28.4.06

திபேத்தியப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

திபேத்தியப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) இமயமலை விசும்பைத் தொட்டுவிடுவதுபோல் காட்சியளிக்கும் நிலப்பகுதியின் உட்பக்கம் விரிந்து பரந்து கிடக்கும் பனிப்பாலைவனமான மலைப்பகுதி, ‘இலே’[Leh] எனப்பெறும் இலடாக்கின் தலைநகர் ஆகும். இந்த ‘இலே’ நகரில் எப்பொழுதும் மிகையான குளிரும் மிகையான வெப்பமும் மாறி மாறி நிலவும். மக்களின் பண்பாடு உருவான வகை இந்திய ஒன்றியத்தின் ஆகப்பெரிய மாநிலம் (முன்பு மாவட்டம் என்றே அழைக்கப்பெற்றது) இலடாக்கு; அதேபொழுது அதன் மக்கள் தொகையோ மிகவும் குறைவு. இப்பொழுது உள்ள மக்கள் தொகை மிகுதி . 1971-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பெற்ற கணக்கீட்டில், இலடாக்கின் 95,876 ச.அ.மா. பரப்பில், நூற்றைந்தாயிரம் மக்களே வாழ்ந்தனர் என்று உள்ளது. உணவையும், விலங்கினங்களுக்கான தீனியையும் வேண்டும் அளவுக்குமேல் உருவாக்கிய மக்கள் அவர்கள். கிழக்குத் துருக்கித்தானத்திலிருந்து பயணம் செய்து வரும் ஒட்டக வண்டியொழுகைக்கும், மாந்தருக்கும், அவர்கள் இவர்ந்துவரும் குதிரைகளுக்கும், கோவேறு கழுதைகளுக்கும் போதும் போதும் என்கிற அளவு உணவும் தீனியும் தந்த பின்பும் தங்களுக்கும் தங்கள் வீட்டு விலங்குகளுக்கும் உணவும் தீனியும் மிகுந்திருப்பதைக் கண்டு நிறைவுடன் வாழ்ந்த மக்கள். வடக்கே துருக்கித்தானமும்; கிழக்கே சீனமும்; தெற்கே குலு, அமிர்தரசு முதலான இந்திய நகரங்களும்; மேற்கே ஆப்கானித்தானமும், காசுமீரமும் என்ற நிலவியல் நிலையில், ‘இலே’ நகரம், நடுவண் ஆசிய வணிகத்திற்கு ஏற்ற நடுவமாகும். நெடும் பயணத்தால் களைத்துவரும் ஒட்டகங்களுக்கு நல்ல உணவும் நீரும் ஓய்வும் பண்டுவமும் அளிக்கும் புகலிடமுமாகும். இத்தகைய சூழலில், திபேத்திய மொழி மக்களின் பண்பாடு, முற்றிலும் உணவு- உடை- உறையுள் தொடர்பானதாகவும்; மாந்தரை விருந்தோம்புதல் என்பதற்கும் மேலாக விலங்குகளை விருந்தோம்புதல் என்பதைச் சார்ந்ததாகவும் அமைந்திருக்கிறது. திபேத்தியப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் உள்ள முகாமையான வேறுபாடு தமிழ்ப் பழமொழிகளில் பெரும்பான்மையும் தூயதமிழ்ச் சொற்களே காணப் பெறுகின்றன. ஒலிப்பும் அவ்வாறே. ஆனால் திபேத்தியப் பழமொழிகளிலோ மிகவும் இயல்பாக திபேத்தியம் அல்லாத மொழிகளின் சொற்கள் ஊடுருவியுள்ளன. எந்த அளவுக்கு மொழி ஊடுருவல் நிகழ்ந்துள்ளது என்றால் ஏற்கெனவே பழமொழிகளில் இருந்த தூய திபேத்தியச் சொற்கள் அகற்றப்பட்டு, அங்கே காசுமீரி, இந்துத்தானி அல்லது துருக்கி மொழிச்சொற்கள் இடம்பெற்று விட்டன. என்ன கரணியம்? நிலவியல் அடிப்படையிலும் மொழிநிலையிலும் வேறுபட்ட மக்களுக்கு இடமும் உணவும் தரும் பண்பாடு திபேத்தியருக்கு இருந்ததால், மெல்ல மெல்ல “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல” ஆனது. பழமொழிகளுக்கே இந்த நிலை என்றால், திபேத்திய மொழி என்ன ஆகியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? இதனால்தான் அவர்களின் பழமொழி - “வருகைதரும் நல்ல வணிகப் பெருமக்களுக்குத் தோழமை காட்டு; களவாணியை விரட்டியடி!” (மறைத்திரு செர்கான் தொகுப்பு: எண்.644) என்று கூறுகிறது. வணிகத்தோடு வந்த மொழிதானே தமிழில் கலப்புக்குக் கரணியமானது? “வந்தவரெல்லாம் சந்தையில் குடியா?” என்ற தமிழ்ப் பழமொழி, சற்றொப்ப இதே கருத்தை உணர்த்துகிறது. திபேத்தில் நான்கு திசைகளிலிருந்தும் வேற்று நாட்டவரும் இனத்தவரும் எளிதில் புக நேர்வதால் அங்கு பழமொழி சற்று விரிவானதாக இருந்து, “களவாணியை விரட்டியடி!” என்பதும் இணைகிறது. இன்று மேற்கு வங்கத்தில் இந்நிலை இருப்பதைப் பார்க்கலாம். ஒத்த கருத்து; உணர்த்தல் வேறு! திபேத்தியப் பழமொழியொன்று, “தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வான்!”(மேலது: எண்.656) என்று சொல்கிறது. கஞ்சன் எனப்படும் இவறன்மை உடையவனைக் குறித்துக் கூறப் பெறுவது இது. “அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தடவமாட்டான், ஆண்டி வந்தாலும் பிச்சை போடமாட்டான்!” என்ற தமிழ்ப் பழமொழி, ஒத்த கருத்தை உடையது; ஆனால் உணர்த்துவது வேறாயிருக்கிறது. இந்தப் பழமொழி, ‘கழகப் பழமொழி அகரவரிசை’ நூலுள்(ப.27:எண்.798) இவ்வாறு உள்ளது. மக்கள் வழக்குகள், “அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது,” “அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்” என்பவையே. ஒத்த கருத்துடைய விரல் குறித்த பழமொழிகள் தமிழிலும் திபேத்தியத்திலும்தாம் உள்ளன. ஆப்பிரிக்கப் பழமொழி ஒன்று, “வெறும் கையை நக்குவாரில்லை” என்று கையளவு போகிறது. அவ்வளவுதான்.( சான்றுகள்: ப. இராமசாமி, உலகப் பழமொழிகள், வள்ளுவர் பண்ணை, சென்னை 1964: சு. இலட்சுமி நாராயணன், உலகப் பழமொழிகள், வானதி, சென்னை 1994). தன் விரலை வெட்டிக் கொண்டாலும், குருதி வீணாகாமல் பார்த்துக் கொள்வதென்பது ‘இலே’ நகரின் குளிர்மிகுந்த பொழுதில் கூடுமானதே. உயர்ந்தோர் குறித்த திபேத்திய - தமிழ்ப் பழமொழிகள் “இறப்பைச் சந்திக்கவே நேர்ந்தாலும் சொந்த நல்லியல்பிலிருந்து வழுவ மாட்டார்கள் நேர்மையாளர்கள்!”(மறைத்திரு செர்கான் தொகுப்பு: எண்.988) என்ற திபேத்தியப் பழமொழி, பழமொழி இயல்பில் குன்றி, பொன்மொழி போலத் தெரிகிறது. “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் / உயிர்நீப்பர் மானம் வரின்” (திருக்குறள்: 969) என்ற திருக்குறள் கருத்தினைத் திபேத்தியர் அறிந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. கவரிமா என்பதைக் கவரிமான் என்று சொல்லக்கூடாது என்றார் மொழிஞாயிறு பாவாணர். ஏனெனில் கவரிமா என்பது குளிர் மிகுந்த நிலப்பகுதியில் மட்டுமே வாழக்கூடியது; ஆப்போலும் தோற்றம் உடையது என்றார் அவர். ஆனால், தமிழ் மரபுரையில், அவர் நேரிலுரைத்த இக்கருத்து காணப்பெற்றிலது. விலங்குகள் உடம்பில் மயிர் முளைப்பது தொடர்பாக.. திபேத்தியருக்குச் சினம் வந்தால் மற்றவரை “உடம்பில் மயிர் முளைக்காத விலங்கே!” என்று திட்டுவார்களாம். சூழலுக்கும் விலங்கு வளர்ப்பு - விலங்கு விருந்தோம்பல் பண்பாட்டுக்கும் ஏற்பவே வசைமொழியும் பிறக்கும் என்பது மாந்தவியல் பேரறிஞரான மலினோவ்சுகியின் கருத்து. ஓரிடத்தில் விருந்துச்சாப்பாடு போடுகிறார்கள் என்றால் விழுந்தடித்துக் கொண்டு ஓடுபவர்களைக் குறித்து, “உடம்பில் மயிர்முளைக்காத பன்றியைப் போன்றவர், உணவுக்குப் பின்னால் ஓடத்தானே செய்வர்?” என்றொரு திபேத்தியப் பழமொழி சொல்கிறது.(மேலது, எண்:991) இழிந்தோரும் விலங்குகளும் “அடுத்தவர் நலம் எண்ணாதோர், விலங்குகள் போல்வர்” (அதே நூல்: எண்:989), “பருகவும் தின்னவும் மட்டுமே அறிவன விலங்குகள்” (அதே நூல், எண்:990), “சோம்பேறிக் கழுதைக்குப் புல்லைத் தின்னவும் தெரியாது” [எளிதில் களைத்துப் போகிறவனை இவ்வாறு சொல்வர் திபேத்தியர்] (அதே நூல், எண்:367] என்பவை போன்ற பழமொழிகள் எண்ணற்றவை. ‘இலே’ நகரிலும் இலடாக்கு, இலஃகௌல், இசுபிட்டி, நாரிசு சுகோர்-க்சும் ஆகிய ஊர்களிலும் விலங்குகளை வைத்து மாந்தரைச் சுட்டும் பழமொழிகள் எண்ணில என்கிறார் மறைத்திரு செர்கான் அவர்கள். தட்ப வெப்பம் விளைவாக... மிகுந்த குளிர்வீசும் நிலையைப் பெரும்பாலும் பட்டறிவதால்[மிகுந்த வெப்பமும் நிலவும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்] திபேத்திய மக்கள், தாம் என்ன சொல்லியும் திருந்தாதவர்களிடம் பின்வரும் பழமொழியைச் சொல்வர்: “மூக்கின்மேல் குளிர்ந்த காற்று மோதும்பொழுதுதான், உனக்கு அறிவு வரும்!” .(மேலது, எண்: 392) கடினமான பட்டறிவு அவர்களுக்கு ஏற்படும்பொழுது, “மண்டைத்தோல் கழன்று மலைகளுக்குப் போகிறது!” என்ற பழமொழியைச் சொல்வர். மடங்களின் தலைவர்கள் பற்றி .. திபேத்தில் இலாமாசரி என்றழைக்கப்பெறும் மடங்களும் இலாமாக்களின் தலைவர்களும் எப்படிப்பட்டவர்களாம்? “மடத்தில் வளரும் நாயை அடிக்காதே, மதகுருவின் பகையைத் தேடாதே!” இதை அடியொற்றி இன்னொரு பழமொழியும் உண்டு. “ஒருபொருள் மிகவும் தேவையென்று வரும்பொழுது (மடத்தில் வளரும்) நாயின் மலமும் கிடைக்காது!”(அதே நூல், எண்:172) இலையுதிர்காலத்தில் பால்வளமும் வீட்டு நாய்களும் வீட்டில் வளர்க்கப்பெறும் நாய்களைப் பற்றிய பழமொழியொன்று: “இலையுதிர்காலத்தின்பொழுது, உன் நாய்க்கு மோரைத் தராதே!” இதன் கரணியம், ‘இலே’(Leh) நகரில் இலையுதிர்காலத்தின் பொழுது பால்வளம் மிகுந்திருக்கும் என்பது. காலமும் மண்ணும் மக்களும் விலங்குகளும் எந்த அளவு திபேத்தில் இணைந்து உள்ளன என்பதை இதன்வழி உணர முடிகிறது. “பதியெழு வறியாப் பழங்குடி” இலடாக்கில் வாழும் மக்கள், தம் நாட்டை விடுத்து அயல்நாட்டை விரும்புகிறவர்களை வெறுக்கிறார்கள்: “நீ சென்று இருந்து வாழ்ந்து பார்க்காத நாடு, உனக்கு மிகவும் இனிமையானதே!” என்பது அதற்கான திபேத்தியர் பழமொழி . இன்னும் எத்தனையோ பழமொழிகள் திபேத்தில் புழங்கினாலும், ஆயிரம் பழமொழிகளை மட்டுமே தொகுத்திருக்கிறார் மறைத்திரு செர்கான். அவற்றுள்ளும் சிலவற்றையே இக்கட்டுரையில் கண்டோம். துணைநூல்: Rev. J. Gergan, A Thousand Tibetan Proverbs and Wise Sayings, 1976. நன்றி: பிரஞ்சு நிறுவன ஆராய்ச்சி நூலகம் ( Research Library,Institut Francaise, Pondichery) நன்றி: 'வெல்லும் தூயதமிழ்' (இலக்கிய மாத இதழ்) புதுச்சேரி-605009.

சித்தரும் சூஃபியரும் - நிறைவுப் பகுதி

சித்தரும் சூஃபியரும் பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்) தொடர்ச்சி ... சித்தர் பாடல்களில் கலப்படம் சித்தர் பாடல்களின் பதிப்புகளிலும் அதற்கு முன்னர் அவற்றைச் செவிவரலாறாகக் கேட்டு எழுதிய பதிவுகளான ஓலைச்சுவடிகளிலும் காலந்தோறும் கலப்படம் நிகழ்ந்து வந்திருக்கிறது. அதனால்தான் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் போன்ற சித்தர் பாடல்களில் முன்னுக்குப் பின் முரண்களும் கருத்தோர்மைச் சிதைவும் மிகவும் கொடுமையாக ஏற்பட்டுள்ளன. சான்று: “மயங்குவான் பொன்தேடப் புரட்டுப் பேசி மகத்தான ஞானமெல்லாம் வந்த தென்பான்; தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்திற் சார்ந்தே னென்பான்” என்றும், “ஆரப்பா உலகத்தில் ஞானி யுண்டோ? ஆராய்ந்து நான்கண்டே னென்பார் கோடி; ஏரப்பா உழுத(ல்)லோவெள் ளாமை யாகும்? ஏரில்லான் அறுத்தடித்த கதையும் ஆச்சே!” என்றும் வருபவை அவருடையவை. ஏரண ஞாயம் சுட்டும் கலப்படம் மேலே உள்ள பாட்டின் மூன்றாவதும் நான்காவதும் ஆன அடிகளில் கயிலாயக் கம்பளிச்சட்டைமுனி நாயனார் உலகோர்முன் வைக்கும் ஏரண ஞாயம் மிகவும் துல்லியமானது. ‘அங்கை நெல்லி’யெனும் மற்றொரு ஞாயம் போல ‘நெற்றியடி’ அடிப்பது. கொங்குப்புலவர் ஆன நா. வையாபுரியாரின் தலைமாணாக்கர் அறிஞர் கு. நடேச(க் கவுண்ட)ர் இயற்றிய ‘நியாயக் களஞ்சியம்’ என்ற அரிய நூலை முழுவதுமாக வாசித்தால், இதில் பொதிந்துள்ள ஏரண ஞாயம் ‘பொறி தட்டியது போல’ப் புலனாகும். இவ்வாறு ஆழ்ந்தகன்ற நுட்பத்துடன் பாடிய கம்பளிச்சட்டைமுனிச் சித்தரின் மற்றொரு அல்லது கடைசிப் பாடலாகப் பதிப்புகள் பலவற்றுள் வந்துள்ள மற்றொரு பாடல் இதோ: “மெளனமென்றீர் எனையாண்ட தட்சிணாமூர்த்தி மலர்பணிந்தே ஞானமது நூறுஞ் சொன்னேன் மெளனமென்ற நாதாக்கள் பதத்தைப்போற்றி வகையோடே நிகண்டாக வாதஞ் சொன்னேன் மெளனமென்றீர் ஞானம்பொய் யென்று சொல்லி வாகான செயமண்டி போட்டே நூற்றில் மெளனமென்ற சமரசத்தான் மக்காள் மக்காள் வாகான ஞானமுறை முற்றுங் காணே” கயிலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனாரின் முந்திய பாடல் பகுதிகளின் பொருள்கோளுக்கும் இதற்கும் எத்தனை வேறுபாடு? சித்தர், சித்த மருத்துவர், ‘ஆயுள்வேத’ மருத்துவர்.. அடையாளக் குழப்பம் தெரிந்தே செய்தார்களா அல்லது தெரியாமல் செய்துவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள முடியாத ஓர் அடையாளக் குழப்பம் சித்தர் என்பதற்கும் சித்தமருத்துவர் என்பதற்கும் இடையில் உள்ளது. சித்தர்கள் இயற்கை மருத்துவர்களாகவோ, தமிழ் மருத்துவர்களாகவோ திகழ்ந்திருக்கலாம்; தம்மைச் சார்ந்த குமுகத்திற்கு இவ்வகையில் அவர்கள் உதவியிருக்கலாம். சித்த மருத்துவர்களும் ‘ஆயுள்வேத’ மருத்துவர்களும் தொழில்முறை மருத்துவர்கள். அவர்களைச் சித்தர் என்று கொள்ளல் ஏற்புடையதா? “சித்தர் களஞ்சியம்” நம் புதுச்சேரியிலுள்ள பிரஞ்சு நிறுவன நூலகத்தில் ஒரு பழைய நூல் உள்ளது. அதன் பெயர் “சித்தர் களஞ்சியம்.” குடந்தை பரஞ்சோதி மருத்துவசாலை பொன்னம்பலனார் (K.S. பொன்னம்பலம் என்றுள்ளது) இயற்றியது. ‘பாரம்’ என்பது எட்டுப் பக்கங்களாக இருந்த பிரித்தானியர் காலத்தில் அச்சியற்றப்பெற்றது. அந்நூலுக்கு மதிப்புரை ‘பார்த்துரை’ என்ற பெயரில் உள்ளது. வழங்கியவர் ‘யதார்த்தவசனி’ இதழாசிரியர் தி(டி).வி. கோவிந்தசாமி(ப் பிள்ளை) அவர்கள். சித்தர் களஞ்சியத்தின் பார்த்துரை அந்தப் ‘பார்த்துரை’யின் பகுதி வருமாறு: “கும்பகோணம் வைத்திய இரத்தினம் எனும் நற்பெயர் படைத்த ஆயுள்வேத பண்டித சிகாமணியாகிய மகா-ள-ள-ஸ்ரீ பொன்னம்பல பண்டிதர் பிரசுரம் செய்துள்ள “சித்தர் களஞ்சியம்” என்னும் நன்னாமம்பூண்ட நூல்பிரதி ஒன்றை நாம் பார்வையிட்டோம். சகல சித்திகளையும் அடைபவர் சித்தர் எனினும் ஆயுள்வேதியர்க்கு சித்தர்நூல் இன்றியமையாத துணைக்கருவியாகும்...” குழப்பம் மேலே சாய்வெழுத்தில் வந்த பகுதி, சித்தர்நூலைத் துணைக்கருவி என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. “சித்தர் களஞ்சியம்” நூலிலோ ஓகமுறைகளும் இருக்கை[ஆசனம்] முறைகளும் மருத்துவ முறைகளுமே உள்ளன. ‘காப்பு நேரிசை வெண்பா,’ ‘விநாயகர் துதி,’ ‘பரமசிவ வணக்கம்,’ ‘அம்பிகை தோத்திரம்” என்று தொடங்கி, ‘சித்தர்கள் தோத்திரம்” கட்டளைக் கலித்துறையில் படைக்கப்பெற்று, ‘வழிபடு குருவணக்கம்,’ ‘குருவணக்கம்,’ ‘அவையடக்கம்,’ ‘சரிதை’[சரியை அன்று], ‘கிரியை,’ ‘யோகம்,’ என்ற தலைப்புகளில் பாயிரம் அமைந்து, ‘அதிகாரியின் இலக்கணம்’[ஓகம் செய்யும் அதிகாரம் பெற்றவர்] என்று நூலின் தொடக்கம் ஐந்தாம் பக்கத்தில்தான் அமைகிறது. இந்தப் பக்கங்களுக்கு முன் உரோமன் எழுத்துகளில் பதினாறு பக்கங்கள் நூலைப் பற்றியவை. அவற்றுள் கடைசி மூன்று, ‘விஷயசூசிகா’ என்னும் பொருளடக்கம். எழுபத்தாறு தலைப்புகளில் நூல் இயன்றுள்ளது. எங்கும் ஓகமும் மருத்துவமுமே. தெளிவான சூஃபியர் வயணங்கள் சித்தர் குறித்த சிதைவு நூல்கள் இங்கு விற்பனை செய்யப்பெறுவதுபோல் சூஃபியாக்கள் குறித்து எழுதவோ எழுதியதைப் பதிக்கவோ முடியாதபடி பாரசீக மொழிவாணர்களும் அமீரகவாணரும் வளைகுடா நாடுகளில் வாழ்வோரும் விழிப்புடன் இருக்கிறார்கள். குர் ஆன் அருளப்பெற்ற வகை குறித்து எவ்வகைக் குழப்பமும் சூஃபியருக்கு இல்லை. பதிப்புகள் எவற்றிலும், ஏன், இணைய/வலைத் தளங்களிலும் கூட முரண் சிறிதுகூடப் பார்க்க முடியாது. வலையிதழ்ப் பதிப்பும் அச்சிதழ்ப் பதிப்பும் - விழித்துக் கொள்க! இங்கு இதைக் குறிப்பிட வேண்டிய அகத்தியம் இருக்கிறது. ‘இருவேறு உலகத்தியற்கை’ என்று வள்ளுவர் மொழிந்தமை நிகழ் உலகில் வேறு ஒன்றனுக்கும் பொருந்தும். அதுவே எழுத்துலகம். ஒருபக்கம் அச்சிதழ். மறுபக்கம் இணைய இதழ். இரண்டின் அமைப்பு முறையும் வேறுவேறு. அண்மையில் என் படைப்பைத் ‘திண்ணை’ வலையிதழின் இல்லப் பக்கத்[Home]தில் தேடிய நண்பர் சுட்டியைக் கீழிறக்கி மற்றொரு தலைப்பைப் பார்க்காததால் தவறவிட்டார். அச்சிதழ் அவ்வாறன்று அல்லவா? ஆனால் அச்சிதழ் ஆசிரியர்கள், தொடர்ந்து பன்முகமாகப் பரவி வரும் வலை இதழ்களை நோக்கத் தவறினால், அவர்களின் படைப்புகளும் அவர்கள் இதழ்களில் வரும் வேறு படைப்புகளும் படைப்பாளர் பெயர் மாற்றப்பட்டோ, நடை மாற்றப்பட்டோ வேறு எழுத்தாளர் பெயரில் பதிவாகி விடுவதை அவர்களால் தவிக்க இயலாது. ‘சைபர்வெளி’யில் எதிர்காலம் இவர் படைப்பை ‘அவர்’ படைப்பாகவே ஐம்பதாண்டுக் காலத்திற்குப்பின் சுட்டும். இதே நிலை, வலை இதழ்களுக்கு இப்பொழுதே நேர்கிறது. இணையத்தில் வாய்த்துள்ள ஏந்துகளுள் ஒன்றான ‘தேடல்’[Search] என்பதை பயன்படுத்தி, புகழ்மிக்க தமிழ் எழுத்தாளர் ஒருவர், அறிவியல்சார் வலைத்தளங்களிலிருந்து வேண்டிய பகுதிகளைத் தெரிவு செய்து[Select] படி[Copy]பண்ணி, பின் அவற்றை ஒட்டி[Paste], பின்னர் தன் நடைக்கு மாற்றி கட்டுரைகளை அடுத்தடுத்து அறிவியல் தொடர்பாக வெளியிட்டு வருவதை ‘விடுதலை’ இதழின் விழிப்புணர்வுக் கட்டுரையொன்று அம்பலப்படுத்தியது. வலைத்தளங்களில் அவற்றை ஆய்ந்து பதிவிட்டோர், இரவும் பகலும் எத்துணைத் தொல்லைப் பட்டிருப்பர்? சூஃபியம் - முரண் இன்மை - வலைச் சான்று இணையஉலாவுபுலங்களுக்குச்[browsingcentres]செல்வோர்[இக்கட்டுரையாசிரியரும் உலாவுபுலங்களிலிருந்து இணையப்பணி புரிபவர்களுள் ஒருவர்தான்], உலாவியில் “கூகிள்.கோ.இன்”[google.co.in] என்று முகவரியைத் தட்டெழுதுக. வரும் ‘கூகி’ளின் தேடல் இல்லப் பக்கத்தில் ‘தமிழ்’ என்று ஆங்கிலத்தில் உள்ள சொல்லைச் சொடுக்குக. ‘கூகிள்’ உங்களுக்குத் தமிழில் நீங்கள் தட்டெழுதும் எதையும் தேடித்தர அணியமாகிவிடும். ‘சூஃபியம்’ என்று இடுங்கள்.இப்பொழுது,‘தமிழோவியம்’[http://www.tamiloviyam.com]வலையிதழ் வெளியிட்டுள்ள “தொடர்: அமானுடகேள்விகளும்,அரைகுறை ஞானிகளும்[குர்ஆன் அருளப்பட்ட விதம்]” என்ற விரிவான விளக்கம் தோன்றும். திருக்குர்ஆன் அருளப்பெற்ற முறை குறித்தும், சூஃபியாக்கள் இறைவேதத்தின் உண்மையான பின்னணியை அறிந்து வைத்தவர்களே என்பது குறித்தும் அத்தொடர் தெளிவாக மொழிகிறது. சித்தர்கள் கூறியவை குறித்து இத்தகைய திண்ணிய, கட்டுப்பாடான, ஒழுங்கான, ஓர்மையுடன் கூடிய பதிப்பு முயற்சியே இன்றைய தேவையாகும். *********************************** (நன்றி: வெல்லும் தூயதமிழ் - இலக்கிய மாத இதழ் மேழம் 2037 / மே 2006)

5.4.06

மாடல்ல! மனுஷிதான் நான்! - மங்கை பசுபதியின் கவிதை

மாடல்ல! மனுஷிதான் நான்! -மங்கை பசுபதி மாடல்ல, நீங்கள் பல்பிடித்து விலைபேச! ஆடல்ல நீங்கள் விரல்மறைத்து விலைபேச! உம்மைப்போல் நாங்கள் உயிருள்ள பிறவிகள்தாம்! ஐரோப்பா மண்டலத்தில் பிறந்திருந்தால் நாங்கள்; விலைபேச வருவீரா? வரும்நேரம், நாங்கள் வீட்டில்தான் இருப்போமா? இருந்தாலும் - உம்மைத்தான் மதிப்போமா? காலம்தான் மாறிடினும் இந்தியர்கள் மாறவில்லை! “கழிப்பிடம் சென்றுவந்தால் கைகழுவவேண்டும்” என்று விளம்பரங்கள் இந்தநாளும் ‘பிரச்சார பாரதி’யில்! கைகழுவி வாருங்கள் - பின்னர் பெண்ணின்விலை பேசுங்கள்! பீகார், ராஜஸ்தான், ம.பி., உ.பி. - இங்கெல்லாம் கற்றவர் விகிதம் குறைவு! தமிழகம் கேரளம் வங்கம்இம் மூன்றும் - கல்வி அறிவு பெற்றோர் அதிகம் கொண்டும் திருந்தவிலை இன்னும்தான் முழுதாய்! முப்பத்து மூன்று பெர்செண்ட் இன்னும் சித்திக்க வில்லையே பையா! நீ ஆணாக வில்லையே இன்னும்! - நல்ல ஆணாக இருப்பவர்கள் பெண்களுக்கு - முந்தி ஏற்ற இடம் தருவார்கள் அன்றோ? பெண்ணை மதிக்காத தேசம் பாழ்பட்டுப் போகும் என்று மண்ணில் உரக்கவே சொல்லுங்கள்! தனைப்பெற்ற தாயைப் போன்றவர்கள் பெண்கள் - என்று உணராத ஆணுமொரு ஆணா?- தன்னை மதிக்காமல் வாழ்பவளும் பெண்ணா? நன்றி: திண்ணை.காம்

3.4.06

சித்தரும் சூஃபியரும் - தொடர்ச்சி

சித்தரும் சூஃபியரும் -பேராசிரியர் அ. பசுபதி (தேவமைந்தன்) சென்ற இதழின் தொடர்ச்சி.. ஆனால் வள்ளலாரோ தன் உடல்முழுவதையும் வெண்மையும் தூய்மையும் நிரம்பிய ஆடையால் போர்த்துக் கொண்டே இயங்கியவர்; தலையையும் எப்பொழுதும் முக்காட்டிட்டுக் கொண்டவர். தன் அன்றாட வாழ்வில் உணவு முதலிய எல்லாச்செயல்களிலும் தூய்மையையும் ஒழுங்கையும் கடைப்பிடித்தவர். அவ்வாறு இல்லாதவர்கள் உயிரிரக்க ஒழுக்க[சீவகாருண்ணிய ஒழுக்க]த்தையோ அறச்செயல்களையோ உணவுவழங்குகை[அன்னதானம்]யையோ செய்யலாகாது என்ற கண்டிப்பை விதித்தவர். ஆகவே, பட்டினத்தார் புகன்ற சித்தர்களின் அகத்தோற்றம்தான் வள்ளலாருக்குப் பொருந்துமே தவிரப் புறத்தோற்றம் பொருந்தாது. பட்டினத்தார் கூற்றுப்படி வள்ளலார் சித்தர் ஆவதோடு மட்டுமல்லாமல், பட்டினத்தார்தம் சித்தர் விளக்கத்தில் உள்ள புறத்தோற்றத்துக்கும் சீர்திருத்தம் வகுத்தார் என்க. சூஃபியியம் எவ்வாறு தோன்றியது? சூஃபியியம் எவ்வாறு தோற்றம் கொண்டது என்பதற்கு முனைவர் க. நாராயணன் அரிய விளக்கம் தருகிறார்: “நம்பிக்கை அதிகாரம் ஆகிய இரு இரும்புக் கரைகளிடையே இசுலாமியச் சமய ஆறு ஓடியது. தடுக்கவோ திசை திருப்பவோ தடைகள் ஏதும் இல்லாத ஆறுபோல் இசுலாம் இயங்கியது. இசுலாமியச் சமயக் கருத்துக்களை முழுமையாக நம்பி நடைமுறைப்படுத்த வேண்டுமே தவிர ஏன் எதற்கு என்ற வினாக்கள் தொடுத்து ஆராயக்கூடாது. மரபாக வரும் இசுலாமியச் சமுதாயப் பழக்க வழக்கங்கள் ‘குர்-ஆன்’ எனும் சமயச் சட்ட நூலுக்கு விளக்கங்களாயின. ‘குர்-ஆன்’ நூலை மீறிய எண்ணங்களை இசுலாம் ஏற்காது. ‘குர்-ஆன்’ தீர்ப்பே இறுதித் தீர்ப்பு. “இசுலாத்தின் இறுக்கமான நம்பிக்கையும் அதிகாரமும் புதிய சிந்தனைகட்கு இடமளிக்கவில்லை. குர்-ஆன் கூறும் சட்டம், காலங்காலமாக வழங்கி வரும் மரபுகள், இசுலாமியச் சமுதாய ஒப்புதல் என்பனவற்றின் செல்வாக்கும் அதிகாரமும் புதிய எண்ணங்கள் எழத் தடைகளாயிருந்தன.”(Harold Titus, Living Issues in Philosophy, p.) ஆமைவேகத்திலும் திரைமறைவிலுமாக சில சிந்தனையாளர்கள் புதிய எண்ணங்களை எழுப்பிச் சமயப் புரட்சிக்கு வித்திட்டனர். இசுலாத்தின் பழைமைப் போக்கு மெல்ல மாறத் தொடங்கியது. நம்பிக்கையும் பகுத்தறிவும் முரண்படும் கட்டங்களில் இசுலாமிய ஞானிகள் சிலர் சமயக் கட்டுப்பாடுகளை மீறிச் சிந்தித்தனர். இறைவனிடம் சரண் புகுந்து அடிமைப் பணி புரிவதைக் காட்டிலும் அருளின் உருவமாக விளங்கும் இறைவனுடன் கலந்து ஐக்கியப்படுவதே சிறந்ததென்றும் அத்தகு ஐக்கியத்திற்குத் துணை செய்யுமாறு சமயங்கள் இயங்க வேண்டும் என்றும் புதிய சிந்தனையாளர் கூறினர். சூஃபியியம் தொடங்கிற்று.”(சித்தர் தத்துவம், மூன்றாம் பதிப்பு 2003, புதுச்சேரி.8., ப.202) சித்தாடல் முதலியவற்றை எதிர்த்த சூஃபியார் அபூ-யாசித் என்ற சூஃபியார் எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் வாழ்ந்தவர். இறைவனோடு தம்மை இணைத்துக் கொள்வதைத் தவிர சித்தாடல், மந்திர தந்திரச் செயல்கள் புரிவதில் ஈடுபடல் முதலானவற்றில் சூஃபியர் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறார். (மேலது, ப.207) சித்தாடல் வல்லவர்கள் குறித்து... “சித்தாடல் வல்லவர்கள்தாம் சித்தர், ஆனால் சித்தாடல் புரிபவர் எல்லாம் சித்தர் அல்லர்” என்ற ஓர் ஏரணக் கூற்று, சித்தர் மெய்ப்பொருள் உண்ர்ந்தாரிடத்தே நின்று நிலவி வருகிறது. இதற்குமேல் சித்தாடல் குறித்தும் சித்தர் குறித்தும் நாம் மன்றாட வேண்டுவது இல்லை. சித்தர்-சூஃபியர் கருத்து ஒப்பீடு சித்தர் திருமூலரின் கருத்தும் சூஃபியார் குணங்குடி மசுத்தான் சாகிபு அவர்களின் கருத்தும் பல இடங்களில் ஒத்துப்போவதைக் காண வியப்பாக உள்ளது. காட்டாக, “ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி உள்ளாகி வெளியாகி யொளியாகி யிருளாகி ஊருடன் பேரு மாகிக் கானாகி மலையாகி வளைகடலு மாகியலை கானக விலங்கு மாகிக் கங்குல்பக லாகிமதி யாகிரவி யாகிவெளி கண்டபொரு ளெவையு மாகி நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடு பூத மாகி நாடுமொளி புரியஅடி யேனுமுமை நம்பினேன் நன்மைசெய் தாளுதற்கே வானோரும் அடிபணி தலுள்ளநீர் பின்தொடர வள்ளல்இற சூல்வரு கவே வளருமருள் நிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித் தீனே!” [குணங்குடி மசுத்தான் சாகிபு பாடல்கள்: பா.3] என்ற பாடலின் கருத்தோர்மையைப் பின்வரும் திருமூலர் பாடல்கள் காலத்தாலும் இடத்தாலும் முன்னரே கொண்டுள்ளன: “புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இதழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே. உடலாய் உயிராய் உலகம தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி அடையார் பெருவழி அண்ணல்நின் றானே.” [திருமந்திரம் -- இரண்டாம் தந்திரம்:10:காத்தல், பா.1-3] பீருமுகம்மது அப்பா அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சூஃபியருள், அப்பா அவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய தொகுப்புகளுள் ஒன்று ‘ஞானரத்தினக் குறவஞ்சி’ ஆகும். அதில் சிங்கன் சிங்கி உரையாடலாக அரும்பெருங்கருத்துக்களை எளிமையான தமிழில் எடுத்துக் கூறியிருக்கிறார். சான்று: “ என்ன விதமாகத் தன்னை மறப்பது சிங்கி? - அது ஒன்றைப் பொருந்தி ஒடுங்கி இருப்பது சிங்கா! என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? - அது எல்லாம் மறந்து இருளாய் இருப்பது சிங்கா! “ கண்புருவப் பூட்டும் புருவ நடு - வில் உவமையும் வள்ளலார், திருவருட்பா - ஆறாம் திருமுறையில் ‘கண்புருவப் பூட்டு’ என்ற தலலப்பில் பதினொரு தாழிசைகளில், சித்தர்கள் மிகவும் முகாமையாகக் குறிப்பிடும் நுண்ணுறுப்பு ஒன்றை விளக்குவார். திருக்குர்ஆனில் இதுவே உவமை அடிப்படையில் இடம்பெறுவதாக தேசமானிய, டாக்டர் ஏ. எம். முகம்மத் சகாப்தீன் தக்க சான்றோடு விளக்குவார். கண்புருவப்பூட்டு “ கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு” என்று வள்ளலார் இந்த நுண்ணுறுப்பைக் குறித்து விளக்குவார். ‘நுண்’ என்பது இங்கே ‘நுண்ணுட’லைக் குறிக்கும். செருமானியரான ஆனிமன் ஒப்பண்டு[ஓமியோபதி] மருத்துவத்தை இந்த நுண்ணுடல் அடிப்படையில்தான் உருவாக்கினார் என்பது கருதப்பெறத் தக்கது. கண்புருவப் பூட்டுக்கு வேறுபெயர்கள் ‘சிற்சபை,’ ‘சிற்றம்பலம்,’ ‘விந்து,’ ‘முச்சுடர்,’ ‘முச்சந்தி,’ ‘சபாத்துவாரம்,’ ‘மணிமேடை,’ ‘நெற்றிக்கண்,’ ‘கபாடம்,’ ‘சுழிமுனை,’ ‘சூன்யப்பகுதி,’ ‘பிரமரந்திரம்,’ ‘மகாமேரு,’ ‘மயானம்,’ ‘வரை,’ ‘அம்பலம்,’ முதல் இன்னும் பல பெயர்கள் புருவநடுவுக்கு உள்ளன.[முனைவர் இரா.மாணிக்கவாசகம், சித்தர்கள் பரிபாசை அகராதி, பக்.230-231.] சூஃபியாக்கள் சுட்டும் திருக்குர்ஆன் உவமை இத்தகைய இறைமருமத்தை இறைவன் நபிகள் நாயகம் அவர்களுக்கு வெளிப்படுத்தினான் என்று சூஃபியாக்கள் கூறுவர். அதற்கு அடிப்படையாகப் பின்வரும் திருக்குர்ஆன் பகுதியைக் குறிப்பிடுவார்கள்: “நெருங்கிப் பின்னர் அருகே வந்தார், வளைந்த வில்லின் இருமுனைகளைப் போல் அல்லது அதைவிடச் சமீபமாக அந்த நெருக்கம் இருந்தது. பிறகு அவன் தான் அறிவிக்க வேண்டியவற்றைத் தன் அடியாருக்கு அறிவித்தான்.(53:8-10).” நபிகள் நாயகம் இவ்வுரை வெளியாகும்பொழுது இறைவனுடன் நேர் தொடர்பு நிலையில் இருந்தார் எனவும் அந்நிலையில் இறைவன் ஒரு தெய்வீக மருமத்தை நபியவர்களுக்கு வெளிப்படுத்தினான் எனவும் சூஃபியாக்கள் கூறுவர். இந்திய நாட்டு சூஃபியாக்கள் சிலர் இவ்விதமான இறைஞானத்தை அடையும் ஓர் உறுப்பையும் குறிப்பிடுகின்றனர். இது இரண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் பகுதியில்(இடையில்) இயங்கும் ஒரு ஞான அங்கமாகும் என்றும், திருக்குர்ஆன், இவ்விரு புருவங்களையும் உவமை அடிப்படையில் இவ்வில்லுக்கு ஒப்பிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுவர். சூஃபித்துவ நெறியில், இறைவனை ஓர் ‘ஏகாந்த சிந்தனை’ என்றும் ஒளியென்றும் ‘ஆக்கும் சக்தி’யென்றும் வண்ணிக்கப்பெற்றிருக்கிறது.[இறைவனும் பிரபஞ்சமும், இலங்கை 1995, ப.108.] (நன்றி: வெல்லும் தூயதமிழ்[இலக்கிய மாத இதழ்] 2037, மீனம்[ஏப்பிரல் 2006] பக். 19 - 22.)

2.4.06

அவனைத் தெரியும்தானே?...-தேவமைந்தன்

மூலைக்கடையில் ஒற்றைச் சிகரெட்டுக்காய் மெலிந்த சட்டைப் பையைத் துழாவுகிறானே, பார்! அவன் எல்லாருக்காகவும் எழுதி எழுதி, சொல்லிச் சொல்லிச் சலித்துப் போய்விட்டான். அவனுக்கு என்ன தெரியும் என்று இறுமாப்புடன் கேட்கிறாய். பலபல விளக்கங்களை அந்த அப்பாவியிடம் தொடர்ந்து கோருகிறாய். உன்னைப்போல் அவன் அறிவுஜீவியா, என்ன? அவனுக்கு மார்க்ஸையும் லெனினையும் வள்ளுவனையும் மட்டுமே தெரியும். அதுவும் தெளிவாக மட்டுமே. க்யூபாவின் கஷ்டங்களின்பொழுது அரிசியைத் திரட்டி அனுப்பச் சேர்ந்த சாதாரணமானவர்கள் கூட்டத்தில் ஒருவன் அவன். சகமானுட ஜென்மங்களின் பாடுகள் சகமனிதர்களின் ‘லோல்படுதல்’கள், ‘லொங்கழிதல்கள்’ மட்டுமே அறிந்துணர்ந்த அவனையும் அவன் உறுதி என்று நம்பும் இடதுசாரிக் கொள்கையையும் நீயும் உன் விமர்சனப் பிதாமகரும் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கென்றே இருக்கும் பெரு,சிறு பத்திரிக்கைகளின் பரவல் பலங்கொண்டு சாடுவதில்தான் மெய்யாக சிறுபிள்ளைத்தனம் தெரிகிறது. கொழுத்த புத்தகங்களை உருவாக்க உதவும் அரசாங்க சம்பளமும்; ‘ரிச்’சாக வெளியிட்டு உலகெங்கும் ஆள்பிடித்துப் பரப்பும் பிரத்தியேக சாமர்த்தியமும்; ஆதிக்க வெறிப்போடு பழைய தோழர்களை அவமதிக்கும் ஏக்கழுத்தமும் அவனுக்கு இல்லைதான். அவனுக்குத் தெரிந்ததாக எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆம். அழுத்திவைக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின், எந்த ஆட்சியிலும் சுரண்டப்படுபவர்களின் கண்ணீர் அவன் கன்னங்களில் மட்டுமல்ல, எழுத்துகளிலும் வழியும்.