22.9.11
18.9.11
இது உண்மையா நண்பர்களே?
மேலும் வாசிக்க: 'சூரியோதயம்,'ஆசிரியர்: ஆர்.மணவாளன்(Publisher,Editor-Designer),144 மகாலட்சுமி இல்லம்,பாக்கமுடையான்பட்டு மெயின்ரோடு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி-605008. மின்னஞ்சல்: sooryodayamtamil@yahoo.com தொ.பே.: 0413 2252050 செல்.: 9944541993
குறிப்பு: இதே இதழில் திண்ணை.காம் வலையேட்டில் வெளிவந்த என்னுடைய கட்டுரையும் மறுவெளியீடாகியுள்ளது.
24.8.11
தங்கப்பா ஐயாவின் 'சோளக்கொல்லைப் பொம்மை' நூலுக்கு சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்திருப்பதை அறிந்து பெருமகிழ்வுற்றேன். அதுதொடர்பாக, திரு ஏர்வாடி இராதாகிருட்டிணன் அவர்களுக்கு வேண்டிய திரு இளவரசு என்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய தங்கப்பா அவர்களை, நான் இணையமுலாவு நடுவத்துக்கு அழைத்துச் சென்று, என் மின்னஞ்சல் வழி அவர் படத்தை அனுப்பி வைத்தபொழுது, நாற்பத்திரண்டு காலமாக அவருடன் கொண்ட நட்பின் புதிய பருமானமாக அவர்தம் எளிமையும் இயல்பான அணுகுமுறையும் மென்மேலும் கூர்மைபெற்று ஒளிர்வதை உணர்ந்தேன்.
(ஒளிப்படம்: புதுவை இளவேனில்)
அன்புள்ள நண்பருக்கு
வணக்கம். புள்ளுவக்குடி பள்ளிக்கட்டடத் திறப்புவிழவைப்பற்றிய உங்கள்
பதிவைப் பார்த்து மகிழ்ந்தேன். மகிழ்ச்சி. நம் மக்கள் பயன்பெற
அவர்கள் இபப்டி உதவுவது சந்தோஷமாக உள்ளது.
*
தற்செயலாக உங்கள் பதிவில் பேராசிரியர் வெங்கடராமன் கட்டுரையை ஒட்டி
யாரும் எழுதவில்லை என்கிற பதிவையும் பார்த்தேன். வெங்கடராமன் நூல் பற்றி
திண்ணையில் நான் விரிவாகவே எழுதியிருந்தேன். அவர் குறிப்பிட்ட பிறகுதான்
ஆவுடை அக்காள் பாடல்தொகுப்பை வாங்கிப் படித்துவிட்டு,
அதையொட்டி ஒரு விரிவான க்ட்டுரையை எழுதியிருந்தேன்.
அக்கட்டுரை உங்கள் நூலகம் இதழில் அப்போது வெளிவந்தது.
அதன் இணைப்பு அப்போது கீற்று இணைய தளத்தில் இருந்தது.
இன்னும் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஓய்விருக்கும்போது
நீங்கள் ஒருமுறை ப்டித்துப் பாருங்கள்.
*
அன்புடன்
பாவண்ணன்
22.8.11
பின்வரும் இடுகையிலுள்ள கல்வராயன்மலை, புள்ளுவக்குடியில் பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவியர் கட்டியுள்ள பள்ளியின் இயற்கையான சூழல். இதன் திறப்புவிழாவில் எம்மைத் தலைமையேற்கச் செய்த(பிரான்சு நார்மண்டிப் பள்ளி)தலைமாணவியர் செல்வி நதியாவுக்கும்;'SOLEIL INDIEN'பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அவர்களுக்கும் நனிநன்றியேம்.
கல்வராயன்மலை, 'புளுவபாடி' என்றழைக்கப்படும் புள்ளுவக்குடியில் சென்ற 18ஆம் நாளன்று(18/08/2011)பிரான்சு நார்மண்டிப் பள்ளி மாணவ - மாணவியர் தம் பணித்திட்டத்தின்கீழ்க் கட்டிய மலைமக்களின் சிறார்க்கான் பள்ளியின் திறப்பு விழாவில் நானும் என் துணைவியார் கலாவதியும்(முகநூல்:Calavady Batmanabin)தலைமைப் பொறுப்பேற்றோம். பிரான்சு திராசுபூர் திரு வே.துக்காராம், வண்ணத் துணிப்பட்டியை வெட்டித் திறந்து வைத்தார். 'SOLEIL INDIEN' பொறுப்பாளர் திரு நேரு கிருட்டிணன் அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்திருந்தார்.நார்மண்டிப் பள்ளி மாணவ மாணவியரின் அன்பும் அவர்களை மேற்பார்வை செய்திருந்த தோழியர் செல்வி நதியா துக்காராமின் தோழமையும் எம்மைத் திகைக்க வைத்தன. மேலாக, நவீனா துக்காராம்(திராசுபூர், பிரான்சு), உமேஷ் (சென்னை)அவர்களும் எம்மை அங்கு எல்லா ஏற்பாடுகளுக்கும் உட்படுத்தி அன்புடன் உடனிருந்தனர்.[சுவரில் பதிக்கப்பெற்றுள்ளவை - பள்ளியைக் கட்டி முடித்த பிரெஞ்சு மாணவ மாணவியரின் கைப்பதிவுகள்.]
28.6.11
மூன்று குரங்குகள் படிமம்
2.6.11
என் நண்பரும் பிரெஞ்சுப் பேராசிரியருமான முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயக்கர் அவர்கள் செம்மொழித் திட்டத்தின்கீழ் ஆற்றியதும் உண்மையான உழைப்புடன் கூடிய அரிய முயற்சியால் ஆனதுமான சங்க இலக்கியமான குறுந்தொகையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் பணி நிறைவுபெற்று உரியவர்களிடம் ஏடு ஒப்படைக்கப் பெற்றுள்ளது. முனைவர்ப் பட்ட ஆய்வேட்டை விடவும் ஆகப் பெரியதாய் உள்ள அந்தப் பிரெஞ்சு ஆக்கத்துடன் ஆங்கில எழுத்துகளாலான பாடல் ஒலிப்பும், குறுந்தொகைக் காலத்து மலர்களின் வண்ணப்படங்களும் இணைக்கப்பெற்றிருப்பது மிகப்பெரும் சிறப்பு.
16.5.11
தி.பி. 2042, மேழத் திங்கள் 18-ஆம் நாள் (2011,மே 1, உழைப்பாளர் பெருநாள்)அன்று , புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில், நம் அன்புக்குரிய தமிழநம்பி ஐயா அவர்கள் பாவாணர் மடல்கள் குறித்து ஓர் அருமையான பொழிவை நிகழ்த்தினார்.
அதன் விரிவை நூலாக நண்பர் சீனு அரிமாப் பாண்டியன் ஐயா வெளியிடவுள்ளதாக அறிந்தேன். அப்பொழிவின் எழுத்துப்படியைத் தன் வலைப்பதிவில் பதிவிடுமாறு தமிழநம்பி ஐயாவைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதை வாசிக்க இணைப்பு இதோ:
http://thamizhanambi.blogspot.com
14.4.11
24.3.11
பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள் - தேவமைந்தன்
18.2.11
தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்!
- தமிழநம்பி
உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) ஆகும்.
தமிழ்நாட்டரசு கடந்த ஆண்டு நடத்திய தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் ஒருங்குகுறியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும்.
ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பு (Unicode consortium) என்னும் அமைப்பே உலகிலுள்ள மொழிகளின் எழுத்துக்களுக்கு ஒருங்குகுறி உருவாக்கிப் பேணுகின்றது. வணிக நோக்குள்ள கணிப்பொறி நிறுவனங்கள் இணைந்து உலக எழுத்துமுறைகளைத் தகைமைப்படுத்த ஏற்படுத்தியதே இவ்வமைப்பாகும். இதில் பல்வேறுநாட்டு அரசுகளும், கணிப்பொறி, மொழி தகுதியுடைய தனியரும் அமைப்பாரும் உறுப்பினராக உள்ளனர். இவ் அமைப்பில் உறுப்பினராக இருந்த தமிழ்நாட்டரசு இடையில் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்துள்ளதாகவும், இப்போது கட்டணம் செலுத்தி உறுப்பினராக முயல்வதாகவும் கேள்விப்படுகிறோம்.
கிரந்தத்திற்கு ஒருங்குகுறி உருவாக்க வேண்டுமென ஒருங்குகுறிக் குழுமக்கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகளில், மூன்று முன்மொழிவுகள் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு விளைவிப்பனவாகும். தமிழைச் சிதைத்து அழிக்கக்கூடியனவாகும்.
அவற்றுள் முதலாவது, காஞ்சி சங்கரமட சிரீரமணசர்மா, 26 கிரந்தக் குறிகளை ஒருங்குகுறித் தகைமைபாட்டுக்குள் கொண்டுவந்து அதனைத் ‘தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ்’ என்று வழங்கவேண்டுமென 10.07.2010 நாளிட்டு அனுப்பிய முன்மொழிவாகும்.
இம் முன்மொழிவும் தமிழுக்குக் கெடுதி செய்யும் பிறவும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் சிலரின் முயற்சியால் பலருக்குத் தெரிய, 2010 அக்குதோபர் பிற்பகுதியில் உலகோர் அனைவர்க்கும் தெரிந்தது.
ஒருங்குகுறி அறிஞர் திரு. முத்து. நெடுமாறன் அளித்த உடனடி விளக்க மறுப்பினை ஏற்று ஒருங்குறிக் குழுமக்கூட்டிணைப்பு சிரீரமண சர்மாவின் மேற்கூறிய முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது.
தமிழுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டாவது முன்மொழிவு, நா.கணேசன் என்பார் (அமெரிக்காவில் ‘நாசா’ வில் வேலை செய்வதால் இவரை நாசா கணேசன் என்றுங் கூறுகின்றனர்), 68 கிரந்தக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக்கள் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்துடன் எகர உயிர்மெய்க் குறி, ஒகர உயிர்மெய்க் குறி ஆகிய இரண்டையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை
கிரந்தத் தொகுப்பில் கலந்து 75 குறிகளைக் கொண்ட கிரந்தத்தமிழ்க் கலவைக் குறியிடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதாகும்.
நா.கணேசனுக்கும் சிரீரமணசர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட தருக்கத்தால் குழம்பிப்போன ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பு, இம் முன்மொழிவை எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், அக் குழுமக்கூட்டிணைப்பு இந்திய நடுவணரசின் உதவியை நாடியது. தமிழைத் தாரைவார்த்துக் கிரந்தத்தை நிலை நிறுத்தும் நா.கணேசன் முன்மொழிவில் சிறசிறு மாற்றங்கள் செய்து, ‘மணிப்பவள மொழிக்காகவும், சமற்கிருத மொழிக்காகவும்’ தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை ஏற்படுத்துமாறு ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பிற்கு இழதிய அரசு தனது முன்மொழிவைத் தந்தது. இம் முன்மொழிவு, மேற்கூறிய 75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் இணைத்து 89 குறிகள் கொண்டிருந்தது. இதுவே, தமிழுக்குக் கேடு விளைவிக்கும் மூன்றாவது முன்மொழிவானது.
நடுவணரசில் இத்துறைக்குப் பொறுப்பாக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.இராசா இவ்வளவு நடந்தும், இவை தாய்த்தமிழின் அழிவிற்கு அடிகோலுபவை என்ற அக்கறை கொண்டிருந்ததாகவே தெரியவில்லை.
நவம்பர் 2010 தொடக்கத்தில் ஒருங்ககுகுறி குழுமக்கூட்டிணைப்பு நடுவணரசின் முன்மொழிவு குறித்து முடிவெடுக்க இருந்த நிலையில், தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலுமிருந்த செய்தியறிந்த தமிழர் கிளர்ந்தெழுந்தனர்.
அறிஞர் இராம.கி., பேரா.இ.மறைமலை, இ.திருவள்ளுவன், விடுதலை கி.வீரமணி ஆகியோர் முயற்சியால் தமிழ்நாட்டரசு 3.11.2010-இல் அறிஞர் கருத்தறியும் கூட்டம் நடத்தியது. இக் கூட்டத்தில் ஒருமனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதன் விளைவாக இந்திய அரசு ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பிற்குக் கிரந்தத்தோடு தமிழ்க் குறியிடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்த கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு மடல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தமிழ்க்காப்பு இயக்கங்கள் சார்பில் சென்னையில், “ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்க்காப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரிய மாநாடு, தமிழ்க்காப்புத் தீர்மானங்களை நிறைவேற்றி தொடர்புடைய அனைவர்க்கும் விடுத்தது.
தமிழ்நாட்டரசு, ஓய்வு பெற்ற நயனகர் திரு. மோகன் தலைமையில் தமிழ் ஒருங்குகுறி அமைப்பு குறித்து அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக் கீழ்க்காணும் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளதாக 18.1.2011-இல் அறிவித்தது.
பேரா.இராசேந்திரன், துணைவேந்தர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்.
முனைவர் வா.செ.குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர்
பேரா. மு.ஆனந்தகிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்
பேரா. பொன். கோதண்டராமன் (பொற்கோ)
முனைவர் ஐராவதம் மகாதேவன் இ.ஆ.ப., (ஓய்வு)
பேரா. சோ.ந.கந்தசாமி, செம்மொழித்தமிழாய்வு நடுவண் நிறுவனம்
பேரா.கே.நாச்சிமுத்து, உலகத்தமிழ்ச்செம்மொழி தொல்காப்பியர் பேரவை
பேரா. அ. அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம்
முனைவர் ப. அர. நக்கீரன், இயக்குநர், தமிழ்இணையக் கல்விக்கழகம், சென்னை
முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி,
எசு.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக் கழகம், காட்டாங்குளத்தூர்
திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர், பாவலர்
திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்
திரு. மணி. மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி)
முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை.
தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில், 27.12.2010 அன்று காஞ்சிபுரத்தில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துக்களைக் கலக்கமுனையும் சங்கர மடத்தைக் கண்டித்துப் பெருமுழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சையில் 9.1.2011-இல் தாளாண்மை உழவர் இயக்கம், தமிழ்மக்கள் புரட்சிக் கழகம் முதலியோரால் தமிழ் ஒருங்குறியில் கிரந்தத் தாக்குதலைக் கண்டித்து மாநாடு நடைபெற்றது.
புதுவையில் 30.01.2011-இல், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு திரு.இரா.சுகுமாரன் முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் 4.2.2011-இல் பெருந்திரளானோர் கலந்து கொண்ட பெருமுழக்க ஆர்ப்பாட்டம் சென்னைப் பொது மருத்துவமனை எதிரில் நடந்தது.
இவை தவிர, மறைமலைநகர், ஈரோடை, சேலம் போன்ற இடங்களிலும் தமிழ் ஒருங்ககுகுறியில் கிரந்தத்தால் விளையவிருக்கும் கேட்டை எதிர்த்துப் பொதுக்கூட்டங்களும் முழக்க ஆர்ப்பாட்டங்களும் பரவலாக நடந்துள்ளன.
கிரந்தக்கலப்பை எதிர்க்கும் தமிழ்க்காப்புப் பரப்புரை ஊர்தி, ஓசூரிலிருந்து சென்னை நோக்கி விழிப்புணர்வூட்டிச் சென்றதைச் செய்தித்தாள்கள் விளக்கின.
சென்னையிலும், தஞ்சையிலும், புதுவையிலும் நடந்த மாநாடுகளில் திருவாளர்கள் இராம.கி, பேரா.தெய்வசுந்தரம், இ.திருவள்ளுவன், ‘தென்மொழி’ பூங்குன்றன் ஆகியோர் செய்திகளைச் சிறப்பாக விளக்கி, வினாக்களுக்கும் விளக்கம் தந்தனர்.
பேரா. தெய்வசுந்தரம், நடுவணரசின் முன்மொழிவு தமிழ்மொழிக்கு எதிரானது மட்டுமன்று, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான வல்லாண்மை நடவடிக்கை என்றும் இந்துமதவெறியின் வெளிப்பாடு என்றும் மாநாடுகளில் விளக்கி கூறிவருகிறார்.
ஐயா இராம.கி., ஒளிப்பட உதவியுடன், எழுத்தில் தொடங்கி, ஒருங்குகுறி குறித்தும் இற்றைச் சிக்கல் குறித்தும் தெளிவாக மாநாடுகளில் விளக்கி வருகிறார்.
தஞ்சைத் தாளாண்மை உழவர் இயக்கம் அறிஞர் கருத்துக்களைத் தொகுத்து “ஒருங்குறித் தமிழ் மெய்யும் மீட்பும்” என்ற தலைப்பில் அரிய நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
இணையத்தில், ‘நயனம்’, ‘வளவு’ வலைப்பதிவுகளில் நாக.இளங்கோவனும் இராம.கியும் விளக்கமாக எழுதியுள்ளனர். இன்னும் ‘தமிழ்நிலம்’, ‘தமிழநம்பி’, ‘புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்’ போன்ற வலைப்பதிவுகளிலும் விழிப்புணர்வுக் கட்டுரைகட்டுகள் எழுதப்பட்டுள்ளன. ‘வல்லமை’ வலைப்பதிவில் பெரியண்ணன் சந்திரசேகரன், செல்வக்குமார், தெய்வசுந்தரம் ஆகியோரின் அரிய விளக்கங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் ‘தென்மொழி’, ‘முதன்மொழி’ போன்ற இதழ்களும் புதுவைத் ‘தெளிதமிழ்’, ‘நற்றமிழ்’ இதழ்களும் கிரந்த ஒருங்குகுறிக் குறியீட்டு முயற்சியின் வழியே தமிழை சிதைத்தழிக்கும் முயற்சியைக் கண்டித்துள்ளன.
தொடர்ந்து தமிழ்நாடெங்கும் நடுவணரசின் முன்மொழிவுக்கு எதிரான இயக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
தமிழநாட்டரசு அமைத்துள்ள குழு 12.2.2011 அன்று கூட இருப்பதாக அறிகிறோம். இக்குழு உறுப்பினர்களில் நா.கணேசனின் முன்மொழிவை ஏற்போர் பெரும்பான்மையராக உள்ளவாறு அமர்த்தப் பெற்றுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டரசு இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து உறுப்பினர்களைத் தேர்ந்துள்ளதா? - என்ற கவலை தமிழர் நெஞ்சை வருத்தி வருகிறது.
நா.கணேசனுக்கு வேண்டியவரும் சமற்கிருதச் சார்புடையவரும் ஆகிய கொங்குப் பகுதித் தொழில்வல்லாரின் உறவினரும் அவருக்குக் கட்டுப்பட்டவர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.
தமிழ்நாட்டரசு தமிழ்க் காப்பில் கவனம் செலுத்தவேண்டும். தமிழ் ஒருங்குகுறித் தொகுப்பில் கிரந்தம் கலக்கக்கூடாது. அவ்வாறே, கிரந்தக் கொத்தில் தமிழ் எழுத்துக் குறியீடுகள் இடம்பெறக் கூடாது. கிரந்த ஒருங்ககுகுறி தனியே இடம்பெற்றால், அதற்கு முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) இடமளிக்கவே கூடாது. இதற்கு மாறாகக் கருத்துரைப்போர் எவரையும் வரலாறு மன்னிக்காது; அவர்கள் தீராப்பழி சுமக்க வேண்டியவர்களாவர் என்பதை வலியுறுத்துகின்றோம்.
இனக் காப்பில் தமிழ்நாட்டரசு இழைத்த இரண்டகத்தால் தமிழர் நெஞ்சில் ஏற்பட்டுள்ள கொதிப்பை, மொழிக்காப்பால் ஓரளவேனும் தணிக்க முனையட்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------
(consortium : an association of several companies – The Compact Oxford Reference Dictionary)
___________________________________________________________________________
நன்றி உரைப்பு: இக்கட்டுரை எழுத உதவியாகச் சில செய்திகளுக்கு விளக்கம் அளித்தது திரு நாக. இளங்கோவனாரின் வலைப்பதிவு. அவருக்கு நம் நன்றி.
அவர் வலைப்பதிவு: http://nayanam.blogspot.com
-------------------------------------------------------------------
Copyright thinnai.com
நன்றி உரைப்பு:‘தமிழநம்பி’வலைப்பதிவு http://thamizhanambi.blogspot.com
20.12.10
இக் கரவுவினை பற்றித் தமிழர்களிடத்தே எந்த விழிப்பும் இல்லாத நிலைஇரங்கத் தக்கதாகும்! தமிழர்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வைஏற்படுத்துவது இன்றைய இன்றியமையாக் கடமையாகும். இப்பொழுது எழுந்துள்ள இச்சிக்கலை நுட்பமாக அறிந்துகொள்ளாவிட்டாலும் தாய்த்தமிழைக் காக்கும் நோக்கில் எச்சரிக்கை உணர்வுடன் செய்திகளைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்றனர்.
இதைப்பற்றிப் புரிந்துகொள்ள கிரந்தம் பற்றியும், கணிப்பொறியில் இப்போ தைய தமிழ்ப் பயன்பாட்டு நிலை பற்றியும், ஒருங்குகுறி, ஒருங்குகுறி கூட்டிணையம், போன்றவை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிரந்தம்: கிரந்தம் ஒரு எழுத்துமுறை; மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன.
அவற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில்கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடுண்டாக்கவும் காரணமாயின.
மேலும், தமிழும் வடமொழியும் கலந்த பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்க் கணிப்பொறி: கணிப்பொறியைத் தமிழ்ப் பயன்பாட்டுக்குக் கொணர்ந்த தொடக்கக் காலத்தில், அவரவரும் ஒரு குறியீட்டு முறையையும், எழுத்துரு(வார்ப்புரு)வையும் பயன்படுத்தினர். இப்படிச் செய்ததால், ஒருவர் எழுதியதை இன்னொருவர் பயன்படுத்த இயலாத நிலை இருந்துவந்தது. அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவே, இன்னொருவரின் கணிப்பொறியிலும் இருக்க வேண்டும் என்ற நிலையே கணிப்பொறிப் பயன்பாட்டில் இருந்துவந்தது. இணையம் வளர்ச்சிபெற்ற நிலையில் தமிழ்ப் பயன்பாட்டிற்கு இது பெரும் சிக்கலாகவும் தடையாகவும் இருந்துவந்தது.
ஒருங்குகுறி (Unicode): மேற்கூறிய சிக்கலும் தடையும் இன்றி அனைத்துக் கணிப்பொறியிலும் தமிழைப் பயன்படுத்தற்கேற்ற ஒரு வசதி தேவைப்பட்டது. இந்நிலையில், உலகின் பல்வேறு மொழிகளின் எழுத்துக்களுக்கும் எண்களைக் கொடுத்து அவ் வெழுத்துக்களை ஒருங்குசேர்த்து ஒரே ஆவணத்தில் பயன்படுத்தஇயலும் வகையில் அமைந்த ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) முறை இச்சிக்கலுக்குத் தீர்வாக அமைந்தது.
இக்கால், பல்வேறு கணிப்பொறி நிறுவனங்களும் எண்மமுறைக் கருவி நிறுவனங்களும் ஒருங்குகுறியை ஏற்றுக்கொண்டு தம் உருவாக்கங்களில் இக்குறியீட்டு முறையைச் சேர்த்துக்கொண்டுள்ளன. புதியதாகத் தோன்றும் பல உருவாக்க நெறிகளும் ஒருங்குகுறியை அடிப்படையாகக் கொள்கின்றன.
ஒருங்குகுறிக் கூட்டிணையம் (Unicode consortium): உலகிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்துக்களையும் எவ்வகைத் தடையுமின்றி எல்லாரும் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் அமைப்பாக ஒழுங்குகுறி கூட்டிணையம் உள்ளது. இவ்வமைப்பில் பல நாடுகளும் தனியாள்களும்கூட உறுப்பினராக உள்ளனர்.
தமிழ்க் கணிப்பொறிக்கான ஒருங்குகுறி குறித்து உரியவண்ணம் அக்கறை கொள்ள வேண்டிய தமிழ்நாட்டரசு தன் உறுப்பாண்மையை உறுதி செய்து கொள்ளாத நிலை வியப்பும் ஏமாற்றமும் அளிக்கக் கூடியதாகும்.
இன்றைய சிக்கல்: இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்தில் ஒப்போலை பெற்ற உறுப்பினராக உள்ளது. இத்துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற 22 மொழிகளையும் இக் கூட்டிணையத்தின் அடைவுப்பட்டியலில் இடம்பெறச் செய்தது; அத்துடன் வழக்கிழந்த வேதசமற்கிருத எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களும் அப்பட்டியலில் இடம்பெறவேண்டுமெனக் கருதியது.
இதன் தொடர்பாக, 6.9.2010-இல் 14 பேர் கொண்ட ஒரு குழுவைக் கூட்டியது.
இக்குழுவில் தமிழறிஞர்களோ, கணிப்பொறி வல்லுநரோ, ஒருங்குகுறித் தெளிவறிவினரோ, தொல்லியல் அறிஞர்களோ இல்லை. அந்தப் 14 பேரில்,தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் இரண்டு பேர். ஒருவர்ஆர்.கிருட்டினமூர்த்தி சாத்திரி; இன்னொருவர் காஞ்சி சங்கரமட ரமணசர்மாஆவர். அக்குழு எடுத்த முடிவினைப் பரிந்துரைத்து இந்திய அரசுத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்கு அனுப்பியது.
இறுதியாக, இந்திய அரசு, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தத்தோடு எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ்எழுத்துக்கள் உள்ளிட்ட தமிழின் 7 குறியீடுகளையும் இணைத்து இடம்பெறும் குறியேற்றத்தை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
தமிழ் எழுத்துக் குறியீடுகளோடு கிரந்த எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும் கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ்எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும், விளைவு தமிழ்மொழிக்குப் பெருங்கேடாகவே இருக்கும். தமிழ் நூல்களும் இதழ்களும் சிறிதளவு தமிழ் கலந்த கிரந்த எழுத்துக்களாலேயே எழுதப்படும்.
அரிசியில் கல் கலந்ததைப் போலன்றிக் கல்லில் அரிசி கலந்த கதையாகும்.
சமற்கிருத மொழி ஒலிவடிவங்களுக்கு உருவாக்கப்பட்ட வரிவடிவங்களான கிரந்த எழுத்துக்களைக் கொண்டே, அக் கிரந்த எழுத்துக்களை உருவாக்கிய தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் வரிவடிவங்கள் புறக்கணிப்புறுமாறும் பயன்பாடின்றிச் செயலிழந்து வழக்கற்றுப் போகுமாறும் செய்யப்படும்.
இவற்றையெல்லாம் எண்ணிக் கவன்ற தமிழறிஞர்கள் - குறிப்பாக இலக்குவனார் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் போன்றோர் - எடுத்த முயற்சியின் பயனாகத் தமிழ்நாட்டரசு, அறிஞர் கருத்தறிய 3.11.2010 அன்று தமிழ்ப் பல்கலைக்கழத்தின் மூலம் 17 பேர் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தியது.
அவர்கள் ஒரு மனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி, தமிழக முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியதன் விளைவாக, ஒருங்குகுறி கூட்டிணையம், 6.11.2010-ஆம் நாள் கூட்டத்தில் கிரந்த எழுத்தோடு தமிழ்க் குறியீடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்ததை 26.2.2011-ஆம் நாள் கூட்டத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.
‘தினமணி’யின் குறை: இந்தச் சிக்கலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், "ஸ,ஷ, க்ஷ, ஜ, ஹ" என்னும் ஐந்து கிரந்த எழுத்துக்களைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழ்நாட்டரசு இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறைக்கு மடல் எழுதியுள்ளதாகக் குறைபட்டுக் கொண்டு எழுதிய ‘தினமணி’ நாளிதழ், அதன் 9.11.2010-ஆம் நாள் ஆசிரியருரையில் தன் வெளிறை வெளிப்படுத்திக் கொண்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முதலிய பலரும் உணர்த்திய பின்னரும்கூட ‘தினமணி’ தன் தவற்றுக்கு வருந்தவில்லை.
கலப்புக்கு முனையக் காரணம்: தமிழின் தூய்மையைக் கெடுத்து, வளங்குன்றச் செய்து, சிதைத்து, காலப்போக்கில் தமிழை அழித்துவிடவேண்டு மென்ற எண்ணமே, கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக் குறியீடுகளைக் கலக்கப் பரிந்துரைத்ததற்குக் காரணமாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறதன்றோ?
கிரந்தத்தை இந்திய மொழிகள் அனைத்துக்குமான எழுத்தாக ஆக்கி ஒரே வரிவடிவத்தைக் கொண்டு பல இந்திய மொழிகளிலும் மின்னஞ்சல், இணைய இதழ்கள் இடம்பெறச் செய்யலாமென்ற எண்ணமும் காரணமாகக் கூறப்படுகிறது. உலக மொழிகள் அனைத்திற்குமான ஒரே எழுத்துவடிவம் (International phonetic alphabet -IPA) உருவாகிப் பயன்பாட்டில் உள்ள நிலையில், இக் காரணம், பெரிய பூனையும் குட்டிப் பூனையும் போகவர கதவில் பெரிய துளையும் சிறிய துளையுமாக இரண்டு துளைகள் போட்ட கதையை நினைவு படுத்துவதாக உள்ளது.
கலப்பால் விளையும் கேடும் காப்புணர்வின் தேவையும்: ஏற்கெனவே, தமிழரின் விழிப்பின்மையால், சமற்கிருத ஒலிப்புண்டாக்கவெனக் காரணம் கூறி, கிரந்த எழுத்துக்கள் ஸ, ஷ, ஜ, ஹ - வுடன் கூட்டெழுத்துக்கள் க்ஷ, ஸ்ரீ - யும் தமிழிற் கலக்கப்பட்டதால் நேர்ந்திருக்கும் சிதைவினின்றும் தமிழை மீட்கவே, மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தோற்றித் தமிழ் மீட்சிக்குப் பாடுபட்டார். மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் இலக்குவனார், அறிஞர் வ.சுப.மா., பாவேந்தர், அறிஞர் அண்ணா போன்றோரின் இடைவிடாத முயற்சியால் தமிழ் மென்மேலும் சிதைவது தடுத்தாற்றப் பெற்று ஒரளவு மீட்சி கண்டுள்ளது.
இப்போது, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் கொத்தில் 7 தமிழ்க் குறியீடுகள் கலந்தால், தமிழ் ‘கிரந்தமொழி’யாக்கப்படும் உலகின் மூத்த மொழியின் வரிவடிவம் கிரந்தமாகிப் போகும். இதனால், பிற்காலத்தில் சமற்கிருதத்திலிருந்து அல்லது சங்கத மொழியிலிருதுதான் தமிழ் பிறந்தது என்றும் சிலர் நிறுவத் துணிந்தாலும் வியப்பதற்கில்லை.
இக் கிரந்த எழுத்துக்கள் தமிழிற் கலப்பதைத் தடுக்கவே, ஒல்காப்பெரும்புகழ் தொல்காப்பியம், "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடுபுணர்ந்த சொல்லா கும்மே" என்ற நூற்பாவின் வழி காப்புச் செய்ய முனைந்தது. ‘நன்னூல்’ பவணந்தியாரும் தற்பவம் தற்சமம் கூறி இரண்டின் வழியும் கிரந்த எழுத்து வராதிருக்கத் தடையிட்டார். தொல்காப்பியத்திலும், கழக இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையிலும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீறாப்புராணம், வீரமாமுனிவரின் எழுத்தோவியங்கள், நாலாயிரப் பனுவல்கள் முதலானவற்றிலும் கிரந்த எழுத்துக்கள் இடம்பெறவே யில்லை.
தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால் தமிழ், பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற வரலாறற்ற குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.
எம்மொழியிலும் எல்லாமொழிப் பெயர்களும், எல்லா ஒலிப்பும் இல்லை. சீனஎழுத்தின் ஒலிப்பு வேறு எந்த மொழியிலுள்ளது? ஒரு மொழி தன் இயல்பிற்கேற்காத ஒலியை ஏற்பின், நாளடைவில் சிதைவுற்று மாற்றமடைந்து வேறொரு மொழியாகிவிடும். இதற்கு, மலையாள மொழியே எடுத்துக் காட்டாகும். தமிழ் என்பதை ‘டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தாமில், தமிஷ், தமிஸ்’–என்றெல்லாம் தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்; பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ழ, ற, ண முதலிய தமிழ் எழுத்துக்களை ஏற்கக்கூடாது என்று கேட்பதா?
தமிழரின் இன்றைய கடமை: தமிழில் கிரந்தம் கலந்தாலும் கிரந்தத்தில் தமிழ் கலந்தாலும் சிதைவும் அழிவும் தமிழுக்கு நேர்வது உறுதி என்பதால் உலகெங்கணும் உள்ள தமிழர், ஒருங்குகுறியில் தமிழுக்கு உரிய இடத்தில் கிரந்த எழுத்துக்கு இடமளிப்பதற்கும், கிரந்தத்தோடு தமிழ் எழுத்துக்களைச் சேர்ப்பதற்கும் தம் எதிர்ப்பை மிக உறுதியாக வெளிப்படுத்தி அம முயற்சியைத் தடுக்கவேண்டும்.
கல்வெட்டு, செப்பேடு, ஈடு உரைகள் ஆராய்ச்சிக்குக் கிரந்த எழுத்தின் தேவை குறித்தெல்லாம் தொடர்புடைய பல்துறை அறிஞர் குழு அமைத்து அமைதியாக முடிவெடுக்கலாம்.
தமிழ்நாட்டரசு, இனக்காப்பில் இழைத்த இரண்டகம் தமிழர் நெஞ்சில் மாறாப் பெருவடுவாக நிலைத்திருக்கின்றது. இப்போது, மொழிக் காப்பிலும் கோட்டைவிட்டுப் பழிதேடிக் கொள்ளக் கூடாதென்று நல்லுணர்வோடு வலியுறுத்துகின்றோம்.
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். – (குறள். 466)
--------------------------------------------------------------
--
தமிழநம்பி
கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!
15.10.10
சாமிகிரி சித்தர் மறைவும் தொடர்புடையதொரு சிந்தனையும்
11.10.10
எத்தகைய உரையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்? - முனைவர் க. தமிழமல்லன்
1.8.10
ஆனந்த விகடனுக்கு நன்றி!
19.5.10
பரிதிமாற்கலைஞர் தம் பெயரைத் தனித்தமிழ்ப் பற்றினால் மாற்றிக்கொள்ளவில்லை
5.5.10
சிங்காரவேலர்
- முனைவர் க.தமிழமல்லன்
தமிழர் இனத்தின் தலைவர்தாம் யாரோ?
இமிழ்கடல் சிங்காரர் ஏத்து.
உரத்தால் பயிர்தழைக்கும் முற்போக்கு வேலர்
தரக்கொள்கை நாடுயர்த்தும் தான்.
புதுவுலகம் காணப் பொதுவுடைமைக் கொள்கை
உதவுமெனல் வேலர் உரம்.
சிந்தனைச் சிற்பியாம் சிங்கார வேலரே
நம்தமிழ் நாட்டுக்குத் தூண்.
பெரியார்க்குச் சிங்கார வேலர் பெரியார்
உரியாரின் மாண்பை உயர்த்து.
கதிரிருக்க வெண்ணிலவைக் கைதொழுதல் ஆமோ,
எதிரிருக்கும் ஏந்தலைத்தான் ஏத்து.
மறைமலை யாரைப்போல் மானமீட்பர் வேலர்
குறைதீர்க்க வந்தார் குறி.
அறிஞர்க் கறிஞராய் ஆற்றல் வினையால்
நெறிஞராய் வாழ்ந்தார் நிறுத்து.
சிங்கார வேலர்தான் சீர்திருத்தக் காரர்நம்
பங்காளர் ஆவார் பகர்.
பொதுவுடைமைக் கொள்கையை நல்வேகத் தெம்பாய்
எதிர்ப்பிருக்கக் காத்தார் அவர்.
மீனவர்கள் எல்லாரும் மீட்சிபெற்று மேலெழுதல்
மானத்தின் வாழ்வாய் மதி.
புரட்சிப் பரிசென்றே பொங்கரிமா சிங்காரர்
புத்தூழி எண்ணத்தைப் போற்று.
Singaravelar photo transparency - Thanks to: http://www.pragoti.org
