8.8.15

இனிமையான எளிமையான தனித்தமிழ் எண்சீர் மண்டிலங்களால் தமிழ நம்பி ஐயா படைத்துள்ள 'விடுகதைப் பா நூறு', இவ்வகையில் தமிழில் முதனூல்!

2.8.15

விளம்பி நாகனார் என்ற தெளிவான புலவர்

விளம்பி நாகனார் குறித்து மிகுதியும் கூற வேண்டுவதில்லை. கீழ்க்கணக்கு நூல்களில் அடி அளவால் நாலடியார் பெயர் பெற்றதுபோல், நவில்பொருள் அளவால் - 'நான்மணிக் கடிகை' எனப் பெயர் பெற்ற நூலின் பாக்களை இயற்றியவர். [இத்தொகுப்பில் ஒவ்வொரு பாட்டும் - 'நான்கு இரத்தினத் துண்டங்கள்' [ - கொண்டது] என்பது நூற்பெயரின் பொருள். நூல் முழுவதையும் வாசிக்கச் செய்வதே நம் நோக்கம் ஆதலால், மூன்றே பாக்களின் பொருளை மட்டும் இங்கே தருகிறேன். 54ஆம் பாடற்பொருள்: "எவருக்கும் - கண்ணை விடவும் சிறந்த உறுப்பு வேறேதும் இல்லை; வாழ்க்கைத்துணையை விடவும் சிறந்த உறவினர் வேறு எவரும் இலர். பெற்ற பிள்ளைகளை விடவும் பெருஞ்செல்வம், வேறு எதுவும் இல்லை. தன்னைப் பெற்ற தாயை விடவும் உண்மையாக வேறொரு கடவுள் இல்லை." இன்னொரு பாட்டு சொல்கிறது: "இனிது உண்பான் என்பான் [ஒன்றின்] உயிர் கொல்லாது உண்பவன்; முனிவன் என்பான், தன் அடையாளம் மறைத்து வாழ்பவன்; [உண்மையிலேயே] தனிமையானவன் எவன் - என்றால், எவருக்கும் எந்த நன்மையும் செய்யாது தனக்காக மட்டுமே வாழ்பவன்; [எல்லோருக்கும்] இனியவன் என்பவன்,யார் யாரே ஆனாலும் அவர்களிடம் சாதி முதலான பேதம் பார்க்காமல் ஒருவரேபோல் கருதி நடந்துகொள்ளும் ஒழுக்கம் கொண்டவன்." 101 ஆம் பாடல்: "மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள் - தனக்குத் தகை சால் புதல்வர்; மன[து]க்கு இனிய காதல், புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும், ஓதின் - புகழ் சால் உணர்வு." #டான் பிரவுன் படைத்த 'ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்' புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். தாய்மொழிவழி சொந்தக்காரரான விளம்பி நாகனார் மனதுக்குள் வந்து அழைத்தார். "கொஞ்சம் இங்கே வந்து இளைப்பாறிச் செல்!" என்று நான்மணிக் கடிகையைச் சுட்டினார். அதனால் விளைந்தது இக்குறிப்பு :-)
[Facebook note of Puducherry Devamaindhan (பசுபதி) on 03/08/2015]