15.8.05

"டுபுக்"கு:முதலில் சொன்னவர் பாரதிதான்!

புலப்பாடு : இரண்டு எழுத்தாளர் ப.ரா.கலாவதி என்னிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டார்: "டுபுக்கு'ன்னு மொதமொத'லா சொன்னவர் யாரு?"... வழக்கமான சாமர்த்தியத்துடன், "நீங்க சொல்லுங்க பார்க்கலாம்!" என்றேன். அவர் சொல்லத் தொடங்கினார். "ஜகத் சித்திரம்"என்கிற சிறு நாடகத்தில்தான் பாரதி, நாகணவாய்[இன்றைய மைனா] சொல்லுவதாக "டுபுக்(கு" சொன்னார். "டுபுக்! பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறில்லை" என்ற வசனந்தான் அது. கிளி, குயில்கள்,குருவிகள்,நாகணவாய், காக்கை,மற்ற பறவைகள்,அணிற்பிள்ளை,பசுமாடு,எருமைமாடு-- இவர்களே ["இவைகளே" என்று இலக்கணப்படிச் சொல்ல மனசு வரவில்லை] கதாபாத்திரங்கள். கிளி சொல்கிறது:"தோழர்களே! தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக்காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை!" எருமைமாடு கேட்கிறது:"பட்சிஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும்,ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே! இதன் காரணம் யாது?" அதற்குப் பதிலாகத்தான் நாகணவாய்ப்புள்[மைனா]:"டுபுக்! வெயில், காற்று,ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக் காட்டிலும் எங்களுக்கு அதிகம். எங்களுக்கு உடம்பு சிறிது. ஆதலால் தீனி சொற்பம்; அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம்.......இருந்தாலும் கிளியரசு சொல்லியதுபோல், காலனுக்குத் தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தன் செய்கிறது. அதற்கு நிவாரணம் தேடவேண்டும். கவலையைக் கொல்வோம். வாருங்கள். அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்!"...... மற்ற பறவைகளும் அதை வழிமொழிந்து கோஷமிடுகின்றன. விக்கிரமாதித்தன் மற்ற உயிர்களின் மொழியும் அறிந்திருந்தானாம். அடுத்து, பாரதிதான் போல. கேட்டுவிட்டுச் சும்மா இராமல் என் ந்ண்பரான விலங்கியல் துறைப் பேராசிரியரிடம் இதைச் சொன்னேன். முறைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னார்: "ஏங்க! ஒங்களுக்கெல்லாம் கற்பனை'ய விட்டா வேற போக்கிடமே இல்லியா? பறவெ--மிருகம், இதுக்கெல்லாம் நமக்குள்ள அத்தனெ கோளாறும் இருக்குதுங்க! கவலெ இருக்குன்னா, மனுசனுக்குள்ள அத்தினியும் இருக்குன்னு அர்த்தம். கண்டுபுட்சீங்களா?[புதுவைப் பேச்சுவழக்கு-'தெரிந்துகொண்டீர்களா' என்று அர்த்தம்] நமக்கு என்னென்ன சர்ஜரி பண்றாங்களோ அத்துனியும் அதுகளுக்கும் பண்றாங்க..." என்று. நமநமத்த வாய் சும்மாயிராமல் கேட்டது:"ஏங்க! அப்போ உங்களப்போல அங்கயும் இருக்காங்க போலிருக்கு!" அவ்வளவுதான். ஜிவுஜிவுத்தது அவர் முகம். "இதுக்குத்தான் தமிழு ஆளுங்களோட நா' பேச்சே வச்சிக்கிறதில்லெ! சுத்த அன்சயின்டிபிக் பேர்வழிங்க! எப்பய்யா நீங்கள்'ளாம் ஒலகத் தரத்துக்கு வரப்போறீங்க?" என்று நொந்து கேட்டுவிட்டு நடையைக் கட்டினார். ம்..ம்... நல்லவேளை பாரதி இப்பொழுது இல்லை. அவர் ஒன்றும் இதற்காகக் கவலைப்பட்டிருக்க மாட்டார். அவர் விளாசும் விளாசலில், வேறு துறையில் பணிபுரிந்ததாலேயே தான் "ரொம்பவும் ஒஸ்தி" என்ற நினைப்பில் இருக்கும் நண்பர்தான் படாதபாடு பட்டிருப்பார். நன்கு கவனித்துப் பாருங்கள். தமிழுக்கு வந்து 'சேவை'புரியும் பிறதுறை நண்பர்கள் பலர் எப்பாடுபட்டாகிலும் 'யாப்பு' கற்றுக்கொண்டு மரபுக்கவிதைகள்தாம் இயற்றுவார்கள்; இலக்கணத்தில் மட்டுமே தீவிர ஆர்வம் காட்டுவார்கள். 'யூனிகோடு' பற்றிய விவரம் கேட்ட வேறொரு நண்பருக்கு, "என்கோடு,உன்கோடு,யுனிகோடு,தனிகோடு" என்ற மின்கட்டுரையைக் குறுவட்டில் பதிந்து தந்தேன். போட்டு வாசித்துப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறார்: "உம்மைப் பற்றி நான் வச்சிட்டிருக்கிற அபிப்ராயம் சரிதான்! என்னய்யா நீர் கொடுத்த சித்தூரார் கட்டுரை'ல பாய்ண்ட்ஸ் 'நெல்லா'ருந்தாலும், நடை வக்கணையா'ல்ல இருக்கு! இப்படியெல்லாம் எழுதலாமோ"... பழக்கப்பட்ட என் வாய் மீண்டும் நமநமத்தது. சொன்னேன்: "அவர் உங்களுக்காக எழுதல்லே! எல்லாருக்காகவும்தான் அப்படி எழுதறார். நீங்க'ள்ளாம் சொல்ற நடை'லே அவர் அந்த யூனிகோடு பாடங்களை எழுதியிருந்தா உங்க க்ளாஸுக்கு நம்ம பசங்க கொடுக்கிற 'ரெஸ்பான்ஸ்"தான் கெடைக்கும்...வுடுங்க!..'போர்'அடிக்கிற சமாச்சாரத்தையும் 'இண்டரெஸ்டிங்'காகச் சொல்'ற நடை அது! உங்களுக்கு அதெல்லாம் வராது!"...அதுசரி, அது ஏன் இவர் முகமும் ஜிவுஜிவுக்கிறது?

No comments: