23.5.08

உலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள் - தேவமைந்தன் இன்றைக்கு அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, உலகப்போர்க் காலத்தில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று, தொகுதிகளாகப் பதிப்பிக்கப் பெற்றது. 'கதைக் கோவை' என்று அதற்குப் பெயர். பதிப்புத் துறையில் முதற்பெயர் பெற்ற அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு. அதே போர்க்காலத்தில்தான் அறிஞர் வெ.சாமிநாத சர்மா அவர்களும், இன்றைக்கும் பாராட்டத் தக்க செறிவு மிக்க நூல்களைப் படைத்தார். 'பங்கர்' எனப்பட்ட பதுங்குமிடங்களில் தாள்கற்றைகளை ஒருபுறமும் மைக் கூட்டை ஒருபுறமும் வைத்துக் கொண்டு, அவர் படைத்த புத்தகங்களின் அர்ப்பணித்தல்(dedicating) உணர்வு, உலகமயமாதலை உட்கொண்ட நிகழ்சமூகத்தின் புத்தங்களுக்கு வருமா? சாமிநாத சர்மா தமிழுக்குக் கொண்டு வந்த பிளேட்டோவின் 'தி ரிபப்ளிக்'('The Republic') என்ற நூலின் மொழியாக்கமான 'குடியரசு'தானே தமிழகத்தில் சாக்ரடீஸ் குறித்தும் பிளேட்டோ பற்றியும் அறியும் ஆர்வம் தந்தது? போர்க்காலத்திலும் படைப்புணர்வை விட்டுவிடாத தன்னுணர்வு குறித்து அவர் எழுதியுள்ள உணர்ச்சி மிக்க எழுத்துகளை பர்மாவிலிருந்து அவர் வழிநடந்த பயணம் பற்றிய 'எனது வழிநடைப் பயணம்' புத்தகத்தில் இன்றும் வாசிக்கலாம். இரங்கூனில் அவர் வாழ்ந்தபொழுது 'ஜோதி'' என்ற இதழை நடத்தியிருக்கிறார். புதுமைப்பித்தன் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பாடுகளை அதே போர்க்காலத்தில் பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு நடந்துவந்த என் தந்தையார் இரங்கூன் பி.கே.அண்ணார் கூறியும் கேட்டிருக்கிறேன். திண்ணை. காம் ஏட்டில் "ஒரு மனிதரின் கதை: பி.கே.அண்ணார்" என்ற தலைப்பில் பதிவுசெய்தும் இருக்கிறேன். அப்படிப்பட்ட காலத்தில் பதிப்பித்ததால்தான் "ஒரு புத்தகம் வெளியிடுவதில் பலவகையான தொல்லைகளுக்குட்பட வேண்டிய இந்த யுத்தகாலத்தில் இந்தப் பெரிய வெளியீட்டைப் பிரசுரம் செய்ய எங்களைக் கருவியாக்கிக் கொண்ட சர்வேசுவரன் திருவருள் இனியும் எங்கள் முயற்சிகளுக்குத் துணையாக நின்று அரண் செய்யும் என்றும், எழுத்தாளர்களும், வாசகர்களும் என்றும் குன்றாத அன்புடன் எங்களுக்கு உதவி செய்வார்களென்றும் நம்பி இந்தக் கதைக் கோவையாகிய முத்துமாலையைத் தமிழுலகத்திற்கு சமர்ப்பிக்கின்றோம்" என்று 1942-இல் அல்லயன்ஸ் பதிப்பாளர் எழுதியிருக்கிறார். அப்பொழுதெல்லாம் கதை வாசிக்கும் ஆர்வம் தமிழ் வாசகர்களுக்கு அதிகம் இருந்திருக்கிறது. சிறுகதைகளுக்கு மதிப்பு ஓங்கிய காலம் அது. ஆங்கிலத்தில் ஜாக் லண்டன் போன்றோர் கதைகளையும் ருஷ்யத்தில் டால்ஸ்டாய் கதைகளையும் இந்தி வங்காளிக் கதைகளையும் மொழிபெயர்ப்பில் படித்த நிலை ஓய்ந்து, தமிழ் எழுத்தாளர்கள் தாங்களே சொந்தமாகப் படைத்த சிறுகதைகளை வாசகர்கள் விரும்பிப் படிக்கத் தொடங்கிய காலம் அது.(1930-1940) சென்ற நூற்றாண்டின் முப்பதுகளின் கடைசியிலேயே வ.வே.சு.ஐயர், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ஆகியோர் படைத்த கதைகள் தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின. அப்படி அரசியல் துறையில் பெயர்பெற்றவர்களின் சிறுகதைகள் தொகுப்புகளாக வெளிவந்த நிலை சற்று மாற்றம் கொண்டு, புத்தக உருவத்தில் கொண்டு வருவதற்கு முடியாத திறமைசாலிகளின் தனித் தனிச் சிறுகதைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியே 'கதைக் கோவை'யின் முதல் இரு தொகுதிகள். மூன்றாவது தொகுதியும், அதற்கு மேலும்கூட வந்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. இந்தத் தொகுதிகளில் தொண்ணூறு சிறுகதைகள் வெளிவந்தன. இவற்றில், ஆனந்த விகடன், கலைமகள், சந்திரோதயம், கல்கி, இந்துஸ்தான், தினமணி மலர்கள், சில்பஸ்ரீ, ஜகன்மோகினி, மணிக்கொடி, நவசக்தி, சுதந்திரச் சங்கு, பாரதமணி, லோகோபகாரி ஆகிய இதழ்களில் முன்பே வெளியாகியிருந்த கதைகளும் அடக்கம். சிறுகதைகளை அவற்றின் வடிவம் பற்றிய விழிப்புணர்வோ உள்ளடக்கம் பற்றிய அலசலோ இல்லாமல் 'நிம்மதி'யாக வாசித்த காலமல்லவா அது? இல்லாவிட்டால், வை.மு.கோதைநாயகி அம்மாள் எழுதிய 'காலச் சக்கரம்' சிறுகதை, இருபத்து மூன்று பக்கங்களைக் கொண்டிருந்து, வாசகர் உள்ளங்களை வென்றிருக்க முடியுமா? 'ஜகன்மோகினி'' இதழில் இது வெளிவந்தது என்ற குறிப்பும் இருக்கிறது. அந்தக் காலத்தில் 'மணிக்கொடி' இதழில் வெளிவந்த புதுமைப்பித்தனின் 'துன்பக் கேணி' யும் பக்க அளவில் பெரிய சிறுகதைதான். 'காலச் சக்கர'மும் 'துன்பக் கேணி'யும் கிட்டத்தட்ட ஒரே காலத்தைச் சார்ந்தவைதாம்(20ஆம்நூற்றாண்டின் முப்பதுகளின் நடுப்பகுதி) எனினும், இவை இரண்டுக்கும் நடையிலும் சொற்கட்டுமானத்திலும் சொல்ல வரும் பொருளின் சமூக நோக்கின் அழுத்தத்திலும் கதைசொல்லலிலும்தான் எத்தனைப் பெரிய இடைவெளி? வை.மு.கோதைநாயகி அம்மாளின் 'காலச் சக்கரம்' சிறுகதையும் சரி, புதுமைப் பித்தனின் 'துன்பக் கேணி'யும் சரி - இரண்டுமே தம் அடிப்படைச் சித்தரிப்பில் ஒன்றுபடுகின்றன. இரண்டுமே எதிர்மறை நோக்கில் சமூகத்தைப் பார்ப்பவைதாம். மனப்புழுக்கம், விரக்தி, வேதனை முதலான எதிர்மறை உந்துதல்கள் இவ்விரண்டிலுமே சம அளவில் இருக்கின்றன. ஆனாலும் வை.மு.கோதைநாயகி அம்மாளின் 'காலச் சக்கர' சுபாஷிணிக்கும் புதுமைப் பித்தனின் 'துன்பக் கேணி' மருதிக்கும் ஆகவும் பெரிய பாத்திரகுண இடைவெளி விழுந்திருக்கிறது. 'இடைவெளி'தான் இறப்புநிலை என்றல்லவா காலஞ்சென்ற எழுத்தாளர் சம்பத், அதே தலைப்பிலான தன் நெடுங்கதையில் கருத்துரைத்தார்? சமகாலத்தில் இரண்டு படைப்பாளிகளின் படைப்புகளிலுள்ள இந்த இடைவெளியைக் குறித்து சமூகவியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், என்னென்னவோ உண்மைகள் எழும். பணத்தின் பின்னே போய்விட்ட பாஸ்கரனை நினைத்து நினைத்து மறுகி மடியும் சுபாஷிணிக்கும்(காலச் சக்கரம்); ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து, திருநெல்வேலியின் குறுஞ்சிற்றூரொன்றில் பண்ணைக்கு அடிமைப்பட்டவனுக்கு மனைவியாக நேர்ந்ததால் பண்ணையின் கையாளான தலையாரித் தேவனின் அடி உதைகளுக்கு ஆட்பட்டு, தன் வாழ்க்கையின் அடுத்த கட்டமான இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை ஸ்டோர் மேனேஜரின் காமத்துக்கும் உட்பட்டு, பாட்ரிஸன் ஸ்மித் துரையின் கொடையான 'பரங்கிப் புண்'ணையும் வாங்கிக் கொண்டு, சந்தேகம் என்ற ஒன்றின் பேரால் கங்காணிச் சுப்பனின் மூர்க்கமான தாக்குதல் தந்த கொடிய விளைவுக்கும் உடல் நலத்தை அழித்துக் கொண்டு, தம் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளும் தேயிலைப் பெண் தொழிலாளிகள் சிலரின் வழக்கமான தீர்மானத்துக்கு மட்டும் அறவே இடங்கொடுக்காமல் தன் தலைமுறையிலும் தன் மகள் வெள்ளைச்சியின் தலைமுறையிலும் விடாது போராடும் மருதிக்கும்தான்(துன்பக்கேணி) எவ்வளவு பெரிய வாழ்வின் - இருப்பின் - உயிர்த்திருத்தலின் இடைவெளி? சாதியளவிலும் கூட, இவ்விரு படைப்பாளர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளில் உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட இரு வேறு சாதிகளில் பிறந்தவர்களில் ஒருவர், உயர்சாதிப் பெண்ணொருத்தியின் கருத்தியலால் அவள் வீழும் வீழ்ச்சியைக் குறிக்க இருபத்து மூன்று பக்கங்களை எடுத்துக் கொள்ள; மற்றவர், ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணொருத்தியின் சளைக்காத - நடப்பியல் சார்ந்த - உடலால் வீழ்ந்தாலும் உள்ளத்தால் வீழாத போராட்ட வாழ்வைக் குறிக்க முப்பத்தெட்டுப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்! இதை வெறும் அளவுக்குக்காகவே குறிக்கிறேன். மற்றபடி எடுத்துக் கொள்ளும் பொருளின் உட்கிடக்கைதான் முதன்மையானது. அல்லயன்ஸின் வெளியீடான 'கதைக் கோவை'யில் கூர்மையான வாசகரின் புருவங்களை உயர்த்த வல்லதொரு சிறுகதை, அ.நா. சிவராமன், பி.ஏ. அவர்கள் எழுதிய "நாலு' அவுன்ஸ் பிராந்தி" என்பது. இதுவும் மணிக்கொடியில் தான் வந்திருக்கிறது. முற்றிலும் நாம் உள்வாங்கிக்கொள்ள முடியாத 'தாம்பத்திய'த்தை அடிநாதமாகக் கொண்ட சிறுகதை. அளவு ஏழரைப் பக்கங்கள்தாம். உணர்த்தாமல் உணர்த்தும் உட்கிடக்கையோ பெரிது. சொல்லாமல் விட்டுவிட்டவற்றை வாசகர்களே புரிந்துகொள்ள வைக்கும் உத்தியைக் கொண்ட, அன்றைய நிலைக்கு வேறுபாடான கதைசொல்லல். அன்றாடம் சந்திக்க நேரும் வாழ்க்கை உண்மைகள் தரும் படிப்பினைகளால் சிராத்தம்(சொல் - கதையிலுள்ளவாறே)போன்ற - இறப்புக்குப் பிந்திய சடங்குகள் குறித்துக் கொஞ்சமும் நம்பிக்கை கொள்ள முடியாத கணவன், தன் தீரா நோய் நிலையிலும் தனக்கு வேண்டியவற்றை முழு ஈடுபாடு கொண்டு செய்யும் கணவனிடம் மட்டும் முழுநம்பிக்கை கொள்ளாமல், மடி, சிராத்தம், பிதிர்தோஷம்(சொற்கள் - கதையிலுள்ளவாறே)ஆகியவற்றில் அளவில்லாத நம்பிக்கை கொள்ளும் நோயாளி மனைவி ஆகிய இருவரும் இதில் முக்கியமான பாத்திரங்கள். கோமதி என்ற பெயருடைய அவள், தான் நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த - 'பிராணன்' போகும் நொடிப்பொழுதை, தானே எதிர்பார்க்க முடியாதவாறு சந்திக்கும்படி அவள் கணவன் திட்டமிடாமல் செய்துவிடும் விலங்குணர்வு(id)ச் செயல் இந்தக் கதையின் திருப்புமுனை. முடிவில் தன் நண்பன் கிட்டுவிடம், தன் செயலை மறந்து அன்றைய நாளிரவு தூங்க அவன் வாங்கி வரச் சொல்லிக் கேட்கும் நான்கு அவுன்ஸ் பிராந்தி கதைத் தலைப்புக்குக் காரணம். இடையில், தனக்கு வழக்கமில்லாத கடன் வாங்க நண்பன் கிட்டுவைச் சந்திக்கத் திருவல்லிக்கேணிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்பொழுதில், பேருந்தில், தன் தோற்றத்தை நோக்கி நடத்துநர் கொள்ளும் நம்பிக்கையை அரையணாவுக்காக ஏமாற்றும் புத்திசாலித்தனமும், முடிவில் நண்பனை வாங்கிவரச் சொல்லும் நான்கு அவுன்ஸ் பிராந்தியும் அவன் ஏற்றிருக்கும் காந்தியடிகளின் கொள்கைக்கு எதிர்ப்பானவை. "பின்பற்றுபவர்கள் குருவை அழிக்கிறார்கள்"("Followers destroy their Guru") என்ற ஜே. கிருஷ்ணமூர்த்தியின் வாக்கியத்துக்கு இந்தக் கதையைவிடவும் விளக்கம் ஒன்றிருக்குமா? "சுகி" அவர்கள் எழுதிய 'நல்ல பாம்பு' என்ற கதை, இந்தக் கோவையில் உள்ளது. கதைக் கோவை இரண்டாம் தொகுதிக்கென்றே "சுகி" இதைப் படைத்திருக்கிறார் என்று பதிப்புரையின்வழி ஊகிக்க இடமுள்ளது. கதையில் வரும் பாம்பாட்டி முனியனும் அவனுடைய இரு புதல்வர்களான நாகப்பனும் ரங்கப்பனும் முனியனின் தங்கை மகளான செங்கமலமும் வாசகர் உள்ளங்களைப் பிணைத்துக்கொள்ளும் பாத்திரங்கள். ஒன்பதரைப் பக்கங்களை எடுத்துக் கொண்ட கதையில் இடம்பெறும் இருளர் வாழ்வை "சுகி" அவர்கள் உடனிருந்து அறிந்து கொள்ளாமல் அல்லது நன்கு விசாரித்து அறிந்து கொள்ளாமல் இவ்வளவு தெளிவாகப் படைத்திருக்க முடியாது. ஒரு பெண்ணால், ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிக்குள் பிளவும் அண்ணனுக்குக் குரூரமும் வருவது புதிய கதைக் கரு அல்லவென்றாலும் கதை சொல்லப்பட்ட முறை சிறப்பாக உள்ளது. 1994இல் இந்தக் 'கதைக் கோவை'யின் தொகுதிகள் மீண்டும் வெளியிடப்பட்டிருப்பதால் சிறுகதை வளர்ச்சி வரலாற்றில் ஈடுபாடு கொண்ட நண்பர்கள் இவற்றை ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதிச் சமூகம் குறித்துக் கதைகள் வழியாக அறிய விரும்புகிறவர்களும் வாசிக்கலாம். அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை மயிலை ராமகிருஷ்ணா மடத்துச் சாலையில் இருக்கிறதென்று நினைக்கிறேன். **** நன்றி: திண்ணை.காம்
சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள் - தேவமைந்தன் பெங்களூரு நகரிலும் தமிழ்நாட்டிலுமுள்ள தூயதமிழ் நாட்டமுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களால் அன்புடனும் தோழமையுடனும் அறிஞர் குணா என்று அழைக்கப்படும் திரு சாமுவேல் குணசீலன், கோலார் தங்கவயலில் 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்தவர். தந்தையார் திரு அ.மா.து. சாமுவேல் அவர்கள். தாயார் திருமதி மனோன்மணி அவர்கள். ஏந்துகள் மிக்க வங்கிப் பணியைத் துறந்து மக்கள் இயக்கங்களில் இறங்கிப் பாடாற்றிய அறிஞர் குணா, கருநாடகச் சிறைகளில் பலமுறை இருந்தவர். அண்மைய நெடுஞ் சிறைக்காலத்துக்குப்பின் மக்கள் உரிமை இயக்கத்தின் தொடர்ந்த முயற்சிகளால் விடுதலை பெற்றவர். இவரைப் போற்றிய தூயதமிழ் இயக்கம் சார்ந்த அறிஞர்களில் திராவிட இயக்கத்தின்பால் பற்றுக் கொண்டவர்கள் வெறுத்தாலும் சரி என்று 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்ற ஆய்வைத் துணிந்து வெளிப்படுத்தியவர். அந்த ஆய்வின் முடிபுகள், நம் திண்ணை வலையேட்டின் மே 1, 2008 பதிவேற்றத்தில், தோழர் எஸ்ஸார்சி தந்துள்ள குறிப்புகளாக வெளிவந்துள்ளன. குணாவின் ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, அவர் அறிவாற்றலின் தோழர்கள் அமைத்துக் கொண்டதுதான் 'FORT' என்ற அமைப்பு. 'Forum For Research On Tamilnadu' என்பது இதன் விரிவாக்கம். பெங்களூரு நகரில் 'டிஸ்பென்ஸரி சாலை' 48ஆம் இலக்கத்தில் இது இயங்கத் தொடங்கியது. இதுவே 'தமிழக அரண்' என்று பின்னர் பெயர் தாங்கியதாக நினைக்கிறேன். குணாவின் சிறந்த ஆராய்ச்சிகளாக எனக்குத் தெரிந்தவை பின்வருமாறு: 1. சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) 2. தமிழர் மெய்யியல்(1980) 3. Marxist Dialectics(1983) 4. Asiatic Mode - A Socio-cultural Perspective(1984) 5. தமிழியப் பொதுவுடைமை(1985) 6. மார்க்சியமும் பெரியாரியமும் 7. மார்க்சிய இயங்கியல் 8. தமிழீழ அரசியலின் அகப்புற அழுத்தங்கள் (கட்டுரை)(1985) 9. இந்தியத் தேசியமும், திரவிடத் தேசியமும்(1986) 10.தமிழ்த் தேசிய இனச் சிக்கல் - உலக நம்பிகளின் இயங்காவியல்(The Metaphysics of the Abstract Internationalists)(1987) 11.வகுப்பும் சாதியும் வரணமும்(1988) 12.திராவிடத்தால் வீழ்ந்தோம் (1994) இவற்றுள் முதலாவதை இக்கட்டுரையில் பார்ப்போம். சாதியத்தின் தோற்றம் (Origin of Casteism)(1972, 1974, 1979) இந்நூலை 1972ஆம் ஆண்டே குணா எழுதினார். மூன்றாண்டுகளுக்குப் பின், அச்சுக்குத் தந்துவிட்டு வீடு திரும்பிய போது, 'மிசா'வின்கீழ் சிறையிடப்பெற்றார். இதன் சுருக்கத்தை 1974ஆம் ஆண்டே, 'Origin Of Casteism - An Integral Theory' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார். அதற்குப்பின் ஐந்து ஆண்டுகள் கழித்துத் தமிழில் முழுமையான வடிவம் பெற்று ஆறு ரூபாய் விலைக்கு 1979 சனவரியில் வெளிவந்தது. கோயம்புத்தூர் உப்பிலிபாளையத்தில் தென்றல் நூலகத்தால் வெளியிடப்பட்டது. அதற்கு முன் அத்தகைய சிந்தனை தமிழில் - தூயதமிழில் வெளிவந்ததில்லை. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணருக்கு மிகவும் பிடித்த குணாவின் ஆய்வு இது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், பாவாணருக்கு இடதுசாரிச் சிந்தனைகள்மேல் ஈடுபாடு இருந்ததில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவராக விளங்கியவர் பாவாணர். அப்படிப்பட்டவரையே ஈர்த்த நூல் 'சாதியத்தின் தோற்றம்.' "சாதியம் என்பது ஒருவகைப் பொருளியல் - சமுதாய வாழ்க்கை முறை. இன்றைய அரை நிலவுடைமைச் சமுதாயத்தின் அரசியல், பண்பாட்டுத் துறைகளின் உள்நோக்கமாகவும் அது அமைகின்றது. அச் சாதியத்திற்கு, அதற்கே உரிய கட்டுமானங்கள் உண்டு; தனி வடிவமைப்புகள் உண்டு. அவ் வடிவமைப்புகள் அதற்கேயுரிய உருவவியலைப் படைக்கின்றன. அச் சாதியத்திற்குத் தனித்த உள்ளியக்கமும் உண்டு. அவ்வுள்ளியக்கமே அதனை நீட்டிக்கும் உள்ளாற்றலாகும்" எனத் தொடங்கி, சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இயக்கம் பற்றிய சிக்கலைப் பொருள்முதல் இயங்கியல் என்னும் மார்க்சிய முறையில் அணுகி, அவற்றின் காரணங்களைப் பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம், பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம் ஆகிய அகநிலை(பண்பாட்டுக் காரணம், மதக் காரணம், உளவியல் காரணம்)க் காரணங்கள் மூன்றாகவும் புறநிலைக் காரணங்கள் மூன்றாகவும்(பொருளியல் காரணம், சமுதாயவியல் காரணம், அரசியல் காரணம்) பகுத்து, ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராய்ந்திருக்கிறார். அறிவாராய்ச்சியியல்(epistemology), மார்க்சீயச் சிந்தனையியல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமல்லாமல் அம்பேத்கர் சிந்தனையியலில் ஈடுபாடு கொண்டவர்களும் வாசித்தறிய வேண்டிய ஆராய்ச்சி இது. இதில் உள்ள நான்காம் - அகநிலைக் காரணமான - பண்பாட்டுக் காரணம் குறித்த ஆய்வில் டாக்டர் பாபுராவ் சாகேப் அம்பேத்கர் அவர்களின் 'Castes in India - their Mechanism, Genesis and Development' என்ற நூலில் இடம்பெறும் அறிஞர் கப்ரியேல் தார்த் கண்டறிந்த 'போலி நடத்தை விதிகளை' சாதியத்தின் தோற்றத்துக்கு அறிவியல் விதிகளாக அம்பேத்கர் எடுத்தாள்வதைக் குணா திறனாய்ந்திருப்பதை மீள்வாசிப்பில் தலித்தியக் கொள்கை அறிஞர்கள் திறனாய்ந்திருக்கிறார்கலா என்று எனக்குத் தெரியவில்லை. நண்பர்கள் எவரேனும் தெரிவித்தால் பயன்பெறுவேன். ஐந்தாம் இயலான மத/சமயக் காரணம் பற்றிய பகுதி... பண்டைக் கிரேக்கத்தில் பெலொப்பனீசியப் போருக்குப் பின்னர் ஏதென்சு, கடலரசியாகத் தான் செம்மாந்திருந்த நிலையினின்றும் தாழ்ந்து இழிந்தபொழுது, அத்தீனிய உயர்குடியாட்சியினருக்கு (Athenian aristocrats) பிளேட்டோ அகத்தியமானதோர் அறிவுரை தந்தார். அறநிலையாளர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அந்த அறிவுரை, "மேன்மையான பொய்களை(Noble Lies) வடித்துச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!" என்பதே. அப்பொழுதுதான் அவர்கள், பெலொப்பனீசியப் போரின் முடிவால் தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேட்டை மக்களிடையில் மறைத்து, தங்களுக்கே உரியதாகத் தாங்கள் நம்பிவந்த நாட்டாட்சியாகிய 'உயர்குடியாட்சி''(Aristocrocracy)யைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது அவர் தருக்கம். இதை, பண்டைய இந்திய ஆட்சியாளர்கள், புரோகித வர்க்கத்துடன் சேர்ந்துகொண்டு புனைந்த நான்முகன் - நால்வருணக் கோட்பாட்டுடன் குணா ஒப்பிடும் பகுதி(ப.122) ஆய்வாளர்களுக்கு விருந்தாகும். இதே இயலில் தொடர்ந்து பிளேட்டோ போன்றே மக்கள் சமமானவர்களாக வாழ்வதை விரும்பாத அவர்தம் மாணவர் அரிஸ்டாட்டிலின் கருத்தோட்டங்களை, இந்து வேதங்கள் - குறிப்பாக இருக்கு வேதம், அதன் பின்னுழைவு என்று கருதப்படும் 'புருஷசூக்தம்' ஆகியவற்றின் நால்வருணச் சாதிப்புடன் ஒப்பிட்டு ஆராயும் குணாவின் திறன் வாசித்தறிய வேண்டியதாகும். வேதங்கள் இந்திய மண்ணிலேயே பிறந்தவை, குறிப்பாக ஆரியர் அல்லாதவர்களாலேயே பெரிதும் இயற்றப்பட்டவை என்பதற்குப் பாவாணர் தம் 'தமிழர் வரலாறு' என்ற நூலில் காட்டும் எட்டுக் காரணங்களை குணா எடுத்துக்கூறியிருக்கிறார். பிந்திய சமணர்கள் வருணாச்சிரம தர்மத்தை சூழ்நிலைக்கேற்பத் தாமும் ஏற்றுக்கொள்ள முன்வந்ததை இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை தம் 'பண்டைய கேரளம்' என்ற நூலில் ஆய்ந்திருப்பதை எடுத்துக் கூறியுள்ளதோடு அதற்குத் தமிழகச் சான்றாகத் திருத்தக்க தேவர் தம் சீவக சிந்தாமணியின் இலக்கணையார் இலம்பகத்தில்(பாடல்கள் 2462 - 2469) சீவகனின் திருமணச் சடங்குகள் வைதிக முறையில் நடந்ததாகப் பாடியிருப்பதை ஒப்புநோக்கியுள்ளார். பிந்திய காலப் பௌத்தமும் அதே வருணாச்சிரம வழியில் சென்ற நிலையை எடுத்துரைக்கிறார். கிட்டத்தட்ட நூற்று அறுபது பக்கங்கள் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ள 'சாதியத்தின் தோற்றம்' முதற்பதிப்பில் குணா மொழிந்த கருத்துகளையெல்லாம் குறிப்புகளாக்குவதோ கூறிமுடிப்பதோ என்னால் இயலாதவை. **** நன்றி: திண்ணை.காம்

1.5.08

வரைகலைப் புதினங்கள்(graphic novels): தொடர்புடையோர் விழித்துக் கொள்க! -தேவமைந்தன் இலக்கிய வகைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் தளர்ச்சியின்றி மாறியும் வளர்ந்தும் வந்திருக்கின்றன. இலக்கிய வகை ஒன்று பிறப்பெடுப்பதற்கே நிகழ்சமூகத்தின் கடுமையான தூண்டுதல் தேவைப்படுகிறது. அதற்கென்றே பிறந்தவர்போல் ஒருவர், அவர் வாழும் சமூகத்தால் அப்படிப்பட்ட பணியை முடிப்பதற்கென்று உந்தப்பட்டார். அரசுப் பணியில் வெற்றியுடன் வாழ்ந்தவர். அவர் பெயர்தான் வேதநாயகம் பிள்ளை. தமிழில் முதல் புதினம்[மாற்றுக் கருத்தாளர்கள் இதற்கும் உள்ளனர்] படைக்க வேண்டிய தேவை அவருக்கு அப்படியென்ன வந்தது? 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் புதினம் என்பதற்குச் சான்றும் இந்த வினாவுக்கான விடையிலேயே தொக்கியுள்ளது. மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் - ஆங்கிலேயருக்குத் தமிழ்நாட்டில் அகத்தியம் மிகுந்திருந்த காலம். மெய்யான தமிழர்கள், தங்கள் பண்பாட்டுக் கூறுகளையும் வாழ்வியல் செம்மையையும் ஆங்கிலேயர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பேரவா உற்ற காலம். அதே சமயம் ஆங்கிலேயருக்கு அவை தெரிந்தால்தான், இங்கிருக்கும் ஆங்கிலேய அடிவருடிகளும் தங்கள் அறியாமையைச் சற்றே அறிந்துகொண்டு, தங்களின் மரபு குறித்து மறைவாகவேனும் பெருமைப் பட்டுக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அத்தகைய தமிழர்களில் முதன்மையானவராக விளங்கினார் வேதநாயகம் பிள்ளை. நம் மரபுசார் ஒழுக்க விழுமியங்களும், தமிழ்மொழியின் அறநெறி மையப்படுத்தப்பெற்ற இலக்கியங்களின் சிறப்பும், தங்குதடையற்றும் மிகுந்த முயற்சி இல்லாமலும் பேசவல்ல மொழியின் இயல்பும் ஆங்கிலேயருக்குத் தெரிய வேண்டுமே என்ற 'பண்பாட்டுக் கவலை'யுடன்(1) தம் முதல் புதினத்தைப் படைத்திருக்கிறார் அவர். அதனால்தான் அதற்கு முன்னுரையை அவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். அவர் எண்ணியது போலவே 'பிரதாப முதலியார் சரித்திரம்' ஆங்கிலேயர் கவனத்தைப் பெற்றது; இங்கிலாந்தில் மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்தது. ஆங்கிலேயரை நோக்கிய பண்பாட்டுக் கவலை ஒருபுறம்; 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' என்ற ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அடிப்படை உணர்வுகூடப் பெறாமல் கொல்லை/ வயல்வேலைகளிலோ, வசதியானவர்களின் வீட்டு வேலைகளிலோ, அடுக்களைகளிலோ; ஆடவர் மட்டுமல்ல - தம்மைப் போன்ற பெண்களே தம்மை வியக்க வேண்டும் என்று அணிசெய்துகொள்வதே வாழ்வியலான மடமையிலோ மூழ்கிக் கிடந்த மகளிர், பெற்றே ஆக வேண்டிய பெண்கல்வி குறித்த சமூகக் கவலை மறுபுறம். அதைப் போக்கிக் கொள்ளவே அவர் படைத்த ஞானாம்பாள் பாத்திரம், அன்றைய தமிழ்ப் பெண்ணுலகத்துக்கு வரமாகவும் விளங்கியது அல்லவா? தமிழ்நாட்டில், முழுமையான நீதிமன்ற மொழியாகத் தமிழே விளங்க வேண்டுமென்று ஞானாம்பாள் கூற்றாக வேதநாயகம் பிள்ளை பேசுவது, ஆங்கிலக் கல்வியை அந்தக் காலச் சூழ்நிலையில் அவர் ஆதரிக்க வேண்டியிருந்த கட்டாயத்தையே புலப்படுத்துகிறது. சந்து மேனன் அப்படியல்லர். இதற்குப் பத்தாண்டுகள் பிற்பட்டு, 1889இல் மலையாளத்தில் வந்த 'இந்துலேகா' என்ற புதினத்தின் ஆசிரியர் சந்து மேனன், வேதநாயகம் பிள்ளையைப் போலவே அரசுப் பணியில் வெற்றி பெற்றவர்தாம்; மாவட்ட நீதிபதிப் பணியில் இருந்தவர். நெல்லையிலும் சந்து மேனன் பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு வேதநாயகம் பிள்ளையைக் குறித்தும், 'பிரதாப முதலியார் சரித்திரம்' குறித்தும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் பெண்கல்வியைக் குறித்த அதிக அழுத்தம் இந்துலேகாவில் பதிவாகியிருக்கிறது. ஆங்கிலக் கல்வியையே நாயர் சமூகத்துப் பெண்கள் பெறவேண்டும் என்று மேலதிகமாக விழைந்ததுதான் சந்துமேனனுக்கும் வேதநாயகம் பிள்ளைக்கும் இருந்த வேறுபாடு. தம் புதினத்தின் முதல் படியை யாருக்கு விரும்பி அனுப்பினாரோ அந்த ஆங்கிலேய நண்பருக்கு அவர் எழுதிய கடிதத்தில், "......எமது நாயர் சமூகப் பெண்கள் தமக்கியல்பாகவுள்ள அறிவுடனும் அழகுடனும் ஆங்கிலக் கல்வியும் பெற்றுக்கொண்டார்களானால் சமூகத்தில் அவர்கள் மிகுந்த செல்வாக்குப் பெறுவார்கள்..." என்று அவர் எழுதியிருப்பது அந்த வேறுபாட்டுக்கொரு சான்று.(2) தமிழிலும் மலையாளத்திலும் இப்படி ஒரு தேவை - சமூக, பண்பாட்டு நோக்கில் இருந்தது. அதனால், அம்மொழிகளுக்குப் புதிய இலக்கிய வகையாகிய புதினம்(நாவல்) தோன்றியது. 'கிராஃபிக் நாவல்' எனப்படும் புதியவகை. தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் இணைப்பேடான 'யூத் எக்ஸ்பிரஸ்' சொல்வதைக் கேட்போம்: இந்தியாவில் புத்தக வாசிப்பு மிகுந்துள்ள பொழுதும், இங்குள்ள 'புத்தகப் புழு'க்களில் பெரும்பாலோருக்கு, முழுவதுமான புதினங்களை முயற்சி எடுத்துக்கொண்டு ஈடுபட்டு வாசிப்பதற்குப் போதுமான நேரம் இல்லை. இன்றுள்ள, சிந்திக்கும் இளைய இந்தியன்('சிந்திக்கும்' என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்) வாசிக்கும் வழக்கத்தைவிட்டு வேறெதாவதற்கும் போகாமல் பிடித்து வைக்கவே இந்த வரைகலைப் புதினம். நாம் 'டின்டின்'(Tintin)-ஐயும் 'ஆஸ்டரிக்ஸ்'(Asterix)-ஐயும் எப்பொழுதுமே விரும்பி வாசித்து வந்திருக்கிறோம். அவை என்ன வகையைச் சார்ந்தவை என்ற தொல்லையான வகைப்படுத்தலில் வாசகருள் மிகச் சிலரே முயற்சி மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் என்று அவற்றைச் சொல்லி விடுவது சரியாகாது. ஏனென்றால், அவற்றுள் வரும் உரையாடல்களையும் சூழல்களையும் அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகர்களே உணர்ந்து பாராட்ட முடியும். அவை திரைக்கதை வடிவங்களல்ல; சித்திர விளக்கம் தரப்பெற்ற புதினங்களாக வடிவமைக்கப்படும் பழைய இதிகாச - புராணப் புனைகதைகளுமல்ல. ஆனாலும், 'டின்டின்'னும் 'ஆஸ்டரிக்'சும் கிட்டத்தட்ட வரைகலைப் புதினங்கள் போன்றவையே. ஒரு வரைகலைப் புதினமென்பது, அறிவு முதிர்ச்சி பெற்ற வாசகரை இலக்காகக் கொண்டு சித்திரக் கதை வடிவத்தில் மேற்கொள்ளும் முழுமையான புதின முயற்சி தான். அவை எப்பொழுதுமே வேடிக்கையைப் பொருளாகக் கொண்டவை அல்ல. முழுவதுமாக நேரம் ஒதுக்கி வாசிக்க முடியாதவர்களுக்கு, அதாவது 'புத்தகப் புழுக்கள்' அல்லாத 'இருக்கை உருளைக்கிழங்கு'களுக்கு(3) மிகவும் உகப்பானவை வரைகலைப் புதினங்களே. 'வரைகலைப் புதினம்'('graphic novel') என்ற இலக்கியக் கலைச்சொல்லை முதன்முதல் அறிமுகப்படுத்தியவர் - வில் எய்ஸ்னர்(Will Eisner). 1978ஆம் ஆண்டு, இத்தகைய தன் படைப்பை வாசகர்கள் 'சித்திரக் கதைப் புத்தகம்'('comic book') என்று அதைவிட வேறு வழி தெரியாமல் அழைத்தபொழுது, 'வரைகலைப் புதினம்' என்று சொல்லுவதற்கு அவர்களைப் பழக்கினார் எய்ஸ்னர். "இதெல்லாம் இங்கே, தமிழில் வர, ஆண்டுகள் பல பிடிக்கும். அதுவரை கவலைப்படாமல் 'திண்டுகளை' வாசியுங்கள்!" என்பவர்களுக்கு ஒரு செய்தி. அமெரிக்காவில் செப்டம்பர் 11ஆம் நாள்தாக்குதல்களை தொடர்ந்து எழுதப்பட்ட வரைகலைப் புதினத்தின் அத்தனைப் படிகளும்(copies) உடனடியாக விற்றுத் தீர்ந்தன. அங்கே என்ன? 2004-ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் வரைகலைப் புதினமான 'காரிடர்'('Corridor') வெளியானபொழுது, பதிப்பாளர் அச்சிட்ட முதல் பதிப்பின் 2000 படிகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்துள்ளன. அதை எழுதியவர் சார்நாத் பானர்ஜி . நிகழ்ச்சிகளுக்குச் சித்திர விளக்கம் தருவதில் தேர்ச்சிபெற்ற, திரைப்படத் தயாரிப்பாளர். ('ரே' என்று செல்லமாக அழைக்கப்படும் சத்யஜித் ரே, நினைவுக்குள் நுழைகிறார். 'பதேர் பாஞ்சாலி'' திரைக்கதையை முதலில் அவர் சித்திரங்களின் தொகுப்பாகத்தான் வரைந்து கொண்டாராம்.) அடுத்த மூன்றாண்டுகளிலேயே, சார்நாத் பானர்ஜியின் இரண்டாவது வரைகலைப் புதினமாகிய 'தி பார்ன் ஒளல்'ஸ் வொண்டரஸ் கேபர்ஸ்'('The Barn Owl's Wondrous Capers'), அணுகுமுறையிலும் உட்பொருளிலும் முழுமையாய்த் தன் முன்னோடியான முதல் வரைகலைப் புதினத்திலிருந்து வேறுபட்டு வெளிவந்து வெற்றி கண்டது. 'டிஜிட்டல் தத்தா' என்ற கதைப்பாத்திரம் முதலாவதில் போலவே இரண்டாவது வரைகலைப் புதினத்திலும் வருவது ஒன்றே ஒற்றுமை. இந்த ஆண்டின்(2008) தொடக்கத்தில் வெளிவந்துள்ள 'காரி'('kari') என்ற வரைகலைப் புதினமே இந்த வகையில் அண்மையானது. இதை எழுதியவர் அம்ருதா பாடீல் என்ற பெண் எழுத்தாளர். இந்தியாவின் முதல் பெண் வரைகலைப் புதின ஆசிரியர் என்ற புகழுக்குரியவர். சார்நாத் பானர்ஜியைப் போலவே அம்ருதா பாடீலும் - தன் புதினத்துக்குத் தானே சித்திர விளக்கங்களைத் தந்துள்ளார். வண்ணங்களுக்கும் கறுப்பு வெள்ளைத் தீட்டல்களுக்கும் இடைப்பட்டவை அவை. மும்பையில் விளம்பர நிறுவனமொன்றில் வேலை செய்யும் காரி என்ற பெண்ணே(சார்நாத் பானர்ஜியின் 'டிஜிட்டல் தத்தா' போல) 'காரி' - வரைகலைப் புதினத்தின் முதன்மைக் கதைப் பாத்திரம். வரைகலைப் புதினத்தை வரவேற்று இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ள ஆஷா பிரகாஷ் என்பவர், ஏனோ, தன் கட்டுரை இறுவாயில், "ஆனாலும் இந்தப் புதினவகை நம் நாட்டில் இன்னும் நன்றாகக் காலூன்றத்தான் வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் பரந்த அளவில் வாசகர்களைச் சென்றடைய இன்னும் அது நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டியுள்ளது" என்றும் சொல்கிறார். சார்நாத் பானர்ஜியும் அனிந்தா ராயும்தொடங்கியுள்ள 'ஃபாண்டம்வில்' என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம், இந்தப் புதின வடிவத்தை உயர்த்திப்பிடிக்கவும் - இவ்வகையில் எழுத முன்வரும் எழுத்தாளர்களுக்குச் சிறப்பான தளம் அமைத்துத் தரவும் ஆகவேண்டிய முயற்சிகளைத் தளராமல் செய்து வருகிறது. அந்த வகையில், அப்துல் சுல்தான் எழுதியுள்ள 'நம்பிக்கையாளர்கள்'('The Believers') என்னும் வரைகலைப் புதினத்தை 'ஃபாண்டம்வில்' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் மொழிவடிவத்தை எழுதியவர்தான் அப்துல் சுல்தான். வரைகலையை உருவாக்கியவர் பார்த்தா சென்குப்தா. கேரளத்தின் மலைப்புரம் மாவட்டத்தின் தொலைவான சிற்றூர்களில் உணரப்படும் மதப் பொறையின்மையை அத்தகைய ஊரொன்றில் பிறந்தவரான அப்துல் சுல்தான் அதில் வெளிப்படுத்தியுள்ளார். முந்திய வரைகலைப் புதினங்களை அவற்றின் ஆசிரியர்களே உருவாக்கியது போலல்லாமல், இன்னொருவரைப் பணியமர்த்தி, தன் புனைவை அவர் வரையும் படங்களில் புலப்படுத்துமாறு செய்திருக்கிறார். நூலாசிரியரும் படம் வரைந்து விளக்குபவரும் ஒருவரேபோல் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியுள்ளதால், அவ்வாறு செய்வது மெத்தக் கடினமானது என்றும் அவர் ஒத்துக்கொண்டுள்ளார். தவிர, சிறப்பான சந்தைப்படுத்துதல் இல்லாததால், சில வரைகலைப் புதினங்கள், புத்தக விற்பனை நிலையங்களின் அடுக்குகளில் வாங்குவாரற்றுத் தேங்கிக் கிடப்பதாகவும் ஆஷா பிரகாஷ் சொல்லுகிறார். இருந்தாலும், அவை வாங்கிப் படிக்கத் தகுதியானவையே என்பது அவர் கருத்து. "வரைகலைப் புதினங்களைப் பொருத்தவரை ஒரு சிறப்பான தன்மை அவற்றுக்கு உண்டு. பொதுவான புதினத்தை வாசிக்கத் தேவைப்படும் அமைதியான மூலையொன்றோ, வாரத்தின் கடைசி நாட்களோ, வரைகலைப் புதினம் படிக்கத் தேவைப்படுவதில்லை. பெருநகரங்களில் வேலைக்குச் சென்று திரும்பும் உள்ளூர்த் தொடர்வண்டிகளோ, விமானத்துக்குக் காத்திருக்கும் வெட்டிப்பொழுதுகளோ அதற்குப் போதுமானவை" என்று அவர் வலியுறுத்துகிறார். "அடிப்படைநிலைப் பொழுதுபோக்கு, அறிவூட்டம், சிந்தனைக்கு உணவு என்ற மூன்றும் குளிகை(capsule)யொன்றில் கிடைப்பது போன்றதே வரைகலைப் புதின வாசிப்பு" என்று முத்தாய்ப்பும் வைத்துவிடுகிறார். "Say yes' என்று வெடிப்பில்(blast) புதுமையைக் கொண்ட 'Youth Express' என்னும் புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டின் 09/04/2008 இணைப்பின் முதற் பக்கம் முழுதும், வரைகலையில், இதுகுறித்த வலியுறுத்தல் மிகுந்து காணப்படுகிறது. அந்த உரைப்பகுதி இதோ: "இதைப் பாருங்கள்! அமி காமிக்ஸ் படிக்கிறாள்!" "அது காமிக்ஸ் இல்லடா முட்டாளே..அது ஒரு கிராபிக் நாவல்.." "அதைப் பாத்தா பழைய காமிக் புத்தகம் போலத்தான் இருக்கு!" "காமிக்சுக்கும் கிராஃபிக் நாவல்களுக்கும் வித்தியாசமிருக்கு. ஏன் நீங்க புதிய 'YES'-ஐப் படிச்சு கிராஃபிக் நாவல்களைப் பத்தி நெறைய்ய தெரிஞ்சுக்கக் கூடாது? நல்லாவும் தெரிஞ்சுக்கலாம்!" *** இந்த வரைகலை முயற்சியை, எஸ்.ஏ.பி. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த 'குமுதம்' இதழ் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து பார்த்தது. ஒரு படி மேலே போய், அந்நாட்களில் புகழ் பெற்றிருந்த கண்ணன் முதலான நடிகர்களை நடிக்கவைத்து ஒளிப்படங்களை எடுத்தும் கதைகளை வெளியிட்டது. அண்மைக் காலங்களில்கூட நடிகர்களின் முகச்சாயலில் படங்களை வரைந்து கதைகளைக் குமுதம் வெளியிட்டதாக நினைவு. ** வரைகலைப் புதினங்கள் தொடர்பாக நம் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் முன்னதாகவே விழித்துக் கொள்வது நல்லது. இதனால் ஓவியர்களுக்குச் சிறப்பான முதன்மை இலக்கிய உலகில் ஏற்படுமென்பது பாராட்டத்தக்கதே. ஆனாலும் மொழி பின்னே தள்ளப்பட்டு, சித்திரம் முன்னே வரும் வாய்ப்புள்ளது. ஓரு மூலையில் அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு, சிந்தனை ஓடுவதைக் கவனித்துப் பார்ப்போமேயானால், மொழிதான் நம் எண்ணங்களுக்குக் கனபரிமாணம் தந்துகொண்டே செல்கிறது என்பதை நாம் உணர முடியும். மொழியில்லாத எண்ணங்களை வெறுமனே எண்ண முடிந்தவர், 'சமாதி யோகம்' அறிந்தவராகத் தான் இருக்க முடியும். ரிஷிகேசில் குடில் வைத்திருந்த சுவாமி சிவானந்தரின் 'சமாதி யோகம்' நூலை, இப்பொழுதுள்ள 'கார்ப்பரேட் சாமியார்களின்' ஆரவாரத்துக்கிடையில் வாசித்துப் பார்ப்பவர்கள் இதை உணர முடியும். அதேபொழுது 'எண்ணத்தை நிறுத்துதல்'(stop-thought-process) என்னும் மனவியல் மருத்துவ உத்தியைக் குறித்துக் கூறியவர்கள்(மனவியல் மருத்துவர் மாத்ருபூதம் போன்றவர்கள்) சமாதி யோகத்தை ஏற்றுக் கொள்வார்களா என்றும் தெரியவில்லை. * ஆனால் ஒன்று உறுதி. கல்கியின் 'சிவகாமியின் சபதம்' 'பொன்னியின் செல்வன்' போன்ற வரலாற்றுப் புனைகதைகளின் அருமையை 'வரைகலைப் புதினம்' வாசிக்கும் இளைய தலைமுறை உணர முடியுமா? குழப்பமான சுவையைக் கொண்ட அதிரடி உணவை வாயிலும்(junk food) வரைகலைப் புதினங்களை மூளையிலும் திணித்துக் கொண்டிருக்கும், 'ஒருபொழுதும் வாழ்வதறியா' இளைய தலைமுறையே நீ வாழ்க! *** குறிப்புகள்: 1. இத்தொடரும் கருதுகோளும் பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) - சோ.சிவபாதசுந்தரம் ஆகியோருடையவை. 2. Chandu Menon: T.C. Sankara Menon, Sahitya Academi 1974, p.31. quoted in பெ.கோ. சுந்தரராஜன்(சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும், வளர்ச்சியும். முதற் பதிப்பு, 1977. ப.16. 3. உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, அளவுக்கதிகமான நேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே ஒழித்துக்கட்டுபவ'ர்களை 'couch potatoes' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். **** நன்றி: திண்ணை.காம்
வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர் · தேவமைந்தன் கணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக் கூடும். அவ்வாறு வாழ்ந்த வல்லிக்கண்ணன் அவர்களால் வண்ணநிலவன் என்று புனைபெயர் சூட்டப்பெற்றவரான இராமச்சந்திரன், அவற்றைத் தன் எழுத்தால் வளைத்துப் பிடிக்கவும் செறித்து வைக்கவும் சேமிக்கவும் முயல்கிறார். ‘நாலாறு மாதமாய்க் குயவனை(படைத்தோன்) வேண்டி’ உலகுக்குக் கொண்டுவந்த ‘தோண்டி’யை(உடம்பை) ‘நந்தவன’த்தில்(உலகத்தில்) ஓர் ஆண்டி(“கொ[ண்]டுவந்த தொன்றுமி[ல்]லை / இனிக் கொ[ண்]டுபோவது மொன்றுமில்லை” என்று வாழ்வதால் மனிதனை ஆண்டி என்றார் சித்தர்) கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்த கதையாய் விபத்தேபோல் பிறந்து, வேறு வழியே இல்லாமல் வளர்ந்து, வாழ்ந்த கணங்கள் வசப்படாததால் பிறந்தது முதலே செத்து, ஒருநாள் தாங்களே முற்றிலுமாகத் தொலைந்தே போய்விடும் மனிதர்களிடையே கணங்களைச் செறித்து வைக்கவும் சேமிக்கவும் இயன்றால் தங்கள் படைப்பில் உறைந்துபோக வைக்கவும் முயற்சி செய்பவர்கள் இல்லாமலா போவார்கள்? இவ்வாறு, கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடிக்கும் ‘விக்கிரமாதித்திய’ முயற்சியினூடே விளையும் தவிப்பை, ‘மனச் சிற்பங்கள்’ என்ற கதையில் படர்க்கைக் கூற்றாக வண்ணநிலவன் பதிவு செய்திருக்கிறார். “பொதுவாகவே வாழ்வு கடந்த கால நினைவுகளிலும், நிகழ்காலச் சம்பவங்களிலுமாக அல்லாடிக் கொண்டிருக்கிறது. நினைவிலும் நிஜத்திலுமாக நாட்கள் கழிகின்றன. நிஜம் நினைவுச் சருகாகி மனதை நிறைக்கிறது. இது மனதின் அவஸ்தையா, வாழ்வின் அவஸ்தையா என்பதே புரிவதில்லை. சம்பவங்களின் தொகுப்பு நாளாவட்டத்தில் நினைவுகளாய் செமித்து, நிகழ்காலத்தில் மனமொன்றவிடாமல் சஞ்சலப்படுத்துகின்றன. இச்சலனமே இல்லாமல் காலமும் சம்பவங்களும் உறைந்துபோகக்கூடாதா என்று மனம் ஏங்கிற்று. நிகழ்காலமும் நடப்புலகும் உறைந்து, உலகு பனிச்சிற்பம் போலாகி விடக்கூடாதா?.......எல்லோருமே இப்படி நினைவிலும் நடப்புலகிலுமாக உழன்று உழன்று சஞ்சலப்படுகிறார்களா? ஆனால் அது தன்னை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும் துக்கமென்று நினைத்துக்கொள்வது அவனுக்கு இதமாக இருந்தது. மற்றவர்கள் ஏதோ முடிவுக்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த முடிவில் நின்று கொண்டுதான் காரியமாற்றுகிறார்களென்பது துல்லியமாகத் தெரிகிறது. அந்தத் தர்க்கநிலை தன் மனதுக்கு மட்டுமேன் கூடிவரவில்லை என்பது அவனுக்கு வெகு விசித்திரமாக இருந்தது. கடந்த காலத்திய நினைவுகள் தரும் அவஸ்தையை அந்த முடிவு நிர்த்தாட்சண்யமாகச் சுருக்கிவிடும் என்ற யுக்தி தோன்றியது. எல்லோருமே கடந்த காலத்தின் துயர நினைவுகளோடுதான் வாழ்கிறார்கள். ஆனால் நிகழ்காலத்தோடு ஒன்றியைந்திருப்பதுபோல் பாசாங்கு செய்கிறார்கள்.” ‘மனச்சிற்பங்கள்’ கதை வெளியான இதழ் - ஆகவும் பொருத்தமாக, கணங்களின் முழுமையான ‘காலம்’ என்ற பெயரையே தாங்கியதும் இன்னொரு வியப்பு. ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் கூட்டிணைந்திருப்பதுதானே கடல்? கடல் என்பது அந்த ஒவ்வொரு உவர்நீர்த் துளியும்தானே? கடலிலுள்ள அந்த ஒவ்வொரு உவர்நீர்த்துளியும் தான் கடலல்ல; கடல் முற்றிலும் வேறானது என்று நினைப்பது போன்ற சஞ்சல உணர்வுடன்தானே ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து சலிக்கிறோம்! கடலை எண்ணி உவர்நீர்த்துளி தன்னை வேறுபடுத்திக்கொண்டு ஏங்குவதேபோல் நாம் அதைக் கடவுள் என்றாலென்ன! ‘Collective Unconsciusness’ என்றாலென்ன? ஏனோ, மெய்யுணர்வாளர் ஜே.கே. நினைவுக்குள் வருகிறார். ஜே.கே. என்று உலகத்தாரால் அன்புடன் அழைக்கப்பெறும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்த - கணங்களை வளைத்துக் கையகப்படுத்தும் முயற்சியை உறுதிப்படுத்தி வைத்தார். ஒவ்வொரு சொற்பொழிவின் தொடக்கத்திலும் இந்த முயற்சியில் விடாது இறங்கியவர் அவர். அவ்வாறே நம்மைச் செய்து பார்க்கவும் தூண்டியவர். ‘Living in the Present’ என்ற தன் வாழ்வியல் கோட்பாட்டை வெறும் கருதுகோளாகக் கொள்ளாமல், ஒவ்வொருவரும் செயல் வடிவமாக்கிக் கொள்ள, அவர் அவ்வாறு பரிந்துரைத்தார். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு நம்மைச் சூழ்ந்து நிகழும் ஒவ்வொன்றையும் எழுத்தில் பதிவு செய்து பார்க்க அறிவுறுத்தினார். ‘Conditioning And The Urge To Be Free’ என்ற பொழிவில் முதல் மூன்று பத்திகள் அதாவது ஐம்பத்தாறு வரிகளில் அவர் அந்த வித்தையைச் செய்து காட்டியிருக்கிறார். அதைப் புரிந்து கொண்டால், வண்ணநிலவன் ஆங்காங்கே குறிப்பிடுவதுபோல், விண்மீன்கள் செய்யும் ஒலியையும் நாம் கேட்க முடியும். மரஞ்செடிகளின் மணத்தையும் - ஊரைத் தாண்டிய, பனைவடலிகளின் சொந்தமான தேரிக்காட்டு மணலானது - நிலவொளியில் குளிர்ந்துபோயிருக்கும் பொழுது வெளிவிடும் விவரிக்க முடியாத மணத்தையும்; விடிவதற்குச் சற்று முன்னால் வெளிவிடும் பச்சைப் பனை ஓலைகளின் வாடையையும்; நல்ல மத்தியான வேளையில் வெளிவிடும் - எண்ணெயில் வறுத்த முறுக்கு வற்றலின் மணத்தையொத்த ஒருவிதமான காரநெடியையும் [அதே மணம் தன் தாயின் உடல்மணமாக விளங்கிய ஞாபகத்தையும் - ‘மெஹ்ருன்னிஸா’ கதை); ஆடுவளர்க்கும் கீழ்நடுத்தரக் குடும்பத்து வீட்டு வாசல் பக்கமிருந்து திடீரென்று வீசும் ஆட்டுப்புழுக்கை மணத்தையும் உணர - முகர முடியும். ‘எங்காவது குரைக்கும் நாய்கள், எப்போதாவது கேட்கும் சைக்கிள் மணிச் சத்தம்,’ ‘தோட்டத்தில் பனை ஓலைகள் காற்றில் உராயும் சத்தம்.’ ‘ஆடு, தூணில் கட்டியிருந்த அகத்திக் கீரையை மொறுக் மொறுக்கென்று அவசரத்தோடு கடித்துத் தின்கிற சத்தம்’ முதலான பற்பல ஓசைகளைச் செவிமடுக்கவும் முடியும். அடிவானத்தின் மேலே நிலவு வரும் வேளையில் பூவரச மரங்கள் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருக்கும் கோலம்; அரசியல் தொண்டன் வீட்டு வாதமடக்கி மரத்தடியில் தொய்ந்துபோன ஒரு நார்க்கட்டிலும், முதுகுப்பட்டை இல்லாத இரண்டு ஸ்டீல் சேர்களும் கிடப்பதும், அந்த வீட்டுக்கு உடையவன், தன்னைப் பார்க்க வருபவர்களை அந்த நாற்காலிகளில் அமர்த்திவிட்டு, தான் அந்த நார்க்கட்டிலின் மிகவும் தொய்ந்துபோயிருக்கும் மத்திய பகுதியில் உட்கார்ந்து சமாளிப்பதும் பிறவும் கண்டுணர முடியும். இந்தக் கண்டுணர்தல்(observation) வண்ணநிலவன் கதைகளில் சற்றுத் தூக்கலாகவே உள்ளமைக்குத் ‘தாய்’ இதழில் வெளிவந்த ‘வலி’ கதை, பானைச் சோற்றுக்கு ஒரு பதம் மட்டுமே. இந்தக் கட்டுரை வெளிவரும்பொழுது முதிய(அறுபது வயதும் அதற்கு மேலும்) வயதில் இருப்போர்க்குத் தெரிந்த ஒன்றை வண்ணநிலவன் மறவாமல் பதிவு செய்திருப்பதையும் இங்கே குறிக்க வேண்டும். இவர்களின் இளம் வயதில் இவர்கள் பார்த்துப் பழகிய இரயில்வே ஸ்டேஷன்களின் ‘ஜீவன்,’ இன்றைக்குள்ள தொடர்வண்டி நிலையங்களில் உயிர்த்துக்கொண்டிருக்கிறதா என்ன? நான் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இளங்கலை அரசியல் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் கல்லூரிக்கு மேற்கே இருந்த கோவை இரயில்வே நிலைய ‘ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டா’லில் ஆக்கபூர்வமாகக் கழித்த கணங்களும்; அங்கே ‘மாணவர் சலுகை’யில் ஆறே ஆறு ரூபாய்க்கு வாங்கிய ‘Complete Shakespeare’(E.L.B.S. வெளியீடு) புத்தகமும் மறக்கக் கூடியவையா? இது “பழசைப் பேசும்” பழக்கமல்ல. ‘டென்ஷனும் அவசரமும்,’ உண்ணும் உணவில்கூடக் கைவைத்துவிட்ட - கைவைக்க விட்டுவிட்ட இன்றைய இளந்தலைமுறைக்கு, இப்படி நீங்களும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வாழ்ந்து பார்க்கவும் பதிவு செய்யவும் முடியும் என்று அக்கறையோடு பரிந்துரைக்கிற முயற்சி... அவ்வளவே. வண்ணநிலவன் பதிவிலுள்ள - இரண்டு தலைமுறைக்கு முந்திய(30 ஆண்டுகள் கொண்டது ஒரு தலைமுறை ) இரயில்வே ஸ்டேஷனைப் பார்த்துவிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்... “அந்த ஊரைப் போலவே அந்த ஸ்டேஷன் கூட மாறித்தான் போய்விட்டது. ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில் இப்போது யாரோ இருந்தார்கள். ஸ்டாலுக்கு எதிரே பிளாட்பாரத்தின் கூரையில் தொக்கிக் கொண்டிருந்த ‘இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?’ போர்டைக் காணவில்லை. உடனே மனம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. அந்த போர்டு இலாமல் அந்த ஸ்டேஷனை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அது இல்லாமல் ஸ்டேஷன் மூளியாகிவிட்டிருந்தது........ கூட்ஸ் வேகன்கள் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. பின்புறமிருந்த வேகன்களில் ஒன்றில் ஒரு ரயில்வே தொழிலாளி தொற்றிக்கொண்டு பச்சைக் கொடியை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தான். அவன் கொடியை ஆட்டிய வேகத்துக்கும் அந்த வேகன்கள் நகர்ந்து சென்ற வேகத்துக்கும் சிறிதும் இசைவே இல்லாமல் இருந்தது...... அரசமரத்தைச் சுற்றி வட்டமான சிமெண்ட் மேடை இருந்தது. அவ்விடம் பிளாட்பாரத்தின் ஒருகோடிதான் என்றாலும் ஸ்டேஷனுக்குள் இன்னும் அரச மரத்தைப் பேணி வந்தது அவனுக்கு ஏதோவொரு இதத்தைத் தந்தது. எல்லாமே இப்படிப் பழமையும் புதுமையுமாகக் கலந்துதானிருக்கின்றன போலும்... காற்றில் நிலக்கரி மணம் மிதந்து வந்தது. எங்கோ பக்கத்தில் நீராவி இஞ்சின் நின்று கொண்டிருக்க வேண்டும்...... ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டால்களுக்கும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் விவரிக்கவொண்ணாத மதுரமான தொடர்பு இருப்பதுபோல், ரயில்வே பிளாட்பார வெண்டர்களுக்கும், ஸ்டேஷன்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல் தோன்றியது.” பார்வை நூல்: வண்ணநிலவன் கதைகள். சந்தியா பதிப்பகம், 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை - 600 083, தமிழ்நாடு. E-Mail: piththan@yahoo.com நன்றி: திண்ணை.காம்
'தன்னுணர்வு': பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம் - தேவமைந்தன் மிகவும் அண்மையில், புதுச்சேரி - பிரெஞ்சு நிறுவனத்தில் நிகழ்ந்து நிறைந்த மொழியாக்கக் கருத்தரங்கு வரை, மொழியாக்கம் பற்றிய கவலைகள் - பரிந்துரைகள் பற்பல வெளிவந்துள்ளன. சென்னையில் லதா ராமகிருஷ்ணன் முயற்சியில் உருவான மொழிபெயர்ப்பாளர் சங்கக் கலந்துரையாடல்களையும் அவற்றில் பகிர்ந்துகொள்ளப்பெற்ற கருத்தாடல்களையும் நண்பர்கள் வழி அறிந்திருக்கிறேன். மொழியாக்கங்களில் இதுவரையிலும் நாம் அறிந்த வகைகளுக்கப்பால் மொழியாக்கவகை ஒன்றுண்டு. தன் உள்ளத்தில் ஊறிய கருத்துகளின் ஒத்தவகைக் கருத்தாடல் பிறமொழி சார்ந்த அறிஞரொருவரின் நூலிலும் வெளிப்படக் கண்டு கிளர்ந்து, அதைத் தழுவித் தனக்கே உரிய மொழிநடையுடனும் தற்காலத்திற்கேற்ற எடுத்துக்காட்டுகளுடனும் தன்மொழியில் புதிய நூல் எழுதுவதுவே அது. அவ்வகைப்படிப் பெருஞ்சித்திரனார் படைத்த நூல் 'தன்னுணர்வு.' ஆங்கிலத்தில் எமர்சன் உருவாக்கிய 'Self Reliance' என்பதன் தமிழாக்கம். 17-01-1977 அன்று சென்னையில் 'தென்மொழி'யால் வெளியிடப்பெற்றது. வழக்கமான மொழியாக்கத்துக்குத் 'தன்னுணர்வு' வேறுபடுதலை நூலின் தொடக்கத்தில் உள்ள பாடலே காட்டி விடுகிறது. "இடுக நும் பிள்ளையை மாமலை மேல்;விளை யாடுதற்கே விடுக செந் நாய்களின் பாலினை மாந்தி வளர்க அவன்! கெடுக வன் அச்சம்! நரியொடும் நாயொடும் கேண்மையுற நடுக நீ நன் மறம் நெஞ்சில், வினையில், நரம்பிலுமே!" என்பதுவே அப்பாடல். மொழிதல் எவ்வாறு இருந்தால் அது மனிதத்திலிருந்து அறிஞத்துக்கு உயர்வதாய் விளங்கும் என்பதற்கு இப்பகுதி: "நமக்குள் தோன்றும் பொருளை நாம் உள்ளது உள்ளபடியே கூறுவோமாகில், நம் சொல்லிலும், கருத்திலும் மிகுந்த உண்மையும், ஆழமும் மட்டுமன்றித் தகுதியும் செழுமையும் உறுதியாக இருக்கும்......உன் காலத்தில், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கென்று, உன்னுள்ளே பொதிந்து வைத்துள்ள ஆற்றலையும் அதன் நிலையையும் மலர்ந்து பரவச்செய்." வாழ்க்கையின் நோக்கம் எது? ஈகையா.. இலவசத் திட்டங்களா? "ஏழைகளுக்கு உழைப்பதே உன் வேலை என்று சொல்லாதே! அதுவே அறம் என்றும் நினையாதே! அவர் தமக்கிருக்கும் உண்மையான ஆற்றலை மறக்கச் செய்து, உன் ஈகையால் மாய்ந்து போகச் செய்வது, உன் வாழ்வையும் வீணடித்து, அவர் வாழ்வையும் வீணடிப்பது ஆகும். நோயாளிகளும் பித்தர்களும் சோற்றுக்கடைக்காரனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்பதுபோல் அறங்கள், மக்கள்தம் குற்றங்களை மாற்றும் வழியென்று விலை தந்து அவற்றைப் போக்க முயல்கின்றனர். நம் வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையே! ஊரார் மெச்சுதல் வேண்டுமென்பதன்று." மெய்யான துறவியைப் பற்றியோ, அறிஞனைக் குறித்தோ அவர் வாழும் வட்டத்துக்கு முப்பது கல்(மைல்) தொலைவுக்கு அப்பாற்பட்டவர்களே அறிவார்கள் என்று இராமகிருஷ்ணர் கூறினாராம். ஏனென்றால் உருப்படியாக வேலைபார்க்கும் எவரையும் அவரைச் சுற்றியுள்ள சமுதாயம் அவ்வாறு செய்ய எளிதில் விட்டுவிடாது. இலவச மேற்பார்வை பார்த்து, வேண்டாமலேயே திறனாயும். அதைப் பெருஞ்சித்திரனாரின் 'தன்னுணர்வு' இவ்வாறு கூறுகிறது: "உன் கடன் என்ன என்பதை உன்னைக் காட்டிலும் உன்னைச் சுற்றியுள்ள மாந்தர் அறியார்...உலகத்தாரின் விருப்பப்படி நடப்பது மிகவும் எளியதே. அதேபோல் உலகத்தாரை விட்டொதுங்கி, நாம் நினைப்பதுபோல் நடப்பதும் எளிதே! ஆனால் உலகத்தார் நடுவில் இருந்துகொண்டே நம் உள் எண்ணப்படி நடப்பதுதான் கடினம். ஆனால் அதை நிறைவேற்றுபவன் மாந்தரில் மேலானவன். உனக்கு உடன்பாடற்ற செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வது உன் உள்ளத்தின் ஆற்றலைச் சிதற அடிப்பதாகும்." சில ஆண்டுகளுக்கு முன்னால் 'political complex' என்ற கலைச்சொல் சமூக உளவியலாரால் அடிக்கடி சொல்லப்பட்டது. தனக்கெனப் பாதை வகுக்காமல், தன் அரசியல் கட்சித் தலைவன் வகுத்த பாதையை மட்டுமே பின்பற்றுவதும், அவன் வகுத்த கொள்கையையே தன் கொள்கையாகப் பின்பற்றுவதும் சொல்லுவதும், எந்தக் கேள்விக்கும் தன் கட்சித் தலைவன் சொல்லும் பதிலையே சொல்லுவதும் அந்த மனச்சிக்கல் ஆகும். பெருஞ்சித்திரனார் எழுதினார்: "உன் வினைத் திறத்தைக் காட்டி உன்னை அறிமுகம் செய். ஒரு கூட்டத்தைக் காட்டி உன்னைக் காட்டாதே. ஒரு தனிப்பட்ட கூட்டத்துக்கு இணங்கியிருப்பது வெறும் குருட்டுச் செயலே. நீ எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவன் என்பது எனக்குத் தெரிந்தால் நீ செய்யவிருக்கும் சொற்பொழிவும் எனக்கு முன்பே தெரிந்ததாகவே இருக்கும். நீ பேசத் தொடங்கினால், உன் கூட்டத்தாரின் வழக்கமான எண்ணங்களைத் தவிர, உன் உள்ளத்திலிருந்து வந்ததாக ஒரு சொல்லும் இராதே! நீ ஒரு கட்சிக்கென்று வைக்கப்பெற்ற வழக்குரைஞன் ஆகிவிடக் கூடாது." 'வாக்குத் தவறுதல்' என்று ஒன்றைச் சொல்வார்கள். 'சொன்ன வாக்கைக் காப்பாற்றாதவர்' என்று ஒருவரை, "சொன்ன வாக்கைக் காப்பாற்றாத பேர்வழிகள்" பழிப்பதை உலகியல்பாக நாம் பார்க்கிறோம். சென்னைத் தமிழிலும் சொல்மாறி என்பது 'சோமாரி' என்று வழங்கியது. ஆனால் அதன் உண்மை என்ன? "பிறரிடம் முன்னே ஒன்று சொல்லிவிட்டாய் என்பதற்காக, நீ இப்போது வேறொன்றைச் சொல்ல அஞ்சாதே. உண்மையை எப்பொழுதும் போலியின்மேல் வீசியெறியலாம். முன்பின் முரணாகி விடுமோ என்ற நினைவுப் பிணத்தை உன் உள்ளத்தால் கட்டி இழுத்துத் திரியாதே. முன்பு தவறென்று நீ சொன்னவை இப்பொழுது சரியென்று பட்டால் உடனே ஒப்புக்கொள்." ஒருவகையான ஆதிக்க மனப்பான்மையைச் சிலர் தம்மைச் சூழ்ந்தாரிடையிலும் தமக்குச் சமமானவர் இடையிலும் மிக நுணுக்கமாகக் கடைப் பிடிப்பார்கள். பாதிப்புக்கு உள்ளாகுபவருக்கே அது தெரியாது. பல காலங் கழித்து அது தெரிய வரும்பொழுது உறைக்குமே.. அதற்குக் கொளுத்தும் கோடைவெயிலும் ஈடாகாது. இன்றுள்ள 'மொபைல்' எனப்படும் செல்பேசி நாகரிகத்திலும் அது உள் நுழைந்துள்ளது. அவர்கள், தங்கள் செல்பேசிக் காசைச் செலவழித்து, உங்களிடம் பேசமாட்டார்கள். நீங்கள்தான் அவர்களிடம் பேசவேண்டும். அதற்குமேல் ஒருபடி செல்பவர்களும் உள்ளார்கள். அவர்கள் உங்களுக்குத் 'துண்டிக்கப்பட்ட அழைப்பு'(missed call) அனுப்புவார்கள். நீங்கள் உங்கள் காசைச் செலவுசெய்து அவர்களுடன் பேசவேண்டும். கொஞ்சமாகப் பேசுவார்களா? அவர்கள் காசுக்குச் செலவில்லையே! தாராளமாகப் பேசுவார்கள். உங்கள் பொன்னான பொழுதும், உங்கள் குடும்பத்துக்குப் போய்ச் சேரவேண்டிய காசும், 'மொபைல்' நிறுவனங்களுக்குத்தான் போகும். இதே ஆதிக்க மனப்பான்மையைக் கருத்தாளுமையிலும் பார்க்கலாம்; பணியாளுமையிலும் பார்க்கலாம். உண்மையான ஆற்றலும் மெய்ம்மையும் உள்ளவர்கள் இந்த முறையில் நடந்து கொள்ளக் கூசுவார்கள். தாங்கள் மிகவும் வளர்ந்துவிட்டவர்களாகவும் பெயர் புகழ் பெற்றுவிட்டவர்களாகவும் நினைத்துக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள், மெய்யாகத் தாழ்வு மனப்பான்மையின் சின்னங்கள்...... பெருஞ்சித்திரனாரின் தன்னுணர்வு இவ்வாறு சொல்லுகிறது: "போலி நட்பையும், பொய் வணக்கங்களையும் இரக்கமின்றி வெட்டியெறி. தாங்களும் ஏமாந்துகொண்டு, பிறரையும் ஏமாற்றிக்கொண்டு, உன்னையும் ஏமாற்ற வரும் உன் உறவினர்கள், நண்பர்கள்தம் விருப்பப்படி நடவாதே......" "மாந்தர் ஒருவர்க்கொருவர் ஒருவரைச் சார்ந்துகொண்டும் ஒருவர்பால் ஒருவர் கையேந்திக் கொண்டுமே உள்ளனர். நமது குடும்ப அமைப்பில் பெருமையில்லை? நம் கல்வி, தொழில், திருமணம், கொள்கை முதலிய எதையும் நாம் வரையறுத்துக் கொள்வதில்லை. வலிந்த ஒரு சிலரே அவற்றை வரையறுக்கின்றனர். நாமெல்லாம் சமையலறைக் காவலர்கள் ஆகிவிட்டோம். சூழ்நிலையை எதிர்த்துப் போகும் ஆற்றல் நமக்கில்லை." கடவுள் வழிபாடு குறித்துத் திட்டவட்டமான கருத்துகளைத் 'தன்னுணர்வு' முன்வைக்கிறது: "இப்புடவியெங்கும் நீக்கமற விரிந்து சிறகார்த்து சுடர்வீசிக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றல் எதுவோ, அதுவேதான் நம்முடைய உள்ளத்திலும், உடலிலும் ஊடுருவிப் பாய்ந்துகொண்டிருக்கிறது.......நமக்குள்ள அறிவு நம்மை நாம் கண்டு கொள்ளவே அன்றி, நம்மை உண்டாக்கிய பேராற்றலை ஆராய்ந்து கண்டு கொள்வதற்காகத் தரப்படவில்லை. அதை ஆராயும்போது அது நிலைத்து விடுகின்றது. அந்தப் பேராற்றலைப்பற்றி நாம் அதிகமாகச் சொல்ல இயல்வது இவ்வளவே." [புடவி=பிரபஞ்சம்] "தனக்கென நன்மை வேண்டுமென்று இறைவனை வேண்டுவது இழிவும், திருட்டுத்தனமும் ஆகும். தனக்குண்டான வினைப்பாடுகளை உண்மையாகச் செய்வதுதான் இறைவனை வழுத்தும் மெய்யான முறை......நாம் இறைவனை நோக்கி வருந்தி வேண்டுவதும் அவனை நொந்து கொள்வதும் நம் நம்பிக்கைக் குறைவையும், உள்ளத்தின் உறுதியின்மையுமே காட்டுகின்றன." "உள்ளம் பேராற்றலின் இருக்கை; அது இறைவனின் படுக்கை. அதை விட்டு விட்டுப் பிறிதோரிடத்தில் இன்பத்தையும் நலத்தையும் வறிதே தேடித் திரிவதால், தன்னுள்ளத்து வீற்றிருக்கும் அரிய ஆற்றல் குன்றி விடுகிறது என்று ஒருவன் அறிந்துகொண்டு அவன் தன் அறிவையும் உள்ளத்தையுமே நம்பி நடப்பானாகில், அவன் வாழ்க்கை வளைவுகளெல்லாம் நேராக்கப் பெறுகின்றன. தன்னையறிந்தவுடன் அவன் நிற்கத் தொடங்குகின்றான்." இறுதியாக, உண்மையான செல்வம் எது என்பதற்குப் பெருஞ்சித்திரனார், எமர்சன் எழுதிய 'Self Reliance' நூலைத் தழுவிக் கருத்துரைத்திருப்பதை அறிவோம்: "செல்வம் என்று பொதுமக்களால் கூறப்படும் ஆரவாரப் பருப்பொருள்கள், சூதாடுபவர்களின் கைகளில் விழுவதுபோல ஒருகால் ஒருசேர வந்து விழும். மறுகால், அவரை விட்டு ஒருசேரப் போகும்.("கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கும் அதுவிளிந் தற்று" என்ற திருக்குறளை ஓர்க.) இவற்றைத் துகள்களாக எண்ணு. உன் உள்ளத்தின் வளர்ச்சியும் தூய்மையுமே, உன் உண்மையான செல்வம். அவைதாம் உனக்கு அமைதியைத் தரும்; உன்னை வெற்றி அன்னையின் மடியில் கொண்டுபோய்க் கிடத்தும். உன்னை நீயே அறி; உன்னை நீயாகவே ஆக்கிக் கொள்." **** நன்றி: திண்ணை.காம்
கொழுக்கட்டைச் சாமியார் கதை -தேவமைந்தன் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இன்று சிற்றூர்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்தான் கொழுக்கட்டைச் சாமியார் மடம் இருக்கிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? பொதுவாக, மக்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள். நதியின் வரலாற்றையும் சாமியாரின் வரலாற்றையும் விசாரிக்கக் கூடாது என்று. அப்படியே விசாரித்தாலும் கிடைப்பது உண்மையா என்று யாருக்குத் தெரியும்! ஆனால் கொழுக்கட்டைச் சாமியாருக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது என்று ஓர் உள்ளூர் அம்மாள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ஆஜானுபாகுவான அவர் வடநாட்டிலிருந்து வந்தவராம். வந்தபொழுது, அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை. வந்தபிறகும் தமிழை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை. இந்தச் சனங்களுக்கு 'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் தெரிந்தால் போதும் என்று கொழுக்கட்டைச் சாமியார் கணக்குப் போட்டார். நம்ம சனங்களைப் பற்றி அவர் கணக்கு இதில் மட்டுமல்ல, பலவற்றிலும் தவறானது பற்றி இந்தக் கதை, தான் முடிவதற்கு முன் வாக்குமூலம்போல் சொல்லிவிடப் போகிறது... அப்பொழுதுதான் தெரியும், நம்ம தமிழ்ச் சனத்தை ஏமாத்த நினைக்கிறவங்க கதி என்ன ஆகும் என்பது. சும்மாவா பாடினாரு நம்ம எம்ஜியாரு? "தவறு என்பது தவறிச் செய்வது / தப்பு என்பது தெரிந்து செய்வது / தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் / தப்பு செய்தவன் வருந்தி யாகணும்"ன்னு.. கொ.சா. திருந்தலை..வருந்தவுமில்லை.. கடைசி'ல என்ன ஆச்சு? *** அந்த ஊருக்குக் கையில் காலணாகூட இல்லாமல் அவர் வந்தார். அந்தக் காலத்திய மரக்காணம் சாலையான இந்தக் காலத்திய கிழக்குக் கடற்கரைச் சாலையில், இப்பொழுது புகழ்பெற்றிருக்கும் 'புரோட்டா'க் கடைபற்றி ஒருவரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். தற்காலம் பிரான்சிலிருந்து வருபவர்கள் ''மெனக்கெட்டுக் கார் போட்டுக் கொண்டு போய்," குறைந்த அளவு பத்துப் புரோட்டாவாவது குருமா மற்றும் பட்டாணிக் கலவையோடு காலிபண்ணி வருகிறார்கள். அதே இடத்தில் - அன்று, கொழுக்கட்டைகளைக் கூடையிலேந்திக்கொண்டுபோய் மரத்தடியில் வைத்து விற்றுப் பிழைத்திருந்தாள் ஒரு பாட்டி. வியாபாரத்துக்குப் போவதற்காக கொழுக்கட்டை சுட்டுவிட்டு குடிசைக்கு வெளியில் வந்தாள் அவள். அங்கே பசியோடு நின்றிருந்தவர், மொழி தெரியாததால், அவர் அந்தப் பாட்டிமுன் கையை ஏந்தினார். பாட்டி உடனே வீட்டினுள் ஓடி("ஓடி" என்பது, எம்.கே.டி. பாகவதர் காலப் படங்களை நினைவூட்டவேண்டும்; இல்லையென்றால், அவ்வாறு நினைவூட்டப் பெறாதவர்கள், சென்ற நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!) சூடான கொழுக்கட்டைகளை ஒரு வாழைநறுக்கில் இட்டுக் கொண்டுவந்து அந்த வடநாட்டுக்காரரின் சிவப்புக் கைகளில் தர, அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.(ரொம்பவும் சூடோ?) நன்றியுணர்வு என்று அந்தப் பாட்டி எடுத்துக் கொண்டாள். சாப்பிட்டதும், அவருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்துப்போனது. பாட்டியிடம் அந்தப் பலகாரம் என்ன என்று இந்தியில் கேட்டார். கொடுத்த பலகாரம் பற்றிக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள மொழி தேவையா என்ன?(பிரகாஷ்ராஜ் கவனிக்க) 'கொழுக்கட்டை' என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள் பாட்டி. அவரே அப்படித்தான் இருந்தார் என்பது, வேறு செய்தி. 'கொல்லுக்கட்டாய்' என்று உரக்கச் சொல்லிப் பார்த்தவர், பாட்டியால் திருத்தப்பட்டு 'கொல்லுக்கட்டை' 'கொள்ளுக்கட்டை' என்றெல்லாம் சொல்லி, மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு கொழுக்கட்டை என்று சரியாகச் சொல்ல அரைமணி நேரமாவது ஆகியிருக்கும். இதன் விளைவாக, அந்த ஊரிலேயே தங்கிக் கொண்டு, அவர் திறமையாக 'மேஜிக்' செய்ய ஆரம்பித்து, சனங்களை அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பட்டணத்திலிருந்தும் ஈர்க்கத் தொடங்கிய காலகட்டத்தில், முதல் 'சிஷ்யை'(தலைமைச் சிஷ்யை)யாக அந்தப் பாட்டிதான் ஆனார்.('ஆனாள்' என்பது, 'ஆனார்' ஆவது.. இப்படித்தான்) தலைமைச் சிஷ்யையே அனுபவசாலி ஆனதால், ஒரு கொழுக்கட்டை விற்று வந்த காசுபோல் பலமடங்கு ஒரு சீடரைச் சேர்த்துக் கொள்வதில் தேறியது. அப்புறமென்ன? மடம் வந்தது. மண்டபம் வந்தது. சீடகோடிகள் தங்குவதற்குப் பெரிய தங்குமிடம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இன்னும் என்னென்னவோ வந்தன. முன்பே சொன்னதுபோல், 'மொழி'யைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அருள்வாக்கும் சொல்லத் தொடங்கினார் அவர். அவர் சொல்லும் அருள்வாக்குகளில் கட்டாயம் கொழுக்கட்டை இடம்பெறும். அதை வைத்தே மக்களை - அவரவர்கள் மனதில் இருக்கும் சேதிகளைத் தான் சொன்னதாக அர்த்தப் படுத்திக் கொள்ளச் செய்வார் சாமியார். அப்படியே அவர்கள் குழம்பினாலும், பக்கத்தில் இருக்கும் 'சிஷ்ய'கோடிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு 'வியாக்கியானம்' எடுத்துவிட்டு அசத்துவார்கள். வந்த ஒருவர்கூட அதிருப்தியாகத் திரும்பிச் சென்றதில்லை என்றால் பாருங்களேன்! கொழுக்கட்டைச் சாமியார் என்று அவர் அன்புடன் அழைக்கப்படுவதற்குக் காரணங்களான 'அருள் வாக்கு'கள் சில......... "சாமீய்......எம் புள்ளை கெட்ட சகவாசத்தால சீர்கெட்டு திரியிறான் சாமீய்.. எப்பத்தான் அவன் திருந்துவான்?........" "திருந்துவாம்'மா.. திருந்துவான்..கொழுக்கட்டை நல்லா வேந்ததும் திருந்திடுவான்...போ..போ.. காசுபோட்டுடு.." "சாமி என்ன சொல்றாருங்க?......என்னமோ கொழுக்கட்ட... அத்த இத்த'ன்னுட்டு.." "அதுவா..ஒனக்குப் பக்குவம் இல்ல.. அதான் சாமி வெளக்கமாச் சொல்றது புரியல்ல..கொழுக்கட்டை நல்லா வேந்தாக்காத்தான் நீ அத்தத் தின்னுவே! அத்தப்போலவே ஒம் பையனுக்கு கிரகங்கள்'ல்லாம் கூடி நன்மை செய்யற காலம் வரப்போகுது.. அப்ப அவன் திருந்தீடுவான்'கிறாரு சாமி.. சரி..சரி அந்த உண்டி'ல தாரளமாப் போட்டுட்டுப் போ.. எல்லாம் நல்லா நடக்கும் போ.." (இது பக்கத்தில் உள்ள சீடர் கூற்று) விளக்கவே முடியாத மாதிரி 'சாமி' சொல்லிடுச்சுனா?... கொழுக்கட்டைப் பாட்டிக்கு ஆள் போகும். கொழுக்கட்டை சம்பந்தமான அத்தனை தொழில் நுணுக்கங்களையும் அறிந்தவரல்லவா தலைமைச் சிஷ்யையான அவர்? அப்படித்தான் ஒருநாள் ஆனது... தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை என்று முறையிட்ட, பட்டணத்திலிருந்து வந்த பணக்காரப்பெண் ஒருவரிடம் - ''ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா இப்'டியா இருப்ப....?" என்று கொழுக்கட்டை சாமியார் சொல்ல, பட்டணத்துப் பணக்காரப்பெண் அவர் 'வாக்கை' 'அசிங்கமாக'ப் புரிந்துகொண்டு அழ ஆரம்பிக்க, ஆள் போனது. ஓடி வந்தார் மேனாள் கொ. பாட்டி மற்றும் த.சிஷ்யை. ''அட, என்னாத்துக்கும்மா அழற..சாமியார் அப்படியென்ன வாக்குச் சொல்லிப் போட்டாரு?" என்று கேட்க, ப.ப.பெண் அந்த வாக்கைத் தயங்கித் தயங்கிச் சொல்ல, விபரீதம் புரிந்துகொண்டு, சூழ்நிலையை உடனடியாக மாற்றும் விதத்தில் "ஓ!'வென்று உரக்கச் சிரித்து, அதே சமயம், சாமியாருக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யர்களை "சமாளிக்கத் தெரியாத மடையன்'களா" என்று லேசர் பார்வையில் முறைத்துப் பாட்டி சொன்னதாவது: "அட என்னம்மா..சாதாரணமான விசயம் புரிஞ்சிக்காம..பட்டணத்துல பெறந்து நாலு எழுத்துப் படிச்சுட்டா சாமி வாக்கு விளங்கிடுமா...(ப.ப.பெண் முகத்தில் நம்பிக்கை - இலேசான புன்முறுவல்...இந்த 'சிக்னல்' போதாதா பாட்டிக்கு?).. நம்பணும்'மா, நம்பணும்..நம்பனவங்களுக்குத்தான்நடராசன்...நம்பாதவங்களுக்கு?..(மறந்தே போனது!) சரி..சரி அத்த விடு.. சாமி சொல்லுது.. "ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா" - அப்படின்னா இன்னா தெரியுமா..(பாட்டி மூளையில் பளீர் வெளிச்சம், டிடர்ஜெண்ட் விளம்பரத்தில் வரும் அடுத்த வீட்டு ஆண் சட்டையைப் போல)ஆங்.. ஒவ்வொரு செவ்வா வெள்ளியும் எண்ணத் தேச்சு முழுவோணும்.. கோயிலுக்குப்போய் அரச மரத்த அம்பத்தியோரு தடவை 'கொழந்த பொறக்கணும்'னு தெடமா வேண்டிக்கிட்டு சுத்திச்சுத்தி வரணும்.. குலதெய்வத்துக்கு நேந்துக்கோணும்.. ஏழ'பாழகளுக்கு அன்னதானம் பண்ணோணும்.. இத்தத்தான் சாமியார் 'சூசகமா'ச் சொன்னா புரிஞ்சுக்காம..அவர் பேரே கொழுக்கட்டைச் சாமி..பின்ன எப்படிச் சொல்வாருனு நெனைக்கிறே, நீ போயி........" நன்றியுடன் சிரித்த அந்தப் பட்டணத்துப் பணக்காரப் பெண், ஒரு நோட்டுக்கற்றையை உண்டியில் திணித்துப்போட்டுவிட்டு, கொ.சாமியார் முன் விழுந்து வணங்கி, தன்மேல் அன்புபூண்டு "உரிய" விளக்கம் தந்த தலமைச் சிஷ்யையின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு காருக்குச் செல்ல, அங்குள்ளோர் அனைவரும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். அப்புறம் கொழுக்கட்டைப் பாட்டி கைகளால் அவர்கள் மொத்துப் பட்டது கிளைக்கதை. இப்படியாக நாள்கள் இனிதே போக, சாமியாருக்கு திடீரென்று கிறுக்குப் பிடித்தது. மண்டபத்தின் சுவர்மேல் ஒருவர் கைவைத்தால் போதும். ஓடிவந்து, 'என்னோட கொழுக்கட்டை!" என்று கூவி அந்த ஆள் சுவர்மேலிருக்கும் தன் கையை எடுக்கும் வரை கலாட்டா பண்ணிவிடுவார். இன்னும் இதுபோல எத்தனையோ தலைவலிகளைக் கொடுக்கத் தொடங்கிய அவர், படிப்படியாக வளர்ந்து மண்டையிடி கொடுக்கவும் தொடங்கினார். தன் சிஷ்யகோடிகளையும் ஏன் தலைமைச் சிஷ்யையும்கூட, "இதெலாம் என் கொழுக்கட்டை.. எல்லாம் வெளிய போங்க!" என்று மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கவே, அவர்களெல்லாம் கூடி ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள். அடுத்த நாள் விடியலுக்கு முன்னால்.. மத்திய அரசுப் பணியிலுள்ள கொ.சா. சீடர் ஒருவர் வந்து என்னை அவசர அவசரமாக அழைத்துச் சென்றார். விவரம் கேட்ட என்னிடம் மூச்சிறைக்க "கொழுக்கட்டை சாமி வேந்துடுச்சு!"(அதாவது முக்தி...கட்டாய ஓய்வோ?!) என்றார். போனேன். மடத்துக்குள்ளோ, மண்டபத்திலோ வைக்காமல். வெளியில் இருந்த வயலருகே அவரைக் கட்டிலின் மேல் வெள்ளைத் துணியொன்றில் போர்த்து(கட்டி!) வைத்திருந்தார்கள். 'அதன்' முன் நின்று கைக்குப்பி வணங்கினேன். கூப்பிடுவதுபோல் இருந்தது. பக்கத்தில் சென்றேன். அந்த மூட்டைக்குள்ளிருந்து "நா'ந்தான்..கொழுக்கட்டை......" என்று ஒரு தீனக்குரல். "பாவிகளா! என்ன செய்தீர்கள்?" என்பதற்குள் அங்கு திரண்டிருந்த சிஷ்யகோ(கே)டிகள் என்னை முரட்டுத் தனமாகத் தள்ளிவிட்டு, கொழுக்கட்டைப் பாட்டி/தலைமை சிஷ்யையின் ஆணையேற்று, அந்தக் கட்டிலோடு அவரைக் கட்டாய சமாதியாக்க(உயிரோடு புதைக்க) எடுத்துச் சென்றார்கள். நொந்துபோய் அங்கிருந்து நான் அகல, அம்மாள் ஒருவர் ஓடிவந்து தடுத்து, சாமியார் சமாதியானதை முன்னிட்டு, கொழுக்கட்டை வினியோகம் நடக்கிறது என்று சொல்லி வாங்கிச் சொல்லுமாறு பணித்தார். போய் வரிசையில் நின்று வாங்கினேன், வாழைநறுக்கில் ஒரு பெரிய கொழுக்கட்டையை வைத்துக் கொடுத்தார்கள். வரிசையை விட்டு வெளியே வந்தேன். அங்கு ஓர் உருவம் விரைவாக என்னை நோக்கி வரவே அருகில் பார்க்க, அதிர்ந்தேன். தலைமைச் சிஷ்யை, தன் 'கோலத்தை' மாற்றிக் கொண்டு, பழைய கொழுக்கட்டைப் பாட்டி ஆகியிருந்தார்கள். என்னருகில் வந்து, காதோடு சொன்னார்கள். "அப்பேன்! ('அப்பன்' என்னும் சொல்லின் திரிபு).. அத்தத் துன்னுடாதே..அது வேகாத கொழுக்கட்டையாக்கும்.." என்று சொல்லிச் சிரித்தார்கள்..சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.. ** காலை வெயில் உக்கிரமாக முகத்தில் அடிக்க, திடுக்கிட்டு எழுந்தேன். சந்தேகம். "நேற்று ராத்திரி ரொம்ப 'லேட்'டா பொங்கல்தானே சாப்பிட்டேன்.. ஏன் இந்தக் கனவு வந்தது?" "கனவுகள், இரவு உண்ணும் உணவுகளைப் பொருத்துத்தான்('ரு' சரிதானா, சர்சேலில் வாழும் 'புதுவை எழில்'?..) வேறுபடுகின்றன" என்று தீர்க்கமாகத் தீர்மானித்திருக்கும் துணைவியாரிடம் இனிமேல்தான் இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும்............... * பின்குறிப்பு: இந்தக் கதையில் அடைப்புக் குறிகளுக்குள் பல சேதிகளைப் போட முதலில் நான் விரும்பவில்லை. நீரோட்டமான வாசிப்புக்கு அது தடை ஆகும் என்றுதான் நம்பினேன். ஆனால், "இவன் வழக்கமாக நிறைய அடிக்குறிப்புகள் போட்டு இலக்கிய, சமூகக் கட்டுரைகள் எழுதுகிறவன்..அந்தப் புத்தியை இதிலும் காட்டிவிட்டான் பார்!" என்று எரிச்சல் அடையக் கூடாது என்றே இந்தக் 'குறைந்தபட்ச இம்சை'யைக் கொடுத்துள்ளேன். வாசித்தவர்கள் பொறுத்தருள்க. **** நன்றி: திண்ணை.காம்