர்புக்கு: முனைவர் அ.கனகராசு, 3, அரவிந்தர் வீதி, பெசண்ட் நகர், குறிஞ்சி நகர் விரிவு, இலாசுப்பேட்டை அ.நி., புதுச்சேரி - 605008. தொ.பே. 0413 2256647 *** நன்றி: திண்ணை.காம்

8.5.09

தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள்

தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள் - தேவமைந்தன் சென்ற திங்கள் நான் குறிப்பிட்டிருந்த தங்கப்பாவின் 'வேப்பங்கனிகள்' பாத்தொகுப்புக்குப் பின் 'கள்ளும் மொந்தையும்' என்ற நூல் வெளிவந்தது. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்தப் 'பனிப்பாறை நுனிகள்' நூல் 1998ஆம் ஆண்டு வெளிவந்தது. நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த முனைவர் இரா. திருமுருகனார், "ஆங்கிலப் புலவர் மில்டன் எண்ணத்தில் மூழ்கிய மாந்தன்(pensive man) என்று ஒருவனைப் படைத்துள்ளார். அவன் தீர எண்ணித் தெளிபவன். அமைதியையும் தனிமையையும் விரும்புபவன். ஆரவாரத்தையும் ஆடம்பரத்தையும் வெறுப்பவன். இயற்கையில் இன்பம் காண்பவன். அழகை வழிபடுபவன். நிலவின் வெளிப்பாடும் பறவையின் பாடலும் அவனுக்குப் பேரின்பம் தரும். தங்கப்பாவுடன் உரையாடும்போதும், அவர் வாழ்க்கையைக் காணும்போதும் எனக்கு அப் பாமகனின் நினைப்பு வருவது உண்டு" என்று பொருத்தமாக மொழிந்திருந்தார். "தங்கப்பா கூட எங்கள் வழிக்கு வந்துவிட்டார், பார்த்தீர்களா?" என்று என்னிடம் களிப்புடன் சொன்ன முனைவ - பேராசிரிய - புதுப்பாவலர் ஒருவரிடம், "இந்நூலில் உள்ள பாடல்கள் மரபுவழிப் பாடல்களே. இணைக்குறள் ஆசிரியப்பாவில் சொற்சீரடிகள் விரவி வந்துள்ள பாடல்கள் இவை. இடையிடையே மிகச்சில நெகிழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன(பக்.ix-x)" என்ற பகுதியைக் காண்பித்தேன். அதனால்தான் தங்கப்பா, "மரபு வழி முயற்சிகள் மிகக் கடினமானவை. யாப்பிலக்கணம் படைப்பாற்றலுக்குத் தேவையற்றது. அவை பழமையின் அடையாளங்கள் என்று எண்ணும் அவர்கள் தங்கள் எண்ணங்கள் பிழையானவை.. கொஞ்சம் முயன்றால், கொஞ்சம் அக்கறை செலுத்தினால் எளிய மரபு வடிவங்களைக் கொண்டே பாட்டுணர்வை நன்கு வெளிப்படுத்த முடியும் என்று தெரிந்து கொள்வதற்கு இப்பாடல்கள் பயன்படுமானால் அதுவே எனக்கு மகிழ்ச்சி தருவதாயிருக்கும்" என்று பனிப்பாறை நுனிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். என் கனவுப் பனிப்பாறை கடல் மேல் தெரிவது கழுத்துக்கு மேல்தான் என்று 'போதாமை'யைக் குறிப்பிட்டிருக்கிறார். இரவும் பகலும் எள் இடைவிடாமல் உள்ளிருந்து என்னுள் உயிர்க்கூத்தாடும் இயற்கைக் காதல் முழுமையும் உணர்த்திட வெளிச்சம் போதவில்லையே என்பதுவே அப் 'போதாமை.' 'விட்டு விட்டு எழுந்து வா' என்ற பாடலில் வாழ்க்கையின் பொய்ம்மையைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்: இன்னும் எத்தனைக் காலம் மரப்பாச்சியையும் மணல்வீடுகளையும் வைத்துக்கொண்டிருப்பாய்? விட்டு விட்டு எழுந்து வா, திருமண மேடை காத்திருக்கின்றது. எத்தனைப் பேர்கள் பிறந்து இறக்கின்றோம். வாழ்க்கையை வாழ்பவர் எங்கோ ஒருவரே. உண்மையானவருக்கு அடையாளம், 'முகத்துதிக'ள் எனப்படும் பாராட்டுரைகளால் தாக்கப்பெறாமல் எப்பொழுதும்போல் இயல்பாக இருப்பதுதான். அதற்கு ஒரு காட்சிப் படிமம் தருகிறார் தங்கப்பா. உண்மை மெழுகு அவன் உண்மை என்னும் மெழுகு பூசிக் கொண்டிருக்கின்றான். பாலும் தேனுமாய்ப் பாராட்டு உரைகளைத் தலையில் கொட்டினும் வழிந்து கீழ்ப் போகுமே அன்றி ஒருதுளி அவன்மேல் ஒட்டுவதில்லையே. அறிவின் தோல்வி கண்டு அஞ்சுபவர்கள் பலர். ஆனால் அறிவுதான் படைப்பாற்றல் மிக்க 'பாட்டு வாழ்க்கை'க்குத் தடையாக இருக்கிறது. 'எது வாழ்க்கை?' என்ற தேடல் தோல்வியில் முடிவதற்குக் காரணம் அந்தத் தேடலுக்கும் அறிவே துணையாக வருவதுதான். இதை எத்தனைப் பேர் அறிந்திருக்கிறார்கள்? அறிய வேண்டியது அதுவே. அறிவு அதற்குத்தான் பயன்படும். வறட்டுத்தனத்தைத் தான் வெறும் அறிவு தரும். படைப்பாற்றலுக்கு அறிவின் வழிப்பட்ட வழிகாட்டி உரைநூல் கிடையாது. படைப்பாற்றல் - "பாட்டு மீன் துள்ளி/ மடியில் விழுந்தது"(ப.பா.நு. பக்.10) என்பதுபோல் மிகவும் தற்செயலாக நிகழ்வது. வாழ்வியல் அடிப்படைகள் கூட கிடைக்காமல், கணக்கற்ற மக்கள் இலங்கையிலும் சூடான் எத்தியோப்பியா இந்தியா முதலான நாடுகளில் திண்டாடித் தவிக்கும்பொழுது மேலும் மேலும் தம் வாழ்வில் வண்ணம் சேர்த்துக் கொண்டு போகும் தன்னலப் புழுக்களை எங்கெங்கும் காண்கிறோம். தன் வாழ்வில் தற்செயலாக ஏற்பட்டுவிட்ட ஏந்துகளையும் எடுத்து விடலாமா... என் வாழ்க்கைக்கு இன்னும் வண்ணம் தீட்டச் சொல்கிறாய். வெற்றிடங்களை நிரப்பச் சொல்கிறாய். இருக்கும் வண்ணத்தையும் எடுத்து விடலாம் என்று நினைக்கிறேன். வெற்றிடங்களும் கருத்துணர்த்துமே. உயிர்ப்பு வெளிப்பட ஓரிரு கோடுகள், வளைவுகள் போதும். வண்ணம் எதற்கு? இவ்வாறு சிந்திக்கும் தங்கப்பாவின் பாடல் 'வாழ்க்கை ஓவியம்.' கருப்பு வெள்ளை வண்ணப் படங்களையே காண மறுக்கும் கண்களுக்கு இந்தக் கருத்தாடல் பிடிக்காதுதான். "ம்...வாழ்க்கையில் வளரவே வேண்டாமென்கிறாரா தங்கப்பா? இவர்போல ஒரு மிதிவண்டியில் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு நாமும் மிதிக்க வேண்டுமா?.. சிற்றூர் மக்கள்தாம் உயர்ந்தவர்களாம். அவர்களிடம் உள்ள கரவுள்ளம் நகர மாந்தர்க்கு வருமா? ம்..ம்..சிற்றூர்களில் என்ன உள்ளது? 'ஷாப்பிங் ஃபெசிலிட்டீஸ்' கொஞ்சமாவது உண்டா?" என்று முனகும் இன்றைய தமிழருக்கு 'வாழ்க்கை ஓவியம்' பாடல் உறைக்காதுதான். ஆனால் இதோ இந்தப் பாடல் மெத்தவும்தான் சுவைக்கிறது. கனடாவில் தமிழ்ச் சிறார் சிறுமியர் இடை 'ஆடப்படும்' பாடல் - ‘டாடி மம்மி வீட்டில் இல்லே தடைபோட யாருமில்லே விளையாடுவோமா உள்ளே வில்லாளா இண்டோர் கேம் இது................. மைதானம் தேவையில்லே, அம்பயரும் தேவையில்லே யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா!” என்பதாம். தமிழ்ப்பற்றுள்ள தங்களை டாடி மம்மி என்றழைக்க, புலம்பெயர்ந்தோர் மனங்கள் எவ்வாறு ஒப்புகின்றன? - என்று நொந்து கேட்டிருந்தார் கனடாவைச் சார்ந்த கட்டுரையாளர்.(வி.என். மதிஅழகன், ‘கலாச்சாரம் காக்கத் துடிக்கும் கனேடிய டாடி மம்மிகள்’ (பத்தி), யுகமாயினி 2:6, எண்:18, மார்ச் 2009. பக். 18-21.) அவர்களே இப்படி எனில், தமிழக மக்களிடையே எளிமையை, தமிழுணர்வை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆராய்ச்சி மூளையை அறவே சாடுகிறார் தங்கப்பா. துருவிப் பார்க்கும் உனது மூளையாம் நுண்பெருக் காடியைத் தூக்கி வீசு. கொசுவும் கூடப் பூதமாய் வெளிப்படும்; வேண்டாம். வியப்புறும் விழிகள் விரியட்டும் அன்பால். வாழ்க்கை விளங்கும். ஏன்? எதையெடுத்தாலும் நோண்டி நோண்டி, தோண்டித் துருவிப்பார்க்கும் மூளைக்கு அன்பு புலப்படாது என்பதால்தான். அது தன்னகந்தையிலே திளைக்கும். அடிவருடிகளை ஒழுங்கு செய்து கொள்ளும். விழா விருதுகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளும். தன்னைக் கொண்டவனின் ஒவ்வொரு காலடியும் தன் நலத்தை நோக்கி நடைபோடுகிறதா அல்லவா என்று உளவு பார்க்கும். யாரை வீழ்த்தலாம், எப்படி வீழ்த்தலாம் என்று ஒவ்வொரு கணமும் திட்டமிடும். அது நடத்து விழா பற்றி, 'பனிப்பாறை நுனிகள்' நூலில் அருமையான பகடிப் பாடல் ஒன்றிருக்கிறது. அது இது: எப்படி? அரசியல் தலைவர் பிறந்தநாள் விழாவில் மேடை மீது வீற்றிருந்தவர்களின் கால்களை எண்ணினேன். சரியாய் நாற்பது. வாழ்த்துப் பாட எழுந்து நிற்கையில் முகங்களை எண்ணினேன் அவையும் நாற்பது! அடடே, எப்படி? வாசித்தீர்கள் அல்லவா? இந்தக் கணக்கு உங்களுக்குப் பிடிபட்டதா? பிடிபடவில்லையென்றால் தமிழகத்துக்கு வந்து அத்தகையதொரு மேடைமுன் அமர்ந்து எண்ணிப் பாருங்கள். புலப்படும். இதுதான் போகிறது! அரசு விழாக்கள் எப்படி? 'தமிழன் என்றோர் இனமுண்டு / தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று நாமக்கல் கவிஞர் பாடினார்.. அந்த இனத்தின் (தமிழ்நாடு, புதுச்சேரி) அரசுகள் நடத்தும் விழாக்கள் குறித்த தங்கப்பாவின் பாடல்: அரசு விழாக்கள் குயில்களாய்ப் பாடக் கோட்டான் கூட்டமும், மயில்கள் போல் நடிக்க வான் கோழிகளும் அழைக்கப் பட்டன - அரசு விழாக்கள். மெத்தப் படித்தவர்கள் நடத்தி மகிழும் கருத்தரங்குகளுக்கும் மேனிமினுக்கிகள் தொலைக்காட்சிகளில் நடத்திக் கொழுக்கும் ஆடரங்குகளுக்கும் ஒன்றும் பெரிதாக வேறுபாடு இல்லை. அவை அறிவின் கொழுப்புகள். இவை உடலின் கொழுப்புகள். அத்தகையதொரு திரைக்கொழுப்பினால்தானே டானி பாயில் நம் சேரி மக்களை 'சேரிநாய்கள்' என்றான்? வறுமையைக் கண்டு பொங்கி எழ வைக்காமல், பொழுதுபோக வைத்த டானி பாயிலுக்குப் புகழ்.. உடலாலும் உளத்தாலும் ஊனமுற்றவர்கள் யார் யார் என்று இனங்காட்டிய பாலாவுக்குக் கண்டனம்(படம்: 'நான் கடவுள்'). இது இன்றைய உலகம். அதனால்தான் 'அறிவுச் செவி'டாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறார் தங்கப்பா....... அறிவுச் செவிடு வேண்டாம் என்று சொல்லச் சொல்ல என்னை மேடையில் ஏற்றி வைத்தனர். படித்தவர்களின் பளபளப்புகளில் கண்கூசிப் போனேன் என் காதுகளும் அறிவுச் செவிடு உலகையே புரட்டும் உரைகள் நடுவிலும் உறங்கிப் போகிறேன். இலையில் வைத்த இடியாப்பத்தில் அடிமுடி காணும் ஆராய்ச்சி எல்லாம் என் மூளைக்குள் எட்டுவதில்லை. மெத்தப் படித்தவர்கள் கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு தம் தாய்மொழி வளர்ச்சிக்கும் இனமான வளர்ச்சிக்கும் அன்றாடம் ஆற்றிவரும் அழிம்புகள் எண்ணிலடங்கா. வெய்துயிர்ப்பு மட்டுமே நமக்கு எஞ்சும். ஆனால் தங்கப்பா அவற்றை ஆவணமாக்குகிறார்: எதைச் செய்யட்டும்? மேடைகள் மீது நடக்கும் உங்கள் பொய் வழிபாடுகள் நடுவில் சட்டையைக் கிழித்துக் கொண்டு கத்தத் துடிக்கிறேன். சட்டியில் பொத்தல் போட்டுக் கழுத்தில் மாட்டிக் கொள்ளவும், முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கொண்டு, உங்கள் ஆய்வரங்குகளில் கோணங்கித் தனங்கள் செய்யவும் நெஞ்சு துருதுருக்கின்றது. விளையாட்டில்லை ஐயா மார்களே, வினையாகத்தான் சொல்கிறேன், உங்கள் போலிப் புனிதங்களைத் திரை கிழித்துக் காட்டுதற்கும் உங்கள் பண்பாட்டுப் பொய்முகங்களை உடைப்பதற்கும் எனக்கு வேறு வழி எதும் தெரியவில்லை. ...................................................... மண்ணின் மக்களைத் தீயிட்டுக் கொளுத்தி மனுதருமங்கள் தத்துவம் பேசுகின்றன. இனவெறி அரசுகள் இணைந்து நடத்தும் மக்கள் படுகொலைகளிலும், பட்டாளங்களின் அட்டூழியங்கள், காவல்நிலயக் கற்பழிப்புகளிலும் வாழ்க்கையே மாசு பட்டழிகின்றது. இங்கே, நீங்கள், சும்மா அறிவுப் புலியாட்டங்கள் ஆடியும் இலக்கியப் பொய்க்கால் குதிரை ஏறியும் விளக்கின் நெய்யைத் திருட்டில் விற்று வெளிச்சத்தைப் படம் வரைந்து காட்டிப் புகழ் வாங்குகின்றீர். வாழ்க்கை சவமாய் வலித்துப் போகின்றது. அதற்குப் பளபளப்புச் சட்டை மாட்டிப் பண்பாட்டு நறுமணம் பூசுகின்றீர்கள். ஒன்று நான் கொலை வாளைத் தூக்க வேண்டும், அல்லது கோமாளி ஆகி வாழ்க்கையை மாசு படுத்தும் உங்கள் வழிபாடுகளை மாசு படுத்தி அதிர்ச்சி மருத்துவம் அளிக்க வேண்டும். எதைச் செய்யட்டும்? என்ன இது? அன்பு வழி என்கிறார் தங்கப்பா. அவருக்குள் இவ்வளவு மறவுணர்வா..என்பவர்களுக்கு வள்ளுவர் முன்பே விடையிறுத்து விட்டார்: அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை இந்தக் குறள் உரையாசிரியர்களால் வைக்கப்பட்டிருக்கும் அதிகாரமும் 'அன்புடைமை'யே. மனநலமுடைய வாழ்க்கை குறித்து தங்கப்பா இந்நூலில் நிறைய மொழிந்திருக்கிறார். காட்டுகள் சில: ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை; அன்பாய் ஒரு சொல். (ப.37) மீசை நரைத்துத் தலை வெளுத்தாலும் விளையாட்டு உள்ளம் வேண்டும் நண்பர்காள். ஆசைக் கடலில் தோணி ஓட்டலாம் அன்புள்ளே இருந்தால் தப்பு வராது. பாசி பற்றாமல் வாழ்ந்து பாருங்கள் பளிச்சென்று உள்ளே வெளிச்சம் தெரியுமே.(ப.38) இயக்குநர் அகிரோ குரோசாவா பாராட்டிய திரை உத்தி - 'கணப்பொழுது இயங்கும் உறைந்த படிமம்.' அது இயற்கைக் காட்சியாகவும் இருக்கலாம். வியர்த்துப்போன உழைப்பாளியின் தோற்றமாகவும் விளங்கலாம். மழலையின் முகமாகவும் திகழலாம். அப்படிப்பட்ட காட்சிகள் பனிப்பாறை நுனிகளாகச் சில உள்ளன. பாருங்கள்: மரங்களில் சொட்டும் இம் மழைத் துளிகள் இலைக் காதுகளில் என்னதான் அப்படிப் பேசுகின்றன? இப்படித் தலை ஆட்டுகின்றனவே அந்த இலைகள்! *** நீல நெளிவில் ஓசைச் சுழிப்பு. நிலையில் பறந்து மடுவில் குதிக்கும் புள்ளிப் பாய்ச்சல். உள்ளான் கழுத்தில் ஒளியின் சுளுக்கு. முங்கி எழுந்த மூக்கின் முனைக்கீழ் ஆடி அடங்கும் அலைவட்டங்கள். *** பட்ட மரத்தின் வெட்டுவாய்ப் பொந்தில் பசுமை தளும்பி ஒரு நுணாக் கன்று. குடு குடு கிழவன் தோளில் தாங்கிய கொழு கொழு குழந்தை. *** பன்றி கிளறிய குழியில் காட்டுக் கோழி இட்ட முட்டை முகிலிடை முழுநிலா. ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட்.

தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள்

தமிழர் நலங்காக்க தங்கப்பா அளிக்கும் வேப்பங்கனிகள் - தேவமைந்தன் புதுச்சேரி நகரத்தின் கடற்கரைப் பக்கம் புன்னை மரங்களும்; கடற்கரைக்கு மேற்கிலுள்ள நகரத் தெருக்களில் வேப்ப மரங்களும் இன்றும் இயற்கை நலம் ஈந்து கொண்டிருப்பதைக் கண்டு வியந்த ஈரோடை நகர் நண்பர் ஒருவர், என்னிடம் தொல்லையான வினாவொன்றையும் முன்வைத்தார். வேப்ப மரத்தின் நெய், பட்டை(மேற்பட்டை, வேர்ப்பட்டை), பிண்ணாக்கு, பூ(பச்சை அல்லது நாட்சென்ற பூ), வித்து, இலை ஆகியவற்றை மருத்துவப் பலன் கொண்டு புகழும் 'மூல வருக்க பொருட்குண' விளக்கத்தார் - வேப்பம்பழங்களை மட்டும் பயன் சுட்டாது விட்டமை ஏன்? - என்பதே அந்த வினா. நொய்யல் ஆற்றின் அருகில் மதகுப் பக்கத்து வேப்ப மரத்திலிருந்து தாமே உதிரும் அல்லது காக்கைகள் கொத்தும் பொழுது உதிரும் வேப்பம் பழங்களைத் தின்னும் இளமைப் பருவத்தைக் கழித்த நான், அவருக்கு என்ன மறுமொழி சொல்வது என்று திகைத்தேன். நான் மருத்துவரல்லவே! வீட்டுக்கு அவர் வந்த பொழுது, "வேப்பம் பழங்கள் குறித்துக் கேட்டீர்களே! இந்தாருங்கள்.. தமிழர் அகநலங் காக்க நம் தங்கப்பா தந்த 'வேப்பங்கனிகள்'' என்று நூலொன்றைத் தந்தேன். ஆண்டு குறிப்பிடாமல், தோழர் த. கோவேந்தன் வெளியிட்ட தங்கப்பாவின் நூலது. தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் வெளியிட்டிருக்கக் கூடும். அதனுள்ளிருந்து வேப்பம்பழங்கள் சில: "வாய்பெருத்த வயிற்றுக் கடவுளின் கோயில் தோறும் கொழுமடைப் பள்ளியில் எரிகழல் உமிழ்வன எத்தனை அடுப்புகள்! நாகரிக மகள் நாட்டிய மேடையில் உடைகள் விலகலை ஒளியிட்டுக் காட்ட எத்தனை ஆயிரம் மின்விளக்குகள்! வேட்கை நெஞ்சின் வெறித்தழல் ஏறிய பதவிக் கொள்ளைப் பந்தயக் குதிரையை இராவழி விரட்ட என்ன தீவட்டிகள்! அம்பல நடுவில்தன் அழகொளி மாளிகை மறைப்பன என்றே மற்றவர் குடிசையைக் கொளுத்திட எத்தனைக் கொள்ளிக் கட்டைகள்!" என்ற வினாக்கள் அடுக்கடுக்காய் ஒரு பாவில். 'இராவழி ' என்ற சொல்தரும் ஆழமான பொருள் உன்னத் தக்கது. பட்டி மண்டபங்கள், அரட்டை அரங்கங்கள் முதலானவற்றை, வயற்காட்டு வாழ்வை உணர்ந்து வாழ்ந்த பாவலன் மதிக்க மாட்டான். தன்னை ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்ற விரும்பும் சொல்வணிகர்களே விழைவார்கள். "உங்கள் பட்டி மண்டபங்களையும் காட்டுக் கத்தல் கருத்தரங்குகளையும் நெருப்பிலிட்டுக் கொளுத்துங்கள், போங்கள்! வெறுஞ் சொல் மினுக்கும் வேடிக்கைவிட்டு வாழ்க்கையை நேராய் வந்து பாருங்கள்" இதிலே வரும் வாழ்க்கை என்பது ஒரு தலைமுறைக்குப் பின்[தலைமுறை = 33 1/3 ஆண்டுகள்] ஈழத் தமிழர் வாழ்க்கையைக் குறிப்பதாக மாறிப்போனதை நொந்த நெஞ்சங்கள் உணரும். ஆம். வெறுஞ்சொல் மினுக்கும் வேடிக்கைப் பயல்கள் தமிழகமெங்கும் நிறைந்திருப்பதால்தானே ஈழத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாய்க் கொல்லப்படுவது கண்டும்; குழந்தைகள் கூட, போர்மாட்சி - படைமாட்சி தெரியாத காடையர்களால் போர் என்னும் பேரில் கொல்லப்படுவது கண்டும் - கட்சி அரசியலுக்கும், பணம் கொல்லும் தேர்தலுக்கும் மனமுவந்து பாடுபட முடிகிறது. தமிழர் நலங்காப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் நாளேடுகள் - உட்பக்கமொன்றில் ஈழத்தமிழர் இன்னல் குறித்தும் தலைப்புப் பக்கத்தில் தொகுதி உடன்பாடு குறித்தும் செய்தி வெளியிடுவதைப் பார்க்கவில்லையா? இன்றைய இலக்கியம் என்று தமிழில் அறிவிக்கப்படுபவை எப்படி இருக்கின்றன? இன்றைய எழுத்தாளர்/படைப்பாளர் என்று தம்மைப் 'பிரகடன'ப் படுத்திக் கொள்பவர்கள், நூல்கள் பலவற்றை நெய்து குவிக்கும் தமிழாசிரியர்கள், ஓயாமல் பாமாலை கட்டி அரங்கம் தேடி வந்து பாடும் பாவலர்கள், இன்றைய ஆய்வாளர்கள்... இவர்களெல்லாரும் எப்படிப் பட்டவர்கள்? பழைய இலக்கியக் கடைகளில் பொறுக்கிய தாள்களைச் சேர்த்துத் தைத்த நூல்களில் தம் பெயர் எழுதும் தமிழாசிரியர்கள். பட்டி மண்டபப் பரத்தையின் மடிமேல் வெட்டிப் புலவர்கள் இளித்திடும் கொஞ்சல்கள். காயடித்த 'கவிஞர்கள்' கூடி வாயடி அடிக்கும் பாட்டரங்குகள். .......... ............ ................ அலைகடல் தாண்டி அயல்நாட்டுச் சந்தையில் ஏட்டுச் சுரைக்காய் கறிசமைத் துண்டு வீட்டுக்கு வந்தவர் விட்டிடும் ஏப்பங்கள். சாய்க்கடை மண்ணைச் சலித்துச் சலித்துப் பார்க்கையில் வெளிப்படும் பாசியைப் பகுத்தும், போக்கில் நெளியும் புழுக்களை எண்ணியும் அடிக் குறிப்பெழுதி ஆய்வுகள் இயற்றும் வடித்தெடுத்த உலக்கைக் கொழுந்துகள். அரைத்த மாவையே அரைத்துக் கலக்கிய புளித்த மாத் தோசை போதும் என்பதால் மதுக்கடை வண்டலைப் பச்சையாய்க் கலக்கிப் புதுப் பலகாரம் படைக்கும் 'புதிது'கள்! எத்தனை அழுகல்! என்ன தீ நாற்றம்! இதுதான், இதுதான் ஐயா, இற்றைத் தமிழரின் இலக்கிய உலகமே" வெளிப்படையாக அவரவர் இங்கே தங்கப்பா சுட்டியவற்றை மறுக்கலாம்; அவர்களின் மனச்சான்று, அப்படி ஒன்று இருந்தால், அமைதியாக ஆம் ஆம் என்று ஏற்றுக் கொள்ளும். கொடுமையிலும் கொடுமை எது என்னவென்றால் மாந்தர் பலருக்கு அகமும் புறமும் ஒவ்வாதிருக்கும் இரட்டை நிலைதான். 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் பாடினார். அவ்வாறு உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று நடக்கும் பேர்வழிகளைத் தங்கப்பா பட்டியலிட்டே காட்டி விடுகிறார். புதையல் பேய்களின் பூசாரிமார்கள் புத்தரைப் போலவும், கறிக்கடை நடத்தும் கறுப்ப சாமிகள் வள்ளுவர் போலவும் திகழ்கின்றார்கள். மல்லிகைப் பூக்களின் மனத்தைத் திருடிக் காகிதப் பூக்கள் கடை நிறைக்கின்றன. உலகியல் சூளையின் உலர்ந்த செங்கல்கள் வெண்ணெயில் மறைந்தே உணவுத் தட்டில் வந்து உட்காருகின்றன. விழா அரங்குகளில் வெள்ளைச் சட்டையும் கருப்பு நெஞ்சுமாய்க் குள்ள நரிகள் குறுநகை பூத்துத் தலையை ஆட்டியும் தழுவியும், வணங்கியும் தூய்மையே உருவாய் வாழ்த்துரை வழங்கையில் அவற்றின் மனங்களோ மாலை எப்போது மயங்கும் என்று 'நீலச் சுருள்'களை நினைந்திருக்கின்றன. ஆன்மிகம் முழங்கும் ஆச்சிரமங்களின் விருந்து மாளிகைகளில் அரபிய இரவின் அம்பு மலர்கள் பதவி நாயகர்களைப் பாகாய் உருக்கி நிலுவைக் கணக்கை நேர் செய்கின்றன. படிப்புச் சுரைக்காய்ப் பந்தல்கள் அடியில் உலக ஒருமையும் உடன்பிறப்பு அன்பும் சந்தன மாக நாக்கில் மணக்கையில் கழற்றி வைத்த செருப்பி லிருந்து சாதிச் சகதியும் சமயக் கொலைகளும் நடுத் தெரு வரைக்கும் நாறு கின்றன..." 'கிண்டற் பித்தன்' என்ற புனைபெயர் தங்கப்பாவுக்கு உண்டு. 'மன்னூர் மாநாடு' என்ற அவருடைய நெடும்பாப்போல அங்கதச் சுவையும் நெருப்புத் திறனாய்வும் கொண்ட மற்றொரு பாவைப் பார்த்தல் அரிது. சற்று வேறுபாடாக, மிகவும் மென்மையான 'தொனி'யில் மிகவும் முதன்மையானதொரு நிகழ்வை அங்கதப்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக 'வேப்பங் கனிக'ளில் வரும் 'எங்கும் தமிழ்!' என்ற பாவைக் குறிப்பிடலாம். "எங்கள் தமிழைப் பாடமொழியாய் வைத்திட மாட்டோம். அறிவியல், தொழிலியல் மருத்துவம் சட்டம் என்று எதற்கும் தமிழை எடுக்கவே மாட்டோம் அலுவல் மொழியாய் ஆக்கவும் மாட்டோம். தமிழறிந்தோருக்கு அலுவலில் முதன்மை அளிக்கவும் மாட்டோம். ஆனால், உலக அரங்குகளில் எம் உயர்தமிழ்த் தாயை உலவச் செய்வோம்! மாண்புமிகு தமிழ் மாநாடுகளின் உயர்ந்த கோபுரங்களில் அவளை ஏற்றுவோம். வேட்டுகள் முழக்கி விழாப் பல எடுப்போம். ஆனைமேல் ஏற்றி ஊர்வலம் வருவோம். மன்றங்கள் தோறும் படமாய் மாட்டி வீதிகள் தோறும் சிலையாய் நிறுத்திப் பூவும் புகையும் தூவிப் பூசைகள் பலப்பல செய்வோம்! நாடு முன்னேறும்; நாமும் முன்னேறலாம்." 'Gentle sarcasm' என்று மேலைத்திறனாய்வாளர் போற்றும் மென்மையான நையாண்டியை மேலுள்ள பாவில் காணலாம். 'மேலிருக்கும் மாடுகள்' என்றொரு பா. நண்பகலொன்றில் தங்கப்பா ஒரு காட்சியைக் கண்டார். நிழல்தரும் சாலை. வேப்ப மரம். அதன் தழையை வளைத்து, தான் ஓட்டி வந்த மாட்டின் வாயில் ஊட்டுகிறான் கிழவன் ஒருவன். பசுமைக்குக்கேடு விளைவிக்கிறானே அவன்! - என்று திட்டுகிறார் அவனை. தலை கவிழ்ந்தவாறே தன் வழியில் மாட்டை ஓட்டிக் கொண்டு போகிறான் அவன். இப்பொழுது பாவலரின் மனதுக்குள் ஒரு குரல்: " பசித்த மாட்டுக்குப் பச்சை காட்டிய ஏழைக் கிழவனை ஏசி விரட்டினாய். ஊரின் பசுமை ஒருதுளிர் விடாமல் வலைத்து முரித்து வாயில் போட்டுக் கோடி கோடியாய்க் கொழுக்கின்றனவே மேலிருக்கும் பெரிய மாடுகள். அவற்றைத் தடுக்க உன்னால் முடிந்ததா? எல்லார் கடுமையும் ஏழைக ளிடமா? பொல்லாத ஒழுங்கு! போடா மடயனே!" பொதுவான மாந்தருக்கும் - நிரம்பிய பாவலன் ஒருவனுக்கும் இதுதான் வேறுபாடு. நம் நாடு விடுதலைக்குப் பின்பு எத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைச் சுட்டும் வேப்பங் கனிகள் இரண்டு. அவற்றைப் பார்த்து இக்கட்டுரையை நிறைவு செய்வோம்: நம்மை நாமே எப்படிப் பொறுப்போம்? எப்படிப் பொறுப்போம்? நமக்கே உரிமையாம் நம் தாய்நாட்டைப் பொன்னாய்க் கொழிக்கும் இப் புனித மண்ணினை வேற்று நாட்டு வெள்ளைப் பறங்கிகள் சுரண்ட விட்டு நாம் சும்மா இருப்பதா? எழுங்கள்! வீறுகொண்டெழுங்கள்! வெள்ளைப் பறங்கியை விரட்டி அடிப்போம்! சொந்த மண்ணை, நம் தாய்த் திரு நாட்டைப் பிறர் சுரண்டாமல் நாமே சுரண்டுவோம். இந்தப் பா, தோராயமாக முப்பதாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கலாம். "வெள்ளைக்காரன் போய், கொள்ளைக்காரன் ஆளவந்தான்" என்ற புதுக்கவிதை வரியொன்று பின்புதான் வந்தது என்பதை நாம் மனத்துட் கொள்ளவேண்டும். வெண்கலத் திருவோடு முன்பு நான் ஓட்டைச் சட்டியில் பிச்சை எடுத்தேன். இப் பொழுது, இவர்கள் எனக்குப் புதிதாய்ப், பளபளப்பாக வெண்கலத் திருவோடு அன்பளிப்புச் செய்து விட்டார்கள்! என்ன குறைச்சல் இனிமேல் எனக்கே? இந்தப் பாவில் வரும் வெண்கலத் திருவோடு, இலவய வண்ணத் தொலைக்காட்சியை நினைவு படுத்தவில்லையா? ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட். க, மீனம் 2040 / 14-03-2009.