18.7.08

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழி மீள்வது எவ்வாறு? --தேவமைந்தன்

புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆய்வியல் நிறுவன நூலகத்தில் ‘அம்ருதா’ என்ற திங்களிதழைப் பார்க்க வாய்த்தது. அதில், தோப்பில் முகம்மது மீரான் எழுதியிருந்த “21ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய மொழிகளில் குறிப்பாகத் தமிழ் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற கட்டுரை[சூன் 2008; பக்.17-20] என் கருத்தைக் கவர்ந்தது. உலகமயமாதலால் தமிழ்மொழி அடைந்துவரும் எதிர்நிலை விளைவும் நாடு, நகரங்களை மட்டுமல்லாமல் தீவுகளைக் கூட அது விட்டு வைக்காமையும் விரிவாக அதில் விளக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இலட்சத் தீவில் உள்ள மொழிநிலை அதில் மிகுந்த இடம் பெற்றிருந்தது. இலட்சத் தீவில் ‘ஜெசரி மொழி’ பேசப்படுகிறது. இது முற்றிலும் பேச்சுமொழி. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகியவற்றின் கலப்புமொழி இது. பேசும்பொழுது மட்டுமே இதை இலட்சத் தீவு மக்கள் பயன்படுத்துகின்றனர். எழுதவேண்டும் என்று வரும்பொழுது, மலையாள மொழியைத்தான் அந்த மக்கள் பயன்படுத்துகின்றார்கள். உலகமயமாதலின் விளைவாக இலட்சத் தீவுக்குள் ஆங்கிலம் முதன்மையிடம் பெற்று, ஆங்கிலமொழிவழிக் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தம் மக்களைப் பெற்றோர் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழைப் பழைய மொழி என்று அங்கு மதித்த நிலை மாறியுள்ளதுடன் மலையாளத்தையும் ஆகக் கலப்பாக எழுதத் தொடங்கி விட்டார்கள் இலட்சத் தீவு மக்கள். “ஏன் தூய மலையாளத்தில் நீங்களெழுதக் கூடாது?” என்று தோப்பில் முகம்மது மீரான் கேட்டிருக்கிறார். “இலக்கியம் வாயிலாக அல்லாமல் எங்கள் மொழியைக் காப்பாற்றுவது எப்படி?” என்று அவர்கள் எதிர்வினா எழுப்பியிருக்கிறார்கள். இங்கே நாம் கவனிக்க வேண்டிய முகமையான செய்தி என்னவென்றால், ஏற்கெனவே தீவுகளின் கலப்புப் பேச்சு மொழியில் இடம்பெற்றுள்ள தமிழுக்கும் உலகமயமாதலின் முடுக்கத்தால் இன்னல் நேர்ந்திருக்கிறது என்பதே. மொரீசியசு, ரெவ்யூனியன் முதலான தீவுகளின் பேச்சுமொழியிலும் கூட பிரெஞ்சு மொழிதான் தலைமை செலுத்தி வருவதை நாம் அறிவோம். ஆங்கில மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலைப்படும் நம்மவர்கள் பலர், பிரெஞ்சு மொழியின் ‘ஆதிக்கம்’ குறித்துக் கவலையே படுவதில்லை. தமிழ் மேல் எந்த மொழி ஏறி அமர முயன்றாலும் விழிப்புடன் எதிர்ப்பதும் அந்தத் தாக்குதலை முறியடிப்பதும்தானே தமிழரின் கடமைகளாக இருக்க வேண்டும்? திராவிட இயக்கங்கள் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்கிலத்தை வளர்க்கின்றன என்று குணா சொன்னபொழுதும் எழுதிய பொழுதும் திராவிட இயக்கங்களின் மேல் கொண்ட பற்றால் அவரை எதிர்த்தோம். ஆனால் அவர் சொன்னது இன்று பேருரு எடுத்திருப்பதைத்தானே பார்க்கிறோம். ஆங்கிலத்தை முனைந்து பரப்புபவர்களும் திராவிட இயக்கங்களின் நெருங்கிய நட்பில் திளைப்பவர்களுமான ஊடக முதன்மையர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ‘அறிவுக்கனியைத் தொடுவானேன்?’ என்ற ஆய்வுநூலை குணா அண்மையில் படைத்திருக்கிறார். தமிழர்களிடையே இப்பொழுது உலகமயமாதலின் முதன்மைக்கூறுகளுள் முதன்மையான ‘வணிக மனப்போக்கு’ ஓங்கியுள்ளது. ஒருவர் தமிழரா, தமிழறிஞரா என்பதைவிட - “அவரால் எனக்கு என்ன ஆதாயம்?” என்ற மனக் கணக்கே விஞ்சியுள்ளது. யாருடன் பழகினால் என்பது அன்று... யாருடன் பேசினால் தனக்கு ஆக்கம் அதிகம் வரும் என்ற அளவுக்கு இன்று போயிருக்கிறார்கள் தமிழர்கள். தங்களுக்குப் பொருள் அடிப்படையில் பயன்படாதவர்களை ‘வீண்’ என்று தமிழில் சொல்லவும் விரும்பாமல் ‘வேஸ்ட்’ என்கிறார்கள் ஆங்கிலத்தில். உலகமயமாதல், சிறுவணிகர்களை அழிப்பதுடன் மட்டும் நின்று விடாது. ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிடும் - என்று சுருக்கமாக இதைச் சொல்லலாம். இன்றைய நிலையில் தமிழ் பேசும் தமிழர் என்பவர்களே உலக மக்கள்தொகை அளவில் அருகி வருகிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. “உங்கள் தமிழில் அயன்மொழிச்சொற்கள் பல கலந்திருக்கின்றன. என்னுடன் பேசுவதானால் நீங்கள் தனித்தமிழில்தான் உரையாட வேண்டும்!” என்று சொன்னால், பேரினக் கோட்பாட்டினருக்குத்தான் அது ஆக்கமாய் முடியும். இன்றைய உலகில் பல நாடுகளில் தமிழ் குறித்துப் பிறமொழியினர் சிந்திக்குமாறு செய்துள்ள ஈழத்தமிழரின் மொழிநடையைக் கவனித்தோமானால் இது புரியும். எழுத்தாலும் பேச்சாலும் எவ்வகையாலும் தமிழர் தம்முள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வைத் தோற்றுவிக்க எண்ணவும் கூடாது. பழைய போக்கைத் தொடர்வோமானால், ‘புதிய பூத’மான உலகமயமாதல், அதையும் தனக்கு ஆக்கமாக வளைத்துக் கொள்ளும். இன்னொன்றைக் கூட நீங்கள் கவனிக்கலாம். இப்பொழுதெல்லாம் மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் பற்றி நிறைய எழுதவும் பேசவும் படுகின்றன. நான் எழுதிய ‘மொழிபெயர்ப்புலகில் தங்கப்பா’ போன்றன்று; வேறுவகைகளில். “தமிழ்ப் புலவர், தமிழ்ப் பேராசிரியர் என்றால் மற்றவர் படைப்புகளில் உள்ள பிழைகளைச் சுட்டுபவர்கள்; தாமே சொந்தமாகப் படைப்புகளை உருவாக்கத் தெரியாதவர்கள்” என்ற கருத்து பிரான்சு முதலான தமிழர் மிகுந்து வாழும் நாடுகளில் உலவுகிறது. புலவர்கள், பேராசிரியர்கள் அல்லாதவர்களும் அந்த முன்னொட்டுகளைப் பொருத்திக் கொள்வதும் அந்நாடுகளில் இயல்பாகியுள்ளது. “பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் இலக்கியங்களைப் பெயர்ப்பவர்கள்தாம் தகுதியுள்ளவர்கள்; தமிழுக்கு ஆக்கம் தருபவர்கள்” என்ற கருத்து அங்கும் இங்கும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரெஞ்சுக்காரர், பிரெஞ்சில் தன் ஆக்கங்களைப் படைக்கின்றனர்; ஆங்கிலேயர் முதலானவர்களும் அவ்வாறே. தமிழில் தம் ஆக்கங்களைப் படைப்பவர்களும் அப்படிப்பட்டவர்கள்தாமே? பிரெஞ்சுக்காரர் எவராவது, “தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்ப்பவர்கள்தாம், பிரெஞ்சில் புலமையுள்ளவர்களை விட உயர்ந்தவர்கள்” என்று பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஏன் அவர்கள் ஆண்டவர்கள். இவர்கள் ஆளப்பட்டவர்கள். இப்பொழுதும் அந்த நாடுகளில் ஈழத்தமிழர் போலல்லாமல், அடிமையுணர்ச்சியுடன் ‘விளங்கு’பவர்கள். உலகமயமாதல், குடியேற்ற உணர்ச்சியை(காலனியாதிக்கத்திலிருந்தவர்களின் உணர்ச்சியை) ஊக்குவிக்கிறது. இதுபோலும் அயன்மைகள்தாம் அது தரும் அடிமை ஊழியத்தைத் திறம்படச் செய்ய முடியும். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகத் தமிழ்வழிக் கல்வி, தமிழில் நன்றாகப் பேசும் திறம் - இவைதாமே இருக்க வேண்டும்? கணிப்பொறி நிறுவனங்களிலும், கணினிமுறைசார் வணிக நிறுவனங்களிலும் கேட்டுப் பாருங்கள். ஆங்கிலவழிக் கல்வி, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறம் இவற்றுக்கு மாற்றுகளாகப் பிரெஞ்சில்/செர்மனியில்/சுபேனியத்தில் நன்றாகப் பேசும் திறத்தை அவர்கள் முன்வைப்பார்கள். இந்த மொழிகள்தாம் இப்பொழுது உலகமயமாதல் என்ற ஆசிரியர்முன் தம்முள் யார் சிறந்த மாணவர் என்று போட்டி போடுகின்றன. ‘சட்டாம்பிள்ளை’யாகவும் முந்திச் செல்லும் குதிரையாகவும் ஆங்கிலமே இன்றுமிருப்பதைப் பார்க்க முடிகிறது. உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து நம் தமிழ்மொழியை மீட்பது, ஒவ்வொரு தமிழருக்கும் கடமை மட்டுமன்று; உரிமையுமாகும். அதற்கு ஒரே வழி, தம்முள் பலவகைகளில் மேற்கொண்டு வரும் குழு - உட்குழுப் பூசல் மனப்பான்மையைப் போக்கிக் கொண்டு, அல்லது தற்காலத்துக்கேனும் சற்று விட்டுக் கொடுத்து, உலகமயமாதலின் போக்குக்கேற்பத் தமிழ்வழிக் கல்வியை உடனடியாக எல்லாத் துறைகளுக்கும் கொண்டுவர வேண்டும். அதற்கு ஒத்துவராத கட்சிகளைத் தேர்தலின் பொழுது பின்னிறுத்த வேண்டும். ஏதேதோ விளக்கங்களை முன்வைக்கும் அரசியல்வாணருடன் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல், “முதலில் தமிழை முழுமையான கல்விமொழியாக்குங்கள்! பிறகு மற்றவற்றைப் பேசுங்கள்!” என்று வலியுறுத்தும் மனநிலையைத் தமிழர் வளர்த்துக்கொள்ள வேண்டும். “கோடி கோடியாக எதெதெற்கோ செலவிடுகிறீர்களே! ஆட்களைக் கூட்டுகிறீர்களே! தமிழ்வழிக் கல்விக்கென்று மாநாடு நடத்துங்கள்! தனிமாந்த விளம்பரம் விடுத்து, தமிழ்வழிக் கல்விக்கு உங்கள் தொலைக்காட்சி வரிசைகளின் பரப்புரைகளைத் திருப்புங்கள்!” என்று தமிழர் ஒவ்வொருவரும் அவர்களிடம் வலியுறுத்த வேண்டும். அப்பொழுதுதான் உலகமயமாதலின் தாக்கத்தினூடும் தமிழ் தழைக்கும். ******** நன்றி: தமிழ்க்காவல்.நெட்

16.6.08

ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர் - தேவமைந்தன்

'ஆர்.கே.நாராயண்' என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்டவர் ஆர்.கே.நாராயணன். அவர் பெயரைச் சொன்னாலே அவர் எழுத்தில் வெளிப்பட்ட 'ஹ்யூமர்' எனப்படும் மெல்லிய நகைச்சுவைதான் நினைவுக்கு வரும். சென்ற அறுபதுகளிலேயே பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களில் அவருடைய படைப்புகள் தகுந்த இடம்பெற்றன. தன்னுடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டதில் அவருக்கு முழு மகிழ்ச்சி இல்லைதான். 'வழிகாட்டி' என்று பொருள்படும் 'The Guide' என்ற அவருடைய நாவல், சென்ற எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளுக்குள்ளேயே தமிழ், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், ருஷ்யன், சுவீடிஷ் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. அதன் இந்தியப் பதிப்பு மட்டும் அப்பொழுது ஒன்றரை லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்றுத் தீர்ந்ததாம். ஆர்.கே.நாராயணன் "சாதாரணமாக எழுதியதாக"க் குறிப்பிட்டதும் 1935ஆம் ஆண்டில் வெளியானதுமான அவருடைய முதல் நாவல் 'சுவாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ்'(Swami and Friends), தமிழ் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனந்த விகடன் இதழில், 'சுவாமியும் சிநேகிதர்களும்' என்ற தலைப்பில், கிருஷ்ணசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அந்த நாவல் தொடராக வெளிவந்து, தமிழ் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. அந்த நாவலில் வரும் சுவாமி பத்து வயதே நிரம்பிய சிறுவன்; வீட்டுப்பாடங்கள் எழுதுவதின் கொடுமையை வெறுத்து, தன் நண்பர்களுடன் வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவன். ஆனாலும் தான் அன்றாடம் சந்திக்க நேரும் ஆசிரியர்களிடமும் பெரியவர்களிடமும் கூடுமானவரை ஒத்துப்போகிறவன். 'எம்.சி.சி.' என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட 'மால்குடி கிரிக்கெட் கிளப்'தான் அவனுடைய பேரார்வத்தைக் கொள்ளை கொண்டது. அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து தோற்றுவித்ததல்லவா அது? தேர்வுகள் எல்லாம் முடிந்து, கோடை விடுமுறை விடுகிற காலமே சுவாமியின் கனாக்காலம். 1930இல், நம் இந்திய தேசத்தில், பிரிட்டிஷ் அடக்குமுறையின்கீழ் பல தேசபக்தர்கள் சிறைசெய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் 1930, ஆகஸ்ட் 15ஆம் நாளன்று சரயு நதியின் வலக்கரையில் மால்குடியைச் சேர்ந்த இரண்டாயிரம் குடிமக்கள் கூடினர். மும்பையில் கெளரி சங்கர் என்ற விடுதலைப் போராட்ட வீரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துக் கூடிய கூட்டம் அது. கதராடை அணிந்தவரும் கம்பீரமும் மிக்கவருமான பேச்சாளர் ஒருவர், அங்கே, உணர்ச்சிமிக்கதோர் உரையாற்றினார். மால்குடி மக்கள் அதைக் கேட்டு உள்ளம் உருகினர். அவர்களுக்கிடையில் நம் சுவாமிநாதனும் அவன் நண்பன் மணியும் இருந்தனர். பத்து வயதே ஆன சிறுவன் சுவாமிநாதன் (நாவலில் கதைசொல்லுதலின்பொழுது 'சுவாமிநாதன்' என்ற முழுப் பெயரும், உரையாடல்களின்பொழுது 'சுவாமி'' என்ற சுருக்கப் பெயரும் வரும்) பேச்சாளர் ஆத்திரத்துடன் சொன்ன ஒன்றைக் கூர்ந்து கவனித்தான். அவர் சொன்னார்: "ஏன் நாம் அச்சப்பட்டுப் போனோம்? அடிமைகள் ஆனோம்? நம்மிடம் எந்த விதக் குறையுமில்லையே! பிரிட்டிஷ் நிர்வாகம் இப்படி எல்லாம் நம்மை ஆக்கி விட்டிருக்கிறது. நன்றாகக் கேளுங்கள். நீங்கள் ஒன்றும் அதிகமாகச் செய்துவிட வேண்டாம். ஒவ்வோர் இந்தியனும் இங்கிலாந்தின் மீது ஒரே நேரத்தில் எச்சில் உமிழ்ந்தால்கூடப் போதும்; இந்திய மக்கள் எல்லோரும் உமிழும் அந்த அளவு எச்சில் போதும், இங்கிலாந்தையே மூழ்கடித்துவிட....." சுவாமிநாதன் அதைக் கேட்டு வியப்பில் மூழ்கி, நண்பன் மணியிடம் அது குறித்து விவாதித்தான். முதலில் மணி சுவாமிநாதனை எச்சரித்துப் பார்த்தான். பயனில்லை. சுவாமிநாதன், இந்திய மாதாவையும் காந்தி அடிகளையும் சுதந்திரப் போராட்டத்தையும் வாழ்த்திக் 'கோஷம்' போட்டு, அடுத்தடுத்து இரண்டு பள்ளிகளிலிருந்து விரட்டியடிக்கவும் படுகிறான். கடைசியில், வேறுவழியே இல்லாமல், வீட்டை விட்டும் ஓடுகிறான். இப்படி 'Swami and Friends' செல்கிறது. சிறுவர் உலகத்தை, சிறுவர்களின் பார்வையிலிருந்தே சித்தரிக்கும் கதைசொல்லலினூடு, அதற்குப்பிறகு அவர்கள் ஆகவுள்ள பெரியவர்களின் உலகத்தையும் மால்குடியைக் களமாகக் கொண்டு ஆர்.கே.நாராயணன் நுட்பமாக இந்த நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். கிரகாம் கிரீன், அந்த நாவலைப் "பத்தாயிரத்தில் ஒரு புத்தகம்" என்று பாராட்டினார். முதற் பதிப்பு, லண்டனில் ஹமிஷ் ஹாமில்டன் நிறுவனத்தால் 1935ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல் இந்தியப் பதிப்பு 1944இல் வந்தது. 1993இல் இருபதாவது மறுஅச்சு வந்தவரை எனக்குத் தெரியும். சென்ற எண்பதுகளின் முதற்பகுதியில் ஆர்.கே.நாராயணனின் 'The Painter of Signs' போலிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. தன் நாவல்களின் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆர்.கே.நாராயணனுக்கு மகிழ்ச்சி இல்லை என்று முதலிலேயே குறிப்பிட்டேன். காரணத்தை அவரே நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். "மொழிபெயர்ப்பைப் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. பொதுவாகவே என் நாவல் மொழிபெயர்ப்புகளை நான் வாசிப்பதுமில்லை. ஒரு நாவலில் உள்ள ஹியூமரை, மொழிபெயர்ப்பாளரால் இன்னொரு மொழியில் எப்படிக் கொண்டு வர முடியும்? ஆனால் கருத்தோட்டத்தைத் தெரிந்துகொள்ள மொழிபெயர்ப்பு தேவைதான். ஐரோப்பிய மொழிகளில் என் நாவல்களின் மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள்." ஆர்.கே.நாராயணன் தன் பெரும்பாலான நாவல்களில், மால்குடி என்ற ஊரையே களமாகக் கொண்டதன் காரணம் என்ன? "சின்ன ஊர், குறைச்சலான ஜனங்கள். கடைக்குப் போய் சாமான் வாங்கிய பிறகு காசு குறைந்தால், நாளைக்குத் தருகிறேன் என்று வாங்கிய சாமான்களை எடுத்துக் கொண்டு வந்துவிடலாம்.." என்று இது குறித்து ஆர்.கே.நாராயணன் நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார். "The Painter of Signs'க்கும் 'A Tiger for Malgudi'க்கும் இடையில் ஏழாண்டுகள் இடைவெளி விழுந்தது. அவரின் படைப்புத் திறன் குன்றிவிட்டதோ என்று திறனாய்வாளர்கள் ஐயம் கிளப்பினர். அது ஒன்றும் புதியதல்ல, ஏற்கெனவே 'The Vendor of Sweets'க்கும் 'The Painter of Signs'க்குமிடையில் கிட்டத்தட்ட பத்தாண்டு இடைவெளி இயல்பாகவே ஏற்பட்டது. 'A Tiger for Malgudi' மீண்டும் அவரைப் புகழ் ஏணியில் ஏற்றியது. 'A Tiger for Malgudi' நாவலில், முதன்மைப் பாத்திரமாய் வரும் ராஜா என்கிற புலியின் இயற்கையான காட்டு வாழ்க்கை சொல்லப்படுகிறது. இளைய 'ராஜா'வின் கானக வாழ்க்கை, குறிப்பாக மெம்ப்பி காடுகளின் விலங்குகள் உலகத்தில் அது வலிமை மிக்க புலியாக உருவாகும் விதம் நாவலில் நன்கு விளக்கப் பட்டிருக்கிறது. பெண்புலி ஒன்றுடன் போர்செய்து தோற்கடித்து அதைத் தன்னுடையதாக்கி. பின்னர் நான்கு புலிக்குட்டிகளுக்குத் தந்தை ஆகிறது ராஜா. கேவலமானவர்களும் குரூரமானவர்களுமான மனிதர்களின் கைகளில் அந்தப் பெண்புலியும் குட்டிகளும் மாட்டிக்கொண்டு இரையாகின்றன. தன் துணையையையும் குட்டிகளையும் இழந்துவிட்ட நிலையில், எவ்வளவுதான் எச்சரிக்கையுடனிருந்தும் 'கிரேண்ட் மால்குடி சர்க்க'ஸின் உரிமையாளரான 'கேப்ட'னிடம் சிக்கிக் கொள்கிறது. சர்க்கஸ் உலகில் அவனால் தன்மேல் சுமத்தப்படும் வேலையைச் சிறப்பாக நிறைவேற்றும் அளவு கடுமையான பயிற்சிகளைப் பெறுகிறது. மேலும், திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடமும் அதை நடிக்க வைத்துப் பணம்பெற 'கேப்டன்' ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்கிறான். அடுத்து, ராஜாவை மேலும் ஒடுக்கிப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டாக, 'உலோக நாக்கு'('metal tongue') எனப்படும் கொடிய கருவியைப் பயன்படுத்தவும் தொடங்குகிறான். ராஜாவுக்குப் பழைமை - கானக நியாயம் - திரும்புகிறது. கொடுமையும் பேராசையும் நிரம்பிய 'கேப்ட'ன் மேல் பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டு, அந்த இடத்தை விட்டே அகன்று விடுகிறது. பள்ளிக்கூடக் கட்டடம் ஒன்றில் தஞ்சம் அடைகிறது. அங்கு, சுவாமி என்கிற தனக்கான குருவைச் சந்திக்கிறது. இந்த சுவாமி என்ற கதைப்பாத்திரம், ' Swami and Friends' நாவலில் இடம்பெறும் சுவாமிநாதன் என்ற சுவாமியேதான். அவன் இப்பொழுது நன்கு வளர்ந்து பெரியவனாயிருக்கிறான். சரயு நதி பாயுமிடத்திற்கு அருகிலுள்ள எல்லம்மன் தெருவில்('The Painter of Signs' நாவலில் ராமன் தன் அத்தை வீட்டில் வாழும் தெரு) சுவாமி தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்கிறான். 'வெள்ளையனே வெளியேறு'(Quit India movement) இயக்கத்தில் மிகவும் சிறப்பாக அவன் பங்கேற்று, பாராட்டப் பெற்றிருக்கிறான். ஒருநாள் நள்ளிரவில் சித்தார்த்தன்போல் வீட்டைவிட்டே வெளியேறி விடுகிறான். உலகில் நன்மையை நிலைநாட்டத் தன் எஞ்சிய வாழ்வை அர்ப்பணிக்கிறான். அவனைத்தான் தன் குருவாக ராஜா என்னும் அந்தப் புலி ஏற்கிறது. ஒவ்வொரு படிநிலையிலும் அவனிடம் கீழ்ப்படிந்து நடக்க அது கற்றுக் கொள்கிறது. அதற்கு வயதாவதால், 'சமாதி நிலை'யை அது அடையும் முன்பு, அதன் பாதுகாப்புக்காக விலங்குக் காட்சிச் சாலைக்கு அதன் குருவான சுவாமி அனுப்பி விடுகிறான். தன் சீடனான ராஜாவை அடுத்த பிறப்பில் சந்திக்கப் போவதாகவும் சுவாமி நம்புகிறான். இந்த நாவல், அது படைக்கப்பெற்ற காலம் வரை இல்லாத புதிய கோட்பாட்டைக் கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் சில வீடுகளின் கூடத்தில் பார்த்தீர்களானால், சுவர்மேல் ஒரு 'வீரமான' படம் தவறாமல் மாட்டப்பட்டிருக்கும். மெய்யாக வேட்டையாடினாரோ இல்லையோ, அந்த வீட்டின் தலைவர், தன் வலது கையில் ஒரு வேட்டைத் துப்பாக்கியைத் தாங்கிக் கொண்டு, இறந்து கிடக்கும் புலி ஒன்றின் மேல் தன் பாதத்தை வைத்து நின்று புகைப்படத்துக்குப் 'போஸ்' கொடுத்திருப்பார். இது, சாதாரணமான வீடுகளில் கண்ட காட்சி . 'அசாதாரணமானவர்கள்' வீடுகளில், வளைந்த மாடிப்படிகளுக்கு முன்னால் உயரமான பீடமொன்றில் உண்மையான புலியே போல இறந்த 'பாடம்' பண்ணப்பட்ட புலி அமர்ந்திருக்கும். அப்படிப்பட்ட காலகட்டத்தில், பிற்காலத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோய்விடும் என்பதைக் கவனத்தில் இருத்திக் கொண்டோ என்னவோ, மனிதருக்கும் புலிகளுக்கும் இருக்க வேண்டிய இயற்கை இணக்கத்தை ஆர்.கே.நாராயணன் இந்த நாவலில் வலியுறுத்தியிருக்கிறார். அதனால்தான், மனிதர்கள் கொண்டிருக்க வேண்டிய நேயத்தை விடவும் அதிகமான ஆன்மநேயத்தை இந்த நாவலின் தலைமைப் பாத்திரமான ராஜா என்கிற புலி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ராஜா, புலி என்ற விலங்கு நிலையிலிருந்து உயர்மனித நிலைக்கு மாற்றம் பெற்றிருக்கிறது. தனக்கு என்றைக்கு உன்னதமான உய்திநிலை(salvation) கிடைக்குமோ என்று நாடி ஏங்கியிருக்கிறது. உண்மையில், நாலாசிரியர்தான் ராஜாவுக்குள் புகுந்து கொண்டு தன்னுடைய வெவ்வேறான வாழ்க்கை அனுபவங்களையும் அவற்றின்பொழுது தான் அடையும் வெவ்வேறான மனநிலைகளையும் புலப்படுத்துகிறார் என்பதை வாசகர் புரிந்துகொண்டு வாசித்துச் செல்ல முடிவது, இந்த நாவலின் சிறப்பம்சங்களுள் ஒன்று. ஆர்.கே.நாராயணனின் முதிர்ந்து பக்குவம் மிக்க வயதில் 'The Painter of Signs' நாவல் எழுதப்பெற்றது. விடுதலைக்குப் பிறகு மால்குடியில் ஏற்பட்ட மாற்றங்கள் அதில் பதிவு செய்யப்பட்டன. முதலிலேயே வெளிவந்ததும், மால்குடி நாவல்களில் இரண்டாவதுமான 'The Dark Room'இல் வெளிப்பட்டுள்ள குடும்ப வாழ்க்கையின் கூறுபாடுகளும் பெண்ணின் சமூக உறவு நிலைகளும் 'The Painter of Signs'இல் மிகவும் மாற்றம் கண்டுள்ளன. திரு எஸ்.கிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணலில் அது குறித்து ஆர்.கே.நாராயணன் கூறியுள்ளார். " 'The Dark Room' நாவலில், சமூகத்தில் பெண் எவ்வாறு ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது என்பதைத் தெரிவிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினேன். இந்த('The Painter of Signs') நாவலில் நான் சொல்லியிருக்கும் பெண்(Daisy), ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல; அவளுடைய ஒருங்கிணைந்த வாழ்வில் ஆண்களுக்கு முக்கியத்துவமே இல்லை." 'The Painter of Signs' நாவலில், வெறும் தொழிலாக மட்டும் அல்லாமல் முருகியல் மதிப்பீடு கொண்டதாகவும் பெயர்ப் பலகைகளைத் தீட்டுகின்ற இளம் ஓவியத் தொழிலாளி ராமன், எல்லம்மன் தெருவின் கடைசி வீட்டில் தன் அத்தையின் ஆதரவில் வாழ்கிறான். சரயு நதி பாய்கிற அழகான இடம் அது. நாவலின் தொடக்கத்திலேயே, தன் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கும் ஒருவருக்கான பெயர்ப் பலகையை ராமன் உருவாக்குவதும், அவர் ஆயிரத்தெட்டு குறைகள் சொல்லி, அவனுக்கு அதற்கான பணத்தைத் தராமலிருக்க முயற்சி செய்வதும், அவர்களிடையே நிகழும் வாதங்களும் சொல்லப் படுகின்றன. ராமன் வெறும் பெயர்ப்பலகை தீட்டுபவன் மட்டுமல்ல; உலக முழுதும் காரணம் முதன்மைபெறும் காலத்தை(Age of Reason) நிறுவ முற்படுபவன் என்பது மெல்லிய நகைச்சுவையுடன் தெரிவிக்கப் படுகிறது. ராமனுக்கு, ஒவ்வொன்றுக்கும் பகுத்தறிவு அடிப்படையிலான விளக்கம் இருந்தே ஆக வேண்டும். 'டவுன் ஹால்' பேராசிரியர், அவையினர்முன் ஆற்றும் சொற்பொழிவில் நிலவும் ஆன்மிகச் செய்தியைக் கேட்க, ராமனின் பகுத்தறிவுக் கொள்கை படாத பாடு படுகிறது. மால்குடியின் குடும்பக் கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றும் டெய்சியை ராமன் தன் தொழில் அடிப்படையில்தான் முதலில் சந்திக்கிறான். ஆனால் போகப் போக, தன் வறட்டுத்தனத்துக்கும் டெய்சியின் யதார்த்தத்துக்கும் உள்ள வேறுபாடு கண்டு மலைத்துப் போகிறான். அவன்தான் டெய்சிமேல் ஆராக்காதல் கொண்டு உருகித் தவிக்கிறான். அவளோ அவன்மேல் எந்த விதமான ஆர்வமும் கொள்வதில்லை. டெய்சியின் அலட்சியப் போக்கால், ராமனின் தன்மதிப்பு காயமுறுகிறது. அவள் பணி புரியும் இடத்துக்குப் போவதையே தவிர்த்து விடுகிறான். சில நாள்கள் கழித்து டெய்சியே தன்னுடன் அக்கம் பக்கத்து ஊர்களுக்கு வந்து, குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் செய்வதில் உதவுமாறு ராமனுக்கு வேண்டுகோள் விடுக்கிறாள். அந்தந்த ஊர்களின் முதன்மையான இடங்களில் குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரத் தட்டிகளை வரைந்து வைக்கும் வேலை தருகிறாள். எந்த ஊரானாலும் அங்கு வாழ்பவர்களின் வாழ்முறையோடு ஒத்துப்போகும் டெய்சியின் மனநிலையை ஆங்காங்கே கண்டு ராமன் வியந்து போகிறான். ஊர்க்கேணியில் நீர் எடுத்து, அங்கேயே இயல்பாகக் குளித்து, உடைகளைத் துவைத்துக் காயப்போடுவதுடன் மாற்றிக் கொள்ளும் டெய்சியின் போக்கு, ஆணான தனக்குங்கூட வாய்க்காதது உணர்ந்து தன்னிரக்கம் கொள்ளுகிறான். டெய்சி எஃகு உள்ளம் வாய்ந்தவள். ஆனால், எளிய சிற்றூர் மக்களைக் கூடவைத்து, அவர்களுக்கு 'பிள்ளைப்பேறும் குடும்பக் கட்டுப்பாடும்' குறித்துப் படம் வரைந்து விளக்குகிறாள். அவர்கள் அவை தொடர்பாகக் கேட்கும் எந்தக் கேள்விக்கும் கூச்சமில்லாமல் மறுமொழி சொல்கிறாள். அதையெல்லாம் பார்க்க, ராமனுக்குத் தாழ்வு மனப்பான்மை தீவிரமாக ஏற்படுகிறது. விளைவாக, பிரச்சாரப் பணி முடிந்து அவர்கள் வீடு திரும்பும் சமயத்தில், வழியில் கிடைத்த தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு, டெய்சியைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த ராமன் முயல்கிறான். அவளுடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அவனுடைய முட்டாள்தனமான செயல் தோற்கடிக்கப்படுகிறது. டெய்சி, அதற்கப்புறம் நெடுநாட்கள் ராமனுடன் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. ராமனின் அடாவடிச் செயல் குறித்துக் காவல்துறைக்குப் புகார் தெரிவித்து விடுவதாகவும் மிரட்டுகிறாள். அதற்கு அஞ்சிய அவன், அவளை விட்டே ஒதுங்கி விடுகிறான். ஆனால் அந்த இடைவெளியில்தான் டெய்சியும் ராமனும் தங்களுக்குள் நிலவும் மெய்யான காதலை உணர்கிறார்கள். மீண்டும் சந்திக்க வாய்த்த பொழுது, காதலர்களாகச் சந்திக்கிறார்கள். கந்தருவ முறையில் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ராமன் நினைக்கிறான். அத்தகைய திருமணத்தில்தான் அதிக பந்தம் இருக்காது என்றும் டெய்சிக்கும் அதுதான் பிடித்திருக்கும் என்றும் ராமன் நம்புகிறான். இதற்கிடையில் ராமனின் அத்தை, சாதி மதக் கலப்புத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். காசிக்குப் போகும் தன் உறுதியான எண்ணத்தை ராமனிடம் தெரிவிக்கிறாள். காசிக்குப் போவதுடன் வாழ்வின் இறுதி இலட்சியம் நிறைவேறும் என்று அவள் நம்புகிறாள். அதனாலொன்றும் நாவலின் போக்கு மாறுவதில்லை. 'பிளாட்' என்று திறனாய்வாளர்கள் சொல்லும் கதைப் பின்னலில், ஆர்.கே.நாராயணன் சமரசம் செய்து கொள்வதே இல்லை. நாடக பாணியில் கதைமாந்தரின் உணர்வுகளை ஆட்டி வைப்பதில்லை. வாசகர்களுக்காகக் கதைப்போக்கில் விறுவிறுப்புச் சேர்த்தல், வேகம் கூட்டுதல் முதலானவற்றை அவர் செய்ததில்லை. திட்டவட்டமான ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், டெய்சியின் மனம் மாற்றம் கொள்கிறது. ராமனைத் திருமணம் செய்து கொள்ளத் தெளிவாக மறுத்து விடுகிறாள். கடைசியில், குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம் தொடர்பான நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு, ராமனை விட்டே பிரிந்து செல்கிறாள். இவ்வாறு, நெடுங்காலம் நம்பிக்கையூட்டி ஏமாற்றிச் சுமத்தப்பட்ட கனத்த தனிமைச் சுமையை ராமன் ஏற்றுக் கொள்ளுமாறு நேர்ந்து விடுகிறது. இந்த நாவலில், பழைமையிலிருந்து விடுபட்டுப் புதுமையைத் தழுவும் மால்குடியை நாம் பார்க்க முடிகிறது. இந்தக் கதை சொல்லப்பட்ட பொழுதில், அது பரபரப்பான நகரமாகி விட்டது. 1976ஆம் அண்டு வெளியான இந்த நாவல் சித்தரிக்கும் காலகட்டத்திலேயே 'நவீனப்பட்டுவிட்ட' ஆணும் பெண்ணுமாக ராமனும் டெய்சியும் திகழ்கின்றனர். டெய்சி, ராமனை விடவும் வலிமையான பாத்திரமாகவும் 'தேசவிடுதலைக் காலத்துக்குப் பிந்திய வகைமாதிரிப் பெண்'(typical woman of the post indepentent era) உருவாக்கப்பெற்றுள்ளாள். தன் நினைவுகளைத் தொகுத்து(memoirs) அவர் எழுதிய 'My Days' என்ற புத்தகம், நாராயணனை உணர்ச்சிமிக்க மனிதராக நம்மை அறிய வைத்துள்ளது. ஒருவருக்கு மிகவும் நெருக்கமாக வாழ்ந்து இறந்து போனவர்கள், அவரை மீண்டும் தேடி வருவார்கள் என்ற சொந்த அனுபவத்தை அவர் எழுதிய விதம், வாசகர்களை அதிர வைத்தது. "The Painter of Signs' ராமனைப் படைத்தவரல்லவா அவர்? அவரா இப்படி எழுதினார்? - என்று பகுத்தறிவுக் கொள்கையுள்ள வாசகர்கள் எண்ணினர். எழுத்தாற்றல் மிக்கவராக மட்டும் அல்லாமல், ஒரு சராசரி மனிதராக ஆர்.கே.நாராயணனை நாம் பார்க்க முடிவது இந்தப் புத்தகத்தில் மட்டுமே. தனக்கு மகிழ்ச்சி கொடுப்பது, படிப்பதும் எழுதுவதும்தான் என்று குறிப்பிட்ட ஆர்.கே.நாராயணன், ஒருநாளைக்கு இரண்டாயிரம் சொற்களை இரண்டு மணி நேரத்தில் எழுதிவிடுவதாகவும் சொன்னார். அதுதான் முதல் வரைவு(draft) என்றும் பிறகு அதைப் படித்துப் பார்த்துத் திருத்த நான்குமணி நேரம் போலப் பிடிக்கும் என்றும் "திருத்தியதை மறுபடியும் திருத்தி எழுதுவேன்; வார்த்தைகளை மாற்றிப் போடுவேன்; அதற்கு எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் போலப் பிடிக்கும்; மெதுவாக யோசித்து யோசித்துதான் திருத்தி எழுதுகிறேன்" என்றும் சொன்னார். அதற்கெல்லாம் காரணம், எழுதுவது நன்றாக வரவேண்டும் என்ற அக்கறைதான். "வெட்டிக் குறைக்க நான் கவலைப் படுவதே இல்லை. எழுதியதில் நிறையவே தாட்சண்யம் இன்றி அடித்து விடுவேன். எழுத்தாளனுக்குத் தான் எழுதினதையே அடிக்கத்தான் தைரியம் வேண்டும்" என்றார். "வாசகர்கள் ஒரு புத்தகத்தின் பக்கங்களைத் தள்ளி விடுவதற்கு இடங் கொடுக்காமல் சரியாக எழுத வேண்டும். அதற்கு எழுத்தாளன், தான் எழுதியதைப் படித்துப் பார்க்க வேண்டும். திருத்தி எழுத வேண்டும். சில தமிழ் எழுத்தாளர்கள் எழுதியதைத் திருப்பிக் கூடப் பார்ப்பதில்லை என்றும், அவை அப்படியே அச்சு ஏறி புத்தகமாக வந்துவிடும் என்றும் கேள்விப்படுகிறேன். அது எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.... எழுதி எழுதித்தான் - திருத்தி எழுதித்தான் சரிபண்ண முடியும் என்ற வகையைச் சார்ந்தது என் எழுத்து..." என்று திட்டவட்டமாகச் சொன்னார். ஆர்.கே.நாராயணன், சென்னையில் புரசைவாக்கத்தில் 1907ஆம் ஆண்டு பிறந்தவர். இதை அவரே தன் மைசூர் இல்லத்தில் ‘குங்குமம்’ சிறப்பு நேர்காணலில் சொல்லியுள்ளார். விக்கிபீடியா கட்டுரை முதலான சிலவற்றில் அவர் 1906ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் பிறந்ததாகச் செய்தி உள்ளது. தமிழ் அவர் தாய்மொழி. முதலில் நுங்கம்பாக்கத்தில் இருந்தார். உயர்நிலைப் பள்ளி வரை சென்னையில்தான் படித்தார். தகப்பனார் கிருஷ்ணசாமி தலைமையாசிரியராக மைசூர் வந்ததால், கல்லூரியில் படிக்கத் தானும் மைசூர் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.[குங்குமம் சிறப்பு நேர்காணல்] மைசூர்ப் பல்கலைக் கழகத்தில், உ.வே.சாமிநாத ஐயர் அமைத்துக் கொடுத்த தமிழ்ப் பாடத்திட்டத்தைத் தன் இரண்டாவது மொழித் தெரிவின்கீழ்ப் பயின்றார். பின்னர், பெரும்பாலும் மைசூரிலேயே வாழ்ந்தார். சென்னைக்குத் தன் உறவினர்களைப் பார்க்கவும் பிற காரணங்களுக்காகவும் அடிக்கடி பயணம் செய்தார். இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார். உலகப் பயணமும் செய்துள்ளார். சென்னைதான் தனக்குப் பிடித்தமானது என்று நேர்காணல்களில் சொல்லியுள்ளார். ராசிபுரத்தில் தன் முன்னோர்கள் வாழ்ந்ததால், குடும்பத்தினர் பெயர்களின் தலைப்பெழுத்துகளில் 'ஆர்' கட்டாயமாக இடம்பெற்றதாம். 1936ஆம் ஆண்டு 'கலா நிலையம்' என்ற தரமான தமிழ் இதழைத் தொடங்கியவர் தன் மாமா சேஷாசலம் அவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஒய்.எம்.சி.ஏ.'வில் மாலைநேரத் தமிழ் வகுப்புகள் நடத்தியதோடு 'கலா நிலயம்' இதழில் 'தமிழ்ப் பாடம்' என்ற பகுதியில் நளவெண்பா பாடம் நடத்தி, சேக்கிழார் பற்றியும் தொடர் கட்டுரையை அவர் வெளியிட்டாராம். மக்களுக்குப் புரியாது என்று சொல்லித் தரம் தாழக் கூடாது என்பதைத் தன் உள்ளத்தில் உருவேற்றியவரும் அவரே என்று தெரிவித்தார். உயர்நிலைப் பள்ளிக் காலத்திலேயே, தான் 'பிரதாப முதலியார் சரித்திரம்' 'கமலாம்பாள் சரித்திரம்' முதலான தமிழ் நாவல்களைப் படிக்க முடிந்ததற்கும் தன் மாமா தந்த ஊக்கமே காரணம் என்றும் குறிப்பிட்டார். 'கலா நிலையம்' இதழ்களைத் தொகுப்புகளாகச் செய்து வைத்திருந்தபொழுது பேராசிரியர் ஏ.கே.ராமானுஜன் அவற்றுள் இரண்டு தொகுப்புகளை வாங்கிச் சென்று சிகாகோ பல்கலைக் கழகத்தில் 'மைக்ரோ பிலிம்' செய்து பாதுகாத்தாராம். மால்குடி வரிசையில் ஆர்.கே.நாராயணனின் நாவல்கள்: The Bachelor of Arts The Dark Room The English Teacher Mr.Sampath - The Printer of Malgudi The Financial Expert Waiting for the Mahatma The Guide The Man-eater of Malgudi The Vendor of Sweets The Painter of Signs A Tiger for Malgudi Talkative Man [சென்னையிலிருந்து வெளிவந்த 'Frontline' மாதமிருமுறை இதழில் தொடராக ஓராண்டுக் காலம் வெளிவந்தது. ஆர்.கே.நாராயணன் எழுதிய நாவல்களிலேயே அளவில் மிகச் சிறியது இதுதான். 'TM' என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் 'Talkative Man,' அவர் எழுதிய சிறுகதைகளை வாசித்தவர்களுக்குப் புதிய 'கேரக்டர்' அல்ல.] The World of Nagaraj இதிகாசங்களின் புதிய ஆக்கங்கள்: Gods, Demons and Others The Ramayana The Mahabharata கதைகள்: A Horse and Two Goats An Astrologer's Day and Other Stories Lawley Road Malgudi Days Under the Banyan Tree and Other Stories நினைவுத் தடங்கள்: My Days பயண நூல்கள்: My Dateless Diary The Emerald Route கட்டுரை நூல்கள்: Next Sunday Reluctant Guru A Writer's Nightmare The World of the Story-Teller ****** குறிப்பு: ஆர்.கே.நாராயணன் தன்னை நேர்கண்டவர்களுக்குச் சொன்ன சேதிகளே இக்கட்டுரையில் உள்ளன. விக்கிபீடியா முதலியவற்றின் செய்திகளை இக்கட்டுரை தழுவவில்லை. பார்வை: மைசூரில் ஆர்.கே.நாராயணன் இல்லத்தில், 1983 நவம்பர் இறுதி வாரத்தில் எடுக்கப்பட்ட குங்குமம் இதழின் சிறப்பு நேர்காணல். வெளியான இதழ்: குங்குமம் 7:8. 5-2-1984. பக்கங்கள்: 31, 34, 48. திரு எஸ்.கிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணல். **** நன்றி: திண்ணை.காம்

23.5.08

உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள் - தேவமைந்தன் இன்றைக்கு அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகப்போர்க் காலத்தில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று, தொகுதிகளாகப் பதிப்பிக்கப் பெற்றது. 'கதைக் கோவை' என்று அதற்குப் பெயர். பதிப்புத் துறையில் முதற்பெயர் பெற்ற அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு. அதே போர்க்காலத்தில்தான் அறிஞர் வெ.சாமிநாத சர்மா அவர்களும், இன்றைக்கும் பாராட்டத் தக்க செறிவு மிக்க நூல்களைப் படைத்தார். 'பங்கர்' எனப்பட்ட பதுங்குமிடங்களில் தாள்கற்றைகளை ஒருபுறமும் மைக் கூட்டை ஒருபுறமும் வைத்துக் கொண்டு, அவர் படைத்த புத்தகங்களின் அர்ப்பணித்தல்(dedicating) உணர்வு, உலகமயமாதலை உட்கொண்ட நிகழ்சமூகத்தின் புத்தங்களுக்கு வருமா? சாமிநாத சர்மா தமிழுக்குக் கொண்டு வந்த பிளேட்டோவின் 'தி ரிபப்ளிக்'('The Republic') என்ற நூலின் மொழியாக்கமான 'குடியரசு'தானே தமிழகத்தில் சாக்ரடீஸ் குறித்தும் பிளேட்டோ பற்றியும் அறியும் ஆர்வம் தந்தது? போர்க்காலத்திலும் படைப்புணர்வை விட்டுவிடாத தன்னுணர்வு குறித்து அவர் எழுதியுள்ள உணர்ச்சி மிக்க எழுத்துகளை பர்மாவிலிருந்து அவர் வழிநடந்த பயணம் பற்றிய 'எனது வழிநடைப் பயணம்' புத்தகத்தில் இன்றும் வாசிக்கலாம். இரங்கூனில் அவர் வாழ்ந்தபொழுது 'ஜோதி'' என்ற இதழை நடத்தியிருக்கிறார். புதுமைப்பித்தன் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பாடுகளை அதே போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு நடந்துவந்த என் தந்தையார் இரங்கூன் பி.கே.அண்ணார் கூறியும் கேட்டிருக்கிறேன். திண்ணை. காம் ஏட்டில் "ஒரு மனிதரின் கதை: பி.கே.அண்ணார்" என்ற தலைப்பில் பதிவுசெய்தும் இருக்கிறேன். அப்படிப்பட்ட காலத்தில் பதிப்பித்ததால்தான் "ஒரு புத்தகம் வெளியிடுவதில் பலவகையான தொல்லைகளுக்குட்பட வேண்டிய இந்த யுத்தகாலத்தில் இந்தப் பெரிய வெளியீட்டைப் பிரசுரம் செய்ய எங்களைக் கருவியாக்கிக் கொண்ட சர்வேசுவரன் திருவருள் இனியும் எங்கள் முயற்சிகளுக்குத் துணையாக நின்று அரண் செய்யும் என்றும், எழுத்தாளர்களும், வாசகர்களும் என்றும் குன்றாத அன்புடன் எங்களுக்கு உதவி செய்வார்களென்றும் நம்பி இந்தக் கதைக் கோவையாகிய முத்துமாலையைத் தமிழுலகத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்" என்று 1942-இல் அல்லயன்ஸ் பதிப்பாளர் எழுதியிருக்கிறார். அப்பொழுதெல்லாம் கதை வாசிக்கும் ஆர்வம் தமிழ் வாசகர்களுக்கு அதிகம் இருந்திருக்கிறது. சிறுகதைகளுக்கு மதிப்பு ஓங்கிய காலம் அது. ஆங்கிலத்தில் ஜாக் லண்டன் போன்றோர் கதைகளையும் ருஷ்யத்தில் டால்ஸ்டாய் கதைகளையும் இந்தி வங்காளிக் கதைகளையும் மொழிபெயர்ப்பில் படித்த நிலை ஓய்ந்து, தமிழ் எழுத்தாளர்கள் தாங்களே சொந்தமாகப் படைத்த சிறுகதைகளை வாசகர்கள் விரும்பிப் படிக்கத் தொடங்கிய காலம் அது.(1930-1940) சென்ற நூற்றாண்டின் முப்பதுகளின் கடைசியிலேயே வ.வே.சு.ஐயர், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆகியோர் படைத்த கதைகள் தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின. அப்படி அரசியல் துறையில் பெயர்பெற்றவர்களின் சிறுகதைகள் தொகுப்புகளாக வெளிவந்த நிலை சற்று மாற்றம் கொண்டு, புத்தக உருவத்தில் கொண்டு வருவதற்கு முடியாத திறமைசாலிகளின் தனித் தனிச் சிறுகதைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியே 'கதைக் கோவை'யின் முதல் இரு தொகுதிகள். மூன்றாவது தொகுதியும், அதற்கு மேலும்கூட வந்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. இந்தத் தொகுதிகளில் தொண்ணூறு சிறுகதைகள் வெளிவந்தன. இவற்றில், ஆனந்த விகடன், கலைமகள், சந்திரோதயம், கல்கி, இந்துஸ்தான், தினமணி மலர்கள், சில்பஸ்ரீ, ஜகன்மோகினி, மணிக்கொடி, நவசக்தி, சுதந்திரச் சங்கு, பாரதமணி, லோகோபகாரி ஆகிய இதழ்களில் முன்பே வெளியாகியிருந்த கதைகளும் அடக்கம். சிறுகதைகளை அவற்றின் வடிவம் பற்றிய விழிப்புணர்வோ உள்ளடக்கம் பற்றிய அலசலோ இல்லாமல் 'நிம்மதி'யாக வாசித்த காலமல்லவா அது? இல்லாவிட்டால், வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய 'காலச் சக்கரம்' சிறுகதை, இருபத்து மூன்று பக்கங்களைக் கொண்டிருந்து, வாசகர் உள்ளங்களை வென்றிருக்க முடியுமா? 'ஜகன்மோகினி'' இதழில் இது வெளிவந்தது என்ற குறிப்பும் இருக்கிறது. அந்தக் காலத்தில் 'மணிக்கொடி' இதழில் வெளிவந்த புதுமைப்பித்தனின் 'துன்பக் கேணி' யும் பக்க அளவில் பெரிய சிறுகதைதான். 'காலச் சக்கர'மும் 'துன்பக் கேணி'யும் கிட்டத்தட்ட ஒரே காலத்தைச் சார்ந்தவைதாம்(20ஆம்நூற்றாண்டின் முப்பதுகளின் நடுப்பகுதி) எனினும், இவை இரண்டுக்கும் நடையிலும் சொற்கட்டுமானத்திலும் சொல்ல வரும் பொருளின் சமூக நோக்கின் அழுத்தத்திலும் கதைசொல்லலிலும்தான் எத்தனைப் பெரிய இடைவெளி? வை.மு.கோதைநாயகி அம்மாளின் 'காலச் சக்கரம்' சிறுகதையும் சரி, புதுமைப் பித்தனின் 'துன்பக் கேணி'யும் சரி - இரண்டுமே தம் அடிப்படைச் சித்தரிப்பில் ஒன்றுபடுகின்றன. இரண்டுமே எதிர்மறை நோக்கில் சமூகத்தைப் பார்ப்பவைதாம். மனப்புழுக்கம், விரக்தி, வேதனை முதலான எதிர்மறை உந்துதல்கள் இவ்விரண்டிலுமே சம அளவில் இருக்கின்றன. ஆனாலும் வை.மு.கோதைநாயகி அம்மாளின் 'காலச் சக்கர' சுபாஷிணிக்கும் புதுமைப் பித்தனின் 'துன்பக் கேணி' மருதிக்கும் ஆகவும் பெரிய பாத்திரகுண இடைவெளி விழுந்திருக்கிறது. 'இடைவெளி'தான் இறப்புநிலை என்றல்லவா காலஞ்சென்ற எழுத்தாளர் சம்பத், அதே தலைப்பிலான தன் நெடுங்கதையில் கருத்துரைத்தார்? சமகாலத்தில் இரண்டு படைப்பாளிகளின் படைப்புகளிலுள்ள இந்த இடைவெளியைக் குறித்து சமூகவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், என்னென்னவோ உண்மைகள் எழும். பணத்தின் பின்னே போய்விட்ட பாஸ்கரனை நினைத்து நினைத்து மறுகி மடியும் சுபாஷிணிக்கும்(காலச் சக்கரம்); ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து, திருநெல்வேலியின் குறுஞ்சிற்றூரொன்றில் பண்ணைக்கு அடிமைப்பட்டவனுக்கு மனைவியாக நேர்ந்ததால் பண்ணையின் கையாளான தலையாரித் தேவனின் அடி உதைகளுக்கு ஆட்பட்டு, தன் வாழ்க்கையின் அடுத்த கட்டமான இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை ஸ்டோர் மேனேஜரின் காமத்துக்கும் உட்பட்டு, பாட்ரிஸன் ஸ்மித் துரையின் கொடையான 'பரங்கிப் புண்'ணையும் வாங்கிக் கொண்டு, சந்தேகம் என்ற ஒன்றின் பேரால் கங்காணிச் சுப்பனின் மூர்க்கமான தாக்குதல் தந்த கொடிய விளைவுக்கும் உடல் நலத்தை அழித்துக் கொண்டு, தம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளும் தேயிலைப் பெண் தொழிலாளிகள் சிலரின் வழக்கமான தீர்மானத்துக்கு மட்டும் அறவே இடங்கொடுக்காமல் தன் தலைமுறையிலும் தன் மகள் வெள்ளைச்சியின் தலைமுறையிலும் விடாது போராடும் மருதிக்கும்தான்(துன்பக்கேணி) எவ்வளவு பெரிய வாழ்வின் - இருப்பின் - உயிர்த்திருத்தலின் இடைவெளி? சாதியளவிலும் கூட, இவ்விரு படைப்பாளர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட இரு வேறு சாதிகளில் பிறந்தவர்களில் ஒருவர், உயர்சாதிப் பெண்ணொருத்தியின் கருத்தியலால் அவள் வீழும் வீழ்ச்சியைக் குறிக்க இருபத்து மூன்று பக்கங்களை எடுத்துக் கொள்ள; மற்றவர், ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணொருத்தியின் சளைக்காத - நடப்பியல் சார்ந்த - உடலால் வீழ்ந்தாலும் உள்ளத்தால் வீழாத போராட்ட வாழ்வைக் குறிக்க முப்பத்தெட்டுப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்! இதை வெறும் அளவுக்குக்காகவே குறிக்கிறேன். மற்றபடி எடுத்துக் கொள்ளும் பொருளின் உட்கிடக்கைதான் முதன்மையானது. அல்லயன்ஸின் வெளியீடான 'கதைக் கோவை'யில் கூர்மையான வாசகரின் புருவங்களை உயர்த்த வல்லதொரு சிறுகதை, அ.நா. சிவராமன், பி.ஏ. அவர்கள் எழுதிய "நாலு' அவுன்ஸ் பிராந்தி" என்பது. இதுவும் மணிக்கொடியில் தான் வந்திருக்கிறது. முற்றிலும் நாம் உள்வாங்கிக்கொள்ள முடியாத 'தாம்பத்திய'த்தை அடிநாதமாகக் கொண்ட சிறுகதை. அளவு ஏழரைப் பக்கங்கள்தாம். உணர்த்தாமல் உணர்த்தும் உட்கிடக்கையோ பெரிது. சொல்லாமல் விட்டுவிட்டவற்றை வாசகர்களே புரிந்துகொள்ள வைக்கும் உத்தியைக் கொண்ட, அன்றைய நிலைக்கு வேறுபாடான கதைசொல்லல். அன்றாடம் சந்திக்க நேரும் வாழ்க்கை உண்மைகள் தரும் படிப்பினைகளால் சிராத்தம்(சொல் - கதையிலுள்ளவாறே)போன்ற - இறப்புக்குப் பிந்திய சடங்குகள் குறித்துக் கொஞ்சமும் நம்பிக்கை கொள்ள முடியாத கணவன், தன் தீரா நோய் நிலையிலும் தனக்கு வேண்டியவற்றை முழு ஈடுபாடு கொண்டு செய்யும் கணவனிடம் மட்டும் முழுநம்பிக்கை கொள்ளாமல், மடி, சிராத்தம், பிதிர்தோஷம்(சொற்கள் - கதையிலுள்ளவாறே)ஆகியவற்றில் அளவில்லாத நம்பிக்கை கொள்ளும் நோயாளி மனைவி ஆகிய இருவரும் இதில் முக்கியமான பாத்திரங்கள். கோமதி என்ற பெயருடைய அவள், தான் நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த - 'பிராணன்' போகும் நொடிப்பொழுதை, தானே எதிர்பார்க்க முடியாதவாறு சந்திக்கும்படி அவள் கணவன் திட்டமிடாமல் செய்துவிடும் விலங்குணர்வு(id)ச் செயல் இந்தக் கதையின் திருப்புமுனை. முடிவில் தன் நண்பன் கிட்டுவிடம், தன் செயலை மறந்து அன்றைய நாளிரவு தூங்க அவன் வாங்கி வரச் சொல்லிக் கேட்கும் நான்கு அவுன்ஸ் பிராந்தி கதைத் தலைப்புக்குக் காரணம். இடையில், தனக்கு வழக்கமில்லாத கடன் வாங்க நண்பன் கிட்டுவைச் சந்திக்கத் திருவல்லிக்கேணிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்பொழுதில், பேருந்தில், தன் தோற்றத்தை நோக்கி நடத்துநர் கொள்ளும் நம்பிக்கையை அரையணாவுக்காக ஏமாற்றும் புத்திசாலித்தனமும், முடிவில் நண்பனை வாங்கிவரச் சொல்லும் நான்கு அவுன்ஸ் பிராந்தியும் அவன் ஏற்றிருக்கும் காந்தியடிகளின் கொள்கைக்கு எதிர்ப்பானவை. "பின்பற்றுபவர்கள் குருவை அழிக்கிறார்கள்"("Followers destroy their Guru") என்ற ஜே. கிருஷ்ணமூர்த்தியின் வாக்கியத்துக்கு இந்தக் கதையைவிடவும் விளக்கம் ஒன்றிருக்குமா? "சுகி" அவர்கள் எழுதிய 'நல்ல பாம்பு' என்ற கதை, இந்தக் கோவையில் உள்ளது. கதைக் கோவை இரண்டாம் தொகுதிக்கென்றே "சுகி" இதைப் படைத்திருக்கிறார் என்று பதிப்புரையின்வழி ஊகிக்க இடமுள்ளது. கதையில் வரும் பாம்பாட்டி முனியனும் அவனுடைய இரு புதல்வர்களான நாகப்பனும் ரங்கப்பனும் முனியனின் தங்கை மகளான செங்கமலமும் வாசகர் உள்ளங்களைப் பிணைத்துக்கொள்ளும் பாத்திரங்கள். ஒன்பதரைப் பக்கங்களை எடுத்துக் கொண்ட கதையில் இடம்பெறும் இருளர் வாழ்வை "சுகி" அவர்கள் உடனிருந்து அறிந்து கொள்ளாமல் அல்லது நன்கு விசாரித்து அறிந்து கொள்ளாமல் இவ்வளவு தெளிவாகப் படைத்திருக்க முடியாது. ஒரு பெண்ணால், ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிக்குள் பிளவும் அண்ணனுக்குக் குரூரமும் வருவது புதிய கதைக் கரு அல்லவென்றாலும் கதை சொல்லப்பட்ட முறை சிறப்பாக உள்ளது. 1994இல் இந்தக் 'கதைக் கோவை'யின் தொகுதிகள் மீண்டும் வெளியிடப்பட்டிருப்பதால் சிறுகதை வளர்ச்சி வரலாற்றில் ஈடுபாடு கொண்ட நண்பர்கள் இவற்றை ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதிச் சமூகம் குறித்துக் கதைகள் வழியாக அறிய விரும்புகிறவர்களும் வாசிக்கலாம். அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை மயிலை ராமகிருஷ்ணா மடத்துச் சாலையில் இருக்கிறதென்று நினைக்கிறேன். **** நன்றி: திண்ணை.காம்
சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள் - தேவமைந்தன் பெங்களூரு நகரிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தூயதமிழ் நாட்டமுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களால் அன்புடனும் தோழமையுடனும் அறிஞர் குணா என்று அழைக்கப்படும் திரு சாமுவேல் குணசீலன், கோலார் தங்கவயலில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தவர். தந்தையார் திரு அ.மா.து. சாமுவேல் அவர்கள். தாயார் திருமதி மனோன்மணி அவர்கள். ஏந்துகள் மிக்க வங்கிப் பணியைத் துறந்து மக்கள் இயக்கங்களில் இறங்கிப் பாடாற்றிய அறிஞர் குணா, கருநாடகச் சிறைகளில் பலமுறை இருந்தவர். அண்மைய நெடுஞ் சிறைக்காலத்துக்குப்பின் மக்கள் உரிமை இயக்கத்தின் தொடர்ந்த முயற்சிகளால் விடுதலை பெற்றவர். இவரைப் போற்றிய தூயதமிழ் இயக்கம் சார்ந்த அறிஞர்களில் திராவிட இயக்கத்தின்பால் பற்றுக் கொண்டவர்கள் வெறுத்தாலும் சரி என்று 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற ஆய்வைத் துணிந்து வெளிப்படுத்தியவர். அந்த ஆய்வின் முடிபுகள், நம் திண்ணை வலையேட்டின் மே 1, 2008 பதிவேற்றத்தில், தோழர் எஸ்ஸார்சி தந்துள்ள குறிப்புகளாக வெளிவந்துள்ளன. குணாவின் ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, அவர் அறிவாற்றலின் தோழர்கள் அமைத்துக் கொண்டதுதான் 'FORT' என்ற அமைப்பு. 'Forum For Research On Tamilnadu' என்பது இதன் விரிவாக்கம். பெங்களூரு நகரில் 'டிஸ்பென்ஸரி சாலை' 48ஆம் இலக்கத்தில் இது இயங்கத் தொடங்கியது. இதுவே 'தமிழக அரண்' என்று பின்னர் பெயர் தாங்கியதாக நினைக்கிறேன். குணாவின் சிறந்த ஆராய்ச்சிகளாக எனக்குத் தெரிந்தவை பின்வருமாறு: 1. சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) 2. தமிழர் மெய்யியல்(1980) 3. Marxist Dialectics(1983) 4. Asiatic Mode - A Socio-cultural Perspective(1984) 5. தமிழியப் பொதுவுடைமை(1985) 6. மார்க்சியமும் பெரியாரியமும் 7. மார்க்சிய இயங்கியல் 8. தமிழீழ அரசியலின் அகப்புற அழுத்தங்கள் (கட்டுரை)(1985) 9. இந்தியத் தேசியமும், திரவிடத் தேசியமும்(1986) 10.தமிழ்த் தேசிய இனச் சிக்கல் - உலக நம்பிகளின் இயங்காவியல்(The Metaphysics of the Abstract Internationalists)(1987) 11.வகுப்பும் சாதியும் வரணமும்(1988) 12.திராவிடத்தால் வீழ்ந்தோம் (1994) இவற்றுள் முதலாவதை இக்கட்டுரையில் பார்ப்போம். சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) இந்நூலை 1972ஆம் ஆண்டே குணா எழுதினார். மூன்றாண்டுகளுக்குப் பின், அச்சுக்குத் தந்துவிட்டு வீடு திரும்பிய போது, 'மிசா'வின்கீழ் சிறையிடப்பெற்றார். இதன் சுருக்கத்தை 1974ஆம் ஆண்டே, 'Origin Of Casteism - An Integral Theory' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதற்குப்பின் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தமிழில் முழுமையான வடிவம் பெற்று ஆறு ரூபாய் விலைக்கு 1979 சனவரியில் வெளிவந்தது. கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் தென்றல் நூலகத்தால் வெளியிடப்பட்டது. அதற்கு முன் அத்தகைய சிந்தனை தமிழில் - தூயதமிழில் வெளிவந்ததில்லை. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணருக்கு மிகவும் பிடித்த குணாவின் ஆய்வு இது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பாவாணருக்கு இடதுசாரிச் சிந்தனைகள்மேல் ஈடுபாடு இருந்ததில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவராக விளங்கியவர் பாவாணர். அப்படிப்பட்டவரையே ஈர்த்த நூல் 'சாதியத்தின் தோற்றம்.' "சாதியம் என்பது ஒருவகைப் பொருளியல் - சமுதாய வாழ்க்கை முறை. இன்றைய அரை நிலவுடைமைச் சமுதாயத்தின் அரசியல், பண்பாட்டுத் துறைகளின் உள்நோக்கமாகவும் அது அமைகின்றது. அச் சாதியத்திற்கு, அதற்கே உரிய கட்டுமானங்கள் உண்டு; தனி வடிவமைப்புகள் உண்டு. அவ் வடிவமைப்புகள் அதற்கேயுரிய உருவவியலைப் படைக்கின்றன. அச் சாதியத்திற்குத் தனித்த உள்ளியக்கமும் உண்டு. அவ்வுள்ளியக்கமே அதனை நீட்டிக்கும் உள்ளாற்றலாகும்" எனத் தொடங்கி, சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இயக்கம் பற்றிய சிக்கலைப் பொருள்முதல் இயங்கியல் என்னும் மார்க்சிய முறையில் அணுகி, அவற்றின் காரணங்களைப் பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம், பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம் ஆகிய அகநிலை(பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம்)க் காரணங்கள் மூன்றாகவும் புறநிலைக் காரணங்கள் மூன்றாகவும்(பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம்) பகுத்து, ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்திருக்கிறார். அறிவாராய்ச்சியியல்(epistemology), மார்க்சீயச் சிந்தனையியல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமல்லாமல் அம்பேத்கர் சிந்தனையியலில் ஈடுபாடு கொண்டவர்களும் வாசித்தறிய வேண்டிய ஆராய்ச்சி இது. இதில் உள்ள நான்காம் - அகநிலைக் காரணமான - பண்பாட்டுக் காரணம் குறித்த ஆய்வில் டாக்டர் பாபுராவ் சாகேப் அம்பேத்கர் அவர்களின் 'Castes in India - their Mechanism, Genesis and Development' என்ற நூலில் இடம்பெறும் அறிஞர் கப்ரியேல் தார்த் கண்டறிந்த 'போலி நடத்தை விதிகளை' சாதியத்தின் தோற்றத்துக்கு அறிவியல் விதிகளாக அம்பேத்கர் எடுத்தாள்வதைக் குணா திறனாய்ந்திருப்பதை மீள்வாசிப்பில் தலித்தியக் கொள்கை அறிஞர்கள் திறனாய்ந்திருக்கிறார்கலா என்று எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள் எவரேனும் தெரிவித்தால் பயன்பெறுவேன். ஐந்தாம் இயலான மத/சமயக் காரணம் பற்றிய பகுதி... பண்டைக் கிரேக்கத்தில் பெலொப்பனீசியப் போருக்குப் பின்னர் ஏதென்சு, கடலரசியாகத் தான் செம்மாந்திருந்த நிலையினின்றும் தாழ்ந்து இழிந்தபொழுது, அத்தீனிய உயர்குடியாட்சியினருக்கு (Athenian aristocrats) பிளேட்டோ அகத்தியமானதோர் அறிவுரை தந்தார். அறநிலையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அந்த அறிவுரை, "மேன்மையான பொய்களை(Noble Lies) வடித்துச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!" என்பதே. அப்பொழுதுதான் அவர்கள், பெலொப்பனீசியப் போரின் முடிவால் தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேட்டை மக்களிடையில் மறைத்து, தங்களுக்கே உரியதாகத் தாங்கள் நம்பிவந்த நாட்டாட்சியாகிய 'உயர்குடியாட்சி''(Aristocrocracy)யைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது அவர் தருக்கம். இதை, பண்டைய இந்திய ஆட்சியாளர்கள், புரோகித வர்க்கத்துடன் சேர்ந்துகொண்டு புனைந்த நான்முகன் - நால்வருணக் கோட்பாட்டுடன் குணா ஒப்பிடும் பகுதி(ப.122) ஆய்வாளர்களுக்கு விருந்தாகும். இதே இயலில் தொடர்ந்து பிளேட்டோ போன்றே மக்கள் சமமானவர்களாக வாழ்வதை விரும்பாத அவர்தம் மாணவர் அரிஸ்டாட்டிலின் கருத்தோட்டங்களை, இந்து வேதங்கள் - குறிப்பாக இருக்கு வேதம், அதன் பின்னுழைவு என்று கருதப்படும் 'புருஷசூக்தம்' ஆகியவற்றின் நால்வருணச் சாதிப்புடன் ஒப்பிட்டு ஆராயும் குணாவின் திறன் வாசித்தறிய வேண்டியதாகும். வேதங்கள் இந்திய மண்ணிலேயே பிறந்தவை, குறிப்பாக ஆரியர் அல்லாதவர்களாலேயே பெரிதும் இயற்றப்பட்டவை என்பதற்குப் பாவாணர் தம் 'தமிழர் வரலாறு' என்ற நூலில் காட்டும் எட்டுக் காரணங்களை குணா எடுத்துக்கூறியிருக்கிறார். பிந்திய சமணர்கள் வருணாச்சிரம தர்மத்தை சூழ்நிலைக்கேற்பத் தாமும் ஏற்றுக்கொள்ள முன்வந்ததை இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை தம் 'பண்டைய கேரளம்' என்ற நூலில் ஆய்ந்திருப்பதை எடுத்துக் கூறியுள்ளதோடு அதற்குத் தமிழகச் சான்றாகத் திருத்தக்க தேவர் தம் சீவக சிந்தாமணியின் இலக்கணையார் இலம்பகத்தில்(பாடல்கள் 2462 - 2469) சீவகனின் திருமணச் சடங்குகள் வைதிக முறையில் நடந்ததாகப் பாடியிருப்பதை ஒப்புநோக்கியுள்ளார். பிந்திய காலப் பௌத்தமும் அதே வருணாச்சிரம வழியில் சென்ற நிலையை எடுத்துரைக்கிறார். கிட்டத்தட்ட நூற்று அறுபது பக்கங்கள் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள 'சாதியத்தின் தோற்றம்' முதற்பதிப்பில் குணா மொழிந்த கருத்துகளையெல்லாம் குறிப்புகளாக்குவதோ கூறிமுடிப்பதோ என்னால் இயலாதவை. **** நன்றி: திண்ணை.காம்

1.5.08

வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க! -தேவமைந்தன் இலக்கிய வகைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தளர்ச்சியின்றி மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்றன. இலக்கிய வகை ஒன்று பிறப்பெடுப்பதற்கே நிகழ்சமூகத்தின் கடுமையான தூண்டுதல் தேவைப்படுகிறது. அதற்கென்றே பிறந்தவர்போல் ஒருவர், அவர் வாழும் சமூகத்தால் அப்படிப்பட்ட பணியை முடிப்பதற்கென்று உந்தப்பட்டார். அரசுப் பணியில் வெற்றியுடன் வாழ்ந்தவர். அவர் பெயர்தான் வேதநாயகம் பிள்ளை. தமிழில் முதல் புதினம்[மாற்றுக் கருத்தாளர்கள் இதற்கும் உள்ளனர்] படைக்க வேண்டிய தேவை அவருக்கு அப்படியென்ன வந்தது? 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் புதினம் என்பதற்குச் சான்றும் இந்த வினாவுக்கான விடையிலேயே தொக்கியுள்ளது. மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் - ஆங்கிலேயருக்குத் தமிழ்நாட்டில் அகத்தியம் மிகுந்திருந்த காலம். மெய்யான தமிழர்கள், தங்கள் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியல் செம்மையையும் ஆங்கிலேயர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பேரவா உற்ற காலம். அதே சமயம் ஆங்கிலேயருக்கு அவை தெரிந்தால்தான், இங்கிருக்கும் ஆங்கிலேய அடிவருடிகளும் தங்கள் அறியாமையைச் சற்றே அறிந்துகொண்டு, தங்களின் மரபு குறித்து மறைவாகவேனும் பெருமைப் பட்டுக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அத்தகைய தமிழர்களில் முதன்மையானவராக விளங்கினார் வேதநாயகம் பிள்ளை. நம் மரபுசார் ஒழுக்க விழுமியங்களும், தமிழ்மொழியின் அறநெறி மையப்படுத்தப்பெற்ற இலக்கியங்களின் சிறப்பும், தங்குதடையற்றும் மிகுந்த முயற்சி இல்லாமலும் பேசவல்ல மொழியின் இயல்பும் ஆங்கிலேயருக்குத் தெரிய வேண்டுமே என்ற 'பண்பாட்டுக் கவலை'யுடன்(1) தம் முதல் புதினத்தைப் படைத்திருக்கிறார் அவர். அதனால்தான் அதற்கு முன்னுரையை அவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். அவர் எண்ணியது போலவே 'பிரதாப முதலியார் சரித்திரம்' ஆங்கிலேயர் கவனத்தைப் பெற்றது; இங்கிலாந்தில் மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்தது. ஆங்கிலேயரை நோக்கிய பண்பாட்டுக் கவலை ஒருபுறம்; 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' என்ற ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அடிப்படை உணர்வுகூடப் பெறாமல் கொல்லை/ வயல்வேலைகளிலோ, வசதியானவர்களின் வீட்டு வேலைகளிலோ, அடுக்களைகளிலோ; ஆடவர் மட்டுமல்ல - தம்மைப் போன்ற பெண்களே தம்மை வியக்க வேண்டும் என்று அணிசெய்துகொள்வதே வாழ்வியலான மடமையிலோ மூழ்கிக் கிடந்த மகளிர், பெற்றே ஆக வேண்டிய பெண்கல்வி குறித்த சமூகக் கவலை மறுபுறம். அதைப் போக்கிக் கொள்ளவே அவர் படைத்த ஞானாம்பாள் பாத்திரம், அன்றைய தமிழ்ப் பெண்ணுலகத்துக்கு வரமாகவும் விளங்கியது அல்லவா? தமிழ்நாட்டில், முழுமையான நீதிமன்ற மொழியாகத் தமிழே விளங்க வேண்டுமென்று ஞானாம்பாள் கூற்றாக வேதநாயகம் பிள்ளை பேசுவது, ஆங்கிலக் கல்வியை அந்தக் காலச் சூழ்நிலையில் அவர் ஆதரிக்க வேண்டியிருந்த கட்டாயத்தையே புலப்படுத்துகிறது. சந்து மேனன் அப்படியல்லர். இதற்குப் பத்தாண்டுகள் பிற்பட்டு, 1889இல் மலையாளத்தில் வந்த 'இந்துலேகா' என்ற புதினத்தின் ஆசிரியர் சந்து மேனன், வேதநாயகம் பிள்ளையைப் போலவே அரசுப் பணியில் வெற்றி பெற்றவர்தாம்; மாவட்ட நீதிபதிப் பணியில் இருந்தவர். நெல்லையிலும் சந்து மேனன் பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு வேதநாயகம் பிள்ளையைக் குறித்தும், 'பிரதாப முதலியார் சரித்திரம்' குறித்தும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் பெண்கல்வியைக் குறித்த அதிக அழுத்தம் இந்துலேகாவில் பதிவாகியிருக்கிறது. ஆங்கிலக் கல்வியையே நாயர் சமூகத்துப் பெண்கள் பெறவேண்டும் என்று மேலதிகமாக விழைந்ததுதான் சந்துமேனனுக்கும் வேதநாயகம் பிள்ளைக்கும் இருந்த வேறுபாடு. தம் புதினத்தின் முதல் படியை யாருக்கு விரும்பி அனுப்பினாரோ அந்த ஆங்கிலேய நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில், "......எமது நாயர் சமூகப் பெண்கள் தமக்கியல்பாகவுள்ள அறிவுடனும் அழகுடனும் ஆங்கிலக் கல்வியும் பெற்றுக்கொண்டார்களானால் சமூகத்தில் அவர்கள் மிகுந்த செல்வாக்குப் பெறுவார்கள்..." என்று அவர் எழுதியிருப்பது அந்த வேறுபாட்டுக்கொரு சான்று.(2) தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு தேவை - சமூக, பண்பாட்டு நோக்கில் இருந்தது. அதனால், அம்மொழிகளுக்குப் புதிய இலக்கிய வகையாகிய புதினம்(நாவல்) தோன்றியது. 'கிராஃபிக் நாவல்' எனப்படும் புதியவகை. தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் இணைப்பேடான 'யூத் எக்ஸ்பிரஸ்' சொல்வதைக் கேட்போம்: இந்தியாவில் புத்தக வாசிப்பு மிகுந்துள்ள பொழுதும், இங்குள்ள 'புத்தகப் புழு'க்களில் பெரும்பாலோருக்கு, முழுவதுமான புதினங்களை முயற்சி எடுத்துக்கொண்டு ஈடுபட்டு வாசிப்பதற்குப் போதுமான நேரம் இல்லை. இன்றுள்ள, சிந்திக்கும் இளைய இந்தியன்('சிந்திக்கும்' என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்) வாசிக்கும் வழக்கத்தைவிட்டு வேறெதாவதற்கும் போகாமல் பிடித்து வைக்கவே இந்த வரைகலைப் புதினம். நாம் 'டின்டின்'(Tintin)-ஐயும் 'ஆஸ்டரிக்ஸ்'(Asterix)-ஐயும் எப்பொழுதுமே விரும்பி வாசித்து வந்திருக்கிறோம். அவை என்ன வகையைச் சார்ந்தவை என்ற தொல்லையான வகைப்படுத்தலில் வாசகருள் மிகச் சிலரே முயற்சி மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்று அவற்றைச் சொல்லி விடுவது சரியாகாது. ஏனென்றால், அவற்றுள் வரும் உரையாடல்களையும் சூழல்களையும் அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகர்களே உணர்ந்து பாராட்ட முடியும். அவை திரைக்கதை வடிவங்களல்ல; சித்திர விளக்கம் தரப்பெற்ற புதினங்களாக வடிவமைக்கப்படும் பழைய இதிகாச - புராணப் புனைகதைகளுமல்ல. ஆனாலும், 'டின்டின்'னும் 'ஆஸ்டரிக்'சும் கிட்டத்தட்ட வரைகலைப் புதினங்கள் போன்றவையே. ஒரு வரைகலைப் புதினமென்பது, அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகரை இலக்காகக் கொண்டு சித்திரக் கதை வடிவத்தில் மேற்கொள்ளும் முழுமையான புதின முயற்சி தான். அவை எப்பொழுதுமே வேடிக்கையைப் பொருளாகக் கொண்டவை அல்ல. முழுவதுமாக நேரம் ஒதுக்கி வாசிக்க முடியாதவர்களுக்கு, அதாவது 'புத்தகப் புழுக்கள்' அல்லாத 'இருக்கை உருளைக்கிழங்கு'களுக்கு(3) மிகவும் உகப்பானவை வரைகலைப் புதினங்களே. 'வரைகலைப் புதினம்'('graphic novel') என்ற இலக்கியக் கலைச்சொல்லை முதன்முதல் அறிமுகப்படுத்தியவர் - வில் எய்ஸ்னர்(Will Eisner). 1978ஆம் ஆண்டு, இத்தகைய தன் படைப்பை வாசகர்கள் 'சித்திரக் கதைப் புத்தகம்'('comic book') என்று அதைவிட வேறு வழி தெரியாமல் அழைத்தபொழுது, 'வரைகலைப் புதினம்' என்று சொல்லுவதற்கு அவர்களைப் பழக்கினார் எய்ஸ்னர். "இதெல்லாம் இங்கே, தமிழில் வர, ஆண்டுகள் பல பிடிக்கும். அதுவரை கவலைப்படாமல் 'திண்டுகளை' வாசியுங்கள்!" என்பவர்களுக்கு ஒரு செய்தி. அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் நாள்தாக்குதல்களை தொடர்ந்து எழுதப்பட்ட வரைகலைப் புதினத்தின் அத்தனைப் படிகளும்(copies) உடனடியாக விற்றுத் தீர்ந்தன. அங்கே என்ன? 2004-ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் வரைகலைப் புதினமான 'காரிடர்'('Corridor') வெளியானபொழுது, பதிப்பாளர் அச்சிட்ட முதல் பதிப்பின் 2000 படிகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்துள்ளன. அதை எழுதியவர் சார்நாத் பானர்ஜி . நிகழ்ச்சிகளுக்குச் சித்திர விளக்கம் தருவதில் தேர்ச்சிபெற்ற, திரைப்படத் தயாரிப்பாளர். ('ரே' என்று செல்லமாக அழைக்கப்படும் சத்யஜித் ரே, நினைவுக்குள் நுழைகிறார். 'பதேர் பாஞ்சாலி'' திரைக்கதையை முதலில் அவர் சித்திரங்களின் தொகுப்பாகத்தான் வரைந்து கொண்டாராம்.) அடுத்த மூன்றாண்டுகளிலேயே, சார்நாத் பானர்ஜியின் இரண்டாவது வரைகலைப் புதினமாகிய 'தி பார்ன் ஒளல்'ஸ் வொண்டரஸ் கேபர்ஸ்'('The Barn Owl's Wondrous Capers'), அணுகுமுறையிலும் உட்பொருளிலும் முழுமையாய்த் தன் முன்னோடியான முதல் வரைகலைப் புதினத்திலிருந்து வேறுபட்டு வெளிவந்து வெற்றி கண்டது. 'டிஜிட்டல் தத்தா' என்ற கதைப்பாத்திரம் முதலாவதில் போலவே இரண்டாவது வரைகலைப் புதினத்திலும் வருவது ஒன்றே ஒற்றுமை. இந்த ஆண்டின்(2008) தொடக்கத்தில் வெளிவந்துள்ள 'காரி'('kari') என்ற வரைகலைப் புதினமே இந்த வகையில் அண்மையானது. இதை எழுதியவர் அம்ருதா பாடீல் என்ற பெண் எழுத்தாளர். இந்தியாவின் முதல் பெண் வரைகலைப் புதின ஆசிரியர் என்ற புகழுக்குரியவர். சார்நாத் பானர்ஜியைப் போலவே அம்ருதா பாடீலும் - தன் புதினத்துக்குத் தானே சித்திர விளக்கங்களைத் தந்துள்ளார். வண்ணங்களுக்கும் கறுப்பு வெள்ளைத் தீட்டல்களுக்கும் இடைப்பட்டவை அவை. மும்பையில் விளம்பர நிறுவனமொன்றில் வேலை செய்யும் காரி என்ற பெண்ணே(சார்நாத் பானர்ஜியின் 'டிஜிட்டல் தத்தா' போல) 'காரி' - வரைகலைப் புதினத்தின் முதன்மைக் கதைப் பாத்திரம். வரைகலைப் புதினத்தை வரவேற்று இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ள ஆஷா பிரகாஷ் என்பவர், ஏனோ, தன் கட்டுரை இறுவாயில், "ஆனாலும் இந்தப் புதினவகை நம் நாட்டில் இன்னும் நன்றாகக் காலூன்றத்தான் வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் பரந்த அளவில் வாசகர்களைச் சென்றடைய இன்னும் அது நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது" என்றும் சொல்கிறார். சார்நாத் பானர்ஜியும் அனிந்தா ராயும்தொடங்கியுள்ள 'ஃபாண்டம்வில்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம், இந்தப் புதின வடிவத்தை உயர்த்திப்பிடிக்கவும் - இவ்வகையில் எழுத முன்வரும் எழுத்தாளர்களுக்குச் சிறப்பான தளம் அமைத்துத் தரவும் ஆகவேண்டிய முயற்சிகளைத் தளராமல் செய்து வருகிறது. அந்த வகையில், அப்துல் சுல்தான் எழுதியுள்ள 'நம்பிக்கையாளர்கள்'('The Believers') என்னும் வரைகலைப் புதினத்தை 'ஃபாண்டம்வில்' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் மொழிவடிவத்தை எழுதியவர்தான் அப்துல் சுல்தான். வரைகலையை உருவாக்கியவர் பார்த்தா சென்குப்தா. கேரளத்தின் மலைப்புரம் மாவட்டத்தின் தொலைவான சிற்றூர்களில் உணரப்படும் மதப் பொறையின்மையை அத்தகைய ஊரொன்றில் பிறந்தவரான அப்துல் சுல்தான் அதில் வெளிப்படுத்தியுள்ளார். முந்திய வரைகலைப் புதினங்களை அவற்றின் ஆசிரியர்களே உருவாக்கியது போலல்லாமல், இன்னொருவரைப் பணியமர்த்தி, தன் புனைவை அவர் வரையும் படங்களில் புலப்படுத்துமாறு செய்திருக்கிறார். நூலாசிரியரும் படம் வரைந்து விளக்குபவரும் ஒருவரேபோல் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியுள்ளதால், அவ்வாறு செய்வது மெத்தக் கடினமானது என்றும் அவர் ஒத்துக்கொண்டுள்ளார். தவிர, சிறப்பான சந்தைப்படுத்துதல் இல்லாததால், சில வரைகலைப் புதினங்கள், புத்தக விற்பனை நிலையங்களின் அடுக்குகளில் வாங்குவாரற்றுத் தேங்கிக் கிடப்பதாகவும் ஆஷா பிரகாஷ் சொல்லுகிறார். இருந்தாலும், அவை வாங்கிப் படிக்கத் தகுதியானவையே என்பது அவர் கருத்து. "வரைகலைப் புதினங்களைப் பொருத்தவரை ஒரு சிறப்பான தன்மை அவற்றுக்கு உண்டு. பொதுவான புதினத்தை வாசிக்கத் தேவைப்படும் அமைதியான மூலையொன்றோ, வாரத்தின் கடைசி நாட்களோ, வரைகலைப் புதினம் படிக்கத் தேவைப்படுவதில்லை. பெருநகரங்களில் வேலைக்குச் சென்று திரும்பும் உள்ளூர்த் தொடர்வண்டிகளோ, விமானத்துக்குக் காத்திருக்கும் வெட்டிப்பொழுதுகளோ அதற்குப் போதுமானவை" என்று அவர் வலியுறுத்துகிறார். "அடிப்படைநிலைப் பொழுதுபோக்கு, அறிவூட்டம், சிந்தனைக்கு உணவு என்ற மூன்றும் குளிகை(capsule)யொன்றில் கிடைப்பது போன்றதே வரைகலைப் புதின வாசிப்பு" என்று முத்தாய்ப்பும் வைத்துவிடுகிறார். "Say yes' என்று வெடிப்பில்(blast) புதுமையைக் கொண்ட 'Youth Express' என்னும் புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் 09/04/2008 இணைப்பின் முதற் பக்கம் முழுதும், வரைகலையில், இதுகுறித்த வலியுறுத்தல் மிகுந்து காணப்படுகிறது. அந்த உரைப்பகுதி இதோ: "இதைப் பாருங்கள்! அமி காமிக்ஸ் படிக்கிறாள்!" "அது காமிக்ஸ் இல்லடா முட்டாளே..அது ஒரு கிராபிக் நாவல்.." "அதைப் பாத்தா பழைய காமிக் புத்தகம் போலத்தான் இருக்கு!" "காமிக்சுக்கும் கிராஃபிக் நாவல்களுக்கும் வித்தியாசமிருக்கு. ஏன் நீங்க புதிய 'YES'-ஐப் படிச்சு கிராஃபிக் நாவல்களைப் பத்தி நெறைய்ய தெரிஞ்சுக்கக் கூடாது? நல்லாவும் தெரிஞ்சுக்கலாம்!" *** இந்த வரைகலை முயற்சியை, எஸ்.ஏ.பி. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த 'குமுதம்' இதழ் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து பார்த்தது. ஒரு படி மேலே போய், அந்நாட்களில் புகழ் பெற்றிருந்த கண்ணன் முதலான நடிகர்களை நடிக்கவைத்து ஒளிப்படங்களை எடுத்தும் கதைகளை வெளியிட்டது. அண்மைக் காலங்களில்கூட நடிகர்களின் முகச்சாயலில் படங்களை வரைந்து கதைகளைக் குமுதம் வெளியிட்டதாக நினைவு. ** வரைகலைப் புதினங்கள் தொடர்பாக நம் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் முன்னதாகவே விழித்துக் கொள்வது நல்லது. இதனால் ஓவியர்களுக்குச் சிறப்பான முதன்மை இலக்கிய உலகில் ஏற்படுமென்பது பாராட்டத்தக்கதே. ஆனாலும் மொழி பின்னே தள்ளப்பட்டு, சித்திரம் முன்னே வரும் வாய்ப்புள்ளது. ஓரு மூலையில் அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு, சிந்தனை ஓடுவதைக் கவனித்துப் பார்ப்போமேயானால், மொழிதான் நம் எண்ணங்களுக்குக் கனபரிமாணம் தந்துகொண்டே செல்கிறது என்பதை நாம் உணர முடியும். மொழியில்லாத எண்ணங்களை வெறுமனே எண்ண முடிந்தவர், 'சமாதி யோகம்' அறிந்தவராகத் தான் இருக்க முடியும். ரிஷிகேசில் குடில் வைத்திருந்த சுவாமி சிவானந்தரின் 'சமாதி யோகம்' நூலை, இப்பொழுதுள்ள 'கார்ப்பரேட் சாமியார்களின்' ஆரவாரத்துக்கிடையில் வாசித்துப் பார்ப்பவர்கள் இதை உணர முடியும். அதேபொழுது 'எண்ணத்தை நிறுத்துதல்'(stop-thought-process) என்னும் மனவியல் மருத்துவ உத்தியைக் குறித்துக் கூறியவர்கள்(மனவியல் மருத்துவர் மாத்ருபூதம் போன்றவர்கள்) சமாதி யோகத்தை ஏற்றுக் கொள்வார்களா என்றும் தெரியவில்லை. * ஆனால் ஒன்று உறுதி. கல்கியின் 'சிவகாமியின் சபதம்' 'பொன்னியின் செல்வன்' போன்ற வரலாற்றுப் புனைகதைகளின் அருமையை 'வரைகலைப் புதினம்' வாசிக்கும் இளைய தலைமுறை உணர முடியுமா? குழப்பமான சுவையைக் கொண்ட அதிரடி உணவை வாயிலும்(junk food) வரைகலைப் புதினங்களை மூளையிலும் திணித்துக் கொண்டிருக்கும், 'ஒருபொழுதும் வாழ்வதறியா' இளைய தலைமுறையே நீ வாழ்க! *** குறிப்புகள்: 1. இத்தொடரும் கருதுகோளும் பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) - சோ.சிவபாதசுந்தரம் ஆகியோருடையவை. 2. Chandu Menon: T.C. Sankara Menon, Sahitya Academi 1974, p.31. quoted in பெ.கோ. சுந்தரராஜன்(சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும், வளர்ச்சியும். முதற் பதிப்பு, 1977. ப.16. 3. உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, அளவுக்கதிகமான நேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே ஒழித்துக்கட்டுபவ'ர்களை 'couch potatoes' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். **** நன்றி: திண்ணை.காம்
வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர் · தேவமைந்தன் கணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக் கூடும். அவ்வாறு வாழ்ந்த வல்லிக்கண்ணன் அவர்களால் வண்ணநிலவன் என்று புனைபெயர் சூட்டப்பெற்றவரான இராமச்சந்திரன், அவற்றைத் தன் எழுத்தால் வளைத்துப் பிடிக்கவும் செறித்து வைக்கவும் சேமிக்கவும் முயல்கிறார். ‘நாலாறு மாதமாய்க் குயவனை(படைத்தோன்) வேண்டி’ உலகுக்குக் கொண்டுவந்த ‘தோண்டி’யை(உடம்பை) ‘நந்தவன’த்தில்(உலகத்தில்) ஓர் ஆண்டி(“கொ[ண்]டுவந்த தொன்றுமி[ல்]லை / இனிக் கொ[ண்]டுபோவது மொன்றுமில்லை” என்று வாழ்வதால் மனிதனை ஆண்டி என்றார் சித்தர்) கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்த கதையாய் விபத்தேபோல் பிறந்து, வேறு வழியே இல்லாமல் வளர்ந்து, வாழ்ந்த கணங்கள் வசப்படாததால் பிறந்தது முதலே செத்து, ஒருநாள் தாங்களே முற்றிலுமாகத் தொலைந்தே போய்விடும் மனிதர்களிடையே கணங்களைச் செறித்து வைக்கவும் சேமிக்கவும் இயன்றால் தங்கள் படைப்பில் உறைந்துபோக வைக்கவும் முயற்சி செய்பவர்கள் இல்லாமலா போவார்கள்? இவ்வாறு, கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடிக்கும் ‘விக்கிரமாதித்திய’ முயற்சியினூடே விளையும் தவிப்பை, ‘மனச் சிற்பங்கள்’ என்ற கதையில் படர்க்கைக் கூற்றாக வண்ணநிலவன் பதிவு செய்திருக்கிறார். “பொதுவாகவே வாழ்வு கடந்த கால நினைவுகளிலும், நிகழ்காலச் சம்பவங்களிலுமாக அல்லாடிக் கொண்டிருக்கிறது. நினைவிலும் நிஜத்திலுமாக நாட்கள் கழிகின்றன. நிஜம் நினைவுச் சருகாகி மனதை நிறைக்கிறது. இது மனதின் அவஸ்தையா, வாழ்வின் அவஸ்தையா என்பதே புரிவதில்லை. சம்பவங்களின் தொகுப்பு நாளாவட்டத்தில் நினைவுகளாய் செமித்து, நிகழ்காலத்தில் மனமொன்றவிடாமல் சஞ்சலப்படுத்துகின்றன. இச்சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்துபோகக்கூடாதா என்று மனம் ஏங்கிற்று. நிகழ்காலமும் நடப்புலகும் உறைந்து, உலகு பனிச்சிற்பம் போலாகி விடக்கூடாதா?.......எல்லோருமே இப்படி நினைவிலும் நடப்புலகிலுமாக உழன்று உழன்று சஞ்சலப்படுகிறார்களா? ஆனால் அது தன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும் துக்கமென்று நினைத்துக்கொள்வது அவனுக்கு இதமாக இருந்தது. மற்றவர்கள் ஏதோ முடிவுக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த முடிவில் நின்று கொண்டுதான் காரியமாற்றுகிறார்களென்பது துல்லியமாகத் தெரிகிறது. அந்தத் தர்க்கநிலை தன் மனதுக்கு மட்டுமேன் கூடிவரவில்லை என்பது அவனுக்கு வெகு விசித்திரமாக இருந்தது. கடந்த காலத்திய நினைவுகள் தரும் அவஸ்தையை அந்த முடிவு நிர்த்தாட்சண்யமாகச் சுருக்கிவிடும் என்ற யுக்தி தோன்றியது. எல்லோருமே கடந்த காலத்தின் துயர நினைவுகளோடுதான் வாழ்கிறார்கள். ஆனால் நிகழ்காலத்தோடு ஒன்றியைந்திருப்பதுபோல் பாசாங்கு செய்கிறார்கள்.” ‘மனச்சிற்பங்கள்’ கதை வெளியான இதழ் - ஆகவும் பொருத்தமாக, கணங்களின் முழுமையான ‘காலம்’ என்ற பெயரையே தாங்கியதும் இன்னொரு வியப்பு. ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் கூட்டிணைந்திருப்பதுதானே கடல்? கடல் என்பது அந்த ஒவ்வொரு உவர்நீர்த் துளியும்தானே? கடலிலுள்ள அந்த ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் தான் கடலல்ல; கடல் முற்றிலும் வேறானது என்று நினைப்பது போன்ற சஞ்சல உணர்வுடன்தானே ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து சலிக்கிறோம்! கடலை எண்ணி உவர்நீர்த்துளி தன்னை வேறுபடுத்திக்கொண்டு ஏங்குவதேபோல் நாம் அதைக் கடவுள் என்றாலென்ன! ‘Collective Unconsciusness’ என்றாலென்ன? ஏனோ, மெய்யுணர்வாளர் ஜே.கே. நினைவுக்குள் வருகிறார். ஜே.கே. என்று உலகத்தாரால் அன்புடன் அழைக்கப்பெறும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்த - கணங்களை வளைத்துக் கையகப்படுத்தும் முயற்சியை உறுதிப்படுத்தி வைத்தார். ஒவ்வொரு சொற்பொழிவின் தொடக்கத்திலும் இந்த முயற்சியில் விடாது இறங்கியவர் அவர். அவ்வாறே நம்மைச் செய்து பார்க்கவும் தூண்டியவர். ‘Living in the Present’ என்ற தன் வாழ்வியல் கோட்பாட்டை வெறும் கருதுகோளாகக் கொள்ளாமல், ஒவ்வொருவரும் செயல் வடிவமாக்கிக் கொள்ள, அவர் அவ்வாறு பரிந்துரைத்தார். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு நம்மைச் சூழ்ந்து நிகழும் ஒவ்வொன்றையும் எழுத்தில் பதிவு செய்து பார்க்க அறிவுறுத்தினார். ‘Conditioning And The Urge To Be Free’ என்ற பொழிவில் முதல் மூன்று பத்திகள் அதாவது ஐம்பத்தாறு வரிகளில் அவர் அந்த வித்தையைச் செய்து காட்டியிருக்கிறார். அதைப் புரிந்து கொண்டால், வண்ணநிலவன் ஆங்காங்கே குறிப்பிடுவதுபோல், விண்மீன்கள் செய்யும் ஒலியையும் நாம் கேட்க முடியும். மரஞ்செடிகளின் மணத்தையும் - ஊரைத் தாண்டிய, பனைவடலிகளின் சொந்தமான தேரிக்காட்டு மணலானது - நிலவொளியில் குளிர்ந்துபோயிருக்கும் பொழுது வெளிவிடும் விவரிக்க முடியாத மணத்தையும்; விடிவதற்குச் சற்று முன்னால் வெளிவிடும் பச்சைப் பனை ஓலைகளின் வாடையையும்; நல்ல மத்தியான வேளையில் வெளிவிடும் - எண்ணெயில் வறுத்த முறுக்கு வற்றலின் மணத்தையொத்த ஒருவிதமான காரநெடியையும் [அதே மணம் தன் தாயின் உடல்மணமாக விளங்கிய ஞாபகத்தையும் - ‘மெஹ்ருன்னிஸா’ கதை); ஆடுவளர்க்கும் கீழ்நடுத்தரக் குடும்பத்து வீட்டு வாசல் பக்கமிருந்து திடீரென்று வீசும் ஆட்டுப்புழுக்கை மணத்தையும் உணர - முகர முடியும். ‘எங்காவது குரைக்கும் நாய்கள், எப்போதாவது கேட்கும் சைக்கிள் மணிச் சத்தம்,’ ‘தோட்டத்தில் பனை ஓலைகள் காற்றில் உராயும் சத்தம்.’ ‘ஆடு, தூணில் கட்டியிருந்த அகத்திக் கீரையை மொறுக் மொறுக்கென்று அவசரத்தோடு கடித்துத் தின்கிற சத்தம்’ முதலான பற்பல ஓசைகளைச் செவிமடுக்கவும் முடியும். அடிவானத்தின் மேலே நிலவு வரும் வேளையில் பூவரச மரங்கள் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருக்கும் கோலம்; அரசியல் தொண்டன் வீட்டு வாதமடக்கி மரத்தடியில் தொய்ந்துபோன ஒரு நார்க்கட்டிலும், முதுகுப்பட்டை இல்லாத இரண்டு ஸ்டீல் சேர்களும் கிடப்பதும், அந்த வீட்டுக்கு உடையவன், தன்னைப் பார்க்க வருபவர்களை அந்த நாற்காலிகளில் அமர்த்திவிட்டு, தான் அந்த நார்க்கட்டிலின் மிகவும் தொய்ந்துபோயிருக்கும் மத்திய பகுதியில் உட்கார்ந்து சமாளிப்பதும் பிறவும் கண்டுணர முடியும். இந்தக் கண்டுணர்தல்(observation) வண்ணநிலவன் கதைகளில் சற்றுத் தூக்கலாகவே உள்ளமைக்குத் ‘தாய்’ இதழில் வெளிவந்த ‘வலி’ கதை, பானைச் சோற்றுக்கு ஒரு பதம் மட்டுமே. இந்தக் கட்டுரை வெளிவரும்பொழுது முதிய(அறுபது வயதும் அதற்கு மேலும்) வயதில் இருப்போர்க்குத் தெரிந்த ஒன்றை வண்ணநிலவன் மறவாமல் பதிவு செய்திருப்பதையும் இங்கே குறிக்க வேண்டும். இவர்களின் இளம் வயதில் இவர்கள் பார்த்துப் பழகிய இரயில்வே ஸ்டேஷன்களின் ‘ஜீவன்,’ இன்றைக்குள்ள தொடர்வண்டி நிலையங்களில் உயிர்த்துக்கொண்டிருக்கிறதா என்ன? நான் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை அரசியல் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல்லூரிக்கு மேற்கே இருந்த கோவை இரயில்வே நிலைய ‘ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டா’லில் ஆக்கபூர்வமாகக் கழித்த கணங்களும்; அங்கே ‘மாணவர் சலுகை’யில் ஆறே ஆறு ரூபாய்க்கு வாங்கிய ‘Complete Shakespeare’(E.L.B.S. வெளியீடு) புத்தகமும் மறக்கக் கூடியவையா? இது “பழசைப் பேசும்” பழக்கமல்ல. ‘டென்ஷனும் அவசரமும்,’ உண்ணும் உணவில்கூடக் கைவைத்துவிட்ட - கைவைக்க விட்டுவிட்ட இன்றைய இளந்தலைமுறைக்கு, இப்படி நீங்களும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்து பார்க்கவும் பதிவு செய்யவும் முடியும் என்று அக்கறையோடு பரிந்துரைக்கிற முயற்சி... அவ்வளவே. வண்ணநிலவன் பதிவிலுள்ள - இரண்டு தலைமுறைக்கு முந்திய(30 ஆண்டுகள் கொண்டது ஒரு தலைமுறை ) இரயில்வே ஸ்டேஷனைப் பார்த்துவிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்... “அந்த ஊரைப் போலவே அந்த ஸ்டேஷன் கூட மாறித்தான் போய்விட்டது. ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில் இப்போது யாரோ இருந்தார்கள். ஸ்டாலுக்கு எதிரே பிளாட்பாரத்தின் கூரையில் தொக்கிக் கொண்டிருந்த ‘இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?’ போர்டைக் காணவில்லை. உடனே மனம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. அந்த போர்டு இலாமல் அந்த ஸ்டேஷனை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அது இல்லாமல் ஸ்டேஷன் மூளியாகிவிட்டிருந்தது........ கூட்ஸ் வேகன்கள் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. பின்புறமிருந்த வேகன்களில் ஒன்றில் ஒரு ரயில்வே தொழிலாளி தொற்றிக்கொண்டு பச்சைக் கொடியை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் கொடியை ஆட்டிய வேகத்துக்கும் அந்த வேகன்கள் நகர்ந்து சென்ற வேகத்துக்கும் சிறிதும் இசைவே இல்லாமல் இருந்தது...... அரசமரத்தைச் சுற்றி வட்டமான சிமெண்ட் மேடை இருந்தது. அவ்விடம் பிளாட்பாரத்தின் ஒருகோடிதான் என்றாலும் ஸ்டேஷனுக்குள் இன்னும் அரச மரத்தைப் பேணி வந்தது அவனுக்கு ஏதோவொரு இதத்தைத் தந்தது. எல்லாமே இப்படிப் பழமையும் புதுமையுமாகக் கலந்துதானிருக்கின்றன போலும்... காற்றில் நிலக்கரி மணம் மிதந்து வந்தது. எங்கோ பக்கத்தில் நீராவி இஞ்சின் நின்று கொண்டிருக்க வேண்டும்...... ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டால்களுக்கும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் விவரிக்கவொண்ணாத மதுரமான தொடர்பு இருப்பதுபோல், ரயில்வே பிளாட்பார வெண்டர்களுக்கும், ஸ்டேஷன்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் தோன்றியது.” பார்வை நூல்: வண்ணநிலவன் கதைகள். சந்தியா பதிப்பகம், 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை - 600 083, தமிழ்நாடு. E-Mail: piththan@yahoo.com நன்றி: திண்ணை.காம்
'தன்னுணர்வு': பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம் - தேவமைந்தன் மிகவும் அண்மையில், புதுச்சேரி - பிரெஞ்சு நிறுவனத்தில் நிகழ்ந்து நிறைந்த மொழியாக்கக் கருத்தரங்கு வரை, மொழியாக்கம் பற்றிய கவலைகள் - பரிந்துரைகள் பற்பல வெளிவந்துள்ளன. சென்னையில் லதா ராமகிருஷ்ணன் முயற்சியில் உருவான மொழிபெயர்ப்பாளர் சங்கக் கலந்துரையாடல்களையும் அவற்றில் பகிர்ந்துகொள்ளப்பெற்ற கருத்தாடல்களையும் நண்பர்கள் வழி அறிந்திருக்கிறேன். மொழியாக்கங்களில் இதுவரையிலும் நாம் அறிந்த வகைகளுக்கப்பால் மொழியாக்கவகை ஒன்றுண்டு. தன் உள்ளத்தில் ஊறிய கருத்துகளின் ஒத்தவகைக் கருத்தாடல் பிறமொழி சார்ந்த அறிஞரொருவரின் நூலிலும் வெளிப்படக் கண்டு கிளர்ந்து, அதைத் தழுவித் தனக்கே உரிய மொழிநடையுடனும் தற்காலத்திற்கேற்ற எடுத்துக்காட்டுகளுடனும் தன்மொழியில் புதிய நூல் எழுதுவதுவே அது. அவ்வகைப்படிப் பெருஞ்சித்திரனார் படைத்த நூல் 'தன்னுணர்வு.' ஆங்கிலத்தில் எமர்சன் உருவாக்கிய 'Self Reliance' என்பதன் தமிழாக்கம். 17-01-1977 அன்று சென்னையில் 'தென்மொழி'யால் வெளியிடப்பெற்றது. வழக்கமான மொழியாக்கத்துக்குத் 'தன்னுணர்வு' வேறுபடுதலை நூலின் தொடக்கத்தில் உள்ள பாடலே காட்டி விடுகிறது. "இடுக நும் பிள்ளையை மாமலை மேல்;விளை யாடுதற்கே விடுக செந் நாய்களின் பாலினை மாந்தி வளர்க அவன்! கெடுக வன் அச்சம்! நரியொடும் நாயொடும் கேண்மையுற நடுக நீ நன் மறம் நெஞ்சில், வினையில், நரம்பிலுமே!" என்பதுவே அப்பாடல். மொழிதல் எவ்வாறு இருந்தால் அது மனிதத்திலிருந்து அறிஞத்துக்கு உயர்வதாய் விளங்கும் என்பதற்கு இப்பகுதி: "நமக்குள் தோன்றும் பொருளை நாம் உள்ளது உள்ளபடியே கூறுவோமாகில், நம் சொல்லிலும், கருத்திலும் மிகுந்த உண்மையும், ஆழமும் மட்டுமன்றித் தகுதியும் செழுமையும் உறுதியாக இருக்கும்......உன் காலத்தில், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கென்று, உன்னுள்ளே பொதிந்து வைத்துள்ள ஆற்றலையும் அதன் நிலையையும் மலர்ந்து பரவச்செய்." வாழ்க்கையின் நோக்கம் எது? ஈகையா.. இலவசத் திட்டங்களா? "ஏழைகளுக்கு உழைப்பதே உன் வேலை என்று சொல்லாதே! அதுவே அறம் என்றும் நினையாதே! அவர் தமக்கிருக்கும் உண்மையான ஆற்றலை மறக்கச் செய்து, உன் ஈகையால் மாய்ந்து போகச் செய்வது, உன் வாழ்வையும் வீணடித்து, அவர் வாழ்வையும் வீணடிப்பது ஆகும். நோயாளிகளும் பித்தர்களும் சோற்றுக்கடைக்காரனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்பதுபோல் அறங்கள், மக்கள்தம் குற்றங்களை மாற்றும் வழியென்று விலை தந்து அவற்றைப் போக்க முயல்கின்றனர். நம் வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையே! ஊரார் மெச்சுதல் வேண்டுமென்பதன்று." மெய்யான துறவியைப் பற்றியோ, அறிஞனைக் குறித்தோ அவர் வாழும் வட்டத்துக்கு முப்பது கல்(மைல்) தொலைவுக்கு அப்பாற்பட்டவர்களே அறிவார்கள் என்று இராமகிருஷ்ணர் கூறினாராம். ஏனென்றால் உருப்படியாக வேலைபார்க்கும் எவரையும் அவரைச் சுற்றியுள்ள சமுதாயம் அவ்வாறு செய்ய எளிதில் விட்டுவிடாது. இலவச மேற்பார்வை பார்த்து, வேண்டாமலேயே திறனாயும். அதைப் பெருஞ்சித்திரனாரின் 'தன்னுணர்வு' இவ்வாறு கூறுகிறது: "உன் கடன் என்ன என்பதை உன்னைக் காட்டிலும் உன்னைச் சுற்றியுள்ள மாந்தர் அறியார்...உலகத்தாரின் விருப்பப்படி நடப்பது மிகவும் எளியதே. அதேபோல் உலகத்தாரை விட்டொதுங்கி, நாம் நினைப்பதுபோல் நடப்பதும் எளிதே! ஆனால் உலகத்தார் நடுவில் இருந்துகொண்டே நம் உள் எண்ணப்படி நடப்பதுதான் கடினம். ஆனால் அதை நிறைவேற்றுபவன் மாந்தரில் மேலானவன். உனக்கு உடன்பாடற்ற செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வது உன் உள்ளத்தின் ஆற்றலைச் சிதற அடிப்பதாகும்." சில ஆண்டுகளுக்கு முன்னால் 'political complex' என்ற கலைச்சொல் சமூக உளவியலாரால் அடிக்கடி சொல்லப்பட்டது. தனக்கெனப் பாதை வகுக்காமல், தன் அரசியல் கட்சித் தலைவன் வகுத்த பாதையை மட்டுமே பின்பற்றுவதும், அவன் வகுத்த கொள்கையையே தன் கொள்கையாகப் பின்பற்றுவதும் சொல்லுவதும், எந்தக் கேள்விக்கும் தன் கட்சித் தலைவன் சொல்லும் பதிலையே சொல்லுவதும் அந்த மனச்சிக்கல் ஆகும். பெருஞ்சித்திரனார் எழுதினார்: "உன் வினைத் திறத்தைக் காட்டி உன்னை அறிமுகம் செய். ஒரு கூட்டத்தைக் காட்டி உன்னைக் காட்டாதே. ஒரு தனிப்பட்ட கூட்டத்துக்கு இணங்கியிருப்பது வெறும் குருட்டுச் செயலே. நீ எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவன் என்பது எனக்குத் தெரிந்தால் நீ செய்யவிருக்கும் சொற்பொழிவும் எனக்கு முன்பே தெரிந்ததாகவே இருக்கும். நீ பேசத் தொடங்கினால், உன் கூட்டத்தாரின் வழக்கமான எண்ணங்களைத் தவிர, உன் உள்ளத்திலிருந்து வந்ததாக ஒரு சொல்லும் இராதே! நீ ஒரு கட்சிக்கென்று வைக்கப்பெற்ற வழக்குரைஞன் ஆகிவிடக் கூடாது." 'வாக்குத் தவறுதல்' என்று ஒன்றைச் சொல்வார்கள். 'சொன்ன வாக்கைக் காப்பாற்றாதவர்' என்று ஒருவரை, "சொன்ன வாக்கைக் காப்பாற்றாத பேர்வழிகள்" பழிப்பதை உலகியல்பாக நாம் பார்க்கிறோம். சென்னைத் தமிழிலும் சொல்மாறி என்பது 'சோமாரி' என்று வழங்கியது. ஆனால் அதன் உண்மை என்ன? "பிறரிடம் முன்னே ஒன்று சொல்லிவிட்டாய் என்பதற்காக, நீ இப்போது வேறொன்றைச் சொல்ல அஞ்சாதே. உண்மையை எப்பொழுதும் போலியின்மேல் வீசியெறியலாம். முன்பின் முரணாகி விடுமோ என்ற நினைவுப் பிணத்தை உன் உள்ளத்தால் கட்டி இழுத்துத் திரியாதே. முன்பு தவறென்று நீ சொன்னவை இப்பொழுது சரியென்று பட்டால் உடனே ஒப்புக்கொள்." ஒருவகையான ஆதிக்க மனப்பான்மையைச் சிலர் தம்மைச் சூழ்ந்தாரிடையிலும் தமக்குச் சமமானவர் இடையிலும் மிக நுணுக்கமாகக் கடைப் பிடிப்பார்கள். பாதிப்புக்கு உள்ளாகுபவருக்கே அது தெரியாது. பல காலங் கழித்து அது தெரிய வரும்பொழுது உறைக்குமே.. அதற்குக் கொளுத்தும் கோடைவெயிலும் ஈடாகாது. இன்றுள்ள 'மொபைல்' எனப்படும் செல்பேசி நாகரிகத்திலும் அது உள் நுழைந்துள்ளது. அவர்கள், தங்கள் செல்பேசிக் காசைச் செலவழித்து, உங்களிடம் பேசமாட்டார்கள். நீங்கள்தான் அவர்களிடம் பேசவேண்டும். அதற்குமேல் ஒருபடி செல்பவர்களும் உள்ளார்கள். அவர்கள் உங்களுக்குத் 'துண்டிக்கப்பட்ட அழைப்பு'(missed call) அனுப்புவார்கள். நீங்கள் உங்கள் காசைச் செலவுசெய்து அவர்களுடன் பேசவேண்டும். கொஞ்சமாகப் பேசுவார்களா? அவர்கள் காசுக்குச் செலவில்லையே! தாராளமாகப் பேசுவார்கள். உங்கள் பொன்னான பொழுதும், உங்கள் குடும்பத்துக்குப் போய்ச் சேரவேண்டிய காசும், 'மொபைல்' நிறுவனங்களுக்குத்தான் போகும். இதே ஆதிக்க மனப்பான்மையைக் கருத்தாளுமையிலும் பார்க்கலாம்; பணியாளுமையிலும் பார்க்கலாம். உண்மையான ஆற்றலும் மெய்ம்மையும் உள்ளவர்கள் இந்த முறையில் நடந்து கொள்ளக் கூசுவார்கள். தாங்கள் மிகவும் வளர்ந்துவிட்டவர்களாகவும் பெயர் புகழ் பெற்றுவிட்டவர்களாகவும் நினைத்துக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள், மெய்யாகத் தாழ்வு மனப்பான்மையின் சின்னங்கள்...... பெருஞ்சித்திரனாரின் தன்னுணர்வு இவ்வாறு சொல்லுகிறது: "போலி நட்பையும், பொய் வணக்கங்களையும் இரக்கமின்றி வெட்டியெறி. தாங்களும் ஏமாந்துகொண்டு, பிறரையும் ஏமாற்றிக்கொண்டு, உன்னையும் ஏமாற்ற வரும் உன் உறவினர்கள், நண்பர்கள்தம் விருப்பப்படி நடவாதே......" "மாந்தர் ஒருவர்க்கொருவர் ஒருவரைச் சார்ந்துகொண்டும் ஒருவர்பால் ஒருவர் கையேந்திக் கொண்டுமே உள்ளனர். நமது குடும்ப அமைப்பில் பெருமையில்லை? நம் கல்வி, தொழில், திருமணம், கொள்கை முதலிய எதையும் நாம் வரையறுத்துக் கொள்வதில்லை. வலிந்த ஒரு சிலரே அவற்றை வரையறுக்கின்றனர். நாமெல்லாம் சமையலறைக் காவலர்கள் ஆகிவிட்டோம். சூழ்நிலையை எதிர்த்துப் போகும் ஆற்றல் நமக்கில்லை." கடவுள் வழிபாடு குறித்துத் திட்டவட்டமான கருத்துகளைத் 'தன்னுணர்வு' முன்வைக்கிறது: "இப்புடவியெங்கும் நீக்கமற விரிந்து சிறகார்த்து சுடர்வீசிக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றல் எதுவோ, அதுவேதான் நம்முடைய உள்ளத்திலும், உடலிலும் ஊடுருவிப் பாய்ந்துகொண்டிருக்கிறது.......நமக்குள்ள அறிவு நம்மை நாம் கண்டு கொள்ளவே அன்றி, நம்மை உண்டாக்கிய பேராற்றலை ஆராய்ந்து கண்டு கொள்வதற்காகத் தரப்படவில்லை. அதை ஆராயும்போது அது நிலைத்து விடுகின்றது. அந்தப் பேராற்றலைப்பற்றி நாம் அதிகமாகச் சொல்ல இயல்வது இவ்வளவே." [புடவி=பிரபஞ்சம்] "தனக்கென நன்மை வேண்டுமென்று இறைவனை வேண்டுவது இழிவும், திருட்டுத்தனமும் ஆகும். தனக்குண்டான வினைப்பாடுகளை உண்மையாகச் செய்வதுதான் இறைவனை வழுத்தும் மெய்யான முறை......நாம் இறைவனை நோக்கி வருந்தி வேண்டுவதும் அவனை நொந்து கொள்வதும் நம் நம்பிக்கைக் குறைவையும், உள்ளத்தின் உறுதியின்மையுமே காட்டுகின்றன." "உள்ளம் பேராற்றலின் இருக்கை; அது இறைவனின் படுக்கை. அதை விட்டு விட்டுப் பிறிதோரிடத்தில் இன்பத்தையும் நலத்தையும் வறிதே தேடித் திரிவதால், தன்னுள்ளத்து வீற்றிருக்கும் அரிய ஆற்றல் குன்றி விடுகிறது என்று ஒருவன் அறிந்துகொண்டு அவன் தன் அறிவையும் உள்ளத்தையுமே நம்பி நடப்பானாகில், அவன் வாழ்க்கை வளைவுகளெல்லாம் நேராக்கப் பெறுகின்றன. தன்னையறிந்தவுடன் அவன் நிற்கத் தொடங்குகின்றான்." இறுதியாக, உண்மையான செல்வம் எது என்பதற்குப் பெருஞ்சித்திரனார், எமர்சன் எழுதிய 'Self Reliance' நூலைத் தழுவிக் கருத்துரைத்திருப்பதை அறிவோம்: "செல்வம் என்று பொதுமக்களால் கூறப்படும் ஆரவாரப் பருப்பொருள்கள், சூதாடுபவர்களின் கைகளில் விழுவதுபோல ஒருகால் ஒருசேர வந்து விழும். மறுகால், அவரை விட்டு ஒருசேரப் போகும்.("கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கும் அதுவிளிந் தற்று" என்ற திருக்குறளை ஓர்க.) இவற்றைத் துகள்களாக எண்ணு. உன் உள்ளத்தின் வளர்ச்சியும் தூய்மையுமே, உன் உண்மையான செல்வம். அவைதாம் உனக்கு அமைதியைத் தரும்; உன்னை வெற்றி அன்னையின் மடியில் கொண்டுபோய்க் கிடத்தும். உன்னை நீயே அறி; உன்னை நீயாகவே ஆக்கிக் கொள்." **** நன்றி: திண்ணை.காம்
கொழுக்கட்டைச் சாமியார் கதை -தேவமைந்தன் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இன்று சிற்றூர்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்தான் கொழுக்கட்டைச் சாமியார் மடம் இருக்கிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? பொதுவாக, மக்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள். நதியின் வரலாற்றையும் சாமியாரின் வரலாற்றையும் விசாரிக்கக் கூடாது என்று. அப்படியே விசாரித்தாலும் கிடைப்பது உண்மையா என்று யாருக்குத் தெரியும்! ஆனால் கொழுக்கட்டைச் சாமியாருக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது என்று ஓர் உள்ளூர் அம்மாள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ஆஜானுபாகுவான அவர் வடநாட்டிலிருந்து வந்தவராம். வந்தபொழுது, அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை. வந்தபிறகும் தமிழை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை. இந்தச் சனங்களுக்கு 'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் தெரிந்தால் போதும் என்று கொழுக்கட்டைச் சாமியார் கணக்குப் போட்டார். நம்ம சனங்களைப் பற்றி அவர் கணக்கு இதில் மட்டுமல்ல, பலவற்றிலும் தவறானது பற்றி இந்தக் கதை, தான் முடிவதற்கு முன் வாக்குமூலம்போல் சொல்லிவிடப் போகிறது... அப்பொழுதுதான் தெரியும், நம்ம தமிழ்ச் சனத்தை ஏமாத்த நினைக்கிறவங்க கதி என்ன ஆகும் என்பது. சும்மாவா பாடினாரு நம்ம எம்ஜியாரு? "தவறு என்பது தவறிச் செய்வது / தப்பு என்பது தெரிந்து செய்வது / தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் / தப்பு செய்தவன் வருந்தி யாகணும்"ன்னு.. கொ.சா. திருந்தலை..வருந்தவுமில்லை.. கடைசி'ல என்ன ஆச்சு? *** அந்த ஊருக்குக் கையில் காலணாகூட இல்லாமல் அவர் வந்தார். அந்தக் காலத்திய மரக்காணம் சாலையான இந்தக் காலத்திய கிழக்குக் கடற்கரைச் சாலையில், இப்பொழுது புகழ்பெற்றிருக்கும் 'புரோட்டா'க் கடைபற்றி ஒருவரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். தற்காலம் பிரான்சிலிருந்து வருபவர்கள் ''மெனக்கெட்டுக் கார் போட்டுக் கொண்டு போய்," குறைந்த அளவு பத்துப் புரோட்டாவாவது குருமா மற்றும் பட்டாணிக் கலவையோடு காலிபண்ணி வருகிறார்கள். அதே இடத்தில் - அன்று, கொழுக்கட்டைகளைக் கூடையிலேந்திக்கொண்டுபோய் மரத்தடியில் வைத்து விற்றுப் பிழைத்திருந்தாள் ஒரு பாட்டி. வியாபாரத்துக்குப் போவதற்காக கொழுக்கட்டை சுட்டுவிட்டு குடிசைக்கு வெளியில் வந்தாள் அவள். அங்கே பசியோடு நின்றிருந்தவர், மொழி தெரியாததால், அவர் அந்தப் பாட்டிமுன் கையை ஏந்தினார். பாட்டி உடனே வீட்டினுள் ஓடி("ஓடி" என்பது, எம்.கே.டி. பாகவதர் காலப் படங்களை நினைவூட்டவேண்டும்; இல்லையென்றால், அவ்வாறு நினைவூட்டப் பெறாதவர்கள், சென்ற நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!) சூடான கொழுக்கட்டைகளை ஒரு வாழைநறுக்கில் இட்டுக் கொண்டுவந்து அந்த வடநாட்டுக்காரரின் சிவப்புக் கைகளில் தர, அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.(ரொம்பவும் சூடோ?) நன்றியுணர்வு என்று அந்தப் பாட்டி எடுத்துக் கொண்டாள். சாப்பிட்டதும், அவருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்துப்போனது. பாட்டியிடம் அந்தப் பலகாரம் என்ன என்று இந்தியில் கேட்டார். கொடுத்த பலகாரம் பற்றிக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள மொழி தேவையா என்ன?(பிரகாஷ்ராஜ் கவனிக்க) 'கொழுக்கட்டை' என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள் பாட்டி. அவரே அப்படித்தான் இருந்தார் என்பது, வேறு செய்தி. 'கொல்லுக்கட்டாய்' என்று உரக்கச் சொல்லிப் பார்த்தவர், பாட்டியால் திருத்தப்பட்டு 'கொல்லுக்கட்டை' 'கொள்ளுக்கட்டை' என்றெல்லாம் சொல்லி, மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு கொழுக்கட்டை என்று சரியாகச் சொல்ல அரைமணி நேரமாவது ஆகியிருக்கும். இதன் விளைவாக, அந்த ஊரிலேயே தங்கிக் கொண்டு, அவர் திறமையாக 'மேஜிக்' செய்ய ஆரம்பித்து, சனங்களை அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பட்டணத்திலிருந்தும் ஈர்க்கத் தொடங்கிய காலகட்டத்தில், முதல் 'சிஷ்யை'(தலைமைச் சிஷ்யை)யாக அந்தப் பாட்டிதான் ஆனார்.('ஆனாள்' என்பது, 'ஆனார்' ஆவது.. இப்படித்தான்) தலைமைச் சிஷ்யையே அனுபவசாலி ஆனதால், ஒரு கொழுக்கட்டை விற்று வந்த காசுபோல் பலமடங்கு ஒரு சீடரைச் சேர்த்துக் கொள்வதில் தேறியது. அப்புறமென்ன? மடம் வந்தது. மண்டபம் வந்தது. சீடகோடிகள் தங்குவதற்குப் பெரிய தங்குமிடம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இன்னும் என்னென்னவோ வந்தன. முன்பே சொன்னதுபோல், 'மொழி'யைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அருள்வாக்கும் சொல்லத் தொடங்கினார் அவர். அவர் சொல்லும் அருள்வாக்குகளில் கட்டாயம் கொழுக்கட்டை இடம்பெறும். அதை வைத்தே மக்களை - அவரவர்கள் மனதில் இருக்கும் சேதிகளைத் தான் சொன்னதாக அர்த்தப் படுத்திக் கொள்ளச் செய்வார் சாமியார். அப்படியே அவர்கள் குழம்பினாலும், பக்கத்தில் இருக்கும் 'சிஷ்ய'கோடிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு 'வியாக்கியானம்' எடுத்துவிட்டு அசத்துவார்கள். வந்த ஒருவர்கூட அதிருப்தியாகத் திரும்பிச் சென்றதில்லை என்றால் பாருங்களேன்! கொழுக்கட்டைச் சாமியார் என்று அவர் அன்புடன் அழைக்கப்படுவதற்குக் காரணங்களான 'அருள் வாக்கு'கள் சில......... "சாமீய்......எம் புள்ளை கெட்ட சகவாசத்தால சீர்கெட்டு திரியிறான் சாமீய்.. எப்பத்தான் அவன் திருந்துவான்?........" "திருந்துவாம்'மா.. திருந்துவான்..கொழுக்கட்டை நல்லா வேந்ததும் திருந்திடுவான்...போ..போ.. காசுபோட்டுடு.." "சாமி என்ன சொல்றாருங்க?......என்னமோ கொழுக்கட்ட... அத்த இத்த'ன்னுட்டு.." "அதுவா..ஒனக்குப் பக்குவம் இல்ல.. அதான் சாமி வெளக்கமாச் சொல்றது புரியல்ல..கொழுக்கட்டை நல்லா வேந்தாக்காத்தான் நீ அத்தத் தின்னுவே! அத்தப்போலவே ஒம் பையனுக்கு கிரகங்கள்'ல்லாம் கூடி நன்மை செய்யற காலம் வரப்போகுது.. அப்ப அவன் திருந்தீடுவான்'கிறாரு சாமி.. சரி..சரி அந்த உண்டி'ல தாரளமாப் போட்டுட்டுப் போ.. எல்லாம் நல்லா நடக்கும் போ.." (இது பக்கத்தில் உள்ள சீடர் கூற்று) விளக்கவே முடியாத மாதிரி 'சாமி' சொல்லிடுச்சுனா?... கொழுக்கட்டைப் பாட்டிக்கு ஆள் போகும். கொழுக்கட்டை சம்பந்தமான அத்தனை தொழில் நுணுக்கங்களையும் அறிந்தவரல்லவா தலைமைச் சிஷ்யையான அவர்? அப்படித்தான் ஒருநாள் ஆனது... தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை என்று முறையிட்ட, பட்டணத்திலிருந்து வந்த பணக்காரப்பெண் ஒருவரிடம் - ''ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா இப்'டியா இருப்ப....?" என்று கொழுக்கட்டை சாமியார் சொல்ல, பட்டணத்துப் பணக்காரப்பெண் அவர் 'வாக்கை' 'அசிங்கமாக'ப் புரிந்துகொண்டு அழ ஆரம்பிக்க, ஆள் போனது. ஓடி வந்தார் மேனாள் கொ. பாட்டி மற்றும் த.சிஷ்யை. ''அட, என்னாத்துக்கும்மா அழற..சாமியார் அப்படியென்ன வாக்குச் சொல்லிப் போட்டாரு?" என்று கேட்க, ப.ப.பெண் அந்த வாக்கைத் தயங்கித் தயங்கிச் சொல்ல, விபரீதம் புரிந்துகொண்டு, சூழ்நிலையை உடனடியாக மாற்றும் விதத்தில் "ஓ!'வென்று உரக்கச் சிரித்து, அதே சமயம், சாமியாருக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யர்களை "சமாளிக்கத் தெரியாத மடையன்'களா" என்று லேசர் பார்வையில் முறைத்துப் பாட்டி சொன்னதாவது: "அட என்னம்மா..சாதாரணமான விசயம் புரிஞ்சிக்காம..பட்டணத்துல பெறந்து நாலு எழுத்துப் படிச்சுட்டா சாமி வாக்கு விளங்கிடுமா...(ப.ப.பெண் முகத்தில் நம்பிக்கை - இலேசான புன்முறுவல்...இந்த 'சிக்னல்' போதாதா பாட்டிக்கு?).. நம்பணும்'மா, நம்பணும்..நம்பனவங்களுக்குத்தான்நடராசன்...நம்பாதவங்களுக்கு?..(மறந்தே போனது!) சரி..சரி அத்த விடு.. சாமி சொல்லுது.. "ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா" - அப்படின்னா இன்னா தெரியுமா..(பாட்டி மூளையில் பளீர் வெளிச்சம், டிடர்ஜெண்ட் விளம்பரத்தில் வரும் அடுத்த வீட்டு ஆண் சட்டையைப் போல)ஆங்.. ஒவ்வொரு செவ்வா வெள்ளியும் எண்ணத் தேச்சு முழுவோணும்.. கோயிலுக்குப்போய் அரச மரத்த அம்பத்தியோரு தடவை 'கொழந்த பொறக்கணும்'னு தெடமா வேண்டிக்கிட்டு சுத்திச்சுத்தி வரணும்.. குலதெய்வத்துக்கு நேந்துக்கோணும்.. ஏழ'பாழகளுக்கு அன்னதானம் பண்ணோணும்.. இத்தத்தான் சாமியார் 'சூசகமா'ச் சொன்னா புரிஞ்சுக்காம..அவர் பேரே கொழுக்கட்டைச் சாமி..பின்ன எப்படிச் சொல்வாருனு நெனைக்கிறே, நீ போயி........" நன்றியுடன் சிரித்த அந்தப் பட்டணத்துப் பணக்காரப் பெண், ஒரு நோட்டுக்கற்றையை உண்டியில் திணித்துப்போட்டுவிட்டு, கொ.சாமியார் முன் விழுந்து வணங்கி, தன்மேல் அன்புபூண்டு "உரிய" விளக்கம் தந்த தலமைச் சிஷ்யையின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு காருக்குச் செல்ல, அங்குள்ளோர் அனைவரும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். அப்புறம் கொழுக்கட்டைப் பாட்டி கைகளால் அவர்கள் மொத்துப் பட்டது கிளைக்கதை. இப்படியாக நாள்கள் இனிதே போக, சாமியாருக்கு திடீரென்று கிறுக்குப் பிடித்தது. மண்டபத்தின் சுவர்மேல் ஒருவர் கைவைத்தால் போதும். ஓடிவந்து, 'என்னோட கொழுக்கட்டை!" என்று கூவி அந்த ஆள் சுவர்மேலிருக்கும் தன் கையை எடுக்கும் வரை கலாட்டா பண்ணிவிடுவார். இன்னும் இதுபோல எத்தனையோ தலைவலிகளைக் கொடுக்கத் தொடங்கிய அவர், படிப்படியாக வளர்ந்து மண்டையிடி கொடுக்கவும் தொடங்கினார். தன் சிஷ்யகோடிகளையும் ஏன் தலைமைச் சிஷ்யையும்கூட, "இதெலாம் என் கொழுக்கட்டை.. எல்லாம் வெளிய போங்க!" என்று மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கவே, அவர்களெல்லாம் கூடி ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். அடுத்த நாள் விடியலுக்கு முன்னால்.. மத்திய அரசுப் பணியிலுள்ள கொ.சா. சீடர் ஒருவர் வந்து என்னை அவசர அவசரமாக அழைத்துச் சென்றார். விவரம் கேட்ட என்னிடம் மூச்சிறைக்க "கொழுக்கட்டை சாமி வேந்துடுச்சு!"(அதாவது முக்தி...கட்டாய ஓய்வோ?!) என்றார். போனேன். மடத்துக்குள்ளோ, மண்டபத்திலோ வைக்காமல். வெளியில் இருந்த வயலருகே அவரைக் கட்டிலின் மேல் வெள்ளைத் துணியொன்றில் போர்த்து(கட்டி!) வைத்திருந்தார்கள். 'அதன்' முன் நின்று கைக்குப்பி வணங்கினேன். கூப்பிடுவதுபோல் இருந்தது. பக்கத்தில் சென்றேன். அந்த மூட்டைக்குள்ளிருந்து "நா'ந்தான்..கொழுக்கட்டை......" என்று ஒரு தீனக்குரல். "பாவிகளா! என்ன செய்தீர்கள்?" என்பதற்குள் அங்கு திரண்டிருந்த சிஷ்யகோ(கே)டிகள் என்னை முரட்டுத் தனமாகத் தள்ளிவிட்டு, கொழுக்கட்டைப் பாட்டி/தலைமை சிஷ்யையின் ஆணையேற்று, அந்தக் கட்டிலோடு அவரைக் கட்டாய சமாதியாக்க(உயிரோடு புதைக்க) எடுத்துச் சென்றார்கள். நொந்துபோய் அங்கிருந்து நான் அகல, அம்மாள் ஒருவர் ஓடிவந்து தடுத்து, சாமியார் சமாதியானதை முன்னிட்டு, கொழுக்கட்டை வினியோகம் நடக்கிறது என்று சொல்லி வாங்கிச் சொல்லுமாறு பணித்தார். போய் வரிசையில் நின்று வாங்கினேன், வாழைநறுக்கில் ஒரு பெரிய கொழுக்கட்டையை வைத்துக் கொடுத்தார்கள். வரிசையை விட்டு வெளியே வந்தேன். அங்கு ஓர் உருவம் விரைவாக என்னை நோக்கி வரவே அருகில் பார்க்க, அதிர்ந்தேன். தலைமைச் சிஷ்யை, தன் 'கோலத்தை' மாற்றிக் கொண்டு, பழைய கொழுக்கட்டைப் பாட்டி ஆகியிருந்தார்கள். என்னருகில் வந்து, காதோடு சொன்னார்கள். "அப்பேன்! ('அப்பன்' என்னும் சொல்லின் திரிபு).. அத்தத் துன்னுடாதே..அது வேகாத கொழுக்கட்டையாக்கும்.." என்று சொல்லிச் சிரித்தார்கள்..சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.. ** காலை வெயில் உக்கிரமாக முகத்தில் அடிக்க, திடுக்கிட்டு எழுந்தேன். சந்தேகம். "நேற்று ராத்திரி ரொம்ப 'லேட்'டா பொங்கல்தானே சாப்பிட்டேன்.. ஏன் இந்தக் கனவு வந்தது?" "கனவுகள், இரவு உண்ணும் உணவுகளைப் பொருத்துத்தான்('ரு' சரிதானா, சர்சேலில் வாழும் 'புதுவை எழில்'?..) வேறுபடுகின்றன" என்று தீர்க்கமாகத் தீர்மானித்திருக்கும் துணைவியாரிடம் இனிமேல்தான் இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும்............... * பின்குறிப்பு: இந்தக் கதையில் அடைப்புக் குறிகளுக்குள் பல சேதிகளைப் போட முதலில் நான் விரும்பவில்லை. நீரோட்டமான வாசிப்புக்கு அது தடை ஆகும் என்றுதான் நம்பினேன். ஆனால், "இவன் வழக்கமாக நிறைய அடிக்குறிப்புகள் போட்டு இலக்கிய, சமூகக் கட்டுரைகள் எழுதுகிறவன்..அந்தப் புத்தியை இதிலும் காட்டிவிட்டான் பார்!" என்று எரிச்சல் அடையக் கூடாது என்றே இந்தக் 'குறைந்தபட்ச இம்சை'யைக் கொடுத்துள்ளேன். வாசித்தவர்கள் பொறுத்தருள்க. **** நன்றி: திண்ணை.காம்

16.3.08

மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர்

மாயா ஏஞ்சலு: நிறவெறியை வென்ற சாதனையாளர் - தேவமைந்தன் இரண்டாம் உலகப் போருக்கு மிக முன்பே, பால் லாரென்ஸ் தன்பார் என்ற கவிஞர் படைத்த 'கருணை' என்று பொருள்படும் 'சிம்பதி'' என்ற பாடல் புகழ் பெற்றிருந்தது. ஜே. ரோசமான்ந் ஜான்சன் என்ற இசையமைப்பாளர் அந்தப் பாடலுக்குச் சிறப்பாக இசையமைத்தார். பாடகர் ஜேம்ஸ் வெல்டன் ஜான்சன், "லிஃப்ட் எவ்'ரி வாய்ஸ் அண்ட் சிங்!' என்று கம்பீரமாகத் தொடங்கி அதைப் பாடினார் என்றால் கேட்டு உருகாதவரே இருக்க முடியாது. அந்தப் பாட்டில் இடம்பெற்ற ஒரு வரி, "கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்!" என்பது. தன் நண்பர் அப்பே லிங்கன் ரீச் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, "மாயா! ஏன் அந்தப் பாடல் வரியையே உங்களின் தன் வரலாற்றுக்குத் தலைப்பாக வைத்துவிடக் கூடாது? என்று அவர் கேட்க, அதுவே தலைப்பானது. இதெல்லாம் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்...... அதற்கும் பற்பல ஆண்டுகளுக்கு முன்பே, தனக்கு மூன்று வயதாகவும் தன் சகோதரன் பெய்லி ஜான்சனுக்கு நான்கு வயதாகவும் இருக்கும்பொழுதே, பாட்டியாரிடம் வளர அனுப்பப்பட்டவர் மார்க்கெரித்... ஆம், அதுதான் மாயா ஏஞ்சலுவின் சொந்தப் பெயர். கலிஃபோர்னியாவின் 'நீண்ட கடற்கரை' என்ற பெயருடைய 'லாங் பீச்'தான் மார்க்கெரித்தின் தாயார் விவியன் பாக்ஸ்டர் வாழ்ந்த நகரம். 'மதர் டியர்' என்று மாயாவும் பெய்லியும் தாயாருக்குப் பெயர் சூட்டியிருந்தார்கள். தன்னைப்போன்ற அழகு பெற்றவளாகத் தன் மகள் இல்லாததால்தான் அம்மா தன்னைச் சகோதரனுடன் பாட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டதாக வேடிக்கையாக மாயா இந்தப்புத்தகத்தில் சொல்லுவார்கள். மாயா ஏஞ்சலு'வின் சிறப்பே, சொல்லுவதற்கு மிகவும் உறுத்தலான சேதிகளையும் ஒருவகையான நக்கலடிப்புடன் சொல்லிச் செல்வதுதான். நிறவெறி பற்றி வரும்பொழுதுங் கூட உணர்ச்சி மிகுந்த சொல்லாடலுடன் இதே நக்கலடிப்புத்தான் கைகோத்துச் செல்லும். தன் பாட்டியின் நகரத்துக்குப் பயணம் செய்த பொழுது, நீகிரோவர்களான சக பயணிகளிடமிருந்து மாயா முதன்முதலாக ஒன்றைத் தெரிந்து கொண்டார். அவர்கள் கனத்த உணவுப் பாத்திரங்களோடு வந்திருந்தனர். தங்களுடன் பயணம் செய்யும் ஆதரவற்ற நீகிரோக் குழந்தைகளுக்குக் குளிர்ந்துபோன - வறுத்த சிக்கனும் உருளைக்கிழங்கு சாலட்டும் அன்புடன் தருவதில் முனைப்பாக இருந்தனர். மாயாவும் பெய்லியும் அந்தச் சமயத்தில் தம் தாயுடன் பயணம் செய்யாததால் அவர்களுக்கும் அதே அன்பு கிடைத்தது. பிற்காலத்தில்தான் அது ஏன் என்பது மாயா ஏஞ்சலுவுக்குத் தெரிந்தது. அச்சமுற்ற ஆயிரமாயிரம் நீகிரோ சிறுவர்கள், அமெரிக்க நாட்டின் வடக்கு-தெற்குக் குறுக்காக, நாள்தோறும், தங்களைப் புதிதாகத் தத்து எடுத்துக் கொண்ட பெற்றோர்களைத் தேடி வடக்கு நகரங்களுக்கோ அல்லது தத்து நீங்கி மீண்டும் தங்கள் பாட்டிமார்களை நாடித் தெற்கு நகரங்களுக்கோ பயணம் செய்து கொண்டே இருந்தனர். பொதுவாக, 'வடமாநிலங்களின் நகரத்துவம், தனது பொருளாதார வாக்குறுதிகளைக் காப்பாற்றாத பொழுது ' இவ்வாறான பயணங்கள் நிகழ்ந்தன. மாயாவின் பாட்டியாரின் பெயர் திருமதி ஆன்னி ஹாண்டர்சன். அர்கன்சாஸிலுள்ள ஸ்டாம்ப்ஸ் என்ற நகரில் பண்டசாலை நடத்தி வாழ்ந்தவர். 'மிகுந்த மதப்பற்றும் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையும் கொண்ட தென்னமெரிக்க நீகிரோ அம்மையார் ' என்று தன் பாட்டியைக் குறித்து மாயா ஏஞ்சலு குறிப்பிடுவார். பாட்டியின் ஒரே மகன் வில்லீ, ஊனமுற்றவர். இந்தத் தன்வரலாற்றில் கடைசியாக அவர் குறிப்பிடப்பெறும் பொழுது அவருக்கு வயது நாற்பத்திரண்டு ஆகியிருக்கும். அவர்தான் பாட்டியாரின் பண்டசாலையைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்பவர். அதன் பின்கட்டில் தங்கிக் கொள்வார். அதுவே அவர் வாழ்க்கை. 'வில்லியம் ஜான்சன் பொது வணிகப் பண்டசாலை' என்பது அதற்கு வைத்த பெயர். பலகையில் 'விம்.ஜான்சன் பொது வணிகப் பண்டசாலை' என்று இருக்கும். மாயாவும் பெய்லியும் ஸ்டாம்ப்ஸ் நகருக்கு வருவதற்கு இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பே[இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்], அந்தப் பண்டசாலையைப் பாட்டியார் தொடங்கியிருந்தார். கிழக்கு ஸ்டாம்ப்ஸைச் சார்ந்த மரமறுக்கும்தொழிலாளிகளுக்கும் மேற்கு ஸ்டாம்ப்ஸைச் சார்ந்த பருத்தித் தொழிலாளிகளுக்கும் உணவுப் பண்டங்கள் விற்பதிலிருந்து தன் வியாபாரத்தைத் தொடங்கினார். தொழிலில் விசுவாசமுள்ளவர் ஆதலால் அவர் சுவையாகச் செய்து அவர்களுக்கு விற்ற மொறுமொறுப்பான புலால் பணியாரங்களும் குளிர்ந்த எலுமிச்சைச் சாறும், ஒரே சமயத்தில் அந்த இரண்டு வெவ்வேறு இடங்களிலும் நேரம் தவறாமல் ஏற்பாடு செய்து கொடுத்த விதமும் அவருக்கு வெற்றி தேடித் தந்தன. சில ஆண்டுகள் தொடர்ந்து மேலும் அந்தத் தொழிலாளர்களுக்குத் தேவைப்பட்ட பண்டங்களை, அவர்கள் எளிதாக வந்து போகக் கூடிய இடத்தில், மரப்பலகைகள் வைத்துக் கடைபோன்ற அமைப்பில் கட்டி விற்றார். மேலும் வளர்ந்தபின், நீகிரோவர் வசிப்பிடங்களுக்கு நடுவாக பண்டசாலையை நிறுவினார். காலஞ் செல்லச் செல்ல, நீகிரோவர் வந்து கூடுமிடமாகவும் செயல்பாடுகள் பலவற்றை அவர்கள் திட்டமிடும் மையமாகவும் அது முக்கியத்துவம் பெற்றது. சனிக்கிழமைகளில் மட்டும் காட்சி வேறுபடும். அந்தப் பண்டசாலையின் விறாந்தையருகே உள்ள மரநிழலில் முடிதிருத்துபவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அமரச் செய்வார்கள். நெடுந்தொலைவு பயணம் செய்து வந்த 'ட்ர்யூபதூர்'கள் எனப்பட்ட நாடோடிக் கலைஞர்கள் தங்களின் 'தெ பிரெஃஸோஸ்' சோக கீதங்களைக் கொட்டாங்கச்சி யாழ்களிலும் சிகரெட்-பெட்டி-யாழ்களிலும் வாசிப்பார்கள். பண்டசாலையில் விற்கப்படும் உணவுப் பண்டங்கள், பலவகை வண்ண நூல்கண்டுகள், பன்றிகளுக்கான தீவனம், கோழித் தீவனமான சோளம், விளக்குகளுக்கான கரி எண்ணெய், வசதி படைத்தவர்களுக்கான மின்விளக்கு பல்புகள், ஷூக்கயறுகள், முடியலங்காரப் பொருள்கள், பலூன்கள், பலவிதமான பூச்செடிகளை வளர்ப்பதற்கான விதைவகைகள் முதலியவை அங்கே வாடிக்கையாளர் பலரை ஈர்த்தன. யாராவது அங்கே ஏதாவது இல்லை என்று சொன்னால், உடனே வாங்கி வைக்கப்பட்டுவிடும். அப்புறமென்ன? அந்தப் பண்டசாலை வெற்றிகரமாக நடந்தது என்று சொல்லவும் வேண்டுமா! வெள்ளை இனத்தவர்கூட மாயா ஏஞ்சலுவின் பாட்டியார் திருமதி ஆனி ஹாண்டர்சனிடம் அவ்வப்பொழுது கைமாற்றாகப் பணம் பெற்றுக் கொள்ளும் அளவு வியாபாரத்தில் வெற்றி பெற்றார். பணத்துக்கு நிறமாவது வெறியாவது! ஆனாலும், நிறவெறி தன் வெவ்வேறு முகங்களை அங்கங்கே காட்டிக் கொண்டுதான் இருந்தது. மாயா சொல்வதிலிருந்து மிகச் சில காட்சிகள்: "அழுக்காக இருக்கக் கூடாது!" "கீழ்ப்படியாதவர்களாக நடந்து கொள்ளக் கூடாது!" என்ற இரண்டு கட்டளைகளைப் பாட்டியார் எங்களுக்கு இட்டிருந்தார்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்பதில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டார்கள். ஏதோ எங்கள்[மாயா, பெய்லி] ஒட்டுமொத்த வாழ்வின் ஈடேற்றமே அந்தக் கட்டளைகளில்தான் தொங்கிக் கொண்டிருப்பதுபோல இருந்தது. என்ன பனியானாலும் குளிரானாலும் கேணிக்குப் போய் அதன் தூய, சில்லிட்ட நீரால் கைகால்களைக் கழுவிக் கொண்டு, வறண்ட துவாலையால் ஈரம் போகத் துடைத்து, தண்ணீரேபோல் சில்லிட்ட வாசலைனைத் தடவிக் கொண்டுதான் வீட்டுக்குள்ளேயே நுழைவோம். பிறகு வீட்டுப்பாடங்கள்; சோளரொட்டி; சுண்டக் காய்ச்சிய பால்; பிரார்த்தனைகள்; படுக்கை. இந்த வரிசை கொஞ்சமும் மாறலாகாது. நாங்கள் உறங்கியபின் போர்வையை இழுத்து எங்கள் பாதங்கள் தூய்மையாக இருக்கின்றனவா என்று சோதிக்கப் பாட்டியார் ஒருநாளும் தவறியதே இல்லை. அழுக்காக இருந்துவிட்டால், நேரம் காலம் பார்க்க மாட்டார்; படுக்கையறைக் கதவருகே எப்பொழுதும் மூலையில் சாய்ந்து காத்திருக்கும் ஒரு சுள்ளிக் குச்சி .. அழுக்காகப் பாதத்தை வைத்த 'குற்றவாளி 'யின்மேல் சுழன்றாடும். நள்ளிரவு நேரத்தில் ஒரு கேணியின் அருகே என்னவெல்லாம் சஞ்சரிக்கும் என்று பரப்பப்பட்ட கதைகளின் பாதிப்போடும் - எதார்த்தமாக அந்த நேரத்தில், அங்கே திரியக்கூடிய ஊர்வனவற்றிலிருந்தும், மெய்யாகவே ஆபத்து விளைவிக்கக் கூடிய சமூக விரோதிகளிடமிருந்தும் அந்தக் 'குற்றவாளி '[அழுக்கான பாதங்களை உடையவர்] தன்னைக் காத்துக் கொண்டு, கைகால்களை அழுக்குப் போகத் தேய்த்து வந்து ஈரம் போக்கி..வாசலைன் தடவி......மீண்டும் படுத்துத் தூங்கலாம். இத்தனைக்கும் பின்னே பாட்டியார், "கடவுள்தன்மைக்கு அடுத்து தூய்மை என்பது மட்டுமே உண்மை அல்ல; 'அழுக்கு' என்பதுதான் வறுமையையே கண்டுபிடித்த விஞ்ஞானி என்பதும் அதைவிட உண்மையானது" என்று எங்களிடம் வலியுறுத்தத் தவறியதில்லை. மேலும், "கீழ்ப்படியாத பிள்ளையை ஆண்டவர் வெறுப்பார்; அந்தப் பிள்ளையின் பெற்றோர்மேல் அவமானம் கவியும்; அந்தப் பிள்ளையின் குடும்பத்தார் சுற்றத்தார் எல்லோரும் அழிந்தே போவார்கள்!" என்றும் எச்சரிப்பார். பெரியவர்களை - 'மிஸ்டர்,' 'மிஸ்ஸஸ்,' 'மிஸ்,' 'ஆண்ட்டி,' 'கசின்,' 'அன்க்,' 'அங்கிள்,' 'புஹ்பாஹ்,' 'சிஸ்டர்,' 'பிரதர்' .. இன்னும் ஆயிரம் மரியாதைப் பெயர்களால் அவரவர் தகுதிக்கேற்பத் தெரிந்தெடுத்து அழைக்க வேண்டும் என்று இன்னும் இன்னும் எத்தனையோ அறிவுறுத்துவார். இப்படிப்பட்ட பாட்டிக்கு எவர்களால் எப்பொழுது எப்படியெல்லாம் சோதனை வந்தது தெரியுமா? பாட்டி இத்தனை சொன்னார்களே! அவையெல்லாம் எங்களுக்கு... நீகிரோச் சிறுவர்களுக்குத்தான் பொருந்தும். 'பொவைட்ரேஷ்' என்றழைக்கப்படும் வெள்ளைச் சிறுவர்களுக்கல்ல... அவர்கள் பாட்டியாரின் பண்ணைநிலத்தில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களோ, பொருளாதார அடிப்படையில் திருமதி ஹாண்டர்சனுக்குக் கட்டுப்பட்டவை. ஆனால் நிறம் வேறாயிற்றே! சில சமயங்களில் அவர்கள் கூட்டங் கூட்டமாகப் பண்டசாலைக்குள் நுழைவார்கள், மிகுந்த உரிமை எடுத்துக் கொள்வார்கள். எங்களால் தாங்க முடியாத அளவு அழிச்சாட்டியம் பண்ணுவார்கள். "வெள்ளை ஆசாமிகளிடம் எவ்வளவு குறைவாகப் பேசுகிறீர்களோ, அவ்வளவுக்கும் நல்லது!" என்று எங்கள் வாய்களைப் பாட்டியார் அடைத்து விடுவதால் எங்களால் ஒன்றுமே செய்ய இயலாது. வில்லீ மாமாவை மரியாதைக் குறைவாகப் பேசி, அதை இதை எடுக்கச்சொல்லி ஆணை இடுவார்கள். 'ஆன்னி...!' என்று அந்தச் சிறுவர் சிறுமியர் பாட்டியைப் பெயர்சொல்லி அழைத்து வேலையிட, பாட்டியாரும் அவர்கள் குறிப்பறிந்து நடந்து கொள்வதைப் பார்த்து அந்த என் பத்து வயதிலேயே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும். இன்னும் பல விதங்களில் ஆத்திரப்படுத்தும் அவர்கள், ஒரு சமயம், அநாகரிகத்தின் உச்சத்துக்கே சென்றார்கள். அவர்களுள் ஒருத்தி, "இங்கே பார் ஆன்னீ!" என்றழைத்து, என் பாட்டியாருக்கு அருவருப்பான முறையில் ஒழுங்கு காட்டினாள். பாட்டியாரோ உணர்ச்சி வசப் படாமல், தோத்திரப் பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கினார்கள். இன்னொரு சிறிய பெண் பொம்மலாட்டம் போன்ற ஒரு நடனம் ஆடினாள். மற்ற பிள்ளைகள் அதைப்பார்த்து ஊளையிட்டுச் சிரிக்கலானார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுள் பருவமடைந்து பெரியவளாக இருந்த ஒருத்தி முன்னே வந்தாள். ஒரு மாதிரி பாட்டியாரைப் பார்த்தாள். அடுத்த கணம் வெகுவேகமாகக் குனிந்தாள். தரைமேல் தன் கைகளைத் தட்டையாக அழுத்தினாள். அப்படியே தன் பாரிய உடலை அந்தரத்தில் உயர்த்தினாள். அவளுடைய அழுக்கான பாதங்களும் நீண்ட கால்களும் வானத்தை நோக்கின. அவளுடைய உடையோ சரிந்து கொண்டே வந்து அவள் தோள்களைச் சுற்றிக் கொண்டது. உள்ளாடை எதையும் அவள் அணிந்திருக்கவில்லை..உயர்த்திய தன் நீண்ட கால்களை ஒன்று சேர்த்து, தன் குறியைப் பாட்டியாருக்குச் சிறிதுநேரம் காட்டினாள். பிறகு கீழே தடுமாறிக்கொண்டு விழுந்து எழுந்து கொண்டாள். மற்ற பெண்பிள்ளைகள் எல்லோரும் அவளைச் சூழ்ந்துகொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தனர். 'படபட'வென்று கைகளைத் தட்டிப் பாராட்டைத் தெரிவித்தனர். பிறகு கொஞ்சநேரத்தில் போய்த் தொலைந்தனர். பாட்டியார் அத்தனை அழிம்புகளுக்கிடையிலும் தோத்திரப்பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் "ஆன்னி! போறோம்!" என்று கத்திக் கொண்டு போனபொழுதுகூட, "போய் வாருங்கள் மிஸ் ரூத்!" "போய் வாருங்கள் மிஸ் எலோய்ஸ்!" என்று பாட்டியார் மரியாதையாக விடை தந்தபொழுது, நான் ஆடிப்போய்விட்டேன். போயும் போயும் நிறத் திமிருக்கு இவ்வளவு மரியாதை தருவதா? போதாததற்கு வெள்ளை இளைஞர்களில் போக்கிரிக் கும்பல்களும் இருந்தன. நீகிரோவர் வெள்ளை இனத்தவருக்குச் சிறிது தவறிழைத்தாலும் கும்பலாக வந்து நீகிரோவர் இடங்களைச் சூறையாடிவிட்டுச் செல்வார்கள்; ஆள்களையும்தான். அப்படிப்பட்ட கும்பலிடமிருந்து நீகிரோவர் ஒருவரைப் பண்டசாலையில் மறைத்துப் பாட்டியாரும் மாமாவும் காப்பாற்றினார்கள். நீதிமன்றத்தில் வழக்கு வந்தபொழுது, பாட்டியார் சாட்சி சொல்லப் போயிருந்தார். கூண்டிலேறி, "திருமதி ஆண்டர்சன்" என்று தன் பெயரை அவர் சொன்னபொழுது, ஏதோ நடக்கக் கூடாதது நடந்தது போலவும் சொல்லக் கூடாததை ஒருவர் சொல்லி விட்டது போலவும் அலை அலையாய் நீதிமன்றக் கூடத்தில் சிரிப்பு எழுந்தது. நீதிபதி, குற்றஞ் சாட்டியவர் உட்பட அவையில் இருந்த அத்தனை வெள்ளையரும் உரக்கச் சிரித்தனர். அது மட்டுமா? ஓர் ஊரில், இல்லை இல்லை தன் ஊரான பைன் ப்ளஃப்'பில், பண்டசாலை ஒன்றினுக்கு 'நிறம்'உடைய ஒருவர் உரிமையாளராக இருக்க முடியுமா என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாமல் சிரித்ததில், நீதிபதிக்குப் புரையேறியே விட்டதாம். நெடுங்காலம் இதையே சொல்லிச் சொல்லி வெள்ளையர்கள் சிரித்ததில் நீகிரோவருக்குப் பெருமைதானாம். என் பாட்டியாரின் தகுதியும் கம்பீரமும் அதன்மூலம் வெளிப்பட்டுவிட்டதாக அவர்கள் கருதிக் கொண்டார்களாம்." ஒருமுறை, மாயா ஏஞ்சலுவுக்குப் பொறுக்க முடியாத பல்வலி வந்தது. ஆஸ்பிரின் மாத்திரைகளைப் பொடித்து வைத்து அடைத்தும் கிராம்புத் தைலம் இட்டும் அடங்கவில்லை. பாட்டியார் வழியை - பிரார்த்தனை முறையைப் பின்பற்றலாமே என்று நினைத்தாராம். வீட்டின் கீழ் தான் உட்கார்ந்திருக்கையில், கட்டடம் இடிந்து, கொடுமையாக வலிக்கும் பற்குழிகளையுடைய தன் இடது தாடைமேல் விழவேண்டும் என்று உண்மையாக வேண்டிக் கொண்டாராம். ஸ்டாம்ப்ஸ் நகரில் நீகிரோவரான பல் மருத்துவர் இல்லை; ஏன், அத்தகைய பொதுமருத்துவரும் இல்லை. முன்பெல்லாம் தனக்குப் பல்வலி வந்தபொழுது பாட்டியார் திடமானதொரு நூலைத் தன் சொத்தைப் பல்லைச் சுற்றிலும் கட்டுவாராம்; அதன் இன்னொரு நுனியைத் தன் வலது கை மணிக்கட்டைச் சுற்றிக் கொண்டு பலமாக இழுத்துப் பிடுங்கி விடுவாராம். இல்லையெனில் வலிநீக்கிகளைத் தருவாராம். அல்லது இருக்கவே இருக்கிறது பிரார்த்தனை, அவருக்கு. இந்த முறை அந்த மூன்றும் பலனளிக்கவில்லை. கெட்டி நூலைக் கட்டத் தேவையான குறைந்த அளவு எனாமல்கூட மீந்திருக்கவில்லை; 'சமநிலைப்படுத்தும் தேவதை,' பாட்டியாரின் பிரார்த்தனை வழிகளை அடைத்து விட்டதால் பிரார்த்தனைகளும் பலிக்கவில்லை. "சரி! வேறுவழியில்லை. நீகிரோவரான பல் மருத்துவர், இருபத்தந்து மைல்கள் தாண்டியுள்ள டெக்ஸர்கானா என்ற நகரில் இருக்கிறார். அவர்தான் நமக்கு மிக அருகில்(!) உள்ள பல் மருத்துவர். அவ்வளவு தொலைவு சென்று உன் பல்வலியை நீக்கித் திரும்புவதற்குள், நான் செத்தே போனாலும் போய்விடுவேன். இங்கே, ஸ்டாம்ப்ஸ் நகரிலேயே டாக்டர் லிங்கன் என்ற வெள்ளையரான பல்மருத்துவர் இருக்கிறார். அவர் என்னிடம் கடன்வேறு வாங்கியிருக்கிறார். அதனால் நமக்கு நல்லது செய்வார்!" என்று அழைத்துப் போன இடத்தில் நிறவெறியின் இன்னொரு குரூரமுகம் மாயாவுக்கு வெளிப்பட்டது. பல் மருத்துவர் லிங்கனின் மருத்துவ மனைக்குச் செல்லுமுன், வெந்நீரில் மாயாவைக் குளிக்குமாறு செய்த பாட்டியார், தானும் தூய்மையாக நீராடிவிட்டுப் புறப்பட்டார். மாயாவை, உள்ளும் புறமும் துவைத்துக் கஞ்சியிட்டுத் தேய்த்த புதிய ஆடைகளை அணியவைத்தார். 'லிஸ்டரின்' கொண்டு வாயைக் கொப்பளிக்க வைத்தார். வலியும் வீக்கமுமுள்ள இடது தாடையை, வேலைப்பாடுள்ள புதிய துண்டைக் கொண்டு மறைத்துக் கொள்ளுமாறு செய்தார். தூய்மையில் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை! டாக்டர் லிங்கனின் மருத்துவ மனையில் நடந்தவை அந்தத் தூய்மைக்கு முற்றிலும் எதிரானவை. ஒரு மணி நேரம் வெட்டியாகக் காத்திருந்தபின், வெள்ளை நர்ஸ் வேண்டா வெறுப்பாகக் கதவைத் திறந்து விட்டாள்; அலட்சியமாக, "உங்களுக்கு இங்கே என்ன வேலை?" என்பதுபோல் புருவம் நெறித்தாள். அப்பொழுது அங்கே வந்த பல் மருத்துவர் என்னைப் பார்க்கவில்லை; என் இடது தாடையைச் சுற்றிய துண்டையும் பார்க்கவில்லை; வீங்கிப்போன என் முகத்தையும் பார்க்கவில்லை. பாட்டியாரைப் பார்த்து, "நல்லது .. ஆன்னி! உங்களுக்கு என் உதவி என்ன தேவைப்படுகிறது?" என்று கேட்டார். "இதோ பாருங்கள்...இவள் என் பேத்தி! நான்கு நாள்களாக இரண்டு சொத்தைப் பற்கள் இவளைப் பாடாய்ப் படுத்துகின்றன!" என்று அவர் சொன்னதற்கு, அந்த டாக்டர் முகத்தில் எந்த எதிர்வினையையும் காணோம். கரகரத்த குரலில் அவர் பேச்சு மட்டும் வெளிப்பட்டது. "ஆன்னி...?" "எஸ், சார்.. டெண்டிஸ்ட் லிங்கன்." சிப்பிகளைக் கரைமணலில் தேடுவது போன்ற கவனத்துடன், அவர் சொற்களைத் தேடினார். "ஆன்னி..உங்களுக்குத் தெரியும்..'நிக்ரா'க்களுக்கு.. நிறமானவர்களுக்கு நான் வைத்தியம் பார்ப்பதில்லை.. " "டெண்டிஸ்ட் லிங்கன், அது எனக்கும் தெரியும்.. ஆனால் இவள் என்னுடைய பேத்தி.. சின்னப் பெண்..செல்லப் பெண்..இவளால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் வரப்போவதில்லை!" "ஆன்னி..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு..இந்த உலகத்தில் உங்களுக்கென்று ஒரு கொள்கை இருந்தே ஆக வேண்டும்!..இப்பொழுது, என் கொள்கை என்னவென்றால், நிறமானவர்களுக்கு நான் வைத்தியம் பார்ப்பதில்லை..." பாட்டியாரின் தோலிலிருந்த எண்ணெய்ப் பசையே காய்ந்து விட்டது போலவும் அவர்களின் தலைமுடியில் தோய்ந்திருந்த வாசலைன் உருகி ஓடுவது போலவும் எனக்குப் பட்டது... "என்னை நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்..பாவம்.. சிறு பிள்ளை..நீங்கள் அவள் பல்வலியைப் போக்கலாம்... தவிர, நீங்கள் ஓரிரு முறை என்னுடைய உதவிகளையும் பெற்றிருக்கிறீர்கள்......" பல் மருத்துவர் முகம் லேசாகச் சிவந்தது. "உதவி.. உதவி செய்தீர்கள். எல்லாப் பணத்தையும் திருப்பித் தந்துவிட்டேன்..முடிந்து விட்டது..சாரி, ஆன்னி..." கதவுக் குமிழைச் சுழன்று திறக்க அவர் கை நீண்டது.... பாட்டியார் சொன்னார்: "இதற்குமேல் உங்களை எனக்காக வற்புறுத்த நான் விரும்பவில்லை. ஆனால் என் பேத்திக்கு வைத்தியம் செய்ய மாட்டீர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மட்டும் என்னால் இயலவில்லை. நீங்கள் உதவி கேட்டு என்னிடம் வந்தபொழுது நீங்கள் பிச்சையெடுப்பதுபோல் வேண்டிக் கேட்க நான் விடவில்லை...நீங்கள் பணம் கேட்டீர்கள். உடனே கொடுத்தேன். அது, என் கொள்கையாக இல்லை. நான் வட்டிக்குக் கடன்கொடுக்கும் 'மணிலெண்டர்' தொழில் செய்யவில்லை. இதோ நீங்கள் நின்று பேசுகிறீர்களே... இந்தக் கட்டடமே உங்கள் கைகளை விட்டுப் போக இருந்தபொழுது, இதை நீங்கள் மீட்டுக்கொள்ளும்படி உடனே நான் உங்களுக்கு உதவவில்லையா?" "நான் அதையெல்லாம் திருப்பிக்கொடுத்துவிட்டேன்!.. சும்மா, உரத்துப் பேசாதீர்கள் ஆன்னி! என் கொள்கை...என் கொள்கை என்னவென்றால்..சொல்லுகிறேன்..கேட்டுக் கொள்ளுங்கள்...ஒரு நாயின் வாய்க்குள் கையை விட்டுப் பல் மருத்துவம் செய்தாலும் செய்வேனே தவிர, ஒரு நீகிரோ வாய்க்குள் அல்ல.." என்மேல் இதுவரை ஒரு பார்வையைக் கூட அவர் வீசவில்லை. பாட்டி என்னைப் பார்த்துச் சொன்னார்கள். "சிஸ்டர்![எப்பொழுதும் அப்படித்தான் என்னை அழைப்பார்கள்; நான் அவர்களை 'அம்மா!' என்றே அழைப்பேன்].... படிக்கட்டின் கீழே கொஞ்சம் போய் நில்லுங்கள்.. எனக்காகக் காத்திருங்கள்.. விரைவில் வந்து விடுவேன்!" என்று சொல்லிவிட்டு, அந்தப் பல் மருத்துவர் அறைக்குள் தடாலடியாகப் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். சிறிது நேரத்தில், அந்த அறையை விட்டு வெளிவந்து, படிக்கட்டில் இறங்கி அவர்கள் வந்தபொழுது, அலுப்பும் ஆயாசமுமாகத் தோன்றினார்கள். பிறகு, டெக்ஸர்கானாவுக்குப் பயணம் செய்து நீகிரோ பல்மருத்துவரிடம் எனக்கு முறையாக மருத்துவம் பார்த்தார்கள். பல்வலி போயே போனது. பாட்டியார்மேல் பெருமை பெருமையாக வந்தது. டெக்ஸர்கானாவுக்குப் பயணம் போய்வந்தபொழுது அந்த கம்பீரமான பாட்டியாரின் கைகள் என்னைச் சுற்றி இருந்ததும் நான் அவர்களின் குளிர்ந்த 'பிரவுன்' நிறத் தோள்மீது சாய்ந்து வந்ததுமே என் நினைவைச் சுற்றிச் சுற்றி வந்தது. பாட்டியார் அவ்வாறு யாரிடமும் தன் அன்பைக் காட்டியதே இல்லை அல்லவா? அது சரி!... 'டெண்டிஸ்ட் டாக்டர் லிங்கன்' அறைக்கு உள்ளே என்ன நடந்தது? மாயாவின் பாட்டியாரும் தெய்வபக்தி - பொருளாதார வெற்றி - வாழும் நகரில் புகழ் ஆகியவை மிக்க திருமதி ஆண்டர்சன், அந்த அறைக்குள்ளே, இனக்காழ்ப்பு மிக்க நர்ஸும் நிறவெறியைத் தொழில் கொள்கையாக ஏற்றுக்கொண்ட மருத்துவரும் ஒருசேர நடுநடுங்கும்படி சூறாவளிபோல் சுழன்றடித்து, கோடையிடி முழக்கமாய்ச் சொற்களை வீசி, தன் பேத்தி முன்னால் அவர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்புக் கேட்க வைத்து, "ஒழுங்கோடும் மரியாதையோடும் இரு! நிறவெறி துறந்து மக்களுக்குச் சேவை செய்! இல்லை என்றால் இன்று மாலையிலேயே இந்த ஸ்டாம்ப்ஸ் நகரைக் காலிசெய்துவிட்டு ஓடிப்போ!" என்று மருத்துவரை எச்சரித்துவிட்டு வந்தார் என்றுதானே மாயா ஏஞ்சலு நினைத்துக் கொண்டிருப்பார்? மெய்யாக அந்த அறைக்குள் நடந்தது என்ன என்பது, சில நாள்கள் கழித்து, பாட்டியார் தங்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில், அவர் மகனும் தன் மாமனுமான வில்லீயிடம் கமுக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததைத் தற்செயலாக மாயா கேட்க நேர்ந்தபொழுது தெரியவந்தது. பாட்டியார், மாமாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததாவது: " அன்று என்ன நடந்தது தெரியுமா!... டெண்டிஸ்ட் லிங்கன் என்னிடம் ஏக்கழுத்தமாகப் பேசினார். நீகிரோவின் வாயில் கையை விடுவதை விட, தன் கையை ஒரு நாயின் வாய்க்குள் விடுவதே மேல் என்று சொன்னார். அவருக்கு நான் செய்திருந்த உதவிகளை நினைவுபடுத்திய பொழுது, காயத்துக்குக் கட்டுப்போட்ட துணிகளைக் குப்பையில் கிடாசுவதுபோல் அவற்றை அலட்சியப் படுத்தினார். சரி. இருக்கட்டும்...... சிஸ்டரை[மாயாவை] படிக்கட்டுகளின் கீழ்த் தளத்தில் இருக்கச் சொல்லி அனுப்பினேன். டெண்டிஸ்ட் அறைக்குள் நுழைந்தேன். அவரும் நர்ஸும் திருடர்களைப்போல் முழித்தனர். நிமிர்ந்த ஊசியின்மேல் உட்கார நேர்ந்தவர்போல என்னை அங்கு பார்த்துக் குதித்த டாக்டர் லிங்கன் ஆவேசத்துடன் சொன்னார்: "ஆன்னி! நான் சொல்லவில்லையா?.. எந்த நீகிரோவின் வாய்க்குள்ளும் நான் கைவிடப்போவதில்லை என்று..." நான் கேட்டேன்: "யாராவது அதைச் செய்தாக வேண்டும் அல்லவா?" அவர் சொன்னார்: "அவளை டெக்ஸர்கானாவுக்கு அழைத்துக்கொண்டுபோய் நிறமுள்ள பல்மருத்துவரிடம் காட்டுங்கள்!......" உடனே நான் சொன்னேன்: "என் பணத்தை நீங்கள் தந்துவிட்டால், அவளை டெக்ஸர்கானாவுக்கு நான் அழைத்துப் போக இயலும்!" அவர் சொன்னார்: "ம்..ம்..எல்லாம் திருப்பித் தந்தாயிற்று!" நான் மறுத்தேன்: "வட்டி இன்னும் வரவில்லையே!..." அவர் சொன்னார்: "அப்பொழுது வட்டி பற்றி நீங்கள் பேசவில்லையே1" நான் சொன்னேன்: "அப்பொழுது வட்டிக்கான தேவை உண்டாகவில்லை..ம்..பத்து டாலர் கொடுங்கள்..நீங்கள் முழுவதுமாய்க் கடனைத் திருப்பித் தந்துவிட்டீர்கள் என்று எழுதிக் கொடுத்து விடுகிறேன்!" மாமாவைப் பார்த்து மேலும் பாட்டியார் சொன்னார்: "என்ன இருந்தாலும் அது சரியில்லைதான்..வில்லீ! ஏனென்றால், கடன் தந்தபொழுது நான் வட்டி பற்றிப் பேசவே இல்லை!.." "அப்புறம், குச்சித் துண்டு போன்றிருந்த குட்டி நர்ஸிடம் லிங்கன் சொன்னார் - "ஒரு பத்து டாலரை அந்த அம்மாவிடம் தந்துவிடு.... முழுவதுமாய் நான் கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதற்குத் தாளில் இரசீது எழுதி அவர்களின் கையொப்பத்தை அதில் வாங்கிக் கொள்!"...அந்த நர்ஸும் அவ்வாறே செய்தாள்..இரசீதுத்தாளில் கையொப்பமிட்டேன்...அவருக்குள்ள உரிமைப்படி, அந்த டாக்டர் முதலிலேயே கடன்தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பதுதான் சரி...இருந்தாலும் அவர் நடந்துகொண்ட அசிங்கமான விதமிருக்கிறதே.. அதற்காகவே அவர் அதிகப் பணம் செலுத்த வேண்டி வந்தது!" சொல்லிவிட்டுப் பாட்டியாரும்; கேட்டுவிட்டு அவர் மகனும் - அந்த வெள்ளை மனிதனின் ஈவிரக்கமற்ற தன்மையையும் அதற்குப் பழிவாங்குதலாகப் பாட்டியார் நிகழ்த்திய பாவச் செயலையும் நினைத்து நினைத்துச் சிரித்தார்கள். அவற்றைக் கேட்க நேர்ந்த மாயா ஏஞ்சலு, தன் கற்பனையில் பாட்டியார் அந்த வெள்ளை மருத்துவர் அறைக்குள் சூறாவளியாகச் சுழன்று கோடையிடி போல முழங்கினாரல்லவா.. அதுவே மெய்யாக நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்... ****** தன் வாழ்வில் நான்கு வயது முதல் பதினைந்து வயது முடிய நிகழ்ந்தவற்றையே, "கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்!" என்ற இந்தத் தன்வரலாற்றில் மாயா ஏஞ்சலு எழுதினார். அந்தப் பள்ளிப் பருவத்துக்குப் பின்னர் தன் வாழ்வில் நிகழ்ந்தவற்றை, 'என் பயணத்துக்கு எதையும் நான் எடுத்துச் செல்லப் போவதில்லை,' 'என் பெயரில் ஒன்று கூடுங்கள்,' 'ஒரு பெண்ணின் இதயம்' போன்றவற்றில் குறிப்பிட்டார். 'குடிக்கக் கொஞ்சம் குளிர்ந்த நீர் தாருங்கள்!" முதலாக ஐந்து கவிதைத் தொகுதிகள் படைத்தார். நாடக அரங்கில் 'சுதந்திரத்துக்காக காபரே' என்பதைத் தயாரித்து, இயக்கி, அதில் நடிக்கவும் செய்தார். திரை உலகிலும் தொலைக்காட்சியிலும் 'ஜார்ஜியா, ஜார்ஜியா!' என்ற புகழ் மிக்க படத்துக்கான மூலத்திரைக்கதை வடிவத்தை எழுதியதுடன் இசையமைப்பையும் கவனித்துக் கொண்டார். அமெரிக்க வாழ்க்கையில் இடம்பெற்ற ஆப்பிரிக்கர் மரபுகளைப் பற்றி, பத்துப் பகுதிகளைக் கொண்ட தொலைக்காட்சித் தொடரை உருவாக்கினார். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தென்னமெரிக்க கிறித்தவத் தலைமை மாநாட்டுக்கான வடமாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். 1975ஆம் ஆண்டில் மக்கள் தொடர்பியல் துறைக்கான 'லேடீஸ் ஹோம் ஜர்னல்' விருது பெற்றார். பற்பல கெளரவப் பட்டங்களைப் பெற்றார். அதிபர் ஜிம்மி கார்ட்டராலும் அதிபர் ஜெரால்ட் ஆர். போர்டாலும் தமக்கே உரிய உயரிய பதவிகள் கொடுத்துப் பெருமைப்படுத்தப் பெற்றார். 'அமெரிக்க ஃபிலிம் இன்ஸ்டிடூட்'டின் நெறியாளர் குழுவில் இடம்பெற்றுப் பணிபுரிந்தார். அமெரிக்கத் திரை இயக்குநர் சங்கத்தின் மிகச்சில பெண் உறுப்பினர்களுள் முதன்மையானவராய்த் திகழ்ந்தார். 'கிங்: ட்ரம் மேஜர் ஃபார் லவ்' என்ற இசைப் படைப்புக்கான பாடல்களை எழுதியவர் இவரே. "கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்!" என்ற இந்தத் தன்வரலாறு, தொலைக் காட்சித் தொடராக எடுக்கப்பட்டபோது அதன் திரைக்கதையையும் மாயா ஏஞ்சலுவே எழுதினார். 'சகோதரிகள்' என்ற தொ.கா. தொடரின் திரைக்கதையும் இவரெழுதியதே. "மாயா ஏஞ்சலுவின் அமெரிக்கா: ஓர் இதயத்தின் பயணம்" என்ற புகழ்மிக்க செய்திப்படத்தை கய் ஜான்சனுடன் இணைந்து தயாரித்தார். கடைசியாக, வட கரோலினாவிலுள்ள வின்ஸ்டன்-சேலம் நகரின் வேக் ஃபாரஸ்ட் பல்கலைக் கழகத்தில் ரெனால்ட்ஸ் பேராசிரியராகப் பணி புரிந்தார். ****** நன்றி: திண்ணை.காம்